Tuesday, December 31, 2013

இயந்திரம்

இயந்திரம் என்பதன் வரையறை, ஒரு (பொருள்)இருப்பு, அதற்கு என்று முன்பே வரையறுக்கப்பட்ட செயலை, மீண்டும் மீண்டும் செய்யும் ஒன்று எனலாம். வரையறுக்கப்பட்ட செயல் என்பது மிக எளிதான மீண்டும் மீண்டும் செய்யப்படும் ஒற்றைச் செயல்பாடாகவோ (எளிய மெக்கானிக்கல் இயந்திரம்) அல்லது, பலவிதமான முன்கணிக்கப்பட்ட செயல்களின் விளைவுகளுக்கேற்ப தன் செயலை பிரித்தறிந்து செய்யும் (சிக்கல் மிகுந்த தானியங்கி இயந்திரம்) செயலாகவோ இருக்கலாம்.

இந்த வகைப் பார்வையில், உயிரினங்களும் மாபெரும் இயந்திரங்களே- ஒரே ஒரு வித்தியாசத்தை தவிர! நாம் பொதுவாக இயந்திரங்கள் என கூறுவது, மனிதனால் உருவாக்கப்பட்டவை. எனவே அவை மனிதனின் அறிதலின் எல்லைக்குள் இருக்கும் உயிரினங்கள், இயற்கையின் விளைவுகளால் தாமாகவே உருவானவை. அல்லது இயற்கையை, முழு முதல் இருப்பை, கடவுள் என நாம் கூற விரும்பினால், அவை கடவுளால் உருவாக்கப்பட்டவை. நிச்சயமாக, மனிதனால் உருவாக்கப்படுபவையின் செயல்கள், மனிதனின் அறிவையும் கற்பனையைம் தாண்ட இயலாது. உயிரினங்களின் பொதீக இருப்பு மனிதனின் அறிதலின் எல்லைக்குள் பெருமளவு வந்து விட்டாலும், உயிரினங்களின் முழு இருப்பு என்பது மனித அறிவின் அறிதலுக்கு அப்பாற்பட்டே உள்ளது. இதையே இயந்திரங்களுக்கும் உயிரினங்களுக்குமான வேறுபாடாக நாம் கொள்ளலாம்.

ஒரு உயிரினமாக மனித இனமும், நம் செயல்பாடுகளை ஒட்டி, இந்த பிரிவினைக்கு உட்பட்டது. அதாவது மனிதர்களின் வரையறைக்கு உட்பட்ட, குறிப்பிட்ட செயல்களை மீண்டும் மீண்டும் செய்வது இயந்திரத்தனமானது என்றும், நம் உயிரின் இயல்பான, நம் பொது வரையறைக்கு அப்பாற்பட்ட செயல்களின் மூலம் செயல்படுவது உயிர்த்தனமானது என்றும் கூறலாம். இதன்படி பார்த்தால், சமூகமாக வாழும் எல்லா உயிரினங்களும், அந்த சமூகத்தின் சில வரையறைகளுக்குட்பட்டு இயந்திரத்தனமாக வாழ்கின்றன. அந்த வரையறை தாண்டிய தளங்களில் மிக சுதந்திரத்துடன், தங்கள் முழு உயிர்த்தன்மையுடன் வாழ்கின்றன.

மனிதர்களும் ஒரு சமூக விலங்கு. மனித இனம் மற்ற உயிரினங்களிடமிருந்து அறிவின் தளத்தில் மிக வேறுபாட்டுடன் உள்ளது. அந்த வேறுபாட்டின் காரணமாக, அறிவின் வீச்சின் காரணமாக, மனித சமூகத்தின் வரையறைகள் மற்ற உயிரினங்களின் சமூக வரையறைகளிலிருந்து வேறுபட்டதாக, பரந்ததாக உள்ளது. அந்த வரையறைக்குள் நாம் இயந்திரமாக செயலாற்றியாக வேண்டியுள்ளதை தவிர்க்க முடியாது. ஆனால் ஒரு உயிரினமாக நம்மை நாம் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டுமானால், நம் உயிர்தன்மையின் தளத்திலும் நாம் செயல்பட்டாக வேண்டும். ஒரு தனிமனித இருப்பாக, நம் ஒவ்வொருவருக்கும், நம்மை ஒரு மனித உயிராக நிறுவுவது, நாம் எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய சவாலாக இருக்கலாம்.

மேலே கூறப்பட்டவை ஏற்றுக்கொள்ளகூடியவையாக இருந்தால், அந்த சவாலின் அம்சங்களை ஆராயலாம், அல்லது இந்த உரையாடல் தேவையற்ற ஒன்று. இயந்திரத் தன்மை என்பது, வரையறுக்கபட்ட செயலை அந்த வரையறைக்குட்பட்டு செய்வது. சமூகம் என்பது ஒரு அதிகார அடுக்கு. அதன் அதிகாரம், சமூகத்தின் அங்கத்தினர்களால் (ஜனநாயக சமூகத்தில்) வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் செயல்படும். ஜனநாயக சமூகத்தில், இந்த வரையறை என்பது அடுத்தவர்களை அல்லது சமூகத்தின் இயக்கங்களை பாதிக்கும் செயல்களுக்கு மட்டுமே இருக்கும். முழுமுற்றான தனிப்பட்ட செயல்களுக்கு எத்தகைய கட்டுப்பாடும் பெரும்பாலும் இருக்க கூடாது. இங்கு ஒரு ஆர்வமூட்டும் விஷயம், எல்லாவிதமான வெளிப்படையான நம் செயல்பாடுகளும், மற்றவர்களை எந்த விதத்திலாவது நிச்சயமாக பாதிக்கும். ஆனால் சமூகத்தில் இத்தகைய எல்லா விதமான புறவயச்செயல்பாடுகளுக்கும் சமூக வரையறை என்பது இயலாத ஒன்று. ஆக நம் செயல்பாடுகள் குறித்த தளத்தில், இன்னொரு வரையறை, தனிப்பட்ட அளவில், தேவைப்படுகிறது. இதுவே நம்மை ஒரு உயிரினமாகவோ அல்லது இயந்திரமாகவோ நிலைநிறுத்துவதற்கு நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாகும்.

நம்மை ஒரு சமூக அமைப்பாக, சமூக அதிகாரத்துக்குள் மட்டும் நிலைநிறுத்தி, முழுமையாக நம் இயக்கத்தை அமைத்து கொண்டால், அது நம்மை முழுமையாக இயந்திரத்தனத்துக்கு ஒப்புக்கொடுப்பதாகும். அந்த சமூக அதிகாரத்தை முற்றிலும் எதிர்த்து, முழுமையாக அதற்கு எதிராக இயங்குவது, தவறாக இயங்கும் இயந்திரத்தன்மையை போன்றதே. அதாவது ஒரு எதிர் சமூக அமைப்பை உருவாக்கி அதன்மூலம் மீண்டும் இயந்திரத்தன்மையை நிலைநிறுத்துவது. சமூக அமைப்புக்குள் அதன் விதிகளுக்குட்பட்டு இயங்கும்போது, அந்த அமைப்பின் அதிகார பொறுப்பில் இருப்பவர்கள் முதல் அதன் இயக்கத்தை கடைமட்டத்தில் இயக்குபவர்கள்வரை எவரும் அந்த இயக்கங்களின் விளைவுகளையும் அதன் எல்லாவிதமான தாக்கங்களையும் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை. அவர்கள் அறிந்திருப்பது அந்த இயக்கத்தில், தனிமனிதனாக தங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள பங்களிப்பையும் அந்த பங்களிப்பு ஏற்படுத்தும் வரையறை செய்யப்பட்டுள்ள விளைவுகள் மட்டுமே. உதாரணமாக, தூக்குத்தண்டனை வழங்கும் நீதிபதியால், சமூகத்தின் அதிகாரத்தால் வரையறுக்கப்பட்டுள்ள, சட்டங்களையும் முறைகளையும் கருத்தில் கொண்டு மட்டுமே தூக்குத்தண்டனை வழங்க முடியும். அந்த சட்டங்களால வரையறைச்செய்யப்படாத எந்த நியாயங்களும் அந்த நீதிபதிக்கு முக்கியமானதல்ல. வரையறை செய்யப்படாத நியாயங்கள் அவரால் எடுத்துக்கொள்ளப்பட்டால், அவரால் அந்த நீதிபதி பதவியில் தொடர முடியாது. ஆக நீதிபதியாக அவர் ஒரு இயந்திரமாக மட்டுமே இருக்கமுடியும்.

அந்த தூக்குதண்டனையை நிறைவேற்றும் கடைசி மனிதரும், ஒரு இயந்திரமாகவே செயல்பட முடியும். அந்த செயலை பொறுத்தவரையில், சமூக அதிகார அமைப்பில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதன் காரணங்களோ அல்லது அதன் நியாய அநியாயங்களோ அவருக்கு ஒரு பொருட்டு அல்ல. குற்றம் சாட்டப்பட்டவரை கொல்ல வேண்டும் என்பது மட்டுமே சமூகத்தால் அவருக்கு வரையறை செய்யப்பட்டது. அந்த செயலை நிறைவேற்றும்போது அவர் ஒரு இயந்திரம் மட்டுமே. இந்த வரையறை, சமூக அமைப்பில் நாம் எந்த நிலையில் இருந்தாலும். எந்த செயல் புரிந்தாலும் நம் அனைவருக்கும் பொருந்தும். எனவே சமூக அமைப்பில் நாம் அனைவரும் இயந்திரங்களே. இயந்திரங்களாகவே இருந்தாக வேண்டும். ஏனெனில் நம் வாழ்க்கைய வாழ, சமூக அமைப்பு தவிர்க்க முடியாதது - நாம் ஒரு சமூக விலங்கு!

எனவே ஒரு உயிரினமாக நம்மை நிகழ்த்த ஒரு தளம் இருந்தாக வேண்டும். அந்த தளம், சமூக அமைப்புகளால் தொடப்படாததாக இருந்தாக வேண்டும். சமூக அதிகாரம், அந்த தளத்தை தொட்டால், அது வரையறை செய்யப்பட்டதாக, இயந்திரத்தனமானதாக மாறிவிடும். ஆக ஒரு வரையறை செய்யப்படாத தளத்தில், முழுக்க முழுக்க நம் நுண்ணறிவால், நமது அறியமுடியாத இயங்கு சக்தியால் இயங்கும்போது மட்டுமே நாம் ஒரு உயிரினமாக நம்மை நிலை நிறுத்த முடியும். முன்பே கூறியபடி, மனிதர்கள் தவிர அனைத்து உயிரினங்களுக்கும் சமூக அமைப்பு என்பது, மிகமிக குறுகியவட்டத்தில் மட்டுமே. எனவே அவற்றின் பெரும்பாலான செயல்கள் வரையறைக்கு அப்பாற்பட்டது. எனவே அவற்றின் உயிர்த்தன்மையை அவை எப்போதும்(பெரும்பாலும்) வெளிப்படுத்துகின்றன.

நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நம்மால் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பு, ஒரு சமூகமாக நம் வாழ்க்கை தரத்தை தொடர்ந்து உயர்த்தி வந்தாலும், ஒரு உயிர் இருப்பாக, உயிர்த்தன்மைய வெளிப்படுத்துவதற்கு ஒரு தடையாகவே உள்ளது. ஆம் உண்மையில், ஒரு உயிராக நம் உயிர்த்தன்மையை வெளிப்படுத்த வேண்டுமானால், இயந்திர வாழ்க்கையிலிருந்து வெளிப்பட வேண்டுமானால், சமூக அமைப்பை சமூக அதிகாரத்தை கடந்த ஆனால் சமூக அடுக்கை குலைக்காத ஒரு வாழ்க்கையை நாம் வாழ்ந்தாக வேண்டும். அத்தகைய ஒரு வாழ்க்கையை வாழ்ந்தால் மட்டுமே, ஒரு உயிரினமாக இந்த உலகில் நம் இருப்பை உறுதி செய்ய முடியும். துரதிர்க்ஷ்டவசமாக, மிகப்பெரும்பான்மையான மனிதர்கள் இயந்திரங்களிடமிருந்து பிறந்து, இயந்திரங்களாக வளர்ந்து, இயந்திரங்களாக செயலாற்றி, இயந்திரமாக அழிந்து விடுகிறார்கள்.


எனில் எவ்வாறு நம் உயிர்த்தன்மையை வெளிப்படுத்தி, ஒரு உயிரினமாக நம்மை நிலை நிறுத்துவது? சமூக இயக்கங்கள் பெருமளவில் வரையறை செய்யப்பட்டு மனித சமூகத்தில், கலை என்பது நம் உயிர்த்தன்மையை வெளிப்படுத்துவதற்கு சாத்தியமான ஒரு தளம். ஆனால் நாம் அனைவரும் கலைஞர்கள் அல்ல, இயந்திரங்களும் அல்ல. எனவே, நம் உயிர்த்தன்மையை வெளிப்படுத்த நமக்கேயான ஒரு தளம் இருந்தாக வேண்டும். அந்த தளத்தை அறிந்து, நம் உயிர்த்தன்மையை முழுமையாக வெளிப்பட செய்வதே, ஒரு மனித உயிராக நம்மால் செய்யமுடிந்த உச்சபட்ச செயலாக இருக்க முடியும். அதுவே மனித வாழ்க்கையின் இலட்சியம்!

blog.change@gmail.com

Saturday, December 14, 2013

எண்ணங்கள்-3

நாம் எண்ணங்களிலிருந்து விடுதலை பெற்று எண்ணங்களை கவனிக்கத்தொடங்கும்போது, எண்ணங்கள் சாதாரண நிலையில், அதன் முக்கியத்துவத்தை இழக்கின்றன. முக்கியத்துவத்தை இழந்த எண்ணங்கள், அவை தோன்றி மறையும் இயக்கத்தில் சில இடைவெளிகளை அனுமதிக்கின்றன. அத்தகைய எண்ணங்களற்ற இடைவெளிகளில் நம் மனம் அதன் இயல்பான விழிப்புணர்வை மீண்டும் பெறுகிறது. அந்த விழிப்புணர்வு, மனதின் உணரும் திறனை மேலும் மேம்படுத்துகிறது. இதன் மூலம் எண்ணங்கள் மனதின் உணர்வுகளுக்கு இடம்கொடுத்து நகருகின்றன. ஆக மனதின் உணர்வுநிலை அதிகரிக்கும்தோறும் எண்ணங்கள் முக்கியத்துவத்தை இழந்து, நாம் விரும்பாத நிலையில் மனதைவிட்டு முற்றிலும் அகன்றுவிடுகின்றன. நம் வாழ்க்கை இயக்கத்துக்கு எண்ணங்கள் தேவைப்படும்போது, தேவைக்கேற்ற வகையில் நம் நண்பனை போல உதவுகின்றன.

நமக்கு தேவைப்படும் இடங்களில் எண்ணங்கள் வெளிப்பட்டு நமக்கு நண்பனை போல உதவியாக வேண்டும். எனவே எண்ணங்களும் விழிப்புடன் எப்போதும் நம் அழைப்புக்காக காத்திருந்தாக வேண்டும். எண்ணங்கள் நம் அழைப்புக்கு வராத பட்சத்தில், நம் வாழ்க்கை அந்த நொடியில் முடிந்து விடும். எனவே நினைவுகளால் தொகுக்கப்பட்ட எண்ணம், நம் செயலின் தேவைக்காக எப்போதும் காத்திருக்க வேண்டும், ஆனால் நம் விழிப்புணர்வு இல்லாமல், நம் அனுமதி இல்லாமல் அவையாக செயல்படக் கூடாது. இதுவே எண்ணங்களிலிருந்து பெறும் விடுதலையாக இருக்க முடியும். நண்பனாக, நமக்காக காத்திருக்கும் எண்ணத்தை, விழிப்புணர்வை தவறவிடும் நொடியில், மாயையால் உந்தப்பட்டு, 'நான்' என்று கருதி, மீண்டும் எண்ணங்களுக்கு நாம் அடிமையாகவும் கூடும். எனினும், ஒரு முறை விடுதலையை சுவைத்தவர்களால் மீண்டும் அடிமைத்தளையில் முழுவதுமாக இழக்க முடியாது.

மனதின் மேல் தளத்து எண்ணங்கள், நம் பிரக்ஞ்சையில் முழுவதுமாக வசப்படும்போது, எண்ணங்களுக்கு காரணமான நினைவுகளும் ஒன்றன் பின் ஒன்றாக நம் பிரக்ஞ்சையினுள் வரத்தொடங்கும். அதாவது நம் எண்ணங்களுக்கு காரணமான மனதின் ஆழத்தில் பதிந்திருக்கும் நினைவுகளும் பிரக்ஞ்சையின் வீச்சில் உணரப்படத் தொடங்கும். எண்ணங்களுக்கு காரணமான நினைவுகள், அந்த எண்ணங்களுடன் பிரக்ஞ்சையில் வரும்போது, எண்ணங்களின் தற்கால செல்லுபடியாகும் அல்லது செல்லுபடியாகாத தன்மையும் நம் அறிதலில் மிகத்தெளிவாக விளங்கும். ஆக, நம்மால் தற்கால நிகழ்வுகளுக்கு மிகஏற்ற செயல்களை, எந்த சந்தேகமும் இல்லாமல் முழுமையாக செயல்படுத்த முடியும். எனவே அந்த செயல்களின் விளைவுகள் எவ்வாறாக இருந்தாலும், அவற்றால் பாதிப்படையாமல் நம் வாழ்க்கையை வாழவும் முடியும்.
ஸ்தூல உடல் எனக்குறிப்பிடப்படும் (ப்ராணமய கோஷம், மனோமய கோஷம், விக்ஞ்ஞானமய கோஷம், ஆனந்தமய கோஷம்) நான்கு பகுதிகளும், தற்போதைய நம் அறிதலின் எல்லைக்குள், நம் மூளையையும் அதன் விளைவாக நாம் பெற்றிருக்கும் மனதின் நிலைகளையும் குறிக்கின்றன. மனம் எண்ணங்களிலிருந்து விடுதலை பெறும்போது, ஸ்தூல உடலின் உணர்வுகள் நம் மனதால் உணரப்படுகிறது. இதை வேறு வார்த்தைகளில் கூறினால், மனம் எண்ணங்களிலிருந்து விடுதலை பெறும்போது, மனம் ஒரு புதிய, நாம் இதுவரை அறிந்திராத ஒரு நிலைக்கு மாறுகிறது. அதாவது, மனதின் வெவ்வேறு நிலைகளை அறியும் மனம், அந்த அறிதலின் விளைவாக தன்னை முற்றிலும் புதிதாக, நமது உணர்வு தளத்தில், மாற்றியமைத்துக் கொள்கிறது.

ஸ்தூல உடல், பொதீக உடலுடன் மிக நெருங்கிய தொடர்புடையது. ஸ்தூல உடலின் இயக்கங்களின் அடிப்படையிலேயே பொதீக உடல் இயங்க முடியும். அதாவது, பொதீக உடலும் ஸ்தூல உடலுபம் ஒரு வகையான ஒத்திசைவில் இருந்தாக வேண்டும். எண்ணங்களை மனதின் எண்ணங்களை கடந்த இழை கவனிப்பதன் மூலம் நம் மனம் அடையும் மாற்றம், ஸ்தூல உடலை மிகவும் துடிப்புள்ளதாக மாற்றுகிறது. ஸ்தூல உடல் துடிப்புள்ளதாக இருக்கும்போது, பொதீக உடலும் அதற்கு இணையான துடிப்புள்ளதாக இருந்தால் மட்டுமே அவை இரண்டும் ஒத்திசைவுடன் இயங்க முடியும். அத்தகைய ஒத்திசைவு ஏற்படாத நிலையில், மனம் அடையும் புதிய உணர்வுகளும் ஸ்தூல உடல் அடைந்த துடிப்பும், ஒரு இருப்பாக, நம்மை அழித்து விடக்கூடும். உதாரணமாக மனநிலை பிறழ்தல், உடல் நிலை பாதிப்படைதல் போன்றவை.

ஆம், பொதீக உடல் தகுந்த தகுதியை அடையாமல், மனதுக்கு எண்ணங்களை கவனிப்பதோ, அதன் மூலம் அதீத உணர்வு நிலைகளை அடைவதோ முடியாததாக இருக்கலாம். உணவே மருந்தாக இருக்கவேண்டிய நிலையை விட்டு, மருந்தே உணவாக மாறும் நிலையில் பெரும்பாலான மத்தியதர வர்க்கத்தினர் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்திருக்கும் இந்த காலகட்டத்தில், பொதீக உடலை தகுதியுள்ளதாக மாற்றாமல் ஸ்தூல உடலை மாற்றியமைக்கும் எண்ணங்களுடனான நம் விளையாட்டு அத்தனை எளிதானதல்ல. அத்தகையவர்களுக்கு, தங்கள் வாழ்க்கைமுறையை மாற்றியமைக்காதவரைக்கும், எண்ணங்களிலிருந்து விடுதலை பெறுவது என்பது சாத்தியமற்றதாக இருக்கலாம்.  ஆம், விடுதலை அடைய உண்மையான விருப்பமும் அர்ப்பணிப்பும் தேவை - வாழ்வதற்கும் கூட!

நம் மனமும் உடலும் நம்மால் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு நுண்ணறிவு உடையவை. அவை ஒன்றின் தகுதிக்கேற்ப மற்றதை மாற்றியமைத்து, தமக்குள் ஒத்திசைவை ஏற்படுத்திக் கொள்ளும் - நாம் அவற்றின் இயக்கத்தில் குறுக்கிடாதது வரை! நம் மனம் ஒரு உயர்ந்த நிலையை அடையும்போது, உடலும் அந்த நிலைக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள தேவையானவற்றை தானாகவோ அல்லது மனதின் தூண்டுதலாலோ செய்யத்தொடங்கும். அல்லது உடல் ஒரு உயர்ந்த நிலையை அடையும்போது, மனதையும் அதற்கு இயைவான நிலையை அடைய தூண்டுவதன் மூலம் உடலும் மனமும் தங்களுக்குள் ஒத்திசைவை ஏற்படுத்திக்கொள்ள முயலும். ஆனால், நம்முள் விடுதலைக்கான விருப்பம் துளிர்க்காதவரையில் அந்த ஒத்திசைவுக்கான தூண்டுதலை முன்எடுத்துச் செல்வது இயலாததாக இருக்கலாம்.

நாம் ஒன்றின் மேல் விருப்பம் கொள்ள வேண்டுமென்றால், அதைக்குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும். அந்த அறிவு குடும்ப சூழலில் இருந்தோ அல்லது பண்பாட்டுச் சூழலிருந்தோ அல்லது இவை கடந்த தனிமனித சூழலிருந்தோ நமக்கு வரலாம். இன்றைய சூழலில், ஆன்மீக விடுதலையை கற்பிக்கும் பண்பாட்டுத்தளமான மதங்கள், அறிவை முற்றிலும் தவிர்த்து பெருமளவு நம்பிக்கை சார்ந்ததாகவும், சிறிது உணர்வு சார்ந்ததாகவும் கடைபிடிக்கப்படுகிறது. விடுதலைக்கு உணர்வு மிக இன்றியமையாதது. ஆனால் அந்த உணர்வு, அறிவை முற்றிலுமாக புறக்கணிக்கும்போது, அந்த உணர்வு வெறும் நம்பிக்கை சார்ந்ததாகவும், அதன் மூலம் எண்ணங்களை மனதில் பெருக்கும் உற்பத்தித் தளவாடமாகவும் மாறிவிடுகிறது. எனவே மதங்கள் பண்பாட்டுச் சூழலில் மாற்றியமைக்கப்படாதவரைக்கும், விடுதலைக்கான விருப்பம் பெரும்பான்மை மக்களை அடைவது எளிதான காரியம் அல்ல.

இங்கு மனம் மற்றும் மனதில் உருவாகும் எண்ணங்களை மட்டுமே நம் எண்ணங்களுடனான அடிமைத்தளைக்கு காரணங்களாக கூறப்பட்டாலும், நம் மனதின் மிக ஆழத்தில் இன்னும் பல காரணிகள் இருக்கலாம். இங்கு மனம் என்பது ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட அர்த்தத்துடனே கூறப்பட்டுள்ளது. அதாவது, இந்திய ஆன்மீகத் தளங்களில் சித்தம் எனக்கூறப்பட்டுள்ளது, இங்கு மனம் என பொதுமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆக இங்கு கூறப்பட்டவை அனைத்தும் ஒரு தொடக்கநிலையில் இருப்பவனின் மனநிலையிலேயே கூறப்பட்டுள்ளது. இதன் பயன் எனக்குறிப்பிட்டால், விடுதலை குறித்த ஒரு ஆர்வத்தையும், அதிகப்படியான அறிதலை தேடுவதற்கான கிரயாஊக்கியாகவும், ஆன்மீக விடுதலை என்பது அனைவருக்கும் சாத்தியமான ஒன்று என்பதை மனதில் பதியவைப்பதுமே. அதைத்தவிர இங்கு கூறப்பட்டவை வெறும் வெற்று வார்த்தைகளே. அதிலும் ஆன்மீக பாதையில் குறிப்பிடத்தக்க தூரத்தை கடந்தவர்களுக்கு, இவை வெறும் குப்பைகளே. ஏனெனில் ஆன்மீக பாதை என்பது மிகவும் தனிமையானது - எந்த இருவரும் ஒரே பாதையில் பயணிக்க முடியாது, மிகவும் அந்தரங்கமானது. அதை வெளிப்படுத்துவது என்பதே ஒரு வகையில் அகங்காரம். கென் வில்பரின் மேற்கோளை மீண்டும் நினைவுகூருகிறேன்,


".................................. And this is truly a terrible burden, a horrible burden, because in any case there is no room for timidity. The fact that you might be wrong is simply no excuse: You might be right in your communication, and you might be wrong, but that doesn’t matter. What does matter, as Kierkegaard so rudely reminded us, is that only by investing and speaking your vision with passion, can the truth, one way or another, finally penetrate the reluctance of the world. If you are right, or if you are wrong, it is only your passion that will force either to be discovered. It is your duty to promote that discovery—either way—and therefore it is your duty to speak your truth with whatever passion and courage you can find in your heart. You must shout, in whatever way you can.” 
http://www.goodreads.com/author/quotes/22075.Ken_Wilber

[முடிவு]


blog.change@gmail.com

Tuesday, December 10, 2013

எண்ணங்கள்-2

எண்ணங்கள் நம்மை அடிமைப்படுத்துவதில்லை. நம் மனதின் இயல்பிற்கேற்ப எண்ணங்கள் நம்மில் வந்து சென்று கொண்டிருக்கின்றன. நம் அறியாமையால், வந்து சென்று கொண்டிருக்கும் எண்ணங்களுக்கு அடிமையாகி, நாமே அந்த எண்ணங்களாக மாறிவிடுகிறோம். எண்ணங்களுக்கு அடியில் உள்ள மனதின் ஒரு இழை எண்ணங்களை கவனிக்க தொடங்கும்போது, எண்ணங்களின் அடிமைத்தளையிலிருந்து நாம் விடுதலை பெற்றிருப்போம். எண்ணங்கள் கவனிக்கப்படும்போது, எண்ணங்களாக இருக்கும் நாம், அந்த கவனிக்கும் மனதின் இழையாக மாறிஇருப்போம்.

இப்போது எண்ணங்களை கவனிப்பது இன்னொரு எண்ண இழையா அல்லது எண்ணங்கள் புழங்கும் தளத்திற்கு அடியில் உள்ள மனதின் இழையா என எவ்வாறு அறிவது? எண்ணங்கள் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் இயல்புள்ளவை. எண்ணங்களை கவனிக்கும் இழை மற்றொரு எண்ண இழையாக இருந்தால், அது மனதின் மேல் தளத்தில் இயல்பாக நிகழும் எண்ண ஒட்டங்களை கட்டுப்படுத்தி, தன் ஆதிக்கத்தை முன்னிறுத்த முயலும். அவ்வாறு எண்ண ஒட்டம், மனதின் கவனிக்கும் இழையால் கட்டுப்படுத்தப்பட்டால், அந்த கவனிக்கும் இழை இன்னொரு எண்ண இழையே. எண்ணங்கள் கட்டுப்படுத்தப்பட்டால், அவை அந்த கட்டை உடைத்து புது வீரியத்துடன் வெளிப்பட்டு நம்மை மீண்டும் அடிமைப்படுத்தும், இந்த எண்ணங்களை மற்றொரு எண்ண இழையால் கவனிக்க முயல்வதும், அதனால் எண்ண அலைகள் கட்டுப்படுவதும், பின்னர் முழு வீரியத்துடன் நம்மை மீண்டும் அடிமைப்படுத்துவதும், தொடக்க நிலையில் உள்ள, எண்ணங்களிலிருந்து விடுபட முயல்பவர்களுக்கு மிக இயல்பானதே. இந்த எண்ணங்களுக்கிடையேயான போராட்டத்தை ஒரு புன்னகையுடன் எதிர்கொண்டு மீள்பவர்கள் மிக எளிதாக எண்ணங்களை கவனிக்கும் மனதின் இழையை கண்டு கொள்ள இயலலாம்.

'நான்'  என்பது 'என்' எண்ணங்கள் அல்ல என்பதை நாம் உணரும்போது, எண்ணங்கள் அதன் முக்கியத்துவத்தை இழக்கின்றன. முக்கியத்துவத்தை இழந்த எண்ணங்கள், எவ்வித கட்டுப்பாட்டுக்குமான தேவை இன்றி தாமாகவே மனதிலிருந்து மறைகின்றன. ஆக மனதின் இயல்பிற்கேற்ற எண்ணங்கள் தாமாகவே தோன்றி தாமாகவே மறைகின்றன. ஆனால் நாம் அந்த எண்ணங்களாக ஆவதில்லை. எனவே நம் உளவியல் சக்தி எண்ணங்களாக வீணடிக்கப்படுவதில்லை. எண்ணங்கள் எவ்வித அழுத்தத்தையும் மனதில் செலுத்தாமல் தானாகவே தோன்றி மறைகின்றன. நாம் விரும்பும்போது, எண்ணங்களாக மாறி, தேவையான செயல்களை செய்யலாம். ஆக நாம் எண்ணங்களின் அடிமைகள் என்பதிலிருந்து, எண்ணங்கள் நம் தோழன் என்னும் மாற்றம் நமக்குள் வருகிறது. மேலும், எண்ணங்களை கவனிக்கும் மனதின் உள் இழையாக நாம் மாறும்போது, எண்ணங்களாக வீண்டிக்கப்பட்ட உளவியல் சக்தி, மனதின் உள் இழையின் சக்தியாக சேமிக்கப்பட்டு, நம் விழிப்புணர்வாக வெளிப்படுகிறது.

எண்ணங்கள் இல்லாமல் இருக்கும் இடைவெளிகளில், மூளையும் அதனால் மனமும், முழு விடுதலையுடன் உள்ளன. அந்த இடைவெளிகளில், அவை சில நொடி நேரம் மட்டும் இருந்தாலும், அடையும் விடுதலை நம் மனதை மிகவும் உணர்வுத்திறன் உள்ளதாக மாற்றுகிறது. அல்லது, அந்த இடைவெளிகளில் மனம் அதன் இயல்பான உணர்வுத்திறனை மீண்டும் பெறுகிறது.

மனம் அதன் இயல்பான உணர்வுத்திறனை திரும்பப் பெறும்போது, நம் பொதீக (Gross body) உடலிலும் ஸ்தூல (Subtle body) உடலிலும் நிகழும் பல செயல்கள் நம் மனதின் கவனிக்கும் இழையால் உணர்வாக உணரப்படும். (பொதீக உடல் இந்திய ஆன்மீக மரபில் அன்னமய கோஷம் (Body formed by Food) எனவும், ஸ்தூல உடல் பிராணமய கோஷம்(Energy Body), மனோமய கோஷம்(Psychological Body), விக்ஞ்ஞானமய கோஷம்(Intelectual Body), ஆனந்தமய கோஷம்(Bliss Body) என நான்காகவும் வரையறுக்கப்பட்டுள்ளது). இந்த உணர்வுகள் எவ்வாறு இருக்கும் என கூறுவது இயலாத ஒன்று. ஏனெனில், அதற்கு இணையான ஒன்றை நாம் பெரும்பாலும் அனுபவித்ததில்லை. ஆனால், சில உதாரணங்களின் மூலம் அவற்றை கூற முடியலாம். அவ்வாறு கூறும்போது, நாம் அந்த உதாரணங்களையே முடிவுகளாக கொண்டு, அவற்றை எதிர்பார்பார்க்க தொடங்குவோம். ஆக, அந்த எதிர்பார்ப்பு மனதின் புதிய எண்ணங்களாக மாறி, மனதின் எண்ணங்களற்ற இடைவெளியை நிரப்பி, மனதின் உணர்வுத்திறனை மீண்டும் மழுங்கடிக்கும்.

எண்ண இடைவெளியில் நாம் அடையும் உணர்வுகளுக்கு உதாரணம்; நாம் முழுமுற்றாக ஒன்றின்\ஒருவரின் மேல் அன்பு செலுத்தும் போது, அந்த அன்பு முழுமையாக இருக்கும் சில நொடிகளில் ஒரு வித சிலிர்ப்பை உணர்ந்திருப்போம். அந்த சிலிர்ப்பு உணர்வை, எண்ணங்கள் அணையும்போது ஏற்படும் உணர்வுடன் ஓரளவு தொடர்பு படுத்தலாம். ஆண் பெண் உறவின் உச்சத்தில் (Orgasm), சில நொடிகள் அல்லது ஒரு நொடியின் சிறு சிதறலில் அடையும் மன உணர்வையும் ஒரளவு தொடர்பு படுத்தலாம். அல்லது, எண்ணங்கள் இல்லாமல் ஆகும்போது அடையும் ஒவ்வொரு உணர்வும் ஒவ்வொரு மலர் மலர்வதை போன்றிருக்கலாம். ஆம், இவை எல்லாம் அந்த உணர்வுகளை நம்மால் அறிய முடிந்த உணர்வுகளுடன் தொடர்பு படுத்துவதற்கு மட்டுமே - இவை, அவை அல்ல!

அவ்வாறு நாம் அறிந்திராத உணர்வுகளை அடைய தொடங்கும்போது, நம் மனதின் கவனிக்கும் இழையிலிருந்து தடம் மாறி மீண்டும் நாம் எண்ணங்களாக மாறிவிட நேரலாம் - நாம் தடம் மாறும் அறிதல் முற்றிலும் இல்லாமல். உதாரணமாக, நம் மனம் ஸ்தூல உடலின் உணர்வுகளை அடைய தொடங்கும்போது, மனம் அந்த உணர்வுகளுடன் எண்ணங்களை தோற்றுவித்து, அந்த எண்ணங்களை நம் கவனிக்கும் இழை தவறவிடும்போது, அந்த எண்ணங்கள் உருவெளித்தோற்றங்களாக (Hallucination) வெளிப்படும். ஒருமுறை இந்த உருவெளித்தோற்றங்களில் தம்மை இழந்தவர்கள் அதை விட்டுவிட்டு வெளிவருவது இயலாத காரியமாக இருக்கலாம் - போதைக்கு அடிமையானவர்கள் போல! மனம் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்த பின் அடையும் உணர்வு நிலைகளை பற்றிக்கொண்டு, அந்த உணர்வுகளின் இன்பத்தில் திளைத்தல். இது சுய இன்பத்தை திரும்ப திரும்ப அடையும் சிறுவனின் மனநிலையைப்போன்றது! 1960-கள் மற்றும் எழுபதுகளில், எல்.எஸ்.டி போன்ற போதைபொருட்களை உபயோகிப்பதன் மூலம் உருவெளிதோற்றங்களை மனதில் அடைந்து, அவற்றை ஆன்மீக அடைதலாக எண்ணுவது பரவலாக இருந்துள்ளது. அந்தகாலகட்டத்தில் இருந்த ஆன்மீகவாதிகள் போதைப்பொருட்களின் மூலம் அடையும் உருவெளிக்காட்சிகள், ஆன்மீக அனுபவங்கள் அல்ல என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

எண்ணங்களை கவனிக்கும் மன இழை வலிமை அடையுந்தோறும், அந்த இழை மெல்ல மெல்ல மனதின் ஆழங்களை நோக்கி செல்லலாம். இங்கு நாம் எண்ணங்களின் காரிய காரண இயக்கத்தை (Cause & Effect) சிறிதளவு அறிந்திருக்க வேண்டும். எண்ணங்கள் தாமாகவே மனதில் தோன்றுகின்றன என்பது மனதின் மேல் அடுக்கை மட்டுமே கருத்தில் கொண்டு கூறப்பட்டதாகும். நம் வாழ்க்கையில் செய்யும் எல்லா செயல்களுக்கும், விரும்பும் விளைவுகளை எதிர்பார்த்து வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் நமக்கு, காரணம் இல்லாமல் எந்த காரியமும் நடக்காது என்பது மிக நன்றாகவே தெரியும். நம் எண்ணங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஆம், மேல் மனதில் தாமாகவே வந்து செல்லும் எண்ணங்களுக்கு அடிப்படையாக, நினைவுப்பதிவுகள் நம் மூளையில் பதிந்திருக்கின்றன.


நம் புலன்கள் அறியும் உணரும் திறனை அடைந்தது முதல், அந்த உணர்வுகளை கிரகிக்கும் சக்தியை மூளை பெற்றது முதல், நம் புலன்களின் ஒவ்வொரு உணர்வும் மூளையால் கிரகிக்கப்பட்டு நினைவுகளாக சேமிக்கப்பட்டுள்ளது. நம் புதிய ஒவ்வொரு புலணர்வுகளும், சிந்தனைகளும் மூளையில் சேமிக்கப்பட்டுள்ள இந்த நினைவுகளின் தாக்கத்தை பெற்றபின்னரே புதிய நினைவுகளாக சேமிக்கவோ அல்லது புதிய எண்ணங்களாக வெளிப்படவோ செய்கிறது. அதாவது, நம் மனதில் தோன்றும் எந்த எண்ணங்களுக்கும், நம் நினைவுகளோ அல்லது புலனுணர்வுடன் சேர்ந்த நினைவுகளோ காரணமாக இருக்கும்.

மேலும்

தொடர்புள்ள பதிவுகள்

blog.change@gmail.com

Friday, December 6, 2013

எண்ணங்கள் - 1

நாம் எண்ணங்களால் ஆக்கப்பட்டவர்கள். நமது சுயம்(Self), தற்போதைய நம் விழிப்பு நிலையில், வெறும் எண்ணங்களால் ஆக்கப்பட்டுள்ளது. அதுவே நம் அகங்காரமாக (Ego) வெளிப்படுகிறது. நம் மனதில் எண்ணங்கள் இடைவிடாமல், விழித்திருக்கும்போதும் உறங்கும்போதும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. எண்ணங்கள் மனதில் இயங்கும்போது, நாம் அந்த எண்ணங்களாகவே மாறிவிடுகிறோம். அதாவது, நம் எண்ணம் நாம் என்னவாக இருக்கிறோம் என எண்ணுகிறதோ அதுவாகவே நாம் இருக்கிறோம். உதாரணமாக நம் எண்ணம் நாம் நல்லவர் என எண்ணினால் நாம் நல்லவராகவே இருக்கிறோம் - நாம் உண்மையில் எப்படிப்பட்டவராக இருந்தாலும். நம் எண்ணம், நம்மை பலவானாக எண்ணினால், நாம் பலவானாகவே மாறிவிடுகிறோம் - உண்மையில் நாம் எத்தகைய பலவீனர்களாக இருந்தாலும். நாம் என்பது நம்மை குறித்து நாம் எண்ணும் எண்ணங்கள் மட்டும் அல்ல. நம்முள் தோன்றும் எல்லா எண்ணங்களும் நாமே - அவை எத்தகைய எண்ணங்களாக இருந்தாலும். அதாவது நமது எண்ணங்களே நாம் - நம் தற்போதைய விழிப்பு நிலையில்!

இவை அனைத்தும் முழுமையை உண்மையாகவே உணர்ந்த பலரால், பல காலங்களில், பல்வேறு முறைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் வார்த்தைகளின் முன், இந்த வலைத்தளத்தில் வெளிப்படும் வார்த்தைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. இவை ஒரு சுயவிருப்பத்திற்காகவே வலையேற்றப்படுகிறது. மிக சமீபத்தில், படிக்க நேர்ந்த சீர்மை என்னும் குறுநாவலின் கதாநாயகனான கென்வில்பர்-இன் ஒரு மேற்கோள் அந்த சுயவிருப்பத்தை மீண்டும் நிலைநிறுத்தியது. (சீர்மை  குறுநாவலின் மூலம் கென் வில்பரின் அறிமுகத்தை பெற்று, ஒரு புத்தக கடையில் கென் வில்பரின் புத்தகங்களை தேடும்போது கிடைத்த FountainHead என்னும் 'அயன் ரான்ட்' அவர்களின் நாவல்.............. - இவ்வாறு 'சீர்மை'யின் மூலம் நான் பயணித்த தூரம் மிக அதிகம்)

 கென் வில்பரின் மேற்கோள்; ".................................. And this is truly a terrible burden, a horrible burden, because in any case there is no room for timidity. The fact that you might be wrong is simply no excuse: You might be right in your communication, and you might be wrong, but that doesn’t matter. What does matter, as Kierkegaard so rudely reminded us, is that only by investing and speaking your vision with passion, can the truth, one way or another, finally penetrate the reluctance of the world. If you are right, or if you are wrong, it is only your passion that will force either to be discovered. It is your duty to promote that discovery—either way—and therefore it is your duty to speak your truth with whatever passion and courage you can find in your heart. You must shout, in whatever way you can.” 
http://www.goodreads.com/author/quotes/22075.Ken_Wilber

மீண்டும் எண்ணங்களுக்கு. நம் தற்போதைய விழிப்பு நிலையில் எண்ணங்களை நம்மால் கவனிக்கப்படும் ஒரு செயல்பாடாக உணர முடிவதில்லை. நாம், நமது இருப்பை எண்ணங்களின் மேல் அமர்த்தி, நாமே எண்ணங்களாக மாறிவிடுகிறோம். அதாவது, எண்ணங்கள் எதை எல்லாம் எண்ணுகின்றனவோ அதுவே நாம் ஆகிவிடுகிறோம். எண்ணம் ஒரு செயலை செய்யுமாறு எண்ணினால், நாமே அந்த எண்ணமாகி, அந்த செயலை செய்கிறோம். அந்த செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கம்போதே நாம் வேறு ஒரு எண்ணமாகி, தொடங்கிய செயலை விட்டுவிடுகிறோம். அந்த செயல் முடிய வேண்டுமானால், மீண்டும் நம் எண்ணம் அந்த செயலின் மேல் குவிந்தாக வேண்டும். அதாவது, ஒரு புதிய எண்ணத்தின் மூலம், அந்த செயலை குறித்த ஒரு புதிய எண்ணமாகி, நாம் மீண்டும் தொடங்கிய செயலின் மேல் வந்தாக வேண்டும்.

நாம் நம் எண்ணமாக இருக்கும்வரையில் நம்மிடமிருந்து வெளிப்படும் எந்த செயல்களும், சுவாசித்தல் போன்ற நுண்ணறிவின் மூலம் நடைபெறும் செயல்களை தவிர, நம் எண்ணங்களின் உந்துதல் மூலம் மட்டுமே நடைபெற இயலும். இந்த செயல்பாட்டில், இயற்கையாக நம்மிடம் இருக்கும் நுண்ணறிவு (Inteligence) மிக மிக சிறு பங்களிப்பையே அளிக்க முடியும் - நம் எண்ணங்களில் நுண்ணறிவின் ஆதிக்கத்தை, நம்மால் சாதாரணமாக அறிய முடியாத தளத்தில், படரவிடுவதன் மூலம். அதாவது நம் தற்போதைய விழிப்பு நிலையில், நம் வாழ்க்கையை, நம் விதியை எண்ணங்களே தீர்மானிக்கின்றன. நாமே அந்த எண்ணங்களாக இருப்பதன் மூலம், அவற்றை நாமே தீர்மானிப்பதாக கூறிக்கொள்ளலாம் - ஆனால் நாமோ எண்ணங்களின் அடிமைகளாக இருக்கிறோம். எண்ணங்களின் அடிமைகளாக இருப்பதை அறியாமல் இருக்கிறோம். அந்த அறியாமையில் இருக்கும்வரை, நம் வாழ்க்கையை, நம் விதியை நாமே தீர்மானிக்கும் சக்தியை உடையவர்களாக இருந்தும், அவற்றை நம் எண்ணங்களிடம் ஒப்படைத்து விடுகிறோம்.

நாம்  எண்ணங்களாக இருக்கும்வரை, எண்ணங்களுக்கு அடிமையாகவே இருக்கிறோம். நம்மால் எண்ணங்களை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். நமக்குள் எத்தகைய எண்ணங்களும், நல்லவையோ அல்லது கெட்டவையோ, கிளர்ந்து எழுந்துகொண்டே இருக்கலாம். அவ்வாறு கட்டுக்கடங்காத எண்ணங்களுடன் நாம் இருந்தாலும், அந்த எண்ணங்களிடமிருந்து விடுபட்டிருக்கவும் நம்மால் முடியும்- நாம் அத்தகைய விடுதலைக்கு அதிவிருப்புடன் இருந்தால்!

ஆம், நாம் என்பது நமது எண்ணங்கள் அல்ல. எண்ணங்களாகவே நாம் மாறிவிடுவது, நமது மன மயக்கத்தால், நம் அறிவின் தயக்கத்தால், எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான விருப்பமின்மையால். நாம் விரும்பினால், இந்த நொடியில் எண்ணங்களிலிருந்து நம்மால் விடுபட முடியும், ஆனால் நம்மிடம் அத்தகைய பெருவிருப்பு இல்லை. ஒருவேளை அந்த விடுதலையின் ஆனந்தத்தை நம்மால் புரிந்து கொள்ளமுடியாமை கூட அதற்கு காரணமாக இருக்கலாம். அந்த விடுதலையின் ஆனந்தம் இதுவரை நாம் அறிந்துள்ள ஆனந்தங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. எனவே அந்த ஆனந்தத்தை அறிந்தவர்களால், அவற்றை நேரடியாக நமக்கு விளக்கமுடியாது. ஏனெனில் அதற்கு இணையான எதையும் நாம் இதுவரை அறிந்தது இல்லை. நம் மூளையால் எந்த புதியதையும் நாம் அறிந்த ஒன்றுடன் ஒப்பிடுவதன் மூலமே அறிந்து கொள்ள முடியும். எனவே எல்லா ஞானிகளின் விளக்கங்களும், நாம் அறிந்தவற்றுடன் ஒப்பிடப்பட்டு, திரிக்கப்பட்டு, அவற்றின் சாரத்தை இழந்த பின்பே நம் அறிவை அடைகிறது. ஞானிகள் அறிந்த ஆனந்தம் நம் அறிவுக்கு எட்டாத தளத்தில் இருப்பதால், அவர்களால் உவமைகளின் மூலம் மட்டுமே நமக்க விளக்க முடியும். உதாரணமாக பேரின்ப நிலையை ஆயிரம் இதழ் தாமரை மலர் முகிழ்தலுக்கு ஒப்பிடுதல் போன்றவை. இதற்கு அர்த்தம், அந்த ஆனந்தத்தை நம்மால் அடைய முடியாது என்பதல்ல. என்னால், இங்கு இந்த அளவுக்கேனும் விளக்கும் அறிதலை அடைய முடிந்திருந்தால், இந்த உலகில் வாழும் எந்த மனிதனுக்கும், அந்த பேரானந்தத்தின் உச்சத்தை அடைவது மிகமிக எளிதான செயலே- அத்தகைய விருப்பம் ஒருவரில் எழுந்தால்!

மீண்டும் எண்ணங்களுக்கு. நம் மனம் என்பது ஒரு செயல்பாடுகளின் களம். மேல் அடுக்கில், மனம் வெறும் எண்ணங்களாக இருக்கிறது. உள்ளடுக்குகளில், அது நம் எல்லா செயல்பாடுகளாகவும் இருக்கிறது. மேலும் அடியாழத்தில் மொத்த மனித குலத்தின் செயல் தளமாக இருக்கிறது என்றும் அதன் அடிப்பரப்பில் உலகத்தின் இயக்கமாக இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. இவை நம் தற்போதைய அறிதலுக்கு அப்பாற்பட்டவை. எனவே அவற்றை நம்புவதோ அல்லது மறுப்பதோ நமக்கு தேவையற்றது, முடியாதது. இவ்வாறு கூறப்பட்டிருப்பதை பற்றி அறிந்திருப்பது, நமது இருப்பை பற்றிய ஒரு கருத்தாக்கத்திற்கு சில தளங்களில் உதவலாம்.

நாம் விரும்பினால், எண்ணங்களிலிருந்து விடுபடுவது மிக எளிமையானது. மனதின் மேல் அடுக்கில் நிகழும் எண்ணங்களை, மனதின் எண்ணங்களுக்கு அடியில் உள்ள அடுக்கின் ஒரு இழையின் மூலம் கவனிக்கத்தொடங்கும் நொடியில் நாம் எண்ணங்களிலிருந்து விடுதலை பெற்றிருப்போம்.


[மேலும்]

எண்ணங்கள் - 2
blog.change@gmail.com