Friday, December 6, 2013

எண்ணங்கள் - 1

நாம் எண்ணங்களால் ஆக்கப்பட்டவர்கள். நமது சுயம்(Self), தற்போதைய நம் விழிப்பு நிலையில், வெறும் எண்ணங்களால் ஆக்கப்பட்டுள்ளது. அதுவே நம் அகங்காரமாக (Ego) வெளிப்படுகிறது. நம் மனதில் எண்ணங்கள் இடைவிடாமல், விழித்திருக்கும்போதும் உறங்கும்போதும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. எண்ணங்கள் மனதில் இயங்கும்போது, நாம் அந்த எண்ணங்களாகவே மாறிவிடுகிறோம். அதாவது, நம் எண்ணம் நாம் என்னவாக இருக்கிறோம் என எண்ணுகிறதோ அதுவாகவே நாம் இருக்கிறோம். உதாரணமாக நம் எண்ணம் நாம் நல்லவர் என எண்ணினால் நாம் நல்லவராகவே இருக்கிறோம் - நாம் உண்மையில் எப்படிப்பட்டவராக இருந்தாலும். நம் எண்ணம், நம்மை பலவானாக எண்ணினால், நாம் பலவானாகவே மாறிவிடுகிறோம் - உண்மையில் நாம் எத்தகைய பலவீனர்களாக இருந்தாலும். நாம் என்பது நம்மை குறித்து நாம் எண்ணும் எண்ணங்கள் மட்டும் அல்ல. நம்முள் தோன்றும் எல்லா எண்ணங்களும் நாமே - அவை எத்தகைய எண்ணங்களாக இருந்தாலும். அதாவது நமது எண்ணங்களே நாம் - நம் தற்போதைய விழிப்பு நிலையில்!

இவை அனைத்தும் முழுமையை உண்மையாகவே உணர்ந்த பலரால், பல காலங்களில், பல்வேறு முறைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் வார்த்தைகளின் முன், இந்த வலைத்தளத்தில் வெளிப்படும் வார்த்தைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. இவை ஒரு சுயவிருப்பத்திற்காகவே வலையேற்றப்படுகிறது. மிக சமீபத்தில், படிக்க நேர்ந்த சீர்மை என்னும் குறுநாவலின் கதாநாயகனான கென்வில்பர்-இன் ஒரு மேற்கோள் அந்த சுயவிருப்பத்தை மீண்டும் நிலைநிறுத்தியது. (சீர்மை  குறுநாவலின் மூலம் கென் வில்பரின் அறிமுகத்தை பெற்று, ஒரு புத்தக கடையில் கென் வில்பரின் புத்தகங்களை தேடும்போது கிடைத்த FountainHead என்னும் 'அயன் ரான்ட்' அவர்களின் நாவல்.............. - இவ்வாறு 'சீர்மை'யின் மூலம் நான் பயணித்த தூரம் மிக அதிகம்)

 கென் வில்பரின் மேற்கோள்; ".................................. And this is truly a terrible burden, a horrible burden, because in any case there is no room for timidity. The fact that you might be wrong is simply no excuse: You might be right in your communication, and you might be wrong, but that doesn’t matter. What does matter, as Kierkegaard so rudely reminded us, is that only by investing and speaking your vision with passion, can the truth, one way or another, finally penetrate the reluctance of the world. If you are right, or if you are wrong, it is only your passion that will force either to be discovered. It is your duty to promote that discovery—either way—and therefore it is your duty to speak your truth with whatever passion and courage you can find in your heart. You must shout, in whatever way you can.” 
http://www.goodreads.com/author/quotes/22075.Ken_Wilber

மீண்டும் எண்ணங்களுக்கு. நம் தற்போதைய விழிப்பு நிலையில் எண்ணங்களை நம்மால் கவனிக்கப்படும் ஒரு செயல்பாடாக உணர முடிவதில்லை. நாம், நமது இருப்பை எண்ணங்களின் மேல் அமர்த்தி, நாமே எண்ணங்களாக மாறிவிடுகிறோம். அதாவது, எண்ணங்கள் எதை எல்லாம் எண்ணுகின்றனவோ அதுவே நாம் ஆகிவிடுகிறோம். எண்ணம் ஒரு செயலை செய்யுமாறு எண்ணினால், நாமே அந்த எண்ணமாகி, அந்த செயலை செய்கிறோம். அந்த செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கம்போதே நாம் வேறு ஒரு எண்ணமாகி, தொடங்கிய செயலை விட்டுவிடுகிறோம். அந்த செயல் முடிய வேண்டுமானால், மீண்டும் நம் எண்ணம் அந்த செயலின் மேல் குவிந்தாக வேண்டும். அதாவது, ஒரு புதிய எண்ணத்தின் மூலம், அந்த செயலை குறித்த ஒரு புதிய எண்ணமாகி, நாம் மீண்டும் தொடங்கிய செயலின் மேல் வந்தாக வேண்டும்.

நாம் நம் எண்ணமாக இருக்கும்வரையில் நம்மிடமிருந்து வெளிப்படும் எந்த செயல்களும், சுவாசித்தல் போன்ற நுண்ணறிவின் மூலம் நடைபெறும் செயல்களை தவிர, நம் எண்ணங்களின் உந்துதல் மூலம் மட்டுமே நடைபெற இயலும். இந்த செயல்பாட்டில், இயற்கையாக நம்மிடம் இருக்கும் நுண்ணறிவு (Inteligence) மிக மிக சிறு பங்களிப்பையே அளிக்க முடியும் - நம் எண்ணங்களில் நுண்ணறிவின் ஆதிக்கத்தை, நம்மால் சாதாரணமாக அறிய முடியாத தளத்தில், படரவிடுவதன் மூலம். அதாவது நம் தற்போதைய விழிப்பு நிலையில், நம் வாழ்க்கையை, நம் விதியை எண்ணங்களே தீர்மானிக்கின்றன. நாமே அந்த எண்ணங்களாக இருப்பதன் மூலம், அவற்றை நாமே தீர்மானிப்பதாக கூறிக்கொள்ளலாம் - ஆனால் நாமோ எண்ணங்களின் அடிமைகளாக இருக்கிறோம். எண்ணங்களின் அடிமைகளாக இருப்பதை அறியாமல் இருக்கிறோம். அந்த அறியாமையில் இருக்கும்வரை, நம் வாழ்க்கையை, நம் விதியை நாமே தீர்மானிக்கும் சக்தியை உடையவர்களாக இருந்தும், அவற்றை நம் எண்ணங்களிடம் ஒப்படைத்து விடுகிறோம்.

நாம்  எண்ணங்களாக இருக்கும்வரை, எண்ணங்களுக்கு அடிமையாகவே இருக்கிறோம். நம்மால் எண்ணங்களை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். நமக்குள் எத்தகைய எண்ணங்களும், நல்லவையோ அல்லது கெட்டவையோ, கிளர்ந்து எழுந்துகொண்டே இருக்கலாம். அவ்வாறு கட்டுக்கடங்காத எண்ணங்களுடன் நாம் இருந்தாலும், அந்த எண்ணங்களிடமிருந்து விடுபட்டிருக்கவும் நம்மால் முடியும்- நாம் அத்தகைய விடுதலைக்கு அதிவிருப்புடன் இருந்தால்!

ஆம், நாம் என்பது நமது எண்ணங்கள் அல்ல. எண்ணங்களாகவே நாம் மாறிவிடுவது, நமது மன மயக்கத்தால், நம் அறிவின் தயக்கத்தால், எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான விருப்பமின்மையால். நாம் விரும்பினால், இந்த நொடியில் எண்ணங்களிலிருந்து நம்மால் விடுபட முடியும், ஆனால் நம்மிடம் அத்தகைய பெருவிருப்பு இல்லை. ஒருவேளை அந்த விடுதலையின் ஆனந்தத்தை நம்மால் புரிந்து கொள்ளமுடியாமை கூட அதற்கு காரணமாக இருக்கலாம். அந்த விடுதலையின் ஆனந்தம் இதுவரை நாம் அறிந்துள்ள ஆனந்தங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. எனவே அந்த ஆனந்தத்தை அறிந்தவர்களால், அவற்றை நேரடியாக நமக்கு விளக்கமுடியாது. ஏனெனில் அதற்கு இணையான எதையும் நாம் இதுவரை அறிந்தது இல்லை. நம் மூளையால் எந்த புதியதையும் நாம் அறிந்த ஒன்றுடன் ஒப்பிடுவதன் மூலமே அறிந்து கொள்ள முடியும். எனவே எல்லா ஞானிகளின் விளக்கங்களும், நாம் அறிந்தவற்றுடன் ஒப்பிடப்பட்டு, திரிக்கப்பட்டு, அவற்றின் சாரத்தை இழந்த பின்பே நம் அறிவை அடைகிறது. ஞானிகள் அறிந்த ஆனந்தம் நம் அறிவுக்கு எட்டாத தளத்தில் இருப்பதால், அவர்களால் உவமைகளின் மூலம் மட்டுமே நமக்க விளக்க முடியும். உதாரணமாக பேரின்ப நிலையை ஆயிரம் இதழ் தாமரை மலர் முகிழ்தலுக்கு ஒப்பிடுதல் போன்றவை. இதற்கு அர்த்தம், அந்த ஆனந்தத்தை நம்மால் அடைய முடியாது என்பதல்ல. என்னால், இங்கு இந்த அளவுக்கேனும் விளக்கும் அறிதலை அடைய முடிந்திருந்தால், இந்த உலகில் வாழும் எந்த மனிதனுக்கும், அந்த பேரானந்தத்தின் உச்சத்தை அடைவது மிகமிக எளிதான செயலே- அத்தகைய விருப்பம் ஒருவரில் எழுந்தால்!

மீண்டும் எண்ணங்களுக்கு. நம் மனம் என்பது ஒரு செயல்பாடுகளின் களம். மேல் அடுக்கில், மனம் வெறும் எண்ணங்களாக இருக்கிறது. உள்ளடுக்குகளில், அது நம் எல்லா செயல்பாடுகளாகவும் இருக்கிறது. மேலும் அடியாழத்தில் மொத்த மனித குலத்தின் செயல் தளமாக இருக்கிறது என்றும் அதன் அடிப்பரப்பில் உலகத்தின் இயக்கமாக இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. இவை நம் தற்போதைய அறிதலுக்கு அப்பாற்பட்டவை. எனவே அவற்றை நம்புவதோ அல்லது மறுப்பதோ நமக்கு தேவையற்றது, முடியாதது. இவ்வாறு கூறப்பட்டிருப்பதை பற்றி அறிந்திருப்பது, நமது இருப்பை பற்றிய ஒரு கருத்தாக்கத்திற்கு சில தளங்களில் உதவலாம்.

நாம் விரும்பினால், எண்ணங்களிலிருந்து விடுபடுவது மிக எளிமையானது. மனதின் மேல் அடுக்கில் நிகழும் எண்ணங்களை, மனதின் எண்ணங்களுக்கு அடியில் உள்ள அடுக்கின் ஒரு இழையின் மூலம் கவனிக்கத்தொடங்கும் நொடியில் நாம் எண்ணங்களிலிருந்து விடுதலை பெற்றிருப்போம்.


[மேலும்]

எண்ணங்கள் - 2
blog.change@gmail.com

No comments: