Monday, February 9, 2015

உலகப் பொருளாதாரத்தின் திசை-2


சிறகு இணைய இதழில் 07-02-2015 அன்று வெளியிடப்பட்ட கட்டுரை.

முதலாளித்துவம், அதன் சமநிலைப்புள்ளியை அடைந்த பின் போட்டியினால் மட்டுமே முன்னேற முடியும். சமநிலைப்புள்ளியை முதலாளித்துவம் கடந்து சுமார் 30 வருடங்களாவது ஆகி விட்டது. அதன் பின் பல்வேறு தரப்புகளின் போட்டிகளினால்தான் அதன் இருப்பை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. ஒரே வகையான பொருட்களை உற்பத்தி செய்பவர்களிடையே, தேவையின் பெரும்பங்குக்கான உற்பத்தியின் போட்டி. தேவையை பூர்த்தி செய்தபின், நுகர்வோரிடம் செயற்கையாக ஒரு போதாமையை உருவாக்கி, அதன் மூலம் தங்கள் உற்பத்தியின் வளர்ச்சியை பேணுவதற்கான போட்டி. போதாமை மனப்பான்மையை நுகர்வோரிடம் உருவாக்க, அதற்கு தேவையான அதிகாரத்திற்கான போட்டி. உற்பத்திக்கு தேவையான கச்சா பொருட்களை குறைந்த செலவில் கவர்வதற்கு தேவையான அதிகாரத்திற்கான போட்டி. எல்லா விதமான சமூக அறங்களையும், உற்பத்தியின் வளர்ச்சிக்காக, அதற்கு ஆதாரமான அதிகாரத்திற்காக, தியாகம் செய்யும் மனப்பான்மை. தங்கள் உற்பத்திக்காக, சமூகத்தின் அதிகாரமற்ற வர்க்கத்தை, எவ்வித அற உணர்வும் இல்லாமல் சுரண்டும் போக்கு. முதலாளித்துவத்தின் சுரண்டலினால் பாதிக்கப்பட்ட அதிகாரமற்ற வர்க்கம், அதிகாரத்திற்காகவும், அதன் மூலம் பிறர் சுரண்டலிலுருந்து தம்மை பாதுகாக்கவும், பிற வர்க்கங்களின் அதிகாரத்தை பறித்து அதன்மூலம் அவர்களை சுரண்டவும் முயலும் முயற்சிகள். உற்பத்தியின் பெயரால், பொருளாதார முன்னேற்றத்தின் பெயரால், இயற்கை பொருட்களை அளவுக்கதிகமாக நுகரச் செய்து, அதன் மூலம் இயற்கையின் சமன் நிலையை குலைத்து, இயற்கை பேரழிவுகளுக்கு காரணமாக இருத்தல். ஆம்! ஒற்றைப்பேரியக்கமாக முன்னேறி செல்லும் முதலாளித்துவ பொருளாதாரத்தின், எதிர்மறை உள் இயக்கங்களிலும் வெளிப்புற பாதிப்புகளிலும், இவை மிகச்சிலவை மட்டுமே.

இன்றைய உலகில் எல்லா அரசாங்கங்களும், அவை எத்தகைய கொள்கை போர்வையினுள் இருந்தாலும், அவை அனைத்தும் முதலாளித்துவத்தின் வெளிப்பாடுகளே. எனவே அவற்றில் ஒன்றை மட்டும் சாடி, மற்றொன்றை தூக்கிப்பிடிப்பதில் எவ்விதமான அர்த்தமும் இல்லை. ஏனெனில், எந்த அரசாங்கமும் இயங்க முழுமுதல் தேவை ஆரோக்கியமான பொருளாதாரம். இங்கு ஆரோக்கியம் எனக்குறிப்பிடப்படுவது, வெளிப்புறமான தோற்றத்தை மட்டுமே. அம் பொருளாதாரத்தினால் மட்டுமே, அந்த நாட்டின் சமூக்கங்களை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதாவது அதிகாரமும் பொருளாதாரமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அதிகாரம் இல்லையெனில், அது இல்லாத தரப்பின் பொருளாதாரம் அழிந்து விடும். பொருளாதாரம் ஆரோக்கியமாக இல்லாவிடில், அந்த பொருளாதாரத்தின் ஆதிக்க சக்தியான அதிகாரமும் அழிந்து விடும். நாடுகளுக்கிடையேயான பொருளாதார போட்டிகளை இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, அவற்றுக்கான காரணமும் தேவையும் மிக எளிதாக புரியலாம்.

அதே வேளையில், அதிகாரம் எப்போதும், பண்படாத மனதில், அகங்காரத்தையும் சேர்த்தே கொண்டு வரும். அதிகாரம் அகங்காரத்துடன் சேரும்போது அது எப்போதும் அழிவையும் கூட கொண்டு வரும். அதிகாரம் எப்போதும், எல்லா இடங்களிலும் சுரண்டலில் ஈடுபடுவது இதனாலேயே. சுரண்டலுக்கு தகுதியான கொள்கை விளக்கங்களையும் மிக எளிதாக அதிகார தரப்பினால் முன் வைக்கப்பட்டு, அந்த விளக்கங்கள் அந்த அதிகாரத்துக்குட்பட்ட சமூகங்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட வைக்கப்படும். அத்தகைய சுரண்டல்களின் தன்மை, அதை எதிர்கொள்ளும் சமூகத்தின் எதிர்ப்பு சக்கதியை பொறுத்தது. எதிர்ப்புசக்தி அறவே இல்லாத சமூகங்கள், அதிகார வர்க்கத்தால், அது எந்த கொள்கை போர்வையில் இருந்தாலும், முழுமையாக சுரண்டி அழிக்கப்படும். எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அதிகரிக்க, சுரண்டலின் தாக்கமும் குறையும். ஆனால் இரு பக்கங்களிலும் அதற்கான களப்பலிகளுடன். மிகத்தன்முனைப்புள்ள தலைமையை கொண்டிருக்கும் சமூகங்கள், அந்த எதிர்ப்பை வெற்றிக்கரமாக எதிர்த்து நின்று, அதிகார வர்க்கத்தின் சுரண்டலை இல்லாமல் செய்யும். அதேநேரத்தில், தலைமையின் முனைப்பின் காரணமாக, அதிகாரவர்க்கத்தையே சுரண்ட ஆரம்பிக்கலாம். அதிகார வர்க்கமும், அதன் நன்மைக்காக ஒரு சமன்நிலையை அடையும்வரைக்கும் அத்தகைய சுரண்டலை அனுமதிக்கவும் செய்யலாம்.

தன் முனைப்பின் காரணமாக, சமூகத்தின் தலைமையை அடையும் தனிமனிதன் அல்லது, தலைமைக்குழு, அந்த சமூகத்துக்கு அதிகார மையத்தின் சுரண்டலிலிருந்து பாதுகாப்பை அளிக்கும் அதே நேரத்தில், பண்படாத மனதை உடைய, முழுமை நோக்கில்லாத தலைமையினாலும் புதிதாக கிடைத்த அதிகாரத்தினாலும், அந்த சமூகத்தையே சுரண்டத் தொடங்கும். இதனை அறிவதற்கு நாம் வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை. உலகெங்கும் அதிகார மையத்தை எதிர்த்து சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த எந்த இயக்கங்களும், அதன் குறிக்கோளில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்தபின், தான் சார்ந்த, தன் போராட்டத்துக்கு அடித்தளமான சமூகத்தையே சுரண்டவதை கண்கூடாகவே நாம் தினம்தோறும் அறிந்து வருகிறோம். இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின், காங்கிரஸ் இயக்கத்தை கலைத்து விட வேண்டும் என்னும் காந்தியின் விருப்பத்தை, இந்த பின்னணியில் பார்க்கலாம்.

முதலாளித்துவம் உலகின் மேல் தொடுக்கும் எதிர்மறை விளைவுகளை விளங்கிக்கொள்ள வேண்டுமானால், பூமியின் இயக்கத்தை குறித்தும், பூமியில் நிகழும் பல்வேறு உயிரினங்களின் வாழ்க்கை இயக்கத்தை குறித்தும் ஒரு குறைந்த பட்ச புரிதல் தேவைப்படலாம். மனிதர்களாகிய நாம், நம்மை குறித்து எத்தகைய உயர்வான எண்ணங்களைக் கொண்டிருந்தாலும், மனிதர்கள் பூமியில் வாழும் ஒட்டுண்ணிகளே. அதுவே உண்மை. பூமியில் இருந்து உருவாகி, பூமியை நுகர்ந்து, பூமியினுள் அழிந்து செல்லும் எளிய உயிரினம். பூமியின் ஒரு அங்கம்!

பூமியில் நிகழும் எண்ணற்ற வகையிலான வாழ்க்கைகளில், மனித வாழ்க்கை ஒரு சிறு துளி மட்டுமே - அந்த எண்ணற்ற வாழ்க்கைகளில், மனித வாழ்க்கை சற்று உயர் தளத்தில் இருந்தாலும்! பூமி என்பது அதில் நிகழும் அந்த எண்ணற்ற வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுதி. மிகவும் மேல் தளத்தில் இருந்து பார்த்தால், பூமியில் நிகழும் ஒவ்வொரு வாழ்க்கையும், பூமியை நுகர்ந்து, அந்த நுகர்வின் வெளிப்பாடாகவும், கழிவாகவும், அது நுகர்ந்த அதே அளவு பொருட்களை பூமிக்கு திரும்ப அளிக்கும். மனித வாழ்க்கையும் இதற்கு விதி விலக்கல்ல. ஒவ்வொரு வாழ்க்கை நிகழ்வும், பூமியை நுகர்ந்து திரும்ப அளிக்கும் பொருட்கள், மற்றொரு உயிர் நிகழ்வுக்கு நுகர்வுப்பொருளாக இருக்கும். இதன் மூலம் பூமியின் இயக்கம் சமன்நிலையுடன் நிலை நிறுத்தப்படுகிறது. அதாவது, பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களும், இயற்கை விதிப்படி நிகழும்போது, மற்ற சில உயிரினங்களுக்கு தேவையானவற்றை அளிப்பதாக இருக்கும். இதையே இன்று உணவுக்கண்ணி (Food Chain) என்று நாம் மாணவர்களுக்கு பயில்விக்கிறோம். (உணவுக்கண்ணி என்பதை உணர்வு பூர்வமாக பயிலும் எந்த மாணவர்களும், அவர்கள் வாழ்நாளில் எந்த உயிரினங்களுக்கும் எதிராக எதையும் செய்ய முடியாது. ஆனால் அத்தகைய உணர்வு பூர்வமான கல்வி அவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. அளிக்கும் கல்வி முறையும் தற்காலத்தில் இல்லை. எனவே அதை வெறும் ஒரு தகவலாகவே, மற்ற அனைத்தையும் போல, மாணவர்கள் படித்து மறந்து விடுகிறார்கள்)

மனித வாழ்க்கையின் நுகர்வும், தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் அவ்வாறே இருந்து வந்துள்ளது. அதாவது பிற உயிரினங்களின் நுகர்வின் வெளிப்பாடுகளையும் கழிவுகளையும் தமது நுகர்வாக கொண்டும், மனித வாழ்க்கை நிகழ்வுகளின் கழிவுகள், பிற உயிரினங்களின் நுகர்வாகவும் இருந்து வந்தது. தொழில் புரட்சியும், அதன் விழைவாக உருவாகி வந்த முதலாளித்துவமும், அதன் எதிர்மறை விளைவாக, மனித உயிர் நிகழ்வை உணவுக்கண்ணியிலிருந்து சற்று பிறழ வைத்தது. அதாவது, மனிதன் உருவாக்கும் கழிவுகள், பிற உயிர்களுக்கும் எவ்வகையிலும் பயன்படாத வெறும் கழிவுப்பொருட்களாக தங்கவும், மனிதனுக்கான நுகர்வுக்காக, பிற உயிரினங்களின் வாழ்வாதாரங்களை அளவின்றி அழிப்பதன் மூலமும், உணவுக்கண்ணியில் மனித உயிரினத்தால் பிளவு உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த பிளவு பூமியின் உயிர் நிகழ்வுகளின் சமன் நிலையையும் குலைக்கத்தொடங்கி விட்டது.

முன்பே பார்த்தபடி, முதலாளித்துவத்தின் குறிக்கோள், முதலீட்டிலிருந்து உபரி பணத்தை உருவாக்குவது. அது உபரி உற்பத்தியின் மூலம் நிகழ்கிறது. உற்பத்தி நிகழ வேண்டுமானால், அதற்கேற்ற நுகர்வு இருந்தாக வேண்டும். நுகர்வு தேக்க நிலையை அடையும்போது, முதலாளித்துவம், அதன் சுய லாபத்துக்காக நுகர்வை பல்வேறு வழிகளில் தூண்டுகிறது. நுகர்வை தூண்டுவதன் முதல் வழி விளம்பரம். மனதை தூண்டும் விளம்பரங்களின் மூலம், எளிய மனித மனங்களின் உள் மனதில் தாக்குதலை தொடுத்து, அதன் மூலம் நுகர்வை உருவாக்கி, அந்த நுகர்வின் வழியாக பிற உயிரினங்களுக்கு பயன் இல்லாத கழிவுகளை உருவாக்குகிறது. கழிவுகள் எந்த உயிரினங்களாலும் உபயோகப்படுத்தாமல் சேரும்போது, அவை நச்சுப்பொருட்களாக உருமாறி, பூமியின் உயிர்ப்புத்தன்மைக்கு எதிரான செயல்களை விளைவிக்கின்றன. அதன் மூலம் பூமியை சார்ந்து வாழும் உயிரினங்களின் அழிவுக்கும் காரணமாகின்றன.


நுகர்வுக்கு, மனிதர்களின் நுகர்வு விழைவு மட்டும் போதுமானது அல்ல. அந்த நுகர்வு பொருட்களை பெறுவதற்கான பணமும் அவசியம். அதாவது, மனித மனங்களில் நுகர்வின் விழைவு உருவாக்கப்படும்தோறும் அந்த நுகர்வுக்கு அவசியமான பணத்திற்கான விழைவும் மறைமுகமாக உருவாக்கப்படுகிறது. எளிய மனங்களில், பணத்திற்கான விழைவின் நேர்மறை பாதிப்பாக, மனிதர்களிடம் ஒரு தன்முனைப்பு உருவாகிறது. அத்தகைய தன்முனைப்பு அவர்கள் வாழ்க்கைக்கு ஒரு வெளிப்படையான நோக்கத்தை அளித்து, அந்த நோக்கத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கச் செய்கிறது. அதேநேரத்தில், பணத்திற்கான விழைவின் எதிர்மறை விளைவாக, தன்முனைப்பை அடைய முடியாத மனங்கள், குறுக்கு வழியை எதிர்நோக்குகின்றன. அதன் மூலம் சமூகத்தின் அறப்பிறழ்வுகளும், ஒருவரை ஒருவர் சுரண்டுவது போன்ற அவலங்களும் மற்றும் இவை போன்ற சமூக வியாதிகளும், அவை எப்போதுமே ஓரளவுக்கு இருந்திருந்தாலும், மிகப்பெரிய அளவில் சமூகத்தின் எல்லா நிலைகளிலும் பரவுகின்றன. விளைவாக சமூகங்களின் சமநிலை குலைவுகளும்!

Monday, February 2, 2015

உலகப் பொருளாதாரத்தின் திசை-1

சிறகு இணைய இதழில் 31-01-2015 அன்று வெளியிடப்பட்ட கட்டுரை.

இந்த கட்டுரை, உலகப் பொருளாதாரத்தின் எல்லா தன்மைகளையும், எல்லாவிதமான பொருளாதார கொள்கைகளையும் ஐயம் திரிபற அறிந்த அறிஞரால், அத்தகைய அறிஞரின் பார்வையில் எழுதப்படவில்லை. மாறாக, ஒரு சாதாரண மனிதனின் பார்வையில் தற்போதைய பொருளாதார கொள்கைகள் எத்தகைய நிழலாக விழுகிறது என்பதும் அந்த நிழல்கள் சுட்டும், எதிர்கால, எதிர்மறை விளைவுகள் குறித்தது மட்டுமே. எல்லா கொள்கைகளிலும் நேர்மைறை விளைவுகளும் எதிர்மறை விளைவுகளும் கலந்தே இருக்கும். நேர்மறை விளைவுகள் நமக்கு மகிழ்ச்சியை, நன்மையை கொடுப்பவை. எனவே அதைப்பற்றி விவாதிக்கத் தேவையில்லை. ஆனால் எதிர்மறை விளைவுகள் நமக்கு  அல்லது நம் சந்ததியினருக்குத் துன்பத்தை அளிப்பவை. அவற்றை விவாதித்து, துன்பத்தை தவிர்க்க முயல வேண்டியது நம் கடமை.

இன்று உலக பொருளாதாரம், முதலாளித்துவ (Capitalism) பொருளாதாரத்தின் அடிப்படையில் இயங்குகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக உலகின் சில பொருளாதாரங்கள், முதலாளித்தவத்துக்கு முந்தைய அல்லது இடைப்பட்ட பொருளாதார முயற்சிகளிலேயே தங்கி  இருந்தாலும், அவை குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. சீனா போன்ற நாடுகள், இடைபட்ட பொருளாதாரத்தின் அடிப்படையில் வந்த ஆட்சிஅமைப்பின் பெயரில் இருந்தாலும், அவையும் பொருளாதர கொள்கைகளில், முதளித்துவத்தை தழுவி விட்டன. எனவே ஒட்டு மொத்தத்தில் உலகத்தின் தற்போதைய பொருளாதார இயக்கத்தை முதலாளித்துவம் எனக்கூறலாம்.

மனித நாகரீகத்தின் முன்னோக்கிய பாய்ச்சலில்,  முதலாளித்துவமும் ஒரு முயற்சியே. மனித சமூகம், சமஉரிமையை பெறுவதற்கான ஒரு முயற்சி. மனிதர்களில் வல்லவர்கள் மற்றவர்களை வென்று வாழ்ந்த வாழ்க்கைக்கு முடிவுகட்டி, மனிதர்கள் அனைவரும் ஒரே சமூகமாக வாழ்வதற்கான ஒரு முயற்சி. இன்று திரும்பிப்பார்த்தால், அந்த முயற்சி முழுமையான வெற்றியை அடையாவிட்டாலும், குறிப்பிடத்தக்க அளவு வெற்றியை அடைந்து விட்டதாகவே தோன்றுகிறது. அந்த முயற்சியின் தொடக்கத்தில் சமூகத்திற்கு பேரழிவுகளை ஏற்படுத்தியிருந்தாலும்! தற்போது பூமியில் மனித இருப்புக்கே அச்சுறுத்தலாக இருந்தாலும்!    1800 - ம் வருடங்களில் தொடங்கி, ஏறத்தாழ அதன் இறுதி ஆண்டுகளில், அதுவரை இருந்த பொருளாதார அமைப்பை முற்றிலும் குலைத்து, அதன் மூலம் சமூக அமைப்பையும் குலைத்து, 1900 ம் வருடங்களில் நிலைபெற்று, அதன் மூலம் சமூக அமைப்பையும் இன்னொரு தளத்தில் நிறுவி விட்டது. 1900 - ம் ஆண்டுகளின் இறுதியில், சற்றேறக்குறைய எல்லா நாடுகளும் முதலாளித்துவத்தை தழுவி விட்டன.

முதலாளித்துவத்தின் அடிப்படை முதலீடு. அந்த முதலீட்டின் மூலம் பொருட்களை உற்பத்தி செய்து, உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பிலிருந்து உபரி உழைப்பை பெற்று, அதன் மூலம் உபரி உற்பத்தியை அடைந்து, முதலீட்டை விட அதிக பணத்தை திரும்ப பெறுவது, முதலாளித்துவத்தின் சுழற்சி முறையாகும். முதலீட்டின் மூலம் பெற்ற உபரி பணம் வருமானம் ஆகும். முதலாளித்துவத்தின் சுழற்சி முறையில், அடைந்த வருமானத்தின் பெரும்பகுதி முதலீடாக மறு சுழற்சி செய்யப்படும். அதன் மூலம் அந்த சுழற்சி இயக்கத்தின் இறுதியில், வருமானம் அதற்கேற்ற விகிதத்தில் அதிகரித்திருக்கும். இந்த வளர்ச்சி விகிதம், முதலீட்டின் வளர்ச்சி விகிதம் ஆகும்.
முதலீட்டின் வளர்ச்சி விகிதம், பூஜ்யத்துக்கு அதிகமாக இருந்தால், அந்த முதலீட்டைக் கொண்டிருக்கும் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இருக்கிறது எனப்படுகிறது. வளர்ச்சி விகிதம் பூஜ்யமோ அல்லது அதற்கு மிக அருகிலோ இருந்தால், பொருளாதாரம் வளர்ச்சியின்றி நிலையாக இருக்கிறது எனப்படுகிறது. பூஜ்யத்தை விட குறைவாக இருந்தால், பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதை சற்று மாற்றி, முதலீடு செய்பவரின் பார்வையில் அல்லாமல், பொதுமக்களின் அல்லது நுகர்வோரின் பார்வையில் கூறினால், உற்பத்திப் பொருட்களின் தேவை, உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை விட அதிகமாக இருந்தால் அது பொருளாதார வளர்ச்சி. தேவை, உற்பத்தியின் அதே அளவில் இருந்தால் அது பொருளாதார நிலைத்தன்மை. தேவை உற்பத்தியை விட குறைவாக இருந்தால் அது பொருளாதார மந்த நிலை.

எல்லா முதலாளித்துவ பொருளாதாரங்களின் அடிப்படை நோக்கமும் பொருளாதார வளர்ச்சியை அடைவதே. இன்னும் குறிப்பாக கூறினால், நாடுகள் அளவில், மற்ற நாடுகளின் பொருளாதாரங்களை விட அதிக விகித வளர்ச்சியை அடைவது. அல்லது பொதுவாக கூறினால், ஒரு முதலாளியை விட இன்னொரு முதலாளி அதிக விகிதத்தில் வளர்ச்சியை அடைவது. சற்று மாற்றிக்கூறும்போது, ஒவ்வொரு நாடும் அந்த நாடு உற்பத்தி செய்யும் பொருட்களின் தேவை, அந்த நாடு வணிக தொடர்பு கொண்டுள்ள இடங்களில் தொடர்ந்து பெருக்குவதும், புதிய வணிக தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலம், உற்பத்தி பொருட்களின் தேவை மேலும் அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளன. ஒவ்வொரு முதலாளிக்கும், தன் உற்பத்திப்பொருட்களின் தேவை, பிற முதலாளிகளின் உற்பத்திப்பொருட்களின் தேவையை விட அதிகமாக இருக்க வைப்பதே நோக்கம்.
இந்த உற்பத்தி போட்டியின் மூலம், ஒரு தனி இருப்பாக, நுகர்வோர்கள் அடைந்த இலாபம் மிகப்பெரியது. நுகர்வோருக்கு, முதலாளித்துவ போட்டிகளின் மூலம், அதிக தரமான பொருட்கள் குறைந்த விலையில் கிடைத்தன. அதன் மூலம், வாங்கும் வசதியுடைய நுகர்வோரின் வாழ்க்கைத்தரமும், குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. நுகர்வோரின் வாழ்க்கையும் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. இது போன்ற இன்னும் பல நல்விளைவுகள். அவற்றைப்பற்றி விவரிக்க வேண்டிய தேவையில்லை. ஏனெனில், நம் கண்முன் நிதர்சனமாக அவை உள்ளன.

ஆனால், இந்த முதலாளித்துவ உற்பத்தி முறையின் எதிர்மறை விளைவுகளும் எண்ணிலடங்காதவை. முதலாளித்துவ நேர்மறை விளைவுகளின் பயன்களில் மயக்கத்தில் இருக்கும் பொதுமக்களுக்கு, அதன் எதிர்மறை விளைவுகள் அத்தனை நிதர்சனமாக தெரிவதில்லை. எதிர்மறைவிளைவுகளால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே அதனை ஓரளவுக்காகவாவது அறிந்திருப்பார்கள்.  அதுவும் பாதிக்கப்படும் அந்த நேரத்தில் மட்டும், பாதிப்பிலிருந்து தற்காலிகமாக வெளிவரும்வரைக்கும் மட்டும். அந்நேரத்தில் அவர்கள் இடும் கூக்குரலும், முதலாளித்துவத்தின் பயன்களில் திளைத்திருக்கும் பொதுமக்களால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. மேலும் முதலளித்துவத்தின் பெரும்பாலான எதிர்மறை விளைவுகள், நிகழ் காலத்தில், அத்தனை வெளிப்படையானவையும் அல்ல.

இதற்கு காரணம், மனிதனின் தன்முனைப்பாக இருக்கக்கூடும். வாழ்க்கைப்போராட்டத்தில் நிலைத்து நின்று வாழவேண்டும் என்னும் உயிரின் துடிப்பாக இருக்கக்கூடும். ஆனால், மனித இனம், அதன் சமூக முறைகளின் மூலம், அறிவின் மூலம் வாழ்க்கைப்போராட்டத்தை, மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது, மிக எளிதாக்கி விட்டது. ஆனால், உணர்வு நிலையில், மனிதனால் அந்த எளிமையை இன்னும் உணர முடியவில்லை. மனிதனின் உயிர் நாளங்களில், அவன் மூதாதையர் வாழ்விற்காக நிகழ்த்திய போராட்டங்கள், இன்னும் உயிர்ப்புடன் இருக்கக்கூடும். உணர்வு நிலையில் அடையும் மாற்றத்தின் மூலம் மட்டமே, இன்றைய எளிய வாழ்க்கைக்கு மனிதனால் முழுமையாக தன்னை தகவமைத்துக்கொள்ள முடியலாம். இந்த உணர்வு நிலை குறைபாட்டால், மனிதனால் தன்னை ஒரு முழு இருப்பின் பகுதியாக காணமுடிவதில்லை. எனவே மனிதனின் தன்முனைப்பும் தன் தனியிருப்பை நோக்கியே இருக்கிறது. பூமி என்னும் முழுஇருப்பை பார்க்க முடியாததால், முதலாளித்துவத்தின் விளைவுகள், அந்த முழு இருப்பில் நிகழ்த்தும் பாதிப்புகளை காண முடியவில்லை. அதன் மூலம் தான் அடையும் பாதிப்புகளையும்! அதே நேரத்தில், முதலாளித்துவம் மனிதனின் தனியிருப்புக்கு அளித்த பங்களிப்பு, மிக எளிதாக மனிதனால் உணரப்படுகிறது. அவை பெரும்பாலும் நன்மையாகவே இருப்பதால், மனித மனம் முதலாளித்துவத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறது.

முன்பே கூறியவாறு, முதலாளித்துவம் நுகர்வின் வளர்ச்சி மூலம் மட்டுமே, தன் வளர்ச்சி நிலையை அடைய முடியும். வளர்ச்சி இல்லாத பட்சத்தில், முதலாளித்துவம் அதன் தன்முனைப்பை இழந்து விடும். அதன் மூலம் முதலாளித்துவம் என்னும் பொருளாதார இயக்கமும் அழிந்து விடும். முதலாளித்துவத்தை பற்றி மேலும் பேசுவதற்கு முன்னால், மனித இனத்தின் வளர்ச்சி வரலாற்றை சற்று ஆராய வேண்டும்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின், நாடுகளுக்கிடையேயும் சமூகங்களுக்கிடையேயுமான போர் பெரும்பாலும் இல்லாமல் ஆகி விட்டது. ருவாண்டா படுகொலை போன்ற சில நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்தாலும், உலகம் பெரும்பாலும் பேரழிவுகள் இல்லாமலே தற்காலத்தில் நிகழ்கிறது. அதற்கு முந்தைய காலகட்டத்தில், மனித நாகரீகம் உருவான காலகட்டம் முதல் பெரும்போர்கள் மூலமும், சமூகக்கலவரங்கள் மூலமும் மனித இனம் தொடர்ந்து அழிவுக்கு உட்பட்டு வந்துள்ளது. பெரும்பாலும் இந்த அழிவுகளுக்கு, பொருளாதார போட்டியும் அதிகாரப்  போட்டியுமே காரணமாக இருந்துள்ளன. பொருளாதார போட்டியின் மூலம் போரில் ஈடுபடும் இரண்டு பொருளாதார தரப்புகளும், பெரும் பொருளாதார இழப்புகளையும் மனித உயிர் இழப்புகளையும் சந்திக்க நேரிடும். ஆனால், அதில் வெற்றி பெறும் பொருளாதார தரப்பு, தோல்வியடைந்த பொருளாதார தரப்பை முழுமையாக சூறையிடுவதன் மூலம், தன் தரப்பு பொருளாதார இழப்பை ஒரளவுக்கு சரி செய்ய முடிந்திருக்கலாம். மேலும் அந்த பேரழிவின் மூலம், தேவைகள் பெருமளவு உயர்வதால், அந்த அழிவிலிருந்து பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப்பாதையில் செல்ல தொடங்கும். அதாவது, ஒரு பொருளாதார வளர்ச்சிக்கு, அந்த வளர்ச்சியை உந்தும் அளவுக்கு ஒரு அழிவு மிக அவசியமானது.

கடந்த இரு நூற்றாண்டுகளில், மருத்துவ முன்னேற்றத்தின் மூலம், தொற்று நோய்களால் நேர்ந்த உயிர் இழப்புகள் தற்போது முழுமையாக இல்லாமல் ஆகிவிட்டன. தொற்று நோய்கள் மூலம் உயிர் இழப்புகள் ஏற்படும்போது, அவை நிகழும் சமூகத்தில் தவிர்க்க முடியாத பொருளாதார இழப்புகளும் நேரிட்டிருக்கும். அந்த அழிவிலிருந்து மீண்டு வரும்போது, அழிவிலிருந்து மீளும்  முனைப்பு, பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுவந்திருக்கும்.

தற்போதைய நம் காலகட்டத்தில், போர் மற்றும் தொற்று நோய்களினால் ஏற்படும் அழிவுகள் கிட்டத்தட்ட இல்லாமல் ஆகி விட்டன. இதன் மூலம் உலக மக்கள் தொகை 700 கோடியை கடத்து விட்டது. உலகப்போருக்குப்பின் இத்தனை காலம், உலக மக்கள் தொகை வளர்ச்சியின் மூலம் அடிப்படை நுகர்வின் தேவை, உற்பத்தியை விட அதிகமாக இருந்தது. இதன்மூலம் பொருளாதார வளர்ச்சியும், தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. ஆனால் மக்கள் தொகை பெருக்கத்தின் திணற வைக்கும் வளர்ச்சியை கண்டு சமூகங்கள் ஓரளவுக்கு விழித்துக்கொண்டன. இதன் மூலம், மக்கள் தொகை பெருக்கமும் பெருமளவுக்கு கட்டப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பு நோக்கையில் மக்கள் தொகை பெருக்க விகிதம் குறைந்திருந்தாலும், இப்போது உள்ள வளர்ச்சி விகிதமும் எச்சரிக்கை தேவையான, அபாயகரமான நிலையிலேயே உள்ளது.

போர்களின் மூலமும் தொற்று நோய்களின் மூலமும் ஏற்பட்ட அழிவுகளாலும், அந்த அழிவுகளை ஈடு செய்யும் மக்கள் தொகை பெருக்கத்தாலும், உற்பத்தியின் தேவை வளரும் விகிதத்தில் இருந்து வந்துள்ளது. இந்த மூன்று காரணிகளும் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், பொருளாதாரம் வளர வேண்டுமானால், தனிமனித தேவைகளும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். கடந்த சுமார் முப்பதாண்டுகளில், தனிமனித தேவைகளின், அல்லது தேவை எனக்கூறப்பட்டவைகளின், வளர்ச்சியினாலேயே உலக நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் இருந்துள்ளது.

தனி மனித தேவைகளின் வளர்ச்சி, அவர்களின் வருமானத்துக்கு இணையாக இருக்கும். முதலாளித்துவத்துக்கு, அவற்றின் உற்பத்தி பொருட்களுக்கு தேவை இருக்க வேண்டும். அல்லது தேவை எங்கு இருக்கிறதோ அங்கே அவற்றின் உற்பத்தியை தொடங்கும். எனவே தனிமனித வருமானமும், உற்பத்தியும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. ஒன்றை ஒன்று, ஒரு குறிப்பிட்ட சமநிலைப்புள்ளியை (Break even) அடையும்வரை தொடர்ந்து வளர்க்கவோ அல்லது அழிக்கவோ செய்யும்.

இதைப்போலவே முதலாளித்துவத்தின் வரம்பற்ற உற்பத்தியால், தனிமனித வருமானத்தை அதிகரிப்பதற்கான போட்டியும், தனி மனிதர்களுக்கிடையே ஏற்படுகிறது. இந்தப் போட்டி, உற்பத்திக்கு தேவையான, தனிமனித தொழில்நுட்ப திறமையிலும் போட்டியை உருவாக்கி, அந்த போட்டியின் மூலம் தனிமனிதர்களின் தன்முனைப்பையும் அவர்கள் செயல்திறனையும் அதிகரிக்கிறது. இதனால் உற்பத்திக்கு தேவையான உழைப்பு, மிக எளிதாக முதலாளித்துவத்துக்கு கிடைக்கிறது. அதன் மூலம் உபரி உற்பத்தியும்.

ஆக மொத்தத்தில் முதலாளித்துவம் எல்லா திசைகளிலும் போட்டியை உருவாக்கி, சமூகத்தின் அங்கங்களை ஒன்றுடன் ஒன்று மோத வைத்து, விளைவாக உருவாகும் விசையால் சமூகத்தை முன்நகர்த்தி செல்கிறது. மனித சமூகத்தை ஒற்றை பெரும் இயக்கமாக காணும்போது, முதலாளித்துவம், அதன் பல்வேறை விசைகளால் மனித சமூகத்தை, பொருளாதார நிலையில், முன்நகர்த்தும் இயக்கமே. இந்த வகையில், முதலாளித்துவம் மனித சமூகத்துக்கு மிகப்பெரிய தொண்டாற்றியுள்ளது.


அந்த மனித சமூகத்தின் பொருளாதார முன்னேற்றம், கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத, பல சிறிய மற்றும் பெரிய, தனி மனித மற்றும் சமூக அளவிலான, மனித இனம் மற்றும் பிற உயிரினங்கள் சார்ந்த, பல பிரச்சனைகளையும் தன்னுள் கொண்டுள்ளது. மனித இனம் தொடர்ந்து வாழ வேண்டுமானால், தற்போது அடைந்துள்ள வசதிகளை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால், அந்த வசதிகளை அவை இன்னும் சென்றடைந்திடாத மனிதத்திரளிடம் கொண்டு சேர்க்க வேண்டுமானால், பொருளாதாரக் கொள்கைகளில், ஒரு சமூகமாக திருத்தங்களை கொண்டு வந்தாக வேண்டும். அந்த சீர்திருத்தம், முதலாளித்துவத்தின் முன்னேற்ற பண்புகளை முன்னெடுத்துச் செல்வதாகவும், அழிவுப்பண்புகளை இல்லாமல் செய்வதாகவும் இருக்க வேண்டும். அது முதலாளித்துவத்திலிருந்து முற்றிலும் புதிதான ஒரு பொருளாதார கொள்கையாகவும் இருக்க்கலாம். இது ஒரு அடையமுடியாத இலட்சியமாக தோன்றலாம். ஆனால் ஒரு முழுமை நோக்குடன் அதை நாம் நெருங்கியாக வேண்டும் - மனித இருப்பை தக்க வைத்துக்கொள்ள!