Monday, October 24, 2011

அறிவு, அறிதல், மாயை

அறிவு – நாம் அனைவரும் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அடைய துடிக்கும் ஒரு சூட்சும பொருள். அறிதல் என்னும் இயக்கத்தின் அல்லது செயலின் மூலம் நாம் அறிவை அடைகிறோம். அறிதல் என்னும் இயக்கம் அறிவை எங்கிருந்து கொண்டு வந்து சேர்க்கிறது? அறிதல் எவ்வாறு நிகழ்கிறது? அறிதல் எதை அறிகிறது? அறிதலுக்கும் அறிவுக்கும் உள்ள இடைவெளி என்ன அல்லது தொடர்பு என்ன? அறிவுக்கும் அறிபடுபொருளுக்கம் உள்ள தொடர்பு என்ன? நம் அறிவு என நினைப்பது முழுமையானதா? ஆம், அறிவை குறித்த இந்த கேள்விகளுக்கு நாம் பதில் அளிக்கம்வரை நம் அறிவின் தரத்தை நம்மால் மதிப்பிட முடியாது. அவ்வாறு நாம் மதிப்பிடுவோமானால், அது மற்றவர்களின் அறிவு என நாம் கருதுவதுடனான ஒரு ஒப்பீடு மட்டுமே. அது நம் அறிவின் அளவை அல்லது தரத்தை ஒருபோதும் குறிக்க முடியாது – காரண்ம், அறிவின் முழுமையை குறித்து நாம் அறிந்திருக்கவில்லை.

நாம் அறிதல் என அறிந்துள்ளது, நம் புலன்கள் மூலம் உணரப்படும் வெளியுலக நிகழ்வுகளை நம் மூளை உணர்ந்து அதை மனமாக வெளிப்படுத்துவதையே. அதாவது நம் அறிவு என அறிவதன் நுழைவாசல் நம் புலன்களே. அந்த மனதின் நிகழ்வுகளையே அறியும் மனது, ஆறாவது அறிவாக கருதப்படுகிறது. நம் ஐம்புலன்களால் அறியப்படுவதில், தொடு உணர்வு மட்டுமே உடல் முழுவதும் பரவியுள்ளது. மற்ற நான்கு புலன் உறுப்புகளும், உடலினுள், மிக அதிகபட்ச சாத்தியமுள்ள பாதுகாப்புடன் அமைந்துள்ளது. அதாவது, தொடு உணர்வுக்கு மட்டுமே, திண்மையுள்ள ஒரு வெளிப்பொருள் நம் உடலுடன் நேரடி தொடர்பு கொள்ள வேண்டியிருக்கிறது. மற்ற நான்கு அறிவுக்கும், மிக மிக நுண்ணிய இயக்கங்களே காரணமாக இருக்கிறது. நம் பரிணாம வளர்ச்சி, அந்த நுண்ணிய இயக்கங்களை நம் மூளை உணர்வதற்கு தேவையான உடலமைப்பை புலன் உறுப்புகள் மூலம் நமக்கு அளித்துள்ளது. எதிர்காலத்தில், நம் மூளை, அதன் பரிணாம வளர்ச்சிக்காக, உலகை அறிவதற்காக, இன்னும் ஒரு வெளிப்புற இயக்கத்தை அறிய வேண்டிய தேவை ஏற்படுமானால், நம் தொலைதூர சந்ததியினர் அவர்கள் உடலில் இன்னும் ஒரு புலன் உறுப்பை பெறக்கூடும்.

வெளிப்புற உலகம் நம் உடல் மீது தொடுக்கும் தாக்குதல்கள் மூலமே நம்மால் புற உலகத்தை புலன்களின் மூலம் அறிய முடிகிறது. ஒளி அலைகள் நம் உடலில் எற்படுத்தும் தாக்கத்தை கண்கள் உணர்வதன் மூலம் புற உலகத்தை காண்கிறோம். இதைப்போலவே கேட்பதும், முகர்வதும், சுவைப்பதும். நாம் உண்மையில் அறிதல் எனக் கூறுவது, புற உலகம் நம் புலன்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களை உணர்ந்து அவற்றை அடையாளப்படுத்துதலையே. அடையாளப்படுத்துதல் என்பது மொழியின் மூலம் நடைபெறுகிறது. அதாவது, மொழி என்பது நம் புலன்கள் உணரும் ஒவ்வொரு உணர்வுக்கும் நாம் அளிக்கும் அடையாளம் அல்லது குறியீடு. வேறு வார்த்தைகளில் கூறினால், நம் புலன்கள் உணரும் புற உலக இயக்கத்தை நம் மூளை உணர்ந்து, அந்த உணர்வை மொழியாக்கி, மொழியை மீண்டும் மூளை உணர்வதையே நாம் அறிதல் என்கிறோம். அவ்வாறெனில், அறிதலுக்கு மொழி ஒரு தவிர்க்க முடியாத ஒரு தேவை.


ஆனால் அறிதல் என்பது மொழிக்கு அப்பாற்பட்டதாகவே இருக்க முடியும். மொழி என்பது அறிதலுக்குப்பின் தோன்றும் ஒரு புதிய செயல்பாடு. நம் அறிதலை புற உலகுக்கு வெளிப்படுத்தும் ஒரு செயல்பாடு. நம் உலகம் என்பது, உலகில் உள்ள பிறருடனும் பிற பொருட்களுடனும் நாம் கொள்ளும் தொடர்புகளின் அல்லது உறவுகளின் தொகுப்பே ஆகும். அந்த தொடர்புகளின் அல்லது உறவுகளின் எல்லையை மீறி நம் உலகம் எப்போதுமே விரிவடைவதில்லை. நம் உலகம் விரிய வேண்டுமானால் நம் உறவுகளும் தொடர்புகளும் விரிவடைந்தாக வேண்டும். மொழி என்பது நம் அறிவை குறியீடுகளாக்கி நம் உறவுகளுடன் பகிரவும், நம் உறவுகள் பகிரும் குறியீடுகளை நம் அறிதலின் மூலம் நம் அறிவாகவும் மாற்றும் ஒரு கருவியே. ஆக மொழி என்பது அறிதலுக்கான ஒரு கருவியே தவிர அறிவின் ஒரு பகுதி ஆகாது.


எனில், அறிதல் எவ்வாறு நடைபெறுகிறது? சமீபத்தில் படிக்க நேர்ந்த, “The Process of knowing: A Biocognitive Epistemology” என்னும் கட்டுரை கீழ்வருமாறு கூறுகிறது. இந்த கட்டுரை வெளிவந்த தொகுதி - The journal of Mind and Behaviour, Automn 2001, Volume 22, Number 4.

Knowledge progresses through three developmental phases defined as pre-linguistic, concrete-linguistic, and abstract-linguistic experiences. The pre-linguistic phase consists of precursors of thoughts (perceptions of undifferentiated personal space without time dimension); precursors of affect (sensations of comfort and security vs. discomfort and insecurity); and precursors of language (primordial sounds responding to undifferentiated internal and external stimuli). The concrete-linguistic phase advances from precursors of thought to a cognition that differentiates self from non-self in concrete time and space; from the sensations of comfort and discomfort to the emotions of happiness, sadness etc.; and from primordial sounds that respond to undifferentiated internal and external stimuli to language that represent simple imagery and emotions communicated in concrete space and time. The abstract-linguistic phase frees the knower from the limitations of concrete-linguistics with language that can communicate complex imagery and emotions in projected time and space. The knower can project time and space from the present to communicate about the past and the future as abstract entities separate from self.

கட்டுரையின் இந்த பகுதியின்படி, அறிவு, மொழிக்கு முந்தையது, திட அர்த்தமுள்ள மொழியினூடாக உள்ளது மற்றும் கருத்துக்களாகிய மொழியினூடாக உள்ளது என பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, நம் அறிதல் என்பது, நம் மொழி அறிவுக்கு முன்பாக உள்ள அறிவிலிருந்து தொடங்கி, மொழியின் மூலமாக அடுத்த கட்டத்தை அடைகிறது. அதாவது, அறிவு என்பது மொழிக்கு அப்பாற்பட்டது, மொழி என்னும் கருவியின் வழியாக அறிதல் நடைபெறுகிறது.

நம்மால், மொழியின் துணையின்றி நம் அறிவை உணர முடியுமா? நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மொழியை தவிர்த்து அறிவு என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக இருக்க கூடும். ஆனால் ஆன்மீகத்தில் பூடகத்தன்மையை (mystic) மறுத்து, தர்க்கபூர்வமான மொழியில் வெளிப்படுத்திய ஜே. கிருக்ஷ்ணமூர்த்தியின் கருத்துகளின்படி, அறிவு என்பது நிகழ்வதற்கான சாத்தியம், மொழியால் உருவாக்கப்பட்ட எண்ணங்கள் மனதினுள் முழுமையாக இல்லாமல் இருக்கும்போது மட்டுமே உள்ளது. அதாவது, மொழியாலான கருத்தமைப்புகளின் மூலம் நம் மனதில் நிலைபட்டுள்ள எண்ணங்களே நம் அறிதலுக்கு தடையாகவும் உள்ளது.

வேறு வார்த்தைகளில் கூறினால், அறிவதற்கான கருவியாகிய மொழியையே நாம் அறிதலாக கொள்ளும்போது, அந்த அறிதலின் மூலம் நாம் அறிவதும் ஒரு மாய உலகையே!


பின் குறிப்பு: இங்கு குறிப்பிட்டுள்ள மேற்கோள்கள், இந்த உளறல்கள் எனக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதை உணர்த்தவே.

Tuesday, October 18, 2011

இச்சைகள்

உலகின் அடிப்படை சக்திகளில் ஒன்று, இச்சா சக்தி. அதாவது எந்த ஒரு இயக்கத்திற்கும் அல்லது செயலுக்கும் முதல் தேவை, அந்த இயக்கம் அல்லது செயலுக்கான ஆசை அல்லது இச்சை – அந்த இயக்கம், அணுவினுள் நியூக்ளியஸைச் சுற்றி வரும் எலக்ட்ரானாக இருந்தாலும், சூரியனை சுற்றி வரும் கோளங்களாக இருந்தாலும், நாம் அறியாத திசையில் பயணித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரவெளியாக(Galaxy) இருந்தாலும்! நம் உலகத்தில் உள்ள வாழ்க்கையும், ஒரு முடிவில்லாத இயக்கம் அல்லது செயல் மட்டுமே. நமது இச்சைகளே நம் வாழ்க்கையின் அடிப்படை இயங்குசக்தி. ஆகவே நமது இச்சைகளின் இயல்பு, நம் வாழ்க்கையின் இயக்கத்தில், இயல்பில், இன்றியமையாத இடம் வகிக்க கூடும். நம் வாழ்க்கையின் இயக்கத்தை நம் விருப்பத்தின்படி செலுத்த வேண்டுமானால், நம் விருப்பம் அல்லது ஆசை அல்லது இச்சை, அந்த விருப்பத்தின்படி அமைந்தாக வேண்டும். நம் இச்சைகளில் உள்ள ஒத்திசைவு அல்லது முரண்பாடு, நம் வாழ்க்கையிலும், ஒத்திசைவாகவோ அல்லது முரண்பாடாகவோ வெளிப்படும். ஆனந்தமயமான வாழ்க்கை என்பது ஒரு ஒத்திசைவுள்ள, முரண்பாடுகளற்ற வாழ்க்கை. நாம் உண்மையிலேயே, ஒரு மகிழ்ச்சியான, ஆனந்தமயமான வாழ்க்கையை விரும்பினால், நம் வாழ்க்கையின் அடிப்படை சக்தியான இச்சா சக்தியின் கூறுகள் முரண்பாடுகளற்று, ஒத்திசைவுடன் இருந்தாக வேண்டும். நம் இச்சைகளை அறிந்து கொள்வதன் மூலமே, அது சாத்தியமாகலாம்.

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கமும், நம் மூளையின் மூலமே இயக்கப்படுகிறது. மூளையின் ஒவ்வொரு இயக்கமும் நம் மனமாக வெளிப்படுகிறது. அந்த மன இயக்கங்கள், நம் மனதின் உணர்வுநிலையிலோ (Conscious) அல்லது உள்ளுணர்வு நிலையிலோ (subconscious) அல்லது, ஆழ்மன நிலையிலோ (unconscious) நிகழலாம். அந்த நிகழ்வு நடைபெறும் மனதின் தளம், நம் விழிப்புணர்வின் ஆழத்தைப் பொறுத்தது – நம் விழிப்புணர்வு அதன் உச்சத்தை அடையும்போது, நம் மனதின் மொத்த இயக்கமும் உணர்வு நிலையிலேயே நடைபெறக் கூடும். நமது இச்சைகளும் நம் மூளையையே ஆதாரமாக கொண்டுள்ளதால், எல்லா இச்சைகளும் நம் மனவெளியில் வெளிப்பட்டே ஆக வேண்டும். – நம் விழிப்புணர்வைப் பொறுத்து, மனதின் ஏதாவது ஒரு தளத்தில்.

நம் மனதின் அடிப்படை இச்சைகள் நம் உடல் சார்ந்ததே. இந்த அடிப்படை இச்சைகளின் இயல்பு, நமது இருப்பை உறுதிச் செய்ய தேவையான மிக அடிப்படையான இயக்கங்களை உருவாக்குவதாகவே இருக்க கூடும். உதாரணமாக பசி என்னும் உணர்வு, உணவு உண்பதற்கான இச்சையை உருவாக்குவதன் மூலம், நம் இருப்பை உறுதிச் செய்கிறது. உடலை பாதுகாப்பதற்கான இச்சையின் மூலம், நம் சூழலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளிலிருந்து நம்மை பாதுகாப்பதற்கான இயக்கங்கள் உருவாகிறது. காமம் என்னும் இச்சையின் மூலம், நம் இனம் அழியாமல் அதன் இருப்பை உறுதிச் செய்வதற்கான இனப்பெருக்கம் என்னும் இயக்கத்தை உருவாக்குகிறது. இவ்வாறு நம் ஒவ்வொரு இயக்கங்களுக்கும் அடிப்படையாக, அந்த இயக்கத்திற்கான இச்சை இருந்துகொண்டே இருக்கிறது.

உயிரியல் பரிமாணத்தின் உயர்நிலையில் உள்ள சில உயிரினங்களை தவிர மற்ற அனைத்து உயிரினங்களிலும், இந்த இச்சைகளும் இச்சைகளை காரணமாக கொண்ட விளைவுகளும், அந்த உயிரினங்களின் உணர்வுநிலைகளின் இடைவினைகள் (interaction) இல்லாமலேயே நடைபெறுகிறது – அந்த உயிரினங்களுக்கு உணர்வு என்னும் தளம் இருந்தாலும். மனித இனம் தவிர மற்ற உயர்நிலை உயிரினங்களுக்கும், அவை உணர்வுத் தன்மைக்கான சாத்தியங்களுடன் இருந்தாலும், அந்த உணர்வின் மூலம் அதன் இச்சைகளின் இயக்கத்தையும் இயக்கத்தின் தன்மைகளையும் வடிவமைப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதில்லை. ஆனால் மனிதனுக்கு மட்டுமே, இச்சா சக்தி இயக்கமாகவோ அல்லது செயலாகவோ வெளிப்படுவதற்கு, ஒரு அனுமதி இயக்கமும் மூளையிலிருந்து தேவைப்படுகிறது. மூளையின் அந்த அனுமதி இயக்கம் அனுமதித்தால் மட்டுமே, இச்சா சக்தி, இயக்கமாகவோ செயலாகவோ வெளிப்பட சாத்தியம் உண்டு. ஆனால் இயற்கையின் விதிப்படி, எந்த வெளிப்பட்ட சக்தியும, எத்தகைய ஒரு இயக்கத்தையும் உருவாக்காமல் அழிய முடியாது. ஆகவே மூளைக்கு உள்ள சாத்தியங்கள், அந்த இச்சைக்கான இயக்கத்தை அனுமதிப்பது அல்லது, அந்த இச்சையை வேறு சாத்தியமான வழிகளில் திரும்பிச்செல்ல அனுமதிப்பது. அதாவது மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களின் விதியை இயற்கையே நிர்ணயிக்கிறது, உயிர்களினுள் இச்சா சக்தியை வெளிப்படுத்துவதுடன் அந்த இச்சையை உடனடியாக நிறைவேற்றுவதன் மூலம். ஆனால், மனித உயிரில் இச்சையை உருவாக்குவது மட்டுமே இயற்கை, அந்த இச்சா சக்தி ஊடுருவும் பாதையை முடிவு செய்வது, அந்த மனித உயிரின் செயல். அதாவது, மனிதனின் விதியை அந்த தனிப்பட்ட மனிதனே அமைத்துக் கொள்வதற்கான சாத்தியத்தை இயற்கை ஒவ்வொரு மனித உயிருக்கும் அளித்துள்ளது.

இச்சை நம் உணர்வுதளத்தில் தோன்றினால், அந்த இச்சைக்கான அனுமதி இயக்கமும், இச்சையின் விளைவான இயக்கமும் நம் உணர்வு தளத்திலேயே நடக்கும். இந்த இயக்கங்களில், காரணமும் விளைவும் காரணம் விளைவாக மாறுவதற்கான அனுமதியும் நம் உணர்வு தளத்திலேயே நடைபெறுவதால், இந்த காரண காரியங்களின் முழு இயக்கத்தையும் நாம் விரும்பினால் நம்மால் அறிய முடியும். ஆனால் நம் உள்மனம் மற்றும் ஆழ்மன நிலைகளில் உருவாகும் இச்சா சக்தியையும் அதன் இயக்கங்களையும், தற்போதைய நம் உணர்வு நிலையில், நம்மால் உணர முடியாமல் போகலாம். ஆனால், நம்மால் உணர்வுநிலையில் ஏற்படும் இந்த இயக்கங்களின் செயல்பாடுகளை விழிப்புணர்வின் மூலம் உணர முடிந்தால், உள்மன, ஆழ்மன நிலைகளில் நடைபெறும் இச்சா சக்தியின் இயக்கங்களை அனுமானிக்க முடியலாம்.

உணர்வு தளத்தில், இச்சா சக்தி, இயக்கமாக மாறுவதற்கான அனுமதி, நம் இயல்பை பொறுத்து, நமது தர்க்க புத்தியின் (Logic) மூலமாகவோ அல்லது மனக்கிளர்ச்சி நிலையின் (Emotion) மூலமாகவோ அனுமதிக்கப்படுகிறது. இதை அறிவது மிக எளிதானது. இவ்வாறே நம் உள்மனம் மற்றும் ஆழ்மன தளங்களில் உருவாகும் இச்சைகளுக்கும், நம் மூளை அனுமதி வழங்கியாக வேண்டும், அது நம் மனதிலும் வெளிப்பட்டாக வேண்டும் – அந்த இச்சை தோன்றும் மனதின் தளங்களிலேயே. நம் மனம் உணர்வு நிலையில் அனுமதி வழங்காத போது, அந்த அனுமதி யாரால் வழங்கப் படுகிறது? அது நம் உள்மனம் மற்றும் ஆழ் மனதின் உள்ளடக்கத்தால் (content) வழங்கப்பட்டிருப்பதுதான் சாத்தியம். அதாவது நம் உள்\ஆழ் மனதின் உள்ளடக்கம் அனுமதித்தால் மட்டுமே, அந்த தளத்தில் தோன்றும் இச்சை இயக்கமாக மாறமுடியும். இயற்கை விதிப்படி எந்த ஒரு சக்தியும் அழிய முடியாது – உரு மாற மட்டுமே முடியும். ஆகவே, நம்முள் தோன்றும் இச்சைகள், நமது மனதின் உள்ளடக்கம் அனுமதித்தால், அந்த இச்சை சுட்டும் இயக்கமாக மாறும். அல்லது அந்த இயக்கத்தை நம் உள்ளடக்கம் அனுமதிக்காவிட்டால், அந்த இச்சை, அதனுடன் தொடர்புள்ள வேறு இயக்கங்களாக மாறலாம், உள்\ஆழ் மன உள்ளடக்கத்தின் வழிகாட்டுதலுடன்.

நம் அடிப்படை இச்சைகளை நம் மனம், அதன் வெவ்வேறு தளங்களில், எவ்வாறு இயக்கமாக மாற அனுமதிக்கிறது என்பதை பொறுத்தே நம் வாழ்க்கையின் இயல்பு அமைந்துள்ளது. அந்த அனுமதியின் தன்மை, நம் மனதின் உள்ளடக்கத்தை பொறுத்தே அமைகிறது. ஆகவே நம் வாழ்க்கை செல்லும் திசை, நம் மனதின் உள்ளடக்கத்தால் மட்டுமே முடிவு செய்யப்படுகிறது. நம் மனதின் உள்ளடக்கமோ, நம் நம்பிக்கைகள், ஏற்றுக்கொண்ட கட்டுப்பாடுகள், நமது பயங்கள், வன்முறை இயக்கங்கள், நம்மால் அடையமுடியாத விருப்பங்கள், பொறாமைகள், இன்னும் இது போன்ற குப்பைகளாலேயே நிரம்பியுள்ளது. நாம் உண்மையிலையே மனிதர்களாக வாழ விரும்பானால், இயற்கை நமக்கு அளித்துள்ள, நம்மை விலங்குகளிலிருந்து உயர்ந்ததாக இருக்கச்செய்யும் காரணியான உணர்வுநிலையை அடைந்தாக வேண்டும். அந்த உணர்வுநிலையை பெறும் முயற்சி கூட நம்மிடமிருந்து வெளிப்படவில்லையெனில், நாம் உண்மையில் மனிதர்கள் என்னும் போர்வைக்குள் வாழும் விலங்குகளே – அந்தப் போர்வை, உண்மையிலேயே மனிதர்களாக வாழ்ந்தவர்களின் பெருங்கருணையால் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது!

தொடர்புள்ள பதிவு; Desire

Thursday, October 13, 2011

இருப்பு - Existance

நம் வாழ்க்கையை அதன் உள்ளிலிருந்து எப்போதாவது அறிந்து கொள்ள முயற்சித்திருந்தால், வாழ்க்கையை குறித்த சில அடிப்படை கேள்விகளை எதிர் கொள்ள வேண்டியிருந்திருக்கும். நம் கேட்கும் வீரியத்திற்கேற்ப, நம் பார்வையின் ஆழத்திற்கேற்ப, நம் வாழ்வின் இயல்பிற்கேற்ப, கேள்வியை ஆராயும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய பதிலை அளிக்கும் கேள்விகள்! ஆம், நம் வாழ்க்கையை அறிந்து கொள்ள வேண்டுமென்றால், நிச்சயமாக கேட்கப்பட்டாக வேண்டிய கேள்வி, அடைந்தாக வேண்டிய பதில் – அந்த பதில் எத்தகையதாக இருந்தாலும். நம் வாழ்க்கையின் ஒரு சிறுபகுதியையாவது உணர்வு நிலையில் அடைந்திருந்தால் மட்டுமே, அந்த கேள்விகள் நம் மனதில் எழ சாத்தியமுண்டு. அந்த கேள்வியும், பதிலை அடைவதற்கான இச்சையும் கூட நம் உணர்வின் எல்லைகளை விரிவடையச் செய்யும் சாத்திய கூறுகளை தம்முள் கொண்டிருக்க கூடும்.

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கூறுகளும் செயல்களால் ஆனது. அந்த செயல்கள் நம்மால் செய்யபடுவதாகவோ அல்லது நம் மூலம் செய்விக்கப் படுவதாகவோ இருக்க்கலாம். அச்செயல்களை, அதன் ஒற்றைத் தன்மையில் ஆராய்ந்தால், அச்செயல்களுக்கோ அல்லது அதன் விளைவுகளுக்கோ எந்த ஒரு அர்த்தத்தையும் நம்மால் காண இயலாமல் போகலாம். எனில், நம் வாழ்க்கையின் அர்த்தம் என்ன? நாம் எதற்காக அல்லது யாருக்காக வாழ்கிறோம் அல்லது வாழ வேண்டும்? நம் வாழ்க்கையின் கூறுகளாகிய செயல்களின் அர்த்தம் என்ன? அந்த செயல்கள் இல்லாது போனால் நம் வாழ்க்கை என்ன ஆகும்? அந்த செயல்களின் அடிப்படை என்ன? அந்த அடிப்படைகள் இல்லாது போனால் அல்லது ஒரு மாய தோற்றமாகிப் போனால், நம் செயல்கள் அல்லது அச்செயல்களால் ஆன நம் வாழ்க்கை என்ன ஆகும்? நம் செயல்களின் அடிப்படை ஒரு மாய தோற்றத்தினால் ஆனதாக இருந்தால், நம் செயல்களிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ள வேண்டுமா? அவ்வாறு விலக்கிக் கொண்டால், நாம் எதைப் பற்றிக்கொண்டு வாழ்வது? நாம் பொய் தோற்றத்தை அடிப்படையாக்க கொண்ட வாழ்க்கையிலிருந்து மீண்டு, புதிய ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்றால், அந்த புதிய வாழ்வின் அடிப்படையும் பொய் தோற்றங்களாக இல்லாமல் இருக்க வேண்டுமானால் என்ன செய்வது? இதைப் போன்ற இன்னும் எத்தனையோ கேள்விகள்!

இந்த கேள்விகள், நம்மையே நாம் உணரத் தொடங்கினால் அல்லது உணர வேண்டும் என்று விரும்பினால் மட்டுமே எழ சாத்தியமுண்டு. இந்த கேள்விகள் மற்றும் அதற்கான விடையை நாம் அணுகும் முறை கூட, நம் வாழக்கையை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ புரட்டிப் போடும் சாத்தியங்களை உடையது. அதாவது, இந்த கேள்விகளை நாம் அணுகும் போது, நம் உணர்வுகளையும் மிக கவனமாக பின் தொடரவேண்டியது அவசியம். அவ்வாறு நம் உணர்வுகளை நம்மால் பின்தொடர இயலாவிட்டால், ஒரு வழிகாட்டி அல்லது குருவின் துணை அவசியப்படலாம். எவர் ஒருவர் நம் இயல்பை உணர்ந்து, நம் ஆன்மீக கேள்விகளுக்கு நாமே விடையை அறிய உதவுகிறாரோ, அவரே ஒரு குருவாக இருக்க முடியும். நம் உணர்வுகளை மிக கவனமாக நம்மால் பின்தொடர இயலுமானால், நம் உணர்வுகளே கூட நமக்கு குருவாக இருக்கூடும்.

வாழ்க்கை குறித்த நம் கேள்விகளின் பதில், நம் தனி மனித இயல்புகளையும் அந்த இயல்புகளின் அடிப்படையான தனிமனித இச்சைகளையும் பொறுத்தே அமையும். ஆக நம் இயல்புகளையும் இச்சைகளையும் அறிந்து கொள்வதே ஆன்மீகம் அல்லது நம் வாழ்வு குறித்த அறிதலுக்கு தொடக்கமாக இருக்க முடியும். நம் இயல்புகளையும் இச்சைகளையும் அறியாமல், நம் வாழ்வின் அர்த்தத்தை தேடினால், ஒருவேளை அங்கு தெரியும் அர்த்தமின்மை, வாழ்வின் மேல் நம்மை வெறுப்புறச் செய்து, தற்கொலைக்கு கூட தூண்டலாம். சமூக அமைப்பில் அர்த்தமின்மை என்னும் மாயையில் நம்மை தள்ளி, சமூக அமைப்பிலிருந்து நம்மை விலகச் செய்யலாம். இத்தகைய விளைவுகள், நம் இயல்பை நாம் அறியாமல், கற்பனைகள் மூலம் அடையும் முடிவுகளின் காரணமாகவே ஏற்பட்டுகின்றன. இத்தகைய முடிவுகள், மீண்டு வர இயலாத பொறிகளினுள் நம்மை முழுமையாக மூழ்கடிக்கலாம். ஆக, ஆன்மீகத் தேடுதலை, நம் இயல்பை அறிவதலிருந்தே தொடங்க முடியும்.

எந்த ஒரு பொருளுக்கும் அல்லது உயிருக்கும் அதன் இருப்பை உறுதிசெய்வதே அடிப்படை இச்சையாக இருக்க முடியும். அதன் மற்ற அனைத்து இச்சைகளின் கட்டுமானமும் இந்த அடிப்படை இச்சையை அடித்தளமாக கொண்டே இருக்கும். நாமும் அவ்வாறே! நம் இருப்பின் மேல் கொண்டுள்ள இச்சையையும் அதை சார்ந்து உள்ள அல்லது சார்ந்து உருவாக்கிய இச்சையையும் அறிந்து கொள்ள, நம் இருப்பின் உணர்வு நமக்கு இருந்தாக வேண்டும். ஆனால், துரதிர்க்ஷ்டவசமாக நம்மில் பெரும்பான்மையினர், பெரும் மகிழ்ச்சி அல்லது கடும் துன்பத்தில் மட்டுமே நம் இருப்பை உணரும் தன்மையில் இருக்கிறோம். நம் இருப்பைக் குறித்த விழிப்புணர்வே நமக்கு இல்லாத பட்சத்தில், அந்த இருப்பை அடிப்படையாக கொண்ட இச்சைகளை அறிந்திருப்பதற்கான சாத்தியம் இன்னும் குறைவாகவே உள்ளது.

ஆனல், மனம் செயல்புரிய வேண்டுமானால் நம் இருப்பை அது உறுதிசெய்தாக வேண்டும் – செயலின்றி மனதால் இருக்க முடியாது. நம் இருப்பின் அடிப்படையை மனதால் உணரமுடியாதபோது, அகங்காரத்தின் துணைகொண்டு நமது இருப்பைக் குறித்த கற்பனைகளை உருவாக்குவதன் மூலம், மனம் அதன் செயல்பாட்டை உறுதி செய்து கொள்கிறது. ஆக நம் இருப்பின் அடிப்படை இச்சைகள், மனதால் அகங்காரத்தின் துணை கொண்டு உருவாக்கப்பட்ட கற்பனைகளாலான இருப்பின் அல்லது மாயை இருப்பினாலான இச்சைகள் மூடி மறைத்துக் கொண்டிருக்கின்றன. அதாவது நாம் கணம் தோறும் உணரும் விருப்பங்களில் பெரும்பாலானவை, நம் கற்பனை அல்லது மாயையால் ஆன நம் இருப்பின் விருப்பங்களே. சில அடிப்படை விருப்பங்கள் நம்மை அறியாமலே நம்மிடமிருந்து வெளிப்படும். கற்பனை அல்லது மாயையால் ஆன நம் இருப்பு, அடிப்படை இருப்பின் வெளிப்பாடுளை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ செய்யலாம் – அது நம் மாயை இருப்பு, அடிப்படை இருப்புடன் கொண்டுள்ள ஒத்திசைவு அல்லது முரண்பாடுகளை பொறுத்த்து.

நம் இருப்பின் இச்சைகளை அறியவேணைடுமானால், அதை சூழ்ந்துள்ள மாயையை நாம் துளைத்து சென்றாக வேண்டும். எனில், அந்த மாயையின் இயல்பை அறிவது மட்டுமே அத்தகைய ஒரு சாத்தியத்தை நமக்கு அளிக்க கூடும். நம் இருப்பு மற்றும் இருப்பின் இச்சைகள், உண்மையானது. அதாவது, அது பொதீகமானது. ஆனால், நம் கற்பனையால் ஆன இருப்புக்கு அத்தகைய பொதீக இயல்புகள் இருக்க வாய்ப்பில்லை – அந்த கற்பனைகள் நம் மூளையில் ஏற்படுத்தும் சில உளவியல் சார்ந்த வேதி மாற்றங்களைத் தவிர. ஆம், இந்த மாயை அல்லது கற்பனை இருப்பு என்பது முழுவதும் நம் உளவியல் சார்ந்த இருப்பு. நம் எண்ணங்களே அந்த மாயைகளை உருவாக்கி, அந்த எண்ணங்களால் ஆன நம் அகங்காரத்துடன் பிணைத்து அதன் மாயத்தோற்றத்தை உறுதி செய்கிறது.

நம் வாழ்க்கை தளத்தில், நம் மனங்களின் வெளிப்புற கட்டுமானம் முழுவதும் வெறும் எண்ணங்களால் ஆனது. இந்த எண்ணங்களே மாயை இருப்பை உருவாக்குகிறது. ஆனால், இந்த எண்ணங்களைத் தாங்கிகொண்டிருக்கம் அந்த மனதின் மூலம் மட்டுமே, அந்த எண்ணங்களைத் தாண்டிச் சென்று, நம் இருப்பின் ஆழத்தையம் அடைய முடியும். இதுவே ஆன்மீகம் மனித இனத்தின் பெரும்பான்மையினரிடம் வெளிப்படாமல் இருப்பதற்கான மூல காரணமாக இருக்க கூடும். மாயையால் மூடப்பட்டுள்ள மனதின் மூலமே அந்த மாயையை அறிந்து, மனதின் ஒருபாகமாக மாறிவிட்ட மாயையை உடைத்தெறிய வேண்டுமென்பது சற்று கடினமான செயலாகத்தான் இருக்ககூடும்.


அறிவின் மூலம் மட்டுமே அந்த தொடக்கத்தை பெறமுடியும். துரதிர்க்ஷ்டவசமாக, உலகம் முழுவதும் கல்வி முழுமையாக பொருளியல் சார்ந்த்தாக மாறிவிட்டது. அதாவது இன்றைய சூழலில் நம் வாழ்க்கை அறிவு என்பது நிறுவப்பட்ட கல்விக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் வெளியே மட்டுமே பெறமுடியக்கூடிய ஒன்றாகி விட்டது. இந்த பொருளியல் சார்ந்த கல்வி, நம் ஆன்மீகத்தையும், பொருளியல் சார்ந்த கற்பனைகளாக மாற்றி விட்டது. நாமும், நம் சந்ததியினர் நிறுவப்பட்ட கல்விக்கு வெளியே அவர்கள் ஆர்வம் செல்லாதவாறு, அவர்களை நிறுவப்பட்ட கல்வியினுள்ளே முழுமையாக வழிப்படுத்தி, அவர்களும் மாயையினுள் நிரந்தரமாக இருக்குமாறு உறுதி செய்து கொள்கிறோம்.

Tuesday, October 4, 2011

சக்தி

நம் பிறப்பு, இருப்பு, இறப்பு ஆகிய அனைத்தின் அடிப்படையும் சக்தியே. தத்துவப்பூர்வமாகவும், விஞ்ஞானப்பூர்வமாகவும் இந்த உலகத்தின் இருப்பின் அடிப்படை சக்தியே ஆகும் - E = mc^2. நாம் காண்பதும், கேட்பதும், நுகர்வதும், உண்பதும், உணருவதும் அனைத்தும் சக்தியின் வடிவங்களே. ஆயினும், நம் அன்றாட வாழ்க்கைத் தளத்தில் உபயோகப்படுத்தும் சக்தியின் வடிவங்கள், நமக்கு போதுமான அளவில் இல்லை. அனைத்துமே சக்தி மயமாக இருந்தாலும், சக்திக்காக இப்போதும் நாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருக்கின்றன. மூன்றாவது உலகப் போர் ஒன்று நடக்குமானால், அது சக்தியின் உரிமைக்காகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது. எல்லாமும் சக்தியின் வடிவங்களாக இருந்தாலும், நாம் கூட சக்தியின் ஒரு வடிவாக இருந்தாலும், சக்தியின் உரிமைக்காக நாமும், நம் சந்ததியினரும் ஒருவருடன் ஒருவர் போரிடும் தருணத்திற்காக காத்திருக்கிறோம் – நம் வாழ்வின் முரண்பாடுகளின் உச்சம்!

உபயோகப்படுத்தும் சக்தியின் வடிவங்கள், நமக்கு போதுமான அளவில் இல்லை. நம் வாழ்வின் பெரும்பகுதி, தற்போதைய வாழ்க்கைச் சூழலில், இந்த சக்தியின் வடிவங்களை சார்ந்தே உள்ளது. சக்தியின் போதாமைக்கான காரணங்கள் பல தளங்களை சார்ந்தவை. இந்த அனைத்து தளங்களையும் உணரத் தேவையான ஒரு முழுமையான பார்வையுடையவர்களாக நாம் இருந்தால், அந்த போதாமையைத் தவிர்க்க நம்மால் இயன்றவற்றை நாம் செய்து கொண்டிருப்போம் – அதாவது, ஒரு உலகப் போரை தவிர்க்க நம்மால் இயன்றதை செய்து கொண்டிருப்போம், நமக்கு தெரிந்தோ தெரியாமலோ!.

உலக மக்கள் தொகை, 1960 ஆம் ஆண்டு சுமார் 300 கோடி. 1999 ஆம் ஆண்டு, சுமார் 600 கோடி. இன்று, சுமார் 700 கோடி. 2050 ஆம் ஆண்டு, எதிர்பார்க்கப் படுவது, சுமார் 900 கோடி. `1990 ஆம் ஆண்டுக்கும் 2008 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 18 வருட காலத்தில், உலகின் தனி மனித சக்தியின் நுகர்வு சுமார் 10% அதிகரித்துள்ளது. அதாவது, சராசரியாக வருடத்திற்கு 0.53%. இதே கால கட்டத்தில், உலகின் மக்கள் தொகை சராசரியாக வருடத்திற்கு 1.8% அதிகரித்துள்ளது.

இந்த புள்ளி விவரத்தை, ஒரளவேனும் நம்மால் கிரகித்துக் கொள்ள முடிந்தால், நம் முன் உள்ள பிரச்சினையின் விஸ்வரூபத்தை நம்மால் அனுமானிக்க முடியலாம். பிரச்சினை உலகின் உபயோகப்படும் சக்தியின் தேவை மட்டுமல்ல – எங்கும் நிறைந்திருக்கும் சக்தியை, மனித உபயோக சக்தியாக மனிதனால் மாற்றப்படும்போது, அந்த மாற்றம், பூமியின் சமன்நிலையில் உருவாக்கும் குலைவும், அந்த சமன்நிலைக் குலைவால் உலக வாழ்க்கையில் (மனிதனின் மற்றும் பிற உயிர்களின் – தற்கால மற்றும் சந்ததியினரின்) வாழ்க்கையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற மற்றும் ஏற்படப் போகின்ற எதிர்மறை விளைவுகளும்!

இன்று நம் வாழ்க்கையின் தரம் நிச்சயமாக உயர்ந்துள்ளது. அதற்கு காரணம், சந்தேகமே இல்லாமல், நம்மிடம் உள்ள சக்திதான் – நாம் நுகரும் மற்றும் நாம் உணரும் சக்திகள். ஆனால் நாம் உபயோகிக்கும்\நுகரும் மற்றும் உணரும் சக்திகள், தொடர்ச்சியாக, நம் இருப்பையே அழிக்கும் அளவுக்கு எதிர்வினைகள் இல்லாமல், கிடைத்துக் கொண்டிருக்குமா என்பதே நம் கேள்வியாக இருக்க கூடும் – இந்த பிரச்சனையின் ஆழத்தை நம்மால் உணர முடிந்தால்!

நாம் உணரும் சக்தியை – நம்முள் இருக்கும் சக்தி, நாம் அறியும்போது, நம் படைப்பூக்கத்தை அறியத் தொடங்குவோம். இந்த படைப்பூக்கம் நம்மை முற்றிலும் வேறான தளத்துக்கு நம்மை எடுத்துச்செல்லக் கூடும். இங்கு சக்தியின் நுகர்வு இல்லை – அதன் உணர்வு மற்றும் இயக்கம், அந்த சக்தியின் இருப்பின் வடிவில் மட்டுமே. எனவே அதன் மூலம் எதிர்மறை விளைவுகளுக்கும் வாய்ப்புகள் இல்லை. இந்த சக்தி, நம் வாழ்வின் தரத்தை உள்முகமாக உயர்த்துகிறது, எதிர்மறை விளைவுகள் எதுவும் இல்லாமலே!

ஆக நம் முன் உள்ள கேள்வி, நம் உபயோகத்தின்\நுகர்வின் மூலம், உலகின் இருப்பின் சமன்நிலை குலைவிற்கு, நாமும் எவ்வாறு ஒரு காரணியாக இருந்து, அதன் எதிர்மற் விளைவிற்கும் எவ்வாறு பொறுப்பேற்கும் இடத்தில் இருக்கிறோம் என்பதும், இந்த எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்க நம்மால் செய்யக் கூடியது என்ன என்பதுமாகவே இருக்க கூடும். நம்மால் சக்தியின் நுகர்வை தவிர்க்க முடியாது, குறைக்கவும் முடியாது. அவ்வாறு செய்வோமெனில் நம்மால் சமூகத் தளத்தில் வாழவும் முடியாது. ஆனால் சக்தியை வீணாக்குவதை நம்மால் தவிர்க்க முடியும் – நமது தேவைகளையும் நுகர்வையும் முழுமையாக அறிந்து கொள்வதன் மூலம்.

உலகில் உள்ள எந்த உயிரினமும் மற்ற உயிரினங்களை சார்ந்தே வாழ முடியும். எந்த ஒரு உயிரினமும் மற்ற ஒரு உயிரினத்தை அல்லது உயிரினத்தால் உருவாக்கப்பட்டதையே உணவாக கொள்ள முடியும். தாவரங்களும், நிலத்தில் உள்ள நுண்ணுயிரிகள் மூலமே தங்கள் உணவைப் பெறுகின்றன. மனிதனின் உடலையும், உயிருடன் இருக்கும்போதே, பல நுண்ணுயிரிகள் உணவாக்கிக் கொண்டிருக்க கூடும். ஆகவே உலகின் சமன்நிலை குறையாமல் இருக்க, இவ்வுலகில் வாழும் உயிரினங்களின் சமன்நிலையும் குலையாமல் இருக்க வேண்டியது அவசியம்.

மனித இனம் தன் அறிவின் மூலம், இயற்கையிலிருந்து ஓரளவுக்கு தன்னை விடுவித்துக்கொண்டுள்ளது. இதன் மூலம், இயற்கையின் தன்னைத் தானே சமன் செய்யும் இயக்கங்களிலிருந்தும், தன்னை ஒரு எல்லைவரைக்கும், விடுவித்துக் கொண்டுள்ளது. உலக மக்கட்தொகை பெருக்கத்துக்கு, இது ஒரு வெளிப்படையான காரணம். ஆனால், இயற்கையின் அழிவுகளிலிருந்து நம்மை விலக்கிக் கொண்ட அளவிற்கு நாம் இயற்கையை நமது நுகர்வுக்காக அழிப்பதிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ளவில்லை, அல்லது விலக்கிக் கொள்ள முடியவில்லை. மேலும், இயற்கை அழிவிலிருந்து நம்மை விலக்கிக் கொண்ட அளவிற்கு, மனித விதைகள் முளைப்பதிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ளவில்லை. இதன் மூலம், இயற்கையின் சமநிலை குலைவிற்கு நாமே காரணமாயிருந்திருக்கிறோம்.

கட்டுப்பாடுகளற்ற மக்கட்தொகைப் பெருக்கத்தால் உயிரினங்களின் சமமின்மை ஒரு புறமிருக்க, மனித இனத்தின் நுகர்வும், அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நமது நுகர்வு, தேவைகளிலிருந்து ஆடம்பரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆம், நம் நுகர்வுக்கு அடிப்படைத் தேவை சக்தி – உபயோகப்படுத்தும் வடிவில் உள்ள சக்தி. நம் நுகர்வு, தேவையை அடிப்படையாக கொண்டிருக்குமானால், அந்த நுகர்வை நம்மால் தடுக்க முடியாது. அதற்கு தேவையான சக்தியை நாம் நிச்சயமாக பெற்றே ஆக வேண்டும் - அதனால் எந்த விளைவுகள் ஏற்பட்டாலும். அந்த விளைவுகள், பெரும்பாலும், இயற்கையால் சமன் செய்யக் கூடியதாகவே இருக்கும். ஆனால் நம் நுகர்வின் பெரும் பகுதி ஆடம்பரத்திற்காக மாறும்போது, உபயோக வடிவில் உள்ள சக்தியின் தேவையும் பல மடங்கு அதிகரிக்கிறது. அதன் எதிர் விளைவுகளை, பேரழிவுகள் இல்லாமல், இயற்கையால் சமன் செய்ய முடியுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி!

தற்போது உலக அளவில் மின் சக்தியின் பெரும்பகுதி நிலக்கரி(40%), எண்ணை(5%), இயற்கை வாயு(21%) மற்றும் கதிரியக்க அணுக்களின்(13.5%) மூலமே பெறப்படுகிறது. இது தவிர உலகின் இயங்கு சக்தியில் (வாகனங்கள்) பெரும் பகுதி எண்ணையிலிருந்து பெறப்படுகிறது. இந்த புள்ளி விபரம், நம் ஆடம்பரத்திற்காக நாம் எத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்தக் கூடியதாக இருக்கலாம். உலகின் நிலக்கரி இருப்பில் பெரும் பகுதி அடர்ந்த காடுகளிலேயே உள்ளது. அந்த நிலக்கரியை உபயோகப்படுத்த வேண்டுமானால், முதலில் செய்யப்படுவது, கரியமில வாயுவை உணவாக கொள்ளும் அந்த காடுகளை அழிப்பதே. பின்னர் நிலக்கரியை எரித்து, பெருமளவு கரியமில வாயுவை வெளியிட்டு, உபயேகப்படுத்தும் சக்தியாக்குகிறோம். காரியமில வாயுவை உண்ணும் காடுகளை அழித்ததன் மூலம், இயற்கையின் சமநிலையை உருவாக்கும் ஒரு காரணியை நாமே அழித்து விட்டோம்.

அடுத்தது அணு சக்தி. மிகவும் பாதுகாப்பான அணு உலைகள் வந்து விட்டன. இருப்பினும், மற்ற எந்த எந்திரங்களைப் போலவே அணுஉலையும் விபத்துக்கான ஒரு குறைந்தபட்ச நிகழ்வாய்ப்பு உள்ளதாகவே இருக்கும். அவ்வாறு எற்பட்டால் அந்த பகுதி அடுத்த சில பத்தாண்டுகளுக்கு எந்த உயிரினமும் வாழத் தகுதியற்றதாகி விடும். மேலும் கதிரியக்க அணுவிலிருந்து உபயோகப்படுத்தும் சக்தியை பிரித்தெடுத்த பின்னும், அந்த அணுக் கழிவுகள் நம்மால் உபயோகப்படுத்த முடியாத சக்தியை வெளியிட்டுக் கொண்டே இருக்கும். அணுக்கழிவு மேலாண்மையில் ஏற்படும் எந்த குளறுபடிகளும், அது வெளியிடும் உபயோகப்படுத்த முடியாத சக்தியின் மூலம் இயற்கையில் சமநிலையின்மையை உருவாக்கலாம்.


ஆக அன்றாடம் நம் தேவை மற்றும் ஆடம்பரத்திற்காக செலவிடும் சக்தியின் பெரும்பகுதி, இயற்கையின் சமன்நிலையை தொடர்ச்சியாக குலைத்துக் கொண்டு இருப்பதன் மூலமே பெறப்படுகிறது. நம் வாழ்க்கை இன்னும் அதிக பட்சம் 80 ஆண்டுகள் வரை இருக்கலாம். ஒருவேளை இந்த இயற்கையின் சமன்நிலை குலைவு நம் வாழ்க்கை முடியும்வரைக் கூட நம்மை விட்டு வைக்கலாம். ஆனால் ஒரு எல்லைக்கு மேல் இயற்கையின் சமன்நிலை குலைவை எந்த வழியிலாவது இயற்கை சமன் செய்தாக வேண்டும். அந்த சமன் செய்யும் இயக்கம், நம் வாழ்க்கை காலத்தில் இல்லாவிட்டாலும், மிக நெருங்கிய நம் சந்ததியினரின் காலத்தில் நிச்சயமாக ஏற்பட்டாக வேண்டும் – அந்த இயக்கம், உலகின் ஒரு பேரழிவாகவே இருக்க முடியும். ஆம், நம் சந்ததியினருக்கு நம் ஆடம்பரம் மற்றும் பேராசைகளின் மூலம் செல்வத்தை மட்டும் சேர்த்து வைக்கவில்லை. அவர்கள் அழிவையும் அவர்களுக்காக தினம் தோறும் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்!

நம்மால் என்ன செய்ய முடியும்? பொருள்களில் உள்ள சக்தியை உபயோகப்படுத்தும் வடிவிலுள்ள சக்தியாக மாற்றி, அதை மீண்டும் நுகரும் பொருளாக மாற்றி, நுகர்ந்து கொண்டிருப்பது நாமேதான் – நாமும் அங்கத்தினராக உள்ள நம் சமூகமத்தின் மூலம். சமூகத்தின் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள், அந்த சமூக மனத்தின் இச்சைகளை நிறைவேற்றுபவர்களாகவே இருக்க முடியும். அந்த சமூக மனத்தின் இச்சையை முடிவு செய்வது, சமூகத்தின் துளிகளாகிய நம் தனிமனங்களின் இச்சைகளே. நம் ஆடம்பரங்கள் மூலம் நம் சந்ததியினரின் அழிவை நாம் தினம் தோறும் சேமித்துக் கொண்டிருப்பதை உண்மையிலேயே நம்மால் உணர முடியுமானால், நம் மனதினுள், நம் ஆடம்பரத்தைக் குறித்து மிகப்பெரிய மாறுதல் ஒன்று நிகழக் கூடும். அந்த நிகழ்வு, அதன் வீரியத்தைப் பொறுத்து, சமூக மனதினுள் மாற்றத்தை உருவாக்கத் தொடங்கும். எந்த ஒரு மாற்றமும் தனி மனித மனதில் உருவாகிய பின்பே சமூக மனதினுள் மாற்றத்தை உருவாக்கத் தொடங்கும். அந்த சமூக மாற்றம் ஏற்பட சில ஆண்டுகளோ, சில பத்தாண்டுகளோ, சில நூற்றாண்டுகளோ அல்லது பேரழிவு ஏற்படும்வரையோ நாம் காத்திருக்க வேண்டியிருக்கலாம்!