Sunday, August 14, 2016

ஏன் இந்த எதிர்ப்பு? - 1

சிறகு இணையப் பத்திரிகையில் 13-08-2016 அன்று பதிப்பிக்கப்பட்டது

மத்திய மனிதவள மேம்பாட்டுத துறை அமைச்சகம், இந்தியாவின் கல்வித்துதறையை மறு சீரமைப்பு செய்வதற்காக ஒரு குழுவை அமைத்து, அதன அறிக்கையின் அடிப்படையில் வரைவு அறிக்கையை தயார்செய்து பொதுமக்களின் பார்வைக்கும் மேலான கருத்துக்களுக்குமாக முன் வைத்திருக்கிறது. தமிழகத்தில் எப்போதும் போலவே மத்திய அரசு எது செய்தாலும், அது எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், மாநிலங்களுக்கு எதிராகவே என்னும் ரீதியில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. எதிர்ப்பின் முன்னணியில் இருப்பது அரசியல் கட்சிகள். பின்னர் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள். மிக விரைவில் ஆசிரியர்களும் இதில் சேர்ந்து விடுவதை எதிர்பார்க்கலாம்.

புதிய தேசிய கல்விக் கொள்கைகளுக்கான குழுவின் அறிக்கை கல்வியியல் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசியப் பல்கலைக்கழகத்தின் (NUEPA) இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம்தான் தேசிய கல்விக் கொள்கைகளுக்கான குழுவின் செயலக அலுவலகமாக பணியாற்றியிருக்கிறது. கல்வித்துறை அமைச்சகத்தின் வரைவு அறிக்கை அதன் இணையத்தளத்தில் பார்வைக்கு உள்ளது. ஆகஸ்ட்-16 ஆலோசனைகள் அளிப்பதற்கான கடைசி தினம்.

ஊடகங்களில் வந்த செய்திகளின்படி, எதிர்ப்புக்கான காரணங்களாக அறிக்கையின் சில பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட உதிரி வரிகள் காரணங்களாக முன்வைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. அவையாவன,

  • ·         இந்தக் குழு கல்வியியல் நிபுணர்களைக்கொண்டு அமைக்கப்படாமல், ஆட்சிப்பணி நிபுணர்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது
  • ·         சமஸ்கிருதத்தை பரவலாக்கும் முயற்சி செய்யப்பட்டிருக்கிறது
  • ·         குலக்கல்வி முறையை கொண்டுவர அரசாங்கம் முயல்கிறது
  • ·         மாநிலங்களுக்கான உரிமையை பறிப்பதாக இருக்கிறது
  • ·         சிறுபான்மையினருக்கு எதிராக இருக்கிறது
  • ·         எட்டாம் வகுப்புவரைக்கும் மாணவர்களை வகுப்புகளில் தோல்வியடைய செய்யாமல் கடந்து செல்ல வைக்கும் கொள்கையில் மாற்றம் கொண்டுவந்திருக்கிறது.

இவை தவிர சில அடிப்படைகள் இல்லாத குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகிறது. உதாரணமாக, இருபாலரும் சேர்ந்துப் பயிலும் வகுப்பறைகள் கூடாது  என பரிந்துரைப்பதாக ஒரு குற்றச்சாட்டு. இந்த அறிக்கைகளில், இரண்டு முறை முழுவதும் படித்தப் பிறகும், தனியாக இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையைத் தேடியபோதும் இத்தகைய ஒரு பரிந்துரை என் கவனத்தில் வரவில்லை.

தேசிய கல்விக் கொள்கைக்கான குழுவின் அறிக்கையையும் அமைச்சகத்தின் வரைவு அறிக்கையையும் மேலோட்டமாக படித்தால் கூட, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என்பது தெரியவரும். இந்தியாவின் தற்போதைய கல்வித் தரத்தைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அதன் மீது நம்பத்தன்மையை உருவாக்க வேண்டுமானால், மிகக் கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பதையும் அறிவோம். அரசால் அமைக்கப்பட்ட குழு, அத்தகைய கடுமையான, தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்திருக்கிறது. அமைச்சகமும் அவற்றில் பலவற்றை ஏற்றுக் கொண்டு, தன் வரைவறிக்கையை உருவாக்கியிருக்கிறது. கடுமையான நடவடிக்கைகள் என்றால் எதிர்ப்புகள் தவிர்க்க முடியாதவை. அவைதான் இங்கு வெளிப்படுகின்றன. எதிர்ப்புகளுக்குக் காரணங்களாக, அந்த நடவடிக்கைகளுக்காகக் கூறப்பட்டுள்ள பின்புலங்களை கவனத்தில் கொள்ளாமல், சில உதிரி வாக்கியங்களை மட்டும் முன்னிலைப் படுத்தப்படுகிறது. அரசியல் கட்சிகள் இவ்வாறு இயல்பாக எழும் எதிர்ப்புக்களை தங்கள் சுயலாபங்களுக்காக பயன்படுத்துகின்றன. அதுதான் இப்போது நிகழத் தொடங்கியிருக்கிறது.
இதில் ஆசிரியர்களின் திறமைகளை உயர்த்தவும் கண்காணிக்கவும் பல நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனவே பெரும்பாலான ஆசிரியர் சமூகமும் இதை எதிர்க்கத் தொடங்கலாம். எதிர்ப்பதற்கான நேரடியான காரணங்களை வெளிப்படையாக அவர்களால் கூற முடியாது. எனவே பிறர் இடும் கூக்குரல்களை போலி செய்வார்கள். சமூகத்தின் மற்றப் பிரிவுகளைப் போலவே, ஆசிரியர் சமூகத்திலும் பெரும்பாலானவர்கள் தங்களுக்கொன்று தனிப்பட்ட கொள்கைகள் இல்லாதவர்களாகவே இருப்பார்கள்.  சுயலாபத்திற்காக, தங்கள் திறமையின்மை மற்றும் ஆர்வமின்மை போன்றவற்றின் மூலம் கல்வியை அழிக்கும் அச்சமூகத்தின் ஒரு குறுங்குழு, இந்தப் பெரும்பான்மையினரை மூளைச் சலவை செய்து தங்களை ஆதரிக்கச் செய்து விடுவார்கள். பின் என்ன? அரசியல் கட்சிகளுக்குக் கொண்டாட்டம்தான். கல்வியின் தரம் எக்கேடு கெட்டால் அவர்களுக்கென்ன?

யார் கொள்கைகள் வகுத்தாலும், சில மனச்சாய்வுகள் தவிர்க்க முடியாதவை. இத்தகைய மனச்சாய்வுகளை தொடர் விவாதம் மூலம் சரி செய்துவிட முடியலாம். அதற்குத் தேவை ஆரோக்கியமான விவாதம். ஆனால் இங்கு தமிழகத்தில் தொடங்கியிருப்பது அத்தகைய விவாதம் அல்ல. ஒட்டுமொத்த எதிர்திசையிலான மனச்சாய்வு. தரமற்ற கல்வியைப் பெறும் சமூகத்தில்தான் தங்களால் நிலைத்திருக்க முடியும் என்னும் குறுங்குழுக்களின் அடிமன விருப்பங்கள்.
புதிய கல்விக் கொள்கைகளுக்கான அறிக்கை, கீழ் மட்டத்திலிருந்து, அதாவது பொதுமக்களிடமிருந்தும் கல்வியாளர்களிடமிருந்தும் கருத்துக்கள் அறியப்பட்டு அவை மேல் நோக்கிச் சென்று, பலமுறை மறுஆய்வுகள் மற்றும் தொகுப்புகள் செய்யப்பட்டு குழுவிடம் சென்று சேர்ந்த தகவல்களிலிருந்தும், அந்த தகவல்களிலிருந்து பெறப்பட்ட கருத்தாக்கங்களை, மீண்டும் கல்வியாளர்களுடனும், கல்வியின் பிற பங்குதாரர்களுடனும் விவாதித்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு கல்வி நிபுணர்களால் கொள்கைகள் உருவாக்கப்படவில்லை. மாறாக கல்வியின் தற்போதையை எதார்த்த நிலையையும், மாற்றியமைப்பதற்கான ஆலோசனைகளையும் சமூகத்தின் பரந்த வெளியிலிருந்துப் பெற்று அவை தொகுக்கப்பட்டு மீண்டும் சரிபார்க்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய பணிக்கு பொருத்தமானவர்கள் கல்வியாளர்களை விட ஆட்சிப்பணி அனுபவம் உடையவர்களே.

நாம் ஏற்றுக்கொள்ள விரும்பினாலும் இல்லாவிட்டாலும், இந்தியாவில் இன்று இருக்கும் எல்லா மொழிகளிலும், தற்போது ஆங்கிலத்தின் தாக்கம் எவ்வாறு இருக்கிறதோ, அதைப்போல சமஸ்கிருதத்தின் தாக்கமும் நெடுங்காலமாக இருந்திருக்கிறது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய வெகுஜன தமிழ் எழுத்துக்களில் கூட, சமஸ்கிருத கலைச்சொற்கள் மிகுந்து இருந்திருக்கிறது. தற்போது, தமிழுக்கான கலைச் சொற்கள் பெருமளவு உருவாக்கப்பட்டிருந்தாலும், பல சமஸ்கிருத வார்த்தைகள் அவ்வாறே அல்லது சற்றே உருமாற்றி உபயோகப்படுத்தி வருகிறோம். இந்தியாவின் எல்லா மொழிகளிலும் அவ்வாறே. இந்தியா முழுமைக்குமான தத்துவமரபு சமஸ்கிருத மொழியிலேயே இருந்திருக்கின்றன. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் சில ஐரோப்பியர்கள் தங்கள் சுய முயற்சியால் சமஸ்கிருதத்தைக் கற்று, அங்கிருந்தவற்றை தங்கள் மொழிகளில் மொழிபெயர்த்து உரைகள் எழுதியிருக்காவிடில் இந்தியாவின் கலைச்செல்வங்கள் மற்றும் தத்துவங்களை பெருமளவு இழந்து, நம் பண்பாட்டையும் இழந்து நின்றிருப்போம். இன்று சமஸ்கிருதத்தின் செல்வங்கள் பெருமளவு பிற மொழிகளில் இருந்தாலும், சமஸ்கிருதத்தை அழிய விடுவது, நாம் பெற்றிருக்கும் கலை மற்றும் அறிவுச் செல்வங்களின் மூலத்தை இழப்பதற்குச் சமமாகும். தத்துவங்கள் மாறும் காலத்திற்கேற்ப மறுஆக்கம் செய்யப்படவேண்டுமென்றால், அவற்றின் மூலங்கள் காலவெளியில் தொடர்ந்து இருந்தாக வேண்டும். மூலங்கள் அழிந்தால் அவற்றை மறுஆக்கம் செய்வதற்கான சாத்தியங்களும் அழிந்து விடும். எனவே பண்பாடும் தேங்கி விடும். இந்தப் பின்னணியில், சமஸ்கிருதம் பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும், பரந்த மனப்பான்மையுடன் பயிற்றுவிக்க முன்வைக்கப்படும் என்று வரைவுக் கொள்கை கூறுகிறது. அனைவரும் சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்று கூறுவது சாத்தியம் இல்லை. மூன்று மொழிக் கொள்கையில், விருப்பப்பாடமாக ஒருவர் கற்க விரும்பினால் அதற்கான வாய்ப்புகளை இல்லாமல் செய்வது, சரியானதல்ல. இது சமஸ்கிருதத்தை பரவலாக்கச் செய்யும் முயற்சிதான். இந்தியாவின் செழிப்பான பண்பாட்டை அறிவதற்கு, தமிழ் போன்ற மொழிகளுடன், அன்றைய இந்தியாவின் இணைப்பு மொழியான சமஸ்கிருதம் பரவலாக்கப்பட்டாக வேண்டும். கட்டாயமாக அல்ல. விருப்பமானவர்களுக்கு கற்பதற்கான வாய்ப்புகள் எளிதில் கிடைக்க வைப்பதன் மூலம். இந்த வரைவுக் கொள்கை அதையே கூறுகிறது.

கல்வியின் ஆரம்ப நிலைகளிலேயே தொழில்கல்விக்கு முந்தைய, அறிமுகச் செயல்பாடுகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். குழந்தைகளின் திறமைகளை உருவாக்குவதற்கும், தொழில்மேல் மரியாதையை இது உருவாக்கவம் இது பயன்படும் என்று வரைவு அறிக்கை கூறுகிறது. இதைத்தான் குலக்கல்வியை அரசாங்கம் கொண்டு வருகிறது என்று கூவுகிறார்கள். இவர்கள் என்ன விரும்புகிறார்கள். படித்து முடித்த மாணவர்கள் தொழில் செய்ய திறனற்றவர்களாக வரவேண்டும் என்று விரும்புகிறார்களா? வரைவு அறிக்கைக்கு முந்தைய குழுவின் அறிக்கையில், இது சற்று விரிவாகவே கூறப்படுகிறது. கற்றல் திறனில் குறைபாடு உள்ளவர்கள், மற்றவர்களுடன் கற்றல் திறனில் இணையாக வருவதற்கு தொடர்ந்து உதவிகள் செய்ய வேண்டும். அத்தகைய உதவிகளும் பயனளிக்காத பட்சத்தில், எட்டாம் வகுப்பிலிருந்து தொழில்கல்வி நோக்கி அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கல்வி வாரியங்களும், தரச்சான்று (Accreditation) பெற்றிருக்க வேண்டும். இதன்மூலம், ஒவ்வொரு மாநில மற்றும் மத்திய கல்விவாரியங்களின் ஒப்புமைத் தரம் அனைவருக்கும் தெரியவரலாம். ஒரு குறிப்பிட்ட கல்வி வாரியம் அதன் தரத்தில் பின்தங்கியிருந்தால், அவை முன்னேற்றுவதற்கான கட்டாயம் சம்பந்தப்பட்ட அரசுக்கு ஏற்படும். இது வரைவு அறிக்கையில் உள்ள ஒரு பரிந்துரை. அதைப்போலவே பள்ளி அளவில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் இந்தியா முழுமைக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும், மற்ற பாடங்களின் ஒரு பகுதி பொதுவானதாகவும், மற்றப் பகுதி மாநிலங்களின் தேவைகளுக்கேற்பவும் அமைக்கப்படலாம் என்றும் அறிக்கை பரிந்துரைக்கிறது. இதுவே கல்வியில் மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது என்ற கூக்குரலுக்குக் காரணமாக இருக்கலாம். அறிக்கையின் வேறு எந்தப் பகுதிகளையும் இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புறுத்த முடியவில்லை. இந்தப் பரிந்துரைகள் தேவையானதா இல்லையா என்பதை கல்வி குறித்த புரிதல்கள் உள்ளவர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

சிறுபான்மையினருக்கு எதிராக இருக்கிறது என்னும் கருத்தும் மேலே குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளிலிருந்தே உருவி எடுக்கப்பட்டிருக்க வேண்டும். வேறு எவற்றையும் தொடர்புறுத்த முடியவில்லை. கல்வி நிறுவனங்களின் தரம் மற்றும் தரச்சான்றிதழ் பெறுவது போன்றவைக் குறித்த சில பரிந்துரைகள் உள்ளன. இவை சில சிறுபான்மை கல்வி நிறுவனங்களை அவற்றின் தற்போதைய செயல்படும் முறையிலிருந்து மாற்றியமைக்க வைக்கலாம். இதுவும் இந்த எதிர்ப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

தற்போது எட்டாம் வகுப்புவரை மாணவர்களின் கற்றல் அளவு எப்படியிருந்தாலும் மறு அமர்வு (Fail) இல்லாமல் முன்னேற்றிவிடப்படுகிறார்கள். அது இனிமேல் ஐந்தாம் வகுப்புவரை என்று மாற்ற பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அது கூட, குறைந்தப்பட்ச கற்றல் தகுதியை அடையாமல் இருக்கும் மாணவர்களுக்கு, தனிப்பட்ட கவனத்தின் மூலம் கற்றலை மேம்படுத்தச் செய்து, அதன்பின்னும் அவர்களால் குறைந்தப்பட்ச தகுதியை அடைய முடியாமல் இருந்தால்தான் மறுஅமர்வு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. இத்துடன் ஆசிரியர்கள் திறமையை மதிப்பிடும் கொள்கையையும், மேலே கூறியிருக்கும் பள்ளிகளில் தொழிற்கல்வி குறித்த கொள்கையையும் சேர்த்துக் கொள்ளும்போது, இதன் பயன் விளங்கலாம். ஆக, இது தீமையான ஒன்று இல்லை. மாறாக, மிக அடிப்படையான ஒன்று.

இந்தக் கொள்கைகளை எதிர்ப்பதோ ஆதரிப்பதோ அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தது. ஆனால், இது வருங்கால சமூகத்தை கட்டமைப்பதற்கான அடிப்படைக் கொள்கை என்பதை புரிந்துக் கொண்டு. அதன் அடிப்படையில் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை ஒருமுறையாவது படித்து விட்டு அதன்பின் தங்கள் நிலைப்பாடுகளை எடுத்தால், அது எவ்விதமாக இருந்தாலும், வருங்கால சமூகத்திற்கு நம் பங்களிப்பை சரியான முறையில் அளித்திருப்போம். மனித மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் வரைவு அறிக்கை வெறும் 40 பக்கங்கள்தான். கல்விக் கொள்கைக்கான குழுவின் அறிக்கை 240 பக்கங்கள். குறைந்தப் பட்சம் இந்த 40 பக்க ஆவணத்தையாவது படிக்காமல் இதைக் குறித்து கருத்து கூறுவதோ அல்லது சமூக வலைத்தளங்களில் குருட்டுத்தனமாக பகிர்ந்து கொள்வதோ உண்மையில் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஜனநாயக உரிமையை பொறுப்புணர்வில்லாமல் நம் சந்ததியினருக்கு எதிராகச் செயல்படுத்துவதாகும்.

blog.change@gmail.com

No comments: