Tuesday, August 23, 2011

போராட்டம், ஆன்மீகம்

போராட்டம் – இந்த வார்த்தை கடந்த சில நாட்களில் நம் கவனத்தை ஈர்க்கவில்லை என்றால், நாம் லொகீக வாழ்க்கை தளத்தில் இருப்பவர்களானால், நாம் சமூக அமைப்பினுள் வாழவே தகுதியற்றவர்கள் என்றே கருதுகிறேன். இது என் தனிப்பட்ட கருத்து – என் சிந்தனையின், உணர்வுகளின் அடிப்படையில்.

ஊழலுக்கு எதிரான போராட்டம், எந்த ஒரு இரண்டாவது மனிதனுக்கும் எதிரான போராட்டமாக இருக்க முடியாது. அது நமக்குள் இருக்கும் ஊழல்வாதிக்கு எதிரான போராட்டமே. ஆம், நம் ஒவ்வொருவருக்குள்ளும், ஊழலுக்கு அடிப்படை காரணிகளான, பேராசை மற்றும் வன்முறை நிறைந்துள்ளது. நமது சுயமைய பார்வையே நமக்குள் நீக்கமற நிறைந்திருக்கும் பேராசையையும் வன்முறையையும் நம்மால் உணரமுடியாதபடிச் செய்கிறது. நம் மனதினுள் உள்ள பேராசையும், வன்முறையும் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் அமையுமானால், நாம் கூட, பெரும் ஊழல்வாதிகள் என நம்மால் அடையாளம் காணப்பட்டவர்களை விடவும், ஊழலில் எந்த விதத்திலும் சளைத்தவர்களாக இருக்க மாட்டோம் என்பதே நிதர்சனம்.

ஆக, இந்தப் போராட்டம் நமக்குள் இருக்கும், சமூக வாழ்க்கையை சுமூகமாக எடுத்துச் செல்ல தடைகளாக இருக்கும் நம் சொந்த மன இயக்கங்களுக்கு எதிரான போராட்டம். ஆம், இது அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் நமக்குள் அந்தரங்கமாக நடத்த வேண்டிய போராட்டம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அத்தகைய உள்மனப் போராட்டத்தை, உள்மனப் புரட்சியை உருவாக்க இயலாதவர்களாக நாம் இருக்கிறோம். ஆகவே சமூக வாழ்க்கையில் நம் மனதைக் கட்டுப்படுத்த, சமூகத் தளத்தில் செயல்படும் ஒரு சட்ட திட்டம் தேவையாக இருக்கிறது. இப்போதைய சமூகப்புரட்சி, தம் மனதை தாமே கட்டுப்படுத்த இயலாதவர்கள், சமூகத் தளத்தில் இயங்கும்போது, அவர்கள் மனதிலிருந்து பேராசை மற்றும் வன்முறைகள் வெளிப்பட்டு, நம் சமூகத்தின் சமன்நிலையைப் பாதிக்காதவாறு இருப்பதற்கு தேவையான சட்டதிட்டங்களை உருவாக்கும் கோரிக்கையையே முன் வைத்துள்ளது. ஆக, சமூகத்தினுள் புழங்கும் ஒவ்வொருவருக்கும், அவர்கள் மனதின் விரும்பத்தகாத இயக்கங்களை வெளிப்படையாக கட்டுப்படுத்தும் நோக்கமுள்ள இந்தப்புரட்சியை முன்நகர்த்தி செல்லவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் – நாம் சமன்நிலை குலையாத சமூக வாழ்க்கையை விரும்பினால்.

ஆன்மீகம் என்பது உணர்வின் உச்ச நிலையை நோக்கிச் செல்வது. எந்த ஒரு மனப் போராட்டமும், மனக் கட்டுப்பாடும் நம் உணர்திறனை அழிக்கும் இயல்புடையவை. ஆக போராட்டங்களும், கட்டுப்பாடுகளும் நம் ஆன்மீகத்தன்மையை அழிக்கும் மிக இயல்பான காரணங்கள். இங்கு போராட்டம் அல்லது கட்டுப்பாடு என்பது நம் மனப்போராட்டங்களையும் மனக்கட்டுப்பாடுகளையுமே குறிக்கிறது. ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள பலர் லொகீக வாழ்க்கையை துறப்பதற்கான காரணம் இதுவாகவே இருக்கக்
கூடும் – கட்டுப்பாடுகளற்ற, போராட்டங்களற்ற வாழ்க்கையை வாழ்வதற்காக.

லொகீக வாழ்க்கையில் இருந்து கொண்டே நம்மால் கட்டுப்பாடுகளற்ற, போராட்டங்களற்ற வாழ்க்கையை வாழ முடியுமா? முடியும் என்பதே பொருத்தமான பதிலாக இருக்க முடியும். ஆனால் அதற்கான முயற்சி நம்மிடம் இருக்க வேண்டும். நம் மனம், பலவிதமான இயக்கங்களால் ஆனது. இந்த மன இயக்கங்களின் வீரியம் நம் தனிப்பட்ட இயல்பைப் பொறுத்த்து. சில மன இயக்கங்கள் மிகுந்த வீரியத்துடனும் மற்றவை சாதாரணமாகவும் இருக்கலாம். சில மன இயக்கங்கள் நம் வாழ்க்கையை சமூகத் தளத்தில் ஒத்திசைவுடன் செலுத்துவதாக இருக்கலாம், மற்றும் சில இயக்கங்கள் சமூகத் தளத்தில் முரண்பட்டு செல்பவையாக இருக்கலாம். இவ்வாறு சமூகத்தளத்தில் முரண்படும் இயக்கங்களே நம் மனப்போராட்டங்களுக்கும், சமூக இயக்கங்களிலிருந்து நாம் முரண்படுவதற்கும் அடிப்படை காரணி. நாம் சமூகத் தளத்தில் இயங்க வேண்டும் என்றால், இந்த முரண்படும் இயக்கங்களைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம். அந்த கட்டுப்பாடு தேவைப்படும் மன இயக்கங்கள், கட்டுப்படுத்தப்பட்டாக வேண்டும் – நம்மால் கட்டுப்படுத்த இயலாவிட்டால், சமூக அமைப்பு கட்டுப்படுத்தியாக வேண்டும், சமூகத்தினுள் அதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டாக வேண்டும்.

நம் மனம் நம்மால் கட்டுப்படுத்தப்பட்டாலும், சமூக அமைப்பால் கட்டுப்படுத்தப் பட்டாலும், அங்கு தனிமனித விடுதலை இழக்கப்பட்டு விடுகிறது. இது சமூக அமைப்பின் கட்டாயம். அதாவது, நம் மன இயக்கங்கள், சமூக இயக்கத்திற்கு முரண்படும்போது அந்த முரண்பாட்டை இல்லாமல் செய்வது, அந்த சமூகத்தின் இருப்புக்கு இன்றியமையாதது. ஒரு தனிமனிதனாக, அந்த முரண்பாட்டை நம்மால் உணரமுடியுமானால், அத்தகைய முரண்படும் மன இயக்கங்களின் மூலம் வீணாகும் உளவியல் சக்தியை ஆக்கப் பூர்வமான வழிகளில் திருப்ப முடியும். ஒருவேளை இத்தகைய திருப்புதல் நமக்குள் சாத்தியமானால், நம் ஆன்மீக சக்தி நமக்குள் பிரவாகமாகப் பெருக சாத்தியமுள்ளது – நம் உணர்திறன் பலமடங்குகள் அதிகரிப்பதன் மூலம்.

நம் சமூகத்துடனான ஒத்திசைவு அல்லது முரண்பாடுகள் குறித்து நாம் முழுமையாக அறிய வேண்டுமானால், அந்த சமூகத்துடனான நமது உறவு மிக ஆழமாக இருக்க வேண்டும் – அதாவது அந்த சமூகத்துடனான நமது உறவுகள் மற்றும் தொடர்புகள் குறித்த ஆழமான புரிதல் இருந்தாக வேண்டும். சமூகத்துடனான நமது உறவுகளின் புரிதல் இல்லாமல், அல்லது அந்த சமூகத்திலிருந்து நம்மை விலக்கிக் கொண்டு, அந்த சமூகத்தின் முரண்பாடுகளைப் பற்றி நிச்சயமாக நம்மால் உணரமுடியாது – அத்தகைய சமூக விலக்கத்துடன் இருப்பவர்காளால் உருவாக்கி பரப்ப படும் கருத்துக்களையும் மிக கவனத்துடன் கையாள வேண்டும். இத்தகைய கருத்துக்கள் நம் உணர்திறனை இழக்கச் செய்யலாம் – நமது சமூகத்துடனான உறவுகளை, நம் பார்வையிலிருந்து மறைப்பதன் மூலம்!

Friday, August 12, 2011

தர்க்க புத்தியும்(Logical Mind), ஆன்மீகமும்.

தர்க்க புத்தி ஆன்மீக வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒரு கருவி, ஆனால் அதன் எல்லைகளை மீறினால், ஆன்மீக வளர்ச்சிக்கு தடைகல்லாகவும் மாறக்கூடும். தர்க்க புத்தி என்பது, நாம் பெற்ற வாழ்வியல் அறிவை நம் பொருளியல் மற்றும் தத்துவ சிக்கல்களிலிருந்து விடுபட உபயோகிப்பதாகும். ஆன்மீகம், நம் உணர்வின் உச்சத்தை, வாழ்வின் எல்லையை நோக்கி பயணிப்பதாகும். ஒரு எல்லைக்கு மேல் தர்க்க புத்தியும், உணர்வுகளும் ஒன்றை ஒன்று முரண்பட்டு நம் சமநிலையை குலையச் செய்யலாம் – அந்த எல்லை தனிமனித இயல்பை பொறுத்த்து. ஆக நம் வாழ்வின் சமநிலையை உறுதி செய்ய, நம் இயல்பில், தர்க்க புத்தி மற்றும் உணர்வுகளின் இடத்தை அறிந்து, அதற்கான இடத்தை உறுதி செய்வது மிக அவசியம்.

நம் வாழ்க்கை, சமூகத்தால் காலம் காலமாக நம் மேல் சுமத்தப் பட்ட நம்பிக்கைள், சடங்குகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை அடித்தளமாக கொண்டு இயங்குகிறது. இந்த நம்பிக்கைளும், சடங்குகளும், அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்ட திட்டங்களும், நம் வாழ்க்கையின் பெரும்பாலான தளங்களில் முன்முடிவுகளை நமக்கு அளித்து அந்த முன்முடிவுகளின் அடிப்படையில் நம் வாழ்க்கையை இயக்குகிறது. நம் வாழ்க்கையின் எந்தெந்த தளங்களில் முன்முடிவை அனுமதிக்கிறோமோ, அந்த தளங்களில் வாழ்வின் நிதர்சனத்தை தவற விட்டு விடுகிறோம். வாழ்வின் நிதர்சனம் நம் கவனத்தினுள் வரவில்லையெனில் வாழ்வின்\ வாழும் உணர்வை இழந்து விடுகிறோம். நம் வாழ்வை நம்மால் உணர முடியவில்லை எனில், உண்மையில் நாம் வாழவில்லை – முடுக்கி விட்ட இயந்திரத்தைப் போல் இயங்கிக்கொண்டிருக்கிறோம். ஆம், நமது நம்பிக்கைகளும், சடங்குகளும், கட்டுப்பாடுகளும் நம்மை உயிருள்ள இயந்திரங்களாக மாற்றி விடுகின்றன.

நம்பிக்கைகளை முற்றாக மறுத்து, அதற்கு எதிராக நம்பிக்கையின்மை என்னும் கருத்தை முன் வைப்பதும் ஒரு நம்பிக்கையே. சடங்குகளை முற்றாக மறுத்து, கைவிட்டு செல்வதும் இன்னொரு நம்பிக்கையே. இந்த நம்பிக்கை மற்றும் எதிர் நம்பிக்கைகளால் நம் வாழ்விற்கு எந்த நன்மையும் கிடையாது. அவை இரண்டினாலும் இயந்திரத் தனமான இயக்கத்திலிருந்து நம் வாழ்க்கையை மீட்டெடுக்க இயலாது.

நம் வாழ்க்கையை இயந்திதிரத்தனமான இயக்கத்திலிருந்து மீட்டெடுக்க நம் உணர்வுத் திறனை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். நமது நம்பிக்கைகளின் விளைவாக நாம் கொள்ளும் முன்முடிவுகளும், அந்த முன்முடிவுகளைச் சார்ந்த கற்பனைகளும் மன இயக்கங்களும் நம் செயல்களின் விளைவை உணர இயலாதவாறு நம் உணர்திறனை மழுங்கச் செய்கிறது. நாம் குழந்தைகளாக இருந்த்துவரை நம் வாழ்க்கை உணர்வுகளால் மட்டுமே இயக்கப் பட்டிருந்திருக்கும். ஆனால் வழ்வின் போராட்டங்களால், அந்த போராட்டங்களை சரியான முறையில் எதிர்கொள்ள முடியாத இயலாமையால், நம் உணர்வுத் திறனை சிறுக சிறுக இழந்து, இயந்திரத்தனமான வாழ்க்கை முறைக்குள் நம்மை முழுவதும் இழந்துவிட்டிருக்கிறோம்.

இந்த இயந்திரத் தனமான வாழ்க்கையிலிருந்து நம்மை மீட்டெடுக்க நம்மிடம் இயற்கையாகவே உள்ள முதல் கருவி தர்க்க புத்தியாகும். தர்க்க புத்தியால் மட்டுமே நம் வாழ்வின் போராட்டங்களை சரியான முறையில்
எதிர்கொள்வதற்கான திறனை நமக்கு அளிக்க முடியும். தர்க்கபுத்திக்கு அடிப்படைத் தேவை அறிவு. ஆக நாம் எந்தெந்த தளங்களில் அறிவு பெற்றிருக்கிறோமோ அந்த தளங்களில் மட்டுமே தர்க்க புத்தியை உபயோகிக்க முடியும். நாம் அறிவு பெறாத தளங்களில் தர்க்க புத்தியை உபயோகித்தால், அந்த தர்க்கமும் முன்முடிவை சார்ந்தே இருக்கும் – அத்தகைய தர்க்கம் வெறும் கற்பனையே. ஆக நம்மால் இயலும் தர்க்கத்தின் எல்லையை அறிய, நம் அறிவு குறித்த உணர்வு இன்றியமையாதது. தர்க்கத்தின் தேவை உள்ள நம் வாழ்வின் தளங்களில், நம் அறிவை மேம்படுத்துவதும் இன்றியமையாதது. ஆக நமக்குத் தேவை அறிவைப் பெறுவதற்கான உபரி உழைப்பு. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, நாம் உண்மையிலேயே விரும்பினால், இயந்திரமயமாக்கப்பட்ட, கணினி மயமாக்கப்பட்ட நம் வாழ்க்கை அமைப்பில், உபரி உழைப்புக்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளது.

தர்க்க புத்தியின் தேவை தனிமனித உளவியல் இயல்பிற்கேற்ப மாறுபடும். இதன் தேவை நம் தேடுதல்களின் வீச்சைப் பொறுத்தது. நம் தேடுதலின் வீச்சைப் பொறுத்து, நம் மனதினுள் முடிச்சுகள் உருவாகிக் கொண்டிருக்கும். அந்த முடிச்சுகளை அவிழ்த்து விட்டு நம் தேடுதலைத் தொடர்ந்தால் நாம் ஆன்மீகத்தை நோக்கி மேலும் பயணிக்க முடியும். ஆனால் அந்த முடிச்சுகளை நம்பிக்கைகள் மற்றும் முன்முடிவுகள் மூலம் மறைத்து முன்னோக்கி சென்றால், பெரும்பாலும் நம்மால் உண்மையை உணர முடிவதில்லை – நம் நம்பிக்கைகளால் முடிவு செய்தவற்றையே நம்மால் அடையமுடியும்.

வாழ்க்கையை அநுபவிப்பது என்பது, நாம் வாழும் ஒவ்வொரு கணத்திலும் நம்முள் நிகழும் நிகழ்வுகளை உணர்வதாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் நம் உணர்திறன் மழுங்கடிக்கப் பட்டிருப்பதால், பெரும்பாலும் வாழ்வு நடைபெறும் கணத்தில் நம்மால் வாழ்வை உணர முடிவதில்லை. வாழ்க்கையை நாம் நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து மட்டுமே வாழ்ந்து கொண்டுருக்கிறோம். அவ்வாறு நினைவுகளிலிருந்து மீட்டெடுத்த வாழ்க்கையின் கற்பனையில் திளைக்கும்போது, அந்த கணத்தில் நடைபெறும் வாழ்க்கையையும் தவற விட்டு விடுகிறோம். ஆக நாம் வாழும் வாழ்க்கை என்பது நம் நினைவுகளில் நாம் சேமித்து வைத்துள்ள வாழ்க்கையின் ஒரு சிறிய துளி மட்டுமே. வாழ்வின் பெரும் பகுதியை, நம் உணர்திறன் மழுங்கடிக்கப் பட்டிருப்பதால், அநுபவிக்க முடியாமல் இழந்து விடுகிறோம்.

ஆக நம் வாழ்க்கையை நாம் அநுபவிக்க வேண்டுமானால், நம் உணர்திறனை நாம் திரும்ப பெற்றாக வேண்டும். அதற்கு, நம் உணர்வுத் திறனை இல்லாமல் செய்யும் காரணிகளை கண்டறிந்து அவற்றை களைய வேண்டும். உணர்திறனை அதிகரிக்கச் செய்ய பல வழிகள் இருக்கலாம். ஆனால் உணர்திறனை மழுங்கடிக்கும் காரணிகளை வெல்ல தர்க்க புத்தியால் மட்டுமே முடியும்.


நம் தர்க்க புத்தியின் மூலம் நம் உணர்திறனை திரும்பப்பெற முடியுமானால், நம் ஆன்மீக வாழ்க்கையில் – உணர்வுகளின் உச்சத்தை நோக்கிய நம் வாழ்க்கை பயணத்தில், மிகப்பெரிய முன்நகர்வை உணர முடியும். ஆனால் தர்க்க புத்தியின் எல்லைகளை அறிந்திருப்பதும் மிக அவசியம். அந்த எல்லையை தவற விட்டால், தர்க்கபுத்தி நம் உணர்வுகளை உடைத்து, அழித்து இயந்திரத் தனமான வாழ்க்கையில் மறுபடியும் நம்மை தூக்கி எறிந்து விடலாம்!

Saturday, August 6, 2011

மனித பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம்

பல கோடி ஆண்டுகளில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியின் காரணமாக, ஒரு செல் உயிரினத்திலிருந்து, இன்றைய மனிதனாக நாம் உருவெடுத்திருக்கிறோம். பல ஆயிரம் (அல்லது சில லட்சம்) ஆண்டுகளாக உருவமும் சிந்தனையும் வளர்ச்சியடைந்து, இன்றைய மனிதனாக வளர்ச்சி அடைந்திருக்கிறோம். இந்த பரிமாண வளர்ச்சியின் வேகத்தையும் திசையையும் ஒரளவேனும் நம்மால் அனுமானிக்க முடிந்தால், ஒருவேளை பரிணாம வளர்ச்சியின் இன்னொரு முக்கியமான காலகட்டத்தில் நாம் இருந்துகொண்டிருப்பதையும் நம்மால் உணர முடியலாம். அந்த விழிப்புணர்வு நமக்கு கிட்க்கப்பெற்றால், அத்தகைய பரிணாம வளர்ச்சிக்கான கிரியா ஊக்கியாக கூட நம்மால் மாற முடியலாம்.

ஒரு காலகட்டத்தில், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மனித சிந்தனையின் ஒரு தளம் அன்றாட வாழ்வியல் என்பதிலிருந்து, வாழ்வின் தோற்றம் மற்றும் முடிவு என்பதை குறித்து திரும்பியிருக்க வேண்டும். ஆம், ஆன்மீகம் என்னும் சிந்தனைத் தளம் அப்போதுதான் தோன்றியிருக்க கூடும் – இங்கு ஆன்மீகம் என்பது, சுயம் நோக்கிய சிந்தனைத் தளத்தை மட்டும், இன்றைய லௌகீகம் சார்ந்த சடங்குகளையும் கடவுள் என்னும் கருத்தையும் புறந்தள்ளியே குறிப்பிடப் பட்டுள்ளது.

தற்போதைய இந்தியாவில், வேத காலகட்டம் சமார் ஐந்து முதல் எட்டு ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது என்று கணிக்கப் படுகிறது. கிறிஸ்தவ, முஸ்லீம் மதங்ங்களுக்கு முன்பு எகிப்து, கிரேக்க நாடுகளில், தத்துவம் சார்ந்த மதங்கள் இருந்துள்ளன. ஆக ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மனிதனின் தேடல் உள்நோக்கி திரும்பி இருக்கிறது. இந்த தேடுதலின் தொடர்ச்சியே வேதம், உபநிஷதம் மற்றும் பல தத்துவ தரிசனங்களையும் நமக்கு அளித்திருக்க வேண்டும். இந்த தேடுதலின் விளைவாக ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் அந்த தேடுதலின் முழுமையை அல்லது முழுமையின் அருகாமையை அடைந்துள்ளனர். ஆக மனித மனம் முழுமையை அடைவது என்பது ஒரு கற்பனை அல்ல – அது ஒரு உண்மை. இந்த உண்மையை, கடந்த ஐந்தாயிரம் வருட மனித வரலாற்றிலும், நிகழ்காலத்திலும் பல உதாரணங்களை நம்மால் காண முடியும். எனவே முழுமையை நோக்கி நகர்வதே மனித இன பரிமாண வளர்ச்சியின் அடுத்த கட்டமாக இருக்க முடியும்.

இங்கு கவனிக்கப்பட வேண்டியது, மனித இனத்தை முழுவதுமாக பார்க்கும்போது, நாம் தேடலை தொடங்கி ஐந்தாயிரம் வருடங்களுக்கு பின்னும், அந்த தேடலின் முழுமையை அடையாமல் இருக்கிறோம் – மிக மிக குறைந்த பட்ச மனிதர்களால் மட்டுமே முழுமையை அடைய முடிந்துள்ளது. இதற்கு காரணம், அத்தகைய பரிணாம வளர்ச்சிக்கான காரணிகள் போதுமான அளவிற்கு இல்லாமல் இருக்கலாம் அல்லது, மனித இனத்தின் அடிப்படை இருப்புக்கான (existence) போராட்டம், அந்த பரிணாம வளர்ச்சியை அடைய முடியாமல் செய்திருக்கலாம்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், பரிணாம வளர்ச்சி மரபணுக்கள் மூலம் மட்டுமே அடுத்த சந்ததிகளுக்கு எடுத்துச் செல்லப்படும். தற்போதைய காலகட்டத்தில், முழுமையை நோக்கிய தேடுதல் உள்ளவர்கள் அல்லது முழுமையை அடைந்தவர்கள் பெரும்பாலும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதில்லை. அவ்வாறு ஈடுபட்டாலும், அந்த தேடுதலின் பாதிப்பு மரபணுக்களில் ஏற்படும் முன்பே இனப்பெருக்கம் முடிந்து விடுகிறது. ஆக முழுமையை நோக்கிய மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்ல இயலாமல் தேங்கி இருக்கிறது.

பரிணாம வளர்ச்சி பெரும்பாலும், அந்த வளர்ச்சி தொடங்கும் புள்ளியிலிருந்து இரண்டு கிளைகளாக பிரிந்து செல்லும். ஒரு கிளை தற்போதைய இருப்பின் தொடர்ச்சியாக இருக்கும். இன்னொரு கிளை பரிணாம வளர்ச்சியடைந்து புதிய இனமாக பரிணமிக்கும். மனித இனத்தில், முழுமையை நோக்கிய பரிணாம வளர்ச்சி சாத்தியமானால், அத்தகைய சாத்தியக்கூறு, தற்போதைய உலகில் வேறு எப்போதையும் விட மிக அதிகமாக உள்ளது.

உலகின் பெரும்பாலான இடங்களில் நமக்கு முந்தைய தலைமுறைவரை அல்லது தொழில் முறைகளில் மிக வளர்ச்சியடைந்துள்ள உலக பாகங்களில் அதற்கும் முந்தைய தலைமுறைவரை, மனித உழைப்பின் பெரும் பகுதி, மனிதனின் அன்றாட பிழைத்தலுக்கும், பாதுகாப்புக்கும் மட்டுமே செலவிடப்பட வேண்டியிருந்தது. ஆனால் இன்றைய நிலை முற்றிலும் வேறானது. நமது உடல் உழைப்பு பெரும்பாலும் இயந்திர மயமாக்கப் பட்டுள்ளது. நம் மூளையின் உழைப்பு பெரும்பாலும் கணினி மயமாக்கப் பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் நமது உழைப்பு என்பது பெரும்பாலும் இயந்திரம் அல்லது கணினியை கட்டமைப்பது மற்றும் இயக்குவது மட்டுமே. ஆக நாம் மனித இனத்தின் இன்றைய காலகட்டம்வரை, மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் மூலம் பெற்ற சக்தி, அதன் இயக்கத்தின் திசையை நோக்கி, பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை எதிர்பார்த்து, நம்மிடம் காத்துக் கொண்டிருக்கிறது.

முன் எப்போதும் இல்லாத அளவில், நம் வாழ்க்கையின் அன்றாட பிழைத்தலுக்கு தேவையான சக்தியை விட உபரி சக்தி நம்மிடம் இருப்பதன் மூலம், நாம் விரும்பினால், முழுமையை நோக்கிய தேடுதலுக்கான சாத்தியங்களுடன் இருக்கிறோம். ஒன்று மட்டும் நிதர்சனம். நம் உபரி சக்தியை நாம் நிச்சயமாக செலவழித்தாக வேண்டும். இதைத் தவிர நமக்கு வேறு வழியே இல்லை. அவ்வாறு செலவழிப்பதற்கும் இரண்டு சாத்தியங்கள் மட்டுமே இருக்க முடியும் – நம் முழுமையை நோக்கிய தேடுதலுக்காக, முழுமையை நோக்கிய பரிணாம வளர்ச்சிக்காக செலவழிக்கலாம் அல்லது பொழுது போக்கிற்காக செலவழிக்கலாம். இது இரண்டையும் தவிர வேறு சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. படைப்பூக்கத்துடன் (creativity) செலவிடப்படும் உபரி சக்தி, நம் முழுமையை நோக்கிய தேடுதலைச் சார்ந்து இருக்கும். படைப்பூக்கம் இல்லாமல் செலவிடப்படும் உபரி சக்தி, நமது பொழுது போக்கிற்கு மட்டும் செலவிடப்படுவதாகும்.

மேலே கூறப்பட்டவை சாத்தியம் என்றால், பரிணாம வளர்ச்சியில் நம் பங்களிப்புக்கும் இரண்டு சாத்தியக்கூறுகள் உள்ளன – நாம் முழுமையை நோக்கி நகர்ந்து, பரிணாம வளர்ச்சியடைந்து புதிய மனித இனத்திற்கு முன்னோடியாக இருக்கலாம், அல்லது தற்போதைய மனித இனத்தின் நீட்சியாக, மனித வரலாற்றில் காணப்படும் மனித இனத்தின் ஏற்றத் தாழ்வுகளுடனும் இன்ப துன்பங்களுடனும், மனித இனத் தொடர்ச் சங்கிலியின் ஒரு கண்ணியாக இருக்கலாம்.


பி.கு; அரவிந்தர் மற்றும் ஜே. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் தரிசனங்களில் இந்த கருத்து, அவர்களின் தனித்தன்மைக்கேற்ப கூறப்பட்டிருப்பதை காணலாம்.