Friday, December 30, 2011

பக்தி, ஆன்மீகம்

தற்போதைய காலகட்டத்தில் பக்தி என்பது ஒரு பாவனையாக மாற்றப்பட்டு, அந்த பாவனையுடன் இருப்பதே ஆன்மீகம் என்னும் ஒரு மாயை மிகப் பரவலாக உள்ளது. மேலும் இன்றையப் பொதுத் தளத்தில் பக்தி என்னும் கருத்து மிகவும் திரிவடைந்து உள்ளது – கடவுள் என்னும் கருத்தை நோக்கி வேண்டுதல்களை முன் வைப்பது அல்லது கடவுள் என்னும் கருத்தை நோக்கி சேவைகள் செய்வது. ஆனால் ஆன்மீக தளத்தில் பக்தி என்பதன் அர்த்தம் முற்றிலும் வேறானதாகவே இருக்க வேண்டும். அது நமக்குள் இருக்கும், ஆனால் நாம் இழந்துவிட்ட உணர்திறனை வீரியத்துடன் வெளிக்கொண்டு வரும் கருவி. பக்தியின் உண்மையான பயன்பாடு நமக்கு தெரியாவிட்டால், அந்த பக்தியால் எந்த பயனும் இல்லை – அது ஒரு உளவியல் அணிகலனாக மட்டுமே இருக்க முடியும், ‘நான்’ என்னும் கருத்தை மெருகூட்டுவதற்காக!


பக்தி என்பது, முழு அற்பணிப்பு அல்லது முழு ஈடுபாடு அல்லது முழுமையான சரணடைவு (devotion/surrender) என்பதன் குறியீடு. ஆன்மீகத்தின் எந்த வழியை பின்பற்றினாலும், முழுமையை அடைவதற்கு பக்தி என்பது மிக அவசியமானதாக இருக்க கூடும். முழுமையான சரணடைதல் என்னும் படி இல்லாமல் ஆன்மீகத்தில் உச்ச நிலையை அடைய முடியும் என்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை. ஆன்மீகத்தில் காணப்படும் எல்லா அறிதல் முறைகளும், எல்லா தத்துவங்களும், எல்லா பயிற்சிகளும் முழுமையான சரணடைதலுக்காக நம் மனதை பண்படுத்துவதாகவே இருக்கும். அத்தகைய அறிதல்களும், தத்துவ விசாரணைகளும், பயிற்சிகளும் இல்லாமல் பக்தி என்னும் நிலையை நம்மால் அடைய முடியுமா? நம் தற்போதைய மன நிலையில், நம்மை விட பெரிதாக நாம் கருதும் ஒன்றிடம் (அந்த ஒன்று, கடவுளாக அல்லது கடவுள் என்னும் கருத்தாக கூட இருக்கலாம்) நம்மால் முழுமையாக சரணடைய முடியுமா? அவ்வாறு முடியாவிட்டால், நாம் பக்தி என கூறுவதன் அர்த்தம் என்ன? நம் மூளையைக் குறித்து நம்மிடம் உள்ள எளிய அறிவும், நம் சுற்று சூழலை கவனிப்பதுமே இந்த கேள்விகளுக்கு விடையளிக்க போதுமானவையாக இருக்க கூடும்.

நம் மூளை, அதன் அன்றாட செயல்பாட்டின் அடிப்படையில், இரண்டு பகுதிகளாக பிரிக்கப் பட்டுள்ளது – இடது மூளை மற்றும் வலது மூளை. இடது மூளை தர்க்க ரீதியான நம் செயல்பாடுகளில் உபயோகப்படுத்தப் படுகிறது. வலது மூளை உணர்வு சார்ந்த செயல்பாடுகளில் உபயோகப்படுத்தப் படுகிறது. நம் ஒவ்வொருவரும் மூளையின் இந்த இரண்டு பகுதிகளையும் உபயோகப்படுத்தியாக வேண்டும். ஆனால் எந்த பகுதியை அதிகமாக உபயோகப்படுத்துகிறோம் என்பது நம் தனிமனித இயல்பைச் சார்ந்தது.

ஆன்மீகத்தின் நோக்கம் நம்மை நாமே முழுமையாக அறிவது அல்லது உணர்வது. நம்முள் இருக்கும் கடவள் தன்மையை முழுமையாக உணர்வது – அதை நாம் ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவது அல்லது உணர்வது எனக்கூறினாலும், ஜீவாத்மா பரமாத்வாவின் காலடியை சேர்வது எனக்கூறினாலும், கடவுளை அடைவது எனக்கூறினாலும், கடவள் தன்மையை அடைவது எனக்கூறினாலும், மோக்ஷ்சம் எனக்கூறினாலும், சமாதி நிலை எனக்கூறினாலும், நிர்வாணம் எனக்கூறினாலும், இன்னும் வேறு எதுவுமெனக்கூறினாலும்!

நம்மை முழுமையாக உணர்வது என்பது, நம் அறிதல் என்னும் செயல்பாட்டில் வலது மூளை முழுமையாக ஈடுபடுவது மட்டுமாகவே இருக்க முடியும். அதாவது, அறிதலில் இடது மூளையின் தர்க்கத்தின் இடர்பாடு இல்லாமல் வலது மூளை முழுவதுமாக, முழு உணர்வு நிலையில் ஈடுபட்டிருப்பதாகும். அத்தகைய நிலையை நாம் அடையும்வரை, முழுமையான சரணடைத்தல் என்பதற்கு சாத்தியமே இல்லை. வலது மூளையின் ஒவ்வொரு சரண்டையும் முயற்சியிலும், இடது மூளை அதன் தர்க்கத்தை நிலைநாட்டிக்கொண்டே இருக்கம். எனவே முழுமையான சரணடைதல் என்பதை இடது மூளையின் செயல்பாடு தடுத்துக் கொண்டே இருக்கும்.

வலது மூளையின் செயல்பாட்டின் முதன்மையை அல்லது ஆதிக்கத்தை இயல்பாக கொண்டவர்கள், பக்தி அல்லது சரணடைதல் என்னும் உணர்வு நிலையை முழுமையான அறிதலை நோக்கிச் செல்ல பயன்படுத்தலாம். ஆனால் அவர்களும் இடது மூளையின் செயல்பாட்டைத் தாண்டியே முழுமையை அடைய முடியலாம். இடது மூளையின் முதன்மையை அல்லது ஆதிக்கத்தை இயல்பாக உடையவர்கள், அதன் ஆதிக்கத்தை முற்றிலுமாக இழந்த அல்லது தாண்டிய பின்னர்தான் முழுமையான ஆன்மீக உணர்வை அடைய முடியலாம். இடது மூளையின் ஆதிக்கத்தை இயல்பாக உடையவர்கள், அவர்கள் இயல்பான தர்க்கத்தையே அதை தாண்டிச் செல்ல உபயோகப்படுத்துவதைப் போல, வலது மூளையின் ஆதிக்கத்தை இயல்பாக உடையவர்கள், அவர்கள் இயல்பான உணரும் தன்மையையே இடது மூளையின் இயல்பை தாண்டிவர உபயோகப்படுத்தலாம். ஆனால், அவர்களும் இடது மூளையின் இருப்பை உணர்ந்தாக வேண்டும். இடது மூளையின் இருப்பை அவர்களால் உணரமுடியாவிட்டால், இடது மூளையின் செயல்பாடுகளை தாண்டாவிட்டால், அவர்கள் பக்தி அல்லது சரண்டைதல் எனக் கூறுவது, மனம் அதனையே ஏமாற்றும் ஒரு தந்திரம்(deception) மட்டுமே!

நாம் வாழும் முறையை, உள்நோக்கித் திரும்பி, எப்போதாவது நம்மால் கவனிக்கப் பட்டிருந்தால், நாம் நம்முடைய இயல்பை விட்டு எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம் என்பதை நம்மால் உணர முடியலாம். அதிவேகமாக நாம் வாழும் சூழல் மாறிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், அந்த சூழலுக்கேற்ப நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில்முழுமையாக ஈடுபடுவதால், நம் வாழ்க்கையை அறிவதற்கான சாத்தியங்களையும் நாம் முழுவதுமாக இழந்து விடுகிறோம். அதாவது நம் வாழ்வு முழுவதையும், நமக்கேற்ற சூழலை உருவாக்குவதை விட்டு விட்டு, சூழலுக்கேற்ப நம்மை மாற்றுவதிலேயே செலவழிக்கிறோம். அதாவது, நம் இயல்பை விட்டு விட்டு, மாறும் சூழலுக்கேற்ப நம்மை மாற்றுகிறோம். இதன் மூலம் நம் இயல்பையும் இழந்து விடுகிறோம்.

வலது மூளையின் ஆதிக்கம் உடையவர்கள், அதன் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தாமல், தங்கள் இயல்பிலிருந்து மாற முடியாது. ஆனால் சூழலுக்கேற்ப நாம் மாறுவதில் முனைப்புடன் இருப்பதால், நம் இடது மூளையின் துணைக்கொண்டு நம் இயல்புகளை மறந்து விட்டோம் அல்லது அறியாமல் தவிர்த்து விட்டோம். அதாவது, நாம் ஆன்மீகத்திற்கு எதிரான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம – இடது மூளையின் தர்க்க இயல்பைத் தாண்டி வலது மூளையின் உணர்வு நிலைக்கு வருவதற்கு பதிலாக வலது மூளையின் உணர்வு நிலையை தாண்டி, இடது மூளையின் தர்க்க நிலைக்கு வந்திருக்கிறோம். அவ்வாறு வந்தால் மட்டுமே, வேகமாக மாறிவரும் சூழலுக்கேற்ப நம்மை நம்மால் மாற்றிக்கொள்ளமுடியும்.

நம் உணர்வு நிலைகளை மழுங்கடித்து விட்டு, பக்தி, சரணடைதல் ஆகியவற்றை நம் இயல்பாக நம் மனம் கருதினால், அது நம் மனம் தன்னைத்தானே ஏமாற்றும் தந்திரம் (deception) மட்டுமே. நாம் வலது மூளையின் ஆதிக்கத்தை இயல்பாக உடையவர்களாக இருந்தாலும், அந்த இயல்பை, தற்போதைய நம் வாழ்க்கைச் சூழலில் அறிந்து கொள்ள இடது மூளையின் தர்க்க இயல்பை உபயோகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தத்துவங்களும், தத்துவ மூல நூல்களும் (scriptures) நம் இடது மூளையைன் இயல்பைத் தாண்டி வர நமக்கு உதவலாம் – தத்துவம் அல்லது மூல நூல்களின் பயன்பாடு, மனதின் தர்க்க நிலையை தாண்டி வருவதற்கு பட்டுமே. மனதின் தர்க்க செயல்பாட்டைத் தாண்டி உணர்வின் இயக்கத்திற்கு வரும்போது, நாம் தத்துவங்களையும் மூல நூல்களையும் தாண்டி வந்திருப்போம்! அதன் பின்னர், தர்க்கங்களுக்கும், தத்துவங்களுக்கும், மூல நூல்களுக்கும் எந்த தேவையும் இல்லை!

Sunday, December 11, 2011

தனிமை

புற உலகில் நாம் எத்தனை உறவினர்கள் புடை சூழ இருந்தாலும், எத்தனை நண்பர்கள் சூழ்ந்திருக்க வாழ்ந்தாலும் அகத்தளவில் நம்மில் பெரும்பாலானவர்கள் மிக மிக தனிமையானவர்களே.அந்த தனிமையை அறிவது, ஆன்மீகத்தில் ஒரு முக்கியமான நிலைப்படியாக இருக்க கூடும். அந்த தனிமையை அறிந்தவர்களின் புற உலகப் பார்வை முற்றிலும் வேறானதாக இருக்க கூடும் – சமூக இயக்கத்தின் அடிப்படையை அறிவதன் மூலம். அகத்தனிமை என்றால் என்ன?

நாம் அறிவு எனக் கருதும் நம் அறிவின் ஒரு பகுதி, நம் எண்ணங்களின் பதிவுகளே. இந்த அறிவு நம் புலன்களால் உணரப்பட்டவையும், அனுமானத்தால் பெறப்பட்ட புலன் அறிவின் நீட்சியுமாகும். இந்த அறிவின் பரப்பே நாம் அறியும் உலகத்தின் பரப்புமாகும். ஆக, நாம் அறியும் உலகின் இயல்பு என்பது நம் அறிவின் இயல்பு மற்றும் அறிதலின் இயல்பை சார்ந்தே இருக்கும். மனித இனத்தில், எந்த இருவரின் அறிதல் இயல்பும் அறிவின் இயல்பும் ஒன்று போல் இருக்க சாத்தியம் இல்லை. எனவே நம்மில் எந்த இருவரின் உலகங்களும் ஒன்று போல் இருக்கவும் சாத்தியம் இல்லை. நாம் ஒவ்வொருவரும் நமக்கேயான உலகத்தில் நாம் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நமக்கேயான உலகத்தில், நம் உறவுகளையும், நண்பர்களையும், அறிந்தவர்களையும் நாமே நம்முடன் இணைத்துக் கொண்டுள்ளோம் – அவர்களாக இணையவில்லை, இணையவும் முடியாது. இதே போல, நம் உறவுகளும், நண்பர்களும், நம்மை அறிந்தவர்களும் அவர்களுடைய உலகத்தில் நம்மை இணைத்திருப்பார்கள் – நாமாக இணையவில்லை, நம்மால் இணையவும் முடியாது.

இங்கு எவருமே அடுத்தவர் உலகத்தில் நுழைந்து அவர்கள் தனிமையைப் போக்கவில்லை. ஆனால் அடுத்வர்களை நம் உலகத்தில் நுழைத்து, நம் தனிமையைப் போக்கிவிட்டோமென்ற கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த கற்பனையின் மூலமே நம் தனிமையை மறைத்து அதன் மூலம் துயரங்களிலிருந்து விடுபடும் சாத்தியத்தை மரணம்வரை தள்ளி வைக்கிறோம்.

அத்தகைய தனிமையை எவ்வாறு அறிந்து கொள்வது? ஒருவேளை ஆன்மீகத்தின் சாரமே இந்த தனிமையை அறிந்து கொள்வதாக இருக்க கூடும் – ஆன்மீகத்தை ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது. நமக்கேயான நம் உலகத்தை, அதன் இயல்புகளுடன் அறிந்து கொள்ளும்போதுதான் நம் தனிமையை உணர முடியலாம். நாம்முடைய உலகை அறிய முற்படும்போது, அது முழுவதும் நம் இயல்பை சார்ந்து இருக்கும் என்பதை அறிவோம். இந்த அறிதல், பிறருடைய உலகம், அவர்களின் இயல்பை சார்ந்தே இருக்கும் என்னும் அறிவுக்கு நம்மை எடுத்துச் செல்லலாம். இந்த ஜட உலகில், நம் இயல்பைப் போன்ற இயல்புடைய இன்னொருவார் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்னும் உண்மையை நாம் அறிய நேரிட்டால், இந்த உலகில் நாம் அகவயமாக எவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை உணரலாம். அதாவது, இந்த உலகை நாம் பார்க்கும் அதே பார்வையில் பார்க்கும் இன்னொருவர் இல்லாமல் இருப்பதால் நம் உணர்வுகளை அறியக்கூடிய இன்னொருவார் இந்த உலகில் இல்லை. நம் உணர்வை பிறரால் அனுமானிக்க மட்டுமே முடியும் – அதுவம் அவர்களின் அனுமானிக்கும் தன்மையைப் பொறுத்தது.

புறவயத்தில் நாம் உறவுகளும் நட்புகளும் சூழ இருக்கையில், அகவயத் தனிமையின் முக்கியத்துவம் என்ன? நம் வாழ்க்கையில் உணவு மற்றும் உடல்ரீதியான பாதுகாப்பும் சில அடிப்படைத் தேவைகளும் தவிர மற்ற அனைத்து வாழ்வின் அம்சங்களும் உளவியல் சார்ந்தவையே – நம் மகிழ்ச்சியும் துயரங்களும் கூட. உறவுகள் மற்றும் நட்புகள் குறித்த நம் உளவியல் இயக்கங்களே பெரும்பான்மையான நம் மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் தீர்மானிக்கிறது. புறவயத் தேவைகளுக்காக நம்முடன் இருக்கும் உறவுகளும் நட்புகளும், மன இயக்கங்கள் சார்ந்தும் நம்முடன் உறவுடன் இருக்கிறார்கள் என்னும் மாயையில் நாம் இருக்கும்போது, உண்மையில் அத்தகைய உறவுகள் மன இயக்கங்கள் அளவில் இல்லாததால், நம் உறவுகள் மற்றும் நட்புகளுடன் முரண்பட நேரிடுகிறது. இந்த முரண்பாடுகளே பெரும்பான்மையான நம் துயரங்களுக்கு காரணமாக இருக்க கூடும்.


மன இயக்கங்கள் சார்ந்து, உறவுடன் இருப்பது என்பது, சாதாரண நிலையில் இரண்டு மனிதர்களுக்கு இடையே சாத்தியமற்றது. இரண்டு மனிதர்கள் ஒரே வகையிலான மன எழுச்சியில், மனதில் பிற எண்ணங்கள் இல்லாமல் இருக்கும்போது மட்டுமே அத்தகைய உறவு சாத்தியமாக கூடும். சாதாரண நிலையில், அத்தகைய மன எழுச்சி ஏற்பட்டாலும், மனதில் எண்ணங்கள் இல்லாத மன எழுச்சி நிலை சில வினாடிகளுக்கு மேல் தொடர வாய்ப்பில்லை. ஆகவே, உண்மையிலேயே நாம் யாருடனாவது உறவுடன் இருந்திருப்போம் என்றால் அது நம் நீண்ட வாழ்க்கையில் ஒரு சில வினாடிகள் மட்டுமே – அல்லது அத்தகைய நேரங்களின் கூட்டுத் தொகை ஒரு சில நிமிடங்கள் மட்டுமே.

நம் அகவயத்தனிமையை உண்மையிலேயே உணரும்போது, நம் உளவியல் தேவைகளுக்காக நாம் எவரையும் சார்ந்திருக்க மாட்டோம் – அவர்கள் நம் மனைவி\கணவனாக இருந்தாலும், வாரிசுகளாக இருந்தாலும், பெற்றோராக இருந்தாலும், பிரிக்க முடியாத (!) நட்புகளாக இருந்தாலும். இத்தகைய உளவியல் விடுதலையில் மனம் இருக்கும்போது, பிறரிடமிருந்து – அவர்கள் யாராக இருந்தாலும், எந்தவித எதிர்பார்ப்பும் இருக்காது. எதிர்பார்ப்புகள் இல்லாத மனத்திற்கு தோல்விகள் இல்லை. எனவே துயரங்களும் இல்லை.

Friday, December 2, 2011

மதங்கள், நம்பிக்கைகள், சடங்குகள்

ஆன்மீகம் என்பது மதங்கள், நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் இவை போன்றவற்றிலிருந்து முற்றிலும் வேறானது. ஆனால் மதங்களும் நம்பிக்கைகளும் சடங்குகளும் ஆன்மீகம் முளை விடுவதற்கு ஒரு அடிப்படை காரணமாக இருக்க கூடும். ஒரு ஆன்மீகவாதி எப்போதுமே மதவாதியாக இருக்க முடியாது. ஆனால் பெரும்பாலும் மதங்களாலும் அதைச் சாரந்த நம்பிக்கைகாளாலும் குறியீடுகளாலும் பண்படுத்தப்பட்ட ஒரு சமூகத்திலுருந்துதான் ஆன்மீகவாதி வெளிப்பட சாத்தியங்கள் அதிகமாக இருக்கலாம்.

மதம் என்பது ஆன்மீக வெளிப்பாடுகளை சமூகத்தில் பரவ செய்யும் ஒரு அமைப்பு. சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் வெவ்வேறு அறிதல் திறனுடனும் வெவ்வேறு அறிவு சூழலிலும் இருப்பதால் ஆன்மீக வெளிப்பாடுகளை நேரடியாக சமூகத்தில் பரவ செய்வது இயலாமல் இருக்கலாம். ஆனால் சமூகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு அத்தகைய பரப்புதல் மிகத்தேவையானது. எனவே மதம் என்னும் அமைப்பு குறியீடுகள் (Representation) மூலம் ஆன்மீக வெளிப்பாடுகளை சமூகத்தில் பரப்புகிறது. ஆன்மீகம் என்பது மனித இனத்தின் வாழ்க்கை குறித்த தேடுதல் – எல்லா சமூகங்களுக்கும் பொதுவானது.

ஆன்மீக வெளிப்பாடுகளை பெற அந்த மதத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்தால் நிச்சயமாக முடியாது. காரணம் ஒரு மதவாதியால் நிச்சயமாக ஆன்மீகவாதியாக இருக்க முடியாது. எனவே ஒரு மதம் சமூகத்தில் பரிணாம வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமானால், அந்த மதம் ஆன்மீகவாதிகளிடமிருந்து தொடர்ச்சியாக ஆன்மீக வெளிப்பாடுகளை பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். எனவே அந்த சமூகத்தில் தோன்றும் ஆன்மீகவாதிகளை மதம் தன்னுடன் இணைத்து கொண்டும் அதன் தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்திக் கொண்டும் இருக்கிறது - ஆன்மீகவாதி என்பவர் வாழ்க்கை குறித்த தேடுதலை உடையவர்.

ஆன்மீக வெளிப்பாடுகளை குறியீடுகள் மூலம் சமூகத்தில் பரப்பும்போது, பெரும்பாலானவர்களால் அந்த குறியீடுகள் சுட்டும் ஆன்மீக சாரத்தை புரிந்து கொள்ள இயலாமல் இருக்க கூடும். அத்தகைய நிலையில் அந்த குறியீடுகள் வெறும் நம்பிக்கைகளாகவும் சடங்குகளாகவம் அந்த மதத்தில் பெரும்பாலானவர்களால் பின்பற்ற முடியுலாம். இதன் மூலம், ஆன்மீக வெளிப்பாடுகளை சமூகத்தால் உள்வாங்கிக் கொள்ள முடியாவிட்டாலும், அந்த வெளிப்பாடுகள் குறியீடுகளாக, அந்த குறியீடுகளை உள்வாங்கிக் கொள்ளக்கூடியவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும்.

ஆக, இன்று நம் மதங்களில் காணப்படும் அடிப்படை நம்பிக்கைகளும், சடங்குகளும், அதைப் போன்றவையும் ஆழமான ஆன்மீக வெளிப்பாடுகளின் குறியீடுகளாகவே இருக்க முடியும். ஆனால் மதம் அதன் இயக்கத்தில், அந்த அடிப்படை நம்பிக்கைகளை மட்டும் கொண்டிருக்காமல், சமூக இயக்கங்களின் காரணமாகவும், சமூக இயக்கங்களில் சார்புநிலை அறிவின் காரணமாகவும் பல புதிய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பிறவற்றையும் உருவாக்குகிறது. இந்த சார்புநிலை நம்பிக்கைகளும் சடங்குகளும் அந்த மதத்தின் பிரதான இயக்கங்களாக மாறும்போது, அது சுட்டும் ஆன்மீக வெளிப்பாடுகள் பின்நோக்கி தள்ளப்படுவதுடன், மதம் அதன் நோக்கத்திலிருந்தும் பிறழ்கிறது. அதாவது, மதம் ஆன்மீகவாதிகளின் தொடர்பை பெருமளவு இழந்து விட்டதுடன் மதவாதிகளின் துணையுடன், எந்த ஆன்மீக சாரமும் இல்லாத வெற்று நம்பிக்கைகளின், சடங்குகளின் தொகையாக மாறி விடுகிறது.

மிக சமீப காலம்வரை ஆன்மீக பயிற்சிகள் பல்வேறு காரணங்களால் பெரும்பாலானவர்களுக்கு எட்டாததாகவே இருந்து வந்துள்ளது. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, ஆன்மீக வளர்ச்சியை தனிமனித மனதினுள் தூண்டச் செய்யும் ஆரம்பகட்ட பயிற்சிகள், பல்வேறு ஆன்மீக குருக்கள் மற்றும் அவர்கள் அமைப்புகள் மூலம் பரவலாக்கப் பட்டுள்ளது. தற்போதைய தகவல் தொழில்நுட்பம், ஆன்மீக பயிற்சிகள் வெகுஜனமயமாக்குதலுக்கு மேலும் தூண்டுதலாக அமைந்துள்ளது.


தற்போதைய காலகட்டத்தில் அறிவுச்சூழல் முன் எப்போதும் இல்லாத வகையில், தகுதி உடைய பெரும்பாலனவர்களும் அறிவை அடைவதற்கு சாத்தியமுள்ளதாக உள்ளது. அதாவது தொழில்துறை வளர்ச்சிகள் மூலமும், பொதுமக்கள் சார்புநிலை உடைய அரசாங்கங்கள் மூலமும், பெரும்பாலானவர்களின் அடிப்படை வாழ்க்கை போராட்டம் மிகவும் எளிதாக்கப் பட்டுள்ளது. ஆக விருப்பமிருந்தால், ஆன்மீக தேடலுக்கான சாத்தியங்கள் முன் எப்போதும் இல்லாத அளவில் தற்போதைய காலகட்டத்தில் மிக அதிகமாக உள்ளது - ஆன்மீகத்தின் தொடக்கநிலை பயிற்சிகள் அனைவருக்கும் கிடைப்பதற்கான சாத்தியங்களுடனும்.

அதே நேரத்தில், ஆன்மீக தேடுதலுக்கான சாத்தியத்தை கொடுக்கும் அதே காரணிகள், ஆன்மீக வெளிப்பாடுகளை சுட்டும் குறியீடுகளையும், சடங்குகளையும், லொகீகத்தை நோக்கி திசை திருப்புவதுடன், லொகீகம் சார்ந்த அர்த்தங்களையும் மனதின் சார்புநிலை அறிவுகள் மூலம் உருவாக்குகிறது. இதன் மூலம் புதுப்புது நம்பிக்கைகளும், குறியீடுகளும், சடங்குகளும் மதத்தினுள் உருவாக்கப்படுகிறது. இத்தகைய நம்பிக்கைகளும் சடங்குகளும் சார்புநிலை அறிவின் மூலமே உருவாக்கப் படுவதால், அத்தகைய நம்பிக்கைகளும், சடங்குகளும் உண்மையுடன் எந்த விதத்திலும் தொடர்புடையதாக இருக்க சாத்தியங்களே இல்லை. மேலும் ஆன்மீக பயிற்சி அளிக்கும் அமைப்புகளின் மூலம் ஆன்மீகத்தின் தொடக்கத்தை அறிந்தவர்களிலும், அந்த பயிற்சிகள் மூலம் தொடக்க நிலை பயன்பாட்டை உணர்ந்தவர்களிலும் பெரும்பாலானவர்கள், அந்த அமைப்பின் மேல் அல்லது ஆன்மீக குருவின் மேல் வழிபாட்டில் ஈடுபட்டு விடுகிறார்கள். இதன் மூலம் அந்த அமைப்பு அல்லது குரு வெளிப்படுத்தும் ஆன்மீக வெளிப்பாட்டின் சாரத்தை இழந்து, வெறும் வழிபாட்டு மன நிலையுடன், அமைப்பு அல்லது குருவின் வார்த்தைகளையே ஆன்மீக வெளிப்பாடுகளாக எடுத்துக் கொள்கிறார்கள். இதன் மூலம் மீண்டும் நம்பிக்கைகளிலும் வழிபாட்டு மன நிலையிலும் விழுந்து விடுவதுடன், அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆன்மீகப் பயிற்சிகளையும் ஒரு சடங்காக மாற்றி விடுவதன் மூலம், அவர்களுக்குள் தோற்றுவிக்கப் பட்ட ஆன்மீக தேடுதல் மனநிலையையும் இழந்து விடுகிறார்கள். இதன் மூலம் ஆன்மீக அமைப்பினால் அல்லது அமைப்பு சார்ந்த குருவால் வழங்கப் பட்ட, வாழ்க்கையை அதன் முழுமையான சாத்தியங்களுடன் வாழும் வாய்ப்பையும் இழந்து விடுகிறார்கள்.

துரதிர்ஷ்டவசமாக சமூகத்தின் பெரும்பாலானவர்கள் உண்மைக்கு தொலைவில் உள்ள இந்த நம்பிக்கைகளையும் சடங்குகளையுமே மதமாக, ஆன்மீக வழியாக கொள்கிறார்கள். காரணம், பெரும்பாலானவர்களுக்கு உண்மையை அறிய வேண்டிய தேடுதல், அவர்கள் மனதில் தோன்றுவதில்லை அல்லது தோற்றுவிக்கப் படுவதில்லை – அதற்கான சாத்தியங்கள் பெருமளவில் இருக்கும் தற்போதைய காலகட்டத்திலும். உண்மையிலேயே ஆன்மீகத் தேடல் உள்ளவர்களால் இத்தகைய பொய்தோற்றங்களை அளிக்கும் ஆன்மீக மயமாக்கப்பட்டவற்றை, அவர்களின் ஆன்மீக தேடலின் தொடக்க நிலையிலேயே அறிந்து கொள்ள முடியும்.