Friday, December 30, 2011

பக்தி, ஆன்மீகம்

தற்போதைய காலகட்டத்தில் பக்தி என்பது ஒரு பாவனையாக மாற்றப்பட்டு, அந்த பாவனையுடன் இருப்பதே ஆன்மீகம் என்னும் ஒரு மாயை மிகப் பரவலாக உள்ளது. மேலும் இன்றையப் பொதுத் தளத்தில் பக்தி என்னும் கருத்து மிகவும் திரிவடைந்து உள்ளது – கடவுள் என்னும் கருத்தை நோக்கி வேண்டுதல்களை முன் வைப்பது அல்லது கடவுள் என்னும் கருத்தை நோக்கி சேவைகள் செய்வது. ஆனால் ஆன்மீக தளத்தில் பக்தி என்பதன் அர்த்தம் முற்றிலும் வேறானதாகவே இருக்க வேண்டும். அது நமக்குள் இருக்கும், ஆனால் நாம் இழந்துவிட்ட உணர்திறனை வீரியத்துடன் வெளிக்கொண்டு வரும் கருவி. பக்தியின் உண்மையான பயன்பாடு நமக்கு தெரியாவிட்டால், அந்த பக்தியால் எந்த பயனும் இல்லை – அது ஒரு உளவியல் அணிகலனாக மட்டுமே இருக்க முடியும், ‘நான்’ என்னும் கருத்தை மெருகூட்டுவதற்காக!


பக்தி என்பது, முழு அற்பணிப்பு அல்லது முழு ஈடுபாடு அல்லது முழுமையான சரணடைவு (devotion/surrender) என்பதன் குறியீடு. ஆன்மீகத்தின் எந்த வழியை பின்பற்றினாலும், முழுமையை அடைவதற்கு பக்தி என்பது மிக அவசியமானதாக இருக்க கூடும். முழுமையான சரணடைதல் என்னும் படி இல்லாமல் ஆன்மீகத்தில் உச்ச நிலையை அடைய முடியும் என்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை. ஆன்மீகத்தில் காணப்படும் எல்லா அறிதல் முறைகளும், எல்லா தத்துவங்களும், எல்லா பயிற்சிகளும் முழுமையான சரணடைதலுக்காக நம் மனதை பண்படுத்துவதாகவே இருக்கும். அத்தகைய அறிதல்களும், தத்துவ விசாரணைகளும், பயிற்சிகளும் இல்லாமல் பக்தி என்னும் நிலையை நம்மால் அடைய முடியுமா? நம் தற்போதைய மன நிலையில், நம்மை விட பெரிதாக நாம் கருதும் ஒன்றிடம் (அந்த ஒன்று, கடவுளாக அல்லது கடவுள் என்னும் கருத்தாக கூட இருக்கலாம்) நம்மால் முழுமையாக சரணடைய முடியுமா? அவ்வாறு முடியாவிட்டால், நாம் பக்தி என கூறுவதன் அர்த்தம் என்ன? நம் மூளையைக் குறித்து நம்மிடம் உள்ள எளிய அறிவும், நம் சுற்று சூழலை கவனிப்பதுமே இந்த கேள்விகளுக்கு விடையளிக்க போதுமானவையாக இருக்க கூடும்.

நம் மூளை, அதன் அன்றாட செயல்பாட்டின் அடிப்படையில், இரண்டு பகுதிகளாக பிரிக்கப் பட்டுள்ளது – இடது மூளை மற்றும் வலது மூளை. இடது மூளை தர்க்க ரீதியான நம் செயல்பாடுகளில் உபயோகப்படுத்தப் படுகிறது. வலது மூளை உணர்வு சார்ந்த செயல்பாடுகளில் உபயோகப்படுத்தப் படுகிறது. நம் ஒவ்வொருவரும் மூளையின் இந்த இரண்டு பகுதிகளையும் உபயோகப்படுத்தியாக வேண்டும். ஆனால் எந்த பகுதியை அதிகமாக உபயோகப்படுத்துகிறோம் என்பது நம் தனிமனித இயல்பைச் சார்ந்தது.

ஆன்மீகத்தின் நோக்கம் நம்மை நாமே முழுமையாக அறிவது அல்லது உணர்வது. நம்முள் இருக்கும் கடவள் தன்மையை முழுமையாக உணர்வது – அதை நாம் ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவது அல்லது உணர்வது எனக்கூறினாலும், ஜீவாத்மா பரமாத்வாவின் காலடியை சேர்வது எனக்கூறினாலும், கடவுளை அடைவது எனக்கூறினாலும், கடவள் தன்மையை அடைவது எனக்கூறினாலும், மோக்ஷ்சம் எனக்கூறினாலும், சமாதி நிலை எனக்கூறினாலும், நிர்வாணம் எனக்கூறினாலும், இன்னும் வேறு எதுவுமெனக்கூறினாலும்!

நம்மை முழுமையாக உணர்வது என்பது, நம் அறிதல் என்னும் செயல்பாட்டில் வலது மூளை முழுமையாக ஈடுபடுவது மட்டுமாகவே இருக்க முடியும். அதாவது, அறிதலில் இடது மூளையின் தர்க்கத்தின் இடர்பாடு இல்லாமல் வலது மூளை முழுவதுமாக, முழு உணர்வு நிலையில் ஈடுபட்டிருப்பதாகும். அத்தகைய நிலையை நாம் அடையும்வரை, முழுமையான சரணடைத்தல் என்பதற்கு சாத்தியமே இல்லை. வலது மூளையின் ஒவ்வொரு சரண்டையும் முயற்சியிலும், இடது மூளை அதன் தர்க்கத்தை நிலைநாட்டிக்கொண்டே இருக்கம். எனவே முழுமையான சரணடைதல் என்பதை இடது மூளையின் செயல்பாடு தடுத்துக் கொண்டே இருக்கும்.

வலது மூளையின் செயல்பாட்டின் முதன்மையை அல்லது ஆதிக்கத்தை இயல்பாக கொண்டவர்கள், பக்தி அல்லது சரணடைதல் என்னும் உணர்வு நிலையை முழுமையான அறிதலை நோக்கிச் செல்ல பயன்படுத்தலாம். ஆனால் அவர்களும் இடது மூளையின் செயல்பாட்டைத் தாண்டியே முழுமையை அடைய முடியலாம். இடது மூளையின் முதன்மையை அல்லது ஆதிக்கத்தை இயல்பாக உடையவர்கள், அதன் ஆதிக்கத்தை முற்றிலுமாக இழந்த அல்லது தாண்டிய பின்னர்தான் முழுமையான ஆன்மீக உணர்வை அடைய முடியலாம். இடது மூளையின் ஆதிக்கத்தை இயல்பாக உடையவர்கள், அவர்கள் இயல்பான தர்க்கத்தையே அதை தாண்டிச் செல்ல உபயோகப்படுத்துவதைப் போல, வலது மூளையின் ஆதிக்கத்தை இயல்பாக உடையவர்கள், அவர்கள் இயல்பான உணரும் தன்மையையே இடது மூளையின் இயல்பை தாண்டிவர உபயோகப்படுத்தலாம். ஆனால், அவர்களும் இடது மூளையின் இருப்பை உணர்ந்தாக வேண்டும். இடது மூளையின் இருப்பை அவர்களால் உணரமுடியாவிட்டால், இடது மூளையின் செயல்பாடுகளை தாண்டாவிட்டால், அவர்கள் பக்தி அல்லது சரண்டைதல் எனக் கூறுவது, மனம் அதனையே ஏமாற்றும் ஒரு தந்திரம்(deception) மட்டுமே!

நாம் வாழும் முறையை, உள்நோக்கித் திரும்பி, எப்போதாவது நம்மால் கவனிக்கப் பட்டிருந்தால், நாம் நம்முடைய இயல்பை விட்டு எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம் என்பதை நம்மால் உணர முடியலாம். அதிவேகமாக நாம் வாழும் சூழல் மாறிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், அந்த சூழலுக்கேற்ப நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில்முழுமையாக ஈடுபடுவதால், நம் வாழ்க்கையை அறிவதற்கான சாத்தியங்களையும் நாம் முழுவதுமாக இழந்து விடுகிறோம். அதாவது நம் வாழ்வு முழுவதையும், நமக்கேற்ற சூழலை உருவாக்குவதை விட்டு விட்டு, சூழலுக்கேற்ப நம்மை மாற்றுவதிலேயே செலவழிக்கிறோம். அதாவது, நம் இயல்பை விட்டு விட்டு, மாறும் சூழலுக்கேற்ப நம்மை மாற்றுகிறோம். இதன் மூலம் நம் இயல்பையும் இழந்து விடுகிறோம்.

வலது மூளையின் ஆதிக்கம் உடையவர்கள், அதன் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தாமல், தங்கள் இயல்பிலிருந்து மாற முடியாது. ஆனால் சூழலுக்கேற்ப நாம் மாறுவதில் முனைப்புடன் இருப்பதால், நம் இடது மூளையின் துணைக்கொண்டு நம் இயல்புகளை மறந்து விட்டோம் அல்லது அறியாமல் தவிர்த்து விட்டோம். அதாவது, நாம் ஆன்மீகத்திற்கு எதிரான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம – இடது மூளையின் தர்க்க இயல்பைத் தாண்டி வலது மூளையின் உணர்வு நிலைக்கு வருவதற்கு பதிலாக வலது மூளையின் உணர்வு நிலையை தாண்டி, இடது மூளையின் தர்க்க நிலைக்கு வந்திருக்கிறோம். அவ்வாறு வந்தால் மட்டுமே, வேகமாக மாறிவரும் சூழலுக்கேற்ப நம்மை நம்மால் மாற்றிக்கொள்ளமுடியும்.

நம் உணர்வு நிலைகளை மழுங்கடித்து விட்டு, பக்தி, சரணடைதல் ஆகியவற்றை நம் இயல்பாக நம் மனம் கருதினால், அது நம் மனம் தன்னைத்தானே ஏமாற்றும் தந்திரம் (deception) மட்டுமே. நாம் வலது மூளையின் ஆதிக்கத்தை இயல்பாக உடையவர்களாக இருந்தாலும், அந்த இயல்பை, தற்போதைய நம் வாழ்க்கைச் சூழலில் அறிந்து கொள்ள இடது மூளையின் தர்க்க இயல்பை உபயோகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தத்துவங்களும், தத்துவ மூல நூல்களும் (scriptures) நம் இடது மூளையைன் இயல்பைத் தாண்டி வர நமக்கு உதவலாம் – தத்துவம் அல்லது மூல நூல்களின் பயன்பாடு, மனதின் தர்க்க நிலையை தாண்டி வருவதற்கு பட்டுமே. மனதின் தர்க்க செயல்பாட்டைத் தாண்டி உணர்வின் இயக்கத்திற்கு வரும்போது, நாம் தத்துவங்களையும் மூல நூல்களையும் தாண்டி வந்திருப்போம்! அதன் பின்னர், தர்க்கங்களுக்கும், தத்துவங்களுக்கும், மூல நூல்களுக்கும் எந்த தேவையும் இல்லை!

Sunday, December 11, 2011

தனிமை

புற உலகில் நாம் எத்தனை உறவினர்கள் புடை சூழ இருந்தாலும், எத்தனை நண்பர்கள் சூழ்ந்திருக்க வாழ்ந்தாலும் அகத்தளவில் நம்மில் பெரும்பாலானவர்கள் மிக மிக தனிமையானவர்களே.அந்த தனிமையை அறிவது, ஆன்மீகத்தில் ஒரு முக்கியமான நிலைப்படியாக இருக்க கூடும். அந்த தனிமையை அறிந்தவர்களின் புற உலகப் பார்வை முற்றிலும் வேறானதாக இருக்க கூடும் – சமூக இயக்கத்தின் அடிப்படையை அறிவதன் மூலம். அகத்தனிமை என்றால் என்ன?

நாம் அறிவு எனக் கருதும் நம் அறிவின் ஒரு பகுதி, நம் எண்ணங்களின் பதிவுகளே. இந்த அறிவு நம் புலன்களால் உணரப்பட்டவையும், அனுமானத்தால் பெறப்பட்ட புலன் அறிவின் நீட்சியுமாகும். இந்த அறிவின் பரப்பே நாம் அறியும் உலகத்தின் பரப்புமாகும். ஆக, நாம் அறியும் உலகின் இயல்பு என்பது நம் அறிவின் இயல்பு மற்றும் அறிதலின் இயல்பை சார்ந்தே இருக்கும். மனித இனத்தில், எந்த இருவரின் அறிதல் இயல்பும் அறிவின் இயல்பும் ஒன்று போல் இருக்க சாத்தியம் இல்லை. எனவே நம்மில் எந்த இருவரின் உலகங்களும் ஒன்று போல் இருக்கவும் சாத்தியம் இல்லை. நாம் ஒவ்வொருவரும் நமக்கேயான உலகத்தில் நாம் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நமக்கேயான உலகத்தில், நம் உறவுகளையும், நண்பர்களையும், அறிந்தவர்களையும் நாமே நம்முடன் இணைத்துக் கொண்டுள்ளோம் – அவர்களாக இணையவில்லை, இணையவும் முடியாது. இதே போல, நம் உறவுகளும், நண்பர்களும், நம்மை அறிந்தவர்களும் அவர்களுடைய உலகத்தில் நம்மை இணைத்திருப்பார்கள் – நாமாக இணையவில்லை, நம்மால் இணையவும் முடியாது.

இங்கு எவருமே அடுத்தவர் உலகத்தில் நுழைந்து அவர்கள் தனிமையைப் போக்கவில்லை. ஆனால் அடுத்வர்களை நம் உலகத்தில் நுழைத்து, நம் தனிமையைப் போக்கிவிட்டோமென்ற கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த கற்பனையின் மூலமே நம் தனிமையை மறைத்து அதன் மூலம் துயரங்களிலிருந்து விடுபடும் சாத்தியத்தை மரணம்வரை தள்ளி வைக்கிறோம்.

அத்தகைய தனிமையை எவ்வாறு அறிந்து கொள்வது? ஒருவேளை ஆன்மீகத்தின் சாரமே இந்த தனிமையை அறிந்து கொள்வதாக இருக்க கூடும் – ஆன்மீகத்தை ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது. நமக்கேயான நம் உலகத்தை, அதன் இயல்புகளுடன் அறிந்து கொள்ளும்போதுதான் நம் தனிமையை உணர முடியலாம். நாம்முடைய உலகை அறிய முற்படும்போது, அது முழுவதும் நம் இயல்பை சார்ந்து இருக்கும் என்பதை அறிவோம். இந்த அறிதல், பிறருடைய உலகம், அவர்களின் இயல்பை சார்ந்தே இருக்கும் என்னும் அறிவுக்கு நம்மை எடுத்துச் செல்லலாம். இந்த ஜட உலகில், நம் இயல்பைப் போன்ற இயல்புடைய இன்னொருவார் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்னும் உண்மையை நாம் அறிய நேரிட்டால், இந்த உலகில் நாம் அகவயமாக எவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை உணரலாம். அதாவது, இந்த உலகை நாம் பார்க்கும் அதே பார்வையில் பார்க்கும் இன்னொருவர் இல்லாமல் இருப்பதால் நம் உணர்வுகளை அறியக்கூடிய இன்னொருவார் இந்த உலகில் இல்லை. நம் உணர்வை பிறரால் அனுமானிக்க மட்டுமே முடியும் – அதுவம் அவர்களின் அனுமானிக்கும் தன்மையைப் பொறுத்தது.

புறவயத்தில் நாம் உறவுகளும் நட்புகளும் சூழ இருக்கையில், அகவயத் தனிமையின் முக்கியத்துவம் என்ன? நம் வாழ்க்கையில் உணவு மற்றும் உடல்ரீதியான பாதுகாப்பும் சில அடிப்படைத் தேவைகளும் தவிர மற்ற அனைத்து வாழ்வின் அம்சங்களும் உளவியல் சார்ந்தவையே – நம் மகிழ்ச்சியும் துயரங்களும் கூட. உறவுகள் மற்றும் நட்புகள் குறித்த நம் உளவியல் இயக்கங்களே பெரும்பான்மையான நம் மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் தீர்மானிக்கிறது. புறவயத் தேவைகளுக்காக நம்முடன் இருக்கும் உறவுகளும் நட்புகளும், மன இயக்கங்கள் சார்ந்தும் நம்முடன் உறவுடன் இருக்கிறார்கள் என்னும் மாயையில் நாம் இருக்கும்போது, உண்மையில் அத்தகைய உறவுகள் மன இயக்கங்கள் அளவில் இல்லாததால், நம் உறவுகள் மற்றும் நட்புகளுடன் முரண்பட நேரிடுகிறது. இந்த முரண்பாடுகளே பெரும்பான்மையான நம் துயரங்களுக்கு காரணமாக இருக்க கூடும்.


மன இயக்கங்கள் சார்ந்து, உறவுடன் இருப்பது என்பது, சாதாரண நிலையில் இரண்டு மனிதர்களுக்கு இடையே சாத்தியமற்றது. இரண்டு மனிதர்கள் ஒரே வகையிலான மன எழுச்சியில், மனதில் பிற எண்ணங்கள் இல்லாமல் இருக்கும்போது மட்டுமே அத்தகைய உறவு சாத்தியமாக கூடும். சாதாரண நிலையில், அத்தகைய மன எழுச்சி ஏற்பட்டாலும், மனதில் எண்ணங்கள் இல்லாத மன எழுச்சி நிலை சில வினாடிகளுக்கு மேல் தொடர வாய்ப்பில்லை. ஆகவே, உண்மையிலேயே நாம் யாருடனாவது உறவுடன் இருந்திருப்போம் என்றால் அது நம் நீண்ட வாழ்க்கையில் ஒரு சில வினாடிகள் மட்டுமே – அல்லது அத்தகைய நேரங்களின் கூட்டுத் தொகை ஒரு சில நிமிடங்கள் மட்டுமே.

நம் அகவயத்தனிமையை உண்மையிலேயே உணரும்போது, நம் உளவியல் தேவைகளுக்காக நாம் எவரையும் சார்ந்திருக்க மாட்டோம் – அவர்கள் நம் மனைவி\கணவனாக இருந்தாலும், வாரிசுகளாக இருந்தாலும், பெற்றோராக இருந்தாலும், பிரிக்க முடியாத (!) நட்புகளாக இருந்தாலும். இத்தகைய உளவியல் விடுதலையில் மனம் இருக்கும்போது, பிறரிடமிருந்து – அவர்கள் யாராக இருந்தாலும், எந்தவித எதிர்பார்ப்பும் இருக்காது. எதிர்பார்ப்புகள் இல்லாத மனத்திற்கு தோல்விகள் இல்லை. எனவே துயரங்களும் இல்லை.

Friday, December 2, 2011

மதங்கள், நம்பிக்கைகள், சடங்குகள்

ஆன்மீகம் என்பது மதங்கள், நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் இவை போன்றவற்றிலிருந்து முற்றிலும் வேறானது. ஆனால் மதங்களும் நம்பிக்கைகளும் சடங்குகளும் ஆன்மீகம் முளை விடுவதற்கு ஒரு அடிப்படை காரணமாக இருக்க கூடும். ஒரு ஆன்மீகவாதி எப்போதுமே மதவாதியாக இருக்க முடியாது. ஆனால் பெரும்பாலும் மதங்களாலும் அதைச் சாரந்த நம்பிக்கைகாளாலும் குறியீடுகளாலும் பண்படுத்தப்பட்ட ஒரு சமூகத்திலுருந்துதான் ஆன்மீகவாதி வெளிப்பட சாத்தியங்கள் அதிகமாக இருக்கலாம்.

மதம் என்பது ஆன்மீக வெளிப்பாடுகளை சமூகத்தில் பரவ செய்யும் ஒரு அமைப்பு. சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் வெவ்வேறு அறிதல் திறனுடனும் வெவ்வேறு அறிவு சூழலிலும் இருப்பதால் ஆன்மீக வெளிப்பாடுகளை நேரடியாக சமூகத்தில் பரவ செய்வது இயலாமல் இருக்கலாம். ஆனால் சமூகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு அத்தகைய பரப்புதல் மிகத்தேவையானது. எனவே மதம் என்னும் அமைப்பு குறியீடுகள் (Representation) மூலம் ஆன்மீக வெளிப்பாடுகளை சமூகத்தில் பரப்புகிறது. ஆன்மீகம் என்பது மனித இனத்தின் வாழ்க்கை குறித்த தேடுதல் – எல்லா சமூகங்களுக்கும் பொதுவானது.

ஆன்மீக வெளிப்பாடுகளை பெற அந்த மதத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்தால் நிச்சயமாக முடியாது. காரணம் ஒரு மதவாதியால் நிச்சயமாக ஆன்மீகவாதியாக இருக்க முடியாது. எனவே ஒரு மதம் சமூகத்தில் பரிணாம வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமானால், அந்த மதம் ஆன்மீகவாதிகளிடமிருந்து தொடர்ச்சியாக ஆன்மீக வெளிப்பாடுகளை பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். எனவே அந்த சமூகத்தில் தோன்றும் ஆன்மீகவாதிகளை மதம் தன்னுடன் இணைத்து கொண்டும் அதன் தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்திக் கொண்டும் இருக்கிறது - ஆன்மீகவாதி என்பவர் வாழ்க்கை குறித்த தேடுதலை உடையவர்.

ஆன்மீக வெளிப்பாடுகளை குறியீடுகள் மூலம் சமூகத்தில் பரப்பும்போது, பெரும்பாலானவர்களால் அந்த குறியீடுகள் சுட்டும் ஆன்மீக சாரத்தை புரிந்து கொள்ள இயலாமல் இருக்க கூடும். அத்தகைய நிலையில் அந்த குறியீடுகள் வெறும் நம்பிக்கைகளாகவும் சடங்குகளாகவம் அந்த மதத்தில் பெரும்பாலானவர்களால் பின்பற்ற முடியுலாம். இதன் மூலம், ஆன்மீக வெளிப்பாடுகளை சமூகத்தால் உள்வாங்கிக் கொள்ள முடியாவிட்டாலும், அந்த வெளிப்பாடுகள் குறியீடுகளாக, அந்த குறியீடுகளை உள்வாங்கிக் கொள்ளக்கூடியவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும்.

ஆக, இன்று நம் மதங்களில் காணப்படும் அடிப்படை நம்பிக்கைகளும், சடங்குகளும், அதைப் போன்றவையும் ஆழமான ஆன்மீக வெளிப்பாடுகளின் குறியீடுகளாகவே இருக்க முடியும். ஆனால் மதம் அதன் இயக்கத்தில், அந்த அடிப்படை நம்பிக்கைகளை மட்டும் கொண்டிருக்காமல், சமூக இயக்கங்களின் காரணமாகவும், சமூக இயக்கங்களில் சார்புநிலை அறிவின் காரணமாகவும் பல புதிய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பிறவற்றையும் உருவாக்குகிறது. இந்த சார்புநிலை நம்பிக்கைகளும் சடங்குகளும் அந்த மதத்தின் பிரதான இயக்கங்களாக மாறும்போது, அது சுட்டும் ஆன்மீக வெளிப்பாடுகள் பின்நோக்கி தள்ளப்படுவதுடன், மதம் அதன் நோக்கத்திலிருந்தும் பிறழ்கிறது. அதாவது, மதம் ஆன்மீகவாதிகளின் தொடர்பை பெருமளவு இழந்து விட்டதுடன் மதவாதிகளின் துணையுடன், எந்த ஆன்மீக சாரமும் இல்லாத வெற்று நம்பிக்கைகளின், சடங்குகளின் தொகையாக மாறி விடுகிறது.

மிக சமீப காலம்வரை ஆன்மீக பயிற்சிகள் பல்வேறு காரணங்களால் பெரும்பாலானவர்களுக்கு எட்டாததாகவே இருந்து வந்துள்ளது. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, ஆன்மீக வளர்ச்சியை தனிமனித மனதினுள் தூண்டச் செய்யும் ஆரம்பகட்ட பயிற்சிகள், பல்வேறு ஆன்மீக குருக்கள் மற்றும் அவர்கள் அமைப்புகள் மூலம் பரவலாக்கப் பட்டுள்ளது. தற்போதைய தகவல் தொழில்நுட்பம், ஆன்மீக பயிற்சிகள் வெகுஜனமயமாக்குதலுக்கு மேலும் தூண்டுதலாக அமைந்துள்ளது.


தற்போதைய காலகட்டத்தில் அறிவுச்சூழல் முன் எப்போதும் இல்லாத வகையில், தகுதி உடைய பெரும்பாலனவர்களும் அறிவை அடைவதற்கு சாத்தியமுள்ளதாக உள்ளது. அதாவது தொழில்துறை வளர்ச்சிகள் மூலமும், பொதுமக்கள் சார்புநிலை உடைய அரசாங்கங்கள் மூலமும், பெரும்பாலானவர்களின் அடிப்படை வாழ்க்கை போராட்டம் மிகவும் எளிதாக்கப் பட்டுள்ளது. ஆக விருப்பமிருந்தால், ஆன்மீக தேடலுக்கான சாத்தியங்கள் முன் எப்போதும் இல்லாத அளவில் தற்போதைய காலகட்டத்தில் மிக அதிகமாக உள்ளது - ஆன்மீகத்தின் தொடக்கநிலை பயிற்சிகள் அனைவருக்கும் கிடைப்பதற்கான சாத்தியங்களுடனும்.

அதே நேரத்தில், ஆன்மீக தேடுதலுக்கான சாத்தியத்தை கொடுக்கும் அதே காரணிகள், ஆன்மீக வெளிப்பாடுகளை சுட்டும் குறியீடுகளையும், சடங்குகளையும், லொகீகத்தை நோக்கி திசை திருப்புவதுடன், லொகீகம் சார்ந்த அர்த்தங்களையும் மனதின் சார்புநிலை அறிவுகள் மூலம் உருவாக்குகிறது. இதன் மூலம் புதுப்புது நம்பிக்கைகளும், குறியீடுகளும், சடங்குகளும் மதத்தினுள் உருவாக்கப்படுகிறது. இத்தகைய நம்பிக்கைகளும் சடங்குகளும் சார்புநிலை அறிவின் மூலமே உருவாக்கப் படுவதால், அத்தகைய நம்பிக்கைகளும், சடங்குகளும் உண்மையுடன் எந்த விதத்திலும் தொடர்புடையதாக இருக்க சாத்தியங்களே இல்லை. மேலும் ஆன்மீக பயிற்சி அளிக்கும் அமைப்புகளின் மூலம் ஆன்மீகத்தின் தொடக்கத்தை அறிந்தவர்களிலும், அந்த பயிற்சிகள் மூலம் தொடக்க நிலை பயன்பாட்டை உணர்ந்தவர்களிலும் பெரும்பாலானவர்கள், அந்த அமைப்பின் மேல் அல்லது ஆன்மீக குருவின் மேல் வழிபாட்டில் ஈடுபட்டு விடுகிறார்கள். இதன் மூலம் அந்த அமைப்பு அல்லது குரு வெளிப்படுத்தும் ஆன்மீக வெளிப்பாட்டின் சாரத்தை இழந்து, வெறும் வழிபாட்டு மன நிலையுடன், அமைப்பு அல்லது குருவின் வார்த்தைகளையே ஆன்மீக வெளிப்பாடுகளாக எடுத்துக் கொள்கிறார்கள். இதன் மூலம் மீண்டும் நம்பிக்கைகளிலும் வழிபாட்டு மன நிலையிலும் விழுந்து விடுவதுடன், அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆன்மீகப் பயிற்சிகளையும் ஒரு சடங்காக மாற்றி விடுவதன் மூலம், அவர்களுக்குள் தோற்றுவிக்கப் பட்ட ஆன்மீக தேடுதல் மனநிலையையும் இழந்து விடுகிறார்கள். இதன் மூலம் ஆன்மீக அமைப்பினால் அல்லது அமைப்பு சார்ந்த குருவால் வழங்கப் பட்ட, வாழ்க்கையை அதன் முழுமையான சாத்தியங்களுடன் வாழும் வாய்ப்பையும் இழந்து விடுகிறார்கள்.

துரதிர்ஷ்டவசமாக சமூகத்தின் பெரும்பாலானவர்கள் உண்மைக்கு தொலைவில் உள்ள இந்த நம்பிக்கைகளையும் சடங்குகளையுமே மதமாக, ஆன்மீக வழியாக கொள்கிறார்கள். காரணம், பெரும்பாலானவர்களுக்கு உண்மையை அறிய வேண்டிய தேடுதல், அவர்கள் மனதில் தோன்றுவதில்லை அல்லது தோற்றுவிக்கப் படுவதில்லை – அதற்கான சாத்தியங்கள் பெருமளவில் இருக்கும் தற்போதைய காலகட்டத்திலும். உண்மையிலேயே ஆன்மீகத் தேடல் உள்ளவர்களால் இத்தகைய பொய்தோற்றங்களை அளிக்கும் ஆன்மீக மயமாக்கப்பட்டவற்றை, அவர்களின் ஆன்மீக தேடலின் தொடக்க நிலையிலேயே அறிந்து கொள்ள முடியும்.

Wednesday, November 23, 2011

அறிவு, அறிதல், மாயை (தொடர்ச்சி)

அறிவை முழுமையான(Absolute) அறிவு சார்புநிலை(Relational) அறிவு என இரண்டு வகைகளாகப் பொதுமை படுத்தலாம். இங்கு முழுமையான அறிவு என்பது தர்க்க நிலைகளுக்கு(Logic) அப்பாற்பட்டது, மனம் அதன் முழு விழிப்பு நிலையில் பெறுவது. முழுமையான அறிவுக்கான தேவை, அந்த அறிவை குறித்த தேடுதல் நம் மனதில் தோன்றினால் அல்லது தோற்றுவிக்கப் பட்டால் மட்டுமே. அத்தகைய தேடுதல் இல்லாத பட்சத்தில், சார்புநிலை அறிவு மட்டுமே நம்அன்றாட வாழ்க்கைக்கு போதுமானதாக இருக்ககூடும். ஆனால் சார்பு நிலை அறிவை முழுமையான அறிவாக நாம் ஏற்றுக்கொண்டால், நம் எல்லா வகையான துன்பங்களுக்கும் அந்த அறிவே ஆதாரமாக இருக்க கூடும். முழுமையான அறிவுக்கான தேடுதல் நம் இயல்பைப் பொறுத்தது - ஆனால் சார்புநிலை அறிவின் முழுமையின்மையை உணர்வது, நம் அமைதியான வாழ்வுக்கு மிக மிக இன்றியமையாதது.


சாதாரண நிலையில், முற்றிலும் புதிதாக நம்மால் எதையும் அறிய முடியாது. நாம் அறிவதெல்லாம் , நாம் முன்பே அறிந்தவற்றின் தொடர்ச்சிகள் மட்டுமே. முற்றிலும் புதிதாக எதையாவது அறிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும், அதையும் நாம் முன்பே அறிந்தவற்றுடன் தொடர்பு படுத்தி மட்டுமே அறிய முடியும். அதாவது நம் அறிவின் தரம் அல்லது இயல்பு, நாம் முன்பே அறிந்தவற்றின் தரம் அல்லது இயல்பை பொறுத்தே அமையும்.ஆகவே நாம் அறிந்தவை உண்மையிலிருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ அந்த அளவு தூரம், நாம் புதிதாக அறிபவையும் உண்மையிலிருந்து விலகி இருக்கும். ஆக நாம் உண்மையை அறிய விரும்பினால், நம் அறிதலின் இயல்பையும், நம் முன் அறிவையும் அறிந்து கொள்வது மிக அவசியம்.

அனுமானம் (Assumption) என்பது, நம் சாதாரண நிலை அறிதலின் இன்றியமையாத கருவி. அனுமானமே நாம் புதிதாக அறிய வேண்டியவற்றை , முன்பே அறிந்தவற்றுடன் தொடர்பு படுத்தி நம் அறிவாக மாற்றுகிறது.ஆகவே நம் அறிவின் தரம் அல்லது இயல்பு, நம் அனுமானிக்கும் தரம் அல்லது இயல்பையும் பொறுத்து அமையும்.

இன்னும் சற்று ஆழமாக பார்த்தால், நாம் அறிதல் என அறிவது, நம் புலன்கள் உணர்வதை, மனம் அதன் ஆழத்திலிருந்து கண்டெடுத்து வெளிப்படுத்துவதையே. வேறு வார்த்தைகளில் கூறினால், இந்த உலகத்தில் சாத்தியமான எல்லா அறிவும் நம் மனதினுள் புதைந்து கிடக்கிறது. நம் புலன்கள் உணரும்போது, அதற்கான அறிவை, மனம் அதன் ஆழத்திலிருந்து எடுத்து நம் அறிவாக வெளிப்படுத்துகிறது. ஆகவே நாம் அனைவரும் ஒரே அளவான அறிவுடன், அதாவது இந்த உலகில் பெற சாத்தியமுள்ள முழு அறிவுடன் படைக்கப்பட்டுள்ளோம். அந்த அறிவை வெளிப்படுத்தும் இயல்பில் மட்டுமே வேறுபட்டுள்ளோம்.

மனிதர்களில் ஒவ்வொருவரும் அறிவின் உச்சத்தை அடைவதற்கான சாத்தியங்களை உடையவர்களே. ஆனால் மனிதர்களில் பெரும்பாலனவர்கள் அ த்தகைய உச்சத்தை அடைவதில்லை. காரணம், அவர்கள் அத்தகைய உச்சத்தை அடைவதற்கான சாத்தியங்களை உடையவர்கள் தாங்கள் என்பதை அறிந்திருக்கவில்லை. தங்கள் உளவியல் பாதுகாப்புக்காகவும், சமூக பாதுகாப்புக்காகவும், நம்பிக்கைகள், பயங்கள் போன்றவற்றை உருவாக்கி, அந்த நம்பிக்கைகளையும் பயங்களையுமே தங்கள் அறிதலுக்கான சார்புநிலைகளாககொண்டு விடுகிறார்கள். ஆகவே வெளிப்படும் புதிய அறிவும், அந்த நம்பிக்கைகளையும் பயங்களையுமே சார்ந்து உள்ளது . இதன் மூலம் முழுமையான அறிவை பெறுவதற்கான சாத்தியங்களை சிறிது சிறிதாக இழந்து விடுகிறோம்.

ஆன்மீக சிந்தனைத் தளங்களில், அறிந்தவற்றிலிருந்து விடுதலை என்னும்ஒரு சிந்தனை ஓட்டம் உள்ளது. அதாவது நாம் புதியதாக ஒன்றை அறிய தொடங்கும்போது, முன்பே அறிந்தவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடிந்தால் மட்டுமே புதிதாக அறியும் அறிவு, உண்மைக்கு அருகில் இருக்க வாய்ப்பு உள்ளது. அதாவது அந்த புதிய அறிவு, அதற்கு தேவையான சார்பு நிலையை மனதின் வெளிப்புற மாயைகளிலிருந்து பெறாமல் ஆழ்மனதிலிருந்து பெறக்கூடும். அத்தகைய விடுதலையை நம்மால் பெற முடிந்தால், நம்முடைய பயங்கள், நம்பிக்கைகள் போன்ற தளைகளிலிருந்தும் நம்மால் விடுபட முடியலாம். அல்லது, பயங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிலிருந்து நம்மால் விடுபட முடிந்தால் ஒருவேளை நம்மால் அறிந்தவைகளிலிருந்தும் விடுதலை பெற முடியலாம். இங்கு அறிந்தவற்றிலிருந்து விடுதலை என்பது, அறிந்தவற்றை முற்றிலுமாக விட்டு விடுவது ஆகாது, ஆனால் அறிந்தவற்றை வலுக்கட்டாயமாக புதிய அறிவின் மீது சார்பு படுத்துவதை விட்டு விடுவது ஆகும் – நம் மனம் மிக இயல்பாக அத்தகைய சார்புநிலையை எடுக்கும் தன்மை உடையது. .

நம் மனதினுள்ளேயே நம்மால் அறிய கூடியதெல்லாம் உள்ளதெனில் அதை எவ்வாறு அறிவது? அத்தகைய அறிவு, நம் மனம் அதன் உச்ச இயக்க நிலையை அடையும்போது மட்டுமே அடைய கூடியதாக இருக்கலாம். நம் மனம் அதன் உச்ச இயக்க நிலையில் உள்ளது என்னும் அறிவு ஒருவேளை மாயையாக இருக்குமானால், அப்போது நாம் அறிவதும் மாயையாகவே இருக்க கூடும். வேறு வார்த்தைகளில் கூறினால், மனம் அதன் உச்ச இயக்க நிலையில் அதன் அறிதலுக்காக வேறு எந்த அறிவையும் சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம். அத்தகைய அறிவு சாத்தியமானால், அது மட்டுமே முழுமையான அறிவாக இருக்கும்.

மனம் அதன் முழுமையான அறிதல் நிலையில் இருக்கும்போது, அத்தகைய மனம் வேறு எந்த மன இயக்கங்களையும் சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம். மனதின் அத்தகைய சார்பு நிலை இல்லாமையே விடுதலை அல்லது நிர்வாணம் என அழைக்கப் படுவதாக இருக்கலாம்!

இந்த விடுதலை அல்லது நிர்வாணம், ஒவ்வொரு மனிதருக்கும் சாத்தியமா? முழுமையான அறிவுக்கான தேடுதல் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப் பட்ட ஒவ்வொரு மனித மனத்துக்கும் விடுதலை அல்லது நிர்வாணம் நிச்சயமாக சாத்தியமானதாக இருக்க வேண்டும். அவ்வாறு சாத்தியம் இல்லையெனில், விடுதலை அல்லது நிர்வாணம் என்பது வெறும் மாயையே!

நாம் நுண்ணறிவு(Intelligence) என அ.ழைப்பது, ஒரு சார்புநிலைகளற்ற அறிதலாக இருக்க கூடும். அவ்வாறெனில், நுண்ணறிவு என்பது முழுமையான அறிவின் அம்சமே ஆகும். அதாவது நம் அறிவின் மொத்தமும் நுண்ணறிவாக மாறும்பொது, நம் அறிவும் முழுமையான அறிவாக ஆக கூடும். நம் நுண்ணறிவு வெளிப்படும் தருணங்களை நாம் கவனிக்க நேர்ந்திருந்தால், அத்தகைய தருணங்களில் மனம் எண்ணங்களின் அலைபாயுதலிடமிருந்து விடுபட்டு இருந்திருப்பதை கவனித்திருப்போம். அதாவது மனம் அதன் தர்க்க நிலைகளிலிருந்து விடுபடும் தருணங்களில் மட்டுமே நுண்ணறிவு வெளிப்பட சாத்தியமுள்ளது. நம் அறிவு மொத்தமும் நுண்ணறிவாக மாறும்போது, அதுவே முழுமையான அறிவாக இருக்க கூடும். அதாவது, நம் அறிவு அல்லது அறிதல் எல்லாவிதமான சார்பு நிலைகளிலிருந்தும் முழுமையாக விடுதலை பெற்றிருக்க கூடும்.

நம் உடல் இருப்பை பொறுத்தவரை அறிதல் மற்றும் அறிவு என்பது, நம் மூளையினுள் நடைபெறும் உயிர்வேதி மாற்றங்களே. எனவே நுண்ணறிவும் உயிர்வேதி செயல்பாடுகளாகவே இருக்க முடியும் – நுண்ணறிவின் உயிர்வேதிச் செயல்பாடுகள், சார்புநிலை அறிவுக்கான உயிர்வேதிச் செயல்பாடிகளிலிருந்து முற்றிலும் வேறானதாக இருக்க கூடும். அவ்வாறெனில், நம் மூளையின் ஒரு குறிப்பிட்ட உயிர்வேதிச் செயல்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் நாம் நுண்ணறிவை அடைவது சாத்தியப்படலாம். ஹட யோகம், கிரியா யோகம் போன்றவை இந்த அடிப்படையில் உருவாகி இருக்க கூடும். இதன் மறுபக்கமாக, நமது இரத்த அழுத்தத்தையும், சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மருந்துகளையே சார்ந்திருக்கும்போது, மூளை அதன் நுண்ணறிவையும் இழக்க கூடும்.

Monday, October 24, 2011

அறிவு, அறிதல், மாயை

அறிவு – நாம் அனைவரும் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அடைய துடிக்கும் ஒரு சூட்சும பொருள். அறிதல் என்னும் இயக்கத்தின் அல்லது செயலின் மூலம் நாம் அறிவை அடைகிறோம். அறிதல் என்னும் இயக்கம் அறிவை எங்கிருந்து கொண்டு வந்து சேர்க்கிறது? அறிதல் எவ்வாறு நிகழ்கிறது? அறிதல் எதை அறிகிறது? அறிதலுக்கும் அறிவுக்கும் உள்ள இடைவெளி என்ன அல்லது தொடர்பு என்ன? அறிவுக்கும் அறிபடுபொருளுக்கம் உள்ள தொடர்பு என்ன? நம் அறிவு என நினைப்பது முழுமையானதா? ஆம், அறிவை குறித்த இந்த கேள்விகளுக்கு நாம் பதில் அளிக்கம்வரை நம் அறிவின் தரத்தை நம்மால் மதிப்பிட முடியாது. அவ்வாறு நாம் மதிப்பிடுவோமானால், அது மற்றவர்களின் அறிவு என நாம் கருதுவதுடனான ஒரு ஒப்பீடு மட்டுமே. அது நம் அறிவின் அளவை அல்லது தரத்தை ஒருபோதும் குறிக்க முடியாது – காரண்ம், அறிவின் முழுமையை குறித்து நாம் அறிந்திருக்கவில்லை.

நாம் அறிதல் என அறிந்துள்ளது, நம் புலன்கள் மூலம் உணரப்படும் வெளியுலக நிகழ்வுகளை நம் மூளை உணர்ந்து அதை மனமாக வெளிப்படுத்துவதையே. அதாவது நம் அறிவு என அறிவதன் நுழைவாசல் நம் புலன்களே. அந்த மனதின் நிகழ்வுகளையே அறியும் மனது, ஆறாவது அறிவாக கருதப்படுகிறது. நம் ஐம்புலன்களால் அறியப்படுவதில், தொடு உணர்வு மட்டுமே உடல் முழுவதும் பரவியுள்ளது. மற்ற நான்கு புலன் உறுப்புகளும், உடலினுள், மிக அதிகபட்ச சாத்தியமுள்ள பாதுகாப்புடன் அமைந்துள்ளது. அதாவது, தொடு உணர்வுக்கு மட்டுமே, திண்மையுள்ள ஒரு வெளிப்பொருள் நம் உடலுடன் நேரடி தொடர்பு கொள்ள வேண்டியிருக்கிறது. மற்ற நான்கு அறிவுக்கும், மிக மிக நுண்ணிய இயக்கங்களே காரணமாக இருக்கிறது. நம் பரிணாம வளர்ச்சி, அந்த நுண்ணிய இயக்கங்களை நம் மூளை உணர்வதற்கு தேவையான உடலமைப்பை புலன் உறுப்புகள் மூலம் நமக்கு அளித்துள்ளது. எதிர்காலத்தில், நம் மூளை, அதன் பரிணாம வளர்ச்சிக்காக, உலகை அறிவதற்காக, இன்னும் ஒரு வெளிப்புற இயக்கத்தை அறிய வேண்டிய தேவை ஏற்படுமானால், நம் தொலைதூர சந்ததியினர் அவர்கள் உடலில் இன்னும் ஒரு புலன் உறுப்பை பெறக்கூடும்.

வெளிப்புற உலகம் நம் உடல் மீது தொடுக்கும் தாக்குதல்கள் மூலமே நம்மால் புற உலகத்தை புலன்களின் மூலம் அறிய முடிகிறது. ஒளி அலைகள் நம் உடலில் எற்படுத்தும் தாக்கத்தை கண்கள் உணர்வதன் மூலம் புற உலகத்தை காண்கிறோம். இதைப்போலவே கேட்பதும், முகர்வதும், சுவைப்பதும். நாம் உண்மையில் அறிதல் எனக் கூறுவது, புற உலகம் நம் புலன்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களை உணர்ந்து அவற்றை அடையாளப்படுத்துதலையே. அடையாளப்படுத்துதல் என்பது மொழியின் மூலம் நடைபெறுகிறது. அதாவது, மொழி என்பது நம் புலன்கள் உணரும் ஒவ்வொரு உணர்வுக்கும் நாம் அளிக்கும் அடையாளம் அல்லது குறியீடு. வேறு வார்த்தைகளில் கூறினால், நம் புலன்கள் உணரும் புற உலக இயக்கத்தை நம் மூளை உணர்ந்து, அந்த உணர்வை மொழியாக்கி, மொழியை மீண்டும் மூளை உணர்வதையே நாம் அறிதல் என்கிறோம். அவ்வாறெனில், அறிதலுக்கு மொழி ஒரு தவிர்க்க முடியாத ஒரு தேவை.


ஆனால் அறிதல் என்பது மொழிக்கு அப்பாற்பட்டதாகவே இருக்க முடியும். மொழி என்பது அறிதலுக்குப்பின் தோன்றும் ஒரு புதிய செயல்பாடு. நம் அறிதலை புற உலகுக்கு வெளிப்படுத்தும் ஒரு செயல்பாடு. நம் உலகம் என்பது, உலகில் உள்ள பிறருடனும் பிற பொருட்களுடனும் நாம் கொள்ளும் தொடர்புகளின் அல்லது உறவுகளின் தொகுப்பே ஆகும். அந்த தொடர்புகளின் அல்லது உறவுகளின் எல்லையை மீறி நம் உலகம் எப்போதுமே விரிவடைவதில்லை. நம் உலகம் விரிய வேண்டுமானால் நம் உறவுகளும் தொடர்புகளும் விரிவடைந்தாக வேண்டும். மொழி என்பது நம் அறிவை குறியீடுகளாக்கி நம் உறவுகளுடன் பகிரவும், நம் உறவுகள் பகிரும் குறியீடுகளை நம் அறிதலின் மூலம் நம் அறிவாகவும் மாற்றும் ஒரு கருவியே. ஆக மொழி என்பது அறிதலுக்கான ஒரு கருவியே தவிர அறிவின் ஒரு பகுதி ஆகாது.


எனில், அறிதல் எவ்வாறு நடைபெறுகிறது? சமீபத்தில் படிக்க நேர்ந்த, “The Process of knowing: A Biocognitive Epistemology” என்னும் கட்டுரை கீழ்வருமாறு கூறுகிறது. இந்த கட்டுரை வெளிவந்த தொகுதி - The journal of Mind and Behaviour, Automn 2001, Volume 22, Number 4.

Knowledge progresses through three developmental phases defined as pre-linguistic, concrete-linguistic, and abstract-linguistic experiences. The pre-linguistic phase consists of precursors of thoughts (perceptions of undifferentiated personal space without time dimension); precursors of affect (sensations of comfort and security vs. discomfort and insecurity); and precursors of language (primordial sounds responding to undifferentiated internal and external stimuli). The concrete-linguistic phase advances from precursors of thought to a cognition that differentiates self from non-self in concrete time and space; from the sensations of comfort and discomfort to the emotions of happiness, sadness etc.; and from primordial sounds that respond to undifferentiated internal and external stimuli to language that represent simple imagery and emotions communicated in concrete space and time. The abstract-linguistic phase frees the knower from the limitations of concrete-linguistics with language that can communicate complex imagery and emotions in projected time and space. The knower can project time and space from the present to communicate about the past and the future as abstract entities separate from self.

கட்டுரையின் இந்த பகுதியின்படி, அறிவு, மொழிக்கு முந்தையது, திட அர்த்தமுள்ள மொழியினூடாக உள்ளது மற்றும் கருத்துக்களாகிய மொழியினூடாக உள்ளது என பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, நம் அறிதல் என்பது, நம் மொழி அறிவுக்கு முன்பாக உள்ள அறிவிலிருந்து தொடங்கி, மொழியின் மூலமாக அடுத்த கட்டத்தை அடைகிறது. அதாவது, அறிவு என்பது மொழிக்கு அப்பாற்பட்டது, மொழி என்னும் கருவியின் வழியாக அறிதல் நடைபெறுகிறது.

நம்மால், மொழியின் துணையின்றி நம் அறிவை உணர முடியுமா? நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மொழியை தவிர்த்து அறிவு என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக இருக்க கூடும். ஆனால் ஆன்மீகத்தில் பூடகத்தன்மையை (mystic) மறுத்து, தர்க்கபூர்வமான மொழியில் வெளிப்படுத்திய ஜே. கிருக்ஷ்ணமூர்த்தியின் கருத்துகளின்படி, அறிவு என்பது நிகழ்வதற்கான சாத்தியம், மொழியால் உருவாக்கப்பட்ட எண்ணங்கள் மனதினுள் முழுமையாக இல்லாமல் இருக்கும்போது மட்டுமே உள்ளது. அதாவது, மொழியாலான கருத்தமைப்புகளின் மூலம் நம் மனதில் நிலைபட்டுள்ள எண்ணங்களே நம் அறிதலுக்கு தடையாகவும் உள்ளது.

வேறு வார்த்தைகளில் கூறினால், அறிவதற்கான கருவியாகிய மொழியையே நாம் அறிதலாக கொள்ளும்போது, அந்த அறிதலின் மூலம் நாம் அறிவதும் ஒரு மாய உலகையே!


பின் குறிப்பு: இங்கு குறிப்பிட்டுள்ள மேற்கோள்கள், இந்த உளறல்கள் எனக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதை உணர்த்தவே.

Tuesday, October 18, 2011

இச்சைகள்

உலகின் அடிப்படை சக்திகளில் ஒன்று, இச்சா சக்தி. அதாவது எந்த ஒரு இயக்கத்திற்கும் அல்லது செயலுக்கும் முதல் தேவை, அந்த இயக்கம் அல்லது செயலுக்கான ஆசை அல்லது இச்சை – அந்த இயக்கம், அணுவினுள் நியூக்ளியஸைச் சுற்றி வரும் எலக்ட்ரானாக இருந்தாலும், சூரியனை சுற்றி வரும் கோளங்களாக இருந்தாலும், நாம் அறியாத திசையில் பயணித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரவெளியாக(Galaxy) இருந்தாலும்! நம் உலகத்தில் உள்ள வாழ்க்கையும், ஒரு முடிவில்லாத இயக்கம் அல்லது செயல் மட்டுமே. நமது இச்சைகளே நம் வாழ்க்கையின் அடிப்படை இயங்குசக்தி. ஆகவே நமது இச்சைகளின் இயல்பு, நம் வாழ்க்கையின் இயக்கத்தில், இயல்பில், இன்றியமையாத இடம் வகிக்க கூடும். நம் வாழ்க்கையின் இயக்கத்தை நம் விருப்பத்தின்படி செலுத்த வேண்டுமானால், நம் விருப்பம் அல்லது ஆசை அல்லது இச்சை, அந்த விருப்பத்தின்படி அமைந்தாக வேண்டும். நம் இச்சைகளில் உள்ள ஒத்திசைவு அல்லது முரண்பாடு, நம் வாழ்க்கையிலும், ஒத்திசைவாகவோ அல்லது முரண்பாடாகவோ வெளிப்படும். ஆனந்தமயமான வாழ்க்கை என்பது ஒரு ஒத்திசைவுள்ள, முரண்பாடுகளற்ற வாழ்க்கை. நாம் உண்மையிலேயே, ஒரு மகிழ்ச்சியான, ஆனந்தமயமான வாழ்க்கையை விரும்பினால், நம் வாழ்க்கையின் அடிப்படை சக்தியான இச்சா சக்தியின் கூறுகள் முரண்பாடுகளற்று, ஒத்திசைவுடன் இருந்தாக வேண்டும். நம் இச்சைகளை அறிந்து கொள்வதன் மூலமே, அது சாத்தியமாகலாம்.

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கமும், நம் மூளையின் மூலமே இயக்கப்படுகிறது. மூளையின் ஒவ்வொரு இயக்கமும் நம் மனமாக வெளிப்படுகிறது. அந்த மன இயக்கங்கள், நம் மனதின் உணர்வுநிலையிலோ (Conscious) அல்லது உள்ளுணர்வு நிலையிலோ (subconscious) அல்லது, ஆழ்மன நிலையிலோ (unconscious) நிகழலாம். அந்த நிகழ்வு நடைபெறும் மனதின் தளம், நம் விழிப்புணர்வின் ஆழத்தைப் பொறுத்தது – நம் விழிப்புணர்வு அதன் உச்சத்தை அடையும்போது, நம் மனதின் மொத்த இயக்கமும் உணர்வு நிலையிலேயே நடைபெறக் கூடும். நமது இச்சைகளும் நம் மூளையையே ஆதாரமாக கொண்டுள்ளதால், எல்லா இச்சைகளும் நம் மனவெளியில் வெளிப்பட்டே ஆக வேண்டும். – நம் விழிப்புணர்வைப் பொறுத்து, மனதின் ஏதாவது ஒரு தளத்தில்.

நம் மனதின் அடிப்படை இச்சைகள் நம் உடல் சார்ந்ததே. இந்த அடிப்படை இச்சைகளின் இயல்பு, நமது இருப்பை உறுதிச் செய்ய தேவையான மிக அடிப்படையான இயக்கங்களை உருவாக்குவதாகவே இருக்க கூடும். உதாரணமாக பசி என்னும் உணர்வு, உணவு உண்பதற்கான இச்சையை உருவாக்குவதன் மூலம், நம் இருப்பை உறுதிச் செய்கிறது. உடலை பாதுகாப்பதற்கான இச்சையின் மூலம், நம் சூழலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளிலிருந்து நம்மை பாதுகாப்பதற்கான இயக்கங்கள் உருவாகிறது. காமம் என்னும் இச்சையின் மூலம், நம் இனம் அழியாமல் அதன் இருப்பை உறுதிச் செய்வதற்கான இனப்பெருக்கம் என்னும் இயக்கத்தை உருவாக்குகிறது. இவ்வாறு நம் ஒவ்வொரு இயக்கங்களுக்கும் அடிப்படையாக, அந்த இயக்கத்திற்கான இச்சை இருந்துகொண்டே இருக்கிறது.

உயிரியல் பரிமாணத்தின் உயர்நிலையில் உள்ள சில உயிரினங்களை தவிர மற்ற அனைத்து உயிரினங்களிலும், இந்த இச்சைகளும் இச்சைகளை காரணமாக கொண்ட விளைவுகளும், அந்த உயிரினங்களின் உணர்வுநிலைகளின் இடைவினைகள் (interaction) இல்லாமலேயே நடைபெறுகிறது – அந்த உயிரினங்களுக்கு உணர்வு என்னும் தளம் இருந்தாலும். மனித இனம் தவிர மற்ற உயர்நிலை உயிரினங்களுக்கும், அவை உணர்வுத் தன்மைக்கான சாத்தியங்களுடன் இருந்தாலும், அந்த உணர்வின் மூலம் அதன் இச்சைகளின் இயக்கத்தையும் இயக்கத்தின் தன்மைகளையும் வடிவமைப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதில்லை. ஆனால் மனிதனுக்கு மட்டுமே, இச்சா சக்தி இயக்கமாகவோ அல்லது செயலாகவோ வெளிப்படுவதற்கு, ஒரு அனுமதி இயக்கமும் மூளையிலிருந்து தேவைப்படுகிறது. மூளையின் அந்த அனுமதி இயக்கம் அனுமதித்தால் மட்டுமே, இச்சா சக்தி, இயக்கமாகவோ செயலாகவோ வெளிப்பட சாத்தியம் உண்டு. ஆனால் இயற்கையின் விதிப்படி, எந்த வெளிப்பட்ட சக்தியும, எத்தகைய ஒரு இயக்கத்தையும் உருவாக்காமல் அழிய முடியாது. ஆகவே மூளைக்கு உள்ள சாத்தியங்கள், அந்த இச்சைக்கான இயக்கத்தை அனுமதிப்பது அல்லது, அந்த இச்சையை வேறு சாத்தியமான வழிகளில் திரும்பிச்செல்ல அனுமதிப்பது. அதாவது மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களின் விதியை இயற்கையே நிர்ணயிக்கிறது, உயிர்களினுள் இச்சா சக்தியை வெளிப்படுத்துவதுடன் அந்த இச்சையை உடனடியாக நிறைவேற்றுவதன் மூலம். ஆனால், மனித உயிரில் இச்சையை உருவாக்குவது மட்டுமே இயற்கை, அந்த இச்சா சக்தி ஊடுருவும் பாதையை முடிவு செய்வது, அந்த மனித உயிரின் செயல். அதாவது, மனிதனின் விதியை அந்த தனிப்பட்ட மனிதனே அமைத்துக் கொள்வதற்கான சாத்தியத்தை இயற்கை ஒவ்வொரு மனித உயிருக்கும் அளித்துள்ளது.

இச்சை நம் உணர்வுதளத்தில் தோன்றினால், அந்த இச்சைக்கான அனுமதி இயக்கமும், இச்சையின் விளைவான இயக்கமும் நம் உணர்வு தளத்திலேயே நடக்கும். இந்த இயக்கங்களில், காரணமும் விளைவும் காரணம் விளைவாக மாறுவதற்கான அனுமதியும் நம் உணர்வு தளத்திலேயே நடைபெறுவதால், இந்த காரண காரியங்களின் முழு இயக்கத்தையும் நாம் விரும்பினால் நம்மால் அறிய முடியும். ஆனால் நம் உள்மனம் மற்றும் ஆழ்மன நிலைகளில் உருவாகும் இச்சா சக்தியையும் அதன் இயக்கங்களையும், தற்போதைய நம் உணர்வு நிலையில், நம்மால் உணர முடியாமல் போகலாம். ஆனால், நம்மால் உணர்வுநிலையில் ஏற்படும் இந்த இயக்கங்களின் செயல்பாடுகளை விழிப்புணர்வின் மூலம் உணர முடிந்தால், உள்மன, ஆழ்மன நிலைகளில் நடைபெறும் இச்சா சக்தியின் இயக்கங்களை அனுமானிக்க முடியலாம்.

உணர்வு தளத்தில், இச்சா சக்தி, இயக்கமாக மாறுவதற்கான அனுமதி, நம் இயல்பை பொறுத்து, நமது தர்க்க புத்தியின் (Logic) மூலமாகவோ அல்லது மனக்கிளர்ச்சி நிலையின் (Emotion) மூலமாகவோ அனுமதிக்கப்படுகிறது. இதை அறிவது மிக எளிதானது. இவ்வாறே நம் உள்மனம் மற்றும் ஆழ்மன தளங்களில் உருவாகும் இச்சைகளுக்கும், நம் மூளை அனுமதி வழங்கியாக வேண்டும், அது நம் மனதிலும் வெளிப்பட்டாக வேண்டும் – அந்த இச்சை தோன்றும் மனதின் தளங்களிலேயே. நம் மனம் உணர்வு நிலையில் அனுமதி வழங்காத போது, அந்த அனுமதி யாரால் வழங்கப் படுகிறது? அது நம் உள்மனம் மற்றும் ஆழ் மனதின் உள்ளடக்கத்தால் (content) வழங்கப்பட்டிருப்பதுதான் சாத்தியம். அதாவது நம் உள்\ஆழ் மனதின் உள்ளடக்கம் அனுமதித்தால் மட்டுமே, அந்த தளத்தில் தோன்றும் இச்சை இயக்கமாக மாறமுடியும். இயற்கை விதிப்படி எந்த ஒரு சக்தியும் அழிய முடியாது – உரு மாற மட்டுமே முடியும். ஆகவே, நம்முள் தோன்றும் இச்சைகள், நமது மனதின் உள்ளடக்கம் அனுமதித்தால், அந்த இச்சை சுட்டும் இயக்கமாக மாறும். அல்லது அந்த இயக்கத்தை நம் உள்ளடக்கம் அனுமதிக்காவிட்டால், அந்த இச்சை, அதனுடன் தொடர்புள்ள வேறு இயக்கங்களாக மாறலாம், உள்\ஆழ் மன உள்ளடக்கத்தின் வழிகாட்டுதலுடன்.

நம் அடிப்படை இச்சைகளை நம் மனம், அதன் வெவ்வேறு தளங்களில், எவ்வாறு இயக்கமாக மாற அனுமதிக்கிறது என்பதை பொறுத்தே நம் வாழ்க்கையின் இயல்பு அமைந்துள்ளது. அந்த அனுமதியின் தன்மை, நம் மனதின் உள்ளடக்கத்தை பொறுத்தே அமைகிறது. ஆகவே நம் வாழ்க்கை செல்லும் திசை, நம் மனதின் உள்ளடக்கத்தால் மட்டுமே முடிவு செய்யப்படுகிறது. நம் மனதின் உள்ளடக்கமோ, நம் நம்பிக்கைகள், ஏற்றுக்கொண்ட கட்டுப்பாடுகள், நமது பயங்கள், வன்முறை இயக்கங்கள், நம்மால் அடையமுடியாத விருப்பங்கள், பொறாமைகள், இன்னும் இது போன்ற குப்பைகளாலேயே நிரம்பியுள்ளது. நாம் உண்மையிலையே மனிதர்களாக வாழ விரும்பானால், இயற்கை நமக்கு அளித்துள்ள, நம்மை விலங்குகளிலிருந்து உயர்ந்ததாக இருக்கச்செய்யும் காரணியான உணர்வுநிலையை அடைந்தாக வேண்டும். அந்த உணர்வுநிலையை பெறும் முயற்சி கூட நம்மிடமிருந்து வெளிப்படவில்லையெனில், நாம் உண்மையில் மனிதர்கள் என்னும் போர்வைக்குள் வாழும் விலங்குகளே – அந்தப் போர்வை, உண்மையிலேயே மனிதர்களாக வாழ்ந்தவர்களின் பெருங்கருணையால் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது!

தொடர்புள்ள பதிவு; Desire

Thursday, October 13, 2011

இருப்பு - Existance

நம் வாழ்க்கையை அதன் உள்ளிலிருந்து எப்போதாவது அறிந்து கொள்ள முயற்சித்திருந்தால், வாழ்க்கையை குறித்த சில அடிப்படை கேள்விகளை எதிர் கொள்ள வேண்டியிருந்திருக்கும். நம் கேட்கும் வீரியத்திற்கேற்ப, நம் பார்வையின் ஆழத்திற்கேற்ப, நம் வாழ்வின் இயல்பிற்கேற்ப, கேள்வியை ஆராயும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய பதிலை அளிக்கும் கேள்விகள்! ஆம், நம் வாழ்க்கையை அறிந்து கொள்ள வேண்டுமென்றால், நிச்சயமாக கேட்கப்பட்டாக வேண்டிய கேள்வி, அடைந்தாக வேண்டிய பதில் – அந்த பதில் எத்தகையதாக இருந்தாலும். நம் வாழ்க்கையின் ஒரு சிறுபகுதியையாவது உணர்வு நிலையில் அடைந்திருந்தால் மட்டுமே, அந்த கேள்விகள் நம் மனதில் எழ சாத்தியமுண்டு. அந்த கேள்வியும், பதிலை அடைவதற்கான இச்சையும் கூட நம் உணர்வின் எல்லைகளை விரிவடையச் செய்யும் சாத்திய கூறுகளை தம்முள் கொண்டிருக்க கூடும்.

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கூறுகளும் செயல்களால் ஆனது. அந்த செயல்கள் நம்மால் செய்யபடுவதாகவோ அல்லது நம் மூலம் செய்விக்கப் படுவதாகவோ இருக்க்கலாம். அச்செயல்களை, அதன் ஒற்றைத் தன்மையில் ஆராய்ந்தால், அச்செயல்களுக்கோ அல்லது அதன் விளைவுகளுக்கோ எந்த ஒரு அர்த்தத்தையும் நம்மால் காண இயலாமல் போகலாம். எனில், நம் வாழ்க்கையின் அர்த்தம் என்ன? நாம் எதற்காக அல்லது யாருக்காக வாழ்கிறோம் அல்லது வாழ வேண்டும்? நம் வாழ்க்கையின் கூறுகளாகிய செயல்களின் அர்த்தம் என்ன? அந்த செயல்கள் இல்லாது போனால் நம் வாழ்க்கை என்ன ஆகும்? அந்த செயல்களின் அடிப்படை என்ன? அந்த அடிப்படைகள் இல்லாது போனால் அல்லது ஒரு மாய தோற்றமாகிப் போனால், நம் செயல்கள் அல்லது அச்செயல்களால் ஆன நம் வாழ்க்கை என்ன ஆகும்? நம் செயல்களின் அடிப்படை ஒரு மாய தோற்றத்தினால் ஆனதாக இருந்தால், நம் செயல்களிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ள வேண்டுமா? அவ்வாறு விலக்கிக் கொண்டால், நாம் எதைப் பற்றிக்கொண்டு வாழ்வது? நாம் பொய் தோற்றத்தை அடிப்படையாக்க கொண்ட வாழ்க்கையிலிருந்து மீண்டு, புதிய ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்றால், அந்த புதிய வாழ்வின் அடிப்படையும் பொய் தோற்றங்களாக இல்லாமல் இருக்க வேண்டுமானால் என்ன செய்வது? இதைப் போன்ற இன்னும் எத்தனையோ கேள்விகள்!

இந்த கேள்விகள், நம்மையே நாம் உணரத் தொடங்கினால் அல்லது உணர வேண்டும் என்று விரும்பினால் மட்டுமே எழ சாத்தியமுண்டு. இந்த கேள்விகள் மற்றும் அதற்கான விடையை நாம் அணுகும் முறை கூட, நம் வாழக்கையை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ புரட்டிப் போடும் சாத்தியங்களை உடையது. அதாவது, இந்த கேள்விகளை நாம் அணுகும் போது, நம் உணர்வுகளையும் மிக கவனமாக பின் தொடரவேண்டியது அவசியம். அவ்வாறு நம் உணர்வுகளை நம்மால் பின்தொடர இயலாவிட்டால், ஒரு வழிகாட்டி அல்லது குருவின் துணை அவசியப்படலாம். எவர் ஒருவர் நம் இயல்பை உணர்ந்து, நம் ஆன்மீக கேள்விகளுக்கு நாமே விடையை அறிய உதவுகிறாரோ, அவரே ஒரு குருவாக இருக்க முடியும். நம் உணர்வுகளை மிக கவனமாக நம்மால் பின்தொடர இயலுமானால், நம் உணர்வுகளே கூட நமக்கு குருவாக இருக்கூடும்.

வாழ்க்கை குறித்த நம் கேள்விகளின் பதில், நம் தனி மனித இயல்புகளையும் அந்த இயல்புகளின் அடிப்படையான தனிமனித இச்சைகளையும் பொறுத்தே அமையும். ஆக நம் இயல்புகளையும் இச்சைகளையும் அறிந்து கொள்வதே ஆன்மீகம் அல்லது நம் வாழ்வு குறித்த அறிதலுக்கு தொடக்கமாக இருக்க முடியும். நம் இயல்புகளையும் இச்சைகளையும் அறியாமல், நம் வாழ்வின் அர்த்தத்தை தேடினால், ஒருவேளை அங்கு தெரியும் அர்த்தமின்மை, வாழ்வின் மேல் நம்மை வெறுப்புறச் செய்து, தற்கொலைக்கு கூட தூண்டலாம். சமூக அமைப்பில் அர்த்தமின்மை என்னும் மாயையில் நம்மை தள்ளி, சமூக அமைப்பிலிருந்து நம்மை விலகச் செய்யலாம். இத்தகைய விளைவுகள், நம் இயல்பை நாம் அறியாமல், கற்பனைகள் மூலம் அடையும் முடிவுகளின் காரணமாகவே ஏற்பட்டுகின்றன. இத்தகைய முடிவுகள், மீண்டு வர இயலாத பொறிகளினுள் நம்மை முழுமையாக மூழ்கடிக்கலாம். ஆக, ஆன்மீகத் தேடுதலை, நம் இயல்பை அறிவதலிருந்தே தொடங்க முடியும்.

எந்த ஒரு பொருளுக்கும் அல்லது உயிருக்கும் அதன் இருப்பை உறுதிசெய்வதே அடிப்படை இச்சையாக இருக்க முடியும். அதன் மற்ற அனைத்து இச்சைகளின் கட்டுமானமும் இந்த அடிப்படை இச்சையை அடித்தளமாக கொண்டே இருக்கும். நாமும் அவ்வாறே! நம் இருப்பின் மேல் கொண்டுள்ள இச்சையையும் அதை சார்ந்து உள்ள அல்லது சார்ந்து உருவாக்கிய இச்சையையும் அறிந்து கொள்ள, நம் இருப்பின் உணர்வு நமக்கு இருந்தாக வேண்டும். ஆனால், துரதிர்க்ஷ்டவசமாக நம்மில் பெரும்பான்மையினர், பெரும் மகிழ்ச்சி அல்லது கடும் துன்பத்தில் மட்டுமே நம் இருப்பை உணரும் தன்மையில் இருக்கிறோம். நம் இருப்பைக் குறித்த விழிப்புணர்வே நமக்கு இல்லாத பட்சத்தில், அந்த இருப்பை அடிப்படையாக கொண்ட இச்சைகளை அறிந்திருப்பதற்கான சாத்தியம் இன்னும் குறைவாகவே உள்ளது.

ஆனல், மனம் செயல்புரிய வேண்டுமானால் நம் இருப்பை அது உறுதிசெய்தாக வேண்டும் – செயலின்றி மனதால் இருக்க முடியாது. நம் இருப்பின் அடிப்படையை மனதால் உணரமுடியாதபோது, அகங்காரத்தின் துணைகொண்டு நமது இருப்பைக் குறித்த கற்பனைகளை உருவாக்குவதன் மூலம், மனம் அதன் செயல்பாட்டை உறுதி செய்து கொள்கிறது. ஆக நம் இருப்பின் அடிப்படை இச்சைகள், மனதால் அகங்காரத்தின் துணை கொண்டு உருவாக்கப்பட்ட கற்பனைகளாலான இருப்பின் அல்லது மாயை இருப்பினாலான இச்சைகள் மூடி மறைத்துக் கொண்டிருக்கின்றன. அதாவது நாம் கணம் தோறும் உணரும் விருப்பங்களில் பெரும்பாலானவை, நம் கற்பனை அல்லது மாயையால் ஆன நம் இருப்பின் விருப்பங்களே. சில அடிப்படை விருப்பங்கள் நம்மை அறியாமலே நம்மிடமிருந்து வெளிப்படும். கற்பனை அல்லது மாயையால் ஆன நம் இருப்பு, அடிப்படை இருப்பின் வெளிப்பாடுளை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ செய்யலாம் – அது நம் மாயை இருப்பு, அடிப்படை இருப்புடன் கொண்டுள்ள ஒத்திசைவு அல்லது முரண்பாடுகளை பொறுத்த்து.

நம் இருப்பின் இச்சைகளை அறியவேணைடுமானால், அதை சூழ்ந்துள்ள மாயையை நாம் துளைத்து சென்றாக வேண்டும். எனில், அந்த மாயையின் இயல்பை அறிவது மட்டுமே அத்தகைய ஒரு சாத்தியத்தை நமக்கு அளிக்க கூடும். நம் இருப்பு மற்றும் இருப்பின் இச்சைகள், உண்மையானது. அதாவது, அது பொதீகமானது. ஆனால், நம் கற்பனையால் ஆன இருப்புக்கு அத்தகைய பொதீக இயல்புகள் இருக்க வாய்ப்பில்லை – அந்த கற்பனைகள் நம் மூளையில் ஏற்படுத்தும் சில உளவியல் சார்ந்த வேதி மாற்றங்களைத் தவிர. ஆம், இந்த மாயை அல்லது கற்பனை இருப்பு என்பது முழுவதும் நம் உளவியல் சார்ந்த இருப்பு. நம் எண்ணங்களே அந்த மாயைகளை உருவாக்கி, அந்த எண்ணங்களால் ஆன நம் அகங்காரத்துடன் பிணைத்து அதன் மாயத்தோற்றத்தை உறுதி செய்கிறது.

நம் வாழ்க்கை தளத்தில், நம் மனங்களின் வெளிப்புற கட்டுமானம் முழுவதும் வெறும் எண்ணங்களால் ஆனது. இந்த எண்ணங்களே மாயை இருப்பை உருவாக்குகிறது. ஆனால், இந்த எண்ணங்களைத் தாங்கிகொண்டிருக்கம் அந்த மனதின் மூலம் மட்டுமே, அந்த எண்ணங்களைத் தாண்டிச் சென்று, நம் இருப்பின் ஆழத்தையம் அடைய முடியும். இதுவே ஆன்மீகம் மனித இனத்தின் பெரும்பான்மையினரிடம் வெளிப்படாமல் இருப்பதற்கான மூல காரணமாக இருக்க கூடும். மாயையால் மூடப்பட்டுள்ள மனதின் மூலமே அந்த மாயையை அறிந்து, மனதின் ஒருபாகமாக மாறிவிட்ட மாயையை உடைத்தெறிய வேண்டுமென்பது சற்று கடினமான செயலாகத்தான் இருக்ககூடும்.


அறிவின் மூலம் மட்டுமே அந்த தொடக்கத்தை பெறமுடியும். துரதிர்க்ஷ்டவசமாக, உலகம் முழுவதும் கல்வி முழுமையாக பொருளியல் சார்ந்த்தாக மாறிவிட்டது. அதாவது இன்றைய சூழலில் நம் வாழ்க்கை அறிவு என்பது நிறுவப்பட்ட கல்விக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் வெளியே மட்டுமே பெறமுடியக்கூடிய ஒன்றாகி விட்டது. இந்த பொருளியல் சார்ந்த கல்வி, நம் ஆன்மீகத்தையும், பொருளியல் சார்ந்த கற்பனைகளாக மாற்றி விட்டது. நாமும், நம் சந்ததியினர் நிறுவப்பட்ட கல்விக்கு வெளியே அவர்கள் ஆர்வம் செல்லாதவாறு, அவர்களை நிறுவப்பட்ட கல்வியினுள்ளே முழுமையாக வழிப்படுத்தி, அவர்களும் மாயையினுள் நிரந்தரமாக இருக்குமாறு உறுதி செய்து கொள்கிறோம்.

Tuesday, October 4, 2011

சக்தி

நம் பிறப்பு, இருப்பு, இறப்பு ஆகிய அனைத்தின் அடிப்படையும் சக்தியே. தத்துவப்பூர்வமாகவும், விஞ்ஞானப்பூர்வமாகவும் இந்த உலகத்தின் இருப்பின் அடிப்படை சக்தியே ஆகும் - E = mc^2. நாம் காண்பதும், கேட்பதும், நுகர்வதும், உண்பதும், உணருவதும் அனைத்தும் சக்தியின் வடிவங்களே. ஆயினும், நம் அன்றாட வாழ்க்கைத் தளத்தில் உபயோகப்படுத்தும் சக்தியின் வடிவங்கள், நமக்கு போதுமான அளவில் இல்லை. அனைத்துமே சக்தி மயமாக இருந்தாலும், சக்திக்காக இப்போதும் நாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருக்கின்றன. மூன்றாவது உலகப் போர் ஒன்று நடக்குமானால், அது சக்தியின் உரிமைக்காகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது. எல்லாமும் சக்தியின் வடிவங்களாக இருந்தாலும், நாம் கூட சக்தியின் ஒரு வடிவாக இருந்தாலும், சக்தியின் உரிமைக்காக நாமும், நம் சந்ததியினரும் ஒருவருடன் ஒருவர் போரிடும் தருணத்திற்காக காத்திருக்கிறோம் – நம் வாழ்வின் முரண்பாடுகளின் உச்சம்!

உபயோகப்படுத்தும் சக்தியின் வடிவங்கள், நமக்கு போதுமான அளவில் இல்லை. நம் வாழ்வின் பெரும்பகுதி, தற்போதைய வாழ்க்கைச் சூழலில், இந்த சக்தியின் வடிவங்களை சார்ந்தே உள்ளது. சக்தியின் போதாமைக்கான காரணங்கள் பல தளங்களை சார்ந்தவை. இந்த அனைத்து தளங்களையும் உணரத் தேவையான ஒரு முழுமையான பார்வையுடையவர்களாக நாம் இருந்தால், அந்த போதாமையைத் தவிர்க்க நம்மால் இயன்றவற்றை நாம் செய்து கொண்டிருப்போம் – அதாவது, ஒரு உலகப் போரை தவிர்க்க நம்மால் இயன்றதை செய்து கொண்டிருப்போம், நமக்கு தெரிந்தோ தெரியாமலோ!.

உலக மக்கள் தொகை, 1960 ஆம் ஆண்டு சுமார் 300 கோடி. 1999 ஆம் ஆண்டு, சுமார் 600 கோடி. இன்று, சுமார் 700 கோடி. 2050 ஆம் ஆண்டு, எதிர்பார்க்கப் படுவது, சுமார் 900 கோடி. `1990 ஆம் ஆண்டுக்கும் 2008 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 18 வருட காலத்தில், உலகின் தனி மனித சக்தியின் நுகர்வு சுமார் 10% அதிகரித்துள்ளது. அதாவது, சராசரியாக வருடத்திற்கு 0.53%. இதே கால கட்டத்தில், உலகின் மக்கள் தொகை சராசரியாக வருடத்திற்கு 1.8% அதிகரித்துள்ளது.

இந்த புள்ளி விவரத்தை, ஒரளவேனும் நம்மால் கிரகித்துக் கொள்ள முடிந்தால், நம் முன் உள்ள பிரச்சினையின் விஸ்வரூபத்தை நம்மால் அனுமானிக்க முடியலாம். பிரச்சினை உலகின் உபயோகப்படும் சக்தியின் தேவை மட்டுமல்ல – எங்கும் நிறைந்திருக்கும் சக்தியை, மனித உபயோக சக்தியாக மனிதனால் மாற்றப்படும்போது, அந்த மாற்றம், பூமியின் சமன்நிலையில் உருவாக்கும் குலைவும், அந்த சமன்நிலைக் குலைவால் உலக வாழ்க்கையில் (மனிதனின் மற்றும் பிற உயிர்களின் – தற்கால மற்றும் சந்ததியினரின்) வாழ்க்கையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற மற்றும் ஏற்படப் போகின்ற எதிர்மறை விளைவுகளும்!

இன்று நம் வாழ்க்கையின் தரம் நிச்சயமாக உயர்ந்துள்ளது. அதற்கு காரணம், சந்தேகமே இல்லாமல், நம்மிடம் உள்ள சக்திதான் – நாம் நுகரும் மற்றும் நாம் உணரும் சக்திகள். ஆனால் நாம் உபயோகிக்கும்\நுகரும் மற்றும் உணரும் சக்திகள், தொடர்ச்சியாக, நம் இருப்பையே அழிக்கும் அளவுக்கு எதிர்வினைகள் இல்லாமல், கிடைத்துக் கொண்டிருக்குமா என்பதே நம் கேள்வியாக இருக்க கூடும் – இந்த பிரச்சனையின் ஆழத்தை நம்மால் உணர முடிந்தால்!

நாம் உணரும் சக்தியை – நம்முள் இருக்கும் சக்தி, நாம் அறியும்போது, நம் படைப்பூக்கத்தை அறியத் தொடங்குவோம். இந்த படைப்பூக்கம் நம்மை முற்றிலும் வேறான தளத்துக்கு நம்மை எடுத்துச்செல்லக் கூடும். இங்கு சக்தியின் நுகர்வு இல்லை – அதன் உணர்வு மற்றும் இயக்கம், அந்த சக்தியின் இருப்பின் வடிவில் மட்டுமே. எனவே அதன் மூலம் எதிர்மறை விளைவுகளுக்கும் வாய்ப்புகள் இல்லை. இந்த சக்தி, நம் வாழ்வின் தரத்தை உள்முகமாக உயர்த்துகிறது, எதிர்மறை விளைவுகள் எதுவும் இல்லாமலே!

ஆக நம் முன் உள்ள கேள்வி, நம் உபயோகத்தின்\நுகர்வின் மூலம், உலகின் இருப்பின் சமன்நிலை குலைவிற்கு, நாமும் எவ்வாறு ஒரு காரணியாக இருந்து, அதன் எதிர்மற் விளைவிற்கும் எவ்வாறு பொறுப்பேற்கும் இடத்தில் இருக்கிறோம் என்பதும், இந்த எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்க நம்மால் செய்யக் கூடியது என்ன என்பதுமாகவே இருக்க கூடும். நம்மால் சக்தியின் நுகர்வை தவிர்க்க முடியாது, குறைக்கவும் முடியாது. அவ்வாறு செய்வோமெனில் நம்மால் சமூகத் தளத்தில் வாழவும் முடியாது. ஆனால் சக்தியை வீணாக்குவதை நம்மால் தவிர்க்க முடியும் – நமது தேவைகளையும் நுகர்வையும் முழுமையாக அறிந்து கொள்வதன் மூலம்.

உலகில் உள்ள எந்த உயிரினமும் மற்ற உயிரினங்களை சார்ந்தே வாழ முடியும். எந்த ஒரு உயிரினமும் மற்ற ஒரு உயிரினத்தை அல்லது உயிரினத்தால் உருவாக்கப்பட்டதையே உணவாக கொள்ள முடியும். தாவரங்களும், நிலத்தில் உள்ள நுண்ணுயிரிகள் மூலமே தங்கள் உணவைப் பெறுகின்றன. மனிதனின் உடலையும், உயிருடன் இருக்கும்போதே, பல நுண்ணுயிரிகள் உணவாக்கிக் கொண்டிருக்க கூடும். ஆகவே உலகின் சமன்நிலை குறையாமல் இருக்க, இவ்வுலகில் வாழும் உயிரினங்களின் சமன்நிலையும் குலையாமல் இருக்க வேண்டியது அவசியம்.

மனித இனம் தன் அறிவின் மூலம், இயற்கையிலிருந்து ஓரளவுக்கு தன்னை விடுவித்துக்கொண்டுள்ளது. இதன் மூலம், இயற்கையின் தன்னைத் தானே சமன் செய்யும் இயக்கங்களிலிருந்தும், தன்னை ஒரு எல்லைவரைக்கும், விடுவித்துக் கொண்டுள்ளது. உலக மக்கட்தொகை பெருக்கத்துக்கு, இது ஒரு வெளிப்படையான காரணம். ஆனால், இயற்கையின் அழிவுகளிலிருந்து நம்மை விலக்கிக் கொண்ட அளவிற்கு நாம் இயற்கையை நமது நுகர்வுக்காக அழிப்பதிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ளவில்லை, அல்லது விலக்கிக் கொள்ள முடியவில்லை. மேலும், இயற்கை அழிவிலிருந்து நம்மை விலக்கிக் கொண்ட அளவிற்கு, மனித விதைகள் முளைப்பதிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ளவில்லை. இதன் மூலம், இயற்கையின் சமநிலை குலைவிற்கு நாமே காரணமாயிருந்திருக்கிறோம்.

கட்டுப்பாடுகளற்ற மக்கட்தொகைப் பெருக்கத்தால் உயிரினங்களின் சமமின்மை ஒரு புறமிருக்க, மனித இனத்தின் நுகர்வும், அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நமது நுகர்வு, தேவைகளிலிருந்து ஆடம்பரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆம், நம் நுகர்வுக்கு அடிப்படைத் தேவை சக்தி – உபயோகப்படுத்தும் வடிவில் உள்ள சக்தி. நம் நுகர்வு, தேவையை அடிப்படையாக கொண்டிருக்குமானால், அந்த நுகர்வை நம்மால் தடுக்க முடியாது. அதற்கு தேவையான சக்தியை நாம் நிச்சயமாக பெற்றே ஆக வேண்டும் - அதனால் எந்த விளைவுகள் ஏற்பட்டாலும். அந்த விளைவுகள், பெரும்பாலும், இயற்கையால் சமன் செய்யக் கூடியதாகவே இருக்கும். ஆனால் நம் நுகர்வின் பெரும் பகுதி ஆடம்பரத்திற்காக மாறும்போது, உபயோக வடிவில் உள்ள சக்தியின் தேவையும் பல மடங்கு அதிகரிக்கிறது. அதன் எதிர் விளைவுகளை, பேரழிவுகள் இல்லாமல், இயற்கையால் சமன் செய்ய முடியுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி!

தற்போது உலக அளவில் மின் சக்தியின் பெரும்பகுதி நிலக்கரி(40%), எண்ணை(5%), இயற்கை வாயு(21%) மற்றும் கதிரியக்க அணுக்களின்(13.5%) மூலமே பெறப்படுகிறது. இது தவிர உலகின் இயங்கு சக்தியில் (வாகனங்கள்) பெரும் பகுதி எண்ணையிலிருந்து பெறப்படுகிறது. இந்த புள்ளி விபரம், நம் ஆடம்பரத்திற்காக நாம் எத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்தக் கூடியதாக இருக்கலாம். உலகின் நிலக்கரி இருப்பில் பெரும் பகுதி அடர்ந்த காடுகளிலேயே உள்ளது. அந்த நிலக்கரியை உபயோகப்படுத்த வேண்டுமானால், முதலில் செய்யப்படுவது, கரியமில வாயுவை உணவாக கொள்ளும் அந்த காடுகளை அழிப்பதே. பின்னர் நிலக்கரியை எரித்து, பெருமளவு கரியமில வாயுவை வெளியிட்டு, உபயேகப்படுத்தும் சக்தியாக்குகிறோம். காரியமில வாயுவை உண்ணும் காடுகளை அழித்ததன் மூலம், இயற்கையின் சமநிலையை உருவாக்கும் ஒரு காரணியை நாமே அழித்து விட்டோம்.

அடுத்தது அணு சக்தி. மிகவும் பாதுகாப்பான அணு உலைகள் வந்து விட்டன. இருப்பினும், மற்ற எந்த எந்திரங்களைப் போலவே அணுஉலையும் விபத்துக்கான ஒரு குறைந்தபட்ச நிகழ்வாய்ப்பு உள்ளதாகவே இருக்கும். அவ்வாறு எற்பட்டால் அந்த பகுதி அடுத்த சில பத்தாண்டுகளுக்கு எந்த உயிரினமும் வாழத் தகுதியற்றதாகி விடும். மேலும் கதிரியக்க அணுவிலிருந்து உபயோகப்படுத்தும் சக்தியை பிரித்தெடுத்த பின்னும், அந்த அணுக் கழிவுகள் நம்மால் உபயோகப்படுத்த முடியாத சக்தியை வெளியிட்டுக் கொண்டே இருக்கும். அணுக்கழிவு மேலாண்மையில் ஏற்படும் எந்த குளறுபடிகளும், அது வெளியிடும் உபயோகப்படுத்த முடியாத சக்தியின் மூலம் இயற்கையில் சமநிலையின்மையை உருவாக்கலாம்.


ஆக அன்றாடம் நம் தேவை மற்றும் ஆடம்பரத்திற்காக செலவிடும் சக்தியின் பெரும்பகுதி, இயற்கையின் சமன்நிலையை தொடர்ச்சியாக குலைத்துக் கொண்டு இருப்பதன் மூலமே பெறப்படுகிறது. நம் வாழ்க்கை இன்னும் அதிக பட்சம் 80 ஆண்டுகள் வரை இருக்கலாம். ஒருவேளை இந்த இயற்கையின் சமன்நிலை குலைவு நம் வாழ்க்கை முடியும்வரைக் கூட நம்மை விட்டு வைக்கலாம். ஆனால் ஒரு எல்லைக்கு மேல் இயற்கையின் சமன்நிலை குலைவை எந்த வழியிலாவது இயற்கை சமன் செய்தாக வேண்டும். அந்த சமன் செய்யும் இயக்கம், நம் வாழ்க்கை காலத்தில் இல்லாவிட்டாலும், மிக நெருங்கிய நம் சந்ததியினரின் காலத்தில் நிச்சயமாக ஏற்பட்டாக வேண்டும் – அந்த இயக்கம், உலகின் ஒரு பேரழிவாகவே இருக்க முடியும். ஆம், நம் சந்ததியினருக்கு நம் ஆடம்பரம் மற்றும் பேராசைகளின் மூலம் செல்வத்தை மட்டும் சேர்த்து வைக்கவில்லை. அவர்கள் அழிவையும் அவர்களுக்காக தினம் தோறும் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்!

நம்மால் என்ன செய்ய முடியும்? பொருள்களில் உள்ள சக்தியை உபயோகப்படுத்தும் வடிவிலுள்ள சக்தியாக மாற்றி, அதை மீண்டும் நுகரும் பொருளாக மாற்றி, நுகர்ந்து கொண்டிருப்பது நாமேதான் – நாமும் அங்கத்தினராக உள்ள நம் சமூகமத்தின் மூலம். சமூகத்தின் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள், அந்த சமூக மனத்தின் இச்சைகளை நிறைவேற்றுபவர்களாகவே இருக்க முடியும். அந்த சமூக மனத்தின் இச்சையை முடிவு செய்வது, சமூகத்தின் துளிகளாகிய நம் தனிமனங்களின் இச்சைகளே. நம் ஆடம்பரங்கள் மூலம் நம் சந்ததியினரின் அழிவை நாம் தினம் தோறும் சேமித்துக் கொண்டிருப்பதை உண்மையிலேயே நம்மால் உணர முடியுமானால், நம் மனதினுள், நம் ஆடம்பரத்தைக் குறித்து மிகப்பெரிய மாறுதல் ஒன்று நிகழக் கூடும். அந்த நிகழ்வு, அதன் வீரியத்தைப் பொறுத்து, சமூக மனதினுள் மாற்றத்தை உருவாக்கத் தொடங்கும். எந்த ஒரு மாற்றமும் தனி மனித மனதில் உருவாகிய பின்பே சமூக மனதினுள் மாற்றத்தை உருவாக்கத் தொடங்கும். அந்த சமூக மாற்றம் ஏற்பட சில ஆண்டுகளோ, சில பத்தாண்டுகளோ, சில நூற்றாண்டுகளோ அல்லது பேரழிவு ஏற்படும்வரையோ நாம் காத்திருக்க வேண்டியிருக்கலாம்!



Sunday, September 11, 2011

மன கட்டுப்பாடு, ஆன்மீகம்

‘மன இயக்கங்களை இல்லாமல் செய்வதே யோகம்’ – ‘யோகஸ் சித்த வ்ருத்தி நிரோத’ என்பது பதாஞ்சலி யோக சூத்த்திரத்தின் இரண்டாவது மற்றும் அதன் அடிப்படை நோக்கத்தை விளக்கும் சூத்திரம். மனத்தை அடக்குவது அல்லது மனம் அதுவாகவே அடஙகுவதன் மூலம் மட்டுமே மன இயக்கங்களை இல்லாமல் செய்ய முடியும்.


மன இயக்கங்களை இல்லாமல் செய்வதற்கு மன இயக்கங்களின் இயல்பை அறிந்து கொள்வது மிக அவசியம். இந்த அறிவு, நம் மனதை நாமே கூர்ந்து கவனிப்பது மற்றும் கவனப்பின் நீட்சியான அனுமானம் மூலம் மட்டுமே சாத்தியமாகலாம். மேலும் மனதை கட்டுப்படுத்துவது அல்லது அடக்குவது என்பதை விட மனம் தானாகவே கட்டுப்படுவது அல்லது அடங்குவது என்பதே மிகச்சரியான முறையாக இருக்கும்.



மனதை கட்டுப்படுத்துவது அல்லது அடக்குவது என்னும்போது அங்கு கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. கட்டுப்படுத்துவது அல்லது அடக்குவது என்னும் சொல்லினுள்ளேயே இருமை அடங்கியுள்ளது- கட்டுப்ப்படுத்தும் அமைப்பு மற்றும் கட்டுப்படும் பொருள்! ஆனால் நம்மிடம் இருப்பது நம் மனம் மட்டுமே. நம்மிடம் இருக்கும் அந்த ஒரே மனமே அந்த மனத்தை அடக்கவேண்டும் என விரும்புகிறது, அது தன்னைத்தானே அடக்க வேண்டும் என்று ஆணையிடுகிறது. அந்த விருப்பம் நிறைவேறாதபோது, அந்த ஆணை ஏற்றுக்கொள்ளப்படாதபோது அது தன்னைத்தானே வருத்திக் கொள்கிறது, தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்கிறது.

நாம் நம் மனதை அடக்க வேண்டும் என நினைக்கம்போதே நம் மனம் அதனை இரு பிரிவுகளாக பிரித்துக் கொள்கிறது - ஒரு பகுதி அலைபாய்ந்துக் கொண்டிருக்கும் மனம், மற்ற பகுதி அலைபாய்தலை அடக்க வேண்டும் என கருதும் மனம்! ஆக மனம் தனக்குள்ளேயே முரண்படுகிறது - எங்கெல்லாம் முரண்பாடு உள்ளதோ அங்கெல்லாம் சக்தி வீணாக்கப்படுகிறது. தனக்குள்ளே முரண்படும் மனதால் மன இயக்கங்களை நிறுத்த அல்லது குறைக்க இயலாது, அது மன இயக்கங்களை மேலும் அதிகரிக்கவே செய்யும் - மன வருத்த்தத்தை, துன்பத்தை உருவாக்குவதன் மூலம்! கடவுளை (கடவுள் என்னும் கருத்து எந்த அர்த்த்தத்தில் கூறப்பட்டிருந்தாலும்) அடைவதற்கு அல்லது வாழ்வில் முன்னேற, மனதை அடக்குவது மட்டுமே வழி என எங்காவது கூறப்பட்டிருந்தால், அந்த "அடக்குவது" என்பதன் சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்வது மிக முக்கியமானது.

ஆக, மனதை நம்மால் அடக்க முடியாது. ஆனால் மனதை, அது தானாகவே அடங்குமாறு , கட்டுப்படுமாறு செய்ய முடியும் - மனம் தன்னைத்தானே அறிவதன் மூலம். மனதினுள் ஒரே நேரத்தில் பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் - அவை நம் உணர்வுகளில் இருந்தாலும் இல்லாவிடிலும். இந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் மனதினுள் நினைவுத் தடங்களை விட்டுச் செல்லும். நாம் பெரும்பாலும் இந்த மன நிகழ்வுகள் நிகழும்போது அவற்றை அறிவதில்லை. அவ்வாறு அறிய நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிக அவசியம். ஆம், விழிப்புணர்வின் மூலம் மட்டுமே மனம் தானாகவே கட்டுப்படுமாறு செய்ய முடியும்.



விழிப்புணர்வு என்பது மனதின் இன்னொரு இயக்கமாக அல்லது நிகழ்வாக இருக்கலாம். அதாவது மனதின் ஒரு இயக்கம், மனதின் மற்ற அனைத்து இயக்கங்களையும் கவனித்துக் கொண்டிருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால் மனதின் மொத்த இயக்கத்தையும் மனம் அதனுள்ளேயே பிரதிபலிப்பதாகும்- மனம் அதனுள்ளே பிரதிபலிக்கும் மன இயக்கங்களின், நிகழ்வுகளின் மேல் விழிப்புடன் இருக்கிறோம். தற்போதையவாழ்க்கை முறையில் நம் விழிப்புணர்வை பெரும்பாலும் இழந்து விட்டிருக்கிறோம். நம் மன இயக்கங்களும் நிகழ்வுகளும் நம் மனதினுள் விட்டுச் சென்றுள்ள தடங்களை அல்லது நினைவுகளை  மட்டுமே நம் வாழ்வின் ஆதாரமாக கொண்டுள்ளோம். அதாவது நம் தற்போதைய வாழ்க்கை முறையின் காரணமாக மனம் அதன் நிகழ்வுகளை அதனுள்ளே பிரதிபலிப்பதில்லை.



மனம் தன்னைத்தானே கட்டுப்படச் செய்ய வேண்டுமென்றால், மனம் தன்னுள் நடக்கும் நிகழ்வுகளை கவனிப்பதற்காக ஒரு புது மன இயக்கத்தை உருவாக்க வேண்டும்- அந்த புது மன இயக்கமும் அந்த மனதினுள் நடைபெறும் ஒரு நிகழ்வு என்னும் விழிப்புணர்வோடு. நாம் தற்போதே சிறிதளவேனும் விழிப்புணர்வுடன் இருந்தால், அந்த விழிப்புணர்வுக்கு காரணமான மன இயக்கத்தின் ஆற்றலை கூட்ட வேண்டும். அனைத்து ஆன்மீக பயிற்சிகளும் இந்த குறிக்கோளை நோக்கியே வடிவமைக்கப்பட்டிருக்க கூடும்- நேரடியாகவோ, பிற குறியீடுகள் மூலமாகவோ!



நம் மன இயக்கங்களை நாம் கவனிக்கத் தொடங்கினால், மனதின் மிக வெளிப்படையான இயக்கங்களின் இயங்குமுறையை மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட மன இயக்கத்தை நம் மனம் கவனிக்கிறது என்பதை அந்த மனமே உணரும்போது, அந்த குறிப்பிட்ட மன இயக்கத்தின் ஆற்றல் உடனடியாக பெருமளவில் குறைந்து விடுகிறது. அந்த குறிப்பிட்ட மன இயக்கத்தை மனம் தொடர்ந்து கவனித்து வந்தால், அந்த குறிப்பிட்ட மன இயக்கமே இல்லாமல் அழிந்து விடுகிறது. அதாவது ஒரு நிகழ்வு நிகழும்போதே நம் மனம் அந்த நிகழ்வை உணர முடிந்தால், நம் மன இயக்கத்தின் மூலம் அந்நிகழ்வை நினைவாக சேமிக்க வேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம் அல்லது நினைவாக சேமிக்கத் தேவையான மன இயக்கத்திற்கு தேவைப்படும் ஆற்றல் மிகக் குறைவானதாக இருக்கலாம். அதாவது நாம் விழிப்புணர்வுடன் இருக்கும்போது, மன இயக்கங்களின் மூலம் வீணாக்கப் படும் மன ஆற்றலின் பெரும்பகுதி சேமிக்கப்படுகிறது.



நம் மனம், அதனுள் நிகழும் நிகழ்வுகளை, அதுவே உணரும்போது அல்லது பிரதிபலிக்கும்போது, அந்த மனதினுள் நிகழ்வுகள் தானாகவே கட்டுப்படுகிறது. இத்தகைய கட்டுப்படுதலில் உள்மன முரண்பாடுகளோ போராட்டங்களோ இல்லை. எல்லாவிதமான அடிப்படை ஆன்மிகப் பயிற்சிகளும் யோகப் பயிற்சிகளும் இந்த ஒற்றைக் குறிக்கோளை நோக்கியே இருக்கும் - அந்த குறிக்கோள் வெளிப்படையாக கூறப்பட்டாலும், கூறப்படாவிட்டாலும்!



Tuesday, August 23, 2011

போராட்டம், ஆன்மீகம்

போராட்டம் – இந்த வார்த்தை கடந்த சில நாட்களில் நம் கவனத்தை ஈர்க்கவில்லை என்றால், நாம் லொகீக வாழ்க்கை தளத்தில் இருப்பவர்களானால், நாம் சமூக அமைப்பினுள் வாழவே தகுதியற்றவர்கள் என்றே கருதுகிறேன். இது என் தனிப்பட்ட கருத்து – என் சிந்தனையின், உணர்வுகளின் அடிப்படையில்.

ஊழலுக்கு எதிரான போராட்டம், எந்த ஒரு இரண்டாவது மனிதனுக்கும் எதிரான போராட்டமாக இருக்க முடியாது. அது நமக்குள் இருக்கும் ஊழல்வாதிக்கு எதிரான போராட்டமே. ஆம், நம் ஒவ்வொருவருக்குள்ளும், ஊழலுக்கு அடிப்படை காரணிகளான, பேராசை மற்றும் வன்முறை நிறைந்துள்ளது. நமது சுயமைய பார்வையே நமக்குள் நீக்கமற நிறைந்திருக்கும் பேராசையையும் வன்முறையையும் நம்மால் உணரமுடியாதபடிச் செய்கிறது. நம் மனதினுள் உள்ள பேராசையும், வன்முறையும் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் அமையுமானால், நாம் கூட, பெரும் ஊழல்வாதிகள் என நம்மால் அடையாளம் காணப்பட்டவர்களை விடவும், ஊழலில் எந்த விதத்திலும் சளைத்தவர்களாக இருக்க மாட்டோம் என்பதே நிதர்சனம்.

ஆக, இந்தப் போராட்டம் நமக்குள் இருக்கும், சமூக வாழ்க்கையை சுமூகமாக எடுத்துச் செல்ல தடைகளாக இருக்கும் நம் சொந்த மன இயக்கங்களுக்கு எதிரான போராட்டம். ஆம், இது அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் நமக்குள் அந்தரங்கமாக நடத்த வேண்டிய போராட்டம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அத்தகைய உள்மனப் போராட்டத்தை, உள்மனப் புரட்சியை உருவாக்க இயலாதவர்களாக நாம் இருக்கிறோம். ஆகவே சமூக வாழ்க்கையில் நம் மனதைக் கட்டுப்படுத்த, சமூகத் தளத்தில் செயல்படும் ஒரு சட்ட திட்டம் தேவையாக இருக்கிறது. இப்போதைய சமூகப்புரட்சி, தம் மனதை தாமே கட்டுப்படுத்த இயலாதவர்கள், சமூகத் தளத்தில் இயங்கும்போது, அவர்கள் மனதிலிருந்து பேராசை மற்றும் வன்முறைகள் வெளிப்பட்டு, நம் சமூகத்தின் சமன்நிலையைப் பாதிக்காதவாறு இருப்பதற்கு தேவையான சட்டதிட்டங்களை உருவாக்கும் கோரிக்கையையே முன் வைத்துள்ளது. ஆக, சமூகத்தினுள் புழங்கும் ஒவ்வொருவருக்கும், அவர்கள் மனதின் விரும்பத்தகாத இயக்கங்களை வெளிப்படையாக கட்டுப்படுத்தும் நோக்கமுள்ள இந்தப்புரட்சியை முன்நகர்த்தி செல்லவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் – நாம் சமன்நிலை குலையாத சமூக வாழ்க்கையை விரும்பினால்.

ஆன்மீகம் என்பது உணர்வின் உச்ச நிலையை நோக்கிச் செல்வது. எந்த ஒரு மனப் போராட்டமும், மனக் கட்டுப்பாடும் நம் உணர்திறனை அழிக்கும் இயல்புடையவை. ஆக போராட்டங்களும், கட்டுப்பாடுகளும் நம் ஆன்மீகத்தன்மையை அழிக்கும் மிக இயல்பான காரணங்கள். இங்கு போராட்டம் அல்லது கட்டுப்பாடு என்பது நம் மனப்போராட்டங்களையும் மனக்கட்டுப்பாடுகளையுமே குறிக்கிறது. ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள பலர் லொகீக வாழ்க்கையை துறப்பதற்கான காரணம் இதுவாகவே இருக்கக்
கூடும் – கட்டுப்பாடுகளற்ற, போராட்டங்களற்ற வாழ்க்கையை வாழ்வதற்காக.

லொகீக வாழ்க்கையில் இருந்து கொண்டே நம்மால் கட்டுப்பாடுகளற்ற, போராட்டங்களற்ற வாழ்க்கையை வாழ முடியுமா? முடியும் என்பதே பொருத்தமான பதிலாக இருக்க முடியும். ஆனால் அதற்கான முயற்சி நம்மிடம் இருக்க வேண்டும். நம் மனம், பலவிதமான இயக்கங்களால் ஆனது. இந்த மன இயக்கங்களின் வீரியம் நம் தனிப்பட்ட இயல்பைப் பொறுத்த்து. சில மன இயக்கங்கள் மிகுந்த வீரியத்துடனும் மற்றவை சாதாரணமாகவும் இருக்கலாம். சில மன இயக்கங்கள் நம் வாழ்க்கையை சமூகத் தளத்தில் ஒத்திசைவுடன் செலுத்துவதாக இருக்கலாம், மற்றும் சில இயக்கங்கள் சமூகத் தளத்தில் முரண்பட்டு செல்பவையாக இருக்கலாம். இவ்வாறு சமூகத்தளத்தில் முரண்படும் இயக்கங்களே நம் மனப்போராட்டங்களுக்கும், சமூக இயக்கங்களிலிருந்து நாம் முரண்படுவதற்கும் அடிப்படை காரணி. நாம் சமூகத் தளத்தில் இயங்க வேண்டும் என்றால், இந்த முரண்படும் இயக்கங்களைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம். அந்த கட்டுப்பாடு தேவைப்படும் மன இயக்கங்கள், கட்டுப்படுத்தப்பட்டாக வேண்டும் – நம்மால் கட்டுப்படுத்த இயலாவிட்டால், சமூக அமைப்பு கட்டுப்படுத்தியாக வேண்டும், சமூகத்தினுள் அதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டாக வேண்டும்.

நம் மனம் நம்மால் கட்டுப்படுத்தப்பட்டாலும், சமூக அமைப்பால் கட்டுப்படுத்தப் பட்டாலும், அங்கு தனிமனித விடுதலை இழக்கப்பட்டு விடுகிறது. இது சமூக அமைப்பின் கட்டாயம். அதாவது, நம் மன இயக்கங்கள், சமூக இயக்கத்திற்கு முரண்படும்போது அந்த முரண்பாட்டை இல்லாமல் செய்வது, அந்த சமூகத்தின் இருப்புக்கு இன்றியமையாதது. ஒரு தனிமனிதனாக, அந்த முரண்பாட்டை நம்மால் உணரமுடியுமானால், அத்தகைய முரண்படும் மன இயக்கங்களின் மூலம் வீணாகும் உளவியல் சக்தியை ஆக்கப் பூர்வமான வழிகளில் திருப்ப முடியும். ஒருவேளை இத்தகைய திருப்புதல் நமக்குள் சாத்தியமானால், நம் ஆன்மீக சக்தி நமக்குள் பிரவாகமாகப் பெருக சாத்தியமுள்ளது – நம் உணர்திறன் பலமடங்குகள் அதிகரிப்பதன் மூலம்.

நம் சமூகத்துடனான ஒத்திசைவு அல்லது முரண்பாடுகள் குறித்து நாம் முழுமையாக அறிய வேண்டுமானால், அந்த சமூகத்துடனான நமது உறவு மிக ஆழமாக இருக்க வேண்டும் – அதாவது அந்த சமூகத்துடனான நமது உறவுகள் மற்றும் தொடர்புகள் குறித்த ஆழமான புரிதல் இருந்தாக வேண்டும். சமூகத்துடனான நமது உறவுகளின் புரிதல் இல்லாமல், அல்லது அந்த சமூகத்திலிருந்து நம்மை விலக்கிக் கொண்டு, அந்த சமூகத்தின் முரண்பாடுகளைப் பற்றி நிச்சயமாக நம்மால் உணரமுடியாது – அத்தகைய சமூக விலக்கத்துடன் இருப்பவர்காளால் உருவாக்கி பரப்ப படும் கருத்துக்களையும் மிக கவனத்துடன் கையாள வேண்டும். இத்தகைய கருத்துக்கள் நம் உணர்திறனை இழக்கச் செய்யலாம் – நமது சமூகத்துடனான உறவுகளை, நம் பார்வையிலிருந்து மறைப்பதன் மூலம்!

Friday, August 12, 2011

தர்க்க புத்தியும்(Logical Mind), ஆன்மீகமும்.

தர்க்க புத்தி ஆன்மீக வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒரு கருவி, ஆனால் அதன் எல்லைகளை மீறினால், ஆன்மீக வளர்ச்சிக்கு தடைகல்லாகவும் மாறக்கூடும். தர்க்க புத்தி என்பது, நாம் பெற்ற வாழ்வியல் அறிவை நம் பொருளியல் மற்றும் தத்துவ சிக்கல்களிலிருந்து விடுபட உபயோகிப்பதாகும். ஆன்மீகம், நம் உணர்வின் உச்சத்தை, வாழ்வின் எல்லையை நோக்கி பயணிப்பதாகும். ஒரு எல்லைக்கு மேல் தர்க்க புத்தியும், உணர்வுகளும் ஒன்றை ஒன்று முரண்பட்டு நம் சமநிலையை குலையச் செய்யலாம் – அந்த எல்லை தனிமனித இயல்பை பொறுத்த்து. ஆக நம் வாழ்வின் சமநிலையை உறுதி செய்ய, நம் இயல்பில், தர்க்க புத்தி மற்றும் உணர்வுகளின் இடத்தை அறிந்து, அதற்கான இடத்தை உறுதி செய்வது மிக அவசியம்.

நம் வாழ்க்கை, சமூகத்தால் காலம் காலமாக நம் மேல் சுமத்தப் பட்ட நம்பிக்கைள், சடங்குகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை அடித்தளமாக கொண்டு இயங்குகிறது. இந்த நம்பிக்கைளும், சடங்குகளும், அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்ட திட்டங்களும், நம் வாழ்க்கையின் பெரும்பாலான தளங்களில் முன்முடிவுகளை நமக்கு அளித்து அந்த முன்முடிவுகளின் அடிப்படையில் நம் வாழ்க்கையை இயக்குகிறது. நம் வாழ்க்கையின் எந்தெந்த தளங்களில் முன்முடிவை அனுமதிக்கிறோமோ, அந்த தளங்களில் வாழ்வின் நிதர்சனத்தை தவற விட்டு விடுகிறோம். வாழ்வின் நிதர்சனம் நம் கவனத்தினுள் வரவில்லையெனில் வாழ்வின்\ வாழும் உணர்வை இழந்து விடுகிறோம். நம் வாழ்வை நம்மால் உணர முடியவில்லை எனில், உண்மையில் நாம் வாழவில்லை – முடுக்கி விட்ட இயந்திரத்தைப் போல் இயங்கிக்கொண்டிருக்கிறோம். ஆம், நமது நம்பிக்கைகளும், சடங்குகளும், கட்டுப்பாடுகளும் நம்மை உயிருள்ள இயந்திரங்களாக மாற்றி விடுகின்றன.

நம்பிக்கைகளை முற்றாக மறுத்து, அதற்கு எதிராக நம்பிக்கையின்மை என்னும் கருத்தை முன் வைப்பதும் ஒரு நம்பிக்கையே. சடங்குகளை முற்றாக மறுத்து, கைவிட்டு செல்வதும் இன்னொரு நம்பிக்கையே. இந்த நம்பிக்கை மற்றும் எதிர் நம்பிக்கைகளால் நம் வாழ்விற்கு எந்த நன்மையும் கிடையாது. அவை இரண்டினாலும் இயந்திரத் தனமான இயக்கத்திலிருந்து நம் வாழ்க்கையை மீட்டெடுக்க இயலாது.

நம் வாழ்க்கையை இயந்திதிரத்தனமான இயக்கத்திலிருந்து மீட்டெடுக்க நம் உணர்வுத் திறனை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். நமது நம்பிக்கைகளின் விளைவாக நாம் கொள்ளும் முன்முடிவுகளும், அந்த முன்முடிவுகளைச் சார்ந்த கற்பனைகளும் மன இயக்கங்களும் நம் செயல்களின் விளைவை உணர இயலாதவாறு நம் உணர்திறனை மழுங்கச் செய்கிறது. நாம் குழந்தைகளாக இருந்த்துவரை நம் வாழ்க்கை உணர்வுகளால் மட்டுமே இயக்கப் பட்டிருந்திருக்கும். ஆனால் வழ்வின் போராட்டங்களால், அந்த போராட்டங்களை சரியான முறையில் எதிர்கொள்ள முடியாத இயலாமையால், நம் உணர்வுத் திறனை சிறுக சிறுக இழந்து, இயந்திரத்தனமான வாழ்க்கை முறைக்குள் நம்மை முழுவதும் இழந்துவிட்டிருக்கிறோம்.

இந்த இயந்திரத் தனமான வாழ்க்கையிலிருந்து நம்மை மீட்டெடுக்க நம்மிடம் இயற்கையாகவே உள்ள முதல் கருவி தர்க்க புத்தியாகும். தர்க்க புத்தியால் மட்டுமே நம் வாழ்வின் போராட்டங்களை சரியான முறையில்
எதிர்கொள்வதற்கான திறனை நமக்கு அளிக்க முடியும். தர்க்கபுத்திக்கு அடிப்படைத் தேவை அறிவு. ஆக நாம் எந்தெந்த தளங்களில் அறிவு பெற்றிருக்கிறோமோ அந்த தளங்களில் மட்டுமே தர்க்க புத்தியை உபயோகிக்க முடியும். நாம் அறிவு பெறாத தளங்களில் தர்க்க புத்தியை உபயோகித்தால், அந்த தர்க்கமும் முன்முடிவை சார்ந்தே இருக்கும் – அத்தகைய தர்க்கம் வெறும் கற்பனையே. ஆக நம்மால் இயலும் தர்க்கத்தின் எல்லையை அறிய, நம் அறிவு குறித்த உணர்வு இன்றியமையாதது. தர்க்கத்தின் தேவை உள்ள நம் வாழ்வின் தளங்களில், நம் அறிவை மேம்படுத்துவதும் இன்றியமையாதது. ஆக நமக்குத் தேவை அறிவைப் பெறுவதற்கான உபரி உழைப்பு. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, நாம் உண்மையிலேயே விரும்பினால், இயந்திரமயமாக்கப்பட்ட, கணினி மயமாக்கப்பட்ட நம் வாழ்க்கை அமைப்பில், உபரி உழைப்புக்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளது.

தர்க்க புத்தியின் தேவை தனிமனித உளவியல் இயல்பிற்கேற்ப மாறுபடும். இதன் தேவை நம் தேடுதல்களின் வீச்சைப் பொறுத்தது. நம் தேடுதலின் வீச்சைப் பொறுத்து, நம் மனதினுள் முடிச்சுகள் உருவாகிக் கொண்டிருக்கும். அந்த முடிச்சுகளை அவிழ்த்து விட்டு நம் தேடுதலைத் தொடர்ந்தால் நாம் ஆன்மீகத்தை நோக்கி மேலும் பயணிக்க முடியும். ஆனால் அந்த முடிச்சுகளை நம்பிக்கைகள் மற்றும் முன்முடிவுகள் மூலம் மறைத்து முன்னோக்கி சென்றால், பெரும்பாலும் நம்மால் உண்மையை உணர முடிவதில்லை – நம் நம்பிக்கைகளால் முடிவு செய்தவற்றையே நம்மால் அடையமுடியும்.

வாழ்க்கையை அநுபவிப்பது என்பது, நாம் வாழும் ஒவ்வொரு கணத்திலும் நம்முள் நிகழும் நிகழ்வுகளை உணர்வதாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் நம் உணர்திறன் மழுங்கடிக்கப் பட்டிருப்பதால், பெரும்பாலும் வாழ்வு நடைபெறும் கணத்தில் நம்மால் வாழ்வை உணர முடிவதில்லை. வாழ்க்கையை நாம் நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து மட்டுமே வாழ்ந்து கொண்டுருக்கிறோம். அவ்வாறு நினைவுகளிலிருந்து மீட்டெடுத்த வாழ்க்கையின் கற்பனையில் திளைக்கும்போது, அந்த கணத்தில் நடைபெறும் வாழ்க்கையையும் தவற விட்டு விடுகிறோம். ஆக நாம் வாழும் வாழ்க்கை என்பது நம் நினைவுகளில் நாம் சேமித்து வைத்துள்ள வாழ்க்கையின் ஒரு சிறிய துளி மட்டுமே. வாழ்வின் பெரும் பகுதியை, நம் உணர்திறன் மழுங்கடிக்கப் பட்டிருப்பதால், அநுபவிக்க முடியாமல் இழந்து விடுகிறோம்.

ஆக நம் வாழ்க்கையை நாம் அநுபவிக்க வேண்டுமானால், நம் உணர்திறனை நாம் திரும்ப பெற்றாக வேண்டும். அதற்கு, நம் உணர்வுத் திறனை இல்லாமல் செய்யும் காரணிகளை கண்டறிந்து அவற்றை களைய வேண்டும். உணர்திறனை அதிகரிக்கச் செய்ய பல வழிகள் இருக்கலாம். ஆனால் உணர்திறனை மழுங்கடிக்கும் காரணிகளை வெல்ல தர்க்க புத்தியால் மட்டுமே முடியும்.


நம் தர்க்க புத்தியின் மூலம் நம் உணர்திறனை திரும்பப்பெற முடியுமானால், நம் ஆன்மீக வாழ்க்கையில் – உணர்வுகளின் உச்சத்தை நோக்கிய நம் வாழ்க்கை பயணத்தில், மிகப்பெரிய முன்நகர்வை உணர முடியும். ஆனால் தர்க்க புத்தியின் எல்லைகளை அறிந்திருப்பதும் மிக அவசியம். அந்த எல்லையை தவற விட்டால், தர்க்கபுத்தி நம் உணர்வுகளை உடைத்து, அழித்து இயந்திரத் தனமான வாழ்க்கையில் மறுபடியும் நம்மை தூக்கி எறிந்து விடலாம்!

Saturday, August 6, 2011

மனித பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம்

பல கோடி ஆண்டுகளில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியின் காரணமாக, ஒரு செல் உயிரினத்திலிருந்து, இன்றைய மனிதனாக நாம் உருவெடுத்திருக்கிறோம். பல ஆயிரம் (அல்லது சில லட்சம்) ஆண்டுகளாக உருவமும் சிந்தனையும் வளர்ச்சியடைந்து, இன்றைய மனிதனாக வளர்ச்சி அடைந்திருக்கிறோம். இந்த பரிமாண வளர்ச்சியின் வேகத்தையும் திசையையும் ஒரளவேனும் நம்மால் அனுமானிக்க முடிந்தால், ஒருவேளை பரிணாம வளர்ச்சியின் இன்னொரு முக்கியமான காலகட்டத்தில் நாம் இருந்துகொண்டிருப்பதையும் நம்மால் உணர முடியலாம். அந்த விழிப்புணர்வு நமக்கு கிட்க்கப்பெற்றால், அத்தகைய பரிணாம வளர்ச்சிக்கான கிரியா ஊக்கியாக கூட நம்மால் மாற முடியலாம்.

ஒரு காலகட்டத்தில், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மனித சிந்தனையின் ஒரு தளம் அன்றாட வாழ்வியல் என்பதிலிருந்து, வாழ்வின் தோற்றம் மற்றும் முடிவு என்பதை குறித்து திரும்பியிருக்க வேண்டும். ஆம், ஆன்மீகம் என்னும் சிந்தனைத் தளம் அப்போதுதான் தோன்றியிருக்க கூடும் – இங்கு ஆன்மீகம் என்பது, சுயம் நோக்கிய சிந்தனைத் தளத்தை மட்டும், இன்றைய லௌகீகம் சார்ந்த சடங்குகளையும் கடவுள் என்னும் கருத்தையும் புறந்தள்ளியே குறிப்பிடப் பட்டுள்ளது.

தற்போதைய இந்தியாவில், வேத காலகட்டம் சமார் ஐந்து முதல் எட்டு ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது என்று கணிக்கப் படுகிறது. கிறிஸ்தவ, முஸ்லீம் மதங்ங்களுக்கு முன்பு எகிப்து, கிரேக்க நாடுகளில், தத்துவம் சார்ந்த மதங்கள் இருந்துள்ளன. ஆக ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மனிதனின் தேடல் உள்நோக்கி திரும்பி இருக்கிறது. இந்த தேடுதலின் தொடர்ச்சியே வேதம், உபநிஷதம் மற்றும் பல தத்துவ தரிசனங்களையும் நமக்கு அளித்திருக்க வேண்டும். இந்த தேடுதலின் விளைவாக ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் அந்த தேடுதலின் முழுமையை அல்லது முழுமையின் அருகாமையை அடைந்துள்ளனர். ஆக மனித மனம் முழுமையை அடைவது என்பது ஒரு கற்பனை அல்ல – அது ஒரு உண்மை. இந்த உண்மையை, கடந்த ஐந்தாயிரம் வருட மனித வரலாற்றிலும், நிகழ்காலத்திலும் பல உதாரணங்களை நம்மால் காண முடியும். எனவே முழுமையை நோக்கி நகர்வதே மனித இன பரிமாண வளர்ச்சியின் அடுத்த கட்டமாக இருக்க முடியும்.

இங்கு கவனிக்கப்பட வேண்டியது, மனித இனத்தை முழுவதுமாக பார்க்கும்போது, நாம் தேடலை தொடங்கி ஐந்தாயிரம் வருடங்களுக்கு பின்னும், அந்த தேடலின் முழுமையை அடையாமல் இருக்கிறோம் – மிக மிக குறைந்த பட்ச மனிதர்களால் மட்டுமே முழுமையை அடைய முடிந்துள்ளது. இதற்கு காரணம், அத்தகைய பரிணாம வளர்ச்சிக்கான காரணிகள் போதுமான அளவிற்கு இல்லாமல் இருக்கலாம் அல்லது, மனித இனத்தின் அடிப்படை இருப்புக்கான (existence) போராட்டம், அந்த பரிணாம வளர்ச்சியை அடைய முடியாமல் செய்திருக்கலாம்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், பரிணாம வளர்ச்சி மரபணுக்கள் மூலம் மட்டுமே அடுத்த சந்ததிகளுக்கு எடுத்துச் செல்லப்படும். தற்போதைய காலகட்டத்தில், முழுமையை நோக்கிய தேடுதல் உள்ளவர்கள் அல்லது முழுமையை அடைந்தவர்கள் பெரும்பாலும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதில்லை. அவ்வாறு ஈடுபட்டாலும், அந்த தேடுதலின் பாதிப்பு மரபணுக்களில் ஏற்படும் முன்பே இனப்பெருக்கம் முடிந்து விடுகிறது. ஆக முழுமையை நோக்கிய மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்ல இயலாமல் தேங்கி இருக்கிறது.

பரிணாம வளர்ச்சி பெரும்பாலும், அந்த வளர்ச்சி தொடங்கும் புள்ளியிலிருந்து இரண்டு கிளைகளாக பிரிந்து செல்லும். ஒரு கிளை தற்போதைய இருப்பின் தொடர்ச்சியாக இருக்கும். இன்னொரு கிளை பரிணாம வளர்ச்சியடைந்து புதிய இனமாக பரிணமிக்கும். மனித இனத்தில், முழுமையை நோக்கிய பரிணாம வளர்ச்சி சாத்தியமானால், அத்தகைய சாத்தியக்கூறு, தற்போதைய உலகில் வேறு எப்போதையும் விட மிக அதிகமாக உள்ளது.

உலகின் பெரும்பாலான இடங்களில் நமக்கு முந்தைய தலைமுறைவரை அல்லது தொழில் முறைகளில் மிக வளர்ச்சியடைந்துள்ள உலக பாகங்களில் அதற்கும் முந்தைய தலைமுறைவரை, மனித உழைப்பின் பெரும் பகுதி, மனிதனின் அன்றாட பிழைத்தலுக்கும், பாதுகாப்புக்கும் மட்டுமே செலவிடப்பட வேண்டியிருந்தது. ஆனால் இன்றைய நிலை முற்றிலும் வேறானது. நமது உடல் உழைப்பு பெரும்பாலும் இயந்திர மயமாக்கப் பட்டுள்ளது. நம் மூளையின் உழைப்பு பெரும்பாலும் கணினி மயமாக்கப் பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் நமது உழைப்பு என்பது பெரும்பாலும் இயந்திரம் அல்லது கணினியை கட்டமைப்பது மற்றும் இயக்குவது மட்டுமே. ஆக நாம் மனித இனத்தின் இன்றைய காலகட்டம்வரை, மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் மூலம் பெற்ற சக்தி, அதன் இயக்கத்தின் திசையை நோக்கி, பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை எதிர்பார்த்து, நம்மிடம் காத்துக் கொண்டிருக்கிறது.

முன் எப்போதும் இல்லாத அளவில், நம் வாழ்க்கையின் அன்றாட பிழைத்தலுக்கு தேவையான சக்தியை விட உபரி சக்தி நம்மிடம் இருப்பதன் மூலம், நாம் விரும்பினால், முழுமையை நோக்கிய தேடுதலுக்கான சாத்தியங்களுடன் இருக்கிறோம். ஒன்று மட்டும் நிதர்சனம். நம் உபரி சக்தியை நாம் நிச்சயமாக செலவழித்தாக வேண்டும். இதைத் தவிர நமக்கு வேறு வழியே இல்லை. அவ்வாறு செலவழிப்பதற்கும் இரண்டு சாத்தியங்கள் மட்டுமே இருக்க முடியும் – நம் முழுமையை நோக்கிய தேடுதலுக்காக, முழுமையை நோக்கிய பரிணாம வளர்ச்சிக்காக செலவழிக்கலாம் அல்லது பொழுது போக்கிற்காக செலவழிக்கலாம். இது இரண்டையும் தவிர வேறு சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. படைப்பூக்கத்துடன் (creativity) செலவிடப்படும் உபரி சக்தி, நம் முழுமையை நோக்கிய தேடுதலைச் சார்ந்து இருக்கும். படைப்பூக்கம் இல்லாமல் செலவிடப்படும் உபரி சக்தி, நமது பொழுது போக்கிற்கு மட்டும் செலவிடப்படுவதாகும்.

மேலே கூறப்பட்டவை சாத்தியம் என்றால், பரிணாம வளர்ச்சியில் நம் பங்களிப்புக்கும் இரண்டு சாத்தியக்கூறுகள் உள்ளன – நாம் முழுமையை நோக்கி நகர்ந்து, பரிணாம வளர்ச்சியடைந்து புதிய மனித இனத்திற்கு முன்னோடியாக இருக்கலாம், அல்லது தற்போதைய மனித இனத்தின் நீட்சியாக, மனித வரலாற்றில் காணப்படும் மனித இனத்தின் ஏற்றத் தாழ்வுகளுடனும் இன்ப துன்பங்களுடனும், மனித இனத் தொடர்ச் சங்கிலியின் ஒரு கண்ணியாக இருக்கலாம்.


பி.கு; அரவிந்தர் மற்றும் ஜே. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் தரிசனங்களில் இந்த கருத்து, அவர்களின் தனித்தன்மைக்கேற்ப கூறப்பட்டிருப்பதை காணலாம்.

Sunday, July 31, 2011

செல்வம், பணம்

சமுதாய அமைப்பினுள் வாழும்போது, நம் வாழ்க்கைக்கு மிக மிகத் தேவையான, ஆனால் மிக மிக அதிகமாக நம் உளவியல் சக்தியை விரயம் செய்விக்கும் ஒரு கருத்து செல்வம் அல்லது பணம் என்னும் கருத்து ஆகும். ஆனால், அந்த இன்றியமையாத, அதேநேரத்தில் நம் உளவியல் சக்தியை விரயம் செய்வதன் மூலம் நம் வாழ்க்கையை வாழ்வு என்பதன் உண்மையான அர்த்தத்தில் நாம் வாழ்வதிலிருந்து நம்மைப் பிறழச்செய்யும் பணத்தைக் குறித்த அறிவு, நம்மில் பெரும்பாலானவர்க்கு, மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது, இங்கு பணத்தைக் குறித்த அறிவு என்பது, சமூக அமைப்பில் பணத்தின் பங்கு, நம் வாழ்க்கையில் பணத்தின் சரியான பயன்பாடு, பணம் குறித்த நம் உளவியல் தேவைகள் என்பனவாகும்- மிக முக்கியமாக, உளவியல் தேவைகள். பணம் குறித்த இந்த அடிப்படை அறிவு நமக்கு கிடைக்கப்பெற்றால், ஒருவேளை பணத்தைக் குறித்த உளவியல் செயல் பாடுகள் மூலம் நம் உளவியல் சக்தி விரயமாவதை ஓரளவேனும் தடுக்க முடியலாம்.

முதலில் பணத்தின் பொருளியல் பயன்பாடு. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, நம் தேவைகளை முடிவு செய்வது நாமாக இருப்பதில்லை. நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களே நமது தேவைகளை பெரும்பாலும் முடிவு செய்பவர்களாக இருக்கிறார்கள் - நம் உளவியல் தேவைகளை தூண்டுவதன் மூலம். ஆக நமது தேவைகளை நாமே முடிவு செய்வதற்கான குறைந்த பட்ச அறிவும் விழிப்புணர்வும் கூட இல்லாமல் இருக்கிறோம். பொருளியல் தேவைகளைக் குறித்த அறிவை நாம் பிறரிடமிருந்து பெறலாம். ஆனால் அந்த தேவையை முடிவு செய்வது நாமாக மட்டுமே இருக்கவேண்டும். அதற்கு பிறரால் ஏற்படுத்தப் பட்ட உளவியல் தாக்கங்கள், நம் தேவையை முடிவு செய்யாத வகையில், நம் மனதின் செயல்பாடுகளைப்பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிக அவசியம். பணத்தின் பொருளியல் பயன்பாடு என்பது, நமக்குத் தேவையென நம்மால் முடிவுச் செய்யப்பட்ட தேவைகளை அடைவதாக மட்டுமே இருக்க முடியும். இந்தத் தேவைகள் பொதுமைப் படுத்த முடியாதவை- தனி மனித இயல்பை சார்ந்தது. ஆக நமது தேவை என்பது நமது இயல்பு, நமது சூழலுடன் இயைந்து செல்வதற்கான பொருளியல் தன்மைகளை உருவாக்குவது அல்லது அடைவதாகும்.

ஒரு சமூகச் சூழலில், நமது பொருளியல் தேவைகளை நமது உழைப்பால் மட்டும் உருவாக்குவது என்பது இயலாதது. நமது தேவைகளை சமூகத்தின் பல நிலைகளில் உள்ள பலரின் உழைப்பின் மூலம் மட்டுமே பெற முடியும். நமது உழைப்பின் பகுதியை மற்றவர்களுக்கு வழங்கியும், மற்றவர்களின் உழைப்பின் பகுதியை பெற்றும் நம் பொருளியல் தேவைகளை நிவர்த்தி செய்கிறோம். ஆக நாம் சமூகத்திற்கு அளிக்கும் உழைப்பையும், சமூகத்திலிருந்து பெறும் உழைப்பையும் அளவிட வேண்டியது அவசியமாகிறது. இந்த அளவீடே பணம் என்னும் கருத்தாகும். ஆக நாம், நமது உழைப்பையே பணமாக சேமிக்கிறோம் – நமது உழைப்பை சேமிக்கும்போது அது நேர்மையான சம்பாத்யம், பிறர் உழைப்பைச் சுரண்டி சேமிக்கும்போதி அநியாய சம்பாத்யம்.


நாம் எந்த அளவுக்கு நமது உழைப்பை சேமிக்க வேண்டும்? அது நமது தனிப்பட்ட தேவைகளைப் பொறுத்தது. ஆனால், நம் உழைப்பின் தேவையை நாம் மதிப்பிட வேண்டுமானால், நம் தேவைகளைக் குறித்த விழிப்புணர்வு மிக அவசியம். விழிப்புணர்வு என்பது, நமது மற்றும் நமது சந்ததியின் தேவைகள் என நம் மனம் உருவாக்கும் கற்பனைகள் அல்ல – கற்பனை என்பது வெறும் மன பிம்பங்களே, அவை ஒருபோதும் நமது தேவைகளாக இருக்க முடியாது. நமது இயல்பு மற்றும் சமூகக் கடமைகளை மனம் உணரும்போது, மனதால் நமது தேவைகளையும் உணர முடியும். நமது தேவை என்பது நம் மனம் அதன் கற்பனைத் திறனால் உருவாக்கும் தேவைகள் அல்ல, ஆனால் மனம் உணரும் தேவைகள் – மனதின் கற்பனைக்கும், மனதின் உணர்வுக்கும் இடையான வித்தியாசத்தை நம்மால் அறிய முடிந்தால் மட்டுமே நம்மால் நமது உண்மையான தேவைகளை அறிந்து கொள்ள முடியும். ஆக நம் வாழ்வின் அடிப்படையை, வாழும் முறையை அறிந்து கொள்ளவே பெரும் உழைப்பு தேவைப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் நாம் உழைப்பை சேமிப்பதற்காகவே உழைக்கிறோம், வாழ்க்கையை வாழ்வதற்காக உழைக்கவில்லை – வாழ்க்கையை, வாழும் முறையை, அறிந்தால் மட்டுமே நம்மால் நம் வாழ்க்கையை வாழ முடியும்.

ஆம், நம் உயிர்ப் பிழைத்தலுக்கு தேவையான உழைப்பைத் தவிர உள்ள உபரி உழைப்பினை மட்டுமே சேமிப்பு அல்லது வாழ்க்கையை அறிதலுக்கு பயன்படுத்த முடியும். ஆனால், இங்கு நாம் என்று பொதுவாக கூறப்பட்டிருப்பது கற்றவர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் நம்மைப் போன்றவர்கள், தங்கள் எளிய உழைப்பினால் மட்டுமே கூட உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். இத்தகைய நாம், நமது உபரி உழைப்பின் சிறு பகுதியைக் கூட நமது சொந்த வாழ்க்கையைக் குறித்து கூட அறிந்து கொள்ளச் செலவிடாமல், மனதால் கற்பனை மூலம் உருவாக்கப் படும் தேவைகளுக்காக சேமித்துக் கொண்டே இருக்கிறோம். ஆக நம் உயிர் பிரியும் தருணம்வரை நம் தேவைகளும் பூர்த்தி ஆவதில்லை, நம் உழைப்பிலிருந்து நமக்கு விடுதலையும் இல்லை.

நாம் இறக்கும் தருணம்வரை நம் வாழ்க்கையைக் குறித்து அறிந்து கொள்ளாமலே, எனவே நம் வாழ்க்கையை வாழாமலே நாம் இறந்து விட தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஆக நம் வாழ்க்கையை அறிந்து கொள்ளத் தேவையான உபரி உழைப்பையும் நம் கற்பனையில் உருவான தேவைகளை அடைவதற்காகவே சேமித்து, நம் வாழ்க்கையையும் கற்பனையிலேயே வாழ்ந்து முடித்துக் கொண்டிருக்கிறோம். உபரி உழைப்பை நம் வாழ்விற்காக செலவிடாமல் பணமாக, செல்வமாக, பொருளாக, நம் இறுதிவரை சேமித்துக் கொண்டே இருக்கிறோம்.

ஆக நம் மனம் உணரும் தேவைகளுக்காக செலவிடப்படும் பணம் அல்லது உழைப்பு, நம் பொருளியல் தேவைகளுக்காகச் செலவிடப்படுவதாகும். இந்த செலவிடுதல், தவிர்க்க முடியாதது, தவிர்க்க கூடாதது. நம் மனம் கற்பனைச் செய்யும் தேவைகளுக்காகச் செலவிடப் படும் பணம் அல்லது உழைப்பு, நம் உளவியல் தேவைகளுக்காக செலவிடப் படுவதாகும் – இதுவே வீணாக்கப்படும் உழைப்பு அல்லது சக்தி ஆகும். வேறு வார்த்தைகளில் கூறினால், நம் உபரி உழைப்பை நமது வாழ்க்கையை வாழ்வதற்காக செலவழிப்பது\சேமிப்பது அல்லது நம் உளவியல் தேவைகளுக்காக செலவழிப்பது\சேமிப்பது (வீணாக்குவது) என்பது, நமது உளவியல் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. அதாவது, நம் மனம் ஆரோக்கியமான நிலையில் இருக்கும்போது, அது கற்பனையில் உழலாது, உணர்வின் உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்!

Friday, June 17, 2011

இயலாமை

நாம் அனைவரும் இயலாமை என்னும் பெரும் கட்டுக்குள் கட்டுண்டு இருக்கிறோம் – இங்கு இயலாமை என்பது தனிமனித அளவில் கூறப்படவில்லை, உலகம் முழுவதையும் ஒரே இருப்பாக காணும்போது அதில் மனிதன் என்னும் சிறு துகளின் இயலாமை!

உலகின் இயக்கம் ஒரு மாபெரும் கூட்டு நியதிக்குள் கட்டுப்பட்டிருக்கிறது. இந்த கூட்டு விதி அல்லது நியதிகளின் தொகுப்பு மகாதர்மம் என சில புத்த கலாச்சாரங்களில் கூறப்படுகிறது. இந்த விதிகளின் தொகுப்பிலிருந்து உலகத்தின் எந்த இயக்கமும் விலக முடியாது. இதே இயக்க விதிகள், உலகில் உள்ள ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு உயிரினத்திலும் அந்த பொருளுக்கு அல்லது உயிரினத்துக்கான தனித்தன்மையுடன் இயங்கிக் கொண்டிருக்கும். எந்த பொருளும் அல்லது உயிரினமும் அதற்கான இயக்க விதிகளிலிருந்து எவ்வகையிலும் தப்பிச் செல்ல முடியாது. ஆம், நாம் அனைவரும் நமக்கேயான இயக்க நியதிகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளோம். நமக்கேயான அந்த நியதிகளிலிருந்து விடுதலை என்பது நம்மில் எவராலும் இயலாததாகவே இருக்க கூடும். அந்த நியதிக்குட்பட்டு இயங்குவதே நமது பிறப்பின் குறிக்கோளாகவும் இருக்க கூடும்.

ஜடப் பொருட்களுக்கு, உலகத்தின் ஒருமையிலிருந்து தனிமைப் படுத்தி பார்தாலும், அவற்றின் இயக்க நியதிகள் மட்டுமே இயல்பாக இருக்க முடியும். உயிரினங்கள் ஜடப்பொருள்களிலிருந்து வேறுபடுவது, அவற்றின் தம்மைதாமே உருவாக்கும் அல்லது படைக்கும் இயல்பாகும். அதாவது, உயிரினங்கள் அவற்றின் சூழலில் இருந்து சக்தியை பெற்று, அவற்றின் அடிப்படை இயல்புக்கு ஏற்ப அந்த சக்தியை தமது இச்சைகளை செயல்படுத்த உபயோகப்படுத்துகின்றன. அதன் இச்சைகளில் மிக அடிப்படையானது இனப்பெருக்கம். இங்கு கவனிக்கப்படவேண்டியது, தனிப்பட்ட முறையில் உயிரினங்களின் இச்சைகள் அவற்றுக்கே உரியதாகவும் அவற்றால் செயல்படுத்தப்படுவதாக இருந்தாலும், அந்த உயிரினத்தின் இச்சைகள், அவை அவற்றினுள் கொண்டுள்ள வேதிப்பொருட்களின் கூட்டமைப்பை பொறுத்தே அமையும் – அவற்றின் மூளையின் வேதிப்பொருட்களின் கூட்டமைப்பு. இந்த வேதிக்கூட்டமைப்போ, உலகின் மகாநியதிக்கு உட்பட்டது.

மனிதனும் இந்த நியதிக்கு விலக்கல்ல. நமது உளவியல் இயல்புகளும் செயல்பாடுகளும் கூட நம் மூளையில் வேதிப்பொருட்களின் கூட்டமைப்பை பொறுத்தே அமையும். நம் மூளையின் கட்டமைப்பு, நாம் கருவாக உருவாகும்போதே முடிவு செய்யப்பட்டுவிடுகிறது – நாம் பெறும் மரபணுக்கள் மூலம்! அதாவது இந்த உலகத்தில் நாம் அடையப்போகும் மகிழ்ச்சிகளுக்கும் துயரங்களுக்குமான அடிப்படை இயக்க நியதிகள் நாம் கருவாக உருவெடுக்கும்போதே முடிவு செய்யப்பட்டுள்ளது. நமது மூளையின் வேதிக்கூட்டமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள இந்த நியதிகள், நமது சுற்றுச்சூழலின் இயக்கத்துடன் சேர்ந்து இயங்கும்போது, நாம் உணரும் மகிழ்ச்சிகளாகவும் துன்பங்களாகவும் வெளிப்படுகின்றன. இங்கு நமது மகிழ்ச்சிகளுக்காகவும், துயரங்களுக்காகவும் நாம் செய்யக்கூடியது என எதுவும் இல்லை. நம் மூளையின் வேதிக்கூட்டமைப்பும், நமது சுற்றுச்சூழலும் அவற்றை முடிவு செய்கின்றன – நாம் வாழ தேர்ந்தெடுக்கும் சுற்றுச்சூழலையும் கூட நம் மூளையின் வேதிக்கூட்டமைப்பே முடிவு செய்கிறது. ஆக நம் மூளையின் வேதிக்கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ள நியதிக்கேற்ப செயல்படுவதைத் தவிர வேறு சாத்தியங்களே நமக்கு இல்லை – மனிதனின் இயலாமையின் உச்சம்!

ஆனால், ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு உயிருக்கும், விடுதலை என்பதும் அதனதன் அடிப்படை இயக்க நியதியிலேயே உள்ளது எனத் தோன்றுகிறது. உதாரணமாக சூரியன் அதன் ஈர்ப்பு சக்தியை கொண்டிருக்கும்வரைதான், பூமியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும். இன்னும் சில நூறு கோடி வருடங்களில் சூரியன் அதன் ஈர்ப்பு விசையை இழக்கும்போது, பூமியும் மற்ற கோள்களும் சூரியனிலிருந்து விடுபட்டு, அவற்றுக்கேயான வழிகளில் பயணிக்க தொடங்கலாம். இந்த விடுதலையின் நியதி, ஒவ்வொரு அணுவின் சிறு துகளுக்கும், அணுவுக்கும், பொருள்களுக்கும், உயிரினங்களுக்கும் கூட இருக்க கூடும். நமது சுற்றுப்புற இயக்கங்களை நம்மால் சற்று உற்று நோக்க இயலுமானால், ஒருவேளை நம்மால் இந்த அடிப்படை விடுதலைக்கான போராட்டத்தை உணர்ந்து கொள்ள இயலும்.
எந்த ஒரு பொருளும் அல்லது உயிரினமும், அதன் அடிப்படை இயக்கத்தையே அல்லது அடிப்படை இயல்பையே உணர்வாக (அவற்றுக்கு உணர்வு என்ற ஒன்று இருக்குமானால்) கொண்டிருக்குமானால், அவை மகிழ்ச்சி அல்லது துயரம் என்னும் பொறிகளில் சிக்குவதற்கு வாய்ப்பே இல்லை. எந்த உயிரினமும் அதன் அடிப்படை இயல்புகளையே அல்லது நியதிகளையே உணர்வாக பெற்றிருக்கும்போது, அவற்றின் உணர்வுகளுக்கும் செயல்களுக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதில்லை. இந்த முரண்பாடுகளற்ற உணர்வு நிலையே ஆனந்த நிலையாக இருக்க கூடும் – அந்த உணர்வுகளின் எல்லைகளைப் பொறுத்து! மற்ற உயிரினங்களுக்கு உணர்வு என்ற ஒன்று இருக்குமானால், அவை அவற்றின் இயல்பையே உணர்ந்து கொண்டிருக்க கூடும் – அவற்றின் உணர்வுக்கான எல்லைவரை. அவ்வாறெனில், அவற்றின் வாழ்வில், முரண்பாடுகள் இருக்க இயலாது.

மனிதனுக்கு விடுதலையின் தேவை மிக மிக அதிகமாகவே, மனிதனுக்கான நியதிகள் மூலம், நிலைநிறுத்தப் பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இந்த விடுதலைக்கான தேவையே, மனிதனின் அடிப்படை இருப்பின் கட்டுப்பாடுகளுடன் முரண்பட்டு, நமது மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் உருவாக்குகிறது. ஆனால், நம்மால் இருப்பின் நியதிகளிலிருந்து ஒருபோதும் விலக இயலாது. எனில் விடுதலையின் குறிக்கோள் என்னவாக இருக்க முடியும்? ஒருவேளை, நமது இருப்பின் இயல்பை உணர்ந்து, அதன் நியதிகளை உணர்ந்து, அந்த இயல்பிற்கேற்ப, நியதிக்கேற்ப நம் வாழ்க்கையை அமைத்து, செயல்களின் முரண்பாடுகளிலிருந்து விடுதலை பெறுவதுதான் அதன் குறிக்கோளாக இருக்கலாம். அல்லது இந்த முரண்பாடுகளை கிரியா ஊக்கிகளாகக் கொண்டு, நமது இருப்பை, அதன் மூலம் உலகத்தின் இருப்பை உணர்வதுதான் விடுதலைக்கான தேவையின் குறிக்கோளாக இருக்கலாம்.

மனித மனம் எல்லையற்ற சாத்தியங்களை உடையது – மனம், அதன் செயல்பாட்டின் எல்லைக்குள், அதற்குத் தேவையான மூளையின் கூட்டமைப்பை உருவாக்க கூடியதாகக்கூட இருக்கலாம். அவ்வாறு கூடுமெனில், அதற்கான கிரியா ஊக்கிகள், நமது சுற்றுச்சூழலிலுருந்து மட்டுமே பெற முடியும். ஆனால் அந்த கிரியா ஊக்கிகள் மூளையின் வேதிக்கட்டுமானத்துடன் வினை புரிய வேண்டுமெனிலும், மூளையின் கட்டமைப்பு அதற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். இதிலும் நம்மால் செய்ய இயலுவதென எதுவும் இல்லை. நாம், நம் உடல் மற்றும் மூளையின் வேதிக்கூட்டமைப்பிற்கேற்ப, அந்த வேதிக்கூட்டமைப்பினால் நிலைநிறுத்தப்பட்ட நியதிகளுக்கேற்ப செயல் புரிந்து கொண்டிருக்கிறோம். அது மட்டுமே நம்மால் இயன்றது!

இந்த மகத்தான இயலாமையை நம்மால் உணர முடிந்தால், அந்த உணர்வே கிரியா ஊக்கியாக செயல்பட்டு, மூளையின் செயல்பாட்டின் ஒழுங்கு முறையையே மாற்றி அமைக்க கூடும். ஒருவேளை நம்மால் மனிதனின் இயலாமையை உணர நேர்ந்தால், மனித இனத்தின் மீது பெருங்கருணையைத் தவிர வேறு எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்த இயலாமல் போகலாம். அப்பெருங்கருணையினால், எதிரிகளையும், துன்பம் இழைப்பவர்களையும் கூட நம்மால் வெறுக்க இயலாமல் போகலாம். ஏனெனில் அவர்கள் துன்பம் இழைப்பது கூட அவர்களின் இயலாமையினால் மட்டுமே! அவர்கள் மூளையின் வேதிக்கட்டமைப்பே அதற்கு காரணம்! அவர்களோ அல்லது வேறு எவருமோ, அந்த இயல்புகளை எவ்வகையிலும் மாற்ற முடியாது.

Saturday, June 11, 2011

கலாச்சாரம், மனம்

நம் மனதின் தேவைகளே – உளவியல் மற்றும் பொருளியல் தேவைகள், நமது கலாச்சாரமாக வெளிப்படுகிறது. எனவே நமது கலாச்சாரத்தை முழுவதுமாக அறிந்து கொள்வது, நம் மனதை அறியும் முயற்சியின் திறவுகோலாக இருக்க வாய்ப்புள்ளது. ஆன்மீகம் என்பது நம்மை நாமே அறிந்து கொள்வதாகும் – அதாவது நம் மனதை அறிந்து கொள்வது. நம் மனம் என்பது, தற்போதைய உணர்வு நிலையில், நாம் மனமென அறியும் மேலோட்டமான உணர்வுகள் மட்டும் அல்ல. மனதின் உண்மையான செயல்பாடு, தற்போதைய நம் உணர்வு நிலையில், பெரும்பாலும் உள்மனம் (subconscious) ஆழ்மனம்(unconscious) பொது ஆழ்மனம்(collective unconscious) ஆகிய நிலைகளிலேயே நடைபெற்றுக்கொண்டிருக்கும். இடைவிடாத இயக்கத்தில் இருக்கும் மனத்தின் வெவ்வேறு நிலைகளை ஒருங்கிணைத்து ஒரே அறியும் மனமாக உணரும் முயற்சியே ஆன்மீகம் ஆகும். எனவே மனதின் ஆழ்மன நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கலாச்சாரத்தை குறித்து அறிந்து கொள்வது, நம் மன இயக்கத்தை அறிந்து கொள்ளும் முயற்சிக்கு உதவக் கூடும்.

நம் மனதின் கலாச்சார கூறுகள் இரண்டு வழிகளில் மனதில் நுழைந்திருக்க வாய்ப்புள்ளது. ஆழ்மனதின் கலாச்சாரக் கூறுகள் பெரும்பாலும் மரபணுக்கள் மூலமாக நாம் பெற்றிருக்க கூடும் – நமது வாழ்க்கையின் சூழல்கள் மூலம் நம் மனதினுள் நுழைந்து, நமது விழிப்புணர்வின்மையின் காரணமாக ஆழ்மனதினுள் சேர்ந்து விட்ட கூறுகள் தவிர. இரண்டாவதாக, நாம் வாழும் சூழலில் நாம் சார்ந்திருக்கும் மற்றும் நம்மை சார்ந்திருப்பவர்களிடம் கொண்டிருக்குமு உறவுகளின் இயக்கங்கள் மூலமாகவும் கலாச்சாரம் நம் மனதினுள் நுழைகிறது – இது மிகவும் வெளிப்படை. கலாச்சாரம் பெரும்பாலும் நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் கட்டுப்பாடுகள் மூலமே நிலைநிறுத்தப்படுகிறது. இந்த நம்பிக்கைகளும், நம்பிக்கை சார்ந்த சடங்குகளும் கட்டுப்பாடுகளும், மனதின் இயக்கத்தைக் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் நம்முடைய மனதின் செயல்களை ஒரு வரையறைக்குள் இருக்கச்செய்து, நாம் வாழும் சூழலின் சமன்நிலைத்தன்மை குலையாமல் இருக்க உதவுகிறது

ஆக, கலாச்சாரம் நம்மை கட்டுப்படுத்துகிறது. நம் மனதின் இயங்கு சக்தியை கட்டுப்படுத்துகிறது. மனம் அதன் எல்லைகளை அடையவிடாமல் செய்கிறது. அதாவது, கலாச்சாரம் நம் விடுதலையை பறிக்கிறது. ஆனால், நம் சுதந்திரத்திற்காக கலாச்சாரத்தை புறந்தள்ளி நாம் சுதந்திரம் என கருதுவதை நிலைநாட்டினால், நாமே நமது சமுதாய அழிவிற்கு மூல காரணி ஆகி விடுவோம் அல்லது சமூகத்தால் அழிக்கப்பட்டு விடுவோம். இங்குதான் ஆன்மீகம் நமக்கு தேவைப்படுகிறது. நாம் கலாச்சாரத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை பெற வேண்டும். அதே நேரத்தில் அந்த விடுதலை மற்றவர்களின் அல்லது நமது அழிவுக்கும் காரணமாகக் கூடாது. இங்கு விடுதலை என்பது கலாச்சாரத்திற்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்யும் சுதந்திரம் அல்ல, நமக்கு தேவையானவற்றைச் செய்ய கலாச்சாரம் தடையாக இல்லாமல் இருப்பது மட்டுமே.

இதற்கு ஒரே வழி, கலாச்சாரத்தை நம் மனம் கடந்து செல்வதேயாகும் – கலாச்சாரத்தை ஒதுக்கி புறந்தள்ளுவதாக இருக்க முடியாது. கலாச்சாரத்தை அறிந்து கொள்வதன் மூலமே நம்மால் கலாச்சாரத்தைத் கடந்து செல்ல முடியும். அவ்வாறு, கலாச்சாரத்தை அறிந்து, அதை கடந்து செல்லும்போது நம் எந்த செயலும், அந்த கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் சமூகத்தினுள் எந்த விதமான எதிர்மறை சலனங்களையும் ஏற்ப்படுத்தாது. நமது வாழ்க்கையிலும் எதிர்மறை சலனங்களை உருவாக்காது. இத்தகைய வாழ்க்கையே ஆன்மீக வாழ்க்கை!

Wednesday, June 8, 2011

கலாச்சாரம்

கலாச்சாரம் அல்லது பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் அடிப்படை இயங்கு சக்தி. இது அந்த சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களும் மற்ற உறுப்பினர்களுடனும், தங்கள் தேவைகளுடனும் ஆன உறவு அல்லது தொடர்புகளின் வலைப்பின்னலே. பண்பாடு அல்லது கலாச்சாரம் என்பது இல்லாமல் எந்த சமூகமும் இருக்க முடியாது. ஒரு கலாச்சாரத்தின் சில கூறுகள் மற்ற கலாச்சாரங்களிலும் ஏற்றுகொள்ளப்பட்டவைகளாக இருக்கலாம். மற்ற சில கூறுகள் விலக்கப்பட்டவைகளாகவும் இருக்கலாம். இந்த ஏற்றுகொள்ளப்பட்ட அல்லது விலக்கப்பட்ட கூறுகள், அந்த கலாச்சாரத்தின் அடிப்படையில் இயங்கும் சமூகத்தின் பொருளியல் மற்றும் உளவியல் தேவைகளுக்கு ஏற்ப அமைந்திருக்கும்.

ஆக, ஒரு பண்பாடு அல்லது கலாச்சாரத்தின் அடிப்படை இயங்கு முறை, அந்த சமூக உறுப்பினர்களின் பொருளியல், உளவியல் தேவைகளை பொறுத்தே அமையும். ஒரு கலாச்சாரத்தின் பொருளியல் கூறுகளை அறிந்து கொள்ள, அந்த சமூகத்தில் நிகழ்பெறும் வெளிப்படையான நிகழ்வுகளை உணர்ந்து கொள்ளும் குறைந்த பட்ச நுண்ணறிவே போதுமானது. ஆனால் உளவியல் தேவைகளை அவ்வாறு எளிதில் வரையறுத்து கொள்ள முடியாது. தனிமனித அளவிலும், சமூக அளவிலும் உளவியல் தேவைகள் மிக, மிக விரிவானவை. மேலும் இந்த உளவியல் தேவைகள் ஒவ்வொரு கணமும் மாறும் இயல்புடையது. அவ்வாறு மாறிக்கொண்டிருக்கும் உளவியல் தேவைகள், ஒரு குறிப்பிட்ட எல்லையை விட்டு மிக வேகமாக விரியும்போது அல்லது சுருங்கும்போது, அந்த சமூகம் அதன் கட்டுக்கோப்பை இழக்க நேரிடும். கட்டுக்கோப்பை இழந்த சமூகத்தின் அங்கத்தினர்களின் உளவியல் உறவுகள் அல்லது தொடர்புகளின் முரண்பாடுகள் சமன்நிலையை இழந்து அந்த சமூகத்தை அழிவுக்கு எடுத்துச்செல்லும்.

ஆக ஒரு சமூகம் அதன் இருப்பை உறுதி செய்ய, அதன் அங்கத்தினர்களின் உளவியல் வீச்சின் எல்லைகளை வரையறை செய்ய வேண்டியது அவசியமாகிறது. பண்பாடு அல்லது கலாச்சாரம் எனப்படுவது இந்த உளவியல் வீச்சின் வரையறைகளையே. அதாவது, கலாச்சாரம் என்பது சமூகத்தின் அங்கத்தினர் இடையே உள்ள உளவியல் உறவுகள் அல்லது தொடர்புகளின் வரையறை. இந்த உளவியல் வரையறைகள் நம்பிக்கைகள், சடங்குகள், குடும்ப உறவுகள் போன்றவை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, சமூகத்தின் உளவியல் தேவைகள் பொருளியல் கூறுகளின் மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஒரு சமூகத்தின் இருப்பு மற்றும் பாதுகாப்பு கலாச்சாரத்தின் மூலமே நிலை நிறுத்தப்படுகிறது. சமூக அங்கத்தினர்கள் கலாச்சாரத்தின் எல்லைகளை மீறும்போது கலாச்சாரம் அழிவதுடன் அந்த கலாச்சாரத்தால் நிலைநிறுத்தப்பட்ட சமூகமும் அழியத்தொடங்கும். எனவே சமூக அமைப்புக்குள் வாழும் எந்த மனிதனுக்கும், அந்த கலாச்சாரத்தை குறித்த குறைந்த பட்ச அறிவு மிக மிக அவசியம். இது தனி மனித தேவை மட்டும் அல்ல, அந்த சமுதாயத்தின் தேவை – சமுதாயம் அதன் உளவியல் தேவைகளை சமன் நிலையில் வைத்துக்கொள்வதற்காக. ஆனால் கலாச்சாரம் மாறாத ஒன்று அல்ல. காலம் செல்லும்தோறும், காலத்தின் தேவைக்கேற்ப, இயற்கையான சுற்றுச்சூழல் மாறுதலுக்கேற்ப, கலாச்சாரம் விரிவடைந்து கொண்டே செல்லும். அந்த விரிவு, கலாச்சாரத்தின் நிறுவப்பட்டுள்ள வரையறைகளை ஒட்டியே இருக்க முடியும். மேலும் அந்த கலாச்சார விரிவு, அந்த சமூகத்தில் தோன்றும் சிந்தனையாளர்கள் மற்றும் சமூகப்போராளிகள் மூலமும் முன் எடுத்துச் செல்லப்படலாம்.

இங்கு கவனிக்கப்பட வேண்டியது, இந்த சிந்தனையாளர்களும் சமூகப்போராளிகளும், புதிய கலாச்சார விரிவுகளை, ஏற்றக்கொள்ளப்பட்ட கலாச்சார எல்லைகளை சார்ந்தே முன்னெடுத்து செல்ல முடியும். இவர்கள் அந்த கலாச்சாரத்தை குறித்த அதிகபட்ச அறிவும் நுண்ணுணர்வும் உடையவர்களாகவே இருக்க முடியும். ஒரு கலாச்சார கூறுகளை எற்றுக்கொள்ளாமல், அந்த கலாச்சார விரிவுகளை ஒருவர் முன்னெடுத்துச்செல்ல முடியாது. அவ்வாறு செல்ல நேர்ந்தால், அது அந்த கலாச்சார அழிவுக்கு வழிவகுக்கும். இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று, கலாச்சாரம் பல பல தலைமுறைகளால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று. அதன் அழிவையும் ஒரே தலைமுறைக் காலத்தில் காண முடியாது. ஆகவே கலாச்சாரத்தைப் பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாமல் அக்கலாச்சாரத்தின் அழிவை அறிந்து கொள்ள முடியாது. எனவே கலாச்சார போராளிகள் என்னும் அறைகூவல் பெரும்பாலும் எவ்வாறு வெறும் மேலோட்டமாக இருக்குமோ, அதேபோல கலாச்சார அழிவு என்னும் கதறலும் பெரும்பாலும் மேலோட்டமாகவே இருக்கும்.

ஆனால், கலாச்சார விரிவுக்கான தூண்டுதல் எப்போது தோன்றுனாலும், அதற்கான எதிர்மறை இயக்கமும் உடனே தோன்றும். இந்த முரண்பாடுகள் ஒன்றாக சேர்ந்து இயங்கி, அந்த கலாச்சாரத்தை சமன்நிலையில் இருக்கச் செய்யும். ஆகவே, அந்த சமூகமும், கலாச்சார நகர்வை எடுத்துச் செல்லும் சிந்தனையாளர்களும், சமூகப் போராளிகளும் சில அடிப்படை தகுதிகளை கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே, சமூகத்தின் சமன்நிலை குலையாமல் கலாச்சார முன் நகர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த அடிப்படை தகுதி, கலாச்சாரத்தை முன் எடுத்துச் செல்லும் முயற்சியினால் உருவாக்கப்படும் முரண்பாடுகளை நேர்மையுடன் எதிர்கொள்ளும் உறுதியே.

கலாச்சாரம் சமன்நிலையில் இருப்பது என்பது, ஒரு சமூகத்தினுள் நிகழும் பொருளியல் மற்றும் உளவியல் முரண்பாடுகள் அந்த சமூகத்தின் இயல்பு இயக்கத்தை பாதிக்காமல் இருப்பதாகும். கலாச்சார மாற்றங்கள் கூட அந்த சமூகத்தின் இயல்பு இயக்கத்தை பாதிக்காதவரைதான் அந்த கலாச்சார மாற்றத்தை கலாச்சார முன் நகர்வாக கருத முடியும். ஒருவேளை அந்த கலாச்சார மாற்றம், சமூக இயக்கத்தின் இயல்புத் தன்மையை குலைத்தால் அது கலாச்சார முன் நகர்வாக இருக்க முடியாது. மாறாக அது கலாச்சார அழிவின் அறிகுறியாகவே இருக்க முடியும்.

Tuesday, May 31, 2011

தேவைக்கேற்ற நுகர்வு

சில தலைமுறைகளுக்கு முன்புவரை உலகமெங்கும் இருந்த சமூகங்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை அன்றாட வாழ்க்கை தேவைகளுக்காகவே செலவிட வேண்டியிருந்திருக்கும். எனவே தேவைக்கு அதிகமான நுகர்வு என்பதற்கான வாய்ப்பு மனிதர்களில் பெரும்பான்மையினருக்கு இல்லாமலேயே இருந்திருக்கும். ஆனால் இன்றைய சமூக அமைப்புகளின் இயங்குமுறை முற்றிலும் வேறானதாக உள்ளது. பெரும்பாலான சமூக அமைப்புகளில் மக்களின் தேவைகளை எளிதில் அடைவதற்கு வழிமுறைகள் முறைப்படுத்தப்பட்டுள்ளது. சமூகத்தின் உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் வாழ்க்கையில் அவர்களுக்கென உள்ள நேரம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்கென உள்ள நேரம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது – இங்குதான் நுகர்வு என்பது, தேவைக்கேற்ற நுகர்வு என்பதிலிருந்து முடிந்தவரை நுகர்வு என்னும் பரிணாமத்தை அடைந்திருக்க கூடும். நமது நுகர்வு கலாச்சாரம் இரண்டு காரணிகளால் வழி நடத்தப்பட்டிருக்கலாம். முதலாவது காரணி நம் வாழ்க்கையில் மிச்சப்படுத்தப்படும் நேரம். சமூகங்களில் பாதுகாப்பு உருவாகாதவரை, நமது மனம் நம் வாழ்க்கையில் தப்பி பிழைப்பதற்காக எப்போதும் ஏதாவது செயல்களில் ஈடுபட்டிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. தற்காலத்தில் சமுதாய அமைப்புகள் வழங்கும் பாதுகாப்பின் மூலம், மனம் பாதுகாப்பு சார்ந்த செயல்களிலிருந்து பெரும்பாலும் விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சில செயல்களிலிருந்து விடுபட்ட மனம், காலம் என்னும் பொறியினுள் விழுந்து விடுகிறது.
நமது மனம் செயல்களில் ஈடுபட்டிருக்கும்போது, காலத்தைப்பற்றிய பிரக்ஞை அற்று இருக்கிறது. மனம் உணர்வதற்கு அல்லது ஈடுபடுவதற்கு எதுவும் இல்லாதபோது, அந்த தீவிர உணர்வுகள் அல்லது செயல்களுக்கு இடையே உள்ள இடைவெளியை காலமாக கற்பனை செய்து கொள்கிறது. நமது மனதினால் காலத்தினுள் இருக்க முடிவதில்லை – அதாவது நம் மனதினால் உணர்வு அல்லது செயல்பாடு இல்லாமல் இருக்க முடிவதில்லை. இவ்வாறு நம் மனதினுள் அடிப்படை செயல்பாடு தேவை இல்லாதபோது நம் மனத்திற்கு சாத்தியமானது – அது உள்நோக்கி திரும்பி தன்னையே உணர தொடங்கலாம் அல்லது வெளிநோக்கி திரும்பி புலன்களால் உணரப்படுவதில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளலாம். அவ்வாறு மனம் காலத்தை இல்லாமல் செய்ய வெளி நோக்கி திரும்பினால் வெளியில் உள்ளவற்றை நுகர்வதன் மூலமே மனதால் காலத்தின் மேல் பயணிக்க முடியும். ஆக காலத்தை கடக்க வெளிநோக்கி திரும்பும் மனம் நுகர்வு கலாச்சாரத்தை உருவாக்குகிறது.

நுகர்வு கலாச்சாரத்தின் இன்னொரு காரணி, சமூகத்தின் பொருளாதார தேவைகள். சமூக கட்டமைப்பின் மூலம் அந்த சமூகத்தினுள் செயலின் தேவையின்மையை உருவாக்கிய அதே நேரத்தில், சமூக கட்டமைப்பை உறுதி செய்ய பொருளாதார தேவைகளையும் சமூகம் உருவாக்கியுள்ளது. ஒரு சமூகத்தின பொருளாதார கட்டமைப்பு, அந்த சமூகத்தின் நுகர்வுக்கு ஏற்றவாறே அமையும். ஒரு சமூகத்தின் நுகர்வுத் தேவை சமன் நிலையில் இருக்கும்போது, அந்த சமூகத்தின் பொருளாதார தேவைகளும் சமன் நிலையில் இருக்கும், சமூகத்தின் நுகர்வும், பொருளாதார தேவைகளும் சமன் நிலையில் இருக்க, அந்த சமூகம் காலத்தை கடக்க புலன்களின் தேவை சமன் நிலையில் இருக்க வேண்டும். காலத்தை கடக்க புலன்களின் தேவையை சமன்நிலையில் வைத்து கொள்ள, மனம் உள்நோக்கி திரும்புவதை விட வேறு வழி இல்லை. வேறு வார்த்தைகளில் கூறினால், நுகர்வின் சமன்நிலையை அடைய ஆன்மீகம் மட்டுமே வழி!

ஆக, தேவையில்லாத நுகர்வு என ஒன்று இல்லை. காலத்தை கடக்க வேண்டியது மனதின் தேவை. காலத்தை கடக்க மனம் புலன்களை பயன்படுத்தும் எல்லை விரிவடையும்தோறும் நுகர்வின் தேவையும் விரிவடைந்தபடியே இருக்கும். அல்லது, தனிமனித மற்றும் சமூகத்தின் நுகர்வு சமன்நிலையை இழந்து விரிவடைந்தபடியே இருக்கும். நுகர்வு சமன்நிலையில் இருக்க வேண்டுமானால், மனம் காலத்தை கடப்பதற்கு புலன்களின் தேவையற்று இருக்க வேண்டும். அதாவது, மனம் புலன்களிலிருந்து விடுதலை பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் நுகர்வு சமன்நிலையில் இருக்க வேண்டியதன் தேவை என்ன? நம் சந்ததியினர் இந்த உலகில் வாழ்வதற்கான சாத்தியம், நம் தலைமுறையில் (பின் வரும் தலைமுறைகளிலும்) நுகர்வை சமன்நிலையில் வைத்திருப்பதை பொறுத்தே உள்ளது. 800 கோடி மக்கள் நுகர நுகர குறையாமல் இருக்க இந்த உலகம் ஒரு காமதேனுவோ அல்லது அட்சயபாத்திரமோ அல்ல. உலகம் அதன் தோற்ற காலத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட ஆதார சக்தியுடன், ஆதார இயல்புகளுடன், ஒரு சமன்ன்நிலையில் இருந்து வந்துள்ளது. நம் அல்லது நம் சந்ததியினரின் நுகர்வின் மூலம் அந்த சமன்நிலை குலைக்கபடாதவரைக்கும் இந்த உலகில் மனித இனமும் மற்ற உயிரினங்களும் வாழ முடியும். ஒருவேளை அந்த சமன்நிலை குலைக்கப்பட்டால், அதன் விளைவுகளை நாம் சந்திப்பதை தவிர வேறு வழி இல்லை. அவ்வாறு ஒரு நிலைமை நமக்கு ஏற்படுமானால், அதன்பின் எந்த கடவுள்களாலும், யாகங்களாலும், பூஜைகளாலும், வேண்டுதல்களாலும் அந்த சமன்நிலை குலைவின் விளைவுகளை தவிர்க்க முடியாது.

ஆக, இந்த உலகம் நாமும், நம் சந்ததியினரும் வாழ உகந்ததாக இருக்க வேண்டுமென்றால், அதன் ஆதார இயல்புகள் சமன்நிலையில் இருக்க வேண்டியது மிக அவசியம். அதற்கு, இந்த உலகின் பெரும்பான்மை சக்தியை நுகர்பவர்களாகிய நாம், நமது நுகர்வை சமன்நிலையில் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். நமது நுகர்வு சமன்நிலையில் இருக்க வேண்டுமானால், மனம் அதன் காலத்தை கடப்பதற்கு, புலன்களை மட்டும் சார்ந்திருக்காமல் இருக்க வேண்டும். அதாவது மனம் உள்நோக்கியும் திரும்ப வேண்டும் – ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் மட்டுமே நமது நுகர்வை சமன் நிலையில் வைத்திருக்க முடியும். இங்கு ஆன்மீகம் என்பது கடவுள்களையோ, கோவில்களையோ, பூஜைகளையோ, வழிபாடுகளையோ, வேண்டுதல்களையோ குறிக்கவில்லை. மனம் உள்நோக்கி திரும்பி, தன்னில் தானே ஈடுபடுவதையே குறிக்கிறது – மேலே குறிப்பிட்ட பொருள்கள் அல்லது செயல்கள் அதற்கு காரணிகளாக இருந்தாலும், இல்லாவிடிலும்!

Friday, May 20, 2011

ஆனமீகத்தின் தொடக்க புள்ளி

ஆனமீகத்தின் தொடக்க புள்ளி, அதிதீவிரமான மனம் மற்றும் அந்த தீவிரத்தை சரியானபடி வழிநடத்தி செல்லும் நுண்ணறிவு ஆகிய இரண்டும் சேர்ந்த கலவையாக மட்டுமே இருக்க முடியும். நாம் ஒவ்வொருவரும் மனதளவில் தனித்தன்மை வாய்ந்தவர்கள். எந்த இரு மனிதர்களும் ஒரே மன நிலை உடையவர்களாக இருக்க வாய்ப்பு இல்லை. எந்த ஒரு மனிதனுக்கும் மனதின் எதோ ஒரு இயக்கத்திலாவது தீவிரம் இல்லாமல் இருக்கவும் வாய்ப்பு இல்லை. ஆனால் அந்த தீவிரம் சரியான பாதையை அடையும் முன்பே அழிந்து விட காரணங்களும் வாய்ப்புகளும் ஏராளம்.

ஆக, அந்த தீவிர மன இயக்கத்தை கண்டறிந்து, அது நம் வாழ்க்கை முறை அல்லது வேறு எந்த காரணங்களாலோ அதன் தீவிரத்தன்மையை இழந்திருந்தாலும், நுண்ணறிவின் மூலம் சரியான திசையில் இயங்கச்செய்வதே ஆன்மீகத்தின் தொடக்கமாக இருக்க முடியும். ஆனால் அந்த தீவிர தன்மையை கண்டறிவது அத்தனை எளிதான காரியம் என்று தோன்றவில்லை. நம் வாழ்க்கையின் யதார்த்தம் அந்த தீவிரத்தன்மையை புரட்டி மனதின் அடி ஆழத்திற்கு எடுத்துச்சென்றிருக்க கூடும். அதை மீட்டு எடுக்க தீவிர விருப்பமும், வாய்ப்புகளும், வழிகாட்டுதல்களும் தேவைப்படலாம்.

நம் மனம், அதற்கு தேவை இல்லாத ஒன்றை தேட எப்போதுமே ஆர்வமுடையதாக இருக்காது. ஆகவே ஆன்மீகம் அதற்கு தேவை என்று நம் மனம் உணரும்வரை, நாம் ஆன்மீக வழிகளில் ஈடுபட எந்த வாய்ப்புகளும் இல்லை. ஆகவேதான் நம்மில் பெரும்பாலானவர், ஏதேனும் கொடும் துன்பங்கள் நம் வாழ்க்கையை தாக்கிய பின்னரே ஆன்மீக ஈடுபாடு கொள்கிறோம். ஆனால் அந்த கொடுந்துன்பத்தின் பிடியில் இருக்கும்போது நம் மனம் அதன் நுண்ணுணர்வை பெரும்பாலும் இழந்து விட்டிருக்கும். ஆகவே கொடுந்துன்பத்தின் பிடியில் நாம் தேர்ந்தெடுக்கும் ஆன்மீக வழி பெரும்பாலும் போலி ஆன்மீக வழியாகவே இருக்கும். துன்பத்தின் பிடியிலும் சிறித்தளவேனும் தன்னுணர்வை கொண்டிருப்பவர்களால் மட்டுமே,கொடுந்துன்பத்தின் பிடியில் இருக்கும்போது, அவர்கள் ஆன்மீக வழியை தேர்ந்தெடுத்தால், அது சரியான ஆன்மீக வழியாக இருக்க வாய்ப்புள்ளது. மனம் தன்னிலையை இழக்கும் அளவுக்கு பெருந்துன்பத்தை வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய தேவை வராத அதிர்ஷ்டசாலிகள் ஆன்மீக வழியில் இருப்பதென்றால் அதற்கு காரணம், அவர்கள் மனதினுள், அவர்களுக்கேயான அந்த தீவிர இயக்கம், வாழ்வின் யதார்த்தத்தால் இன்னும் நசுக்கப்படாமல் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். ஆகவே நாம் ஆன்மீக வழியில் இன்னும் இல்லாமல் இருக்கிறோம் என்றால், அதற்கான ஒரே காரணம், இயற்கை நமக்கு அளித்த பெரும்கொடையான, நமக்கேயான அந்த மன இயக்கத்தின் தீவிரத்தை இழந்து விட்டிருக்கிறோம். வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், நாம் நம் வாழ்வை இழந்து விட்டு வேறு யாருடைய வாழ்க்கையையோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வாழ்வின் பாதுகாப்பின்மையால், மனித இனம் அழியாமல் இருப்பதற்காக, மிக சமீப காலம்வரை மனித இனத்தின் பெரும்பகுதி, தங்கள் சுயத்தை, தங்கள் வாழ்க்கையை இழந்து, இயற்கை அளித்த அவர்களுக்கேயான மன இயக்கத்தின் தீவிரத்தை இழந்து, மனித குலத்தின் தொடர்ச்சிக்காக, தெரிந்தோ, தெரியாமலோ, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களின் தியாகம் வணக்கத்திற்குரியது – அவர்கள் எந்த புழுவின் வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும்!

ஆனால் இன்றைய சமூக அமைப்பு முன் எப்போதும் உள்ளதை விட மிகவும் பாதுகாப்பானது – இதைவிட பாதுகாப்பு தேவையெனில் நம்மில் பெரும்பாலானோர் நமக்குள் ஆன்மீகத்தை அனுமதிப்பதை தவிர வேறு வழியில்லை. முன் எப்போதும் இல்லாத அளவில், தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலனவர்களுக்கு உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவையான உணவு, குறைந்த பட்ச முயற்சியில் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆகவே இயற்கை நமக்களித்த கொடையான நமக்கேயான உணர்வுக்கான மன இயக்கத்தை தியாகம் செய்ய எந்த தேவையும் இல்லை. நாம் வாழும் வாழ்க்கை நம்முடையதாக இருக்க வேண்டும் என்ற குறைந்த பட்ச விருப்பமும் விழிப்புணர்வும் இருக்குமானால், நமக்கேயான தீவிர மன இயக்கத்தை கண்டறிவது மிக்கடினமாக இருக்காது.

ஆனால் நமது பிரச்சனை அந்த குறைந்த பட்ச விருப்பு இல்லாமைதான். வாழ்வை உள்ளபடி அறிந்து கொள்வதற்கான தேவையை மனம் உணராதவரை நம் வாழ்க்கையை வாழ்வதற்கான விருப்பு வர வாய்ப்பு இல்லை. காரணம் நாம் வாழும் வாழ்க்கை நம்முடையதா அல்லது நாம் வேறு யாருடையதோ ஆன வாழ்க்கையை வாழ முயற்சி செய்து அந்த முயற்சியில் நம் வாழ்க்கையையும் இழந்து விட்டோமா என்று தெரியாமல் இருந்து கொண்டிருக்கிறோம். ஆக, நாம் வாழ்வின் யதார்த்தம் என்னும் பொறியில் மாட்டி கொண்டு அந்த பொறியைப் பற்றிய உணர்வையும் இழந்து விட்டுள்ளோம். அந்த பொறியைப்பற்றிய உணர்வை நம் முயற்சியின் மூலம் கொண்டுவர முடியும் என்று தோன்றவில்லை. அதற்கு ஏதோ ஒரு தூண்டுதல் தேவையாக உள்ளது.

ஒருவேளை அந்த தூண்டுதலதான் ஆன்மீகத்தின் தொடக்க புள்ளியாக இருக்கலாம். அந்த தூண்டுதல் எங்கிருந்து வரும்? அந்த தூண்டுதலை குறித்து ஆராய முற்பட்டால், நாம் நம் நம்பிக்கைகளை பொறுத்து, அந்த தூண்டுதல்களைக் குறித்து கற்பனைகளை உருவாக்கி கொள்வோம். அந்த கற்பனைகள் எவ்வாறு இருந்தாலும், ஒரு தூண்டுதல் தேவை என்பது மட்டும் நிதர்சனம்- இந்த நிதர்சனத்தை, நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் கவனிப்பதன் மூலம் உணரலாம்

Thursday, April 28, 2011

விழிப்புணர்வு

விழிப்புணர்வு (Awareness) பற்றி ஒரு இடுகை இதற்கு முன்பே இடப்பட்டுள்ளது. இது விழிப்புணர்வை பற்றி இன்னொரு பார்வை. விழிப்புணர்வு என்பது மனதினுள் நடக்கும் செயல்பாடுகளை அந்த மனமே கவனித்து கொண்டு இருப்பது. நமது மனம் ஒரு செயல்பாடுகளின் பிரவாகம். அந்த முழு பிரவாகத்தையும் உணரும் தன்மையே ஆன்மீகத்தின் இறுதி புள்ளியாக இருக்கலாம். மனதின் செயல்பாட்டுக்கு உதாரணமாக, நம் கண்கள் வெளியே காண்கிறது என்றால், அதே செயல் நம் மனதினுள்ளும் நடக்கும். மனதில் நடக்கும் செயல், வெளியே நடக்கும் செயல்பாட்டின் உண்மை பிரதியாக இருக்க வேண்டும் என்றால் அச்செயலை குறித்து நம் புலன்கள் மூளைக்கு அனுப்பும் செய்திகளை மனம் அவ்வாறே பிரதிபலிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. புலன்கள் அனுப்பும் செய்திகளுடன், நம் நினைவுகளில் அந்த செயல் குறித்து உள்ள செய்திகளையும் சேர்த்து, மூளை நம் மனமாக பிரதிபலிக்கிறது. புலன்கள் அனுப்பும் செய்திகள் அந்த புலன்கள் சரியாக வேலை செய்யும் பட்சத்தில், நடைபெறும் செயலுக்கு மிக நெருக்கத்தில் இருக்கலாம். ஆனால் நம் நினைவுகளில் அந்த செயலை குறித்து உள்ள செய்திகளின் உண்மைத்தன்மை கேள்விக்குரியது. இப்போது நாம் அந்த செயலை கவனிப்பது என்பது, உண்மையில் நம் மனதினுள் நடக்கும் அச்செயலின் பிரதிபலிப்பை கவனிப்பதாகும். நாம் முழு ஈடுபாட்டுடன் அந்த செயலை கவனிக்காத பட்சத்தில், நம் மூளை அச்செயலை நினைவுகளாக பதிவு செய்கிறது. நாம் பெரும்பாலும் பார்ப்பது இந்த நினைவுகளை மட்டுமே. அந்த செயல் நடைபெறம்போது, மனதில் நிகழும் பிரதிபலிப்பை உணர்வது என்பது மிக மிக அபூர்வமாகவே நிகழும் – நாம் முழு ஈடுபாட்டுடன் அந்த செயலை கவனிக்கும்போது மட்டும்.

ஆக, அன்றாட வாழ்க்கையை நாம் நினைவுகளிலிருந்து மட்டுமே மீட்டெடுத்து கொண்டிருக்கிறோம். ஆகவே நாம் வாழ்க்கையை நிகழும்போது, நிகழும் கணத்தில் வாழ்வதில்லை. வாழ்க்கை முடிந்த பின், நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்க்கையை நாம் நிகழும் கணத்தில் வாழ, வாழ்வின் மேல் மிகப்பெரிய ஈடுபாடும் அந்த ஈடுபாட்டின் விளைவாக உருவாகும் விழிப்புணர்வும் அவசியம். நாம் நிகழும் கணத்தில் வாழ அறிந்து கொண்டோமென்றால், நம் நினைவகளுக்கு தேவைகளும் இல்லை, எனவே நினைவுகளை மீட்டெடுத்து அந்த நினைவுகளில் வாழ வேண்டிய அவசியமும் இல்லை. நிகழும் கணத்தில் வாழும்போது, நினைவுகளின் மூலமாக எழும் துக்கம், துயரம் போன்ற கொடுந்துன்பங்களும் இல்லை.

நம் மனதை நாம் பெரும்பாலும் புறவயமான செயல்களில் ஈடுபடுத்தி இருப்பதாலும், அந்த புறவயமான செயல்கள் மனதில் உருவாக்கும் பாதிப்புகளாலும், நம் மனம் விழிப்புணர்வு தன்மையை பெரும்அளவில் இழந்துள்ளது. இழந்த அந்த விழிப்புணர்வை திரும்ப பெறும் முயற்சிகளின் தொகுப்பே ஆன்மீகம் ஆகும்.

நாம் நிகழும் செயலை அவ்வாறே உணர்வதற்கு தடையாக இருப்பது, புலன்கள் மூளைக்கு கொடுக்கும் செய்தியை மனமாக பிரதிபலிக்கும்போது அதை திரிவடைய செய்யும் நினைவுகளே ஆகும். அந்த நினைவுகளானது அச்செயலைப்பற்றி மனம் முன்பே அறிந்துள்ள செய்திகளோ அல்லது நம் நம்பிக்கை, பயம், ஆசை மற்றும் இது போன்ற பல, பல வடிவங்களில் இருக்கலாம். இந்த காரணிகள் ஒன்றோடொன்றாய் ஒரு சங்கிலித் தொடராய், மிக இறுக்கமாக பிணைந்துள்ளது. இந்த நினைவுகளின் சங்கிலித்தொடர் நம் புலன்கள் மனதில் பிரதிபலிப்பதை திரிவடைய செய்யும்வரை, நம் மனம் மாயத்தோற்றங்களையே நினைவுகளாக சேர்த்து கொண்டிருக்கும். நாம் விழிப்புணர்வு இல்லாமல் நினைவுகளின் மூலம் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும்போது மாய உலகில் வாழ்வதை விட வேறு வழியே இல்லை.
வாழ்க்கையை நாம் நேரடியாக வாழ வேண்டுமென்றால், அதற்கான முதல் தேவை நேரடியாக வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற மிகத்தீவிரமான விருப்பு. வாழ்க்கையை நேரடியாக வாழ வேண்டும் என்னும் தீவிரமான விருப்பு, அதற்கு தேவையான மிக குறைந்த பட்ச விழிப்புணர்வை கொடுக்கிறது. இந்த குறைந்த பட்ச விழிப்புணர்வுடன் வாழ்வின் மீதான அதீத ஈடுபாடும் சேரும்போது, வாழ்வின் ஒவ்வொரு வாசலாக நம் முன் திறக்க தொடங்கலாம். ஆனால் அந்த ஒவ்வொரு வாசலிலும் நம்மை மீண்டும் நினைவுகளில் சிக்க வைக்கும் பொறிகள் நமக்காக காத்து கொண்டிருக்கலாம். இந்த பொறிகளில் சிக்காமல் வாழ்க்கையை உணர நம் தீவிர விருப்பையும் அதன் மூலம் பெறும் விழிப்புணர்வையும் உயிர்ப்புடன் வைத்திருப்பது மிக மிக அவசியம்.

ஆக, விழிப்புணர்வு என்பது செயல்கள் நம் மனதில் பிரதிபலிக்கும்போதே அந்த செயலை உணர்வது ஆகும். அந்த செயல் என்பது நமக்கு வெளியே நடைபெற்று புலன்களால் மனதில் பிரதிபலிக்கப்படலாம் அல்லது நம் மனதுக்குள் மட்டும் நடைபெறும் செயலாகவும் இருக்கலாம். விழிப்புணர்வின் உச்சத்தை அடையும்போது இந்த உலகில் நம்மால் அடைய முடியாதது என எதுவும் இல்லாமல் கூட இருக்கலாம். அல்லது இந்த உலகில் நாம் அடைவதற்கு என எதுவும் இல்லாமல் கூட இருக்கலாம்!