Friday, December 30, 2011

பக்தி, ஆன்மீகம்

தற்போதைய காலகட்டத்தில் பக்தி என்பது ஒரு பாவனையாக மாற்றப்பட்டு, அந்த பாவனையுடன் இருப்பதே ஆன்மீகம் என்னும் ஒரு மாயை மிகப் பரவலாக உள்ளது. மேலும் இன்றையப் பொதுத் தளத்தில் பக்தி என்னும் கருத்து மிகவும் திரிவடைந்து உள்ளது – கடவுள் என்னும் கருத்தை நோக்கி வேண்டுதல்களை முன் வைப்பது அல்லது கடவுள் என்னும் கருத்தை நோக்கி சேவைகள் செய்வது. ஆனால் ஆன்மீக தளத்தில் பக்தி என்பதன் அர்த்தம் முற்றிலும் வேறானதாகவே இருக்க வேண்டும். அது நமக்குள் இருக்கும், ஆனால் நாம் இழந்துவிட்ட உணர்திறனை வீரியத்துடன் வெளிக்கொண்டு வரும் கருவி. பக்தியின் உண்மையான பயன்பாடு நமக்கு தெரியாவிட்டால், அந்த பக்தியால் எந்த பயனும் இல்லை – அது ஒரு உளவியல் அணிகலனாக மட்டுமே இருக்க முடியும், ‘நான்’ என்னும் கருத்தை மெருகூட்டுவதற்காக!


பக்தி என்பது, முழு அற்பணிப்பு அல்லது முழு ஈடுபாடு அல்லது முழுமையான சரணடைவு (devotion/surrender) என்பதன் குறியீடு. ஆன்மீகத்தின் எந்த வழியை பின்பற்றினாலும், முழுமையை அடைவதற்கு பக்தி என்பது மிக அவசியமானதாக இருக்க கூடும். முழுமையான சரணடைதல் என்னும் படி இல்லாமல் ஆன்மீகத்தில் உச்ச நிலையை அடைய முடியும் என்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை. ஆன்மீகத்தில் காணப்படும் எல்லா அறிதல் முறைகளும், எல்லா தத்துவங்களும், எல்லா பயிற்சிகளும் முழுமையான சரணடைதலுக்காக நம் மனதை பண்படுத்துவதாகவே இருக்கும். அத்தகைய அறிதல்களும், தத்துவ விசாரணைகளும், பயிற்சிகளும் இல்லாமல் பக்தி என்னும் நிலையை நம்மால் அடைய முடியுமா? நம் தற்போதைய மன நிலையில், நம்மை விட பெரிதாக நாம் கருதும் ஒன்றிடம் (அந்த ஒன்று, கடவுளாக அல்லது கடவுள் என்னும் கருத்தாக கூட இருக்கலாம்) நம்மால் முழுமையாக சரணடைய முடியுமா? அவ்வாறு முடியாவிட்டால், நாம் பக்தி என கூறுவதன் அர்த்தம் என்ன? நம் மூளையைக் குறித்து நம்மிடம் உள்ள எளிய அறிவும், நம் சுற்று சூழலை கவனிப்பதுமே இந்த கேள்விகளுக்கு விடையளிக்க போதுமானவையாக இருக்க கூடும்.

நம் மூளை, அதன் அன்றாட செயல்பாட்டின் அடிப்படையில், இரண்டு பகுதிகளாக பிரிக்கப் பட்டுள்ளது – இடது மூளை மற்றும் வலது மூளை. இடது மூளை தர்க்க ரீதியான நம் செயல்பாடுகளில் உபயோகப்படுத்தப் படுகிறது. வலது மூளை உணர்வு சார்ந்த செயல்பாடுகளில் உபயோகப்படுத்தப் படுகிறது. நம் ஒவ்வொருவரும் மூளையின் இந்த இரண்டு பகுதிகளையும் உபயோகப்படுத்தியாக வேண்டும். ஆனால் எந்த பகுதியை அதிகமாக உபயோகப்படுத்துகிறோம் என்பது நம் தனிமனித இயல்பைச் சார்ந்தது.

ஆன்மீகத்தின் நோக்கம் நம்மை நாமே முழுமையாக அறிவது அல்லது உணர்வது. நம்முள் இருக்கும் கடவள் தன்மையை முழுமையாக உணர்வது – அதை நாம் ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவது அல்லது உணர்வது எனக்கூறினாலும், ஜீவாத்மா பரமாத்வாவின் காலடியை சேர்வது எனக்கூறினாலும், கடவுளை அடைவது எனக்கூறினாலும், கடவள் தன்மையை அடைவது எனக்கூறினாலும், மோக்ஷ்சம் எனக்கூறினாலும், சமாதி நிலை எனக்கூறினாலும், நிர்வாணம் எனக்கூறினாலும், இன்னும் வேறு எதுவுமெனக்கூறினாலும்!

நம்மை முழுமையாக உணர்வது என்பது, நம் அறிதல் என்னும் செயல்பாட்டில் வலது மூளை முழுமையாக ஈடுபடுவது மட்டுமாகவே இருக்க முடியும். அதாவது, அறிதலில் இடது மூளையின் தர்க்கத்தின் இடர்பாடு இல்லாமல் வலது மூளை முழுவதுமாக, முழு உணர்வு நிலையில் ஈடுபட்டிருப்பதாகும். அத்தகைய நிலையை நாம் அடையும்வரை, முழுமையான சரணடைத்தல் என்பதற்கு சாத்தியமே இல்லை. வலது மூளையின் ஒவ்வொரு சரண்டையும் முயற்சியிலும், இடது மூளை அதன் தர்க்கத்தை நிலைநாட்டிக்கொண்டே இருக்கம். எனவே முழுமையான சரணடைதல் என்பதை இடது மூளையின் செயல்பாடு தடுத்துக் கொண்டே இருக்கும்.

வலது மூளையின் செயல்பாட்டின் முதன்மையை அல்லது ஆதிக்கத்தை இயல்பாக கொண்டவர்கள், பக்தி அல்லது சரணடைதல் என்னும் உணர்வு நிலையை முழுமையான அறிதலை நோக்கிச் செல்ல பயன்படுத்தலாம். ஆனால் அவர்களும் இடது மூளையின் செயல்பாட்டைத் தாண்டியே முழுமையை அடைய முடியலாம். இடது மூளையின் முதன்மையை அல்லது ஆதிக்கத்தை இயல்பாக உடையவர்கள், அதன் ஆதிக்கத்தை முற்றிலுமாக இழந்த அல்லது தாண்டிய பின்னர்தான் முழுமையான ஆன்மீக உணர்வை அடைய முடியலாம். இடது மூளையின் ஆதிக்கத்தை இயல்பாக உடையவர்கள், அவர்கள் இயல்பான தர்க்கத்தையே அதை தாண்டிச் செல்ல உபயோகப்படுத்துவதைப் போல, வலது மூளையின் ஆதிக்கத்தை இயல்பாக உடையவர்கள், அவர்கள் இயல்பான உணரும் தன்மையையே இடது மூளையின் இயல்பை தாண்டிவர உபயோகப்படுத்தலாம். ஆனால், அவர்களும் இடது மூளையின் இருப்பை உணர்ந்தாக வேண்டும். இடது மூளையின் இருப்பை அவர்களால் உணரமுடியாவிட்டால், இடது மூளையின் செயல்பாடுகளை தாண்டாவிட்டால், அவர்கள் பக்தி அல்லது சரண்டைதல் எனக் கூறுவது, மனம் அதனையே ஏமாற்றும் ஒரு தந்திரம்(deception) மட்டுமே!

நாம் வாழும் முறையை, உள்நோக்கித் திரும்பி, எப்போதாவது நம்மால் கவனிக்கப் பட்டிருந்தால், நாம் நம்முடைய இயல்பை விட்டு எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம் என்பதை நம்மால் உணர முடியலாம். அதிவேகமாக நாம் வாழும் சூழல் மாறிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், அந்த சூழலுக்கேற்ப நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில்முழுமையாக ஈடுபடுவதால், நம் வாழ்க்கையை அறிவதற்கான சாத்தியங்களையும் நாம் முழுவதுமாக இழந்து விடுகிறோம். அதாவது நம் வாழ்வு முழுவதையும், நமக்கேற்ற சூழலை உருவாக்குவதை விட்டு விட்டு, சூழலுக்கேற்ப நம்மை மாற்றுவதிலேயே செலவழிக்கிறோம். அதாவது, நம் இயல்பை விட்டு விட்டு, மாறும் சூழலுக்கேற்ப நம்மை மாற்றுகிறோம். இதன் மூலம் நம் இயல்பையும் இழந்து விடுகிறோம்.

வலது மூளையின் ஆதிக்கம் உடையவர்கள், அதன் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தாமல், தங்கள் இயல்பிலிருந்து மாற முடியாது. ஆனால் சூழலுக்கேற்ப நாம் மாறுவதில் முனைப்புடன் இருப்பதால், நம் இடது மூளையின் துணைக்கொண்டு நம் இயல்புகளை மறந்து விட்டோம் அல்லது அறியாமல் தவிர்த்து விட்டோம். அதாவது, நாம் ஆன்மீகத்திற்கு எதிரான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம – இடது மூளையின் தர்க்க இயல்பைத் தாண்டி வலது மூளையின் உணர்வு நிலைக்கு வருவதற்கு பதிலாக வலது மூளையின் உணர்வு நிலையை தாண்டி, இடது மூளையின் தர்க்க நிலைக்கு வந்திருக்கிறோம். அவ்வாறு வந்தால் மட்டுமே, வேகமாக மாறிவரும் சூழலுக்கேற்ப நம்மை நம்மால் மாற்றிக்கொள்ளமுடியும்.

நம் உணர்வு நிலைகளை மழுங்கடித்து விட்டு, பக்தி, சரணடைதல் ஆகியவற்றை நம் இயல்பாக நம் மனம் கருதினால், அது நம் மனம் தன்னைத்தானே ஏமாற்றும் தந்திரம் (deception) மட்டுமே. நாம் வலது மூளையின் ஆதிக்கத்தை இயல்பாக உடையவர்களாக இருந்தாலும், அந்த இயல்பை, தற்போதைய நம் வாழ்க்கைச் சூழலில் அறிந்து கொள்ள இடது மூளையின் தர்க்க இயல்பை உபயோகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தத்துவங்களும், தத்துவ மூல நூல்களும் (scriptures) நம் இடது மூளையைன் இயல்பைத் தாண்டி வர நமக்கு உதவலாம் – தத்துவம் அல்லது மூல நூல்களின் பயன்பாடு, மனதின் தர்க்க நிலையை தாண்டி வருவதற்கு பட்டுமே. மனதின் தர்க்க செயல்பாட்டைத் தாண்டி உணர்வின் இயக்கத்திற்கு வரும்போது, நாம் தத்துவங்களையும் மூல நூல்களையும் தாண்டி வந்திருப்போம்! அதன் பின்னர், தர்க்கங்களுக்கும், தத்துவங்களுக்கும், மூல நூல்களுக்கும் எந்த தேவையும் இல்லை!

Sunday, December 11, 2011

தனிமை

புற உலகில் நாம் எத்தனை உறவினர்கள் புடை சூழ இருந்தாலும், எத்தனை நண்பர்கள் சூழ்ந்திருக்க வாழ்ந்தாலும் அகத்தளவில் நம்மில் பெரும்பாலானவர்கள் மிக மிக தனிமையானவர்களே.அந்த தனிமையை அறிவது, ஆன்மீகத்தில் ஒரு முக்கியமான நிலைப்படியாக இருக்க கூடும். அந்த தனிமையை அறிந்தவர்களின் புற உலகப் பார்வை முற்றிலும் வேறானதாக இருக்க கூடும் – சமூக இயக்கத்தின் அடிப்படையை அறிவதன் மூலம். அகத்தனிமை என்றால் என்ன?

நாம் அறிவு எனக் கருதும் நம் அறிவின் ஒரு பகுதி, நம் எண்ணங்களின் பதிவுகளே. இந்த அறிவு நம் புலன்களால் உணரப்பட்டவையும், அனுமானத்தால் பெறப்பட்ட புலன் அறிவின் நீட்சியுமாகும். இந்த அறிவின் பரப்பே நாம் அறியும் உலகத்தின் பரப்புமாகும். ஆக, நாம் அறியும் உலகின் இயல்பு என்பது நம் அறிவின் இயல்பு மற்றும் அறிதலின் இயல்பை சார்ந்தே இருக்கும். மனித இனத்தில், எந்த இருவரின் அறிதல் இயல்பும் அறிவின் இயல்பும் ஒன்று போல் இருக்க சாத்தியம் இல்லை. எனவே நம்மில் எந்த இருவரின் உலகங்களும் ஒன்று போல் இருக்கவும் சாத்தியம் இல்லை. நாம் ஒவ்வொருவரும் நமக்கேயான உலகத்தில் நாம் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நமக்கேயான உலகத்தில், நம் உறவுகளையும், நண்பர்களையும், அறிந்தவர்களையும் நாமே நம்முடன் இணைத்துக் கொண்டுள்ளோம் – அவர்களாக இணையவில்லை, இணையவும் முடியாது. இதே போல, நம் உறவுகளும், நண்பர்களும், நம்மை அறிந்தவர்களும் அவர்களுடைய உலகத்தில் நம்மை இணைத்திருப்பார்கள் – நாமாக இணையவில்லை, நம்மால் இணையவும் முடியாது.

இங்கு எவருமே அடுத்தவர் உலகத்தில் நுழைந்து அவர்கள் தனிமையைப் போக்கவில்லை. ஆனால் அடுத்வர்களை நம் உலகத்தில் நுழைத்து, நம் தனிமையைப் போக்கிவிட்டோமென்ற கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த கற்பனையின் மூலமே நம் தனிமையை மறைத்து அதன் மூலம் துயரங்களிலிருந்து விடுபடும் சாத்தியத்தை மரணம்வரை தள்ளி வைக்கிறோம்.

அத்தகைய தனிமையை எவ்வாறு அறிந்து கொள்வது? ஒருவேளை ஆன்மீகத்தின் சாரமே இந்த தனிமையை அறிந்து கொள்வதாக இருக்க கூடும் – ஆன்மீகத்தை ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது. நமக்கேயான நம் உலகத்தை, அதன் இயல்புகளுடன் அறிந்து கொள்ளும்போதுதான் நம் தனிமையை உணர முடியலாம். நாம்முடைய உலகை அறிய முற்படும்போது, அது முழுவதும் நம் இயல்பை சார்ந்து இருக்கும் என்பதை அறிவோம். இந்த அறிதல், பிறருடைய உலகம், அவர்களின் இயல்பை சார்ந்தே இருக்கும் என்னும் அறிவுக்கு நம்மை எடுத்துச் செல்லலாம். இந்த ஜட உலகில், நம் இயல்பைப் போன்ற இயல்புடைய இன்னொருவார் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்னும் உண்மையை நாம் அறிய நேரிட்டால், இந்த உலகில் நாம் அகவயமாக எவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை உணரலாம். அதாவது, இந்த உலகை நாம் பார்க்கும் அதே பார்வையில் பார்க்கும் இன்னொருவர் இல்லாமல் இருப்பதால் நம் உணர்வுகளை அறியக்கூடிய இன்னொருவார் இந்த உலகில் இல்லை. நம் உணர்வை பிறரால் அனுமானிக்க மட்டுமே முடியும் – அதுவம் அவர்களின் அனுமானிக்கும் தன்மையைப் பொறுத்தது.

புறவயத்தில் நாம் உறவுகளும் நட்புகளும் சூழ இருக்கையில், அகவயத் தனிமையின் முக்கியத்துவம் என்ன? நம் வாழ்க்கையில் உணவு மற்றும் உடல்ரீதியான பாதுகாப்பும் சில அடிப்படைத் தேவைகளும் தவிர மற்ற அனைத்து வாழ்வின் அம்சங்களும் உளவியல் சார்ந்தவையே – நம் மகிழ்ச்சியும் துயரங்களும் கூட. உறவுகள் மற்றும் நட்புகள் குறித்த நம் உளவியல் இயக்கங்களே பெரும்பான்மையான நம் மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் தீர்மானிக்கிறது. புறவயத் தேவைகளுக்காக நம்முடன் இருக்கும் உறவுகளும் நட்புகளும், மன இயக்கங்கள் சார்ந்தும் நம்முடன் உறவுடன் இருக்கிறார்கள் என்னும் மாயையில் நாம் இருக்கும்போது, உண்மையில் அத்தகைய உறவுகள் மன இயக்கங்கள் அளவில் இல்லாததால், நம் உறவுகள் மற்றும் நட்புகளுடன் முரண்பட நேரிடுகிறது. இந்த முரண்பாடுகளே பெரும்பான்மையான நம் துயரங்களுக்கு காரணமாக இருக்க கூடும்.


மன இயக்கங்கள் சார்ந்து, உறவுடன் இருப்பது என்பது, சாதாரண நிலையில் இரண்டு மனிதர்களுக்கு இடையே சாத்தியமற்றது. இரண்டு மனிதர்கள் ஒரே வகையிலான மன எழுச்சியில், மனதில் பிற எண்ணங்கள் இல்லாமல் இருக்கும்போது மட்டுமே அத்தகைய உறவு சாத்தியமாக கூடும். சாதாரண நிலையில், அத்தகைய மன எழுச்சி ஏற்பட்டாலும், மனதில் எண்ணங்கள் இல்லாத மன எழுச்சி நிலை சில வினாடிகளுக்கு மேல் தொடர வாய்ப்பில்லை. ஆகவே, உண்மையிலேயே நாம் யாருடனாவது உறவுடன் இருந்திருப்போம் என்றால் அது நம் நீண்ட வாழ்க்கையில் ஒரு சில வினாடிகள் மட்டுமே – அல்லது அத்தகைய நேரங்களின் கூட்டுத் தொகை ஒரு சில நிமிடங்கள் மட்டுமே.

நம் அகவயத்தனிமையை உண்மையிலேயே உணரும்போது, நம் உளவியல் தேவைகளுக்காக நாம் எவரையும் சார்ந்திருக்க மாட்டோம் – அவர்கள் நம் மனைவி\கணவனாக இருந்தாலும், வாரிசுகளாக இருந்தாலும், பெற்றோராக இருந்தாலும், பிரிக்க முடியாத (!) நட்புகளாக இருந்தாலும். இத்தகைய உளவியல் விடுதலையில் மனம் இருக்கும்போது, பிறரிடமிருந்து – அவர்கள் யாராக இருந்தாலும், எந்தவித எதிர்பார்ப்பும் இருக்காது. எதிர்பார்ப்புகள் இல்லாத மனத்திற்கு தோல்விகள் இல்லை. எனவே துயரங்களும் இல்லை.

Friday, December 2, 2011

மதங்கள், நம்பிக்கைகள், சடங்குகள்

ஆன்மீகம் என்பது மதங்கள், நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் இவை போன்றவற்றிலிருந்து முற்றிலும் வேறானது. ஆனால் மதங்களும் நம்பிக்கைகளும் சடங்குகளும் ஆன்மீகம் முளை விடுவதற்கு ஒரு அடிப்படை காரணமாக இருக்க கூடும். ஒரு ஆன்மீகவாதி எப்போதுமே மதவாதியாக இருக்க முடியாது. ஆனால் பெரும்பாலும் மதங்களாலும் அதைச் சாரந்த நம்பிக்கைகாளாலும் குறியீடுகளாலும் பண்படுத்தப்பட்ட ஒரு சமூகத்திலுருந்துதான் ஆன்மீகவாதி வெளிப்பட சாத்தியங்கள் அதிகமாக இருக்கலாம்.

மதம் என்பது ஆன்மீக வெளிப்பாடுகளை சமூகத்தில் பரவ செய்யும் ஒரு அமைப்பு. சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் வெவ்வேறு அறிதல் திறனுடனும் வெவ்வேறு அறிவு சூழலிலும் இருப்பதால் ஆன்மீக வெளிப்பாடுகளை நேரடியாக சமூகத்தில் பரவ செய்வது இயலாமல் இருக்கலாம். ஆனால் சமூகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு அத்தகைய பரப்புதல் மிகத்தேவையானது. எனவே மதம் என்னும் அமைப்பு குறியீடுகள் (Representation) மூலம் ஆன்மீக வெளிப்பாடுகளை சமூகத்தில் பரப்புகிறது. ஆன்மீகம் என்பது மனித இனத்தின் வாழ்க்கை குறித்த தேடுதல் – எல்லா சமூகங்களுக்கும் பொதுவானது.

ஆன்மீக வெளிப்பாடுகளை பெற அந்த மதத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்தால் நிச்சயமாக முடியாது. காரணம் ஒரு மதவாதியால் நிச்சயமாக ஆன்மீகவாதியாக இருக்க முடியாது. எனவே ஒரு மதம் சமூகத்தில் பரிணாம வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமானால், அந்த மதம் ஆன்மீகவாதிகளிடமிருந்து தொடர்ச்சியாக ஆன்மீக வெளிப்பாடுகளை பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். எனவே அந்த சமூகத்தில் தோன்றும் ஆன்மீகவாதிகளை மதம் தன்னுடன் இணைத்து கொண்டும் அதன் தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்திக் கொண்டும் இருக்கிறது - ஆன்மீகவாதி என்பவர் வாழ்க்கை குறித்த தேடுதலை உடையவர்.

ஆன்மீக வெளிப்பாடுகளை குறியீடுகள் மூலம் சமூகத்தில் பரப்பும்போது, பெரும்பாலானவர்களால் அந்த குறியீடுகள் சுட்டும் ஆன்மீக சாரத்தை புரிந்து கொள்ள இயலாமல் இருக்க கூடும். அத்தகைய நிலையில் அந்த குறியீடுகள் வெறும் நம்பிக்கைகளாகவும் சடங்குகளாகவம் அந்த மதத்தில் பெரும்பாலானவர்களால் பின்பற்ற முடியுலாம். இதன் மூலம், ஆன்மீக வெளிப்பாடுகளை சமூகத்தால் உள்வாங்கிக் கொள்ள முடியாவிட்டாலும், அந்த வெளிப்பாடுகள் குறியீடுகளாக, அந்த குறியீடுகளை உள்வாங்கிக் கொள்ளக்கூடியவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும்.

ஆக, இன்று நம் மதங்களில் காணப்படும் அடிப்படை நம்பிக்கைகளும், சடங்குகளும், அதைப் போன்றவையும் ஆழமான ஆன்மீக வெளிப்பாடுகளின் குறியீடுகளாகவே இருக்க முடியும். ஆனால் மதம் அதன் இயக்கத்தில், அந்த அடிப்படை நம்பிக்கைகளை மட்டும் கொண்டிருக்காமல், சமூக இயக்கங்களின் காரணமாகவும், சமூக இயக்கங்களில் சார்புநிலை அறிவின் காரணமாகவும் பல புதிய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பிறவற்றையும் உருவாக்குகிறது. இந்த சார்புநிலை நம்பிக்கைகளும் சடங்குகளும் அந்த மதத்தின் பிரதான இயக்கங்களாக மாறும்போது, அது சுட்டும் ஆன்மீக வெளிப்பாடுகள் பின்நோக்கி தள்ளப்படுவதுடன், மதம் அதன் நோக்கத்திலிருந்தும் பிறழ்கிறது. அதாவது, மதம் ஆன்மீகவாதிகளின் தொடர்பை பெருமளவு இழந்து விட்டதுடன் மதவாதிகளின் துணையுடன், எந்த ஆன்மீக சாரமும் இல்லாத வெற்று நம்பிக்கைகளின், சடங்குகளின் தொகையாக மாறி விடுகிறது.

மிக சமீப காலம்வரை ஆன்மீக பயிற்சிகள் பல்வேறு காரணங்களால் பெரும்பாலானவர்களுக்கு எட்டாததாகவே இருந்து வந்துள்ளது. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, ஆன்மீக வளர்ச்சியை தனிமனித மனதினுள் தூண்டச் செய்யும் ஆரம்பகட்ட பயிற்சிகள், பல்வேறு ஆன்மீக குருக்கள் மற்றும் அவர்கள் அமைப்புகள் மூலம் பரவலாக்கப் பட்டுள்ளது. தற்போதைய தகவல் தொழில்நுட்பம், ஆன்மீக பயிற்சிகள் வெகுஜனமயமாக்குதலுக்கு மேலும் தூண்டுதலாக அமைந்துள்ளது.


தற்போதைய காலகட்டத்தில் அறிவுச்சூழல் முன் எப்போதும் இல்லாத வகையில், தகுதி உடைய பெரும்பாலனவர்களும் அறிவை அடைவதற்கு சாத்தியமுள்ளதாக உள்ளது. அதாவது தொழில்துறை வளர்ச்சிகள் மூலமும், பொதுமக்கள் சார்புநிலை உடைய அரசாங்கங்கள் மூலமும், பெரும்பாலானவர்களின் அடிப்படை வாழ்க்கை போராட்டம் மிகவும் எளிதாக்கப் பட்டுள்ளது. ஆக விருப்பமிருந்தால், ஆன்மீக தேடலுக்கான சாத்தியங்கள் முன் எப்போதும் இல்லாத அளவில் தற்போதைய காலகட்டத்தில் மிக அதிகமாக உள்ளது - ஆன்மீகத்தின் தொடக்கநிலை பயிற்சிகள் அனைவருக்கும் கிடைப்பதற்கான சாத்தியங்களுடனும்.

அதே நேரத்தில், ஆன்மீக தேடுதலுக்கான சாத்தியத்தை கொடுக்கும் அதே காரணிகள், ஆன்மீக வெளிப்பாடுகளை சுட்டும் குறியீடுகளையும், சடங்குகளையும், லொகீகத்தை நோக்கி திசை திருப்புவதுடன், லொகீகம் சார்ந்த அர்த்தங்களையும் மனதின் சார்புநிலை அறிவுகள் மூலம் உருவாக்குகிறது. இதன் மூலம் புதுப்புது நம்பிக்கைகளும், குறியீடுகளும், சடங்குகளும் மதத்தினுள் உருவாக்கப்படுகிறது. இத்தகைய நம்பிக்கைகளும் சடங்குகளும் சார்புநிலை அறிவின் மூலமே உருவாக்கப் படுவதால், அத்தகைய நம்பிக்கைகளும், சடங்குகளும் உண்மையுடன் எந்த விதத்திலும் தொடர்புடையதாக இருக்க சாத்தியங்களே இல்லை. மேலும் ஆன்மீக பயிற்சி அளிக்கும் அமைப்புகளின் மூலம் ஆன்மீகத்தின் தொடக்கத்தை அறிந்தவர்களிலும், அந்த பயிற்சிகள் மூலம் தொடக்க நிலை பயன்பாட்டை உணர்ந்தவர்களிலும் பெரும்பாலானவர்கள், அந்த அமைப்பின் மேல் அல்லது ஆன்மீக குருவின் மேல் வழிபாட்டில் ஈடுபட்டு விடுகிறார்கள். இதன் மூலம் அந்த அமைப்பு அல்லது குரு வெளிப்படுத்தும் ஆன்மீக வெளிப்பாட்டின் சாரத்தை இழந்து, வெறும் வழிபாட்டு மன நிலையுடன், அமைப்பு அல்லது குருவின் வார்த்தைகளையே ஆன்மீக வெளிப்பாடுகளாக எடுத்துக் கொள்கிறார்கள். இதன் மூலம் மீண்டும் நம்பிக்கைகளிலும் வழிபாட்டு மன நிலையிலும் விழுந்து விடுவதுடன், அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆன்மீகப் பயிற்சிகளையும் ஒரு சடங்காக மாற்றி விடுவதன் மூலம், அவர்களுக்குள் தோற்றுவிக்கப் பட்ட ஆன்மீக தேடுதல் மனநிலையையும் இழந்து விடுகிறார்கள். இதன் மூலம் ஆன்மீக அமைப்பினால் அல்லது அமைப்பு சார்ந்த குருவால் வழங்கப் பட்ட, வாழ்க்கையை அதன் முழுமையான சாத்தியங்களுடன் வாழும் வாய்ப்பையும் இழந்து விடுகிறார்கள்.

துரதிர்ஷ்டவசமாக சமூகத்தின் பெரும்பாலானவர்கள் உண்மைக்கு தொலைவில் உள்ள இந்த நம்பிக்கைகளையும் சடங்குகளையுமே மதமாக, ஆன்மீக வழியாக கொள்கிறார்கள். காரணம், பெரும்பாலானவர்களுக்கு உண்மையை அறிய வேண்டிய தேடுதல், அவர்கள் மனதில் தோன்றுவதில்லை அல்லது தோற்றுவிக்கப் படுவதில்லை – அதற்கான சாத்தியங்கள் பெருமளவில் இருக்கும் தற்போதைய காலகட்டத்திலும். உண்மையிலேயே ஆன்மீகத் தேடல் உள்ளவர்களால் இத்தகைய பொய்தோற்றங்களை அளிக்கும் ஆன்மீக மயமாக்கப்பட்டவற்றை, அவர்களின் ஆன்மீக தேடலின் தொடக்க நிலையிலேயே அறிந்து கொள்ள முடியும்.

Wednesday, November 23, 2011

அறிவு, அறிதல், மாயை (தொடர்ச்சி)

அறிவை முழுமையான(Absolute) அறிவு சார்புநிலை(Relational) அறிவு என இரண்டு வகைகளாகப் பொதுமை படுத்தலாம். இங்கு முழுமையான அறிவு என்பது தர்க்க நிலைகளுக்கு(Logic) அப்பாற்பட்டது, மனம் அதன் முழு விழிப்பு நிலையில் பெறுவது. முழுமையான அறிவுக்கான தேவை, அந்த அறிவை குறித்த தேடுதல் நம் மனதில் தோன்றினால் அல்லது தோற்றுவிக்கப் பட்டால் மட்டுமே. அத்தகைய தேடுதல் இல்லாத பட்சத்தில், சார்புநிலை அறிவு மட்டுமே நம்அன்றாட வாழ்க்கைக்கு போதுமானதாக இருக்ககூடும். ஆனால் சார்பு நிலை அறிவை முழுமையான அறிவாக நாம் ஏற்றுக்கொண்டால், நம் எல்லா வகையான துன்பங்களுக்கும் அந்த அறிவே ஆதாரமாக இருக்க கூடும். முழுமையான அறிவுக்கான தேடுதல் நம் இயல்பைப் பொறுத்தது - ஆனால் சார்புநிலை அறிவின் முழுமையின்மையை உணர்வது, நம் அமைதியான வாழ்வுக்கு மிக மிக இன்றியமையாதது.


சாதாரண நிலையில், முற்றிலும் புதிதாக நம்மால் எதையும் அறிய முடியாது. நாம் அறிவதெல்லாம் , நாம் முன்பே அறிந்தவற்றின் தொடர்ச்சிகள் மட்டுமே. முற்றிலும் புதிதாக எதையாவது அறிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும், அதையும் நாம் முன்பே அறிந்தவற்றுடன் தொடர்பு படுத்தி மட்டுமே அறிய முடியும். அதாவது நம் அறிவின் தரம் அல்லது இயல்பு, நாம் முன்பே அறிந்தவற்றின் தரம் அல்லது இயல்பை பொறுத்தே அமையும்.ஆகவே நாம் அறிந்தவை உண்மையிலிருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ அந்த அளவு தூரம், நாம் புதிதாக அறிபவையும் உண்மையிலிருந்து விலகி இருக்கும். ஆக நாம் உண்மையை அறிய விரும்பினால், நம் அறிதலின் இயல்பையும், நம் முன் அறிவையும் அறிந்து கொள்வது மிக அவசியம்.

அனுமானம் (Assumption) என்பது, நம் சாதாரண நிலை அறிதலின் இன்றியமையாத கருவி. அனுமானமே நாம் புதிதாக அறிய வேண்டியவற்றை , முன்பே அறிந்தவற்றுடன் தொடர்பு படுத்தி நம் அறிவாக மாற்றுகிறது.ஆகவே நம் அறிவின் தரம் அல்லது இயல்பு, நம் அனுமானிக்கும் தரம் அல்லது இயல்பையும் பொறுத்து அமையும்.

இன்னும் சற்று ஆழமாக பார்த்தால், நாம் அறிதல் என அறிவது, நம் புலன்கள் உணர்வதை, மனம் அதன் ஆழத்திலிருந்து கண்டெடுத்து வெளிப்படுத்துவதையே. வேறு வார்த்தைகளில் கூறினால், இந்த உலகத்தில் சாத்தியமான எல்லா அறிவும் நம் மனதினுள் புதைந்து கிடக்கிறது. நம் புலன்கள் உணரும்போது, அதற்கான அறிவை, மனம் அதன் ஆழத்திலிருந்து எடுத்து நம் அறிவாக வெளிப்படுத்துகிறது. ஆகவே நாம் அனைவரும் ஒரே அளவான அறிவுடன், அதாவது இந்த உலகில் பெற சாத்தியமுள்ள முழு அறிவுடன் படைக்கப்பட்டுள்ளோம். அந்த அறிவை வெளிப்படுத்தும் இயல்பில் மட்டுமே வேறுபட்டுள்ளோம்.

மனிதர்களில் ஒவ்வொருவரும் அறிவின் உச்சத்தை அடைவதற்கான சாத்தியங்களை உடையவர்களே. ஆனால் மனிதர்களில் பெரும்பாலனவர்கள் அ த்தகைய உச்சத்தை அடைவதில்லை. காரணம், அவர்கள் அத்தகைய உச்சத்தை அடைவதற்கான சாத்தியங்களை உடையவர்கள் தாங்கள் என்பதை அறிந்திருக்கவில்லை. தங்கள் உளவியல் பாதுகாப்புக்காகவும், சமூக பாதுகாப்புக்காகவும், நம்பிக்கைகள், பயங்கள் போன்றவற்றை உருவாக்கி, அந்த நம்பிக்கைகளையும் பயங்களையுமே தங்கள் அறிதலுக்கான சார்புநிலைகளாககொண்டு விடுகிறார்கள். ஆகவே வெளிப்படும் புதிய அறிவும், அந்த நம்பிக்கைகளையும் பயங்களையுமே சார்ந்து உள்ளது . இதன் மூலம் முழுமையான அறிவை பெறுவதற்கான சாத்தியங்களை சிறிது சிறிதாக இழந்து விடுகிறோம்.

ஆன்மீக சிந்தனைத் தளங்களில், அறிந்தவற்றிலிருந்து விடுதலை என்னும்ஒரு சிந்தனை ஓட்டம் உள்ளது. அதாவது நாம் புதியதாக ஒன்றை அறிய தொடங்கும்போது, முன்பே அறிந்தவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடிந்தால் மட்டுமே புதிதாக அறியும் அறிவு, உண்மைக்கு அருகில் இருக்க வாய்ப்பு உள்ளது. அதாவது அந்த புதிய அறிவு, அதற்கு தேவையான சார்பு நிலையை மனதின் வெளிப்புற மாயைகளிலிருந்து பெறாமல் ஆழ்மனதிலிருந்து பெறக்கூடும். அத்தகைய விடுதலையை நம்மால் பெற முடிந்தால், நம்முடைய பயங்கள், நம்பிக்கைகள் போன்ற தளைகளிலிருந்தும் நம்மால் விடுபட முடியலாம். அல்லது, பயங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிலிருந்து நம்மால் விடுபட முடிந்தால் ஒருவேளை நம்மால் அறிந்தவைகளிலிருந்தும் விடுதலை பெற முடியலாம். இங்கு அறிந்தவற்றிலிருந்து விடுதலை என்பது, அறிந்தவற்றை முற்றிலுமாக விட்டு விடுவது ஆகாது, ஆனால் அறிந்தவற்றை வலுக்கட்டாயமாக புதிய அறிவின் மீது சார்பு படுத்துவதை விட்டு விடுவது ஆகும் – நம் மனம் மிக இயல்பாக அத்தகைய சார்புநிலையை எடுக்கும் தன்மை உடையது. .

நம் மனதினுள்ளேயே நம்மால் அறிய கூடியதெல்லாம் உள்ளதெனில் அதை எவ்வாறு அறிவது? அத்தகைய அறிவு, நம் மனம் அதன் உச்ச இயக்க நிலையை அடையும்போது மட்டுமே அடைய கூடியதாக இருக்கலாம். நம் மனம் அதன் உச்ச இயக்க நிலையில் உள்ளது என்னும் அறிவு ஒருவேளை மாயையாக இருக்குமானால், அப்போது நாம் அறிவதும் மாயையாகவே இருக்க கூடும். வேறு வார்த்தைகளில் கூறினால், மனம் அதன் உச்ச இயக்க நிலையில் அதன் அறிதலுக்காக வேறு எந்த அறிவையும் சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம். அத்தகைய அறிவு சாத்தியமானால், அது மட்டுமே முழுமையான அறிவாக இருக்கும்.

மனம் அதன் முழுமையான அறிதல் நிலையில் இருக்கும்போது, அத்தகைய மனம் வேறு எந்த மன இயக்கங்களையும் சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம். மனதின் அத்தகைய சார்பு நிலை இல்லாமையே விடுதலை அல்லது நிர்வாணம் என அழைக்கப் படுவதாக இருக்கலாம்!

இந்த விடுதலை அல்லது நிர்வாணம், ஒவ்வொரு மனிதருக்கும் சாத்தியமா? முழுமையான அறிவுக்கான தேடுதல் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப் பட்ட ஒவ்வொரு மனித மனத்துக்கும் விடுதலை அல்லது நிர்வாணம் நிச்சயமாக சாத்தியமானதாக இருக்க வேண்டும். அவ்வாறு சாத்தியம் இல்லையெனில், விடுதலை அல்லது நிர்வாணம் என்பது வெறும் மாயையே!

நாம் நுண்ணறிவு(Intelligence) என அ.ழைப்பது, ஒரு சார்புநிலைகளற்ற அறிதலாக இருக்க கூடும். அவ்வாறெனில், நுண்ணறிவு என்பது முழுமையான அறிவின் அம்சமே ஆகும். அதாவது நம் அறிவின் மொத்தமும் நுண்ணறிவாக மாறும்பொது, நம் அறிவும் முழுமையான அறிவாக ஆக கூடும். நம் நுண்ணறிவு வெளிப்படும் தருணங்களை நாம் கவனிக்க நேர்ந்திருந்தால், அத்தகைய தருணங்களில் மனம் எண்ணங்களின் அலைபாயுதலிடமிருந்து விடுபட்டு இருந்திருப்பதை கவனித்திருப்போம். அதாவது மனம் அதன் தர்க்க நிலைகளிலிருந்து விடுபடும் தருணங்களில் மட்டுமே நுண்ணறிவு வெளிப்பட சாத்தியமுள்ளது. நம் அறிவு மொத்தமும் நுண்ணறிவாக மாறும்போது, அதுவே முழுமையான அறிவாக இருக்க கூடும். அதாவது, நம் அறிவு அல்லது அறிதல் எல்லாவிதமான சார்பு நிலைகளிலிருந்தும் முழுமையாக விடுதலை பெற்றிருக்க கூடும்.

நம் உடல் இருப்பை பொறுத்தவரை அறிதல் மற்றும் அறிவு என்பது, நம் மூளையினுள் நடைபெறும் உயிர்வேதி மாற்றங்களே. எனவே நுண்ணறிவும் உயிர்வேதி செயல்பாடுகளாகவே இருக்க முடியும் – நுண்ணறிவின் உயிர்வேதிச் செயல்பாடுகள், சார்புநிலை அறிவுக்கான உயிர்வேதிச் செயல்பாடிகளிலிருந்து முற்றிலும் வேறானதாக இருக்க கூடும். அவ்வாறெனில், நம் மூளையின் ஒரு குறிப்பிட்ட உயிர்வேதிச் செயல்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் நாம் நுண்ணறிவை அடைவது சாத்தியப்படலாம். ஹட யோகம், கிரியா யோகம் போன்றவை இந்த அடிப்படையில் உருவாகி இருக்க கூடும். இதன் மறுபக்கமாக, நமது இரத்த அழுத்தத்தையும், சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மருந்துகளையே சார்ந்திருக்கும்போது, மூளை அதன் நுண்ணறிவையும் இழக்க கூடும்.

Monday, October 24, 2011

அறிவு, அறிதல், மாயை

அறிவு – நாம் அனைவரும் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அடைய துடிக்கும் ஒரு சூட்சும பொருள். அறிதல் என்னும் இயக்கத்தின் அல்லது செயலின் மூலம் நாம் அறிவை அடைகிறோம். அறிதல் என்னும் இயக்கம் அறிவை எங்கிருந்து கொண்டு வந்து சேர்க்கிறது? அறிதல் எவ்வாறு நிகழ்கிறது? அறிதல் எதை அறிகிறது? அறிதலுக்கும் அறிவுக்கும் உள்ள இடைவெளி என்ன அல்லது தொடர்பு என்ன? அறிவுக்கும் அறிபடுபொருளுக்கம் உள்ள தொடர்பு என்ன? நம் அறிவு என நினைப்பது முழுமையானதா? ஆம், அறிவை குறித்த இந்த கேள்விகளுக்கு நாம் பதில் அளிக்கம்வரை நம் அறிவின் தரத்தை நம்மால் மதிப்பிட முடியாது. அவ்வாறு நாம் மதிப்பிடுவோமானால், அது மற்றவர்களின் அறிவு என நாம் கருதுவதுடனான ஒரு ஒப்பீடு மட்டுமே. அது நம் அறிவின் அளவை அல்லது தரத்தை ஒருபோதும் குறிக்க முடியாது – காரண்ம், அறிவின் முழுமையை குறித்து நாம் அறிந்திருக்கவில்லை.

நாம் அறிதல் என அறிந்துள்ளது, நம் புலன்கள் மூலம் உணரப்படும் வெளியுலக நிகழ்வுகளை நம் மூளை உணர்ந்து அதை மனமாக வெளிப்படுத்துவதையே. அதாவது நம் அறிவு என அறிவதன் நுழைவாசல் நம் புலன்களே. அந்த மனதின் நிகழ்வுகளையே அறியும் மனது, ஆறாவது அறிவாக கருதப்படுகிறது. நம் ஐம்புலன்களால் அறியப்படுவதில், தொடு உணர்வு மட்டுமே உடல் முழுவதும் பரவியுள்ளது. மற்ற நான்கு புலன் உறுப்புகளும், உடலினுள், மிக அதிகபட்ச சாத்தியமுள்ள பாதுகாப்புடன் அமைந்துள்ளது. அதாவது, தொடு உணர்வுக்கு மட்டுமே, திண்மையுள்ள ஒரு வெளிப்பொருள் நம் உடலுடன் நேரடி தொடர்பு கொள்ள வேண்டியிருக்கிறது. மற்ற நான்கு அறிவுக்கும், மிக மிக நுண்ணிய இயக்கங்களே காரணமாக இருக்கிறது. நம் பரிணாம வளர்ச்சி, அந்த நுண்ணிய இயக்கங்களை நம் மூளை உணர்வதற்கு தேவையான உடலமைப்பை புலன் உறுப்புகள் மூலம் நமக்கு அளித்துள்ளது. எதிர்காலத்தில், நம் மூளை, அதன் பரிணாம வளர்ச்சிக்காக, உலகை அறிவதற்காக, இன்னும் ஒரு வெளிப்புற இயக்கத்தை அறிய வேண்டிய தேவை ஏற்படுமானால், நம் தொலைதூர சந்ததியினர் அவர்கள் உடலில் இன்னும் ஒரு புலன் உறுப்பை பெறக்கூடும்.

வெளிப்புற உலகம் நம் உடல் மீது தொடுக்கும் தாக்குதல்கள் மூலமே நம்மால் புற உலகத்தை புலன்களின் மூலம் அறிய முடிகிறது. ஒளி அலைகள் நம் உடலில் எற்படுத்தும் தாக்கத்தை கண்கள் உணர்வதன் மூலம் புற உலகத்தை காண்கிறோம். இதைப்போலவே கேட்பதும், முகர்வதும், சுவைப்பதும். நாம் உண்மையில் அறிதல் எனக் கூறுவது, புற உலகம் நம் புலன்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களை உணர்ந்து அவற்றை அடையாளப்படுத்துதலையே. அடையாளப்படுத்துதல் என்பது மொழியின் மூலம் நடைபெறுகிறது. அதாவது, மொழி என்பது நம் புலன்கள் உணரும் ஒவ்வொரு உணர்வுக்கும் நாம் அளிக்கும் அடையாளம் அல்லது குறியீடு. வேறு வார்த்தைகளில் கூறினால், நம் புலன்கள் உணரும் புற உலக இயக்கத்தை நம் மூளை உணர்ந்து, அந்த உணர்வை மொழியாக்கி, மொழியை மீண்டும் மூளை உணர்வதையே நாம் அறிதல் என்கிறோம். அவ்வாறெனில், அறிதலுக்கு மொழி ஒரு தவிர்க்க முடியாத ஒரு தேவை.


ஆனால் அறிதல் என்பது மொழிக்கு அப்பாற்பட்டதாகவே இருக்க முடியும். மொழி என்பது அறிதலுக்குப்பின் தோன்றும் ஒரு புதிய செயல்பாடு. நம் அறிதலை புற உலகுக்கு வெளிப்படுத்தும் ஒரு செயல்பாடு. நம் உலகம் என்பது, உலகில் உள்ள பிறருடனும் பிற பொருட்களுடனும் நாம் கொள்ளும் தொடர்புகளின் அல்லது உறவுகளின் தொகுப்பே ஆகும். அந்த தொடர்புகளின் அல்லது உறவுகளின் எல்லையை மீறி நம் உலகம் எப்போதுமே விரிவடைவதில்லை. நம் உலகம் விரிய வேண்டுமானால் நம் உறவுகளும் தொடர்புகளும் விரிவடைந்தாக வேண்டும். மொழி என்பது நம் அறிவை குறியீடுகளாக்கி நம் உறவுகளுடன் பகிரவும், நம் உறவுகள் பகிரும் குறியீடுகளை நம் அறிதலின் மூலம் நம் அறிவாகவும் மாற்றும் ஒரு கருவியே. ஆக மொழி என்பது அறிதலுக்கான ஒரு கருவியே தவிர அறிவின் ஒரு பகுதி ஆகாது.


எனில், அறிதல் எவ்வாறு நடைபெறுகிறது? சமீபத்தில் படிக்க நேர்ந்த, “The Process of knowing: A Biocognitive Epistemology” என்னும் கட்டுரை கீழ்வருமாறு கூறுகிறது. இந்த கட்டுரை வெளிவந்த தொகுதி - The journal of Mind and Behaviour, Automn 2001, Volume 22, Number 4.

Knowledge progresses through three developmental phases defined as pre-linguistic, concrete-linguistic, and abstract-linguistic experiences. The pre-linguistic phase consists of precursors of thoughts (perceptions of undifferentiated personal space without time dimension); precursors of affect (sensations of comfort and security vs. discomfort and insecurity); and precursors of language (primordial sounds responding to undifferentiated internal and external stimuli). The concrete-linguistic phase advances from precursors of thought to a cognition that differentiates self from non-self in concrete time and space; from the sensations of comfort and discomfort to the emotions of happiness, sadness etc.; and from primordial sounds that respond to undifferentiated internal and external stimuli to language that represent simple imagery and emotions communicated in concrete space and time. The abstract-linguistic phase frees the knower from the limitations of concrete-linguistics with language that can communicate complex imagery and emotions in projected time and space. The knower can project time and space from the present to communicate about the past and the future as abstract entities separate from self.

கட்டுரையின் இந்த பகுதியின்படி, அறிவு, மொழிக்கு முந்தையது, திட அர்த்தமுள்ள மொழியினூடாக உள்ளது மற்றும் கருத்துக்களாகிய மொழியினூடாக உள்ளது என பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, நம் அறிதல் என்பது, நம் மொழி அறிவுக்கு முன்பாக உள்ள அறிவிலிருந்து தொடங்கி, மொழியின் மூலமாக அடுத்த கட்டத்தை அடைகிறது. அதாவது, அறிவு என்பது மொழிக்கு அப்பாற்பட்டது, மொழி என்னும் கருவியின் வழியாக அறிதல் நடைபெறுகிறது.

நம்மால், மொழியின் துணையின்றி நம் அறிவை உணர முடியுமா? நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மொழியை தவிர்த்து அறிவு என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக இருக்க கூடும். ஆனால் ஆன்மீகத்தில் பூடகத்தன்மையை (mystic) மறுத்து, தர்க்கபூர்வமான மொழியில் வெளிப்படுத்திய ஜே. கிருக்ஷ்ணமூர்த்தியின் கருத்துகளின்படி, அறிவு என்பது நிகழ்வதற்கான சாத்தியம், மொழியால் உருவாக்கப்பட்ட எண்ணங்கள் மனதினுள் முழுமையாக இல்லாமல் இருக்கும்போது மட்டுமே உள்ளது. அதாவது, மொழியாலான கருத்தமைப்புகளின் மூலம் நம் மனதில் நிலைபட்டுள்ள எண்ணங்களே நம் அறிதலுக்கு தடையாகவும் உள்ளது.

வேறு வார்த்தைகளில் கூறினால், அறிவதற்கான கருவியாகிய மொழியையே நாம் அறிதலாக கொள்ளும்போது, அந்த அறிதலின் மூலம் நாம் அறிவதும் ஒரு மாய உலகையே!


பின் குறிப்பு: இங்கு குறிப்பிட்டுள்ள மேற்கோள்கள், இந்த உளறல்கள் எனக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதை உணர்த்தவே.

Tuesday, October 18, 2011

இச்சைகள்

உலகின் அடிப்படை சக்திகளில் ஒன்று, இச்சா சக்தி. அதாவது எந்த ஒரு இயக்கத்திற்கும் அல்லது செயலுக்கும் முதல் தேவை, அந்த இயக்கம் அல்லது செயலுக்கான ஆசை அல்லது இச்சை – அந்த இயக்கம், அணுவினுள் நியூக்ளியஸைச் சுற்றி வரும் எலக்ட்ரானாக இருந்தாலும், சூரியனை சுற்றி வரும் கோளங்களாக இருந்தாலும், நாம் அறியாத திசையில் பயணித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரவெளியாக(Galaxy) இருந்தாலும்! நம் உலகத்தில் உள்ள வாழ்க்கையும், ஒரு முடிவில்லாத இயக்கம் அல்லது செயல் மட்டுமே. நமது இச்சைகளே நம் வாழ்க்கையின் அடிப்படை இயங்குசக்தி. ஆகவே நமது இச்சைகளின் இயல்பு, நம் வாழ்க்கையின் இயக்கத்தில், இயல்பில், இன்றியமையாத இடம் வகிக்க கூடும். நம் வாழ்க்கையின் இயக்கத்தை நம் விருப்பத்தின்படி செலுத்த வேண்டுமானால், நம் விருப்பம் அல்லது ஆசை அல்லது இச்சை, அந்த விருப்பத்தின்படி அமைந்தாக வேண்டும். நம் இச்சைகளில் உள்ள ஒத்திசைவு அல்லது முரண்பாடு, நம் வாழ்க்கையிலும், ஒத்திசைவாகவோ அல்லது முரண்பாடாகவோ வெளிப்படும். ஆனந்தமயமான வாழ்க்கை என்பது ஒரு ஒத்திசைவுள்ள, முரண்பாடுகளற்ற வாழ்க்கை. நாம் உண்மையிலேயே, ஒரு மகிழ்ச்சியான, ஆனந்தமயமான வாழ்க்கையை விரும்பினால், நம் வாழ்க்கையின் அடிப்படை சக்தியான இச்சா சக்தியின் கூறுகள் முரண்பாடுகளற்று, ஒத்திசைவுடன் இருந்தாக வேண்டும். நம் இச்சைகளை அறிந்து கொள்வதன் மூலமே, அது சாத்தியமாகலாம்.

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கமும், நம் மூளையின் மூலமே இயக்கப்படுகிறது. மூளையின் ஒவ்வொரு இயக்கமும் நம் மனமாக வெளிப்படுகிறது. அந்த மன இயக்கங்கள், நம் மனதின் உணர்வுநிலையிலோ (Conscious) அல்லது உள்ளுணர்வு நிலையிலோ (subconscious) அல்லது, ஆழ்மன நிலையிலோ (unconscious) நிகழலாம். அந்த நிகழ்வு நடைபெறும் மனதின் தளம், நம் விழிப்புணர்வின் ஆழத்தைப் பொறுத்தது – நம் விழிப்புணர்வு அதன் உச்சத்தை அடையும்போது, நம் மனதின் மொத்த இயக்கமும் உணர்வு நிலையிலேயே நடைபெறக் கூடும். நமது இச்சைகளும் நம் மூளையையே ஆதாரமாக கொண்டுள்ளதால், எல்லா இச்சைகளும் நம் மனவெளியில் வெளிப்பட்டே ஆக வேண்டும். – நம் விழிப்புணர்வைப் பொறுத்து, மனதின் ஏதாவது ஒரு தளத்தில்.

நம் மனதின் அடிப்படை இச்சைகள் நம் உடல் சார்ந்ததே. இந்த அடிப்படை இச்சைகளின் இயல்பு, நமது இருப்பை உறுதிச் செய்ய தேவையான மிக அடிப்படையான இயக்கங்களை உருவாக்குவதாகவே இருக்க கூடும். உதாரணமாக பசி என்னும் உணர்வு, உணவு உண்பதற்கான இச்சையை உருவாக்குவதன் மூலம், நம் இருப்பை உறுதிச் செய்கிறது. உடலை பாதுகாப்பதற்கான இச்சையின் மூலம், நம் சூழலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளிலிருந்து நம்மை பாதுகாப்பதற்கான இயக்கங்கள் உருவாகிறது. காமம் என்னும் இச்சையின் மூலம், நம் இனம் அழியாமல் அதன் இருப்பை உறுதிச் செய்வதற்கான இனப்பெருக்கம் என்னும் இயக்கத்தை உருவாக்குகிறது. இவ்வாறு நம் ஒவ்வொரு இயக்கங்களுக்கும் அடிப்படையாக, அந்த இயக்கத்திற்கான இச்சை இருந்துகொண்டே இருக்கிறது.

உயிரியல் பரிமாணத்தின் உயர்நிலையில் உள்ள சில உயிரினங்களை தவிர மற்ற அனைத்து உயிரினங்களிலும், இந்த இச்சைகளும் இச்சைகளை காரணமாக கொண்ட விளைவுகளும், அந்த உயிரினங்களின் உணர்வுநிலைகளின் இடைவினைகள் (interaction) இல்லாமலேயே நடைபெறுகிறது – அந்த உயிரினங்களுக்கு உணர்வு என்னும் தளம் இருந்தாலும். மனித இனம் தவிர மற்ற உயர்நிலை உயிரினங்களுக்கும், அவை உணர்வுத் தன்மைக்கான சாத்தியங்களுடன் இருந்தாலும், அந்த உணர்வின் மூலம் அதன் இச்சைகளின் இயக்கத்தையும் இயக்கத்தின் தன்மைகளையும் வடிவமைப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதில்லை. ஆனால் மனிதனுக்கு மட்டுமே, இச்சா சக்தி இயக்கமாகவோ அல்லது செயலாகவோ வெளிப்படுவதற்கு, ஒரு அனுமதி இயக்கமும் மூளையிலிருந்து தேவைப்படுகிறது. மூளையின் அந்த அனுமதி இயக்கம் அனுமதித்தால் மட்டுமே, இச்சா சக்தி, இயக்கமாகவோ செயலாகவோ வெளிப்பட சாத்தியம் உண்டு. ஆனால் இயற்கையின் விதிப்படி, எந்த வெளிப்பட்ட சக்தியும, எத்தகைய ஒரு இயக்கத்தையும் உருவாக்காமல் அழிய முடியாது. ஆகவே மூளைக்கு உள்ள சாத்தியங்கள், அந்த இச்சைக்கான இயக்கத்தை அனுமதிப்பது அல்லது, அந்த இச்சையை வேறு சாத்தியமான வழிகளில் திரும்பிச்செல்ல அனுமதிப்பது. அதாவது மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களின் விதியை இயற்கையே நிர்ணயிக்கிறது, உயிர்களினுள் இச்சா சக்தியை வெளிப்படுத்துவதுடன் அந்த இச்சையை உடனடியாக நிறைவேற்றுவதன் மூலம். ஆனால், மனித உயிரில் இச்சையை உருவாக்குவது மட்டுமே இயற்கை, அந்த இச்சா சக்தி ஊடுருவும் பாதையை முடிவு செய்வது, அந்த மனித உயிரின் செயல். அதாவது, மனிதனின் விதியை அந்த தனிப்பட்ட மனிதனே அமைத்துக் கொள்வதற்கான சாத்தியத்தை இயற்கை ஒவ்வொரு மனித உயிருக்கும் அளித்துள்ளது.

இச்சை நம் உணர்வுதளத்தில் தோன்றினால், அந்த இச்சைக்கான அனுமதி இயக்கமும், இச்சையின் விளைவான இயக்கமும் நம் உணர்வு தளத்திலேயே நடக்கும். இந்த இயக்கங்களில், காரணமும் விளைவும் காரணம் விளைவாக மாறுவதற்கான அனுமதியும் நம் உணர்வு தளத்திலேயே நடைபெறுவதால், இந்த காரண காரியங்களின் முழு இயக்கத்தையும் நாம் விரும்பினால் நம்மால் அறிய முடியும். ஆனால் நம் உள்மனம் மற்றும் ஆழ்மன நிலைகளில் உருவாகும் இச்சா சக்தியையும் அதன் இயக்கங்களையும், தற்போதைய நம் உணர்வு நிலையில், நம்மால் உணர முடியாமல் போகலாம். ஆனால், நம்மால் உணர்வுநிலையில் ஏற்படும் இந்த இயக்கங்களின் செயல்பாடுகளை விழிப்புணர்வின் மூலம் உணர முடிந்தால், உள்மன, ஆழ்மன நிலைகளில் நடைபெறும் இச்சா சக்தியின் இயக்கங்களை அனுமானிக்க முடியலாம்.

உணர்வு தளத்தில், இச்சா சக்தி, இயக்கமாக மாறுவதற்கான அனுமதி, நம் இயல்பை பொறுத்து, நமது தர்க்க புத்தியின் (Logic) மூலமாகவோ அல்லது மனக்கிளர்ச்சி நிலையின் (Emotion) மூலமாகவோ அனுமதிக்கப்படுகிறது. இதை அறிவது மிக எளிதானது. இவ்வாறே நம் உள்மனம் மற்றும் ஆழ்மன தளங்களில் உருவாகும் இச்சைகளுக்கும், நம் மூளை அனுமதி வழங்கியாக வேண்டும், அது நம் மனதிலும் வெளிப்பட்டாக வேண்டும் – அந்த இச்சை தோன்றும் மனதின் தளங்களிலேயே. நம் மனம் உணர்வு நிலையில் அனுமதி வழங்காத போது, அந்த அனுமதி யாரால் வழங்கப் படுகிறது? அது நம் உள்மனம் மற்றும் ஆழ் மனதின் உள்ளடக்கத்தால் (content) வழங்கப்பட்டிருப்பதுதான் சாத்தியம். அதாவது நம் உள்\ஆழ் மனதின் உள்ளடக்கம் அனுமதித்தால் மட்டுமே, அந்த தளத்தில் தோன்றும் இச்சை இயக்கமாக மாறமுடியும். இயற்கை விதிப்படி எந்த ஒரு சக்தியும் அழிய முடியாது – உரு மாற மட்டுமே முடியும். ஆகவே, நம்முள் தோன்றும் இச்சைகள், நமது மனதின் உள்ளடக்கம் அனுமதித்தால், அந்த இச்சை சுட்டும் இயக்கமாக மாறும். அல்லது அந்த இயக்கத்தை நம் உள்ளடக்கம் அனுமதிக்காவிட்டால், அந்த இச்சை, அதனுடன் தொடர்புள்ள வேறு இயக்கங்களாக மாறலாம், உள்\ஆழ் மன உள்ளடக்கத்தின் வழிகாட்டுதலுடன்.

நம் அடிப்படை இச்சைகளை நம் மனம், அதன் வெவ்வேறு தளங்களில், எவ்வாறு இயக்கமாக மாற அனுமதிக்கிறது என்பதை பொறுத்தே நம் வாழ்க்கையின் இயல்பு அமைந்துள்ளது. அந்த அனுமதியின் தன்மை, நம் மனதின் உள்ளடக்கத்தை பொறுத்தே அமைகிறது. ஆகவே நம் வாழ்க்கை செல்லும் திசை, நம் மனதின் உள்ளடக்கத்தால் மட்டுமே முடிவு செய்யப்படுகிறது. நம் மனதின் உள்ளடக்கமோ, நம் நம்பிக்கைகள், ஏற்றுக்கொண்ட கட்டுப்பாடுகள், நமது பயங்கள், வன்முறை இயக்கங்கள், நம்மால் அடையமுடியாத விருப்பங்கள், பொறாமைகள், இன்னும் இது போன்ற குப்பைகளாலேயே நிரம்பியுள்ளது. நாம் உண்மையிலையே மனிதர்களாக வாழ விரும்பானால், இயற்கை நமக்கு அளித்துள்ள, நம்மை விலங்குகளிலிருந்து உயர்ந்ததாக இருக்கச்செய்யும் காரணியான உணர்வுநிலையை அடைந்தாக வேண்டும். அந்த உணர்வுநிலையை பெறும் முயற்சி கூட நம்மிடமிருந்து வெளிப்படவில்லையெனில், நாம் உண்மையில் மனிதர்கள் என்னும் போர்வைக்குள் வாழும் விலங்குகளே – அந்தப் போர்வை, உண்மையிலேயே மனிதர்களாக வாழ்ந்தவர்களின் பெருங்கருணையால் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது!

தொடர்புள்ள பதிவு; Desire

Thursday, October 13, 2011

இருப்பு - Existance

நம் வாழ்க்கையை அதன் உள்ளிலிருந்து எப்போதாவது அறிந்து கொள்ள முயற்சித்திருந்தால், வாழ்க்கையை குறித்த சில அடிப்படை கேள்விகளை எதிர் கொள்ள வேண்டியிருந்திருக்கும். நம் கேட்கும் வீரியத்திற்கேற்ப, நம் பார்வையின் ஆழத்திற்கேற்ப, நம் வாழ்வின் இயல்பிற்கேற்ப, கேள்வியை ஆராயும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய பதிலை அளிக்கும் கேள்விகள்! ஆம், நம் வாழ்க்கையை அறிந்து கொள்ள வேண்டுமென்றால், நிச்சயமாக கேட்கப்பட்டாக வேண்டிய கேள்வி, அடைந்தாக வேண்டிய பதில் – அந்த பதில் எத்தகையதாக இருந்தாலும். நம் வாழ்க்கையின் ஒரு சிறுபகுதியையாவது உணர்வு நிலையில் அடைந்திருந்தால் மட்டுமே, அந்த கேள்விகள் நம் மனதில் எழ சாத்தியமுண்டு. அந்த கேள்வியும், பதிலை அடைவதற்கான இச்சையும் கூட நம் உணர்வின் எல்லைகளை விரிவடையச் செய்யும் சாத்திய கூறுகளை தம்முள் கொண்டிருக்க கூடும்.

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கூறுகளும் செயல்களால் ஆனது. அந்த செயல்கள் நம்மால் செய்யபடுவதாகவோ அல்லது நம் மூலம் செய்விக்கப் படுவதாகவோ இருக்க்கலாம். அச்செயல்களை, அதன் ஒற்றைத் தன்மையில் ஆராய்ந்தால், அச்செயல்களுக்கோ அல்லது அதன் விளைவுகளுக்கோ எந்த ஒரு அர்த்தத்தையும் நம்மால் காண இயலாமல் போகலாம். எனில், நம் வாழ்க்கையின் அர்த்தம் என்ன? நாம் எதற்காக அல்லது யாருக்காக வாழ்கிறோம் அல்லது வாழ வேண்டும்? நம் வாழ்க்கையின் கூறுகளாகிய செயல்களின் அர்த்தம் என்ன? அந்த செயல்கள் இல்லாது போனால் நம் வாழ்க்கை என்ன ஆகும்? அந்த செயல்களின் அடிப்படை என்ன? அந்த அடிப்படைகள் இல்லாது போனால் அல்லது ஒரு மாய தோற்றமாகிப் போனால், நம் செயல்கள் அல்லது அச்செயல்களால் ஆன நம் வாழ்க்கை என்ன ஆகும்? நம் செயல்களின் அடிப்படை ஒரு மாய தோற்றத்தினால் ஆனதாக இருந்தால், நம் செயல்களிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ள வேண்டுமா? அவ்வாறு விலக்கிக் கொண்டால், நாம் எதைப் பற்றிக்கொண்டு வாழ்வது? நாம் பொய் தோற்றத்தை அடிப்படையாக்க கொண்ட வாழ்க்கையிலிருந்து மீண்டு, புதிய ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்றால், அந்த புதிய வாழ்வின் அடிப்படையும் பொய் தோற்றங்களாக இல்லாமல் இருக்க வேண்டுமானால் என்ன செய்வது? இதைப் போன்ற இன்னும் எத்தனையோ கேள்விகள்!

இந்த கேள்விகள், நம்மையே நாம் உணரத் தொடங்கினால் அல்லது உணர வேண்டும் என்று விரும்பினால் மட்டுமே எழ சாத்தியமுண்டு. இந்த கேள்விகள் மற்றும் அதற்கான விடையை நாம் அணுகும் முறை கூட, நம் வாழக்கையை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ புரட்டிப் போடும் சாத்தியங்களை உடையது. அதாவது, இந்த கேள்விகளை நாம் அணுகும் போது, நம் உணர்வுகளையும் மிக கவனமாக பின் தொடரவேண்டியது அவசியம். அவ்வாறு நம் உணர்வுகளை நம்மால் பின்தொடர இயலாவிட்டால், ஒரு வழிகாட்டி அல்லது குருவின் துணை அவசியப்படலாம். எவர் ஒருவர் நம் இயல்பை உணர்ந்து, நம் ஆன்மீக கேள்விகளுக்கு நாமே விடையை அறிய உதவுகிறாரோ, அவரே ஒரு குருவாக இருக்க முடியும். நம் உணர்வுகளை மிக கவனமாக நம்மால் பின்தொடர இயலுமானால், நம் உணர்வுகளே கூட நமக்கு குருவாக இருக்கூடும்.

வாழ்க்கை குறித்த நம் கேள்விகளின் பதில், நம் தனி மனித இயல்புகளையும் அந்த இயல்புகளின் அடிப்படையான தனிமனித இச்சைகளையும் பொறுத்தே அமையும். ஆக நம் இயல்புகளையும் இச்சைகளையும் அறிந்து கொள்வதே ஆன்மீகம் அல்லது நம் வாழ்வு குறித்த அறிதலுக்கு தொடக்கமாக இருக்க முடியும். நம் இயல்புகளையும் இச்சைகளையும் அறியாமல், நம் வாழ்வின் அர்த்தத்தை தேடினால், ஒருவேளை அங்கு தெரியும் அர்த்தமின்மை, வாழ்வின் மேல் நம்மை வெறுப்புறச் செய்து, தற்கொலைக்கு கூட தூண்டலாம். சமூக அமைப்பில் அர்த்தமின்மை என்னும் மாயையில் நம்மை தள்ளி, சமூக அமைப்பிலிருந்து நம்மை விலகச் செய்யலாம். இத்தகைய விளைவுகள், நம் இயல்பை நாம் அறியாமல், கற்பனைகள் மூலம் அடையும் முடிவுகளின் காரணமாகவே ஏற்பட்டுகின்றன. இத்தகைய முடிவுகள், மீண்டு வர இயலாத பொறிகளினுள் நம்மை முழுமையாக மூழ்கடிக்கலாம். ஆக, ஆன்மீகத் தேடுதலை, நம் இயல்பை அறிவதலிருந்தே தொடங்க முடியும்.

எந்த ஒரு பொருளுக்கும் அல்லது உயிருக்கும் அதன் இருப்பை உறுதிசெய்வதே அடிப்படை இச்சையாக இருக்க முடியும். அதன் மற்ற அனைத்து இச்சைகளின் கட்டுமானமும் இந்த அடிப்படை இச்சையை அடித்தளமாக கொண்டே இருக்கும். நாமும் அவ்வாறே! நம் இருப்பின் மேல் கொண்டுள்ள இச்சையையும் அதை சார்ந்து உள்ள அல்லது சார்ந்து உருவாக்கிய இச்சையையும் அறிந்து கொள்ள, நம் இருப்பின் உணர்வு நமக்கு இருந்தாக வேண்டும். ஆனால், துரதிர்க்ஷ்டவசமாக நம்மில் பெரும்பான்மையினர், பெரும் மகிழ்ச்சி அல்லது கடும் துன்பத்தில் மட்டுமே நம் இருப்பை உணரும் தன்மையில் இருக்கிறோம். நம் இருப்பைக் குறித்த விழிப்புணர்வே நமக்கு இல்லாத பட்சத்தில், அந்த இருப்பை அடிப்படையாக கொண்ட இச்சைகளை அறிந்திருப்பதற்கான சாத்தியம் இன்னும் குறைவாகவே உள்ளது.

ஆனல், மனம் செயல்புரிய வேண்டுமானால் நம் இருப்பை அது உறுதிசெய்தாக வேண்டும் – செயலின்றி மனதால் இருக்க முடியாது. நம் இருப்பின் அடிப்படையை மனதால் உணரமுடியாதபோது, அகங்காரத்தின் துணைகொண்டு நமது இருப்பைக் குறித்த கற்பனைகளை உருவாக்குவதன் மூலம், மனம் அதன் செயல்பாட்டை உறுதி செய்து கொள்கிறது. ஆக நம் இருப்பின் அடிப்படை இச்சைகள், மனதால் அகங்காரத்தின் துணை கொண்டு உருவாக்கப்பட்ட கற்பனைகளாலான இருப்பின் அல்லது மாயை இருப்பினாலான இச்சைகள் மூடி மறைத்துக் கொண்டிருக்கின்றன. அதாவது நாம் கணம் தோறும் உணரும் விருப்பங்களில் பெரும்பாலானவை, நம் கற்பனை அல்லது மாயையால் ஆன நம் இருப்பின் விருப்பங்களே. சில அடிப்படை விருப்பங்கள் நம்மை அறியாமலே நம்மிடமிருந்து வெளிப்படும். கற்பனை அல்லது மாயையால் ஆன நம் இருப்பு, அடிப்படை இருப்பின் வெளிப்பாடுளை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ செய்யலாம் – அது நம் மாயை இருப்பு, அடிப்படை இருப்புடன் கொண்டுள்ள ஒத்திசைவு அல்லது முரண்பாடுகளை பொறுத்த்து.

நம் இருப்பின் இச்சைகளை அறியவேணைடுமானால், அதை சூழ்ந்துள்ள மாயையை நாம் துளைத்து சென்றாக வேண்டும். எனில், அந்த மாயையின் இயல்பை அறிவது மட்டுமே அத்தகைய ஒரு சாத்தியத்தை நமக்கு அளிக்க கூடும். நம் இருப்பு மற்றும் இருப்பின் இச்சைகள், உண்மையானது. அதாவது, அது பொதீகமானது. ஆனால், நம் கற்பனையால் ஆன இருப்புக்கு அத்தகைய பொதீக இயல்புகள் இருக்க வாய்ப்பில்லை – அந்த கற்பனைகள் நம் மூளையில் ஏற்படுத்தும் சில உளவியல் சார்ந்த வேதி மாற்றங்களைத் தவிர. ஆம், இந்த மாயை அல்லது கற்பனை இருப்பு என்பது முழுவதும் நம் உளவியல் சார்ந்த இருப்பு. நம் எண்ணங்களே அந்த மாயைகளை உருவாக்கி, அந்த எண்ணங்களால் ஆன நம் அகங்காரத்துடன் பிணைத்து அதன் மாயத்தோற்றத்தை உறுதி செய்கிறது.

நம் வாழ்க்கை தளத்தில், நம் மனங்களின் வெளிப்புற கட்டுமானம் முழுவதும் வெறும் எண்ணங்களால் ஆனது. இந்த எண்ணங்களே மாயை இருப்பை உருவாக்குகிறது. ஆனால், இந்த எண்ணங்களைத் தாங்கிகொண்டிருக்கம் அந்த மனதின் மூலம் மட்டுமே, அந்த எண்ணங்களைத் தாண்டிச் சென்று, நம் இருப்பின் ஆழத்தையம் அடைய முடியும். இதுவே ஆன்மீகம் மனித இனத்தின் பெரும்பான்மையினரிடம் வெளிப்படாமல் இருப்பதற்கான மூல காரணமாக இருக்க கூடும். மாயையால் மூடப்பட்டுள்ள மனதின் மூலமே அந்த மாயையை அறிந்து, மனதின் ஒருபாகமாக மாறிவிட்ட மாயையை உடைத்தெறிய வேண்டுமென்பது சற்று கடினமான செயலாகத்தான் இருக்ககூடும்.


அறிவின் மூலம் மட்டுமே அந்த தொடக்கத்தை பெறமுடியும். துரதிர்க்ஷ்டவசமாக, உலகம் முழுவதும் கல்வி முழுமையாக பொருளியல் சார்ந்த்தாக மாறிவிட்டது. அதாவது இன்றைய சூழலில் நம் வாழ்க்கை அறிவு என்பது நிறுவப்பட்ட கல்விக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் வெளியே மட்டுமே பெறமுடியக்கூடிய ஒன்றாகி விட்டது. இந்த பொருளியல் சார்ந்த கல்வி, நம் ஆன்மீகத்தையும், பொருளியல் சார்ந்த கற்பனைகளாக மாற்றி விட்டது. நாமும், நம் சந்ததியினர் நிறுவப்பட்ட கல்விக்கு வெளியே அவர்கள் ஆர்வம் செல்லாதவாறு, அவர்களை நிறுவப்பட்ட கல்வியினுள்ளே முழுமையாக வழிப்படுத்தி, அவர்களும் மாயையினுள் நிரந்தரமாக இருக்குமாறு உறுதி செய்து கொள்கிறோம்.