Saturday, September 13, 2014

கனவு

சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலிருந்து, குழித்துறை நிலையத்தில் ஷக்தியும் அவள் அக்காவும் பெற்றோரின் துணையுடன், ஒரு குழந்தைக்கனவு நிகழ்வுகளாக நிகழ்ந்ததன் சுவடுகளுடனும், அது நிகழ்வாக மாறிய அனுபவத்தின் சுமையுடனும் இறங்கினர். சுமை சற்று அதிகம் போலும்! அவர்களால் சுமக்க முடியவில்லை. கனவின் இனிமையையும், நிகழ்வில் இல்லாமல் செய்துவிட்டது அந்த சுமை. ஆனாலும் அனுபவம்தானே கல்வி! சுமை சில நாட்களில் இறங்கி விடும். அனுபவத்தின் நினைவுகளை காலம் முழுவதும் முயன்றாலும் இல்லாமல் செய்துவிட முடியுமா?

இந்த கனவு முதன்முதல் தோன்றியது சுமார் ஆறு வாரங்களுக்கு முன்னால். 'நாம டூர் போய் ரொம்ப நாள் ஆயாச்சு. ஆறு வருஷமா கேரளா மலை மேல ஏறி எறங்கிட்டு இருக்கோம். இந்த வருஷம் கொஞ்ச தூரமா டெல்லிவரைக்கும் போயிட்டு வரலாமா?' அப்பாவின் இந்த கேள்வி, ஷக்தியின், அவள் அக்காவின் பயணக்கனவுகளை தொடங்கி வைத்தது. கனவுகள்தானே வாழ்க்கையை வாழவைக்கின்றன. அகாலத்திலிருந்து காலத்திற்கு வாழ்க்கயை உந்தி தள்ளுகிறது. பயணம் கல்வியின் தவிர்க்க முடியாத கிளை. ஷக்தியின், அக்காவின் மனம் சரியான திசையில்தான்  அதன் கற்பனையை விரித்தெடுக்கிறது.

பயணக்கனவை நிகழ்வாக்கும் முயற்சிகளும், திட்டமிடலும் தொடங்கிவிட்டன. பயணம், கல்வியின் நடைமுறையாக இருக்கவேண்டுமானால், அதன் மூலம் பெறும் அனுபவங்களும் எதார்த்தத்தை நோக்கி இருந்தாக வேண்டும். விரும்பினால், ஷக்தி பள்ளி விடுமுறை நாட்களில், விமான பயணத்தின் மூலம் விரும்பிய இடங்களை பார்த்து வரலாம்.. அத்தகைய பயணத்தில் பெறும் அனுபவம் வெறும் மேட்டுமைத்தனத்துடன் மட்டுமே இருக்க முடியும். அந்த அனுபவத்திற்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சியை அனுபவிப்பதற்கும் அதிக வித்தியாசம் எதுவும் இல்லை. பயணம் அதிகபட்ச உலக அனுபவத்தை அளித்தாக வேண்டும். பரந்த அனுபவத்தை, நீண்ட பயணத்தின் நிலத்தோற்றத்தை, இடத்திற்கு இடம் உள்ள வேறுபாடுகளை ..........

அவர்களை சாதாரண ரயில் பயணத்திற்கு தயாராக்க வேண்டும்

'ஒங்க ரண்டுபேருக்கும் வெளையாடுறது பிடிக்குமா? வெளையாட்ட பாக்கிறது பிடிக்குமா?'
'வெளையாடதான் பிடிக்கும். ஏன்?'

'வெளையாடினா ஒடம்பு வலிக்குமே, செரியா வெளையாடலைன்னா தோத்து போகவும் வேண்டிவருமே? தோத்தாலும் பரவாயில்லையா?'

'நாங்க தோக்க மாட்டோம். ஒங்களதான் தோக்க வைப்போம்'

அவர்கள் நம்பிக்கை வாழ்க! நம்பிக்கை அழியாமல் இருக்க வேண்டும். தோற்றாலும், நம்பிக்கை மீண்டும் துளிர்க்க வேண்டும். வெற்றி தோல்வி என எதுவும் இல்லை, அனுபவம் மட்டுமே உண்டு என்னும் தெளிவு பிறக்க வேண்டும். எல்லா அழிவுகளின் எச்சங்களும், புதிய துளிர்ப்புக்கான உரங்களே என்பதை அவர்கள் அறியவும் வேண்டும். அவர்களை உயிர்ப்புடன் இருக்க அவர்கள் சுற்றம் அனுமதித்தால், அல்லது சுற்றங்களின் அழுத்தங்களில் தங்கள் உயிர்ப்பை இழக்காமல் இருந்தால், இந்த நம்பிக்கை எப்போதும் அழியாது. அறிதல் அந்த நம்பிக்கையின் தன்மையை உண்மைக்கு அருகில் எடுத்துச் சென்றுகொண்டேயிருக்கும்.

'அப்ப டூர் நாம ட்ரெயின்லேயே, ஸ்லிப்பர் கோச்சுல போவோம். அதுதான் வெளையாடுறது. நெறைய நாள் ஸ்கூல் லீவு போடலாம். ஃபிளைட்ல போய் சுத்துறது வெளையாட்ட தூர இருந்து பாக்கிறது போலதான். ஸ்கூல் லீவு எடுக்கவும் தேவை வராது.'

'ட்ரெயின்லேயே போலாம்பா. ஸ்கூல் லீவு எடுக்காம போனா, போன மாதிரி இருக்காதே. ரண்டு வாரம் கூட லீவ் போடலாம் தேவிஷா எனக்காக நோட்ஸ் எல்லாம் எடுத்து வச்சிருப்பா. அக்காக்க ஃப்ரெண்டும் அவளுக்கு நோட்ஸ் எடுத்து வச்சிருப்பா. நாங்க வந்து படிச்சிடுவோம்'

'ரண்டு நாள் ட்ரெயின்ல இருக்கணும். பகல்ல ரெம்ப சூடா இருக்கும். முடியுமா'?'

'போலாம்பா', 'போலாம்பா' கற்பனையின் போதையில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் இருவருக்கும் தெரியவில்லை.

ஷக்தியும் அவள் அக்காவும் படிக்கும் பள்ளியின் நிர்வாகம், ஒரு மலையாள அமைப்பால் நிர்வகிக்கப்படுவது. ஒவ்வோரு வருடமும், ஓணம் பண்டிகைக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்படும். தோராயமாக, அந்த விடுமுறையில் வருமாறு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த வருடம் இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டது. அதுவும் பயணத்தேதிகள் முடிந்த பின்னால்! எவ்வாறாயினும் பயணம் முடிவு செய்யப்பட்டு விட்டது. ஆறு நாட்கள் பள்ளிக்கு போகமுடியாது. அவர்களுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. ஆறு நாட்கள் பள்ளிக்கு போக வேண்டியதில்லை. எவ்வளவு பெரிய விஷயம். மகிழ்ச்சி இருமடங்காகியது!

'ஒங்க லக்கேஜ, நானோ அம்மாவோ தூக்க மாட்டோம். ஒங்க பிரச்சன ஒங்களோடது. அதுக்கேத்த மாதிரி ஒங்களுக்கு தேவையான, தூக்க முடிஞ்ச துணிகள மட்டும் எடுத்து வைங்க'
'ட்ரெயின்ல ஏறுனா, ரண்டு நாள் ட்ரெயின்ல இருக்கணும். படிக்க புத்தகம் எதாவது வேணும்னா எடுத்து வச்சிடுங்க. அதையும் நீங்கதான் தூக்கணும்.'
'பத்து நாளுக்கு வீட்டு சாப்பாடு மாதிரி எதுவும் கெடைக்காது. கெடைக்கிறத சாப்பிடணும். இல்லைன்ன வெளையாட்டுல தோத்துப்போக வேண்டியதுதான். எங்களையும் தோத்துப்போக வச்சிடுவீங்க'

'நாம எடம் பாக்க சுத்துறது எல்லாம், பஸ், மெட்ரோட்ரெயின், ஆட்டோ-விலதான். அழுக்கா இருக்கும், நாற்றமாவும், நெருக்கமாவும், புழுக்கமாவும் இருக்கும். அழகு எல்லா எடத்திலேயும் அழுக்குக்கு பக்கத்திலதான் இருக்கும். அழுக்க விட்டுட்டு அழக மட்டும் பாக்கிறதும், வெளையாடாம வெளையாட்ட பாக்கிறதுதான்.'

பயண விதிகள் அவர்களுக்கு விளக்கப்பட்டன. எதிர் கொள்ள சாத்தியமான பிரச்சனைகளும் அறிய வைக்கப்பட்டன. கனவின் சுவையில் விதிகளின் யதார்த்தம் முழுமையாக மனதுக்குள் நுழையவில்லை. எனினும் ஒரு சந்தேகம் மனதின் ஒரத்தில் வெளிப்பட, அதன் எதிரொளி, முகத்திலும் சற்றே விரிந்தது.

'ஒங்களால முடியுமா'

'பாக்கலாம். நீங்கதான் கூட வாரீங்களே' - ஒரு முழுமையான பதிலை கூறி எந்த ஒரு பொறியிலும் மாட்டி விடக்கூடாது என்னும் தெளிவும், பிரச்சனையை அடுத்தவர்கள் மேல் தள்ளி விடும் சாதுர்யமும்(?)  இருவரிடமும் இருந்தது.

குதிரை வண்டியில் கட்டப்பட்டிருக்கும் குதிரைக்கு முன்னால் புல்கட்டு ஒன்றை கட்டி விடுவார்களாம். புல்லை கடிக்க குதிரை நடக்க, அத்துடன் வண்டியும் இழுபட, புல்கட்டும் முன்னால் செல்ல....ஷக்திக்கும், அவள் அக்காவுக்கும் முன்னால் ஒரு புல்கட்டு தெரிகிறது. என்ன, இன்னும் மூன்று வாரங்களில் புல்கட்டு அவர்கள் வாய்க்குள் இருக்கும். கிட்டத்தட்ட சுமார் மூன்று வாரங்களுக்கு, முழுமையாக அவர்களுக்கு கசப்பையளிக்கும் செயல்களையும், 'புல்கட்டை' காட்டியே செய்ய வைக்கப்பட்டனர்.

 'ஷக்தி டெல்லயில நடந்து நடந்து எடம் பாக்க ஹெல்த் வேணும். இன்னைக்கு வீட சுற்றி நீயும் அக்காவம் அம்பது ரவுண்ட் ஓடுங்க, 700 தடவை ஸ்கிப்பிங் பண்ணணுங்க'

 தினமும் இருபத்தைந்து ரவுண்ட் ஒடுவதற்கே சிணுங்கும் ஷக்தியும் அக்காவும், முகத்தில் தோன்றிய சிணுங்கலை மறைக்கவும் முடியாமல் காட்டவும் முடியாமல், 'ஓகே அப்பா' என்ற வார்த்தையுடன் ஓடவும் தொடங்கி விட்டார்கள். ஆச்சரியம்! ஆச்சரியம்!

'ஷக்தி ஸ்கூலுக்கு  ஆறு நாள் மட்டம் போடப்போற. வந்த உடனேயே டெஸ்ட் இருக்கு, இன்னிக்கு டெஸ்ட்டுக்கு படிச்சுட்டு தூங்க போ'

'இன்னிக்கு நெறய படிச்சாச்சு. டெஸ்ட்டுக்கு வந்து படிக்கலாம்'

'டெஸ்ட்டுக்கு படிக்கலைன்னா டிக்கட் கேன்சல் பண்ணிடலாம். டூர் போகண்டாம்'

'செரி, கொஞ்சம் இன்னிக்கு படிக்கிறன். மீதி நாளை படிக்கவா?'

இன்னும் எத்தனையோ மிரட்டல்களுக்கு அடிபணிய வைக்கப்பட்டார்கள். இத்தனைக்கும் காரணம் ஒரு கனவு. அதன் சுவை. மூளையின், மனதின் ஒவ்வொரு பகுதியும் கனவுகளை தோற்றுவிக்க வல்லது. அவர்களுக்கான கனவுகள் தோன்ற வேண்டும். பிறர் கனவுகளை காண்பதை தவிர்க்க வேண்டும். எனில் அவர்களுக்கான வாழ்க்கையையும் வாழ்வார்கள்.

அந்த பயண நாளும் வந்தது. கனவு நிகழ்வாக மாற தொடங்கியது. நிகழ்வுகளின் யதார்த்தம் சிறிது சிறிதாக உருவேற தொடங்கியது. அகாலத்தில் இருந்து காலத்தில் அதன் லீலையை தொடங்கிவிட்டது. அவர்களுக்கான துணிமணிகள் அம்மாவால், அவர்களின் முழு அனுமதியுடன், எடுத்து வைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் நாகர்கோவில் புத்தக கண்காட்சியில் அவர்களுக்காக அவர்களே வாங்கிய அல்லது வாங்க வைக்கப்பட்ட புத்தகங்களும் எடுக்கப்பட்டன. இருவருக்குமான பயணப்பை தயாராகி விட்டது. அதுவும் அவர்களால் கையாளப்படும் அளவுக்கே, பள்ளி புத்தகச்சுமையில் பாதிக்கும் குறைந்த அளவுக்கே இருந்தது. திருவனந்தபுரம் சென்று, பெற்றோருடன், கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலிலும் ஏறி விட்டார்கள்.

48 மணி நேர பயணம், ஆக்ரா வரை. பல் வேறு கால நிலைகள், நில அமைப்புகள், மக்கள், மொழிகள், அனுபவங்கள்! உறக்கம், விழிப்பு, வேடிக்கை, படிப்பு, உணர்வு, சிந்தனை, அனுபவம்! ஆக்ரா சென்று சேர்ந்தது ஒரு வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை தாஜ்மஹால் மூடி இருப்பார்களாம். யதார்த்தம் ஒன்று மனதில் உதைத்தது. தாஜ்மஹால் அடுத்த நாள்தான் பார்க்க முடியும். ஆக்ரா கோட்டையில் சுமார் இரண்டு மணி நேரம் நடை. ஒரத்தில் பாயும் யமுனை நதியும், அதன் கரையோரமாக தூரத்தில் தெரிந்த தாஜ்மஹாலும் மூளையில் அதுஅதற்கான இடத்தையும் பிடித்து விட்டன. கனவு நிகழ்வாகும்போது, கனவு இல்லாமல் ஆகிறது. நிகழ்வு நினைவாகிறது. நினைவுகள், புதிய கனவுகளின் கருவாகிறது.

நிகழ்வின் யதார்த்தம் ஷக்தியையும் அவள் அக்காவையும் சற்று நிலைகுலையவும் வைத்து விட்டது. மதிய வெயிலில், ஆக்ரா கோட்டையும், நாறும் ஆக்ரா வீதிகளின் வழியாக பேருந்து நிலையத்திற்கு சென்ற நிகழ்வுகளும், அங்கிருந்து மதுரா செல்லும் பேருந்தின் அவல நிலையும், 'குட்கா' வாசனையில் மூழ்கியிருந்த பேருந்து இருக்கைகளும் கற்பனை கோட்டைகளின் மேல் தாக்குதல்களை தொடர்ந்தன. கிருஷ்ணனை குறித்து அவர்கள் அறிந்திருந்தவை, புதிய கனவுகளாக வந்து 90 நிமிட மதுரா பயணத்தையும் சற்றே எளிமையாக்கின. பின் ஆக்ராவிற்கான 90 நிமிட பயணமும் முடிந்து விட்டது. அடுத்த சில நாட்கள் ஆக்ரா, ஜெய்ப்பூர், டெல்லி என கழிந்தது.

டெல்லி சென்று சேர்ந்த அடுத்த நாள், மனகோட்டை முழுமையாக கலையும் நிலைக்கு மிக அருகில் வந்தது.

'அம்மா முடியல, ஹோட்டல்லேயே இருக்கலாம்' கனவுகள் கலையும் வேகத்தில், நிகழ்வுகளின் யதார்த்தம் முதலில் ஷக்தியின் அக்காவை தாக்கியது. எட்டிப்பார்த்த காய்ச்சலை, கையுடன் கொண்டு வந்திருந்த மருந்துகளால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, சற்றே குறைவான தீவிரத்துடன் அன்றைய பொழுது கழிந்தது. இருந்தாலும் அவர்கள் எதிர்பார்ப்பின் தீவிரம் நிகழ்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம் மூன்று நாட்கள் டெல்லியிலும் நல்ல படியாக கழிந்து, சென்னைக்கு ரயிலும் ஏறி விட்டார்கள். பின், சென்னையிலிருந்து வீடு நோக்கியும்.
குழித்துறை நிலையத்தில் இறங்கிய போது, கனவு முழுமையாக முடிந்து விட்டது. நினைவகளாக எஞ்சிய அனுபங்களுடன்.

'ஷக்தி, அடுத்த டூர் எங்க போலாம்'

'இனி எங்கயும் போகண்டாம்' கனவு நிகழ்ந்ததில் ஏற்பட்ட சலனங்களும், நிகழ்வுகளின் யதார்த்தமும் குழந்தைகளை பாதித்திருக்க கூடும். சில நாட்களுக்கு யதார்த்தத்தின் சுமை அவர்கள் மனதில் இருந்து கொண்டிருக்கும். சுமை இறங்கியபின், நினைவுகள் கனவின் சுவையை மீட்டளிக்க கூடும்.


அவர்கள் குழந்தைகள். நிகழ்வுகளின் நினைவுகள் அவர்கள் மனதின் மேல் பரப்புக்கு எழுந்து வரும். நினைவுகள் சூல் கொண்ட கனவுகள் முளைத்துக்கொண்டே இருக்கும். அதனால் உந்தப்பட்ட வாழ்க்கையும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். ஆனால் கனவுகளின் கருப்பை மலடாக்கப்படாமல் இருக்க வேண்டும்

பின் குறிப்பு;

எழுதும் முறையை சற்று மாற்றி ஒரு முயற்சி. இதை சிறுகதை என்று கூற முடியுமா? வடிவ அமைப்புக்கு தன் கருத்துகளை அளித்து உதவிய ரகுநாத் -க்கு நன்றிகள்.

blog.change@gmail.com

No comments: