Sunday, June 30, 2013

சமூக கருத்தியல் இயக்கம்.

நமது தனிப்பட்ட அடிப்படை இயல்பை நாம் வாழும் சமூகத்தின் இயல்பே தீர்மானிக்கிறது. சமூகத்தின் இயல்பு, அதன் தனிப்பட்ட உறுப்பினர்களின் இயல்புகளின் தொகுப்பு. ஆக தனிமனிதர்களின் இயல்பும் சமூகத்தின் பொது இயல்பும் ஒன்றை ஒன்று தொடர்ந்து மாற்றத்துக்குள்ளாக்கி கொண்டே வருகிறது. நாம் வாழும் சமூகம் கடந்த சில வருஷங்களில் எவ்வாறு மாற்றமடைந்துள்ளது, அந்த மாற்றம் நம் தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வாறு மாற்றத்தை உருவாக்கியுள்ளது, அந்த மாற்றத்தின் அடிப்படை எங்கிருந்து உருவானது என்பவற்றை நம்மால் அவதானிக்க முடிந்தால், தனிமனித மற்றும் சமூக மாற்றங்களில் ஒன்றுடன் ஒன்றான தொடர்பை நம்மால் அறிய முடியும்.

சமூக மாற்றம், தனிமனித உளவியல் மாற்றத்தில் தொடங்கி கருத்தாக உருபெற்று, அந்த கருத்து சமூக உறவுகளின் மூலம் வலிமைபெற்று சமூக மாற்றமாக உருவெடுக்கிறது. இங்கு கருத்தியல் இயக்கம் என்பது சில அறிவுஜீவிகளால் மட்டுமே சமூகத்தில் முன்னெடுக்கப்படும் என்று நாம் கருதினால் அது மிக மிக தவறான நம் முன்முடிவு. சுயசிந்தனை உடைய எல்லா தனிமனிதர்கள் மூலமும் கருத்தியல் சமூகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும். ஆனால் சுயசிந்தனை உடைய, எந்த கருத்தியலையும் தன் சுயசிந்தனையின் மூலம் உறுதிப்படுத்தும் தகுதியுடையவர்கள் பெரும்பாலும் எந்த சமூகத்திலும் மிகமிக குறைவானவர்களே இருப்பார்கள். இங்கு சுயசிந்தனை என்பது மிகமிக ஆழமான கருத்தாக்கம். எந்த கருத்தையும் நம் சிந்தனையின் மூலம் மட்டுமே நம்மால் விரிவுபடுத்த அல்லது வெளிப்படுத்த முடியும். ஆனால் அந்த சிந்தனைகள் நாம் ஏற்கனவே கொண்டுள்ள எண்ணற்ற முன்முடிவுகளை சார்ந்து இருக்கும். இத்தகைய முன்முடிவுகளாலான எண்ணங்கள் மூலம் நாம் அடையும் கருத்தாக்கம் எப்போதும் சுயசிந்தனையால் உருவானவை இல்லை. உண்மையில் நாம் சுயசிந்தனை உடையவர்கள் என்றால் நம் அறிதலுக்கு அப்பாற்பட்ட எந்த கருத்தையும், நம்பிக்கைகள் அல்லது முன்முடிவுகள் மூலம் நம்  கருத்துகளாக வெளிப்படுத்த மாட்டோம். உறுதியான அறிதல்கள் மூலம் நம்பிக்கைகளை கடந்து சென்றபின், அந்த அறிதலை அடிப்படையாக கொண்ட சிந்தனைகளே சுய சிந்தனைகளாக வெளிப்படும். இதுவே படைப்பூக்கம் (Creativity)!

நாம் உண்மையில் சமூக பிரக்ஞ்சை கொண்டவர்களாக இருந்தால் எந்த கருத்தையும் உருவாக்கியாக வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஆனால் சமூகத்தில் புழங்கும் எந்த கருத்தையும் ஏற்றுக்கொள்ளும் முன் நமக்கேயான நம் சுய சிந்தனையின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். இதுவே சாதாரண மனிதர்களாகிய நாம் சமூகத்திற்கு அளிக்கும் பெரும் பங்களிப்பு. ஒரு சமூகத்தை சார்ந்த பெரும்பாலானோர் சமூகத்தில் புழங்கும் எந்த கருத்தையும் தங்கள் சுயசிந்தனையின் மூலம் உறுதிப்படுத்தியபின் ஏற்றுக்கொள்ள தொடங்கினால் அந்த சமூகம் நாம் அனைவரும் சார்ந்திருக்க விரும்பும் நம் கனவுசமூகமாக இருக்கும்.

துரதிர்ஷ்டவசமாக பொதுமனித மனம் அத்தகைய தகுதியுடையதாக இல்லை. ஒரு காரணம், பெரும்பாலானவர்கள் பெறும் கல்விமுறையாக இருக்கலாம். எல்லா மனித சமூகங்களிலும் பெரும்பாலும் தொழிலுக்கான கல்வியே அளிக்கப்படுகிறது. ஏனெனில் மனித சமூக அமைப்பில் தொழில் இன்றியமையாதது. லொகீக வாழ்க்கையின் தேவைகளை தொழில் புரிவதன் மூலமே எந்த ஒரு தனிமனிதனும் சமூகத்திலிருந்து பெறமுடியும். எல்லா சமூகங்களிலும் பெரும்பான்மை மக்களின் தேவைகள் லொகீக தேவைகளே. எனவே அளிக்கப்படும் கல்வியும் தொழில் சார்ந்ததாகவே இருக்கும்.

மிகச்சில மனிதர்களுக்கு மட்டுமே லொகீக வாழ்க்கையுடன் அதை கடந்த தேவையும் இருக்கிறது. மிகமிக குறைவானவர்களுக்கு லொகீக வாழ்க்கையே தேவை இல்லாமலும் இருக்கிறது. இந்த இரு சாரர்களால் மட்டுமே கருத்தியல் இயக்கங்களை முன்னெடுத்து செல்ல முடியும். இந்த மிக மிக குறைவான மனிதர்கள் தங்கள் உண்மையான கல்வியை வெகுஜன கல்விக்கு அப்பால்தான் பெற முடியும். ஒருவேளை தொழில் சார்ந்த கல்வியிலும் சுயசிந்தனையை ஊக்குவிக்கும் சமூகங்களில், லொகீக வாழ்க்கையை கடந்த தேவைகளுக்கான கல்வி, தொழில் கல்விக்கு ஊடேயும் பெற சாத்தியங்கள் இருக்கலாம். அந்த சாத்தியங்கள் இருந்தாலும் இந்த சிறுபான்மையினரால் மட்டுமே அந்த சாத்தியங்களின் உச்சத்தை எட்ட முடியலாம். அத்தகைய சாத்தியங்களை உள்ளடக்கிய கல்வி முறை இருந்தால் லொகீக மனிதர்கள் கூட, சிந்தனையின் சாத்தியங்களை குறித்த உணர்வுடன் இருக்க கூடும் - அவர்கள் அந்த சாத்தியங்ளை தங்களுக்காக தேர்ந்தெடுக்காவிடில் கூட! ஆக சமூகத்திற்கு நாம் அளிக்கும் பங்களிப்பு, லொகிக வாழ்க்கையை கடந்த நம் தேவைகளை, அவ்வாறு ஒரு தேவை இருந்தால், அறிவதிலிருந்தே தொடங்குகிறது. ஒருவேளை லொகீக வாழ்க்கை கடந்த தேவை நம் வாழ்வில் இல்லாவிடில், நாம் லொகீக வாழ்க்கையை வாழ்வதிலேயே முழுமை அடைவோம். அந்த வாழ்க்கையில் நமக்கென எந்த ஏமாற்றங்களும் அடையமுடியாதவைகளும் இல்லை. அந்த லொகீக வாழ்க்கையை முழுமையாக வாழ்வதே நம் ஆன்மீக சாதனையாகவும் இருக்கும்.

எந்த சமூகத்திலும் நேர்மறை மற்றும் எதிர்மறை இயக்கங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து, அவற்றின் கலங்கிய இயக்கமே சமூக இயக்கமாக வெளிப்படுகிறது. ஒரு சமூகம் நேர்மறையான பாதையில் உள்ளதா அல்லது எதிர்மறையான பாதையில் உள்ளதா என்பதை அந்த சமூகத்தில் எத்தகைய இயக்கங்கள் ஆதிக்கம் செலுத்துகிறது என்பது முடிவு செய்கிறது. சமூகத்தில் எந்த ஒரு நேர்மறையான கருத்தியல் இயக்கம் முன்னெடுக்கப்படும்போதும், அதை இல்லாமல் செய்யும் ஒரு எதிர்மறை இயக்கமும் தோற்றுவிக்கப்படும். அந்த எதிர்மறை இயக்கம் பெரும்பாலும் சமூகத்திடம் ஆதரவை பெறும். அதற்கு முக்கியமான காரணம், ஒரு கருத்தியல் இயக்கம் என்பது சமூகத்தின் தற்போதைய இயங்குமுறையை மாற்றியமைக்க கோருவது. லொகீகத்தில் உழலும் சமூகம் சமூகத்தின் எந்த மாற்றத்தையும் லொகீக இருப்புக்கு சவாலாகவே எடுத்துக்கொள்ளும். எனவே சமூக மாற்றத்திற்கான நேர்மறையான கருத்தியல் இயக்கத்தை எதிர்த்து இல்லாமல் செய்யும் எதிர்மறை கருத்தியல் இயக்கத்தை, சுயசிந்தனை இல்லாத சமூகம் எளிய முன்முடிவுகள் மூலம் ஆதரித்து நேர்மறை கருத்தியல் இயக்கத்தை இல்லாமல் செய்து விடும். இதற்கு சமீபத்திய உதாரணம் அண்ணா ஹசாரே அவர்களின் ஊழலுக்கு எதிரான கருத்தியல் இயக்கம்!

சுய சிந்தனையை இழந்த சமூகத்தில் இன்னொருவிதமான கருத்தியல் இயக்கமும் முன்னெடுக்கப்படுகிறது. பெருமளவு அதிகாரம் குவிந்திருக்கும் சமூகத்தின் பகுதி, தன் அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்காக உருவாக்கும் கருத்தியல் இயக்கம். இங்கு அதிகாரமையம் நேரடியாக மேலதிக அதிகாரத்தை எடுத்துக்கொள்ளாமல், தன் அதிகாரத்தின் மூலம் புதிய அதிகாரத்தை நோக்கிய ஒரு கருத்தியல் இயக்கத்தை தொடங்கி முன்னெடுத்து சென்று, அந்த சமூகமே புதிய அதிகாரத்தை அந்த அதிகார மையத்திடம் வழங்குமாறு செய்வது. இந்த வகையில் வேறொரு சமூகத்திடம் அதிகாரத்தை பெறதுடிக்கும் ஒரு சமூகம், தான் வெற்றிபெற விரும்பும் சமூகத்தினுள் தனது பொருளாதார பலத்தின் மூலம் கருத்தியல் இயக்கங்களை உருவாக்கி, சுயசிந்தனை இல்லாத சமூகத்தை தன்னை நோக்கி வர வைப்பது. சமீபத்தில் வெளியான 'உடையும் இந்தியா' என்னும் நூல் இத்தகைய கருத்தியல் இயக்கங்களை விரிவாக பேசுகிறது.

blog.change@gmail.com

Saturday, June 22, 2013

சமூக இயக்கங்கள்.

சமூகம் என்பது உறவுகளின் வலைப்பின்னல். அது ஒரு நிலையான வலைப்பின்னல் அல்ல, கணம் தோறும் மாறிக்கொண்டிருக்கம் வலைப்பின்னல். சமூக இயக்கம் என்பது வலைப்பின்னலின் ஒவ்வொரு சந்திப்பு புள்ளிகளின் இயக்கங்களின் தொகுப்பு. நாம் ஒவ்வொருவரும் சமூக வலைப்பின்னலின் ஒரு சந்திப்பு புள்ளி. நாம் நிலையில்லாத தொடர் இயக்கத்தை உடையவர்கள் - அந்த இயக்கத்தை குறித்த விழிப்புணர்வுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும்! நம் ஒவ்வொருவரின் இயக்கங்களின் தொகுப்பே நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் இயக்கம்.

நம் ஒவ்வொருவரின் வெளிப்படையான இயக்கங்களின் தொகுப்பு சமூகத்தின் வெளிப்படையான இயக்கமாகவும், நம் உளவியல் இயக்கங்களின் தொகுப்பு சமூக மனமாகவும் வெளிப்படுகிறது. நாம் வெளிப்படையாக எத்தகைய பகட்டுடன் அல்லது எளிமையுடன் இருந்தாலும் நம் உளவியல் இயக்கங்களே .உண்மையான நம் தரத்தை சுட்டுவது போல, ஒரு சமூகம் வெளிப்படையாக எத்தகைய முன்னேற்றத்துடன் அல்லது பழந்தன்மையுடன் இருந்தாலும், அந்த சமூக மனதின் இயல்பே அந்த சமூகத்தின் உண்மையான இயல்பை குறிக்கிறது. ஒரு சமூகத்தின் ஒவ்வொரு வெளிப்படையான இயக்கங்களுக்கும் காரணியான ஆழமான உளவியல் இயக்கம் ஒன்று நிச்சயமாக எப்போதும் இருக்கும். அந்த உளவியல் இயக்கத்தின் தன்மையே அந்த சமூகத்தின் உண்மையான தன்மையாகும். ஒரு உளவியல் இயக்கம் வெளிப்படையாக நல்லவிதமாக தோன்றும் இயக்கங்களை தோற்றுவித்தாலும், பல வெளிப்படையாக தெரியாத எதிர்மறை இயக்கங்களையும் தோற்றுவிக்க கூடும். வெளிப்படையாக தெரியும் நோய்க்கு அளிக்கபடும் மருந்து அந்த நோயை குணப்படுத்தினாலும் பக்க விளைவுகள் மூலம் வேறு பல நோய்களுக்கும் காரணமாக இருப்பது போல.

ஒரு தனிப்பட்ட மனிதரின் உளவியல் இயக்கங்கள் சமூகத்தில் வெளிப்படையான இயக்கங்களை உருவாக்க வேண்டுமென்றால், அந்த மனிதரின் சமூக உறவுகள் மிகவும் வலிமையாகவும் தீவிரமாகவும் இருந்தாக வேண்டும். அல்லது அந்த தனிப்பட்ட மனிதரின் உளவியல் இயக்கங்களை உள்வாங்கிக்கொண்ட மற்றொருவர் அத்தகைய வலிமையான மற்றும் தீவிரமான சமூக உறவுகளுடன் இருப்பதன் மூலம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். பெரும்பாலும் எதிர்மறையான இயக்கங்கள் எளிதில் சமூகத்தில் தாக்கத்தை ஏறுபடுத்தும். ஏனெனில் எதிர்மறையான இயக்கங்கள் பெரும்பாலும் லொகீக தேவைகள் சார்ந்தே இருப்பதால் சமூகத்தின் பெரும்பான்மையினரான லொகீக மனிதர்கள் மூலம் எளிதில் சமூக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு சமூகத்தின் உறுப்பினர்களான ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமான உளவியல் இயல்புகளை உடையவர்கள். ஆனாலும் தங்கள் வெளிப்படையான இயக்கங்களை தங்கள் சமூக உறவுகளின் இயல்புகளின் படி ஒரு சமரச புள்ளியை நோக்கி அமைத்திருப்பார்கள். அந்த சமரச புள்ளியை நோக்கிய இயக்கமே சமூக இயக்கமாக தோற்றமளிக்கிறது. தனிப்பட்ட மனிதர்களின் உளவியல் இயக்கங்கள் சமரச புள்ளியை தொடர்ந்து மாற்ற முயற்சி செய்து கொண்டே இருக்கும். வலிமையான, தீவிரமான உறவுகளை உடைய ஒருவர் அத்தகைய முயற்சியை வெளிப்படுத்தும்போது சமரச புள்ளி இயல்பாகவே ஒரு புதிய இடத்தை நோக்கி நகர தொடங்கும். அதுவே சமூகத்தின் வெளிப்படையான மாறுதல். சாதாரண மனிதர்கள் போதுமான அளவு தீவிரம் இல்லாமல் சமரச புள்ளியை மாற்ற முயலும்போது பெரும்பாலும் ஏமாற்றத்தையே அடைவார்கள். இதுவே நம்மில் பெரும்பாலானவர்கள் நாம் வாழும் சமூகத்தின் மீது ஒருவகையான கசப்புணர்வை அடைந்திருப்பதன் காரணம்.

நாம் சமூக பிரக்ஞ்சை உடையவர்களாக இருந்தால், நேர்மறையன மாறுதல்களுக்காக, தேவைப்படும் இடங்களில், சமூகத்தின் வெளிப்படையான இயக்கங்களின் சமரச புள்ளியிலிருந்து விலக முயற்சிப்போம். அத்தகைய முயற்சி பெரும்பாலும் லொகீகம் சார்ந்த சமூகத்திலிருந்து நிராகரிப்பையே பெற்று தரும். இருந்தாலும், நம் செயல்பாடுகளில் தீவிரம் உடையவர்களாக நாம் இருந்தால், சமரசபுள்ளியிலிருந்தான நமது விலகல், அந்த சமரச புள்ளியையே நம் இயக்கத்தை நோக்கி வரச்செய்யும். அதுவே சமூகத்திற்கு நம்மால் செய்ய முடிந்த பெரும் பங்களிப்பு. ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் இயற்கையிலேயே அத்தனை தீவிரமானவர்கள் அல்ல. ஆனாலும் நமது குறைந்தபட்ச தீவிரம் தற்போதைய சமரசப்புள்ளியை நேர்மறையான இயக்கங்களுக்காக, அந்த சமரசபுள்ளியை அசைக்க முடியாவிட்டாலும், நிராகரிக்கும் அளவுக்காவது இருந்தால், அதுவே சாமானியமான மனிதர்களாக சமூகத்திற்கான நமது பங்களிப்பாக இருக்கும்.


செயலில் தீவிரம் உடைய, சமூகத்தை மாற்ற துடிக்கும் செயல்பாட்டாளர்களை பெரும்பாலும் நாம் எல்லா சமூகங்களிலும் காணலாம். துரதிர்ஷ்டவசமாக அந்த செயல்பாட்டாளர்கள் அவர்களையும் அவர்கள் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்பவர்களை மட்டுமே அவர்களின் சமூகம் என்று வரையறுப்பதன் மூலம் முழுமையான சமூக பிரக்ஞ்சையை இழக்கிறார்கள். இதன் மூலம் பெரும்பாலும் அவர்களின் தீவிரமான செயல்பாடுகள் சமூகத்தில் எதிர்மறையாக வெளிப்பட்டு அவர்கள் தீவிரவாதிகள் என்னும் குறுகிய, எதிர்மறையான வட்டத்திற்குள் அகப்பட்டு கொள்கிறார்கள். ஏனெனில் சமூகம் என்பது அவர்களையும் அவர்கள் கொள்கைகளையும் மட்டும் ஏற்றுக்கொண்ட ஒன்று அல்ல. சமூகத்தில் எண்ணற்ற உறுப்பினர்களும் எண்ணற்ற கொள்கைகளும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆம் தீவிர இயக்கங்களை உடைய போராளிகள் மாற்ற வேண்டியது சமூகத்தின் வெளிப்படையான இயக்கத்தை அல்ல. அந்த வெளிப்படையான இயக்கத்திற்கு காரணமான உளவியல் இயக்கத்தையும் கருத்தியல் இயக்கத்தையுமே. தீவிரமான கருத்தியல் இயக்கத்தின் மூலம் உளவியல் இயக்கத்தையே மாற்றியமைக்க முடியலாம் - அதன் மூலம் வெளிப்படையான சமூக இயக்கத்தையும்!

blog.change@gmail.com

Saturday, June 15, 2013

சமூகத்தில் தனி மனித பங்களிப்பு

சமூகம் என்பது தனி மனிதர்கள் தங்களுக்குள் கொண்டுள்ள உறவுகளின் தொகுப்பு. தனிமனிதர்கள் தங்கள் வாழ்க்கையை எளிமையாக்கிக்கொள்ள பிற மனிதர்களுடன் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவம், கருத்தியல் ரீதியாகவும் உறவாட வேண்டியுள்ளது. இந்த உறவுகள், மிகவும் சிக்கலான வலைபின்னல் போல மற்ற மனிதர்களின் உறவுகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இந்த உறவுகளின் தொகுப்பே சமூகம். ஆகவே தனி மனித செயல்பாடுகள் மற்றும் சிந்தனைகளின் தொகுப்பு, சமூகத்தின் செயல்பாடுகளாகவும் சிந்தனைகளாகவும் முழுமை கொள்கிறது. தனிமனிதன் மற்ற மனிதர்களுடன் கொண்டுள்ள உறவுகளின் உறுதிக்கேற்ப அந்த மனிதனின் செயல்பாடுகளும் சிந்தனைகளும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

நாம் ஒவ்வொருவரும் சமூகத்தின் சிக்கலான வலைப்பின்னலில் ஒரு சந்திப்பு புள்ளி (knot). ஒரு வலைப்பின்னலில் ஒவ்வொரு சந்திப்பு புள்ளியின் தரமும், உறுதியும் அந்த வலைப்பின்னலின் தரத்தையும் உறுதியையும் முடிவு செய்கிறது. ஆக நம் வாழ்வின் தரமும், இயல்பும் நாம் வாழும் சமூகத்தின் தரத்தையும் இயல்பையும் முடிவு செய்கிறது. அதாவது, ஒரு சமூகத்தின் தரத்தையும் இயல்பையும் முடிவு செய்வது, நம்மைப்போன்ற சாதாரண மனிதர்களின் தரமும் இயல்புமே - சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதர்களும் சாதாரண மனிதர்களே. அந்த சதாரண மனிதர்கள் தங்களின் செயல்களில் கொண்டுள்ள ஈடுபாடு, அந்த  செயல்கள் எத்தகையதாக இருந்தாலும், அவர்களை மற்றவர்களிலிருந்து பிரித்து காட்டுகிறது.

சமூக அமைப்பில் வாழும் நாம், நமது சிந்தனை முறைகளையும் அடிப்படை இயல்புகளையும், அந்த சமூக அமைப்பில் நாம் கொண்டுள்ள உறவுகளிடமிருந்து, அந்த உறவுகளின் இயல்பையும், சிந்தனை முறைகளையும் சார்ந்தே பெற்றுக்கொள்கிறோம். எனவே நமது அடிப்படை இயல்பு, நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் இயல்பையே பெற்றிருக்கும் - நாம் பெற்ற அந்த சமூக இயல்பில், விழிப்புடன் நம்மால் நமக்குள் கொண்டு வரப்பட்ட மாற்றங்களை தவிர! நமது இயல்புகள், நம்மால் விழிப்புடன் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் உட்பட, நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் இயல்புகளாக, நாம் கொண்டுள்ள உறவுகள் மூலம் நிலைப்படுத்தப்படுகிறது. ஆம், நமது சமூக உறவுகளின் வலிமைக்கேற்ப, நம்மால் சமூகத்திற்கு அளிக்கப்பட்ட இயல்புகள் சமூகத்தில் வெளிப்படையான மாறுதல்களை உருவாக்கலாம். ஒருவேளை நம் சமூக உறவுகள் வலிமையற்றவையாக இருந்தால், சமூகத்தின் இயல்பில் நம்மால் கொண்டு வரப்படும் மாற்றங்கள் வெளிப்படையான சமூக மாற்றங்களை உருவாக்காமல் போகலாம். ஆனாலும் அந்த சமூகத்தின் உள்இயல்பில் சிறு சலனங்களை ஏற்படுத்தி, இன்னொரு வலிமையான சமூக உறவுகளை உடைய தனிமனிதர் மூலம் வெளிப்படையான சமூக மாற்றங்களை ஏற்படுத்த முடியலாம்.

ஏன் சமூகம் மாற வேண்டும்? உலகம் என்பது ஒரு நிலையான இருப்பு அல்ல. அது நிகழ்வுகளின் தொகுப்பு. நிகழ்வு என்பதே மாற்றத்தின் அடிப்படை. நிகழ்வின் மூலம் ஒன்று மற்றொன்றாக மாறுகிறது. அதாவது, உலகம் என்பது ஓயாது மாறிக்கொண்டிருக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு. அந்த உலகின் சிறு பகுதியான மனிதர்களும், மனிதர்களின் உறவுகளால் ஆன சமூக அமைப்பும், உலக நிகழ்வுகளின் பகுதியான சிறு நிகழ்வாகவே இருக்கும். அல்லது, மனிதர்களும் அந்த மனிதர்களால் உருவாக்கப்பட்ட சமூகமும் மாறிக்கொண்டு மட்டுமே இருக்க முடியும். எனவே சமூகம் ஏன் மாற வேண்டும் என்னும் கேள்வி எழுவதற்கான சாத்தியங்களே இல்லை - மாறிக்கொண்டு இருப்பதே அதன் இயல்பு.

ஆம், தனிமனிதர்களாகிய நம் ஒவ்வொரு சிந்தனையும்,ஒவ்வொரு மன இயக்கங்களும், ஒவ்வொரு செயல்களும், நாம் எத்தகைய சமூக உறவுகளை கொண்டவர்களாக இருந்தாலும், நாம் சார்ந்திருக்கும் சமூகத்தில் ஓயாத சலனத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். ஒரு ஆரோக்கியமான சமூக அமைப்பில், தனிமனிதர்களால் ஏற்படுத்தப்படும் இந்த சலனங்கள், அந்த சமூகத்தை அதன் அடுத்த உயர்ந்த கட்டத்தை நோக்கி நகர்த்திக்கொண்டே இருக்கும். எனவே, நம் சமூகம் அதன் அடுத்த உயரிய நிலையை நோக்கி நகர்கிறதா இல்லையா என்பது, தனி மனதர்களாகிய நம் ஒவ்வொருவரின் சிந்தனையையும் செயல்பாடுகளையும் பொறுத்தே அமைகிறது. அல்லது தனி மனிதர்களாகிய நாம், செயல் ரீதியாகவும் சிந்தனை ரீதியாகவும் மனித பிறவிக்கு சாத்தியமான அடுத்த உயர்ந்த நிலையை நோக்கி செல்கிறோமா இல்லையா எனபதே, நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கான சாத்தியங்களை நமக்கு கூறுகிறது.

சமூக அமைப்பின் மூலமே பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால் நம் முன்னோர் அடைந்த நாகரீகம் மற்றும் ஞானத்தின் சிறு துளியாவது இன்று நம்மை அடைந்திருக்கிறது. இன்று நாம் அடையும் நாகரீகம் அல்லது அநாகரீகம், ஞானம் அல்லது அஞ்ஞானம், நம் அடுத்த சந்ததியினரை மட்டுமல்லாது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் வரும் சந்ததியினருக்கும் சென்று சேரும். உண்மையில் நம் குழந்தைகள் மீது அன்புடையவர்களாக இருந்தால், சமூகத்திலிருந்து எந்த எதிர்மறை இயல்புகளையும் நம் குழந்தைகள் அடைவதை விரும்ப மாட்டோம். அல்லது நமது எதிர்மறை இயல்புகள் சமூக இயல்புகளாக உருபெற்று நம் குழந்தைகளையும் அவர்கள் குழந்தைகளையும் அடைவதையும் விரும்ப மாட்டோம். மேலும் நாம் வாழும் சமூகத்தின் மீது அக்கறை உடையவர்களாக இருந்தால், நமது எண்ணங்களும் செயல்களும் எவ்வாறு சமூகத்தின் எண்ணங்களாகவும் செயல்களாகவும் உருப்பெறுகிறது என்பதை நிச்சயமாக நாம் அறிந்திருக்க வேண்டும். அந்த அறிவை நாம் அடைந்தால், ஒரு சமூக பிரக்ஞ்சை உள்ள மனிதரை போலன்றி வேறு எந்த விதமாகவும் நம்மால் வாழ முடியாது.

இன்று நாம் அடைந்தவை என பெருமிதம் கொள்ளும் அனைத்தையும், நாம் வாழும் சமூகத்திலிருந்து பெற்ற அடிப்படைகளிலிருந்து மட்டுமே அடைந்துள்ளோம். அவற்றை அடைவதற்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் நம் உழைப்பு இருந்துள்ளது. ஆனாலும் அந்த உழைப்பும் சமூகத்திலிருந்து பெற்ற அறிவு, ஆர்வம், உந்துதல் ஆகியவற்றின் மூலம் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. நாம் நன்றியுயுணர்ச்சி உடையவர்களாக இருந்தால் நம் வாழ்க்கையை கட்டமைக்க உதவிய சமூகத்திற்கு மிகச்சில நேர்மறையான பங்களிப்பையாவது அளித்தாக வேண்டும். தனிமனித அளவில் நேர்மறை எதிர்மறை என ஒன்று இல்லாமல் இருந்தாலும், உறவுகளின் தொகுப்பு என்னும் தளத்தில் அந்த பிரிவினை இருந்தாக வேண்டும். அதாவது சமூகத்தை அடுத்த உயர்நிலைக்கு எடுத்துசெல்லும் எந்த பங்களிப்பும் நேர்மறையான பங்களிப்பே. உண்மையில் நாம் சமூகம் குறித்த விழிப்புணர்வுடன் இருந்தால், சமூகத்திடமிருந்து நாம் பெற்றவற்றிற்கு நன்றியுணர்வுடன் இருந்தால், எத்தகைய செயல்கள் சமூகத்தை அடுத்த உயர் நிலைக்கு எடுத்து செல்லும் என்பதை யாரும் கூறாமலே நாம் அறிந்திருப்போம். அதற்கு தேவையான உணர்வு நிலையில் இருந்தால், நாம் அறிந்திருந்தாலும் இல்லாவிடிலும் உண்மையில் நாம் ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்போம்

blog.change@gmail.com

Friday, April 5, 2013

நம்பிக்கை (Trust)


ஆன்மீக சாதகர்களின் கடைசி ஆயுதம், அவர்கள் எந்த வகையான ஆன்மீக சாதனைகளில் ஈடுட்டிருந்தாலும், பெரும்பாலும் நம்பிக்கையாகவே (Trust) இருக்க கூடும். அதே நேரத்தில் ஆன்மீக சாதகர்களை மாயையில்(Illusion), மாய மனத்தோற்றத்தில்(Hallucination) தங்கள் ஆன்மீகத்தை இழக்க செய்வதும் நம்பிக்கை என்னும் (Belief) இந்த ஆயுதமே. எனவே உண்மையில் நமக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருந்தால், நம்பிக்கையின் இயல்பை அறிந்திருக்க வேண்டியது மிக அவசியம். பெரும்பாலும் நாம் கொண்டிருக்கும் ஆன்மீக நம்பிக்கை எத்தகையது என்பதையும் ஆன்மீக நம்பிக்கை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருக்கும் கட்டுரை ஓரளவுக்கு நம்மை உணர வைக்கலாம்

நம் தர்க்க புத்தியால் கடக்கக்கூடிய தூரம், நம் மன ஆழங்களுடனும், பிரபஞ்ச இயக்கத்தின் எல்லையின்மையுடனும் ஒப்பிடும்போது மிக மிக சிறிய தூரம் மட்டுமே. ஒப்பிடும்போது கணக்கில் கொள்ளதக்க அளவு கூட இல்லாத அந்த மிகசிறிய அறிதலுக்காக மட்டுமே நம் தர்க்க புத்தி நமக்கு தேவைப்படுகிறது. மறு பிறவி கோட்பாடு உண்மையாக இருந்தால், நாம் கடந்து வந்திருக்கும் எண்ணற்ற பிறவிகள், அந்த சிறு தூரத்தை நம் பிரக்ஞ்சையால் கடக்க இயலாத காரணத்தினால் மட்டுமே.

நம்பிக்கை எவ்வாறு நமக்குள் உருவெடுக்கிறது? ஒவ்வொரு மனிதப்பிறவியும் இங்கு தோன்றிய பின், புலன்களால் உலகத்தை அளக்கத்தொடங்குகிறது. உலகம் என்பது ஒரு தொடர் இயக்கம். இங்கு நிலையானது எதுவும் இல்லை. அனைத்தும் கணத்துக்கு கணம் மாறிக்கொண்டிருக்கும் நிலையின்மையில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலாது. எனவே நம் வாழ்வு இயங்கும் தளத்தில், நம் வாழ்க்கையை சார்ந்த(relatively) நிலையானதை புலன்கள் மூலம் மனித மனம் அடையத்தொடங்குகிறது. ஆனால் நம் வாழ்வு இயங்கும் தளத்திலும் எண்ணற்ற நிலையற்ற இயக்கங்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றன. இப்போது நிலையான இயக்கங்களையும் நிலையற்ற இயக்கங்களையும் தொடர்பு படுத்தி உணர வேண்டியது மனித மனதின் தவிர்க்க முடியாத தேவையாகிறது. அதாவது மனித மனம் வாழ்க்கை நிகழும் தளத்தில் நிலையானவற்றை கொண்டு, அந்த தளத்தில் நிலையற்றவற்றை அளவிட்டு, அந்த இயக்கங்களை வாழ்க்கையின் நிகழ்விற்கு தேவைப்படும் இடங்களில் துணையாக்குகிறது. இந்த அளவிடலுக்கு பயன்படுத்தப்படும் உபகரணமே நம்பிக்கை. இந்த நம்பிக்கை, நாம் முற்றிலும் அறிந்தவற்றிலிருந்து, அதற்கு தொடர்புடைய நம்மால் அறிய முடியாதவற்றை குறித்து அறியும் முயற்சி மட்டுமே.

மனித மனம் எல்லையற்றது. நம்பிக்கையின் மூலம் நம் வாழ்க்கைக்கு மிகத்தேவையான நிலையற்ற இயக்கங்களை அளவிட்ட நம் மனம், அதே அளவுகோலின் மூலம் நம் வாழ்க்கையை கடந்த அதீத இயக்கங்களையும் அளவிட முயல்கிறது. அவ்வாறு அளவிடமுடியாதவற்றை நம் மனதின் மூலம் அளவிட முயலும்போது நம்பிக்கை என்னும் இயக்கம் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்று விடுகிறது.

நம் மனம் எங்கெங்கு கேள்விகள் எழுப்புகிறதோ அங்கெல்லாம் நம்பிக்கையின் மூலம் விடை பெற்று கேள்விகளை கடந்து செல்கிறோம். ஆனால் அன்றாட வாழ்க்கையில் நாம் நம்பிக்கையின் மூலம் பெற்ற விடைகள், அன்றாட செயல் முறை தளத்தில் பெரும்பாலும் ஒத்திசைவுடன் செல்வதில்லை. இங்குதான் நம் உண்மையான பிரச்சினை தொடங்குகிறது. நம் நம்பிக்கை அன்றாட செயல் தளத்தில் தோல்வியுறும்போது, நம் நம்பிக்கையுடன் நம்மை நம் அகங்காரம் மூலம் பிணைத்திருந்தால், அந்த நம்பிக்கையே நம் அடையாளமாக மாறி இருந்தால், அந்த தோல்வியை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அன்றாட செயல் தளத்தின இயக்கங்கள் நம் நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ போராட தொடங்குவோம். அந்த நம்பிக்கையால் உருவாக்கப்பட்ட போராட்டம், அன்றாட செயல் தளத்தில் பேரழிவுகளை ஏற்படுத்த கூடும். நம் செயல்கள் சமூகத்தையும் பாதிக்கும் நிலையில் நாம் இருந்தால், அந்த நம்பிக்கையின் விளைவுகள் சமூக அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். அல்லது நம் இயங்கு தளத்தில், தனிமனித அளவிலோ அல்லது குடும்ப அளவிலோ அல்லது சிறு குழு அளவிலோ அந்த பாதிப்பு நிகழலாம். உலகில் நடந்திருக்கும், நடந்துகொண்டிருக்கும் பேரழிவுகளுக்கும், தீவிரவாத செயல்களுக்கும் தனி மனித அல்லது மனித குழுக்களின் நம்பிக்கைகளே காரணம். நாமும் நம்பிக்கையை செயல் தளத்தில் அடிப்படையாக கொண்டவர்கள் என்றால் நமக்கும் அந்த பேரழிவுகளே ஏற்படுத்தியவர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, செயல்திறனின் சமூகத்தை பாதிக்கும் அம்சம் மட்டும் - அவர்கள் அளவுக்கு செயல் தீவிரம் உடையவர்களாக இருந்தால், நாமும் தீவிரவாதிகளே!

தர்க்கத்தை, தத்துவத்தை இழந்த நம்பிக்கைகளே உலகின் பேரழிவுகளை நிகழ்த்தியிருக்கின்றன. அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் அழிவுகளை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. நம் நம்பிக்கைகளும் ஆன்மீக தளத்திலிருந்து விலகும்போது நம் ஆளுமையின் வீச்சிற்கேற்ப அழிவுகளை நம்மைச்சுற்றிலும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். அத்தகைய நம்பிக்கையுனுள் நாம் அமிழ்ந்திருக்கும்போது நமது மாய மனக்காட்சிகள், அந்த அழிவுகளையும் நம் முன்னேற்றமாகவே கண்டு கொண்டிருக்கும் - அறிந்து கொள்ள முடியாத மாய வலை! நம்பிக்கையின் முன்முடிவுகளையே தர்க்கமாக கொண்டிருக்கும் பேரழிவு!

ஆனால் நம்பிக்கையே ஆன்மீக சாதகனின் கடைசி ஆயுதம்! இந்த நம்பிக்கையே சரணாகதி. நம்மை விட பெரிய ஒன்றை, நம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றை, நம் அறிதலுக்கு அப்பாற்பட்ட ஒன்றை நம்பாமல் அத்தகைய ஒன்றிடம் நம்மால் சரணாகதி அடைய முடியாது. இங்கு சரணாகதி என்பதன் சரியான அர்த்தத்தை புரிந்து கொள்வது மிக அவசியம். நாம் ஒன்றிடம் சரண்டையும்போது, நம் அகங்காரத்தை, சுயத்தை முழுவதும் இழந்து விடுகிறோம். அந்த நிலையில் கடந்த காலத்தின் கவலைகளும் எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகளும் நம்மிடமிருந்து முழுமையாக மறைந்து விடும். அதாவது எது நடந்தததோ அந்த செயலில் நம் பங்கை மட்டும் நாம் செய்திருப்போம். ஆனால் நடந்தது நமக்கு அப்பாற்பட்ட, நாம் சரணடைந்த ஒன்றினால் மட்டுமே நடந்தது. எது நடைபெறுமோ அவற்றில் நம் பங்களிப்பை மட்டும் வழங்குவோம். அந்த செயல் நமக்கு அப்பாற்பட்ட விதிகளின் அடிப்படையில் எவ்வாறு நடைபெற வேண்டுமோ அவ்வாறு நடை பெறும். இத்தகைய சரணாகதி மனநிலையை அளிக்கும் நம்பிக்கையே ஆன்மீக நம்பிக்கை. மற்ற எல்லா நம்பிக்கைகளும் நம் மனம் எழுப்பும் வினாக்களிலிருந்து தப்பிச்செல்வதற்கு நாம் பயன்படுத்தும் கருவி மட்டுமே. இந்த நம்பிக்கைகள் அன்றாட செயல்களின் அலைக்கழிப்பினால் மனநிலை பிறழ்வதிலிருந்து தப்பிப்பதற்கு மட்டுமே உதவலாம். ஆம், மிகவும் மெல்லிய, எளிதில் உடையக்கூடிய மனநிலையை உடையவர்களுக்கு இத்தகைய நம்பிக்கைகள் மிகவும் தேவை - மனப்பிறழ்வு நிலையை அடையாமல் நம் வாழ்க்கையை தொடர.

துரதிருக்ஷ்டவசமாக நம்மில் பெரும்பாலானவர்கள் இத்தகைய நம்பிக்கைகள் தேவைப்படும் அளவுக்கு மெல்லிய மனதுடன் இருக்கிறோம் - புற உலகில் எத்தனை மன வலிமை படைத்தவர்களாக நம்மை காட்டிக்கொண்டிருந்தாலும்! அல்லது அத்தகைய மெல்லிய மனம் படைத்த சமூகம் அளித்த நம்பிக்கைகளை இழக்க இயலாமல் தடுமாறிகொண்டிருக்கிறோம். நம் மனம் தத்துவத்தின் பக்கம் திரும்புவதன் மூலம் மட்டுமே இத்தகைய நம்பிக்கைகள் தேவைப்படாத தளத்தை அடைய முடியும். அந்த தளத்தில் சென்ற பின் மட்டுமே ஆன்மீக சரணாகதிக்கு தேவையான எளிய மனநிலையை அடையமுடியும். அந்த எளிய மனநிலையில் நம் அகங்காரத்தை, சுயத்தை இழந்து முழுமுதல் உண்மையின் மேல் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் அந்த உண்மையிடம் சரணாகதி அடைய இயலக்கூடும். அதன் பின் நாம் அடைவதற்கு எதுவம் இல்லை!

blog.change@gmail.com

Tuesday, April 2, 2013

தத்துவம்


எதற்காக தத்துவம்? எந்த துறையை எடுத்தாலும் தத்துவமே பிரதானமாக கருதப்படுகிறது. எதற்காக? இங்கு நாம் கவனத்தில் கொள்வது ஆன்மீகம் சார்ந்த தத்துவங்களை மட்டுமே. ஆன்மீகத்தில் தத்துவத்துக்குதான் முக்கியமான இடமா? ஆம் எனில் ஆன்மீகத்தின் தத்துவம் தவிர்த்த மற்ற அம்சங்கள் எதற்காக? இல்லை எனில் ஆன்மீகத்தில் தத்துவத்தின் பங்கு என்ன? ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ள அனைவருக்கும் தத்துவ அறிமுகம் தேவையா? இல்லை எனில் எண்ணிலடங்கா ஆன்மீக தத்துவங்கள் யாருக்காக? கடைசியாக, நாம் ஆன்மீக பாதையில் செல்ல விரும்பினால் நமக்கு தத்துவங்கள் தேவையா? தேவை எனில் முடிவில்லாத தத்துவ கடலில் எவை நமக்கானவை?

இந்த விசாரணைகளை தொடங்குவதற்கு முன், எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் தர்க்கம் குறித்து கூறிய, கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வார்த்தைகள் நமக்கு உதவலாம்.


"நுண்ணுணர்வாலான ஆழ்தளத்துக்குச் செல்லும்போது மனம் படிமங்களைக் கட்டற்றுப் பெருக்கிக் கொள்கிறது. அதையும் தர்க்கம் மூலம் எல்லைக்குள் நிறுத்த முயல்கிறேன். ஆகதர்க்கம் என்னைப் பொறுத்தவரை ஒரு கட்டுப்படுத்தும் கூறு மட்டுமே."
"நான் என்ன சொல்கிறேன் என்பது ஓரளவு தியானம் பழகியவர்களுக்குப் புரியும். தியான மரபுகள் தொடர்ந்து ஆழ்தலையும் அமைதலையும்தான் வலியுறுத்துகின்றன. தியானம் மூலம் அடையப்படும் அனைத்துமே தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட தளத்தில்தான் உள்ளன. அவற்றைப் பகிர்வதுகூட இயல்வதல்ல. ஆனால் நெடுங்காலம் முதல் எல்லா தியான மரபுகளிலும் நுண்ணிய தர்க்கமும் தேவைப்பட்டிருக்கிறது. தியானத்தில் அமர்ந்ததுமே மனம் கற்பனைகளில் திசையிழந்து தெறிக்கிறது. எதிர் எதிரே வைக்கப்பட்ட ஆடிகள் போல பிம்பங்களைப் பெருக்கிக் கொள்கிறது. சிலசமயம் பித்துப் பிடிக்கும் அளவுக்கு உணர்ச்சிவேகம் ஏற்படுகிறது. இப்படி ஒரு கொந்தளிப்பு உருவாகும்போது அதை நெறிப்படுத்த தர்க்கம் தேவைப்படுகிறது."
"உதாரணமாக ஜெ. கிருஷ்ணமூர்த்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் சொல்வதை ஆழ்ந்து அனுபவபூர்வமாக உள்வாங்காத ஒருவருக்கு, அவர் தர்க்கங்களைக் கட்டமைத்தபடியே செல்வதாகத் தோன்றும். வெற்று தர்க்கமாகக்கூட சிலருக்குப் படலாம். ஆனால் அவர் தொடர்ந்து தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றையே முன்வைக்கிறார். அங்கே செல்லும் பாதையை நமக்கு வகுத்தளிப்பதில்லை. அதை நாமே கண்டடையவேண்டும் என்பதே அவரது எண்ணம். ஆனால் பாதையின் இருபக்கக் கரைகளையும் வகுத்துத் தருகிறார். அதற்குத்தான் தர்க்கத்தைப் பயன்படுத்துகிறார்."
"மெய்ஞானத்தின் திண்ணையில் பசித்த காவல்நாய் உள்ளது. நமது போத மனம்தான் அது. அதற்கு சில இறைச்சித்துண்டுகளைப் போட்டுவிட்டு உள்ளே நுழைகிறோம். அந்த இறைச்சித்துண்டுதான் தர்க்கம்."
ஆம் தர்க்கம் ஒரு கருவி. நம் போத மனதை, பிரக்ஞ்சையை அமைதிப்படுத்தும் ஒரு கருவி. தர்க்கம் அமர்ந்திருப்பது தத்துவம் என்னும் இருக்கையில். ஆக தத்துவ அறிவு நம் மனதை அமைதிப்படுத்தவே தேவைப்படுகிறது. மனதை அமைதிப்படுத்த வேறு வழிகளும் உள்ளன. உதாரணமாக நம்பிக்கை. 
ஆம் நம்பிக்கையும் நம் மனதை அமைதிப்படுத்தும். அவ்வாறு நம்பிக்கையின் மூலம் அடைந்த மன அமைதி ஆன்மீகத்தை நோக்கி நம்மை நகர வைக்கும் மன அமைதியா அல்லது ஆன்மீகத்திலிருந்து நம்மை விலக்கி வைக்கும் மன அமைதி போல தோற்றமளிக்கும் மனதின் செயலாற்றும் தகுதியை இழந்த நிலையா என்பது அந்த நம்பிக்கையின் தரத்தை பொறுத்தது. நாம் நம்பிக்கையை ஆதாரமாக கொண்டவர்கள் என்றால், அந்த நம்பிக்கையின் தரத்தை நாம் அறிந்திருக்க வேண்டும். அந்த அறிவிற்காகவேனும் குறைந்த பட்ச தர்க்க அறிவும் தர்க்கத்தின் அடிப்படையான தத்துவ அறிவும் நாம் பெற்றிருக்க வேண்டும்.
எண்ணற்ற தத்துவங்கள் ஆன்மீக தளங்களில் புழங்குகிறது. ஒவ்வொரு தத்துவமும் ஒவ்வொரு முறையில் ஆன்மீகத்தை அணுகுகின்றன். ஒவ்வொரு சமூகமும் அந்த சமூகத்துக்கான தத்துவங்களை கொண்டுள்ளன - அந்த சமூக உறுப்பினர்கள் அறிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும். எந்த ஒரு சமூகத்தின், மதத்தின் அல்லது மதம் சமூகம் சாராத ஆன்மீக தத்துவங்களை நோக்கினாலும் அவற்றின் அடிப்படை நோக்கம் ஒன்றாகவே இருக்க முடியும் - மனித முழுமையை அடைவது. எல்லா தத்துவங்களின் நோக்கம் ஒன்றாக இருந்தாலும் அவற்றின் கூறும் முறை முற்றிலும் வேறுபட்டுள்ளது. அந்த கூறும் முறை, அந்த தத்துவ கோட்பாட்டை அடைந்த மனங்களின் சமூக பின்னணி, எந்ந சமூகத்தை நோக்கி கூறப்படுகிறதோ அந்த சமூகத்தின் சராசரி மன அமைப்பு ஆகியவற்றை சார்ந்து இருக்கும். எனவே ஒரு ஆன்மீகவாதியால் எந்த ஒரு தத்துவத்தையும்  நிராகரிக்க இயலாது. அவ்வாறு நிராகரிப்போமானால் ஆன்மீகத்தின் எந்த சாத்தியங்களையும் நம்மால் அடைய முடியாது.
ஆனால் சமூகத்தில் புழங்கும் அனைத்து தத்துவங்களும் நமக்கான தத்துவங்களாகவும் இருக்க முடியாது. ஆம் நமக்கு தேவையான தத்துவம் நம் மனதில் எழும்பும் கேள்விகளை பொறுத்தது. அந்த கேள்விகளின் தளத்தை பொறுத்தது. அதாவது நம் இயல்பை பொறுத்தது. நம் மனதின் அலைக்களிப்புக்கான கேள்விகள் முடிவடையும்போது நாம் தத்துவங்களின் தேவைகளையும் கடந்திருப்போம். அந்த நிலையில் மனம் அதன் முழு சாத்தியத்தை அடைந்திருக்கும் அல்லது அடைவதற்கான தகுதியை அடைந்திருக்கும். அந்த நிலையில் நமக்கு தத்துவங்களுக்கும் வெற்று வார்த்தைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனெனில் நம் மனதை ஆன்மீக வழியில் செலுத்த அங்கு எந்த தர்க்கமும் தேவை இல்லை.
ஆனால் வெற்று நம்பிக்கைகளும் நம்மை தத்துவங்களையும் அதன் வெளிப்பாடான தர்க்கத்தையும் நிராகரிக்க வைக்கலாம். ஆக நாம் நம்பிக்கையின் அடிப்படையில் தத்துவ கோட்பாடுகளை நிராகரிப்போமானால், நாம் வெற்று நம்பிக்கையினால் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தலாம். ஆனால் அத்தகைய மன நிலையில் துரதிர்க்ஷ்டவசமாக நமது நம்பிக்கை, வெற்று நம்பிக்கை என்பதை அறியும் தகுதியையும் இழந்திருப்போம். எந்த தத்துவம் நம் மனதை அலைக்கழிக்கும் கேள்விகளை எழுப்பவில்லையோ அந்த தத்துவங்கள் நமக்கு, நம் மன இயல்புக்கு தேவையில்லாத தத்துவங்கள். எனவே அவற்றை நாம் பயில வேண்டிய தேவை இல்லை.
தத்துவங்களின் தேவை நமக்கு உண்டா இல்லையா என்பது நம் மனதில் நமது வாழ்க்கை குறித்த, நமது இருப்பு குறித்த, நமது முழுமை குறித்த கேள்விகள் நம் மனதில் எழுகின்றனவா இல்லையா என்பதை பொறுத்தது. அவ்வாறு கேள்விகள் எழுந்தால் நாம் ஆன்மீக வழியில் இருக்கிறோம் என்பது உறுதியாகிவிட்டது. அந்த கேள்விகள் எழும்போது அவற்றை எதிர்கொள்ள நம் முன் இருக்கும் முதல் மற்றும் எளிதான கருவி, நாம் சார்ந்திருக்கும் சமூகம் நமக்களித்திருக்கும் நம்பிக்கைகள். நாம் எளியவர்களாக இருந்தால், எளிய மன நிலையில் இருந்தால், நம் சமூகம் நமக்களித்திருக்கும் நம்பிக்கைகளே நம் ஆன்மீக உச்சத்தை அடைய போதுமானவை.
துரதிர்க்ஷ்டவசமாக நாம் எவருமே எளியவர்களாக இல்லை. நம் சமூகம் நமக்கு ஆன்மீகம் சார்ந்த நம்பிக்கைகளுடன் நம் வாழ்க்கை சார்ந்த போராட்டங்களையும் நமக்கு அளித்துள்ளது. அந்த வாழ்க்கை போராட்டத்தில் நம்மை ஈடுபடுத்துந்தோறும் நம் எளிமையை சிறுக சிறுக நாம் இழந்து கொண்டே வந்திருக்கிறோம். எனவே நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, நம் சமூகம் நமக்களித்திருக்கும் நம்பிக்கைகள் போதுமானதாக இல்லை. அந்த நம்பிக்கைகள் பெரும்பாலும் வாழ்க்கை போராட்டங்களை எதிர் கொள்ளாமல் அவற்றிலிருந்து தப்பி செல்லவே நாம் உபயோகப்படுத்துகிறோம். நம்பிக்கைகளோ அல்லது வேறு எவையோ நம்மை ஆன்மீக உச்சத்திற்கு எடுத்து செல்ல வேண்டுமெனில், நம்மை மீண்டும் (மனதளவில்) எளிமையானவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். இதற்காகவே தத்துவங்கள் நமக்கு தேவைப்படுகின்றன - நம் கேள்விகளுக்கு விடையளித்து, எல்லா விதமான மன தடைகளையும் விலக்கி, வாழ்க்கையை உள்ளவறே எதிர்கொள்ளும் எளிமையான மனதை அடைய! பசித்து வெறியுடன் இருக்கும் போத மனமாகிய காவல் நாயின் பசியை ஆற்றி மெய்ஞானத்தை அடைய!

blog.change@gmail.com

Saturday, March 23, 2013

மூன்றாவது கண்!


அது எங்கிருக்கிறது? யாரிடம் இருக்கிறது? எதைப்பார்க்க உதவுகிறது? அது நம்மால் புரிந்து கொள்ள இயலாததா? அல்லது தெய்வங்களுக்கு மட்டும் உரியதா அது? அதன் பயன் என்ன? ஆம், பல கேள்விகள். நம் உறைந்த மனதால் அறிய இயலாத கேள்விகள்.

நாம் அறிவோம், மனிதர்களாகிய நாம் ஆறு அறிவு படைத்தவர்கள். நமது முதல் ஐந்து அறிவுகளும், ஐந்து புலன்களுடன் நேரடியாக தொடர்புடையவை. ஐந்து புலன் அறிவுகளுடன் நம் மனதையும் நம்மால் அறிய முடியும். ஐந்து அறிவுகளுடன் தொடர்புடைய புலன் உறுப்புகள், உடலில் வெளிப்படையாக இருப்பது போல் ஆறாவது அறிவுக்கு அவ்வாறு தொடர்புடைய வெளிப்படையான புலன் உறுப்பு எதுவும் இல்லை. நம் மனதை மனதால் மட்டுமே அறிய முடியும். நம் மனதை அறிய, மனதை தவிர வேறு எந்த கருவிகளும் நம்மிடம் இல்லை - ஒளியை அறிய கண்களும், ஒலியை அறிய காதுகளும் இருப்பது போல்! ஆம் மனதை அறியும் நம் மனமே மூன்றாவது கண். நம் ஆறாவது அறிவை நிகழ்த்தும் கருவி. அதை கண் என குறிப்பது வெறும் அடையாளம் மட்டுமே. ஐந்து புலன்கள் வெளி உலகத்தை அறிவது போல், அந்த ஐந்து வகையான அறிதல்களையும் அக உலகத்தை நோக்கி நிகழ்த்தும், நம் மனதை நோக்கி நிகழ்த்தும், நம் மனமே மூன்றாவது கண்.

 எனில் அந்த மூன்றாவது கண் தெய்வங்களுடன் மட்டும் ஏன் தொடர்பு படுத்தப்பட்டிருக்கிறது? நாமும் நம் மனதை அறிந்து கொண்டுதான் இருக்கிறோம். எனில் நாம் மூன்றாவது கண்ணை அடைந்தவர்கள் அல்ல என ஏன் கூறப்படுகிறது? நம் மனதை உண்மையாக நாம் அறிந்து கொண்டிருக்கவில்லை. நம் மனதை குறித்து நாம் அறிந்துகொண்டிருப்பதெல்லாம் வெறும் மேலோட்டமான, நம் புற வாழ்க்கைக்கு தேவையான மிகச்சில இயக்கங்களை மட்டுமே. நம் மனதின் பிரம்மாண்டம் நாம் அறியாமலே நமக்குள் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதைவிட பெரிய மகா பிரம்மாண்டம் நம் மனதினுள் உறங்கிக்கொண்டிருக்கிறது. நம் மூன்றாவது கண் உபயோகத்தில் வரும்போது மட்டுமே நம் மனதில் உறைந்திருக்கும் மகாபிரம்மாண்டம் நம் அறிதலின்  எல்லைக்குள் வரும். அல்லது அந்த மகாபிரம்மாண்டம் நம் அறிதலில் நுழையும்போது மட்டுமே நம் மூன்றாவது கண் திறக்க தொடங்கும்
.
நம் அறிதலின் இயல்பை நாம் சற்று நோக்கினால், உண்மையில் நாம் புற உலகத்தை குறித்து எதையும் அறியவில்லை என்பதை அறியலாம். நாம் அறிவதெல்லாம் நம் புலன்களின்  வெளியுலக இயக்கம் நம் மனிதினில் ஏற்படுத்தும் சலனங்களை மட்டுமே. உதாரணமாக, நாம் ஒரு பொருளை நம் விழியால் காணும்போது, உண்மையில் நாம் அந்த பொருளை உள்ளது உள்ளவாறே காணவில்லை. அந்த பொருளின் பிம்பம், நம் பார்வையின் தன்மைக்கேற்ப, விழியின் உணரும் தன்மைக்கேற்ப நம் விழித்திரையின் உறுதிக்கேற்ப, விழித்திரையிலிருந்து மூளைக்கு பார்வையுணர்வை கொண்டு செல்லும் நரம்புகளின் உறுதிக்கேற்ப, இன்னும் நாம் அறிந்திராத சில அல்லது பல தூண்டுதல்களுக்கு ஏற்ப, அந்த பொருள் நம் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது. நாம் அந்த பொருளைக்குறித்து காண்பதெல்லாம் அந்த நேரத்தில் நம் மனதில் நிகழும், அந்த பொருளால் நம் மனதில் நிகழ்த்தப்படும் ஒரு சிறிய சலனத்தை மட்டுமே. நம் பிற புற உலக அறிதல்களும், இவ்வாறு புறப்பொருட்கள் நம் ஐம்புலன்களின் மூலம் நம் மனதில் ஏற்படுத்தும் சலனங்களை மட்டுமே.

மேலே கூறப்பட்டவற்றை ஏற்றுக்கொள்ள முடிந்தால், நம் அறிதல்கள் யாவும் நம் இயல்பிற்கேற்பவே இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள எந்த தடைகளும் இருக்காது. அதாவது புற உலகு என்பது நம் இயல்பிற்கேற்பவே அமைந்துள்ளது - நம்மைப்பொறுத்தவரை! ஏனெனில் புற உலகு என்பது நம் ஐம்புலன்களின் மூலம் நாம் அடைந்த அறிதல்களின் தொகுப்பே. இங்கு நுண்துகள் இயற்பியலின் (Quantum Physics)  கோபன்ஹேகன் விளக்கத்தை    (CopenanHagen Theory)  புரிந்து கொள்வது சற்று உபயோகமாக இருக்கலாம்.

The Copenhagen interpretation is one of the earliest and most commonly taught interpretations of quantum mechanics. It holds that quantum mechanics does not yield a description of an objective reality but deals only with probabilities of observing, or measuring, various aspects of energy quanta, entities which fit neither the classical idea of particles nor the classical idea of waves. According to the interpretation, the act of measurement causes the set of probabilities to immediately and randomly assume only one of the possible values. This feature of the mathematics is known as wavefunction collapse. The essential concepts of the interpretation were devised by Niels Bohr, Werner Heisenberg and others in the years 1924–27.

இதை நம் வார்த்தைகளில் கூறினால், எந்த ஒரு அறிதலும் அந்த அறியும் கணத்தில், அந்த அறிதலால் அடையக்கூடிய பல்வேறு சாத்தியங்களில் ஒன்றை மட்டுமே அறியும். ஆக நம் அறிதல்கள் யாவும் புற உலகம், நாம் அறியும் கணத்தில் நம் மனதில் ஏற்படுத்தும் சலனங்களை மட்டுமே. அல்லது நம் புற உலக அறிவு என்பது, புற உலகத்தால் இருக்க சாத்தியமான எண்ணற்ற சாத்தியக்கூறுகளில், நம் புலன்களின், மனதின் தகுதிக்கேற்ப, அந்த நேரத்தில் உள்ள ஒரு சாத்தியக்கூறு மாத்திரமே.

மீண்டும் நம் மூன்றாவது கண்ணிற்கு! தற்போதைய நம் மன நிலையில், நம் மனம் புற உலகத்தை நோக்கியே திரும்பியிருக்கிறது. அதாவது, நம் மனம், புற உலகைக்குறித்த நம் அறிதல்கள் நிகழ்ந்த கணத்தில் நம் மன சலனம் எவ்வாறு இருந்ததோ, அந்த சலனத்தில் உறைந்தும், ஆனால் வெளி உலகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்னும் மாயையில் விழுந்தும், ஒரு உறைநிலையில் இருந்து கொண்டிருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால் நம் மனம், அதன் நிகழ்வுகளை அறியாமல், ஒருவிதமான உறைநிலையை மாத்திரம் அறிந்து கொண்டிருக்கிறது. நாம் நம் மனதைக்குறித்து அறிவதெல்லாம் அந்த மனதின் ஒரு குறிப்பிட்ட உறைநிலையை மட்டுமே.
நம் மூன்றாவது கண் விழிப்படையும்போது, நாம் அறிவதெல்லாம் நம் மனசலனங்களை மட்டுமே என்னும் அறிதலுடன் நம் அறிதல் நிகழ்ந்துகொண்டிருக்கும். அத்தகைய அறிதல் நிகழும்போது, நாம் புற உலகத்தை அகத்தில் காணும்போது, புற உலகம் கடந்த கணத்தில் அல்லது காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதையோ அல்லது அடுத்த கணத்தில், எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் என்பதையோ நம் மனம் ஆராய தொடங்குவதில்லை. ஏனெனில், அத்தகைய அறிதலை அடைய தன்னால் சாத்தியமில்லை என்பதை, தன் இயலாமையை, நம் மனம் முழுவதுமாக அறிந்திருக்கும். கடந்த காலத்தையோ அல்லது எதிர்காலத்தையோ தன்னால் அடைய சாத்தியமில்லை என்பதை உணர்ந்த மனம், கடந்த கால நிகழ்விலோ அல்லது எதிர்கால எதிர்பார்ப்பிலோ உறைந்நிருக்காமல், நிகழ்காலத்தின் நிகழ்வுகளாக நிகழ்ந்துகொண்டிருக்கும் - மூன்றாவது கண்ணின் முழு விழிப்புநிலையுடன்!

எவ்வாறு நம் மனதின் புற உலக பார்வையை, அக உலகை நோக்கி திருப்புவது? ஒவ்வொரு மதங்களும், ஒவ்வொரு தத்துவங்களும், அவற்றின் இயல்புக்கேற்ப வேறு வேறு முறைகளை பரிந்துரைத்திருக்கலாம். அவற்றில் நம் இயல்பிற்கேற்ற ஒன்றை தேர்ந்தெடுத்து முழு ஈடுபாட்டுடன் விரும்பினால், அக உலகை நோக்கிய நம் பார்வையை திறப்பது அத்தனை கடினமான ஒன்றாக இருக்க முடியாது. அந்த ஈடுபாடு நம்முள் நிகழ, நம் தற்போதைய வாழ்க்கை முறையை கருத்தில் கொண்டால், பகுத்தறிவிற்குட்பட்ட சில ஆன்மீக அறிதல்கள் நம்முள் நிகழ்ந்தாக வேண்டும். அதன்பின் மாத்திரமே பகுத்தறிவைக்கடந்த ஆன்மீகத்தை நம்மால் தரிசிக்க முடியும்.

ஆம், நம் மதங்களையும், தத்துவங்களையும், குருமார்களையும் மனதின் முன் முடிவுகளுடன் ஏற்றுக்கொள்வதை விட்டு விட்டு, அந்த மதங்களையும், தத்துவங்களையும், குருமார்களையும் பகுத்தறிவுடன் ஏற்றுக்கொண்டு, அவர்கள் கருத்துகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் அதே மனநிலையுடன் எதிர் கருத்துக்களையும் ஆராய்ந்தறியும்போது, பகுத்தறிவை கடந்த ஆன்மீக நிலையை அடைவதற்கு தேவையான ஈடுபாட்டை நாம் அடைந்திருப்போம்! நம் மதங்களும், தத்துவங்களும், குருமார்களும் விரும்புவது, அத்தகைய ஆன்மீக நிலையை நாம் அடைவதையே - ஒருவேளை நம்மால் மதங்களையோ, குருவையோ பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டு, மனிதின் முன்முடிவுகளின்றி உள்ளது உள்ளவாறே, அவ நம்பிக்கையின்றி ஏற்றுக்கொள்ள முடிந்தால், அங்கு பகுத்தறிவிற்கு எந்த தேவையும் இல்லை! துரதிர்ஷ்டவசமாக, நம் தற்போதைய வாழ்க்கை முறையில் நாம் எவரும் அத்தகைய நிலையில் இல்லை. அந்நிலையில் நம்மில் எவரேனும் இருந்திருந்தால் மதங்களையோ அல்லது ஒரு ஆன்மீக குருவையோ பின்பற்றும் பலரும் மூன்றாவது கண்ணை எப்போதோ அடைந்திருப்போம்.


கூடுதல் வாசிப்பிற்கு;  http://gurunitya.wordpress.com/2013/03/22/

Monday, February 11, 2013

விழிப்பின் விழிப்பின்மை


நாம் விழித்திருக்கும்போது உண்மையில் நாம் முழுமையாக விழித்திருக்கவில்லை, அரை விழிப்பில் இருந்து கொண்டிருக்கிறோம். ஆம், நம் உடலுக்கு தேவையானவற்றை செய்யும் அளவில் மட்டுமே விழித்திருக்கிறோம். ஆனால் வாழ்க்கை என்பது உடல் சார்ந்தது மட்டும் அல்ல, அது வாழ்க்கையின் மிக மிக சிறிய பகுதி மட்டுமே- அடிப்படை பகுதியாக இருந்தாலும!. வாழ்வின் பெரும் பகுதி, வாழ்வின் உண்மையான பகுதி. நம் மனதினுள் சதா காலமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. துரதிர்ஷ்ட வசமாக வாழ்வின் உண்மையான பகுதியை அறிய நாம் விழித்திருக்கவில்லை. இதன் மூலம் நம் வாழ்வின் பெரும்பகுதியை, இயற்கை மனிதர்களுக்கு மட்டும் அளித்துள்ள பெரும் கொடையை வாழாமல் வீணாக்கி கொண்டிருக்கிறோம். எவ்வாறு நாம் மனம் சார்ந்த வாழ்க்கைக்கும் விழிப்பது? எவ்வாறு நம் வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பது?

நம் மனம் இயங்கும் முறையை அடிப்படையாக கொண்டு அதனை நான்கு பகுதிகளாக பிரிக்கலாம். அவை வெளிமனம்(Conscious Mind), உள்மனம்(Sub Conscious Mind), ஆழ்மனம்(Unconscious Mind), சமூக ஆழ்மனம் (Collective Unconscious Mind). மனதின் இந்த நான்கு பகுதிகளும் ஒன்றுடன் ஒன்று எப்போதும் இருவழிப்பாதையில் தொடர்புடன் இருந்து கொண்டிருக்கின்றன - மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும். நாம் நம் மனதை குறித்து அறிந்திருப்பது நமது வெளிமனதை மட்டுமே. மனதை கவனிப்பவர்களாக இருந்தால் வெளிமனதின் ஆழம் சற்று அதிகமாக இருக்கலாம், மற்றவர்களுக்கு வெளிமனம் மிகவும் மெலிதாக(Shallow) இருக்கலாம். அதாவது நாம் சற்றேனும் அறிந்திருப்பது வெளிமனதில் நிகழும் நிகழ்வுகளை மட்டுமே. ஆன்மீக பயிற்சிகளின் அடிப்படை, மனதின் இந்த நான்கு பகுதிகளும் ஒன்றாகி வெளிமனமாக வெளிப்படும் தகுதியை அடைவதே. அந்த தகுதியை அடையும்போது நம்மனதின் அனைத்து நிகழ்வுகளும் நம் பிரக்ஞ்சையின் எல்லைக்குள் நிகழும். அதாவது நம் பிரக்ஞ்சை மனதின் நிகழ்வுகள் எந்த தளத்தில் இருந்தாலும் அந்த தளங்களில் சஞ்சரிக்கும் தகுதியை பெற்றிருக்கும். அந்த அனுபவத்தை அடைந்தால் நம் வாழ்க்கையில் வேறு எந்த அனுபவங்களுக்கும் தேவைகள் இல்லாமல் இருக்க கூடும்.

நாம் உறக்கத்தில் இருக்கும்போது, எந்த வெளி நிகழ்வுகளும் நம்மை அடைவதில்லை. உறக்கத்தில் சாதாரணமாக கண்கள் மூடியிருக்கும். ஒருவேளை கண்கள் திறந்திருந்தாலும் எந்த காட்சிகளும் நம்மை அடைவதில்லை. செவிகள் திறந்திருந்தாலும் எந்த ஒலியும் நாம் அடைவதில்லை. நாசி சுவாசித்துக்கொண்டிருந்தாலும் எந்த மணத்தையும் நாம் நுகர்வதில்லை. நம் உடல் திறந்திருந்தாலும் எந்த தொடு உணர்ச்சியையும் நாம் உணர்வதில்லை. அதாவது உறக்கத்தில் இருக்கும்போது, புலன்கள் அறிவதை பிரக்ஞ்சை உணர்வதில்லை. அல்லது நாம் உறங்கும்போது நம் பிரக்ஞ்சையும் உறங்குகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால் நாம் பிரக்ஞ்சை இழந்து இருக்கும் தருணங்களே நாம் உறக்கத்தில் இருக்கும் தருணங்கள். நாம் விழிப்பில் இருக்கும்போது முழு பிரக்ஞ்சையுடன் இருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. நம் ஒவ்வொருவரின் இயல்பிற்கேற்ப வெவ்வேறு அளவிலான பிரக்ஞ்சையுடன் இருக்கிறோம். அல்லது நம் அன்றாட வாழ்க்கையை நடத்திச்செல்ல தேவையான குறைந்த பட்ச பிரக்ஞ்சையுடன் மட்டுமே இருக்கிறோம்.

நம் அன்றாட வாழ்க்கையை நிறைவேற்றும் இயக்கங்கள், ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்ட இரண்டு தளங்களுக்கு இடைப்பட்ட தளங்களில் நடைபெறுகிறது. முதல் தளத்தில் இயங்கினால் நாம் முற்றிலும் விலங்குகளை போல இருப்போம். நம் உடல் தேவைகள் எழும்போது அந்த தேவைகளை நிறைவேற்றுவதற்கான செயல் புரிவது. இதில் உடல் தாண்டிய எந்த பிரக்ஞ்சையும் தேவையில்லை. ஆனால் விலங்குகள் அவற்றின் உடல் சார்ந்த இயக்கங்களில் ஈடுபடும்போது, உடல் குறித்த முழுபிரக்ஞ்சையுடன் இருந்தாக வேண்டும். ஏனெனில் இந்த தளத்தில் எண்ணங்கள் இருப்பதில்லை. உடல் குறித்த முழுபிரக்ஞ்சை இல்லாத பட்சத்தில் விலங்குகளால் அவற்றின் உயிரை தக்க வைத்துக்கொள்ள முடியாது. அடுத்த இயங்கு தளம், உடல், மனம் மற்றும் உணர்வு சார்ந்த முழு பிரக்ஞ்சையுடன் இயங்குவது. இந்த தளத்தில் இயங்கும்போது, நம் உடல் தேவைகள், அந்த தேவைகள் மனதில் ஏற்படுத்தும் விளைவுகள், அந்த விளைவுகளின் காரணமாக உருவாக்கப்படும் மன இயக்கங்கள், மன இயக்கங்கள் செயல்களாக வடிவம் பெறும் முறைகள், உடலிலிருந்து செயல்கள் வெளிப்படும் வழிமுறைகள் ஆகிய அனைத்தையும் குறித்த பிரக்ஞ்சையுடன் நாம் இருக்க கூடும். சாதாரண மனிதர்களின் இயங்கு தளம், இந்த இரண்டு தளங்களுக்கு இடைப்பட்ட தளங்களில் இருக்கிறது - பெரும்பாலும் உடல் சார்ந்த பிரக்ஞ்சையை மட்டும் உடைய முதல் தளத்திற்கு மிக மிக அருகில்! அதாவது மனிதர்களாகிய நமக்கு சாத்தியமான முழு விழிப்பு நிலையிலிருந்து மிக மிக விலகி, உடல் சார்ந்த விழிப்பு நிலை மற்றும் மிக மிக குறைந்த அளவிலான மனம் சார்ந்த விழிப்பு நிலையில் மட்டும் இருப்பது.
நாம் காண்பது, கேட்பது, உணர்வது போன்றவை பிரக்ஞ்சை விழிப்புடன் இருக்கும்போது மட்டுமே நிகழும். ஆனால் மன இயக்கங்களுக்கு பிரக்ஞ்சையின் விழிப்பு நிலை தேவையில்லை. நம் உள் மனதிலும் ஆழ் மனதிலும் எப்போதும் நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவற்றை நம் பிரக்ஞ்சை அறிவதில்லை. அதாவது பிரக்ஞ்சையின் அறிவில் படாமல் நிகழும் நம் மன இயக்கங்களே நம் உள்மனமும் ஆழ்மனமும். ஆனால் அந்த உள் மன இயக்கங்களை பிரக்ஞ்சை அறிய நேர்ந்தால் அந்த கணமே மன இயக்கத்தின் அந்த பகுதி நம் வெளிமனமாக ஆகி விடுகிறது.

நம் பிரக்ஞ்சை சுதந்திரமாக இருக்கும்போது எண்ணற்ற இயக்கங்களை ஒரே நேரத்தில் அறியும் இயல்புடையது. அந்த இயல்புடன் பிரக்ஞ்சை எப்போதும் இருக்குமானால், அதாவது நம் பிரக்ஞ்சை எப்போதும் சுதந்திரமாக இருக்க முடியுமானால், நம் மனதில் வெளிமனம், உள்மனம், ஆழ்மனம் என பிரிவினைகள் இருக்க வாய்ப்பில்லை. மனம் என்பது முழுவதும் பிரக்ஞ்சையால் அறியப்படக்கூடிய வெளிமனமாகவே இருக்க கூடும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம் சாதாரண நிலையில் நம் பிரக்ஞ்சை விடுதலையுடன் இருப்பதில்லை. நம் மன இயல்பிற்கேற்ப, நம் செயல்களுடன் அல்லது மன இயக்கங்களுடன் தன்னை அடையாளப்படுத்தி இணைத்துக்கொண்டு மற்ற இயக்கங்களை, செயல்களை தவற விட்டு விடுகிறது.

ஆனால் பிரக்ஞ்சை ஒரு குறிப்பிட்ட செயலுடன் அல்லது எண்ணத்துடன் மட்டும் தன்னை அடையாளப்படுத்தி இணைத்துக்கொண்டால் நம்மால் வாழ்க்கையை நிகழ்த்த இயலாது. ஏனெனில் பிரக்ஞ்சையின் மூலம் மட்டுமே நம் வாழ்க்கை தேவைகள் செயல்வடிவம் பெறுகின்றன. நம் வாழ்க்கையை நிகழ்த்த நமக்கு பல செயல்கள் தேவைப்படுகின்றன. எனவே நம் பிரக்ஞ்சை ஒரு செயலிலிருந்து மற்றொரு செயலுக்கும், ஒரு எண்ணத்திலிருந்து மற்றொரு எண்ணத்திற்கும் இடைவிடாது தாவிக்கொண்டே இருக்கிறது. அத்துடன் அது செல்லும் ஒவ்வொரு செயலுடனும், எண்ணத்துடனும் தற்காலிகமாக தன்னை இணைத்துக்கொள்கிறது. இங்கு ஆச்சரியப்படவேண்டிய விஷயம் நம் உள் மனதின் செயல்பாடு. பிரக்ஞ்சையால் விட்டு செல்லப்பட்ட செயல்களையும் எண்ணங்களையும் உள்மனம் ஏற்றெடுத்து முடித்து வைக்கிறது. ஆனால் உள் மனதால் இயக்கப்படும் இயக்கங்களை பிரக்ஞ்சை அறிவதில்லை. எனவே அந்த இயக்கங்களின் திசைகளும் நம் கட்டுப்பாட்டில் இல்லை.

பெரும்பாலும் நம் அனைவரின் அன்றாட செயல்பாடுகளும் உள் மனதால் மட்டுமே முடித்து வைக்கப்படுகின்றன. நாம் செய்யும் செயல்களில் எப்போது கவனத்தை இழந்து பிற எண்ணங்களில் நம் கவனத்தை செலுத்திகிறோமோ, அப்போதே நம் செயல்களின் இயங்கு சக்தி உள் மனதால் கட்டுப்படுத்தப்படுகிறது. பிரக்ஞ்சை அவ்வப்போது செயல்களை எட்டிப்பார்த்து, ஆம் கவனத்துடன் இருக்கிறேன் என கூறிக்கொள்கிறது. ஆனால் உண்மையில் அது செயல்களிலிருந்து செயல்களுக்கும் எண்ணங்களிலிருந்து எண்ணங்களுக்கும் இடைவிடாது தாவிக்கொண்டிருக்கிறது.

ஆம், நாம் அலைபாயும் மனம் எனக்கூறுவது, எண்ணங்கள் அலைபாயும் மனபரப்பை அல்ல, ஆனால் எந்த செயல்களிலும் அல்லது எண்ணங்களிலும் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முடியாத பிரக்ஞ்சையையே. ஆகவே அது உண்மையில் அலைபாயும் மனம் அல்ல. அலைபாயும் பிரக்ஞ்சை! ஆக உண்மையில் நாம் செய்ய வேண்டியது மனதில் உருவாகும் எண்ணங்களை கொல்வது அல்ல, ஆனால் அனைத்து எண்ணங்களுக்கும் அனைத்து செயல்களுக்கும் முழு விழிப்புடன் இருக்கும் பிரக்ஞ்சையை அடைவது! அத்தகைய பிரக்ஞ்சையை நாம் அடையும்போது நம்மிடமிருந்து தேவையில்லாத செயல்கள் எதுவும் எழ வாய்ப்பில்லை, நம் மனதில் தேவையில்லாத எண்ணங்களும் எழ வாய்ப்பில்லை. இந்த நிலையையில் நல்ல செயல் தீய செயல், நல்ல எண்ணம், தீய எண்ணம் என்ற பிரிவினைகளையும் நாம் தாண்டி சென்று விடக்கூடும். அந்த நிலையில் உலகின் இருமை தன்மையை கடந்து, அனைத்தும் ஒன்றேயாகக்கூடிய ஒருமை தன்மையை நாம் அடையக்கூடும். அத்தகைய தன்மை நம் மனதில் நிகழுமானால், அதுவே மனிதபிறவியாக நாம் அடையக்கூடிய உச்சகட்ட ஆனந்தமாக இருக்க கூடும். எல்லா மதங்களுக்குமான, எல்லா நாகரீகங்களுக்குமான தொலை தூர இலக்கு, அந்த மதத்தை அல்லது நாகரீகத்தை சார்ந்த ஒவ்வொரு மனிதரையும் இந்த ஒருமை தனைமையை நோக்கி பயணிக்க வைப்பதேயாக இருக்க கூடும்!

blog.change@gmail.com