Sunday, August 29, 2021

கருத்தியல்வாதம் - Idealism

 சமீபத்தில் Analytic Idealism என்னும் கருத்தியல் வாதத்தின் ஒரு கிளை பற்றி அறிய வாய்ப்பு கிடைத்தது. பெர்னாடோ காஸ்த்ரப் (Bernardo Kastrup) என்பவருடைய, Analytical Idealism குறித்த அறிமுக காணொளிகள். ஏழு காணொளிகள், சுமார் ஆறு மணி நேரம். பத்து நாட்களில் பார்த்து/கேட்டு முடித்தேன்.

Thursday, July 29, 2021

நிலைப்பாடுகள்.

 

மனிதர்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் வழியாகவே அவர்கள் ஆளுமை வெளிப்படுகிறது. நிலைப்பாடுகள் தனிமனிதர்களின் கருத்து, அறிவு, சூழல் போன்றவை காரணமாகவோ அல்லது அவர்களின் உணர்வுகள் காரணமாகவோ அல்லது அவற்றின் கலவைகளின் காரணமாகவோ இருக்கலாம். அவை மனிதர்கள் விழிப்புணர்வுடன் எடுத்த நிலைப்பாடுகளாகவோ அல்லது எதற்கு என தெரியாமல் அவர்களை அறியாமலே எடுத்ததாகவோ இருக்கலாம். எவ்வாறாக இருந்தாலும், அவர்களின் உணர்வு அல்லது அறிவின் எல்லைகள், நிலைப்பாடுகளையும், எனவே ஆளுமையையும் வகுத்தளிக்கின்றன.

Sunday, July 11, 2021

மீண்டும்…..

Blog – இல் கடந்த நான்காண்டுகளாக எதுவும் எழுதவில்லை. எழுதாமல் இருப்பது எனக்குத் தேவையாக இருந்தது. எதையாவது எழுதுவதற்காக, அகப்பயணத்திற்கான என் நேரத்தை இழந்ததைப்போல தோன்றியது. மேலும் என் எண்ணங்களை அறுதியான உண்மைகள் என எழுதும் த்வனி சில பதிவுகளிலும். சில காலத்திற்குப்பிறகு படித்தால் அபத்தமாகத் தோன்றுவது பல பதிவுகளிலுமாக குளறுபடிகள் விரவி இருக்கிறது. இந்தக்  குறைபாடுகளை களையாமல் எழுதுவதும் அவற்றை Blog-இல் பதிப்பதும் சரியானதாகத் தோன்றவில்லை.  

Friday, May 21, 2021

அவர்

 

அவர்

அவரைப் பற்றிய நினைவுகளை தொகுத்துக்கொள்ள வேண்டும். தன் வாழ்க்கையை முடித்துக்கொண்ட இந்த நேரம் அதற்கான ஒரு தூண்டுதலாக இருக்கட்டும்.   

இவை அறுதியான உண்மைகளாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஆனால் அவரைக்குறித்த என் எண்ணங்களின் பதிவு என்றநிலையில் உண்மையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.   அவரிடமிருந்து நான் விலகியிருக்கும் தூரத்தை அறிய இது எனக்கொரு வாய்ப்பு! அந்த தூரமே, நான் தனிமனிதனா அல்லது இன்னொருவரின் அப்பட்டமான பிரதியா என உணர்த்தும். உண்மையில் முற்றாக விடுதலை அடைந்தவர்கள் தவிர மற்றவர்கள் முற்றிலும் தனிமனிதர்களாக இருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில், முற்றிலும் ஒருபிரதியாக இருப்பதும் வாழ்க்கை நமக்கு அளிக்கும் வாய்ப்பை இழப்பதே.

Monday, March 20, 2017

அபத்தங்கள்

18-03-2017 அன்று சிறகு இணையப்பத்திரிகையில் பதிப்பிக்கப்பட்டது....
சுற்றிலும் தினம் தோறும் நிகழும் நிகழ்வுகளில் பெரும்பான்மையினரின் கவனத்தைப் பெறும் நிகழ்வுகள், நிகழ்வுகளின் உச்சங்களா அல்லது வெறும் அபத்தங்களா? ஒருவித மனநிலையில் இருக்கும்போது உச்சங்களாகத் தோன்றும் அதே நிகழ்வுகள் இன்னொரு மனநிலையில் அபத்தங்களாகத் தோன்றுகிறது. இதில் எது காட்சிப் பிழை? அல்லது இரண்டுமே காட்சிப் பிழைகளா? எனில் உண்மைதான் என்ன? உண்மையை அறிய முடியுமா?

Sunday, March 19, 2017

பண்பாட்டு அறிதல்களில் தொடர்ச்சி

13-01-2017 அன்று சிறகு இணையப்பத்திரிகையில் பதிப்பிக்கப்பட்டது.
மானுட அறிதல் ஒரு தொடர் செயல்பாடு. பிற மனிதர்கள் அறிந்தவற்றை கற்றுக் கொள்ளும் திறனை பெற்றிருப்பதால்தான் மானுட சமூகம், பிற உயிரினங்களிலிருந்து வேறுபட்டு,  அறிவு செயல் வளர்ச்சிகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. இன்றைய தனி மனிதன் அறிந்திருப்பது அனைத்தும் முன்னோர்கள் அறிந்தவற்றின் ஒரு துளி மாத்திரமே. முன்னோர்கள் என்பது, மானுட சமூகத்தின் மொத்த முந்தைய தலைமுறைகள் அனைத்தையும் இங்கு குறிக்கிறது. இக்காலத்தில் புதியதாக எதையாவது அறிகிறோமானால், அது முன்னோர்கள் அறிந்தவற்றை மேடையாக்கி, அதன் மேல் நின்றுகொண்டுதான் அறிகிறோம். ஆனால் அத்தகயை புதிய அறிதல்கள் நிகழ்வது மிகவும் அபூர்வமே. அதாவது, நாம் தனிமனிதர்கள் அறிந்தவை எனக் கூறுபவற்றில் பெரும்பான்மையானவை முன்னோர்களின் சுய தேடுதலால் தங்கள் உயிரை எரித்து அடைந்த ஒளியில் அறிந்தவைகளின் சில துளிகளே. அவர்கள் அளித்த அறிவுக்காக, நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அத்தகைய அறிதலின் தொடர்ச்சி மானுட இயல்பு. ஆனால், தங்கள் அறிவு முன்னோர்களின் கொடையே என அறியும் மனம், அறிதலில் அடுத்த பாய்ச்சலுக்கான ஏவுதளம். அத்தகைய மனம், முன்னோர்களின் அறிதலை அதற்கான மரியாதையுடனும் எனவே புதிய அறிதலுக்கான விழிப்புடனும் அணுகும்.

Wednesday, January 4, 2017

பிம்பம்

மலையோரச் சாலையில்
மோட்டார் சைக்கிளில் செல்கிறேன்.
பின்னோக்கிக் கண்ணாடியில் கண்ட
மலைக் காட்டின்
அழகிய பிம்பத்தில்
லயித்த கணம் நிலைதடுமாறிய வண்டியை
நிலைப்படுத்தினேன்.
காட்சியும் பிம்பமும்
இல்லாமல் ஆனது அக்கணத்தில்.

சற்றே தொலைவில் இருக்கும்
நண்பனின் இருப்பிடத்தில்
சற்று நேரத்தில் சென்று விடுவேன்.
சில பிம்பங்களை நானும்
மேலும் சில பிம்பங்களை அவனும்
பகிர்ந்து கொள்வோம்.
அதன் பின்

நானென் வழியில், அவன் தன் பாதையில்!