Friday, August 23, 2013

நுகர்வெனும் பெரும்பசி - 3

நம் அனைவரின் அடிப்படை நுகர்வு உணவே ஆகும். இன்று, நாம் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்தபின், உணவை தேவைக்கு உண்பதுடன் பொழுதுபோக்கிற்கான கருவியாகவும் பயன்படுத்த தொடங்கியிருக்கிறோம். பொழுது போக்கு கருவியாக உணவு மாறும்போது நாம் வீணாக்கும் உணவின் அளவும் அதிகரிக்கிறது. கீழே இருப்பது உணவு குறித்த சிறு புள்ளிவிவரம்.

சுமார் 870 மில்லியன் மக்கள் உலகம் முழுவதுமாக, போதிய உணவு இல்லாமல் இருக்கிறார்கள். இது உலக மக்கள் தொகையில் 11 சதவிகிதத்தை விட அதிகம். ஆனால் அனைவருக்கும் போதுமான அளவு (2720 கலோரி- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நபருக்கும்) உணவு உற்பத்தி செய்யப்படுகிறது.

நம் உடல் 70% நீரால் ஆனாது. நீர் இன்றி நம் உணவு இல்லை, நாமும் இல்லை. நாம் நுகரும் நீர் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. 1) நேரடி நுகர்வு (Domestic Consumption), 2) மறை நுகர்வு (Virtual Consumption). இதில் மறை நுகர்வு மேலும் இரண்டாக பிரிக்கப்படுகிறது. 1) நாம் தினம் தோறும் நுகரும் பொருட்களை உருவாக்குவதற்காக செலவிடப்படும் நீர், 2) நாம் உண்ணும் அல்லது வீணாக்கும் உணவை விளைவிப்பதற்கு அல்லது உருவாக்குவதற்கு செலவிடப்படும் நீர். கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு கிலோ உணவு பொருளை உருவாக்க செலவிடப்படும் மறை நீரின் அளவு.

       உணவு பொருள் (ஒரு கிலோ)
நீர் அளவு - லிட்டரில்
 காப்பி கொட்டை
18900
மாட்டிறைச்சி
15400
ஆட்டிறைச்சி
5500
கோழி இறைச்சி
4300
பாலாடை கட்டி
3180
அரிசி
2500
கோதுமை
1830
சர்க்கரை
1780
சோளம்
1220
பால்
1000
ஆப்பிள்
822
                   
வட அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் இந்தியா அல்லது சைனாவில் வசிக்கும் ஒருவரை விட 3 மடங்கு அதிக நீரை உபயோகிக்கிறார். மத்திய ஆப்பிரிக்காவில் வாழும் ஒருவர், வட அமெரிக்கர் உபயோகிக்கும் நீரில் கிட்டதட்ட இரண்டு சதவிகித நீரிலேயே தன் வாழ்க்கையை கழிக்கிறார். தற்போதைய ஐரோப்பிய அல்லது வட அமெரிக்க வாழ்க்கை முறை உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டால், பூமியில் தற்போது உள்ளதை விட 3.5 மடங்கு அதிக நன்நீர் (Fresh water) தேவைப்படும். வேறு வார்த்தைகளில் கூறினால், பூமியில் உள்ள மொத்த நன்நீரும் உலகில் வாழும் மக்களில் மூன்றில் ஒரு பங்கினரையும் விட குறைவானவர்களுக்கே போதுமானதாக இருக்கும். தற்போதைய வாழ்க்கை முறையை நாம் மிக விரைவாக மாற்றியமைக்காவிட்டால் 2025 வது வருடத்தில், இப்போதைய நீர் தேவையின் வளர்ச்சி விகிதத்தில் கணக்கிட்டால், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் போதுமான நீர் ஆதாரம் இல்லாத நிலையில் வசிக்க வேண்டியிருக்கும்.

நமது நுகர்வு, நம்மை வெகு வேகமாக எங்கே அழைத்து செல்கிறது என்பது ஓரளவு தெளிவாகியிருக்கும். மேலும் பார்ப்போம்!

2010 ஆம் ஆண்டு, உலகம் முழுவதிலிருந்தும் 31.8 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு, ஆற்றலுக்காக மட்டும் வெளியிடப்பட்டுளதாக கணக்கிடப்பட்டுள்ளது. காற்று வெளியில் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு, பூமி சூடாவதற்கான முக்கியமான காரணி என்பதை நாம் அனைவரும் அறிவோம். 21 ஆம் நூற்றாண்டில், கார்பன் டை ஆக்சைடு வெளியீடு, வருஷத்திற்கு 3.4 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இது, முந்தைய பத்தாண்டுகளின் வெளியீட்டு அதிகரிப்பான வருஷத்திற்கு 1% என்பதை விட மிகவும் அதிகமாகும். ஆக நம் நுகர்வு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது இன்னும் தெளிவாகியிருக்கும்.

2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு புள்ளி விபரம் - சுமார் 23% கார்பன் டை ஆக்சைடு வெளியீடுக்கு காரணமான உற்பத்தி செய்யப்பட்ட பொருள், உற்பத்தி செய்த நாட்டிலிருந்து பிற நாடுகளின் நுகர்வுக்காக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிபரத்தின் படி சைனா 1.4 GT (Giga Ton) அளவுக்கு கார்பன் டை ஆக்சைடை வெளியிட்டு உற்பத்தி செய்த பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது. 0.3 GT  அளவுக்கான பொருள்களை இறக்குமதி செய்துள்ளது. இந்தியாவிற்கான இந்த அளவுகள் 0.25 GT ஏற்றுமதி மற்றும் 0.1 GT இறக்குமதி. ஆனால் அமெரிக்காவிற்கோ 0.5 GT ஏற்றுமதி மற்றும் 1.3 GT இறக்குமதி. ஆக உலகத்தை அழிப்பதற்கு காரணமான நுகர்வு யாரால் பெருமளவு மேற்கொள்ளப்படுகிறது என்பது இன்னும் தெளிவாகியிருக்கும்.

நாம் அனைவரும் மின்அணு (Elctronic) பொருட்களின் தீவிர விசிறிகள். ஒரு புதிய செல்பேசி விற்பனைக்கு வந்தால், நமக்கு அது தேவைப்படுகிறதோ இல்லையோ, நம்மைப்பற்றிய  பிம்பத்தை (Image) பிறரிடம் உயர்த்தி பிடிப்பதற்காக அல்லது நம் கற்பனையில் உருவாக்கப்பட்ட பிற காரணங்களுக்காக அந்த புதிய வகை செல்பேசியை வாங்கி, பழையதை குப்பையில் வீசுகிறோம். நாம் உபயோகப்படுத்தும் செல்பேசிகள் 200 முதல் 300 கிராம் வரை இருக்கலாம். இதனை உருவாக்க சுமார் 112 கிலோ CO2 காற்றுமண்டலத்தில் வெளியிடப்படுகிறது. இது தவிர அந்த செல்பேசி, அது உருவான இடத்திலிருந்து நம்மை வந்து அடைவதக்கு முன் அது எடுத்துக்கொள்ளும் சக்தி மற்றும் அதன் உருவாக்கத்திற்கும், நம்மை வந்து அடைவதற்கும் எடுத்துக்கொள்ளும் நீரின் அளவையும் நம்மால் ஓரளவு கற்பனை செய்து கொள்ள முடியலாம். ஆக, நம் பிம்பத்தை தக்கவைத்து கொள்வதற்காக நாமும் நம் சந்ததியும் வாழ வேண்டிய நம் சூழலை தொடர்ந்து அழித்து கொண்டிருக்கிறோம். நாம் உண்மையில் விரும்பினால், இதைப்போல நம் பிம்பத்தை உயர்த்திபிடிப்பதற்காக நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும், அது எத்தகைய முக்கியத்துவத்தை உடையதாக அல்லது இல்லாததாக இருந்தாலும், நமது சூழலில் அது ஏற்படுத்தும் விளைவுகளை நம்மால் கற்பனை செய்ய முடிந்தால், நம் பிம்பத்தை விட நமது மற்றும் நம் சந்ததியினரின் வாழ்க்கையே முக்கியம் என்னும் முடிவுக்கு வர முடியலாம். அத்தகைய முடிவுக்கு நம்மால் வர முடிந்தால், நம் வாழ்க்கையும் மிக எளிமையானதாக மாறிவிடும்.

ஆம் பிரச்சினையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. நம்மல் என்ன செய்ய முடியும். அரசாங்கங்கள்தான் கொள்கை முடிவுகளை எடுத்து, மிக கவனமாக இதற்கு பரிகாரம் தேடவேண்டும் என நினைத்து நாம் செயல்படாமல் இருந்தால், அது நம் கையாலாகாதனம் மட்டுமே. வாழ்வில் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளும் நம் தயக்கம் மட்டுமே. ஏனெனில் அரசாங்கம் என்பது நம்மைப்போன்றவர்களால் நடத்தப்படும் அமைப்பு. நாம் மாறாமல், அவர்கள் மட்டும் நாம் எண்ணுவதை அவர்களாகவே புரிந்து கொண்டு இயங்க வேண்டும் என நினைத்தால், சிறுபிள்ளைத்தனமான நினைப்புக்கும், நமது இந்த நினைப்புகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அல்லது நாமே நம் வாழ்க்கை முறையை முழுவதுமாக மாற்றி அமைக்கவேண்டும், நம் நுகர்வை உடனடியாக கட்டுப்படுத்தவேண்டும் என்னும் சிபாரிசுகளை முன் வைத்தால், அவற்றாலும் எந்த பயனும் இல்லை.

எனில் நாம் என்னதான் செய்வது. இந்தப்பிரச்சினையை அறிவ பூர்வமாக, நுண்ணறிவுபூர்வமாக அணுகுதலே சாத்தியமான தீர்வுகளை உருவாக்கும். அதாவது, நுகர்வு என்னும் பிரச்சினையின் முழு வடிவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு புரிந்து கொள்வது என்பது வெறும் எண்ணங்களால், தர்க்கரீதியாக நிறுவுவது மட்டுமில்லை. அதற்கும் மேலே செயல்படுவது. உதாரணமாக நாம் அலுவலகத்திலிருந்து தினமும் வீடு செல்லும் பாதையில் அந்த குறிப்பிட்ட நாளில் ஆபத்து இருப்பதாக புரிந்து கொண்டால், வெறும் தர்க்கபூர்வமாக, ஆம் ஆபத்து உள்ளது என்று கூறிக்கொண்டு, அதே பாதையில் சென்று கொண்டிருக்க மாட்டோம். மாற்றுப்பாதையை நம் அறிவால் அறிந்து அந்த மாற்றுப்பாதையில் வீடு சென்று சேர்வோம். தற்போதைய நம் நுகர்வு பாதையில் ஆபத்து உள்ளது என உண்மையில் நம்மால் புரிந்து கொள்ள முடிந்தால், எவரும் கூறாமலே நமது தனிப்பட்ட நுகர்வுக்கான மாற்று பாதைகளை ஆராய தொடங்குவோம்.

[மேலும்]
blog.change@gmail.com

தொடர்புடைய பதிவுகள்;     நுகர்வெனும்பெரும்பசி - 1
                           நுகர்வெனும்பெரும்பசி - 2
                           தேவைக்கேற்றநுகர்வு

                           Commercialism &Consumerism

No comments: