Sunday, March 19, 2017

பண்பாட்டு அறிதல்களில் தொடர்ச்சி

13-01-2017 அன்று சிறகு இணையப்பத்திரிகையில் பதிப்பிக்கப்பட்டது.
மானுட அறிதல் ஒரு தொடர் செயல்பாடு. பிற மனிதர்கள் அறிந்தவற்றை கற்றுக் கொள்ளும் திறனை பெற்றிருப்பதால்தான் மானுட சமூகம், பிற உயிரினங்களிலிருந்து வேறுபட்டு,  அறிவு செயல் வளர்ச்சிகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. இன்றைய தனி மனிதன் அறிந்திருப்பது அனைத்தும் முன்னோர்கள் அறிந்தவற்றின் ஒரு துளி மாத்திரமே. முன்னோர்கள் என்பது, மானுட சமூகத்தின் மொத்த முந்தைய தலைமுறைகள் அனைத்தையும் இங்கு குறிக்கிறது. இக்காலத்தில் புதியதாக எதையாவது அறிகிறோமானால், அது முன்னோர்கள் அறிந்தவற்றை மேடையாக்கி, அதன் மேல் நின்றுகொண்டுதான் அறிகிறோம். ஆனால் அத்தகயை புதிய அறிதல்கள் நிகழ்வது மிகவும் அபூர்வமே. அதாவது, நாம் தனிமனிதர்கள் அறிந்தவை எனக் கூறுபவற்றில் பெரும்பான்மையானவை முன்னோர்களின் சுய தேடுதலால் தங்கள் உயிரை எரித்து அடைந்த ஒளியில் அறிந்தவைகளின் சில துளிகளே. அவர்கள் அளித்த அறிவுக்காக, நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அத்தகைய அறிதலின் தொடர்ச்சி மானுட இயல்பு. ஆனால், தங்கள் அறிவு முன்னோர்களின் கொடையே என அறியும் மனம், அறிதலில் அடுத்த பாய்ச்சலுக்கான ஏவுதளம். அத்தகைய மனம், முன்னோர்களின் அறிதலை அதற்கான மரியாதையுடனும் எனவே புதிய அறிதலுக்கான விழிப்புடனும் அணுகும்.

Wednesday, January 4, 2017

பிம்பம்

மலையோரச் சாலையில்
மோட்டார் சைக்கிளில் செல்கிறேன்.
பின்னோக்கிக் கண்ணாடியில் கண்ட
மலைக் காட்டின்
அழகிய பிம்பத்தில்
லயித்த கணம் நிலைதடுமாறிய வண்டியை
நிலைப்படுத்தினேன்.
காட்சியும் பிம்பமும்
இல்லாமல் ஆனது அக்கணத்தில்.

சற்றே தொலைவில் இருக்கும்
நண்பனின் இருப்பிடத்தில்
சற்று நேரத்தில் சென்று விடுவேன்.
சில பிம்பங்களை நானும்
மேலும் சில பிம்பங்களை அவனும்
பகிர்ந்து கொள்வோம்.
அதன் பின்

நானென் வழியில், அவன் தன் பாதையில்!

Saturday, December 24, 2016

வாசிப்பு

சிறகு இணையப் பத்திரிகையில் 25-12-2016 அன்று பதிப்பிக்கப் பட்டது.

எழுத்தறிவை அடைவதன் அடிப்படைக் காரணம் வாசிப்பு. வாசிப்பிலிருந்தே அறிதலென்னும் விருட்சத்தின் பெரும்பாலான  கிளைகள் கிளைக்கின்றன. அறிதல் வாழ்வை செறிவுள்ளதாக்குகிறது. அறிதல்கள் தடைசெய்யப்பட்ட அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை உண்மையில் மனிதன் வாழும் எல்லையைச் சுருக்குகிறது, அனுபவங்களை அடைவதிலிருந்து விலக்குகிறது. அனுபவங்களின் விரிவே வாழ்க்கையின் விரிவு.

Saturday, December 3, 2016

விடுதலை

சிறு தும்பியின்
சிறகசைவில்
உதிர்ந்த
காட்டுப்பூ இதழுக்கு
அது
விடுதலை

Sunday, November 27, 2016

புகை

பல ஆயிரம் புகை கக்கும்
வாகனங்கள் சுமந்து வந்த மனிதர்கள்,
காடழித்து
அகழ்ந்தெடுத்த கரி உமிழ்ந்த புகை
குளிரூட்டிய அலுவலக அறைகளில்,
வடிவமைத்து தொகுத்தெடுத்த
ஆழ்துளை கிணறுகளும், எண்ணை வாயு ஆலைகளும்,
மீண்டும் புகைகக்கி
புகையுண்ட மின்சாரம் தின்று
புகையுமிழும் வாகனத்தில்
வந்த சிவப்பு உருளை
புகையின்றி எரிகிறது

எங்கள் வீட்டு அடுப்பில்.

Wednesday, November 23, 2016

பசியறிதல்

நேற்றுக் காலை எழுந்த என் ''டீன் ஏஜ்'' மகளுக்கு
அன்னையுடன் சிறு பூசல்.
எப்போதும் போல
குழந்தைமையின் திமிருடன்
உணவுண்ண மாட்டேனென்று ''உம்''மென்று சென்றமர்ந்தாள்.

கையிலிருந்த கண்ணாடி முப்பட்டகத்தில் (Prism)
காலை ஒளியின் விலகலை நோக்கியிருந்தாள்.
காலை சென்றது.
மதிய ஒளியின் செறிவு கூடியது.
அந்தி மயங்கி ஒளியவிந்தது.
அன்னையின் கருணை
பொருத்தமில்லா திமிரில் மோதி சற்றே
திசை மாறியிருந்தது-
காலையில் மிரட்டல்
மதியத்தில் மெல்லிய அழைப்பு
அந்தியில் சிறு கெஞ்சல்.
அவளில் எரிந்தவிந்தது பசி.
எரிந்தவிந்த பசி, துளிர்த்து வாடிய திமிர், மோதி திசைமாறிய கருணை
சேர்ந்து உண்டது சில  பழத் துண்டுகளை.

இன்று காலை எழும்பிய
அவளின், அன்னையின் கொஞ்சல்களில்
நேற்றின் எச்சம் சற்றும் இல்லை.
பார்த்து நின்ற என் புன்னகை
சுவர் கண்ணாடியில் தெரிந்த
என் முக பிம்பத்தில் விரிந்திருந்தது.

Sunday, November 20, 2016

இல்லாமலாவேன்

இன்றிரவு ஒரு கோப்பை
மதுவருந்தியிருக்கிறேன்
மது
ஒரு கணத்தில் என்னை
வேறொருவனாக மாற்றியது
இன்னொரு கணத்தில்
நான் இல்லாமல் இருந்தேன்!
மற்றொரு கணத்தில்
இதுவரை அறியாத ஒன்றை அளித்தது

என்னை ஆக்கியிருக்கும்
என்னுடலின் நுண்ணுயிர்கள்
அந்தக் கணங்களில் எவ்வாறு மாறின?

நாளை ஒரு தினம் எனக்கு வரக்கூடும்.
மதுக் கோப்பையின் துணையின்றி
அன்று நான் வேறொருவனாக மாறியிருக்கலாம்
நானே இல்லாமல் உயிர்தரித்திருக்கலாம்
என்னை ஆக்கியிருக்கும் நுண்ணுயிர்களே!
உங்களை அமைத்திருக்கும் அணுக்களே!
அணுக்களில் ஆடியிருக்கும் உருவமற்றதே! எல்லையற்றதே!
அந்த நாள் எனக்கு அமையுமோ?
அதையெனக்கு நீங்கள் அளிப்பீர்களோ?

இன்று நான்
ஒரு கோப்பை மதுவினால்,
மதுவை அடைந்த ஆணவத்தால்,
நீங்கள் என் பக்கம் இருக்கும் செருக்கினால்
உங்களை அவமதித்து
அதை
அடைந்திருக்கிறேன்!
அல்லது நீங்களே மனமுவந்து மதுவை ஏற்று
உங்களையே அவமதித்து
எனக்கதை அளித்திருக்கிறீர்களோ!

மதுவின் துணையின்றியும்
அதை
நான் அடையக்கூடும் என்பதையும்
உங்கள் துணையுடன் அறிந்திருக்கிறேன்
  
என்று நான் அடைவேன்
அதை!
உங்களை இழக்காமல்! அவமதிக்காமல்!

அன்று நான் உன்னதமானவனாவேன்
உன்னதத்தின் திளைப்பில் இல்லாமலாவேன்.
என்னுடன் நீங்களும்!
உங்களுடன் நானும்!