Saturday, December 24, 2016

வாசிப்பு

சிறகு இணையப் பத்திரிகையில் 25-12-2016 அன்று பதிப்பிக்கப் பட்டது.

எழுத்தறிவை அடைவதன் அடிப்படைக் காரணம் வாசிப்பு. வாசிப்பிலிருந்தே அறிதலென்னும் விருட்சத்தின் பெரும்பாலான  கிளைகள் கிளைக்கின்றன. அறிதல் வாழ்வை செறிவுள்ளதாக்குகிறது. அறிதல்கள் தடைசெய்யப்பட்ட அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை உண்மையில் மனிதன் வாழும் எல்லையைச் சுருக்குகிறது, அனுபவங்களை அடைவதிலிருந்து விலக்குகிறது. அனுபவங்களின் விரிவே வாழ்க்கையின் விரிவு.

Saturday, December 3, 2016

விடுதலை

சிறு தும்பியின்
சிறகசைவில்
உதிர்ந்த
காட்டுப்பூ இதழுக்கு
அது
விடுதலை

Sunday, November 27, 2016

புகை

பல ஆயிரம் புகை கக்கும்
வாகனங்கள் சுமந்து வந்த மனிதர்கள்,
காடழித்து
அகழ்ந்தெடுத்த கரி உமிழ்ந்த புகை
குளிரூட்டிய அலுவலக அறைகளில்,
வடிவமைத்து தொகுத்தெடுத்த
ஆழ்துளை கிணறுகளும், எண்ணை வாயு ஆலைகளும்,
மீண்டும் புகைகக்கி
புகையுண்ட மின்சாரம் தின்று
புகையுமிழும் வாகனத்தில்
வந்த சிவப்பு உருளை
புகையின்றி எரிகிறது

எங்கள் வீட்டு அடுப்பில்.

Wednesday, November 23, 2016

பசியறிதல்

நேற்றுக் காலை எழுந்த என் ''டீன் ஏஜ்'' மகளுக்கு
அன்னையுடன் சிறு பூசல்.
எப்போதும் போல
குழந்தைமையின் திமிருடன்
உணவுண்ண மாட்டேனென்று ''உம்''மென்று சென்றமர்ந்தாள்.

கையிலிருந்த கண்ணாடி முப்பட்டகத்தில் (Prism)
காலை ஒளியின் விலகலை நோக்கியிருந்தாள்.
காலை சென்றது.
மதிய ஒளியின் செறிவு கூடியது.
அந்தி மயங்கி ஒளியவிந்தது.
அன்னையின் கருணை
பொருத்தமில்லா திமிரில் மோதி சற்றே
திசை மாறியிருந்தது-
காலையில் மிரட்டல்
மதியத்தில் மெல்லிய அழைப்பு
அந்தியில் சிறு கெஞ்சல்.
அவளில் எரிந்தவிந்தது பசி.
எரிந்தவிந்த பசி, துளிர்த்து வாடிய திமிர், மோதி திசைமாறிய கருணை
சேர்ந்து உண்டது சில  பழத் துண்டுகளை.

இன்று காலை எழும்பிய
அவளின், அன்னையின் கொஞ்சல்களில்
நேற்றின் எச்சம் சற்றும் இல்லை.
பார்த்து நின்ற என் புன்னகை
சுவர் கண்ணாடியில் தெரிந்த
என் முக பிம்பத்தில் விரிந்திருந்தது.

Sunday, November 20, 2016

இல்லாமலாவேன்

இன்றிரவு ஒரு கோப்பை
மதுவருந்தியிருக்கிறேன்
மது
ஒரு கணத்தில் என்னை
வேறொருவனாக மாற்றியது
இன்னொரு கணத்தில்
நான் இல்லாமல் இருந்தேன்!
மற்றொரு கணத்தில்
இதுவரை அறியாத ஒன்றை அளித்தது

என்னை ஆக்கியிருக்கும்
என்னுடலின் நுண்ணுயிர்கள்
அந்தக் கணங்களில் எவ்வாறு மாறின?

நாளை ஒரு தினம் எனக்கு வரக்கூடும்.
மதுக் கோப்பையின் துணையின்றி
அன்று நான் வேறொருவனாக மாறியிருக்கலாம்
நானே இல்லாமல் உயிர்தரித்திருக்கலாம்
என்னை ஆக்கியிருக்கும் நுண்ணுயிர்களே!
உங்களை அமைத்திருக்கும் அணுக்களே!
அணுக்களில் ஆடியிருக்கும் உருவமற்றதே! எல்லையற்றதே!
அந்த நாள் எனக்கு அமையுமோ?
அதையெனக்கு நீங்கள் அளிப்பீர்களோ?

இன்று நான்
ஒரு கோப்பை மதுவினால்,
மதுவை அடைந்த ஆணவத்தால்,
நீங்கள் என் பக்கம் இருக்கும் செருக்கினால்
உங்களை அவமதித்து
அதை
அடைந்திருக்கிறேன்!
அல்லது நீங்களே மனமுவந்து மதுவை ஏற்று
உங்களையே அவமதித்து
எனக்கதை அளித்திருக்கிறீர்களோ!

மதுவின் துணையின்றியும்
அதை
நான் அடையக்கூடும் என்பதையும்
உங்கள் துணையுடன் அறிந்திருக்கிறேன்
  
என்று நான் அடைவேன்
அதை!
உங்களை இழக்காமல்! அவமதிக்காமல்!

அன்று நான் உன்னதமானவனாவேன்
உன்னதத்தின் திளைப்பில் இல்லாமலாவேன்.
என்னுடன் நீங்களும்!
உங்களுடன் நானும்!

Monday, September 12, 2016

தேசிய கல்விக் கொள்கை - 2016

சொல்வனம் இணையப்பத்திரிகையில் 01-09-2016 அன்று பதிப்பிக்கப் பட்டது.

சுதந்திர இந்தியாவில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான பரிந்துரைகளை அளிப்பதற்கான மூன்றாவதாக அமைக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை ஏப்ரல்-30, 2016 -ம் ஆண்டு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் அளித்திருக்கிறது. இதன் அடிப்படையில் அமைச்சகம் அதன் கல்விக் கொள்கையை வெளியிட வேண்டும். அதன் முன்பாக, வரைவுக் கொள்கையை வெளியிட்டு பொதுமக்களிடமும் ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறது. விருப்பமும், உபயோகமான பரிந்துரைகளும் இருந்தால் ஆகஸ்ட்-16 ம் தேதிக்கு முன் அளிக்கலாம்.

முதலாவது தேசிய கல்விக் கொள்கை இந்திய அரசாங்கத்தால் 1962-ம் ஆண்டு வெளியிடப்பட்டு அமல் படுத்தப்பட்டது. இரண்டாவது கொள்கை, 1986-ம் ஆண்டு வெளியிடப்பட்டு பின் திருத்தங்களுடன் 1992-ம் ஆண்டு மீண்டும் வெளியிடப்பட்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்ட அனைவருக்கும் கல்விக்கான உரிமைச் சட்டம், இந்த இரண்டாவது தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில்தான் கொண்டுவரப்பட்டது.

இரண்டாவது கல்விக் கொள்கையின் அமலாக்கத்திற்குப் பின் இந்தியாவில் தனியார் கல்வி நிறுவனங்கள் பெருமளவில் பெருகின. இதன் அமலாக்கம், கல்வியின் பரவலாக்கம் என்னும் குறிக்கோளில் பெருமளவு வெற்றி பெற்றிருந்தாலும் கல்வித் தரத்தை உயர்த்துதல் என்னும் குறிக்கோளில் மிக மோசமாகத் தோல்வியடைந்திருக்கிறது. இந்த நிலையில் மூன்றாவது கல்விக் கொள்கைகளுக்கான பரிந்துரைகள் அளிப்பதற்காக ஐந்துபேர் கொண்ட ஒரு குழு 2015-ம் வருடம் அட்டோபர் மாதம் அமைக்கப்பட்டது. இதில் தலைவர் உட்பட நான்கு உறுப்பினர்கள் முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள். ஒருவர் NCERT இன் முன்னாள் தலைவர்.

முந்தைய கல்விக் கொள்கைகளுக்கான குழுக்கள் செயல்பட்ட விதமும் தற்போதைய குழு செயல்படப் பணிக்கப்பட்ட விதமும் முற்றிலும் மாறுபட்டவை. முந்தையக் குழுக்கள் வெவ்வேறு கல்வித்துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு, அவர்கள் தங்கள் துறைகளில் கொண்டிருக்கும் நிபுணத்துவத்தைஅடிப்படையாகக் கொண்டும் கள ஆய்வுகள் மூலமும் பிற நிபுணர்களுடனான உரையாடல்கள், பேட்டிகள் மூலமும் குறைந்த அளவிலான பொதுமக்களுடனான கருத்துப் பரிமாற்றங்களின் மூலமும் கொள்கைகளுக்கான அறிக்கையை தயார் செய்திருந்தார்கள். இந்த முறையில் மேல்மட்டத்தில் கொள்கைகளை உருவாக்கப்பட்டு, கீழ் நோக்கி வந்து அவை செப்பனிடப்பட்டது.

தற்போதைய குழு எதிர் திசையில் பயணித்து தன் அறிக்கையை சென்றடைந்துள்ளது. முதலில் பொதுமக்களிடமிருந்து பரிந்துரைளைப் பெற்று, பல்வேறு நிலைகளில் தொகுக்கப்பட்டு இறுதியில் குழுவினரை வந்தடைந்து, அதிலிருந்து இறுதிப் பரிந்துரைகள் பெறப்பட்டிருக்கின்றன. தேசிய புதிய கல்விக் கொள்கைக்கான இணையத்தளத்தில் உள்ள தகவல்களின் படி, இந்த அடிப்படை பரிந்துரைகளைப் பெறும் வேலை மிக மிக விரிவாக செய்யப்பட்டிருக்கிறது. சுமார் இரண்டரை இலட்சம் கலந்தாலோசனைகள், ஆலோசனைப் பிரமிடின் கீழ் மட்டத்தில் செய்யப்பட்டிருப்பதாக இந்த இணையத்தளம் கூறுகிறது.

அதாவது இந்தியாவில் உள்ள சுமார் இரண்டரை இலட்சம் கிராமப் பஞ்சாயத்துக்களிலும் கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் பெறப்பட்ட ஆலோசனைகள், பிரமிடின் இரண்டாவது நிலையான ''பிளாக்'' அளவில் தொகுக்கப்பட்டு, தேவையான இடங்களில் புதிய ஆலோசனைகள் சேர்க்கப்பட்டு அடுத்த நிலைக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. பிரமிடின் இந்தத் தளத்தில் சுமார் 6600 கலந்தாலோசனைகள் நடைபெற்றிருப்பதாக இணையத்தள தகவல் கூறுகிறது. பிரமிடின் மூன்றாவது நிலையில், மாவட்ட அளவில் இந்த ஆலோசனைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலுமாக, மொத்தமாக சுமார் 676 கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடை பெற்றிருக்கின்றன.  நான்காவது நிலையில் மாநில\யூனியன் பிரதேச அளவில், ஒவ்வொரு மாநிலத்திலும் மூன்று கலந்தாலோசனைக் கூட்டங்கள் மூலம் தொகுக்கப்பட்டடிருக்கிறது. இந்த வகையில் சுமார் 100 ஆலோசனைக் கூட்டங்கள் நடை பெற்றிருக்கின்றன. ஐந்தாவது நிலையில் மண்டல அளவில் அவை தொகுக்கப்பட்டு ஆலோசனைகளின் ஒரு தொகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, இணையத்தின் மூலம் ஆர்வமுள்ள கல்வியின் பங்குதாரர்களிடமிருந்த, அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும், வரவேற்கப்பட்டு  தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஆலோசனைகளின் தொகுப்பில் இது ஆறாவது இடத்தைப் பெற்றிருந்தாலும், இது பிரமிடின் ஒரு பகுதியாக இல்லாமல் அதன் சிலபல குறுக்குவெட்டுப் பரப்புகளிலிருந்து  பெறப்பட்டு தொகுக்கப்பட்ட நேரடியான ஆலோசனைகள். இறுதியாக ஏழாவது இடத்தில், மேலே கூறப்பட்டுள்ள ஐவர் குழு வந்தமர்கிறது. இந்தக் குழுவின் பணி, இவ்வாறுத் தொகுக்கப்பட்ட ஆலோசனைகளை, கல்வி நிர்வாகத்திற்கு ஏற்ற மாதிரியான பரிந்துரைகளாக மாற்றியமைப்பதுதான். இதற்கு மிகவும் தகுதியானவர்கள் கல்வியாளர்களை விட ஆட்சிப்பணி அனுபவஸ்தர்களே.
      
இக்குழுவின் அறிக்கையின் இரண்டாவது அத்தியாத்தின்படி, குழு அமைப்பதற்கு முன்பாகவே மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மேலே கூறப்பட்ட பிரமிடின் முதல் ஆறு நிலைகளிலும் ஆலோசனைகளைப் பெற்று தொகுக்கும் பணியை முடித்திருக்கிறது. இந்தத் தொகுக்கப்பட்ட ஆவணங்களிலிருந்துப் பெறப்பட்டத் தகவல்களை கல்வியாளர்களுடனும் துறையின் பல்வேறு நிபுணர்களுடனும் மீண்டும் நேரடி உரையாடல்கள் மூலம், இக்குழு செறிவுப் படுத்தியிருக்கிறது. பிரச்சனைகளின் வீச்சின் வெவ்வேறு திசைகளில் தங்கள் கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களின் ஆலோசனைகளும் கேட்டறியப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து மாநில மற்றும் தேசிய கல்வித்துறை அதிகாரிகளின் பிரதிநிதிகளுடன் முறைசார்ந்த மற்றும் முறைசாராத, இயல்பான ஆலோசனை அமர்வுகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கும் தகவல்களின் படி, இந்தக் குழு மிக விரிவான, எல்லா சாத்தியமான வழிகளினூடாகவும் தகவல்களைப் பெற முயற்சித்திருப்பது தெரிகிறது. இத்தகைய அறிக்கைகளில் குழுவின் பணிகளை சற்றே மிகைப்படுத்திக் கூறுவது பெரும்பாலும் இயல்பானதுதான். அந்த மிகைப்படுத்தலை சரியீடு செய்வதற்கான் சமன் காரணியை (Equating Factor)  கணக்கில் கொண்டாலும், இந்த அறிக்கைக்காக குழுவும், குழுவிற்கு கொடுக்கப்பட்ட ஆவணங்களுக்காக மனித மேம்பாட்டுத் துறை அமைச்சகமும் மிகப்பெரிய பணியைச் செய்திருக்கின்றன. கல்வி என்னும் கருத்தின் மேல் ஆர்வமுடையவனாக, இந்தப் பணியை என்னளவில் பாராட்டாமல் கடந்து செல்ல முடியவில்லை.

இறுதி அறிக்கை ஒன்பது அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு, 240 பக்கங்களில் அளிக்கப்பட்டிருக்கிறது. முதல் அத்தியாயம் இந்தியாவில் கல்வியைப் பற்றிய சுருங்கிய வரலாற்றுச் சித்திரத்தை அளிப்பதுடன் அதன் தற்போதைய நிலையையும் கோடிட்டுக் காட்டுகிறது. இரண்டாவது அத்தியாயம் இந்த அறிக்கைக்காக பின்பற்றிய அணுகுமுறைகளையும் செயல்முறைகளையும் விளக்குகிறது. மூன்றாவது அத்தியாயம் இதன் சந்தர்ப்பச் சூழலையும் நோக்கத்தையும் விவரிக்கிறது. அடுத்த அத்தியாயம் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான தேவையை விளக்குகிறது. அதற்கடுத்த அத்தியாயம் கல்வி ஆளுகையை (Governance in Education) விளக்குகிறது. ஆறாவது மற்றும் ஏழாவது அத்தியாயங்கள் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்விக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. எட்டாவது அத்தியாம் தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களைப் பற்றி பேசுகிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் கொடுக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் தொகுக்கப்பட்டு குழுவின் ஒட்டு மொத்தப் பரிந்துரைகளாக ஒன்பதாவது அத்தியாயத்தில் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அறிக்கையில் தற்போதைய கல்வியின் நிலை உள்ளவாறே முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு எல்லையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் நியமனங்கள் திறன் சார்ந்தது அல்லாமல் அரசியல் சார்ந்து இருப்பதையும் கல்வியில் அதன் தாக்கத்தையும் சுட்டிக்காட்டுகிறது. மறு எல்லையில் பல பல்கலைக்கழகங்கள்  கல்வி நிலையங்களாக இல்லாமல், பட்டங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களாக இருப்பதையும் கூறுகிறது. ஒரு எல்லையில் முந்தையக் கல்விக் கொள்கைகளின் அமலாக்கங்களால் பெரும்பாலானவர்களுக்கு கல்வி எட்டக்கூடியதாக மாறியிருப்பதை கூறிவிட்டு மறு எல்லையில் கல்வியின் தரம் உயரவில்லை, மாறாக தாழ்ந்திருக்கிறது என்பதையும் அறிவிக்கிறது. ஒரு திசையில் இந்தியக் கல்வி அமைப்புதான் உலகிலேயே பெரிய கல்வியமைப்பாக இருக்கும் அதேவேளையில், அதன் மறுபக்கமாக உலகக் கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் இந்தியாவின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்கள் கூட பின்வரிசையிலேயே இருப்பதையும் காட்டுகிறது. ஒரு திசையில் ஆசிரியர் பயிற்சியின் தரம் மிகமிகத் தாழ்ந்த நிலையில் இருக்கும்போது மறு திசையில் ஆசிரியர் பணிக்கான தேர்வு மற்றும் பணிமாற்றம் போன்றவற்றில் மலிந்திருக்கும் ஊழலையும் பணியாற்றும் ஆசிரியர்களின் திறமையின்மையையும் பணிக்கு வராமல் இருப்பதையும் (Absenteeism) கவனத்தில் கொள்கிறது. அறிக்கையில் தற்போதைய கல்வியின் நிலைக்குக் காரணமான அனைத்துக் காரணங்களும் பட்டியலிடப்பட்டிருக்கிறது. ஆசிரியர் பயிற்சியின் தரத்தையும் ஆசிரியர்களின் தரத்தையும் உயர்த்துவதற்கு கடுமையான, அவர்களால் விரும்பப்படாத நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கும் என்பதையும் அறிவிக்கிறது.

குழுவின் பரிந்துரைகளை மட்டும் அறிந்துக் கொள்வதற்கு ஒன்பதாவது அத்தியாயம் மட்டும் போதுமானது. ஆனால் அவை எத்தகைய சூழலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என அறிய முழு அறிக்கையையும் படிக்க வேண்டியிருக்கிறது. இந்த அறிக்கையின் மீதான விமர்சனங்களை, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பொதுமக்களிடம் ஆகஸ்ட் 16ம் தேதிக்கு முன் அளிக்குமாறு கோரியிருக்கிறது. அதன் பின் இறுதிக் கொள்கை வகுக்கப்படலாம்.
சில ஊடகங்களில் புதிய தேசியக் கல்விக் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. திருநெல்வேலியில் இதற்கு எதிராக சமத்துவக்      கல்விக்கான கூட்டமைப்பு என்னும் அமைப்பின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றிருக்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் போராட்டத்தில் தங்கள் எதிர்ப்பிற்கான காரணங்களாக, புதிய கல்விக் கொள்கை இந்துத்துவத்தை பரப்புவதற்கும், வரலாற்றை மாற்றவும், கல்வியை வியாபாரமாக்கவும் சமஸ்கிருதத்தை திணிக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது என்பவற்றை முன்வைத்திருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அறிக்கையை முழுவதும் படித்த பின்பும் மேலே கூறிய எந்த காரணங்களும் அதில் கூறப்பட்டிருப்பதாக  தோன்றவில்லை. உண்மையில் கல்வி வியாபாரத்திற்கு எதிராகவே இந்த அறிக்கை பல பரிந்துரைகளைச் செய்திருக்கிறது. நாட்டின் மொத்த உற்பத்தியில் குறைந்தப்பட்சம் 6% அளவுக்காவது கல்வித்துறைக்கு ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்னும் பரிந்துரை கல்வி வியாபாரத்தை ஊக்குவிப்பதற்காக நிச்சயம் இருக்காது. உயர் ஆராய்ச்சித் துறைகளில் தனியார் முதலீட்டை, தெளிவான கொள்கைகளுக்கும் தரம் சார்ந்த நிபந்தனைகளுக்கும் உட்பட்டு வரவேற்கலாம் என்பதைக் கூறுகிறது. இதைக் கல்வி வியாபாரம் என எதிர்த்தால், இது எந்த பின்னணியில் கூறப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. மாணவர்களுக்கு அனைத்து மதங்களின் அடிப்படைகளும் கற்பிக்க வேண்டும் என்னும் ஒரு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் இது மிகவும் தேவையானது. அனைத்து மதங்களையும் என்பதை எவ்வாறு இந்துத்துவம் என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் புரிந்துக் கொள்ள முடியவில்லை. இந்தியாவின் தத்துவம், கலை, பண்பாடு, அறிவியல் போன்றவை சமஸ்கிருதத்துடன் நெருங்கிய தொடர்புடையவையாக இருப்பதால், சமஸ்கிருத கல்விக்கான சுதந்திரமான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது. சுதந்திரமான வாய்ப்பு என்பதை கட்டாயம் என்று எவ்வாறு எடுத்துக் கொண்டார்கள்? சமஸ்கிருதம் படிக்க விரும்புபவர்களுக்கான வாய்ப்பை எதிர்ப்பின் மூலம் இவர்கள் கட்டாயமாக மறுத்துவிடுகிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இன்னொரு ஊடகத்தில் வெளியான ஒரு கட்டுரை வேறு சில பரிந்துரைகளின் உதிரி வாக்கியங்களை, அந்த வாக்கியங்கள் கூறுவதன் பின்னணியை கருத்தில் கொள்ளாமல், அதற்கு எதிரான தன் கேள்விகளை முன்வைத்திருக்கிறது. இத்தகைய பின்னணியைக் கருத்தில் கொள்ளாத உதிரிக் கேள்விகளுக்கு யாராலும் பதில் அளித்து விட முடியாது.

ஐனநாயக சமூகத்தின் அங்கத்தினர்களாக, அந்த சமூகத்தின் கல்விக் கொள்கைக்கு முன்னோட்டமான இந்த அறிக்கையை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ அவரவர் கருத்துச் சுதந்திரம். இந்த அறிக்கையில் ஒரு வாக்கியம் இவ்வாறு வருகிறது; அடுத்த பத்தாண்டுகளில் வரவிருக்கும் பணியாளர்களை, நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் பங்களிப்பதற்காக போதிய அளவு கற்பிக்கவும் பயற்சியளிக்கவும் வேண்டும். மிகுந்த அக்கறையுடன் இதைக் கவனிக்காமலிருந்தால், மக்கள் தொகையில் இளைஞர்களின் அதிகமான தொகையால் உத்தேசிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி, உண்மையிலேயே அவ்வாறன்றி பேரிடராக மாறிவிடலாம். (The work force in the next decades need to be adequately educated / trained, for them to play a part in nation building. Indeed if this is not attended to with great care today, the projected demographic ‘dividend’ may actually turn out to be a ‘disaster’ in the next decades.) இதைப் புரிந்து கொள்வதில் எந்த இடரும் இருக்க வாய்ப்பில்லை. ஆக, கல்வி சீர்திருத்தத்தின் மேல் உள்ள தனிப்பட்ட மனிதர்களின் மனச்சாய்வு, அடுத்த பத்தாண்டுகளில் இளைஞர்களும், எனவே சமூகமும் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணி. சமூகத்தைக் கட்டமைக்க வகுக்கப்படும் இந்த கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்களோ ஆதரிப்பவர்களோ அரசியல் அல்லது வேறு தனிப்பட்டக் காரணங்களுக்காக சிலர் முன் வைக்கும் உதிரி வாக்கியங்களை அவ்வாறே ஏற்றுக் கொள்ளாமல் அறிக்கையில் அல்லது கொள்கையில் அந்த உதிரிவாக்கியங்கள் எந்தப் பின்னணியில், எந்த நோக்கத்திற்காக கூறப்பட்டிருக்கிறது என்பதை சுயமாக அறிந்து கொண்டு, அதன் அடிப்படையில் தங்கள் நிலைப்பாடுகளை எடுப்பார்கள் என்றால், கல்வி சீர்திருத்தம் இந்தியாவில் சாத்தியமாகலாம்.

குழுவின் பரிந்துரையை இந்தச் சுட்டியில் பதிவிறக்கம் செய்யலாம்.

Wednesday, August 24, 2016

உலகமயமாதல்

15-08-2016 அன்று சொல்வனம் இணையப்பத்திரிகையில் பதிப்பிக்கப்பட்டது.

தற்போது நான் வாசித்துக் கொண்டிருக்கும் இரு தொடர்களும், மிகப்பரவலாக உலகம் முழுவதும் பேசப்பட்ட பொருளாதாரத்தின் இரு துருவங்களையும் இணைக்கும் கோட்டில் நிகழ்ந்த ஒரு நிகழ்வும், ஒரு சாதாரண மனிதனின் பார்வையில் பொருளாதாரம் குறித்த என் எண்ணங்களைத் தூண்டியது. எந்தத் துறையாக இருந்தாலும் சமூகத்தின் பெரும்பான்மை மக்களின் எண்ணங்களின் திசையில் தங்கள் கொள்கைகளை வகுக்கும் நிபுணர்கள், சந்தேகமில்லாமல் அந்தத் துறையில் வெற்றியடைவார்கள். ஆனால் பிரச்சனை என்னவென்றால் சாதாரணர்களில் பெரும்பான்மையானவர்கள், தங்கள் வாழ்வின் சூழல்களைக் குறித்து எந்த ஒரு கருத்தும் இல்லாமல், அவ்வப்போது வெளிப்படும் உணர்சிவசப்பட வைக்கும் பிறர் கருத்துக்களை சுயசிந்தனை இல்லாமல் தொடர்பவர்களாக இருக்கிறார்கள். இந்த வகையில் சமூகத்தின் சாதாரண மனிதனின் எவ்விதமான சுயபபார்வையும் முக்கியமானதே.

முதலாவதாக நான் வாசித்துக் கொண்டிருக்கும் தொடர் ''பனைமரச் சாலை'' என்னும் தலைப்பில் காட்சன் சாமுவேல் என்பவர் தனது வலைத்தளத்தில் எழுதிவரும் தொடர். இதில் அவர் மும்பையிலிருந்து நாகர்கோவில் நோக்கிய தனது இருசக்கர வாகன பயணத்தில் தேர்ந்தெடுத்த பனைமரம் சார்ந்த தொழில்கள் நடைபெறும் பாதைகளில் அவதானித்தவற்றையும் அவற்றுடன் தொடர்புடைய அவருடைய எண்ணங்களையும் பிற அனுபவங்களையும் தொகுத்து எழுதி வருகிறார்.

இரண்டாவதாக இந்தியாவில் உலகமயமாக்கம் தொடங்கி இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைந்ததன் நினைவாக ''தி இந்து' தமிழ் நாளிதளில் வெளியிடப்படும் நடுப்பக்கக் கட்டுரைகள். பல்வேறு கட்டுரையாளர்களால் - அவர்கள் அனைவரும் பொருளாதார அறிஞர்கள் என்று என்னால் கூற முடியவில்லை; இந்தியாவில் உலகமயமாக்த்தின் சாதக பாதகங்களை அவர்கள் பார்வையில் அலசும் கட்டுரைகள். உலகமயமாக்கம் இந்தியாவில் நன்மைகளை நிகழ்த்தியிருக்கிறது என்னும் பார்வையும், இல்லை அது இந்தியாவிற்கு ஒட்டுமொத்தமாக தீமைகளையே வழங்கியிருக்கிறது என்பதான பார்வையும் வெவ்வேறு கட்டுரையாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது.

அடுத்ததாக ''பிரெக்ஸிட்'' என எங்கும் ஒலித்த குரல்களின் பின்னால் இருந்த, பிரிட்டனின் பொதுஜனம் பிரதிபலித்த, கிட்டத்தட்ட சமபலமுள்ள, உலகமயமாக்குதலுக்கு ஆதரவான மற்றும் எதிரான பிம்பங்கள். பொதுமக்களின் விருப்பங்களே உலகமயமாக்கலையும் தேசியமயமாக்கலையும் இணைக்கும் கோடு என்று கருதுகிறேன். இந்தியா போன்ற பரந்த நாடுகளுக்கு, தேசியமயமாக்கலை, பொருளாதார பரவலாக்குதல் (Economic Localization) என்று பொருள் கொள்ளலாம்.

பொருளாதார அடிப்படையில் உலகமயமாக்கம் (Globalization) மற்றும் சர்வதேசமயமாக்கம் (Internationalization) என்னும் இரு வார்த்தைகளும் இருவேறு அர்த்தங்களை உடையவை. ஆனால் அவற்றுக்கிடையேயான வித்தியாசங்களும் மிகத்தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. இருந்தாலும் அவற்றை இவ்வாறு கூறலாம்; உலகமயமாக்கம் என்பது நாடுகளுக்கிடையேயான பொருளாதார எல்லைக் கோடுகளை ஒருங்கிணைத்து, வணிகம் முதலீடு ஆகியவை முற்றிலும் சுதந்திரமாக உலகின் எந்தப் பகுதியிலும் செய்வதற்கான வாய்ப்புகளை அளிப்பது. அத்துடன் கட்டுப்பாடுகளற்ற அல்லது மிக எளிதான தொழிலாளர்களின் குடிபெயர்தலுக்கும் வாய்ப்பளிப்பது. சர்வதேசமயமாக்கல் என்பது நாடுகளுக்கிடையேயான வணிகத்தையும் உறவுகளையும் சர்வதேச ஒப்பந்தங்கள் மூலமும் கூட்டமைப்புகள் மூலமும் ஏற்படுத்திக் கொள்வது. இன்னும் குறிப்பாக கூறினால், உலகமயம் முற்றிலும் பொருளாதாரம் சார்ந்தது. சர்வதேசமயம் பொருளாதார நோக்கங்களுக்கான அரசியலையும் உள்ளடக்கியது. இன்று நாம் உலகமயமாக்கம் என்னும்போது, பொருளாதாரத்துடன் அந்த நோக்கத்திற்கான அரசியலையும் சேர்த்தே கூறுகிறோம். எனவே அவற்றுக்கான எல்லைக்கோடு சந்தர்ப்பத்திற்கேற்ப மாறும் மெல்லிய கோடாகவே தோன்றுகிறது.

உலகமயமாக்கலின் ஒரு அலகு ஐரோப்பாவில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து தங்களுக்குள் வணிகம் முதலீடு மற்றும் தொழிலாளர்களின் சுதந்திரமான இயக்கத்தை அனுமதித்திருக்கிறது. அந்த அலகில் ''பிரெக்ஸிட்'' மூலம் ஏற்பட்டிருக்கும் விரிசல், உலகமயமாக்கல் என்னும் கொள்கையை, அதன் இன்றைய வடிவில், கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

பொருளாதார உலகமயமாக்கம் என்னும் கருத்து முழுமையான உலகமயமாக்கம் என்னும் பெருங்கனவுக்கு தொடக்கமாக கருதலாம் என நினைக்கிறேன். இன்றைய உலகமயமாக்கலுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்தாலும், முழுமையான உலகமயமாக்கல் என்னும் கருத்து, காரி டேவிஸ் (https://en.wikipedia.org/wiki/Garry_Davis) அவர்களால் இரண்டாம் உலகப்போருக்கு பிற்பட்ட காலத்தில் முன்வைக்கப்பட்டது. எல்லைகளற்ற ஒரே பூமி, ஒரே சமூகம். ''உலகம் யாவையும்'' என்னும் ஜெயமோகனின் சிறுகதை, காரி டேவிஸ் என்னும் ஆளுமையை புனைவு வெளியில் தமிழில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. மனிதர்கள் அறிவின் முழுமையையடையும்போது இது சாத்தியமாகலாம். இன்று மனிதர்கள் முழுமைக்கு வெகு தொலைவில்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். எனவே மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவேண்டிய கருத்தாக்கமும் கூட.

இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டாலும், இந்தியா இன்னும் உலகமயமாக்கலின் தொடக்க நிலையிலேயே இருக்கிறது. மிகச் சில துறைகளில் மட்டும்தான் முழுமையான எல்லைகள் கடந்த முதலீடு சாத்தியப்படுத்தப் பட்டிருக்கிறது. அதாவது 100% அந்நிய முதலீடு. தொழிலாளர்களின் சுதந்திரமான எல்லை கடந்த குடியேற்றம் இன்னும் எங்கும் சாத்தியம் ஆகவில்லை. ஐரோப்பா என்னும் சிறு அலகினுள் மட்டும் அது செயல்படுத்தப்பட்டிருக்கிறது. 1945 - ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச நிதியம் (IMF) சர்வதேசமயமாக்கல் வழியாக உலகமயாக்கல் திசை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட முதல் சில அடிகளில் ஒன்று. இந்தியா உலகமயமாக்கக் கொள்கைகளை தழுவுவதற்கு நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பே பிற சில நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட உலகமயமாக்கலும் பெரிய முன்னேற்றங்கள் அடைந்துள்ளதாகத் தோன்றவில்லை. அதாவது ஐரோப்பிய யூனியனுக்கு உட்பட்ட நாடுகளைத் தவிர மற்ற எங்கும் சுதந்திரமான அல்லது கிட்டத்தட்ட சுதந்திரமான தொழிலாளர் குடியேற்றம் அனுமதிக்கப்பட்டதில்லை. காரணம் மிக எளிமையானதுதான். உலக அரசாங்கம் என்னும் கருத்தாக்கம் இன்னும் தோன்றவில்லை. அதாவது நாடுகள் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தங்களை தனி அலகுகளாகக் கொண்டிருக்கும்போது பொருளாதார ரீதியாக மட்டும் ஒரே அலகாகக் கொள்ள முடியாது. அரசியல் மற்றும் சமுகத் தனித்தன்மையை பேணும்போது பொருளாதாரத் தனித்தன்மையை இல்லாமல் செய்வது, உலகப் பொருளாதாரத்தை அரசியல் வலிமையுள்ளவர்கள் தங்கள் லாபத்திற்காக சூழ்ச்சியுடன் எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பை அளிக்கும். இது அரசியல் வல்லமை இல்லாத நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தும். இன்றைய ஓரளவு தாராளமயமாக்கப்பட்ட உலகில் இதுதான் நடந்துவருவதாகத் தோன்றுகிறது. மேலும் தங்களின் சுயமதிப்பில் பணமதிப்புடன், பிற அவசியமான மதிப்பீடுகளையும் சேர்க்கும் நிலை வரும்வரை, அல்லது பணமதிப்புக்காக பிற மதிப்பீடுகளை இழப்பதற்கு விருப்பத்துடன் இருப்பது மாறும்வரைக்கும், இந்த நிலை மாறும் என்று தோன்றவில்லை. ஏனெனில் மனிதனின் பணமதிப்பு அவன் வாழும் சூழலுக்கேற்ப, சூழலில் உள்ள இயற்கைவளங்களின் இருப்பிற்கேற்ப மாறும் இயல்புடையது. மனிதனின் மதிப்பு மாறாமல் இருக்க வேண்டுமானால் பணமதிப்புடன் வேறுசில மதிப்புகளையும் கொண்டிருக்க வேண்டும்.

இந்தியாவில் கூட, ஒரு தேசமாகவே இதுதான் நடந்ததாகத் தோன்றுகிறது. உதாரணமாக இயற்கை வளங்கள் நிறைந்த வடகிழக்கு இந்தியாவின் வளங்களை ஒட்டு மொத்த இந்தியாவிற்காக எடுத்து விட்டு, அங்கிருக்கும் சமூகங்களுக்கு எதுவும் அளிக்காமல் விட்டுவிட்டதுதான் நெடுங்காலம் வடகிழக்கு இந்தியாவில் நிகழ்ந்து வரும் அமைதியின்மைக்குக் காரணமாக இருக்கலாம். இந்தியாவின் பிறப் பகுதிகளை ஒப்பிடும்போது வடகிழக்கு இந்தியா பொருளாதாரத்திலும் அடிப்படை வசதிகளிலும் மிகவும் பின்தங்கி இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும், அதற்கு முன் இருந்த பிரிட்டீஷ் அரசாங்கமும் அங்கிருந்தவற்றை தங்களுக்காக எடுத்துக் கொண்டன. வடகிழக்கின் அமைதியின்மைக்கு பொருளாதாரம் தவிர பல அரசியல், சமூக காரணங்களின் விளைவாக ஏற்பட்ட ஊடுருவல்களும் காரணமாக இருந்திருக்கின்றன. இந்த ஊடுருவல்களுக்கு எளிய இலக்காக வடகிழக்கு இருப்பதற்கு அதன் பின்தங்கிய நிலையே காரணம் என்று நினைக்கிறேன். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே இந்த ஊடுருவல்கள் அங்கு நிகழந்து நிலைபெற்று விட்டன. ஆனால் சுதந்திர இந்தியாவும், அப்பகுதியை முன்னேற்ற நெடுங்காலம் எதுவும் செய்யவில்லை - காரணங்கள் ஆய்வுக்குரியவை.

உலகமயமாக்கலில் என்னதான் நிகழ்கிறது? மகத்தான கருத்தாக்கமாக இருந்தாலும் ஏன் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது? இது கருத்தளவில் முழுமையான இயக்கமாக இருந்தாலும் நடைமுறையில் ஒருவழிப் பாதையாக இருப்பதால் இருக்கலாம் - முதலீடு செய்பவர்கள் ஒரு பகுதியின் வளங்களை எடுத்து விட்டு, அந்தப்பகுதிக்கு எவற்றையும் திரும்ப அளிக்காமல் இருப்பதன் மூலம். அல்லது வெறும் பொருளாதார நோக்கத்தை மட்டும் கொண்டிருப்பதாலும் இருக்கலாம். மனித வாழ்க்கைக்கு பொருளாதாரத்தின் தேவை ஒரு சிறு அலகு மட்டும்தான். பொருளாதாரம் கடந்து பண்பாடு, உறவு, கலை, சுவை, உணர்வு என பல அலகுகள் வாழ்க்கையில் தேவையாக உள்ளன. ஆனால் அந்த சிறு அலகை மட்டும் பிரதானப்படுத்தி உலகமயம் மற்றவற்றை புறந்தள்ளுவதால் இருக்கலாம். பொருளாதாரத்தின் அடிப்படையான நுகர்வை, பெரும் உற்பத்திகளின் சார்புடையவையாக மட்டும் வைத்திருந்து, அந்தத் திசையில் மட்டும் முன்னெடுப்பதன் மூலம் பண்பாட்டுடன் தொடர்புடைய, பண்பாடு சார்ந்த சமூகத்தின் உற்பத்திகளை, கலைகளை, உணர்வுகளை முக்கியத்துவம் இல்லாமல் செய்வதால் இருக்கலாம். பொருளாதாரத்திற்கான உற்பத்தி பெருமளவு இயந்திரமயமாகி விட்டது. சேவை இயந்திரமயமாகி வருகிறது. சேவையின் பெரும்பகுதியும் இயந்திரமயமாகிவிட்டால், மனிதனின் தேவை நுகர்வுக்கு மட்டும்தான் - இயந்திரங்களின் உற்பத்திக்காகவும் இயக்கத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்தப்பட்ச மனிதர்களைத் தவிர! அந்த நிலையில் இயந்திரங்களுடன் மனிதர்கள் பொருளாதார உற்பத்தியில் போட்டியிட வேண்டுமானால், மனிதர்களின் பணமதிப்பு, இயந்திரத்தின் பணமதிப்பை விட குறைந்தாக வேண்டும்.

இந்த நிலையில்தான் காட்சன் சாமுவேல் அவர்களின் பயணமும் அவர் எழுதிவரும் பனைமரச் சாலை தொடரும் முக்கியத்துவம் பெறுகின்றன. இயற்கை சார்ந்த ஒரு தொழிலையும், அந்தத் தொழிலின் உற்பத்தியின் பயன்பாடுகளையும் ஆவணப்படுத்துவதுடன் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகளின் சமூக மரியாதையையும் எனவே சுய மரியாதையையும் மீட்டெடுக்கும் முயற்சி - சுயமரியாதையை இழந்த சமூகம் மொத்த மனித சமூகத்திற்கும் பாரமாகவே மாறி விடும். தனிமனிதர்களின் தனித்துவத்துடன் கூடிய பொருளாதார பரவலாக்கத்திற்கான ஒரு மாதிரி முயற்சி. அத்தகையவர்களுக்கான ஒரு ஊக்குவிப்பு.
இன்று நாம் பெற்றிருக்கும் வசதி வாய்ப்புகளில், தொழில்நுட்பங்களில் பெரும்பான்மையானவை பொருளாதார உலகமயமாக்கலின் பயன்களே என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரத்தில் பலவிதமான எதிர்மறை விளைவுகளை பண்பாட்டிலும், தொழில்களிலும் வாழ்க்கை முறைகளிலும், மனித இருப்பிலும் அவை உருவாக்கியுள்ளன என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனில் நாம் பெற்ற வசதிகளுக்காக அதைத் தொடர்ந்து ஆதரிப்பதா அல்லது எதிர்மறை விளைவுகளுக்காக எதிர்ப்பதா?


இரண்டுமே தேவையற்றதாக இருக்கலாம். ஏனெனில் உலகமயமாக்கம் என்பது மகத்தான கருத்தாக்கம். அதன் முழுமை நிலையில் தேச, சமூக, பொருளாதார, பண்பாட்டு எல்லைகளைக் கடந்து ஒரே சமூகமாக உலக மனிதர்கள் அனைவரையும் உணர வைக்கும் ஒன்று. அதை முழுமையாக செயல்படுத்த பொருளாதார நிபுணர்கள் மட்டும் போதுமானவர்களாக இருக்க முடியாது. அதுவே இன்றைய உலகமயமாக்கலின் சிறு அலகில் நிகழ்ந்த பின்னோக்கிய நகர்வுக்கு காரணமாக இருக்கலாம். இங்கு பொருளாதாரத்தை விட பண்பாட்டை முன்னிறுத்தி, பொருளாதாரத்தை பண்பாட்டின் சிறுதுளியாக எடுத்துச் செல்ல முடிந்தால், அது காரி டேவிஸ் அவர்கள் கனவு கண்ட உலகமயமாக்கலை நோக்கி தொடங்கும் பயணமாக இருக்கலாம். இங்கு கூறுவது ஆதிக்கம் பெற்ற ஒரு பண்பாட்டை சிறு பண்பாடுகள் மேல் திணிப்பது அல்ல. மாறாக அனைத்துப் பண்பாடுகளும் அவற்றின் பொக்கிஷங்களை மற்றப் பண்பாடுகளின் தேவைகளுக்கேற்ப அளிக்கும் விரிவு! அந்த விரிவின் மூலம் எல்லாப் பண்பாடுகளும் சம அந்தஸ்தைப் பெறுவது. இறுதியில் பிரிவுகள் இல்லாத ஆனால் எண்ணற்ற சுயங்கள் உடைய முற்றிலும் திறந்த பண்பாட்டு வெளி! கனவுதான்! 

blog.change@gmail.com