Wednesday, August 24, 2016

உலகமயமாதல்

15-08-2016 அன்று சொல்வனம் இணையப்பத்திரிகையில் பதிப்பிக்கப்பட்டது.

தற்போது நான் வாசித்துக் கொண்டிருக்கும் இரு தொடர்களும், மிகப்பரவலாக உலகம் முழுவதும் பேசப்பட்ட பொருளாதாரத்தின் இரு துருவங்களையும் இணைக்கும் கோட்டில் நிகழ்ந்த ஒரு நிகழ்வும், ஒரு சாதாரண மனிதனின் பார்வையில் பொருளாதாரம் குறித்த என் எண்ணங்களைத் தூண்டியது. எந்தத் துறையாக இருந்தாலும் சமூகத்தின் பெரும்பான்மை மக்களின் எண்ணங்களின் திசையில் தங்கள் கொள்கைகளை வகுக்கும் நிபுணர்கள், சந்தேகமில்லாமல் அந்தத் துறையில் வெற்றியடைவார்கள். ஆனால் பிரச்சனை என்னவென்றால் சாதாரணர்களில் பெரும்பான்மையானவர்கள், தங்கள் வாழ்வின் சூழல்களைக் குறித்து எந்த ஒரு கருத்தும் இல்லாமல், அவ்வப்போது வெளிப்படும் உணர்சிவசப்பட வைக்கும் பிறர் கருத்துக்களை சுயசிந்தனை இல்லாமல் தொடர்பவர்களாக இருக்கிறார்கள். இந்த வகையில் சமூகத்தின் சாதாரண மனிதனின் எவ்விதமான சுயபபார்வையும் முக்கியமானதே.

முதலாவதாக நான் வாசித்துக் கொண்டிருக்கும் தொடர் ''பனைமரச் சாலை'' என்னும் தலைப்பில் காட்சன் சாமுவேல் என்பவர் தனது வலைத்தளத்தில் எழுதிவரும் தொடர். இதில் அவர் மும்பையிலிருந்து நாகர்கோவில் நோக்கிய தனது இருசக்கர வாகன பயணத்தில் தேர்ந்தெடுத்த பனைமரம் சார்ந்த தொழில்கள் நடைபெறும் பாதைகளில் அவதானித்தவற்றையும் அவற்றுடன் தொடர்புடைய அவருடைய எண்ணங்களையும் பிற அனுபவங்களையும் தொகுத்து எழுதி வருகிறார்.

இரண்டாவதாக இந்தியாவில் உலகமயமாக்கம் தொடங்கி இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைந்ததன் நினைவாக ''தி இந்து' தமிழ் நாளிதளில் வெளியிடப்படும் நடுப்பக்கக் கட்டுரைகள். பல்வேறு கட்டுரையாளர்களால் - அவர்கள் அனைவரும் பொருளாதார அறிஞர்கள் என்று என்னால் கூற முடியவில்லை; இந்தியாவில் உலகமயமாக்த்தின் சாதக பாதகங்களை அவர்கள் பார்வையில் அலசும் கட்டுரைகள். உலகமயமாக்கம் இந்தியாவில் நன்மைகளை நிகழ்த்தியிருக்கிறது என்னும் பார்வையும், இல்லை அது இந்தியாவிற்கு ஒட்டுமொத்தமாக தீமைகளையே வழங்கியிருக்கிறது என்பதான பார்வையும் வெவ்வேறு கட்டுரையாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது.

அடுத்ததாக ''பிரெக்ஸிட்'' என எங்கும் ஒலித்த குரல்களின் பின்னால் இருந்த, பிரிட்டனின் பொதுஜனம் பிரதிபலித்த, கிட்டத்தட்ட சமபலமுள்ள, உலகமயமாக்குதலுக்கு ஆதரவான மற்றும் எதிரான பிம்பங்கள். பொதுமக்களின் விருப்பங்களே உலகமயமாக்கலையும் தேசியமயமாக்கலையும் இணைக்கும் கோடு என்று கருதுகிறேன். இந்தியா போன்ற பரந்த நாடுகளுக்கு, தேசியமயமாக்கலை, பொருளாதார பரவலாக்குதல் (Economic Localization) என்று பொருள் கொள்ளலாம்.

பொருளாதார அடிப்படையில் உலகமயமாக்கம் (Globalization) மற்றும் சர்வதேசமயமாக்கம் (Internationalization) என்னும் இரு வார்த்தைகளும் இருவேறு அர்த்தங்களை உடையவை. ஆனால் அவற்றுக்கிடையேயான வித்தியாசங்களும் மிகத்தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. இருந்தாலும் அவற்றை இவ்வாறு கூறலாம்; உலகமயமாக்கம் என்பது நாடுகளுக்கிடையேயான பொருளாதார எல்லைக் கோடுகளை ஒருங்கிணைத்து, வணிகம் முதலீடு ஆகியவை முற்றிலும் சுதந்திரமாக உலகின் எந்தப் பகுதியிலும் செய்வதற்கான வாய்ப்புகளை அளிப்பது. அத்துடன் கட்டுப்பாடுகளற்ற அல்லது மிக எளிதான தொழிலாளர்களின் குடிபெயர்தலுக்கும் வாய்ப்பளிப்பது. சர்வதேசமயமாக்கல் என்பது நாடுகளுக்கிடையேயான வணிகத்தையும் உறவுகளையும் சர்வதேச ஒப்பந்தங்கள் மூலமும் கூட்டமைப்புகள் மூலமும் ஏற்படுத்திக் கொள்வது. இன்னும் குறிப்பாக கூறினால், உலகமயம் முற்றிலும் பொருளாதாரம் சார்ந்தது. சர்வதேசமயம் பொருளாதார நோக்கங்களுக்கான அரசியலையும் உள்ளடக்கியது. இன்று நாம் உலகமயமாக்கம் என்னும்போது, பொருளாதாரத்துடன் அந்த நோக்கத்திற்கான அரசியலையும் சேர்த்தே கூறுகிறோம். எனவே அவற்றுக்கான எல்லைக்கோடு சந்தர்ப்பத்திற்கேற்ப மாறும் மெல்லிய கோடாகவே தோன்றுகிறது.

உலகமயமாக்கலின் ஒரு அலகு ஐரோப்பாவில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து தங்களுக்குள் வணிகம் முதலீடு மற்றும் தொழிலாளர்களின் சுதந்திரமான இயக்கத்தை அனுமதித்திருக்கிறது. அந்த அலகில் ''பிரெக்ஸிட்'' மூலம் ஏற்பட்டிருக்கும் விரிசல், உலகமயமாக்கல் என்னும் கொள்கையை, அதன் இன்றைய வடிவில், கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

பொருளாதார உலகமயமாக்கம் என்னும் கருத்து முழுமையான உலகமயமாக்கம் என்னும் பெருங்கனவுக்கு தொடக்கமாக கருதலாம் என நினைக்கிறேன். இன்றைய உலகமயமாக்கலுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்தாலும், முழுமையான உலகமயமாக்கல் என்னும் கருத்து, காரி டேவிஸ் (https://en.wikipedia.org/wiki/Garry_Davis) அவர்களால் இரண்டாம் உலகப்போருக்கு பிற்பட்ட காலத்தில் முன்வைக்கப்பட்டது. எல்லைகளற்ற ஒரே பூமி, ஒரே சமூகம். ''உலகம் யாவையும்'' என்னும் ஜெயமோகனின் சிறுகதை, காரி டேவிஸ் என்னும் ஆளுமையை புனைவு வெளியில் தமிழில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. மனிதர்கள் அறிவின் முழுமையையடையும்போது இது சாத்தியமாகலாம். இன்று மனிதர்கள் முழுமைக்கு வெகு தொலைவில்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். எனவே மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவேண்டிய கருத்தாக்கமும் கூட.

இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டாலும், இந்தியா இன்னும் உலகமயமாக்கலின் தொடக்க நிலையிலேயே இருக்கிறது. மிகச் சில துறைகளில் மட்டும்தான் முழுமையான எல்லைகள் கடந்த முதலீடு சாத்தியப்படுத்தப் பட்டிருக்கிறது. அதாவது 100% அந்நிய முதலீடு. தொழிலாளர்களின் சுதந்திரமான எல்லை கடந்த குடியேற்றம் இன்னும் எங்கும் சாத்தியம் ஆகவில்லை. ஐரோப்பா என்னும் சிறு அலகினுள் மட்டும் அது செயல்படுத்தப்பட்டிருக்கிறது. 1945 - ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச நிதியம் (IMF) சர்வதேசமயமாக்கல் வழியாக உலகமயாக்கல் திசை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட முதல் சில அடிகளில் ஒன்று. இந்தியா உலகமயமாக்கக் கொள்கைகளை தழுவுவதற்கு நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பே பிற சில நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட உலகமயமாக்கலும் பெரிய முன்னேற்றங்கள் அடைந்துள்ளதாகத் தோன்றவில்லை. அதாவது ஐரோப்பிய யூனியனுக்கு உட்பட்ட நாடுகளைத் தவிர மற்ற எங்கும் சுதந்திரமான அல்லது கிட்டத்தட்ட சுதந்திரமான தொழிலாளர் குடியேற்றம் அனுமதிக்கப்பட்டதில்லை. காரணம் மிக எளிமையானதுதான். உலக அரசாங்கம் என்னும் கருத்தாக்கம் இன்னும் தோன்றவில்லை. அதாவது நாடுகள் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தங்களை தனி அலகுகளாகக் கொண்டிருக்கும்போது பொருளாதார ரீதியாக மட்டும் ஒரே அலகாகக் கொள்ள முடியாது. அரசியல் மற்றும் சமுகத் தனித்தன்மையை பேணும்போது பொருளாதாரத் தனித்தன்மையை இல்லாமல் செய்வது, உலகப் பொருளாதாரத்தை அரசியல் வலிமையுள்ளவர்கள் தங்கள் லாபத்திற்காக சூழ்ச்சியுடன் எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பை அளிக்கும். இது அரசியல் வல்லமை இல்லாத நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தும். இன்றைய ஓரளவு தாராளமயமாக்கப்பட்ட உலகில் இதுதான் நடந்துவருவதாகத் தோன்றுகிறது. மேலும் தங்களின் சுயமதிப்பில் பணமதிப்புடன், பிற அவசியமான மதிப்பீடுகளையும் சேர்க்கும் நிலை வரும்வரை, அல்லது பணமதிப்புக்காக பிற மதிப்பீடுகளை இழப்பதற்கு விருப்பத்துடன் இருப்பது மாறும்வரைக்கும், இந்த நிலை மாறும் என்று தோன்றவில்லை. ஏனெனில் மனிதனின் பணமதிப்பு அவன் வாழும் சூழலுக்கேற்ப, சூழலில் உள்ள இயற்கைவளங்களின் இருப்பிற்கேற்ப மாறும் இயல்புடையது. மனிதனின் மதிப்பு மாறாமல் இருக்க வேண்டுமானால் பணமதிப்புடன் வேறுசில மதிப்புகளையும் கொண்டிருக்க வேண்டும்.

இந்தியாவில் கூட, ஒரு தேசமாகவே இதுதான் நடந்ததாகத் தோன்றுகிறது. உதாரணமாக இயற்கை வளங்கள் நிறைந்த வடகிழக்கு இந்தியாவின் வளங்களை ஒட்டு மொத்த இந்தியாவிற்காக எடுத்து விட்டு, அங்கிருக்கும் சமூகங்களுக்கு எதுவும் அளிக்காமல் விட்டுவிட்டதுதான் நெடுங்காலம் வடகிழக்கு இந்தியாவில் நிகழ்ந்து வரும் அமைதியின்மைக்குக் காரணமாக இருக்கலாம். இந்தியாவின் பிறப் பகுதிகளை ஒப்பிடும்போது வடகிழக்கு இந்தியா பொருளாதாரத்திலும் அடிப்படை வசதிகளிலும் மிகவும் பின்தங்கி இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும், அதற்கு முன் இருந்த பிரிட்டீஷ் அரசாங்கமும் அங்கிருந்தவற்றை தங்களுக்காக எடுத்துக் கொண்டன. வடகிழக்கின் அமைதியின்மைக்கு பொருளாதாரம் தவிர பல அரசியல், சமூக காரணங்களின் விளைவாக ஏற்பட்ட ஊடுருவல்களும் காரணமாக இருந்திருக்கின்றன. இந்த ஊடுருவல்களுக்கு எளிய இலக்காக வடகிழக்கு இருப்பதற்கு அதன் பின்தங்கிய நிலையே காரணம் என்று நினைக்கிறேன். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே இந்த ஊடுருவல்கள் அங்கு நிகழந்து நிலைபெற்று விட்டன. ஆனால் சுதந்திர இந்தியாவும், அப்பகுதியை முன்னேற்ற நெடுங்காலம் எதுவும் செய்யவில்லை - காரணங்கள் ஆய்வுக்குரியவை.

உலகமயமாக்கலில் என்னதான் நிகழ்கிறது? மகத்தான கருத்தாக்கமாக இருந்தாலும் ஏன் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது? இது கருத்தளவில் முழுமையான இயக்கமாக இருந்தாலும் நடைமுறையில் ஒருவழிப் பாதையாக இருப்பதால் இருக்கலாம் - முதலீடு செய்பவர்கள் ஒரு பகுதியின் வளங்களை எடுத்து விட்டு, அந்தப்பகுதிக்கு எவற்றையும் திரும்ப அளிக்காமல் இருப்பதன் மூலம். அல்லது வெறும் பொருளாதார நோக்கத்தை மட்டும் கொண்டிருப்பதாலும் இருக்கலாம். மனித வாழ்க்கைக்கு பொருளாதாரத்தின் தேவை ஒரு சிறு அலகு மட்டும்தான். பொருளாதாரம் கடந்து பண்பாடு, உறவு, கலை, சுவை, உணர்வு என பல அலகுகள் வாழ்க்கையில் தேவையாக உள்ளன. ஆனால் அந்த சிறு அலகை மட்டும் பிரதானப்படுத்தி உலகமயம் மற்றவற்றை புறந்தள்ளுவதால் இருக்கலாம். பொருளாதாரத்தின் அடிப்படையான நுகர்வை, பெரும் உற்பத்திகளின் சார்புடையவையாக மட்டும் வைத்திருந்து, அந்தத் திசையில் மட்டும் முன்னெடுப்பதன் மூலம் பண்பாட்டுடன் தொடர்புடைய, பண்பாடு சார்ந்த சமூகத்தின் உற்பத்திகளை, கலைகளை, உணர்வுகளை முக்கியத்துவம் இல்லாமல் செய்வதால் இருக்கலாம். பொருளாதாரத்திற்கான உற்பத்தி பெருமளவு இயந்திரமயமாகி விட்டது. சேவை இயந்திரமயமாகி வருகிறது. சேவையின் பெரும்பகுதியும் இயந்திரமயமாகிவிட்டால், மனிதனின் தேவை நுகர்வுக்கு மட்டும்தான் - இயந்திரங்களின் உற்பத்திக்காகவும் இயக்கத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்தப்பட்ச மனிதர்களைத் தவிர! அந்த நிலையில் இயந்திரங்களுடன் மனிதர்கள் பொருளாதார உற்பத்தியில் போட்டியிட வேண்டுமானால், மனிதர்களின் பணமதிப்பு, இயந்திரத்தின் பணமதிப்பை விட குறைந்தாக வேண்டும்.

இந்த நிலையில்தான் காட்சன் சாமுவேல் அவர்களின் பயணமும் அவர் எழுதிவரும் பனைமரச் சாலை தொடரும் முக்கியத்துவம் பெறுகின்றன. இயற்கை சார்ந்த ஒரு தொழிலையும், அந்தத் தொழிலின் உற்பத்தியின் பயன்பாடுகளையும் ஆவணப்படுத்துவதுடன் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகளின் சமூக மரியாதையையும் எனவே சுய மரியாதையையும் மீட்டெடுக்கும் முயற்சி - சுயமரியாதையை இழந்த சமூகம் மொத்த மனித சமூகத்திற்கும் பாரமாகவே மாறி விடும். தனிமனிதர்களின் தனித்துவத்துடன் கூடிய பொருளாதார பரவலாக்கத்திற்கான ஒரு மாதிரி முயற்சி. அத்தகையவர்களுக்கான ஒரு ஊக்குவிப்பு.
இன்று நாம் பெற்றிருக்கும் வசதி வாய்ப்புகளில், தொழில்நுட்பங்களில் பெரும்பான்மையானவை பொருளாதார உலகமயமாக்கலின் பயன்களே என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரத்தில் பலவிதமான எதிர்மறை விளைவுகளை பண்பாட்டிலும், தொழில்களிலும் வாழ்க்கை முறைகளிலும், மனித இருப்பிலும் அவை உருவாக்கியுள்ளன என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனில் நாம் பெற்ற வசதிகளுக்காக அதைத் தொடர்ந்து ஆதரிப்பதா அல்லது எதிர்மறை விளைவுகளுக்காக எதிர்ப்பதா?


இரண்டுமே தேவையற்றதாக இருக்கலாம். ஏனெனில் உலகமயமாக்கம் என்பது மகத்தான கருத்தாக்கம். அதன் முழுமை நிலையில் தேச, சமூக, பொருளாதார, பண்பாட்டு எல்லைகளைக் கடந்து ஒரே சமூகமாக உலக மனிதர்கள் அனைவரையும் உணர வைக்கும் ஒன்று. அதை முழுமையாக செயல்படுத்த பொருளாதார நிபுணர்கள் மட்டும் போதுமானவர்களாக இருக்க முடியாது. அதுவே இன்றைய உலகமயமாக்கலின் சிறு அலகில் நிகழ்ந்த பின்னோக்கிய நகர்வுக்கு காரணமாக இருக்கலாம். இங்கு பொருளாதாரத்தை விட பண்பாட்டை முன்னிறுத்தி, பொருளாதாரத்தை பண்பாட்டின் சிறுதுளியாக எடுத்துச் செல்ல முடிந்தால், அது காரி டேவிஸ் அவர்கள் கனவு கண்ட உலகமயமாக்கலை நோக்கி தொடங்கும் பயணமாக இருக்கலாம். இங்கு கூறுவது ஆதிக்கம் பெற்ற ஒரு பண்பாட்டை சிறு பண்பாடுகள் மேல் திணிப்பது அல்ல. மாறாக அனைத்துப் பண்பாடுகளும் அவற்றின் பொக்கிஷங்களை மற்றப் பண்பாடுகளின் தேவைகளுக்கேற்ப அளிக்கும் விரிவு! அந்த விரிவின் மூலம் எல்லாப் பண்பாடுகளும் சம அந்தஸ்தைப் பெறுவது. இறுதியில் பிரிவுகள் இல்லாத ஆனால் எண்ணற்ற சுயங்கள் உடைய முற்றிலும் திறந்த பண்பாட்டு வெளி! கனவுதான்! 

blog.change@gmail.com

Monday, August 22, 2016

புதிய தேசிய கல்விக் கொள்கை - பள்ளிக் கல்வி

சிறகு இணையப் பத்திரிகையில் 20-08-2016 அன்று பதிப்பிக்கப்பட்டது.

கல்விக் கொள்கைகள் கடைசியாக 1986-ம் வருடம் உருவாக்கப்பட்டு, 1992-ம் ஆண்டு அதில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அதன் பின் கிட்டத்தட்ட 30 வருடங்கள் கடந்து விட்டன. புதிய கல்விக் கொள்கைக்கான அறிக்கைகளை மதிப்பிடுவதற்கு, இந்தக் கால வெளியில் நிகழ்ந்திருக்கும் தேசிய, சமூக, பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்களை கணக்கில் கொண்டாக வேண்டும்.

தகவல் தொடர்பு தொழில்நுட்பம் இன்று தேசத்தின் கால, தூர இடைவெளிகளை பெருமளவு குறைத்திருக்கிறது. கிளர்ச்சியூட்டும் எதிர்மறை தகவல்கள்தான் மிக வேகமாக சமூகத்தில் பரவுவுகின்றன. இது சமூக எண்ணங்களை எதிர்மறையாகவே வைத்திருக்கிறது. பொருளாதார மாற்றங்கள், மக்கள் சமூக ஒத்திசைவுடன், சேர்ந்து வாழ்வதற்கான தேவையை குறைத்திருக்கிறது - அதாவது, பொருளாதார சுதந்திரத்தையும் எனவே பொருளாதார தன்னிறைவையும் வழங்குகிறது. இதன் மறுவிசையாக சமூகத்தின் அற உணர்வு குறைகிறது. பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்கள், சமூகத்தின் இயங்கு தளத்தை தொடர்ச்சியாக மாற்றியமைக்கிறது. சமூகம் அதன் மாறிய இயங்குதளத்தில் உராய்வின்றி செல்ல வேண்டுமானால், சமூகத்தின் எண்ணங்களைக் கட்டமைக்கும் கல்வி, அந்த இயங்குதளத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டாக வேண்டும். மனனம் செய்யும் திறனையே பிரதானமாக்கப்பட்டிருக்கும் இன்றைய கல்வி முறையில், சிந்தனைத் திறன் மழுங்குகிறது. இதன் தொடர்ச்சியாக, கிளர்ச்சியூட்டும் தகவல்கள் முக்கியத்துவம் பெறுவதும், மனிதனின் புற உலகத்துடனான நுண்ணிய உறவுகள் உணரப்படாமல் செல்வதும் நிகழ்கிறது.

புதிய தேசிய கல்விக் கொள்கை, சமூகத்தின் இன்றைய இயங்கு தளத்திற்கு ஏற்றவாறு கல்வியை மாற்றியமைப்பதற்கான ஒரு முயற்சி என்றே கருதுகிறேன். சமூகத்தின் எதிர்மறை இயக்கங்களை இல்லாமல் செய்யும் சமூக எண்ணங்களை உற்பத்தி செய்வதாக அந்தக் கல்வி அமைய வேண்டும். அதே நேரத்தில், பொருளாதாரம் உராய்வின்றி செல்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். பொருளாதாரத்திற்குத் தேவையான தொழில் திறமைகளை கல்வி அளித்தாக வேண்டும்.அதே நேரத்தில், மாணவர்களின் கற்பனை மற்றும் சிந்தனைத் திறன்களையும் பண்படுத்த வேண்டும். அதாவது சமூகத்திற்கு அளிக்கப்படும் கல்வி ஒரே நேரத்தில் அக மற்றும் புற நோக்கு உடையதாக இருக்கு வேண்டும். அக நோக்கு சமூக உறவுகளை மேம்படுத்தும். புற நோக்கு, பொருளாதாரத்தை மேம்படுத்தும். அவை இரண்டும் ஒத்திசைவுடன் இருந்தால் வாழ்க்கை முழுமையாக அமையலாம்.

புதிய கல்விக் கொள்கைக்கான குழுவின் அறிக்கையும், அதன் அடிப்படையிலான மனித வள மேம்பாட்டுத் துறையின் கொள்கைக்கான வரைவு அறிக்கையிலும் கூறப்பட்டுள்ள, பள்ளிக் கல்வி குறித்த சில தகவல்களைப் பார்க்கலாம்.

மகாத்மா காந்தியின் இந்தக் கூற்று, வரைவு அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது; ''முக்கியமான இக்கட்டு என்னவென்றால், மக்களுக்கு கல்வி என்றால் உண்மையில் என்ன என்பது குறித்து எந்தக் கருத்துக்களும் இல்லை. நிலத்தின் மதிப்பையும் பங்கு பரிவர்த்தனையில் பங்கின் மதிப்பையும் மதிப்பிடுவதைப் போன்று நாம் கல்வியின் மதிப்பை மதிப்பிடுகிறோம். பொருளீட்டுவதற்கு மட்டும் தேவையான கல்வியை அளிப்பதற்கே விரும்புகிறோம். கற்றவர்களின் பண்புகளின் மாற்றம் குறித்து எந்த சிந்தனைகளையும் நாம் வெளிப்படுத்துவதில்லை.'' இன்றளவும் பொதுவெளியில் கல்வி குறித்தான மதிப்பீடு இவ்வாறாகவே இருக்கிறது. மாற்றப்பட வேண்டிய மதிப்பீடு!

2014-ம் ஆண்டு, நாடு முழுவதுமான, குறிப்பாக பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள சுமார் ஆறு இலட்சம் மாணவர்களிடையே நடத்தப்பட்ட திறனாய்வு கொடுத்த முடிவுகள் இன்றைய கல்வியின் உண்மையான தரத்தை மதிப்பிடுகிறது. இந்தத் திறனாய்வின்படி ஐந்தாம் வகுப்பில் படிக்கும் சுமார் பாதி அளவிலான மாணவர்களுக்கு, இரண்டாம் வகுப்புப் பாடங்களை வாசிக்க முடியவில்லை. அதே அளவு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பிற்குத் தேவையான அடிப்படை கணிதத் திறமையும் இல்லை.

மத்திய அரசின் பள்ளிக் கல்வி நிறுவனங்களான கேந்த்ரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா, கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா போன்றவற்றின் தரம் குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பாக இருப்பது, இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பள்ளிகள், சாத்தியமுள்ள இடங்களில் மேலும் விரிவாக்கப்படும் என்றும், இவற்றின் வெற்றிக்கான காரணங்களை ஆராய்ந்து அவை மாநிலங்களில் அமல்படுத்தப்படும் என்றும் வரைவுக் கொள்கை கூறுகிறது.

அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படைக் கடமைகள் மற்றும் உரிமைகள் குறித்து போதிக்கப்படும். அறிவியல் பாடங்களில் செயல்முறை கல்வி ஆறாம் வகுப்பிலிருந்து படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். முக்கியமாக தேர்வு முறைகள் தற்போதைய மனனம் செய்யும் திறனை சோதிப்பதை விட்டுவிட்டு, விசாலமான அறிதல்கள், புரிதல்கள், வாசித்து அறிந்து கொள்ளும் திறன், பிரச்சனைகளை தீர்க்கும் திறன் ஆகியவற்றை சோதிப்பதன் அடிப்படையில் மாற்றியமைக்கப்படும். இவை பள்ளிக் கல்வி குறித்த சீர்திருத்தங்களில் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் பரிந்துரைகள்தான் கிராமத்து மாணவர்களுக்கு பொருந்தாததாக, இந்தக் கொள்கைகளை எதிர்ப்பவர்களால் முன்வைக்கப்படுகிறது. ஆக, கிராமப்புற மாணவர்கள் என்று அழைக்கப்படும் மாணவர்கள், தொடர்ந்து கல்வியின் பயனை அடைய முடியாமல் இருக்க வேண்டும் என்பதுதான் இவர்கள் விருப்பம் போல் தோன்றுகிறது. ஒருவேளை இந்தப் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கு தேவையான திறனுள்ள ஆசிரியர்கள் இல்லாமல் எவ்வாறு இதை நிறைவேற்றப்போகிறார்கள் போன்ற கேள்விகளை முன்வைத்திருந்தால் அவர்கள் கரிசனத்தை புரிந்துக் கொண்டிருக்க முடியும்.
தேர்வு முறையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இன்னொரு முக்கியமான சீர்திருத்தம் பத்தாம் வகுப்புத் தேர்வை அறிவியல் கணிதம் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு, வெவ்வாறு திறனில் அமைக்கப்பட்ட இரண்டு பிரிவுகளாக நடத்துவது. மாணவர்கள், அவர்கள் மேற்படிப்பு எந்தப் பிரிவில் படிக்கப்போகிறார்கள் என்பதைப் பொறுத்து இவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிந்தெடுக்காலம். அதாவது மேற்படிப்பில் அறிவியல் கணிதம் ஆங்கிலம் ஆகியவை தேவைப்படும் பிரிவுகளில் படிக்க விரும்பும் மாணவர்கள், முதல் தரத்திலான தேர்வையும் மற்றப் பிரிவுகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் அடுத்த தரத்திலான தேர்வையும் எழுதினால் போதுமானது. இது மாணவர்கள் அனைவரையும், அவர்களின் தனிப்பட்ட திறனையும் விருப்பங்களையும் கருத்தில் கொள்ளாமல், அவர்களுக்கு பிற்காலத்தில் தேவையில்லாத பாடங்களிலும் கடினமான தேர்வு முறைகளின் வழியாக வர வைக்கும் தேவையற்ற முறை விலக்கப்படுகிறது.,

தேர்வுகளை மதிப்பிடும் முறை குறித்தும் இந்தக் கொள்கை விரிவாகப் பேசுகிறது. பல கல்வி அமைப்புக்கள் இந்தியாவில் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் தனித் தனி தேர்வுகளை நடத்துகின்றன. தேர்வுகளின் தரமும் வெவ்வேறாக உள்ளன. இவை தவிர சில கல்வி அமைப்புகள் கடினமான தேர்வுகளுக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கின்றன. மொத்த இந்திய அளவில் மாணவர்களை மதிப்பிடும் தேவை வரும்போது இந்த முறைகளில் ஏற்றத்தாழ்வுகள் வருகின்றன. எனவே தற்போதைய மதிப்பிடும் முறையில் மாறுதலைக் கொண்டுவர இவ்வரைவுக் கொள்கை பரிந்துரைக்கிறது. இதற்காக இந்தியா முழுவதற்கும் பொதுவான பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வுகள் அல்லது, மதிப்பிடும் முறையை Scaling அல்லது Percentile முறையில் மாற்றுவது ஆகியவை வரைவுக் கொள்கையில் கூறப்பட்டிருக்கிறது
சென்ற வருடம் மனிதவள மேம்பாட்டுத் துறை. தேசிய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் கொள்கை - 2015 என்னும் கொள்கை விளக்க ஆவணத்தை வெளியிட்டிருக்கிறது. அதன் படி, 25% பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில்  திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் சேர்க்கப்படும். முறை சார்ந்த கல்வியைப் பெற முடியாமல், ஆனால் தொழில்களில் திறன் பெற்றவர்களுக்கு, அவர்கள் திறனை மதிப்பிட்டு சான்றிதழ் வழங்கும் முறை கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பல்வேறு காரணங்களால் முறைசார்ந்த கல்வியை பெற முடியாமல், ஆனால் தொழில் திறன் பெற்றவர்களால் முறைசார்ந்த தொழில்களிலோ அல்லது சுய தொழிலோ செய்வதற்கான வங்கிக் கடன்களைப் பெறுவது போன்றவற்றிற்கோ, இந்தச் சான்றிதழ் பெரிதும் உதவலாம். தொழில் வாய்ப்புக்களை திறமையுள்ள அனைவருக்கும் அளிப்பதற்கான முக்கியமான முயற்சி என்று இதைக் கூறலாம். எதிர்மறையாக கூறினால், மாணவர்களை பள்ளிக்கு வராமல் தொழிலுக்குச் செல்ல இது ஊக்குவிக்கும் என்றும் கூறலாம். இந்தக் கொள்கைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்த்தப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் இத்தகையக் கேள்விகளுக்கு பதில் பெற முடியலாம்.

கல்வியை அளிப்பதிலும் நிர்வாகம் செய்வதிலும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை எவ்வாறு உபயோகப்படுத்த முடியும் என்பதையும் இந்த வரைவுக் கொள்கை விரிவாகப் பேசுகிறது. தகுதியான ஆசிரியர்களின் பற்றாக்குறை, இருக்கும் ஆசிரியர்களின் தகுதியின்மை, பொறுப்பின்மை, பணிக்கு வராமை, போன்ற பிரச்சினைகள் கடுமையான அரசியல் கருத்தொருமையுடனும் உறுதியுடனும் எதிர்கொள்ளப்படும் என்றும் கூறுகிறது. ஆசிரியர்களின் பொறுப்பின்மை பணிக்கு வராமை போன்ற அத்துமீறல்கள் செல்பேசி மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் எதிர்கொள்ளப்படும் என்றும் முன்வைக்கிறது. எல்லா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும் தரச்சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கான தொடர்ந்த பயிற்சிகளையும், சீரான இடைவெளிகளில் ஆசிரியர் திறன் மதிப்பிடும் தேர்வுகளையும் இக்கொள்கை கட்டாயமாக்குகிறது.

இந்தக் கொள்கை பயிற்சி மொழியாக தாய்மொழியை பரிந்துரைக்கிறது. இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தையும் மூன்றாவது மொழியாக மாநிலங்களின் விருப்பத் தேர்வுக்கும் பரிந்துரைக்கிறது.
பள்ளிகளை தரவரிசைப் படுத்துவதற்கான சட்டகத்தையும் (Framework) இந்த வரைவுக் கொள்கை குறிப்பிடுகிறது. இந்தப் பரிந்துரையை செயல்படுத்த முடிந்தால், அது இந்தியக் கல்வியின் தரத்தில் ஒரு முக்கியமான பாய்ச்சலாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டவைகள் என் பார்வையில், பள்ளிக் கல்வியல் கொண்டுவரப்படும் முக்கியமான சீர்திருத்தங்கள். இவை வெறுங்கொள்கைகளாக மட்டும் இருந்தால் அல்லது கொள்கை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பவற்றை செயல்படுத்தும் உறுதி அரசாங்கத்திடம் இல்லாமல் இருந்தால், இவற்றால் எந்தப் பயனும் இல்லை. இதை நடைமுறைப்படுத்துவதில் வெற்றி பெற வேண்டுமானால், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் கல்வி இயக்கத்துடன் மிக நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அதில் அரசாங்கம் எவ்வளவு வெற்றி பெறுகிறதோ அதைப் பொறுத்துத்தான் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் அடையும் வெற்றியும் இருக்கும். 

Sunday, August 14, 2016

ஏன் இந்த எதிர்ப்பு? - 1

சிறகு இணையப் பத்திரிகையில் 13-08-2016 அன்று பதிப்பிக்கப்பட்டது

மத்திய மனிதவள மேம்பாட்டுத துறை அமைச்சகம், இந்தியாவின் கல்வித்துதறையை மறு சீரமைப்பு செய்வதற்காக ஒரு குழுவை அமைத்து, அதன அறிக்கையின் அடிப்படையில் வரைவு அறிக்கையை தயார்செய்து பொதுமக்களின் பார்வைக்கும் மேலான கருத்துக்களுக்குமாக முன் வைத்திருக்கிறது. தமிழகத்தில் எப்போதும் போலவே மத்திய அரசு எது செய்தாலும், அது எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், மாநிலங்களுக்கு எதிராகவே என்னும் ரீதியில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. எதிர்ப்பின் முன்னணியில் இருப்பது அரசியல் கட்சிகள். பின்னர் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள். மிக விரைவில் ஆசிரியர்களும் இதில் சேர்ந்து விடுவதை எதிர்பார்க்கலாம்.

புதிய தேசிய கல்விக் கொள்கைகளுக்கான குழுவின் அறிக்கை கல்வியியல் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசியப் பல்கலைக்கழகத்தின் (NUEPA) இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம்தான் தேசிய கல்விக் கொள்கைகளுக்கான குழுவின் செயலக அலுவலகமாக பணியாற்றியிருக்கிறது. கல்வித்துறை அமைச்சகத்தின் வரைவு அறிக்கை அதன் இணையத்தளத்தில் பார்வைக்கு உள்ளது. ஆகஸ்ட்-16 ஆலோசனைகள் அளிப்பதற்கான கடைசி தினம்.

ஊடகங்களில் வந்த செய்திகளின்படி, எதிர்ப்புக்கான காரணங்களாக அறிக்கையின் சில பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட உதிரி வரிகள் காரணங்களாக முன்வைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. அவையாவன,

  • ·         இந்தக் குழு கல்வியியல் நிபுணர்களைக்கொண்டு அமைக்கப்படாமல், ஆட்சிப்பணி நிபுணர்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது
  • ·         சமஸ்கிருதத்தை பரவலாக்கும் முயற்சி செய்யப்பட்டிருக்கிறது
  • ·         குலக்கல்வி முறையை கொண்டுவர அரசாங்கம் முயல்கிறது
  • ·         மாநிலங்களுக்கான உரிமையை பறிப்பதாக இருக்கிறது
  • ·         சிறுபான்மையினருக்கு எதிராக இருக்கிறது
  • ·         எட்டாம் வகுப்புவரைக்கும் மாணவர்களை வகுப்புகளில் தோல்வியடைய செய்யாமல் கடந்து செல்ல வைக்கும் கொள்கையில் மாற்றம் கொண்டுவந்திருக்கிறது.

இவை தவிர சில அடிப்படைகள் இல்லாத குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகிறது. உதாரணமாக, இருபாலரும் சேர்ந்துப் பயிலும் வகுப்பறைகள் கூடாது  என பரிந்துரைப்பதாக ஒரு குற்றச்சாட்டு. இந்த அறிக்கைகளில், இரண்டு முறை முழுவதும் படித்தப் பிறகும், தனியாக இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையைத் தேடியபோதும் இத்தகைய ஒரு பரிந்துரை என் கவனத்தில் வரவில்லை.

தேசிய கல்விக் கொள்கைக்கான குழுவின் அறிக்கையையும் அமைச்சகத்தின் வரைவு அறிக்கையையும் மேலோட்டமாக படித்தால் கூட, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என்பது தெரியவரும். இந்தியாவின் தற்போதைய கல்வித் தரத்தைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அதன் மீது நம்பத்தன்மையை உருவாக்க வேண்டுமானால், மிகக் கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பதையும் அறிவோம். அரசால் அமைக்கப்பட்ட குழு, அத்தகைய கடுமையான, தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்திருக்கிறது. அமைச்சகமும் அவற்றில் பலவற்றை ஏற்றுக் கொண்டு, தன் வரைவறிக்கையை உருவாக்கியிருக்கிறது. கடுமையான நடவடிக்கைகள் என்றால் எதிர்ப்புகள் தவிர்க்க முடியாதவை. அவைதான் இங்கு வெளிப்படுகின்றன. எதிர்ப்புகளுக்குக் காரணங்களாக, அந்த நடவடிக்கைகளுக்காகக் கூறப்பட்டுள்ள பின்புலங்களை கவனத்தில் கொள்ளாமல், சில உதிரி வாக்கியங்களை மட்டும் முன்னிலைப் படுத்தப்படுகிறது. அரசியல் கட்சிகள் இவ்வாறு இயல்பாக எழும் எதிர்ப்புக்களை தங்கள் சுயலாபங்களுக்காக பயன்படுத்துகின்றன. அதுதான் இப்போது நிகழத் தொடங்கியிருக்கிறது.
இதில் ஆசிரியர்களின் திறமைகளை உயர்த்தவும் கண்காணிக்கவும் பல நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனவே பெரும்பாலான ஆசிரியர் சமூகமும் இதை எதிர்க்கத் தொடங்கலாம். எதிர்ப்பதற்கான நேரடியான காரணங்களை வெளிப்படையாக அவர்களால் கூற முடியாது. எனவே பிறர் இடும் கூக்குரல்களை போலி செய்வார்கள். சமூகத்தின் மற்றப் பிரிவுகளைப் போலவே, ஆசிரியர் சமூகத்திலும் பெரும்பாலானவர்கள் தங்களுக்கொன்று தனிப்பட்ட கொள்கைகள் இல்லாதவர்களாகவே இருப்பார்கள்.  சுயலாபத்திற்காக, தங்கள் திறமையின்மை மற்றும் ஆர்வமின்மை போன்றவற்றின் மூலம் கல்வியை அழிக்கும் அச்சமூகத்தின் ஒரு குறுங்குழு, இந்தப் பெரும்பான்மையினரை மூளைச் சலவை செய்து தங்களை ஆதரிக்கச் செய்து விடுவார்கள். பின் என்ன? அரசியல் கட்சிகளுக்குக் கொண்டாட்டம்தான். கல்வியின் தரம் எக்கேடு கெட்டால் அவர்களுக்கென்ன?

யார் கொள்கைகள் வகுத்தாலும், சில மனச்சாய்வுகள் தவிர்க்க முடியாதவை. இத்தகைய மனச்சாய்வுகளை தொடர் விவாதம் மூலம் சரி செய்துவிட முடியலாம். அதற்குத் தேவை ஆரோக்கியமான விவாதம். ஆனால் இங்கு தமிழகத்தில் தொடங்கியிருப்பது அத்தகைய விவாதம் அல்ல. ஒட்டுமொத்த எதிர்திசையிலான மனச்சாய்வு. தரமற்ற கல்வியைப் பெறும் சமூகத்தில்தான் தங்களால் நிலைத்திருக்க முடியும் என்னும் குறுங்குழுக்களின் அடிமன விருப்பங்கள்.
புதிய கல்விக் கொள்கைகளுக்கான அறிக்கை, கீழ் மட்டத்திலிருந்து, அதாவது பொதுமக்களிடமிருந்தும் கல்வியாளர்களிடமிருந்தும் கருத்துக்கள் அறியப்பட்டு அவை மேல் நோக்கிச் சென்று, பலமுறை மறுஆய்வுகள் மற்றும் தொகுப்புகள் செய்யப்பட்டு குழுவிடம் சென்று சேர்ந்த தகவல்களிலிருந்தும், அந்த தகவல்களிலிருந்து பெறப்பட்ட கருத்தாக்கங்களை, மீண்டும் கல்வியாளர்களுடனும், கல்வியின் பிற பங்குதாரர்களுடனும் விவாதித்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு கல்வி நிபுணர்களால் கொள்கைகள் உருவாக்கப்படவில்லை. மாறாக கல்வியின் தற்போதையை எதார்த்த நிலையையும், மாற்றியமைப்பதற்கான ஆலோசனைகளையும் சமூகத்தின் பரந்த வெளியிலிருந்துப் பெற்று அவை தொகுக்கப்பட்டு மீண்டும் சரிபார்க்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய பணிக்கு பொருத்தமானவர்கள் கல்வியாளர்களை விட ஆட்சிப்பணி அனுபவம் உடையவர்களே.

நாம் ஏற்றுக்கொள்ள விரும்பினாலும் இல்லாவிட்டாலும், இந்தியாவில் இன்று இருக்கும் எல்லா மொழிகளிலும், தற்போது ஆங்கிலத்தின் தாக்கம் எவ்வாறு இருக்கிறதோ, அதைப்போல சமஸ்கிருதத்தின் தாக்கமும் நெடுங்காலமாக இருந்திருக்கிறது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய வெகுஜன தமிழ் எழுத்துக்களில் கூட, சமஸ்கிருத கலைச்சொற்கள் மிகுந்து இருந்திருக்கிறது. தற்போது, தமிழுக்கான கலைச் சொற்கள் பெருமளவு உருவாக்கப்பட்டிருந்தாலும், பல சமஸ்கிருத வார்த்தைகள் அவ்வாறே அல்லது சற்றே உருமாற்றி உபயோகப்படுத்தி வருகிறோம். இந்தியாவின் எல்லா மொழிகளிலும் அவ்வாறே. இந்தியா முழுமைக்குமான தத்துவமரபு சமஸ்கிருத மொழியிலேயே இருந்திருக்கின்றன. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் சில ஐரோப்பியர்கள் தங்கள் சுய முயற்சியால் சமஸ்கிருதத்தைக் கற்று, அங்கிருந்தவற்றை தங்கள் மொழிகளில் மொழிபெயர்த்து உரைகள் எழுதியிருக்காவிடில் இந்தியாவின் கலைச்செல்வங்கள் மற்றும் தத்துவங்களை பெருமளவு இழந்து, நம் பண்பாட்டையும் இழந்து நின்றிருப்போம். இன்று சமஸ்கிருதத்தின் செல்வங்கள் பெருமளவு பிற மொழிகளில் இருந்தாலும், சமஸ்கிருதத்தை அழிய விடுவது, நாம் பெற்றிருக்கும் கலை மற்றும் அறிவுச் செல்வங்களின் மூலத்தை இழப்பதற்குச் சமமாகும். தத்துவங்கள் மாறும் காலத்திற்கேற்ப மறுஆக்கம் செய்யப்படவேண்டுமென்றால், அவற்றின் மூலங்கள் காலவெளியில் தொடர்ந்து இருந்தாக வேண்டும். மூலங்கள் அழிந்தால் அவற்றை மறுஆக்கம் செய்வதற்கான சாத்தியங்களும் அழிந்து விடும். எனவே பண்பாடும் தேங்கி விடும். இந்தப் பின்னணியில், சமஸ்கிருதம் பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும், பரந்த மனப்பான்மையுடன் பயிற்றுவிக்க முன்வைக்கப்படும் என்று வரைவுக் கொள்கை கூறுகிறது. அனைவரும் சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்று கூறுவது சாத்தியம் இல்லை. மூன்று மொழிக் கொள்கையில், விருப்பப்பாடமாக ஒருவர் கற்க விரும்பினால் அதற்கான வாய்ப்புகளை இல்லாமல் செய்வது, சரியானதல்ல. இது சமஸ்கிருதத்தை பரவலாக்கச் செய்யும் முயற்சிதான். இந்தியாவின் செழிப்பான பண்பாட்டை அறிவதற்கு, தமிழ் போன்ற மொழிகளுடன், அன்றைய இந்தியாவின் இணைப்பு மொழியான சமஸ்கிருதம் பரவலாக்கப்பட்டாக வேண்டும். கட்டாயமாக அல்ல. விருப்பமானவர்களுக்கு கற்பதற்கான வாய்ப்புகள் எளிதில் கிடைக்க வைப்பதன் மூலம். இந்த வரைவுக் கொள்கை அதையே கூறுகிறது.

கல்வியின் ஆரம்ப நிலைகளிலேயே தொழில்கல்விக்கு முந்தைய, அறிமுகச் செயல்பாடுகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். குழந்தைகளின் திறமைகளை உருவாக்குவதற்கும், தொழில்மேல் மரியாதையை இது உருவாக்கவம் இது பயன்படும் என்று வரைவு அறிக்கை கூறுகிறது. இதைத்தான் குலக்கல்வியை அரசாங்கம் கொண்டு வருகிறது என்று கூவுகிறார்கள். இவர்கள் என்ன விரும்புகிறார்கள். படித்து முடித்த மாணவர்கள் தொழில் செய்ய திறனற்றவர்களாக வரவேண்டும் என்று விரும்புகிறார்களா? வரைவு அறிக்கைக்கு முந்தைய குழுவின் அறிக்கையில், இது சற்று விரிவாகவே கூறப்படுகிறது. கற்றல் திறனில் குறைபாடு உள்ளவர்கள், மற்றவர்களுடன் கற்றல் திறனில் இணையாக வருவதற்கு தொடர்ந்து உதவிகள் செய்ய வேண்டும். அத்தகைய உதவிகளும் பயனளிக்காத பட்சத்தில், எட்டாம் வகுப்பிலிருந்து தொழில்கல்வி நோக்கி அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கல்வி வாரியங்களும், தரச்சான்று (Accreditation) பெற்றிருக்க வேண்டும். இதன்மூலம், ஒவ்வொரு மாநில மற்றும் மத்திய கல்விவாரியங்களின் ஒப்புமைத் தரம் அனைவருக்கும் தெரியவரலாம். ஒரு குறிப்பிட்ட கல்வி வாரியம் அதன் தரத்தில் பின்தங்கியிருந்தால், அவை முன்னேற்றுவதற்கான கட்டாயம் சம்பந்தப்பட்ட அரசுக்கு ஏற்படும். இது வரைவு அறிக்கையில் உள்ள ஒரு பரிந்துரை. அதைப்போலவே பள்ளி அளவில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் இந்தியா முழுமைக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும், மற்ற பாடங்களின் ஒரு பகுதி பொதுவானதாகவும், மற்றப் பகுதி மாநிலங்களின் தேவைகளுக்கேற்பவும் அமைக்கப்படலாம் என்றும் அறிக்கை பரிந்துரைக்கிறது. இதுவே கல்வியில் மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது என்ற கூக்குரலுக்குக் காரணமாக இருக்கலாம். அறிக்கையின் வேறு எந்தப் பகுதிகளையும் இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புறுத்த முடியவில்லை. இந்தப் பரிந்துரைகள் தேவையானதா இல்லையா என்பதை கல்வி குறித்த புரிதல்கள் உள்ளவர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

சிறுபான்மையினருக்கு எதிராக இருக்கிறது என்னும் கருத்தும் மேலே குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளிலிருந்தே உருவி எடுக்கப்பட்டிருக்க வேண்டும். வேறு எவற்றையும் தொடர்புறுத்த முடியவில்லை. கல்வி நிறுவனங்களின் தரம் மற்றும் தரச்சான்றிதழ் பெறுவது போன்றவைக் குறித்த சில பரிந்துரைகள் உள்ளன. இவை சில சிறுபான்மை கல்வி நிறுவனங்களை அவற்றின் தற்போதைய செயல்படும் முறையிலிருந்து மாற்றியமைக்க வைக்கலாம். இதுவும் இந்த எதிர்ப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

தற்போது எட்டாம் வகுப்புவரை மாணவர்களின் கற்றல் அளவு எப்படியிருந்தாலும் மறு அமர்வு (Fail) இல்லாமல் முன்னேற்றிவிடப்படுகிறார்கள். அது இனிமேல் ஐந்தாம் வகுப்புவரை என்று மாற்ற பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அது கூட, குறைந்தப்பட்ச கற்றல் தகுதியை அடையாமல் இருக்கும் மாணவர்களுக்கு, தனிப்பட்ட கவனத்தின் மூலம் கற்றலை மேம்படுத்தச் செய்து, அதன்பின்னும் அவர்களால் குறைந்தப்பட்ச தகுதியை அடைய முடியாமல் இருந்தால்தான் மறுஅமர்வு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. இத்துடன் ஆசிரியர்கள் திறமையை மதிப்பிடும் கொள்கையையும், மேலே கூறியிருக்கும் பள்ளிகளில் தொழிற்கல்வி குறித்த கொள்கையையும் சேர்த்துக் கொள்ளும்போது, இதன் பயன் விளங்கலாம். ஆக, இது தீமையான ஒன்று இல்லை. மாறாக, மிக அடிப்படையான ஒன்று.

இந்தக் கொள்கைகளை எதிர்ப்பதோ ஆதரிப்பதோ அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தது. ஆனால், இது வருங்கால சமூகத்தை கட்டமைப்பதற்கான அடிப்படைக் கொள்கை என்பதை புரிந்துக் கொண்டு. அதன் அடிப்படையில் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை ஒருமுறையாவது படித்து விட்டு அதன்பின் தங்கள் நிலைப்பாடுகளை எடுத்தால், அது எவ்விதமாக இருந்தாலும், வருங்கால சமூகத்திற்கு நம் பங்களிப்பை சரியான முறையில் அளித்திருப்போம். மனித மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் வரைவு அறிக்கை வெறும் 40 பக்கங்கள்தான். கல்விக் கொள்கைக்கான குழுவின் அறிக்கை 240 பக்கங்கள். குறைந்தப் பட்சம் இந்த 40 பக்க ஆவணத்தையாவது படிக்காமல் இதைக் குறித்து கருத்து கூறுவதோ அல்லது சமூக வலைத்தளங்களில் குருட்டுத்தனமாக பகிர்ந்து கொள்வதோ உண்மையில் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஜனநாயக உரிமையை பொறுப்புணர்வில்லாமல் நம் சந்ததியினருக்கு எதிராகச் செயல்படுத்துவதாகும்.

blog.change@gmail.com

Saturday, July 2, 2016

குமரி மாவட்டத்தில் இன்றைய கல்வி

சிறகு இணையப்பத்திரிகையில் 25-06-2016 அன்று பதிப்பிக்கப்பட்டது.

கடந்த 2011-ம் வருட மக்கள்தொகை கணக்கெடுப்பின் தகவல்களின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் தொகை மொத்த மக்கள்தொகையில் 91.6% ஆகும். இது சென்னையை விட அதிகமாகும். சென்னையில் இது 90.18% ஆக உள்ளது. உண்மையில் குமரிமாவட்ட மக்கள் பெருமைப்படும் செய்தி. குமரி மாவட்டத்திற்கு இது வரமா சாபமா? பல தளங்களில் இது வரமாகவே இருக்கக் கூடும். ஆனாலும் தற்போது கல்வி பயிலும் மாணவர் சமூகத்திற்கு இது சாபமாக மாறிவிட்டதாகத் தோன்றுகிறது. ஒருவேளை வெறும் காட்சிப்பிழையோ?

சுமார் இருபது வருடங்களுக்கு முந்தைய காலத்திலேயே, குமரி மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளியில் வெற்றி பெறும் பெரும்பாலான அனைவரும், பெண்கள் உட்பட, மேல்நிலைப் பள்ளிப்படிப்புக்கு செல்வார்கள். மேல்நிலைப் பள்ளித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் கல்லூரி பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்புக்கு செல்வார்கள். இடையில் கல்வியை விட்டுவிடுபவர்கள் மிகக் குறைவானவர்களே. அன்று இங்கு இருந்த பெரும்பாலான பள்ளிகளும்  கல்லூரிகளும் அரசு அல்லது அரசு உதவிபெறும் பள்ளிகளும் கல்லூரிகளும்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக வெகு சில தனியார் பள்ளிகள் மட்டும்தான் இருந்தன.

இன்று ஒவ்வொரு குறுநகரங்களுக்கும் சில தனியார் பள்ளிகள் கடைவிரித்திருக்கின்றன. தனியார் பள்ளிகள் இல்லாத கிராமங்களும் இங்கு இல்லை என்றே சொல்லலாம். பள்ளி தொடங்கும் மாதங்களில் ஒவ்வொரு பள்ளி வாசல்களிலும், அங்கு படித்த(!) மாணவர்களின் படங்களுடனும், இறுதித் தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களுடனும் ஃப்ளெக்ஸ் பேனர்கள் வரவேற்கின்றன.
சில வருடங்களுக்கு முன் தமிழக கல்வி முறைகள் அனைத்தும் ஒன்றாக்கப்பட்ட பின், சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.ஸி.எஸ்.இ. என அடைமொழி இடப்பட்ட பள்ளிகள் தோன்றத் தொடங்கியிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை இன்னும் அந்தக் குழுமங்களிலிருந்து அனுமதியைப் பெறவில்லை. இருந்தாலும் முதல் தொகுதி மாணவர்கள் பத்தாம் வகுப்பை தொடுவதற்கு முன் அனுமதி பெற்றுவிட முடியும் என்னும் நம்பிக்கையுடன் இவற்றைத் தொடங்கியிருக்கின்றனர். இவை தவிர "இன்டர் நேஷனல்", "குளோபல்" என்னும் அடைமொழிகளுடனும் சில பள்ளிகள் தோன்றியிருக்கின்றன. அவை எந்த குழுமத்தைப் (Board) பின்பற்றுகின்றன என்பது எனக்குத் தெரியவில்லை. அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களில் பெரும்பான்மையானவர்களுக்கும் தெரியவில்லை. இந்த வகை பள்ளிகளில் பொதுவான ஒன்று, முதல் வகுப்பில் சேருவதற்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய்வரை நன்கொடையாக வசூலிக்கப்படுகிறது. இருந்தாலும் அவற்றில் கூட்டம் அலை மோதுகிறது.

இதில் பிரச்சினை ஒன்றும் இல்லைதான். வருமானம் இருக்கிறதோ இல்லையோ, தங்கள் குழந்தைகள் மேல் இடப்படும் முதலீடுதான் சிறந்த முதலீடு என கருதுபவர்கள் குழந்தைகளை அங்கு சேர்த்துவிடலாம். முதலீடு லாபத்தையும் ஈட்டலாம், இழப்பையும் ஏற்படுத்தலாம் - கச்சாப் பொருளின் தன்மையைப் பொறுத்தது. இது அவரவர் தனிப்பட்ட விருப்பம். இதமான காலநிலையை கொண்டிருக்கும் குமரிமாவட்டத்திலேயே குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள் கொண்ட பள்ளி என்னும் விளம்பரங்கள் கண்ணில் படுகின்றன. வியாபாரத்தில் தங்கள் கைவசம் இருப்பதுதான் சிறந்தது என விளம்பரப்படுத்துகிறார்கள். வியாபாரப் போட்டி!

இந்த வியாபாரப்போட்டி, அதில் தங்கள் குழந்தைகளை முதலீடு செய்யும் பெற்றோர்கள், அந்தப் போட்டிகளிலும் முதலீடுகளிலும் அவர்கள் பெறும் வெற்றி அல்லது தோல்வி ஆகியவலை குறித்து கவலை ஒன்றும் இல்லை. அவரவர் விருப்பம்! ஆனால் அங்கு முதலீடாக்கப் பட்டிருக்கும் குழந்தைகளின் நிலைதான் கவலையளிக்கிறது. அவர்கள் குழந்தைகள் என்பதால் மட்டுமல்லாமல் நாளைய சமூகம் என்பதாலும்.

ஒரு மனிதனின் ஆளுமை, அவன் பிறந்தது முதல் சேகரிக்கும் தகவல்களாலும், பெறும் அனுபங்களாலும், அந்த தகவல்களையும் அனுபங்களையும் பயன்படுத்தும் நுண்ணறிவாலும் உருவாக்கப்படுகிறது. ஆக மனித ஆளுமை உருவாக்கத்தில் இந்த மூன்று காரணிகளும் முக்கியமானவை. இவற்றில் ஒன்றை ஏதேனும் திசையில் கட்டுப்படுத்தினாலோ அல்லது தூண்டினாலோ, அந்த மனிதனின் ஆளுமை அந்த குறிப்பிட்ட திசையில் அழிவோ ஆக்கமோ அடையலாம். ஆனால் ஒரே தகவல் கூட வெவ்வேறு மனிதர்களால் வெவ்வேறு விதங்களில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட தகவல் அல்லது அனுபவம், ஒரு தனிமனிதனிடம் எத்தகைய ஆளுமை விளைவை ஏற்படுத்தும் என்பதை எளிதில் வரையறுக்க முடியாது - அது அந்த மனிதனின் உருவாகிவிட்ட ஆளுமையைப் பொறுத்தது.

இந்த நிலையில் வியாபாரப் போட்டிக்காக, ஒரே தொனியில் ஒரே திசையில் மாணவர்களுக்கு அளிக்கும் கல்வி, அவர்கள் ஆளுமையில் எந்த ஆக்கப்பூர்வமான பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. கல்வி ஈசல்கள் தோன்றுவதற்கு முன் இருந்த கல்வி முறை, கல்விக்கு வெளியே அவர்களுக்கு பிற தகவல்களையும் அனுபங்களையும் பெற ஏராளமான நேரத்தை அனுமதித்தது. இன்றைய கல்வியின் முழுமுதற் பிரச்சினை இந்த நேரமின்மைதான். ஒருவேளை நேரமிருந்தாலும், தொலைக்காட்சி ஊடகங்கள், அவற்றின் மேல் கட்டுப்பாடு இல்லாத பெற்றோர்களின் குழந்தைகளின் முழுநேரத்தையும் எடுத்து விடுகிறது. ஆக தொலைக்காட்சி ஊடகங்களின் மேல் சுயகட்டுப்பாடு இல்லாத பெற்றோரை தங்கள் தீவினையாகப் பெற்றிருக்கும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் நேரமும் அவர்கள் ஆளுமையை அழிக்கவே செய்யும். ஆக, அந்தக் குழந்தைகளையும் இந்தக் கட்டுரை பொருட்படுத்தவில்லை.

முதலாவதாக இந்தப் பள்ளிகளின் சீருடைகளும், ஷூ. கழுத்துப் பட்டை (Tie), ஓவர் கோட்  போன்ற உடைகள் மாணவர்களின் சுதந்திரத்தையும் எளிமையையும் பறித்து உடலளவில் இறுக்கமாக மாற்றிவிடுகிறது. உடல் அடையும் எதுவும் மனதிற்கும் உடனடியாக கடத்தப்படும். இது முதல் நிலையிலேய அவர்களின் ஆளுமை இறுக்கமாக்கப்பட்டு பன்முகத் தன்மையை இழக்க வைக்கிறது. அந்தச் சூழல், அந்த இளவயதிலேயே ஒரு முனைப்படுத்தப்படுகிறது. இயல்பாக அந்த திசையில் ஆளுமையை வளர்க்க முடிந்த குழந்தைகள் பிழைத்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் பிறழ்வு பட்ட ஆளுமையின் மூலம் தங்கள் வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டியதுதான் -  ஏதேனும் ஒரு நிலையில் அதை முறித்து விட்டு தங்கள் திசையை தாங்களே தீர்மானிக்கும் துணிவு உள்ளவர்களைத் தவிர!

எட்டாம் வகுப்புவரை, பெரும்பாலான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நேரம் ஒரு பிரச்சினையில்லை. அவை வரையறுக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே இயங்குகின்றன. ஆனால் எட்டாம் வகுப்பு முடித்தபின் குமரிமாவட்டத்தில் உள்ள எந்த தனியார் பள்ளி மாணவர்களும் தினம்தோறும் குறைந்த பட்டசம் இரண்டு மணி நேரம் அதிகமாக பள்ளியில் இருக்க வேண்டும் - காலையில் ஒரு மணிநேரம் முன்னதாகவும், மாலையில் ஒரு மணி நேரம் பிந்தியும். ஒருசில புகழ்பெற்ற(?!) பள்ளிகளில் தினம்தோறும் காலை ஆறு மணிமுதல் இரவு எட்டுமணிவரை பள்ளியில் இருக்க வேண்டும். வெகு சில பள்ளிகள் தவிர மற்ற அனைத்துப் பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பு பாதி நாட்களுக்குப் பின் பத்தாம் வகுப்பு பாடங்கள் பயிற்றுவிக்கப்படும். அதன் பின் ஒன்றரை வருடம் அதையே மீண்டும் மீண்டும், வெறும் தகவல்களாக அரைத்துக் கொண்டே இருக்க வேண்டும். பதினொன்றாம் வகுப்பிலும் இதே போல. இன்னும் சில பள்ளிகளில் வெறும் மூன்று மாதங்கள் மட்டும்தான் பதினொன்றாம் வகுப்புப் பாடங்கள் போதிக்கப்படுகிறது. அதன் பின் தொடர்ச்சியாக பதினெட்டு மாதங்கள் பன்னிரெண்டாம் வகுப்புப் பாடங்களை மீண்டும் மீண்டும் அரைக்க வேண்டும். இவை அனைத்தின் உச்சமாக, அறுதி பெரும்பான்மையான பள்ளிகள் பத்தாம் வகுப்புக்கும் பன்னிரண்டாம் வகுப்புக்கும் செல்லவிருக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிப்பதில்லை. வெயில் எவ்வளவு சுட்டெரித்தாலும், மின் தடைகள் இருந்தாலும் வாரத்திற்கு ஆறு நாட்கள் பெரும்பாலான பள்ளிகளில் எட்டு மணிநேரமும் சில பள்ளிகளில் பத்து மணி நேரமும் பள்ளியில் இருக்க வேண்டும். இதற்கு எதிராக இருக்கும் அரசாணைகள் பள்ளிகளால் பொருட்படுத்தப் படுவதில்லை.  அரசாங்கத்தின் கல்வித் துறை அதிகாரிகளாலும் பொருட்படுத்தப் படுவதில்லை. இவ்வாறு வேட்டையாடப்படும் மாணவர்களால், அவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தாலும், என்ன உயர்கல்விகள் கற்றாலும், சமூகத்திற்கு என்ன பயன்?

தனியார் பள்ளிகளால் பரவலாக்கப்பட்ட இந்த முறை தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பரவி விட்டது. ஆக எந்த பெற்றோராவது அல்லது மாணவர்களாவது இயல்பான கல்விதான் தேவை என்றால் குமரி மாவட்டத்தில் அதற்கான வாய்ப்புகளே இல்லை. வெகு சில அரசுப் பள்ளிகள் தவிர மற்றவை அனைத்தும் சீரழிந்து கிடக்கின்றன. ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால் அந்த இடங்கள் எளிதில் நிரப்பப் படுவதில்லை. ஆசிரியர்களுக்கும்,  சில விதிவிலக்குகளைத் தவிர, தாங்கள் ஆசிரியர்கள் என்னும் உணர்வு இல்லை. இந்த நிலையில் எவ்வாறு அரசுப் பள்ளிகளை நம்புவது?

சுதந்திரமான, இயல்பான கல்வியை விரும்பும் மாணவர்களுக்கும் தங்கள் பிள்ளைகள் இயல்பாக வளர வேண்டும் என விரும்பும் பெற்றோர்களுக்கும் இன்று குமரி மாவட்டத்தில் வாய்ப்புகள் இல்லை. இதை கல்வியாளர்களும் அறிவுஜீவிகளும் புறந்தள்ளினால், தமிழகம் முழுவதும் மிக விரைவில் இது பரவி விடும்.


இந்த நிலைக்கு வியாபார முனைப்புடன் இருக்கும் தனியார் பள்ளிகளை குறைகூறுவது சரியென்று தோன்றவில்லை. அவை தனியார் நிறுவனங்கள், அவற்றுக்கான நோக்கத்தை அவை நிறைவேற்றுகின்றன. அவற்றின் வியாபார யுக்திகளுக்கு அடிபணியும் சுய சிந்தனை இல்லாத சமூகம்தான் இந்த நிலைக்கு காரணம் என்று தோன்றுகிறது. அந்த சமூகத்தில் ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழிகளும் பிழைப்புக்கு பயனில்லை என்று நிலைநிறுத்திய கல்வியாளர்களும் அறிவுஜீவிகளும்தான் காரணம் என்று தோன்றுகிறது. எந்தத் தொழிலுக்காவது திறமை பெற்றவர்கள், தேவைப்படும்போது ஆங்கிலம் கற்றுக்கொள்வது ஒன்றும் அத்தனை கடினமானது இல்லை என்பதை சமூகத்துக்கு உணர்த்தத் தவறிய கற்றவர்கள்தான் காரணம் என்று தோன்றுகிறது. சமூகத்தின் மேல் ஏற்றப்படும் இத்தகைய கருத்தாக்கங்களை அரைகுறையாக புரிந்து கொள்ளும் படிப்பறிவு அதிகம் உள்ள சமூகம் கூட காரணமாக இருக்கலாம்.

blog.change@gmail.com

Saturday, June 18, 2016

எதற்காக எழுதுகிறேன்?

பதாகை இணையப் பத்திரிகையில் 22-05-2016 அன்று பதிப்பிக்கப்பட்டது.

இதற்கு என்ன பதில் எழுதுவது? எழுதத் தோன்றுகிறது, எழுதுகிறேன். பசிக்கும்போது உண்பது போல, உறக்கம் வரும்போது உறங்குவது போல..... எதற்காக எழுதுகிறேனோ அதே காரணத்துக்காக, எதற்காக எழுதுகிறேன் என்பதையும் எழுதி விடுகிறேன்!

எதற்காக எழுதுகிறேன் என்பதைக் கூற, எவ்வாறு எழுதத் தொடங்கினேன் என்பதைக் கூறியாக வேண்டும். அதற்கும் முன் ஒன்று; நான் இதுவரை எழுதியது மிகவும் கொஞ்சம்தான். இதுவரை எழுதியவை இதை எழுதுவதற்கான தகுதியைக் கொடுக்கிறதா என்பதும் தெரியாது. இருந்தாலும் இதுவரை எழுதியவற்றைப் போலவே இதையும் எழுதிவிடுகிறேன்.

என்னுடன் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்களில் சிலர், தங்களுக்குள் தொடர்புகளை வைத்திருக்க, ஒருவருக்கொருவர் தொலைந்துப் போயிருந்த தங்களைக் கண்டுப்பிடித்து 2001-ம் வருடம் யாஹூ குழுமம் ஒன்றைத் தொடங்கினார்கள். என்னையும் கண்டுப்பிடித்து அதில் சேர்த்துக் கொண்டார்கள். குழுமம் தொடங்கிய புதிதில், புதிய அனைத்தையும் போலவே அதுவும் அனைவருக்கும் ஆர்வமூட்டுவதாக இருந்தது. எனவே சில காலம் தொடர்ந்து உயிர்ப்புடன் அது செயல்பட்டுக்கொண்டிருந்தது. பழையதானவுடன் நண்பர்களின் ஆர்வமும் குறையத் தொடங்கியது. ஒன்றிரண்டுபேர் அவ்வப்போது தங்களுக்கு வரும் சில தகவல்கள் இருக்கும் மின்னஞ்சல்களை குழுமத்திற்கு திருப்பி விடுவார்கள். அதுவும் இல்லாமல் போகும்போது நண்பர்களில் யாராவது மனக்கிலேசம் அடைந்தால், ''ஏன் நம் குழுமம் இவ்வாறு செயலற்று விட்டது? தற்போதைய நம் நிலையில் பழையவற்றை மறந்து விட்டோமா? நட்பை மறந்து விட்டோமா? அவ்வாறு ஆகிவிடக் கூடாது. மீண்டும் குழுமம் செயல்பட வேண்டும்''  என்பது போன்ற கருத்துக்களை முன்வைப்பார்கள். சில நாட்கள் மீண்டும் சில மின்னஞ்சல்கள். அதன்பின் மீண்டும் உறைந்திருத்தல்..

இப்படி ஒரு உயிர்த்தெழுப்புவிக்கும் மின்னஞ்சல் 2008-ம் ஆண்டு தொடக்கத்தில் அந்தக் குழுமத்தில் வந்தது. அப்போது நானும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். எனவே ''குழுமத்தில் நாம் ஆன்மிகம் பற்றி விவாதிப்போம். தொடக்கமாக, என் எண்ணங்களை வாரம் ஒரு முறை குழுமத்திற்கு அனுப்புகிறேன். அதன் அடிப்படையில் விவாதிக்கலாம்'' என்று வீராவேசமாக நானும் மின்னஞ்சலிட்டு, அதன் பின் தொடர்ந்து பதினைந்து வாரங்கள் குழுமத்திற்கு வாரம் ஒரு மின்னஞ்சல் அனுப்பி ஏற்றுக் கொண்ட பொறுப்பை முடித்து விட்டேன். முதல் சில மின்னஞ்சல்களுக்கு சிறிய விவாதங்கள் நடந்தது. அதன்பின் மீண்டும் குழுமம் அதன் இயல்புக்குச் சென்று விட்டது.

ஆனால் அந்தப் பதினைந்து வாரங்களின் இறுதியில், என்னளவில் முற்றிலும் புதியவனாக மாறியிருந்தேன். அதுவரை நான் எண்ணுபவற்றையே செய்கிறேன் என்னும் ஒரு மயக்கத்தில் இருந்து வந்தேன். பதினைந்து வார எண்ணங்களை எழுதும் பயிற்சி, அந்த மயக்கத்தை தகர்த்து விட்டது. எழுதுவதற்கு முன் அவை எண்ணங்களாக இருக்கும். எழுதிய பின் எண்ணங்கள் எழுத்து வடிவத்தை அடைந்திருக்கும். எண்ணங்கள் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளதால் எண்ணங்களுக்கும் செயல்களுக்குமான இடைவெளியும் இப்போது தெளிவாக தெரியத் தொடங்கும். அந்தப் பதினைந்து வாரங்களில் முதன்முறையாக எண்ணங்களுக்கும் செயல்களுக்குமான இடைவெளி அப்பட்டமாக எனக்கு தெரியத் தொடங்கியது. இந்த அறிதல் என் எண்ணங்களை ஒரு புறத்திலிருந்தும் செயல்படும் விதத்தை இன்னொருபுறத்திலிருந்தும் நுண்மையாக மாற்றத் தொடங்கியது.

இந்த அறிதல் அளித்த சுயமாற்றத்தை இழக்க நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் என் சுய லாபத்திற்காக நண்பர்கள் மேல் வன்முறையை கட்டவிழ்த்து விடவும் விரும்பவில்லை. எனவே தொடர்ந்து எழுதியவற்றை அந்த யாஹூ குழுமத்திற்கு அனுப்பவில்லை. அதே நேரத்தில் எழுதுவதற்கான பொறுப்புணர்வையும் ஆர்வத்தைதையும் தக்க வைத்துக் கொள்ள வலைப்பக்கம்(Blog) ஒன்றைத் தொடங்கி எழுதியவற்றை அவ்வப்போது  அதில் பதித்து வந்தேன். எதற்காக எழுதுகிறேன் என்பதில் தெளிவாக இருந்ததால் நெடுங்காலம் நான் மட்டுமே பார்த்து வந்த ஒரு வலைப்பக்கத்தில் தொடர்ந்து எழுதுவதில் ஏமாற்றமும் தயக்கமும் அவ்வப்போது ஏற்பட்டாலும், அவற்றைக் கடந்து தொடர்ந்து எழுதவும் முடிந்தது.

ஒவ்வொரு கட்டுரையையும் எழுதி முடிக்கும்போது, ஏதோ ஒன்றை இன்னும் நெருக்கமாக அறிய முடிந்தது. அதே நேரத்தில் அறியாதவற்றின் எல்லை இன்னும் விரிவதையும் உணர முடிந்தது. அறிந்தது அளிக்கும் மன எழுச்சியும் அறியாதவை அளிக்கும் பணிவுணர்வும் சேர்ந்து நிகழ்ந்த ரசவாதம், எனக்குள் நான் மட்டுமே அறியும் ஒரு சமநிலையை உருவாக்கி அளித்தது. இதைத் தவிர நான் எழுத வேறு என்ன காரணம் வேண்டும்?


சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் சில இணையப் பத்திரிகைகளுக்கு எழுதியவற்றை பரீட்சார்த்தமாக அனுப்பி வைத்தேன். 'சிறகு' இல் நான் எழுதியனுப்பியது பதிப்பிக்கப்பட்டு, அது பிறர் வாசிக்கும் அளவுக்கு உள்ளது என்னும் நம்பிக்கையைக் கொடுத்தது. அதன் பின் 'சொல்வனம்' சில கட்டுரைகளை பதிப்பித்தது. இந்தக் கட்டத்தில் நான் எழுதும் முறையை சற்றே மாற்றியமைக்க வேண்டியிருந்தது. அதுவரை மற்றவர்களும் படிக்க வேண்டும் என்னும் பிரக்ஞை இல்லாமல் எழுதி வந்த நான், எழுதுவது எனக்காக இருந்தாலும் பொதுவெளியில் வரும்போது படிப்பவர்களுக்கும் ஆர்வமூட்டுவதாக இருக்க வேண்டும் என உணர வைக்கப் பட்டேன். அதன் பின் அந்த உணர்வுடன்தான் எழுதி வருகிறேன். ஆனாலும் எழுதுவதில் அவ்வுணர்வு பிரதிபலிக்கிறதா என்பதை என்னால் உறுதி செய்ய முடியவில்லை. அவ்வாறு இல்லையென்றாலும் அது என் நோக்கத்தை பாதிப்பதில்லை.

blog.change@gmail.com

Monday, May 9, 2016

நுழைவுத் தேர்வுகள்

07-05-2016 அன்று சிறகு இணையப் பத்திரிகையில் பதிப்பிக்கப்பட்டது.

மருத்துவப்படிப்புக்காக, இந்தியா முழுமைக்கும் பொதுவாக ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  தீர்ப்பளித்திருக்கிறது. வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. ஒரே தேர்வு, ஒரே மதிப்பெண். அதன் மூலம் விரும்பும் எந்த மருத்துவக் கல்லூரியிலும் சேர்வதற்கு தகுதி பெறலாம் - GMAT, GATE SAT போன்ற தேர்வுகளைப் போல.  பொறியியலுக்கும் இத்தகைய ஒரு பொதுத் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நிகழ்வதற்கான வாய்ப்புகள் உருவானால், தமிழகத்தில் தரம் தாழ்ந்து செல்லும் கல்வியை மீண்டும் மீட்க முடியலாம்.

அரசியல்வாதிகள் அவர்களின் சுயலாபத்திற்காக மாணவர்களிடையே ஒரு பிரிவினையை கற்பிதம் செய்து, அதை உரக்கச் சொல்வதன் மூலம் உண்மை என நிறுவி இருக்கிறார்கள். எவ்விதக் கருத்துக்களையும் உரக்கச் சொல்வதன் மூலம் பெரும்பாலானவர்களை நம்பும்படி வைத்தால் அவையே உண்மையாகி விடுகிறது. அரசியல்வாதிகளின் அர்த்தமற்ற கூச்சல்கள் இதன் அடிப்படையில்தான் நாள்தோறும் அதிகரிக்கிறது. சுமார் பத்து வருடங்களாக நுழைவுத் தேர்வு குறித்து இத்தகைய அர்தமற்ற கூச்சல்களை எழுப்பி பெரும்பாலானவர்களை நம்பும்படி செய்திருக்கிறார்கள். இந்தக் கூச்சல்களுக்கிடையே, உண்மையென நம்ப வைக்கப்பட்டவற்றின் போதாமையை, தர்க்கமின்மையை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல கல்வியாளர்கள் முயன்றாக வேண்டும். தமிழகத்தின் கல்வியை மீட்டெடுக்க, இது மிகமிக அவசரமானத் தேவை.

நுழைவுத் தேர்வுக்கு எதிராகக் கூறப்படும் காரணம், கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற மாணவர்கள் என்னும் பிரிவினை. கிராமப்புற மாணவர்களால் நுழைவுத் தேர்வுகளில் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியட இயல்வதில்லை என்னும் கருத்தை திரும்பத் திரும்பக் கூறி, அதை உண்மையென மாற்றியிருக்கிறார்கள். ஆனால் எதன் அடிப்படையில் இந்தக் கருத்தாக்கம் கூறப்படுகிறது? கிராமப்புறப் பள்ளிகள் தரமற்றவை என்னும் அர்த்தத்திலா? அவ்வாறெனில் அவற்றின் தரத்தை உயர்த்துவதும், உயர்த்தக் கோருவதும்தானே இயல்பான செயல்களாக இருக்க முடியும்?

நகரத்தை போலிச்செய்ய முயலும் சில கிராமத்து உயர்\நடுத்தர குடும்பங்களில் உள்ள மாணவர்களைத் தவிர்த்து விட்டு ஒரே மதிப்பெண் வாங்கும் ஒரு கிராமத்து மாணவனையும் நகரத்து மாணவனையும் ஒப்பிட்டால், கிராமத்து மாணவன் அதிக நுண்ணறிவுடன் இருப்பான். காரணம் எளிமையானதுதான். சூழலை அவதானிப்பதற்கான வாய்ப்பும் கட்டாயமும் நகரத்து மாணவனை விட கிராமத்து மாணவனுக்கு அதிகமாக இருக்கும். கல்வி என்பது சூழலை அறிந்து கொள்ளும் இயக்கம்தானே!

நுழைவுத்தேர்வுகள் இல்லாமல் ஆகிவிட்ட கடந்த பத்து ஆண்டுகளில், மதிப்பெண்களை வாங்க வைப்பதற்காக மாணவர்களை பயிற்றுவிக்கும் முறை, மாணவர்களுக்கு எஞ்சியிருக்கும் கொஞ்சம் நஞ்சம் நுண்ணறிவையும் இல்லாமல் செய்து விடுகிறது. தற்போது தமிழ்நாட்டில் பொறியியல் படித்து வெளிவரும் மாணவர்களில் 70% பேர் பொறியியல் துறையில் வேலை செய்வதற்கு தகுதியில்லாதவர்களாக வருகிறார்கள் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. மீதி 30% பேர் கூட, அவர்கள் கற்ற கல்வியின் அடிப்படையில் வேலைக்குத் தகுதியுடையவர்கள் ஆகிறார்களா அல்லது பள்ளிக் கல்வி முறையின் நுண்ணறிவை அழிக்கும் இயக்கத்தில் தங்கள் நுண்ணறிவின் சிறுபகுதியையாவது இழக்காமல் பாதுகாத்ததன் மூலம் தகுதி பெறுகிறார்களா? மருத்துவத் துறையில், மருத்துவர்களின் தேவை அதிகமாக இருப்பதால் இத்தகைய புள்ளிவிபரங்கள் இன்னும் வரவில்லை.

பல பள்ளிகளில், பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்புப் பாடங்கள், வகுப்புத் தொடங்கிய பின் சில மாதங்கள் மட்டும்தான் நடத்தப்படும். அதன் பின் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் 12-ம் வகுப்புப் பாடங்களை மாணவர்கள் படிக்க வைக்கப்படுகிறார்கள். அறிவியல் பாடங்களைப் புரிந்துக் கொள்வதற்கு அடிப்படைகளை அறிந்திருப்பது அவசியம். 11-ம் வகுப்பில் அறிவியல் பாடங்களைப் படிக்காமல் செல்லும் மாணவன், 12-ம் வகுப்பில் அறிவியல் பாடங்களை புரிந்து கொள்ள முடியாது. ஆனால் ஒன்றரை வருடங்களில் அவற்றைத் தகவல்களாக பெரும்பாலான மாணவர்களால் மனனம் செய்துவிட முடியலாம். மனனம் செய்விக்கப்படுகிறார்கள். அதாவது மாணவர்களின் நினைவு சக்தியையும், நினைவிலிருந்து எடுத்து வார்த்தை பிறழாமல் விடைத்தாளில் எழுதும் திறனையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு தற்போதைய மருத்துவர்களும் பொறியாளர்களும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். 12-ம் வகுப்பில் அடிப்படைகளைப் பயிலாமல் செல்லும் மாணவர்கள், மேற்படிப்புகளில் எவற்றையும் புரிந்துக் கொள்ள முடியாது. மனனம் செய்யும் பயிற்சியில் நுண்ணுணர்வை முழுவதும் இழக்காத வெகு சில மாணவர்களால் மட்டும்தான், மேற்கல்வியை கல்வியாக அணுக முடியும்.

சரியாக வடிவமைக்கப்படும் நுழைவுத் தேர்வுகள், கற்பவற்றிலிருந்து மாணவர்கள் எவ்வளவு புரிந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சோதிக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். ஏனெனில் மேற்கல்விக்கு பள்ளிகளில் படித்தவைதான் அடிப்படையாக அமைகின்றன. நுழைவுத்தேர்வு இல்லாத நிலையில் புரிந்து கொண்டவைகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. மனனம் செய்யும் திறமை மட்டுமே சோதிக்கப்படுகிறது. மேலும் நினைவு சக்தி குறைவாக உள்ள, ஆனால் நுண்ணறிவு மிகுந்த, கற்றவற்றை எளிதாகப் புரிந்துகொள்ளும் திறன் உள்ள மாணவர்கள், நுழைவுத் தேர்வு இல்லாத நிலையில் முழு மதிப்பெண்கள் வாங்க முடியாமல் மேற்படிப்பு சேரமுடியாமல் இருக்கிறார்கள். பல புகழ் பெற்ற அறிவியலாளர்கள் நினைவாற்றல் குறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் தேர்வுத்தாள்கள் மதிப்பிடும் முறையும் விசித்திரமானது. கேள்விகளுக்கான விடைகள், Key Words எனப்படும் முக்கியமான வார்த்தைகளுடன் தேர்வுத்துறையால், மதிப்பிடும் ஆசிரியர்களுக்கு அச்சிடப்பட்டு வழங்கப்படும். அதுவே மதிப்பெண் வழங்குவதற்கான அளவுகோல். அச்சிடப்பட்டு வழங்கப்பட்டிருக்கும் விடைகளுடன் மாணவர்களின் விடைத்தாள் ஒப்பிடப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. வார்த்தை பிசகாமல், அச்சிடப்பட்டு வழங்கப்பட்டிருக்கும் விடைகளுடன் மாணவர்கள் எழுதியிருக்கும் விடைகள் ஒத்திருக்குமானால் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும். சரியான விடைகளை வேறு வாக்கியங்களில், வேறு வார்த்தைகளில், வேறு விதமாக எழுதியிருந்தால், சரியான விடையாக இருந்தாலும் மதிப்பெண்கள் குறைக்கப்படும். இது விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறக்கேட்ட தகவல். மற்ற மாநிலங்களில் இவ்வாறா என்பது தெரியவில்லை.

இங்கு சோதிக்கப்படுவது மாணவர்களின் அறிவுத்திறனா அல்லது நினைவுத்திறனா? மேற்கல்விக்குத் தேவை அறிவுத்திறனா அல்லது நினைவுத்திறனா? கிராமப்புற மாணவர்களுக்கு அறிவுத் திறன் குறைவு என்று எவ்வாறு இவர்கள் முடிவு செய்தார்கள்?. கிராமப்புற மாணவர்கள் என்று இவர்கள் கூறுவது உண்மையில் கிராமப்புற மாணவர்களையா இல்லை அரசுப்பள்ளி மாணவர்களையா? அரசுப்பள்ளி மாணவர்களை என்றால், அரசுப்பள்ளிகள் தரமற்றவை எனக்கூறுகிறார்களா?

பொது நுழைவத்தேர்வு நடத்தினால் முதன்மையாக எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினை மொழி. கேள்விகள் பிராந்திய மொழிகளிலும் இருந்தாக வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பிராந்திய மொழிகளில் கல்வி கற்பவர்கள் இழப்புக்கு ஆளாகலாம். இது பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லை. நாம் சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுத்து அனுப்பிய நமது பிரதிநிதிகளால் எளிதாக எதிர்கொள்ள முடியும் பிரச்சினை.

அடுத்ததாக கூறப்படுவது, நுழைவுத்தேர்வுகள் சி.பி.எஸ்.இ.  தரத்தில் இருக்கும். வெவ்வேறு மாநிலங்களில் கல்வியின் தரம் வெவ்வேறாக இருப்பதால் அனைத்து மாணவர்களையும் ஒரே அளவீட்டில் அளிவிடுவது சரியாக இருக்காது என்பது. இதுவும் பெரிய பிரச்சினை இல்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் ஒரு மாநிலத்தில் உள்ள பெரும்பான்மையான மேற்படிப்புக்கான இடங்கள் அந்த மாநிலத்து மாணவர்களுக்கே ஒதுக்கப்பட்டிருக்கும். எனவே வெளி மாநிலங்களிலிருந்து குறிப்பிட்ட ஒரு மாநிலத்திற்கு மாணவர்களால் வர முடியாது. ஆனால் அதே மாநிலத்தில்  சி.பி.எஸ்.இ.  பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் மற்றவர்களை விட முன்னே வரலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது உயர்நிலைப் பள்ளிப் படிப்புகளில் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மிகக்குறைவாகவே உள்ளன. எனவே அது உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் சி.பி.எஸ்.இ. உயர்நிலைப்பள்ளிகள் தமிழகமெங்கும் உடனே முளைக்கலாம். தமிழக உயர்நிலைப் பள்ளியின் கல்வித் தரத்தை சி.பி.எஸ்.இ. க்கு இணையாகவோ அதைவிட சிறந்ததாகவோ உயர்த்துவதன் மூலம் இந்தப்பிரச்சினையையும் எதிர்கொள்ளலாம்.

கல்வித்தரத்தை உயர்த்தியாக வேண்டும். வேறு வழியில்லை. எனவே ஆசிரியர்களின் தரத்தையும் உயர்த்தியாக வேண்டும். இதிலும் சமரசத்திற்கு இடமில்லை. இன்று நுழைவுத்தேர்வின் மூலம் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கிறார்கள் என சத்தம் எழுப்புவது அரசியல்வாதிகளும் ஆசிரியர்களும் மட்டுமே. ஆசிரியர்களும் இங்கு இருப்பதால் இந்தக் கூச்சல் கருத்தியல் தளங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மக்கள் அவர்கள் கூச்சலிடுவதை நம்ப ஆரம்பிக்கிறார்கள். யார் அவர்கள்? மாற்றத்தை ஒரு பெரிய தரப்பிற்குள் கொண்டு வரவேண்டிய, அந்தத் தரப்புடன் மோத அச்சப்படுகின்ற அரசியல்வாதிகளாகிய ஆட்சியாளர்களும், அந்தப் பெரிய தரப்பாகிய, மாறுதலுக்குள்ளாக வேண்டிய ஆசிரியர்களும்தான்.


பொதுமக்களாகிய நாம், நம் சந்ததிகளின் திறனை இந்த இரு தரப்புகளின் சுயலாபத்திற்காக, அவர்களுடன் சேர்ந்து கொல்ல வேண்டுமா? அல்லது நமக்காகவே அந்த இடத்தில் இருக்கும் அரசியல்வாதிகளிடமும் ஆசிரியர்களிடமும், எங்களுக்குத் தேவை உங்கள் திசைதிருப்பும் கூச்சல்களும் எங்கள் சந்ததியினர் மேல் தொடர்ந்து செய்யப்படும் அறிவொழிப்பும் அல்ல, எங்கள் சந்ததியினரின் அறிவொளிதான் என உரக்கச் சொல்ல வேண்டுமா?

blog.change@gmail.com

Wednesday, May 4, 2016

மாநில மின்வாரியங்களின் சுமை

28-04-2014 அன்று சொல்வனம் இணையப் பத்திரிகையில் பதிப்பிக்கப்பட்டுது.

மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களின் மின்துறை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக தமிழக முதல்வரை நெருங்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் அதற்கான தமிழக அரசின் (தொடர்பில்லாத) பதில் குற்றச்சாட்டுகளும் சமீபத்திய அதிரடிகள். மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டை புரிந்துக்கொள்ள,  மாநில மின்வாரியங்களின்\மின் பகிர்மான நிறுவனங்களின் தற்போதையை நிலையை சற்று தெரிந்திருக்க வேண்டும்.

மின்சாரம் இதுவரை சென்று சேர்ந்துள்ள ஒவ்வொருவருக்கும் அது மிக அடிப்படையானத் தேவையாகி விட்டது. பெரும்பாலான அன்றாடச் செயல்களுக்குத் தேவையான கருவிகள், மனித உழைப்பை பெருமளவுக்குக் குறைக்கும் மின்சாரக் கருவிகளாகிவிட்ட நிலையில், மனித உடலில் ரத்த ஓட்டம் போல வீடுகளில் பதிக்கப்பட்டிருக்கும் கம்பிகளில் மின் ஓட்டமும் இன்றியமையாததாகி விட்டது. மின் ஓட்டம் அளவின்றி தடைப்பட்டால் அரசாங்கங்களையே மாற்றியமைக்க வைத்துவிடும். இந்த நிலையில் அதை சூழ்ச்சியாகக் கையாள்வதன் மூலம் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் அரசியல்வாதிகளின் முயற்சியால் இன்று பெரும்பான்மையான மாநிலங்களின் மின்வாரியங்கள்\மின்பகிர்மான நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதுடன் மிகப்பெரிய கடன் சுமையையும் சேர்த்து வைத்துள்ளன. மின்வாரியங்கள் மாநில அரசின் நிறுவனங்கள். எனவே அவற்றின் கடன்கள் பண நுட்பங்களின் படி (Technicaly) மாநில அரசின் கடன்களுடன் சேராது. அவை நிறுவனங்களின் கடன்கள்.

2015-ம் வருடம் செப்டம்பர் மாத கணக்குப் படி 4.5 லட்சம் கோடிகள் கடன் சுமையை இந்த நிறுவனங்கள் மொத்தமாக வைத்துள்ளன. இதில் 70%, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களின் மின்வாரியங்களால் சுமக்கப்படுகின்றன. வாக்கு வங்கி மின்சார அரசியல், அரசியல் சார்புள்ள நிர்வாகங்கள், திறமையற்ற நிர்வாகிகள், தொழில்நுட்பத்தில் பின்தங்கியிருத்தல் போன்றவையே இத்தகையச் சுமைக்கு காரணிகளாக இருக்க முடியும். இது வெறும் நிறுவனங்களின் சுமை மட்டும் இல்லை. நம் ஒவ்வொருவரின் நிதிச் சுமை. அதைக் குறைக்க ஆவன செய்வது ஆட்சியாளர்களின் தவிர்க்க முடியாத கடமை. நம் மேல் சுமத்தப்பட்டிருக்கும் இந்தச் சுமையை அறிந்திருப்பதன் மூலம், ஆட்சியளர்களை அவர்களின் கடமையை நோக்கி திசைத்திரும்ப வைக்கலாம்.

மின்சார வாரியங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்கள். பொருளாதார இயக்கங்களுக்குத் தேவையான சக்தியின் பெரும்பகுதி மின்வாரியங்கள் வழங்கும் மின்சாரத்திலிருந்துதான் பெறப்படுகிறது. தடையில்லாத மின்சாரம் எவ்வகையிலும் தவிர்க்க முடியாமல் தேவைப்படும் தொடர் இயக்க (Continuous Processing) தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை, தேவையான மின்சக்தியை தாமே உற்பத்திச் செய்தாலும் பிற தொழிற்சாலைகளும் நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் முழுவதும் மின்வாரியங்கள் வழங்கும் மின்சாரத்தை நம்பித்தான் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றன. எனவே குடிமக்களின் அன்றாடத் தேவைகளுக்கான மின்சக்தி மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரம் இயங்குவதற்கும் மின்வாரியங்களின் நிலையான இயக்கம் இன்றியமையாதது. எந்த ஒரு நிறுவனமும் பொருளாதார இழப்பிலும் கடன் சுமையின் அழுத்தத்திலும் தொடர்ந்து இருந்து வந்தால், அது அரசாங்கத்தின் நிறுவனமாக இருந்தாலும், வெகுகாலம் இயங்க முடியாது. மேலும் அவற்றிற்குக் கடன் வழங்கியிருக்கும் வங்கிகளும் லாப நோக்கில் இயங்கும் நிறுவனங்களே. கடனையும் வட்டியையும் திருப்பிச் செலுத்த இயலாத நிறுவனங்கள் வங்கித் தொழிலையும் அழிவுக்குள்ளாக்குகின்றன. கடன்கொடுத்த வங்கிகளும் அரசாங்க நிறுவனங்களாக இருந்தாலும் அவற்றுக்கான விதிகளின்படி, கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எல்லையில்லாமல் மீண்டும் கடன்வழங்கிக் கொண்டிருக்க முடியாது. ஆக மின்வாரியங்கள் அவற்றின் கடன் சுமையிலிருந்து மீண்டு தங்கள் இயக்கத்தை நிலைப்படுத்த முடிந்தால்தான் சாமானிய மனிதர்களின் அடிப்படை நுகர்வுகளும் நாட்டின் பொருளாதாரமும் தடையின்றி இயங்க முடியும்.

இந்தப் பின்புலத்தில்தான் மத்திய மின்துறை அமைச்சரின் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது. மின்வாரியங்கள் மாநில அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்து விடாமல் எடுத்துச் செல்லும் பொறுப்பு மத்திய அரசினுடையது. எனவே மின்வாரியங்கள் தொடர்ந்து ஆரோக்கியத்துடன் இயங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டியிருக்கிறது.
2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அப்போதைய மத்திய அரசு "மாநில மின்பகிர்மான நிறுவனங்களின் நிதி மறு கட்டமைப்புத் திட்டம்'' (Scheme for Financial Restructuring of state Distribution Companies) என்னும் திட்டத்தைக் கொண்டு வந்தது. இதன் படி மின் வாரியங்களின் குறுகிய கால கடன்களில் 50% வரையான கடன்களை மாநில அரசுகள் அவற்றின் கடன்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். மாநில அரசுகளின் கடன் பத்திரங்களை கடன் கொடுத்திருக்கும் வங்கிகளுக்கு அளிப்பதன் மூலம், இந்த கடன் மாற்றம் செய்யப்படும். மீதி 50% குறுகிய கால கடன்கள், நீண்ட கால கடன்களாக, எனவே குறைவான வட்டியுடன் மாற்றயமைக்கப்படும். இந்த மாற்றியமைத்தலுக்கு, மின் வாரியங்கள் சார்பாக மாநில அரசுகள் கடன் உறுதி (Guarantee) வழங்க வேண்டும். மாநில அரசுகள் உச்ச வரம்பான மின்வாரியங்களின் 50% குறுகியகால கடன்களை முழுவதுமாக ஏற்றுக் கொண்டு சில நிபந்தனைகளையும் பூர்த்திச் செய்தால், அதில் 25% தொகையை ஊக்கத் தொகையாக மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கும்.

மாநில அரசுகள் இந்த கடனை ஏற்றுக்கொள்ளும்போது மாநிலங்களின் நிதி நிலமையையும் கணக்கில் கொள்ளப்படும். மாநிலங்கள் அவற்றின் மொத்த உற்பத்தியில் (GDP) 25% அளவுக்குத்தான் அதிகப்பட்சமாக கடன் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் வருடாந்திர வரவு செலவுப் பற்றாக்குறை மொத்த உற்பத்தியில் 3% அளவுக்குள் இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் 50% கடனை  மூன்று வருடங்களாக மாநில அரசின் கணக்கில் ஏற்றுக் கொள்ளலாம். இவ்வாறு நிறுவனங்களின் கடன்கள், கடன் பத்திரங்களாகவும் நீண்ட கால கடன்களாகவும் மாற்றப்படும்போது, வட்டி விகிதம் பெருமளவு குறைக்கப்படும். மேலும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்படுகிறது. அதாவது மின் நிறுவனங்களுக்கும் மாநில அரசாங்கங்களுக்கும் வட்டிச் சலுகையுடன் கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம் வங்கிகள் வராக்கடன்கள் என்னும் நிலையில் மின்வாரியங்கள் மேல் நடவடிக்கை எடுப்பது தவிர்க்கப்படுகிறது. கடன் கொடுத்த வங்கிகள், இந்தக்கடன்களை வராக்கடன்கள் என்று கணக்கில் ஏற்றி, வங்கிகளின் நஷ்டமாக வரவுச்செலவு கணக்கில் (Balance sheet) காண்பித்து வங்கியின் பங்குதாரர்களை இழப்புக்குள்ளாக்குவதும் தவிர்க்கப்படுகிறது.

மின்வாரியங்கள் இந்தச் சலுகையை 25% ஊக்கத்தொகையுடன் பெறுவதற்கு, மத்திய அரசு விதிக்கும் சில நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றில் சில....

·         சராசரி வழங்கும் செலவுக்கும் (Average Cost of Supply - ACS) சராசரி பெற்றுக்கொள்ளும் விலைக்கும் (Average Realised Rate - ARR) ஆன இடைவெளியை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மின்வாரியங்கள் இல்லாமல் செய்வதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
·         செயல்பாட்டு இழப்புக்களை (Operational Losses) ஈடுகட்டுவதற்காக மாநில அரசுகளும் மின்வாரியங்களும் மீண்டும் குறுகியக்காலக் கடன்களை வாங்கக் கூடாது.
·         மின்பகிர்மானத்தில் தனியார் நிறுவனங்களையும் ஈடுபடுத்துவதற்கான திட்டங்களை ஒருவருடத்திற்குள் மத்திய அரசின் அனுமதிக்காக அளிக்க வேண்டும்.
·         ACS மற்றும் ARR க்கான இடைவெளியை குறைப்பதற்காக, வருடாவருடம் மின் கட்டணங்களை மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.
·         விவசாயத்திற்கான மின்சார மானியம், அளவிடும் கருவிகள் மூலம் அளவிட்டு, மாநில அரசுகள் மின்சார வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.

இந்த நிபந்தனைகள் அனைத்தும் மாநில அரசுகளை அமைத்திருக்கும் அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கிகளை இல்லாமல் செய்யும் நிபந்தனைகள். எனவே எந்த மாநிலமும் இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டிருக்க சாத்தியம் இல்லை. எத்தனை மாநிலங்களின் மின்வாரியங்கள் மத்தய அரசு அறிவித்த இந்த நிதி நிலையைச் சரி செய்துக் கொள்ளும் வாய்ப்பைப்  பயன்படுத்தின என்பதற்கானத் தரவுகள் இணையத்தில் கிடைக்கவில்லை.

ஆனால் தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்கள், மத்திய அரசு வழங்குவதாகக் கூறியிருந்த 25% ஊக்கத்தொகையும் அதற்கான நிபந்தனைகளும் தவிர மற்ற அம்சங்களை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஏப்பரல்-2012 மற்றும் டிசம்பர்-2014 என இருமுறை மின் கட்டணங்கள் தமிழ்நாட்டில் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.  தமிழ்நாடு இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியிருக்கிறது என்பதற்கு மின்கட்டண மாறுதல்களையே சான்றாக எடுத்துக் கொள்ளலாம்\வேண்டியிருக்கிறது. இதைத் தவிர இன்னொரு சுட்டிக்காட்டியையும் (Indicator) கவனத்தில் கொள்ளலாம். 2011-12 ம் ஆண்டு வரையிலும் மின்வாரியங்களின் வருடாந்திர இழப்பு தொடர்ந்து அதிகரித்து, அந்த ஆண்டில் 76877 கோடி ரூபாயாக இருந்துள்ளது. பின்னர் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. நவம்பர் 2015 க்கு முன் செய்யப்பட்ட கணிப்பின் படி, 2014-15 ம் ஆண்டின் மொத்த இழப்பு 60000 கோடி ரூபாயாக இருக்கும்.

நவம்பர் 2015-ல் தற்போதைய மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 'உதே' (UDAY - Ujwal DISCOM Assurance Yojana), முந்தையத் திட்டத்தின் இயல்பான நீட்சியாகவும், விரிவாக்கப்பட்டதாகவும் உள்ளது. உதே என்னும் சமஸ்கிருத வார்த்தைக்கு பிரகாசமான எதிர்காலம் என்று பொருள் கொள்ளப்படுகிறது - மின் பகிர்மான நிறுவனங்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கானத் திட்டம்.

  • ·   உதே திட்டத்தின் படி, மின் வாரியங்களின் மொத்தக் கடன்களில் 75% அளவை, இரண்டுத் தவணைகளாக மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • ·         இவ்வாறு மாநில அரசாங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்படும் கடன்கள், முதல் இரண்டு வருடங்களில் மொத்த உற்பத்தியில் பட்ஜட் பற்றாக்குறையின்  அதிகப்பட்ச அளவான 3% என்னும் கணக்கீட்டில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது.
  • ·         கடன் வழங்கிய வங்கிகளுக்கு கடன் பத்திரங்களை மாநில அரசு நேரடியாக வழங்கும்.
  • ·         மாநில அரசு ஏற்றுக்கொள்ளாத மின் பகிர்மான நிறுவனங்களின் கடன்கள், வட்டி குறைக்கப்பட்ட மாநில அரசுகளால் உறுதி செய்யப்பட்ட (Guarenteed) மின் வாரியங்களின் கடன் பத்திரங்களாக வங்கிகளுக்கு அளிக்கப்படும்.
  • ·         மின்வாரியங்கள் எதிர்காலங்களில் எதிர்கொள்ளும் வணிக இழப்புக்களை, மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
  • ·         இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்வதோ தவிர்ப்பதோ மாநில அரசின் சுய முடிவு
  • ·         ஏற்றுக் கொள்ளும் மாநில அரசுகளுக்கு, வேறு சில திட்டங்களின் மூலமாக மின்வாரியங்களை வலிமைப்படுத்துவதற்கான பண உதவிகள் மத்திய அரசால் செய்யப்படும்.
  • ·         இவ்வாறு செய்யப்படும் உதவிகள், மாநில அரசும் மின்வாரியங்களும் ஏற்றுக் கொண்ட நிபந்தனைகளை ஒப்புகொண்ட காலவரையறைக்குள் நிறைவேற்றுவதன் அடிப்படையில் இருக்கும்.
  • ·         அவ்வாறு நிறைவேற்றாத மாநில அரசுகளிடமிருந்து கொடுக்கப்பட்ட உதவி\ஊக்க தொகைகள் திரும்பப் பெறப்படும்.

முன்பு அறிவிக்கப்பட்ட திட்டத்திற்கும் தற்போதைய உதே திட்டத்திற்குமான முக்கியமான வேறுபாடு; முந்தையத் திட்டத்தில் குறுகிய கால கடன்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது. தற்போதைய திட்டத்தில் மின்வாரியங்களின் அனைத்துக் கடன்களும் கணக்கில் கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் முந்தையத் திட்டத்தில் எதிர்கால இழப்புக்களைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை. தற்போதைய திட்டத்தின் படி மின்வாரியங்களின் எதிர்கால இழப்புக்கள் மாநில அரசின் கணக்கில் வரும்.

மின் பகிர்மானத்தில் முக்கியமான ஒரு அளவீடு சராசரி தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பு (Average Technical & Commercial Loss - AT & C). இதில் தொழில் நுட்ப இழப்பு என்பது, கம்பிகளில் மின்சாரத்தை தொலை தூரங்களுக்கு எடுத்துச் செல்லும்போது ஏற்படும் இழப்புக்கள், மின்சாரத்தை உயர் அழுத்தமாகவும் தாழ் அழுத்தமாகவும் மாற்றும்போது, மாற்றிகளில் (Transformers) ஏற்படும் இழப்புகள் போன்ற தொழில்நுட்பக் காரணங்களால் ஏற்படுபவை. வணிக இழப்பு என்பது முறையற்ற கணக்கீடுகள், மின் திருட்டு போன்ற காரணிகளால் ஏற்படுபவை. இவற்றில் தொழில் நுட்ப இழப்பு இருந்து கொண்டேதான் இருக்கும். சிறப்பான உபகரணங்களை உபயோகிப்பதன் மூலம் சற்றுக் குறைக்கலாம். ஆனால் வணிக இழப்பை முழுவதும் இல்லாமல் செய்து விடலாம்.
இதற்குத் தேவை மின் பகிர்மானத்தின் ஒவ்வொரு நிலையிலும் மின்சாரத்தை அளவிடுவது. உதாரணமாக ஒவ்வொரு மின்மாற்றியிலும் அது வழங்கும் மின்சாரத்தை அளவிட்டால், அந்த மின்மாற்றியிலிருந்து செல்லும் மின்சாரத்தில் எவ்வளவு இழப்பு வருகிறது என்பதை அறியலாம். குறிப்பிட்ட இடங்களில் அதிக இழப்பு ஏற்பட்டால், அந்த இடங்களில் இழப்புக்கான காரணங்களைக் கண்டறிந்து நிவர்த்திச் செய்யலாம். இதன் மூலம் மின்திருட்டுக்கள் நடைபெறும் இடங்களை எளிதில் அடையாளம் காணமுடியும். ஒவ்வொரு பகிர்மான மின்மாற்றிகளிலும் குறிப்பிட்டக் காலக்கெடுவுக்குள் அளவிடும் கருவிகளைப் பொருத்த வேண்டும் என்பதும் உதே திட்டத்தின் ஒரு நிபந்தனை. உதே திட்டத்தின் முக்கியமான ஒரு நோக்கம், மின் இழப்பீட்டை 15% அளவிற்கு குறைப்பது. தற்போது தமிழகத்தின் AT & C  இழப்பு 22% ஆக உள்ளது. இதுவே இந்தியா முழுமைக்குமான சராசரி இழப்பு. AT & C இழப்பு அருணாச்சல பிரதேசத்தில் அதிகப்பட்சமாக 68% ம் கோவாவில் குறைந்தப்பட்சமாக 11% ம் உள்ளது.

இது தவிர உதே திட்டத்தில் மின் உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கான, உற்பத்தியைப் பெருக்குவதற்கான, மின் பயன்பாட்டின் திறனை (Efficiency) அதிகரிப்பதற்கான பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை இத்திட்டத்தை செயல்படுத்தும் முறையில் இது வெறும் திட்டம் மட்டும் அல்ல ஒரு பயணமுமாக இருப்பது தெரிகிறது. இவற்றால் குறிப்பிடத்தக்க பயன்களையும் அடைந்துள்ளது. இந்த பயன்கள் மாநில அரசுகளின் உற்பத்தி நிறுவனங்களுக்கும் முழுமையாகச் சென்று சேர அவை உதே திட்டத்தில் சேர்வது நிபந்தனையாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆந்திரா, ஜார்க்கன்ட், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகன்ட், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார், மஹாராஷ்ட்ரா மற்றும் ஒடிசா ஆகிய பதினைந்து மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து விட்டன அல்லது சேர்வதாக உறுதி அளித்து விட்டன. கவனிக்கவும் - தமிழகத்துடன் சேர்ந்து மிக அதிகமாக கடன்சுமையை வைத்திருக்கும் மற்ற மூன்று மாநிலங்களும் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ளன.

மத்திய மின்துறை அமைச்சரால் தமிழக அரசாங்கத்தில் முடிவெடுக்கும் அதிகாரமையத்தைத் தொடர்புக் கொள்ள முடியவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் சேர்வதற்கான கெடு முடிவடைந்து விட்டது அல்லது முடிவடையும் தருவாயில் உள்ளது. ஏனெனில் இது குறிப்பிட்டக் காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டியத் திட்டம். இதில் சேர்வதும் சேராததும் மாநில அரசின் தனிப்பட்ட விருப்பம்.

ஆனால் சேராமல் இருந்தால், அதன்வழியாக அடையப்போகும் எதிர்மறை விளைவுகள் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் பின்தங்க வைக்கலாம். எந்தத் துறையின் வளர்ச்சிக்கும் தடையற்ற சக்தி, அதிலும் குறிப்பாக தடையற்ற மின் சக்தி மிகவும் அவசியம். இந்தத் திட்டத்தில் சேராததன் மூலம் மின்வாரியங்கள் வங்கிகளிடமிருந்து பெற்றிருக்கும் கடன்களை திருப்பிச் செலுத்த இயலாமல் இருந்தால் அவை வராக்கடன்கள் எனப்பட்டியல் இடப்படும். தமிழக மின்வாரியத்திதன் தற்போதைய நிதிநிலையில் கடன்களைத் திருப்பிச் செலுத்து வாய்ப்பில்லை. மாநில அரசின் நிதி நிலையும் மின்வாரியத்துக்கு உதவும் வகையில் சாதகமாக இல்லை. இதன் மூலம் Credit Rating நிறுவனங்கள் தமிழக மின்வாரியத்தின் கடன் பெறும் தகுதியை இல்லாமல் செய்து விடும். எனவே எதிர்காலத்தில் மின்வாரியம் எங்கிருந்தும் கடன் பெற முடியாது. அவற்றின் முழு இழப்புக்களும் செலவுகளும் தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். எனில் தமிழக அரசின் பற்றாக்குறை அளவு அனுமதிக்கப்பட்டிருக்கும் மொத்த உற்பத்தியின் 3% அளவிற்கு அதிகமாகச் செல்லக்கூடும். இதை சமாளிக்க தமிழக அரசு எல்லா வளர்ச்சித் திட்டங்களையும், ஒருவேளை இலவசத் திட்டங்களைக் கூட கிடப்பில் போட வேண்டியிருக்கும். மறுபுறத்தில் பலவீனமடைந்த மின்வாரியத்தினால் தொழில் துறை பாதிப்புக்குள்ளாகும். மொத்த உற்பத்தி குறையும். பற்றாக்குறை அளவு இன்னொரு திசையிலிருந்து 3% அளவிற்கு அதிகரிக்கும்.


தமிழக அரசு "உதவி செய்யுங்கள்" என மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதலாம். உதவி செய்யும்போது ஏற்றுக் கொள்ளாத மாநில அரசுக்கு எதுவும் செய்ய முடியாத கையறு நிலைக்கு மத்திய அரசு தள்ளப்படலாம். தமிழகத்தின் நிதிப் பிரச்சினைகள் மத்திய அரசு புறந்தள்ளுகிறது, தமிழகத்தை இந்தியா புறக்கணிக்கிறது என மேடைகளில் முழங்கலாம். அதன் தொடர்ச்சியாக 'தமிழ் தேசியம்' என்னும் கருத்தை உணர்ச்சிக்கரமாக நம் மேல் திணிக்கலாம். நாமும் அதை பின்பாட்டாகப் பாடலாம்! இன்று நம் தேவையை உறுதியாக அரசாங்கங்களிடம் நம்மால் தெரிவிக்க முடியாவிட்டால், இவையெல்லாம் நம் எதிர்கால சாத்தியங்களில் சில!

blog.change@gmail.com