Thursday, November 13, 2014

ஞானமடைதல்

மனித மனதின் இயல்பு தேடுதல். எதை அடைந்தால் வேறு தேவைகள் இல்லையோ அதை அடையும்வரை தேடுவது. அந்த 'அது' எது என 'அதை' அடைவதுவரைக்கும் தெரிவதில்லை. ஆனால் மனித தேடுதல் அந்த ஒன்றை நோக்கி மட்டும் இல்லை. தேடுதலில் ஒரு எல்லையை அடைந்தவர்களே, அந்த கடைசியான ஒன்றைத் தேடுகிறார்கள். மற்றவர்கள் அனைவரும், மனதின் இயல்பின் காரணமாக, தாங்கள் அறிந்தவற்றையே தேடுகிறார்கள். தேடியவற்றை அடைந்த பின், மற்றொன்றை பற்றிக்கொண்டு அதைத் தேட தொடங்குகிறார்கள். அதையும் அடைந்த பின் மீண்டும் இன்னொன்றை. மனதின் தேடும் இயல்பை அறிந்தவர்களால் மட்டுமே, அறியாத ஒன்றை, அந்த இறுதித் தேடுதலை,  நோக்கி தங்கள் தேடுதலை திசை திருப்ப முடியும். அதை அடைந்தவர்கள் ஞானமடைந்தவர்கள், மனிதப் பிறவியாக முழுமையை அடைந்தவர்கள். அவர்களுக்கு என் வணக்கங்கள்!

மனம் என்பதை மூளையின் இயக்கங்களை அறியும், மூளையினுள் இருக்கும் ஒரு புலன் என கருதலாம் - அல்லது புலனால் உணரப்படும் உணர்வு. அந்த புலன் மூளையின் இயக்கங்களை உணர்வது, மனமாக மூளையினுள் உணரப்படுகிறது. ஆச்சரியமாக, மனதை உணரும் புலனும் மூளையினுள் இருப்பதால், மனமாக மூளையினுள் அடையப்படும் உணர்வுகளையும் அந்த புலனால் உணரமுடியும். அதாவது தன்னைத்தானே முடிவில்லாமல் உணர்தல். ஒரு முடிவற்ற, தன்னைத்தானே இயக்கும் கண்ணியைப்போல (Endless Self Refernecing Loop)  இரு கண்ணாடிகளுக்கு இடையில் நின்றுகொண்டு, அந்த கண்ணாடிகளில் தெரியும் முடிவற்ற நம் பிம்பங்களை, அந்த பிம்பங்களே நோக்குவதைப்போல! ஞானமடைதல் என்பதை மூளையின் இத்தகைய சுய அறிதல் என்னும் கோணத்திலும் காணலாம்.

ஞானமடைதல் என்னும் நிலையை அடையும்போது, மனமாக உணரப்படும் மூளை, தன்னைத்தானே முடிவில்லாமல் உணர்ந்து கொண்டு, தன்னில் நிலைத்திருக்க கூடும். அது மூளையில் உள்ள அணுக்களின் அல்லது செல்களின் அல்லது நியூரான்களின் ஒத்திசைந்த ஒரு நிலை. அந்த நிலையை அடைந்த மூளைக்கு வேறு தேடுதல்கள் இல்லை. அந்த ஒத்திசைந்த நிலைக்கேற்ப, அதன் இயக்கத்திற்கு தேவையான செயல்களை, அதன் உள்ளிருக்கும் நுண்ணறிவின் மூலம், வெளியிலிருந்து வரும் (புலன் உணர்வின்) எந்த இயக்கங்களிலோ அல்லது நினைவுகளின் இயக்கங்களிலோ தன்னை இழக்காமல், மூளை செய்ய வைக்கும். அந்நிலையில், மூளையினுள் எந்த முரண்பாடுகளும் இல்லை. அந்த மூளையை தன் உடலில் தாங்கியிருக்கும் மனிதனுக்கும் எந்த வாழ்க்கைப் போராட்டங்களும் இல்லை. அம்மனிதனுக்கு வாழ்தல் மட்டுமே எஞ்சியிருக்கும்.
நாம் அடையும் இன்பங்கள், துன்பங்கள் அனைத்தும் புலன்களால் அடையப்பெற்றவற்றை மனம் அறிவதையே. மனதை அறியும் புலனால், மனதையே அறியும் மனம் அடையும் இன்பம், வேறு எந்த இன்பங்களுடனும் ஒப்பீடு செய்ய முடியாதது. (அதை இன்பம் என்னும் வார்த்தையால் விளக்க முடியாது. ஏனெனில் இன்பம் எப்போதும் துன்பத்தையும் தன்னுடன் அழைத்து வரும். மனதை அறிவதில், துன்பம் இருக்க வாய்ப்பில்லை. துன்பத்தை அடையும் மனநிலையில் உள்ள மூளையில் இருக்கும் மனதுக்கான புலன், இன்னும் உணரும் திறனை அடையாததாகவே இருக்கும்)

அந்த நிலையை, அனுபவமாக கூற முடியும் என்று தோன்றவில்லை. அது நம் அன்றாட புழங்குதளத்தில் இல்லை. அவ்வாறு கூற முடிந்தாலும், அந்நிலையின் தொடக்கத்தையாவது உணர்ந்திருக்காதவர்களால், அதை விளக்கும் வார்த்தைகளை புரிந்து கொள்ளவும் முடியாது. உவமைகள் மூலம் மட்டுமே, மூளையின் அந்த நிலையை மற்றவர்களுக்கு கூற முடியும். உவமைகள் மூலம் கூறும்போது, கேட்பவர்களின் கற்பனைத்திறனுக்கேற்ப அது பல்வேறு வடிவங்களில் புரிந்து கொள்ளப்படும். எனினும் அந்த புரிதல்கள் மூலம் ஞானமடைந்த மனதின், மூளையின் இயங்கு நிலையை உணர முடியாது. ஞானமடைதலே அதற்கான ஒரே வழி. ஞானமடைதல் குறித்த எல்லா விளக்கங்களும், உவமைகளும் அவ்வாறு ஒரு நிலை உள்ளது என மற்றவர்களுக்கு உணர்த்துவதும், அதன் மூலம் மனதின் இயல்பான தேடுதலில், ஞானத்தேடுதலையும் ஒரு கண்ணியாக இணைப்பதற்காகவுமே.

மூளையின் இயங்கு முறையை, ஒரு எறும்புக் காலனியின் இயங்குமுறையுடன் ஒப்பிடலாம். ஒரு எறும்புக் கூட்டத்தை, எறும்பு வரிசையை சற்று தொலைவிலிருந்து பார்த்தால், அதன் இயக்கம், முழுமையாகத் திட்டமிடப்பட்ட, ஒழுங்கமைவுள்ள இயக்கமாகத் தோன்றும். ஆனால், அதை மிக அருகில் சென்று, தனித்தனி எறும்புகளின் இயக்கங்களாகப் பார்த்தால், அதைவிட மோசமான, ஒழுங்கற்ற ஒரு இயக்கத்தை காணமுடியாது என தோன்றலாம். வரிசையில் எறும்புகள் எதிர் எதிர் திசைகளில், ஒன்றை ஒன்று முட்டி விலகி, வரிசையிலிருந்து திசைமாறி சென்று மீண்டும் வரிசையில் இணைந்து, ஒழுங்கற்ற தன்மையுடன் காணப்படும். அதாவது, எறும்புக் கூட்டத்தை ஒரு ஒற்றை இயக்கமாக பார்ப்பது ஒரு நிலை. அவற்றை தனித்தனி எறும்புகளாக பார்ப்பது இன்னொரு நிலை. ஒற்றை இயக்கமாக பார்க்கும்போது, அவை நம்முள் ஒரு வகை அர்த்தத்தை அல்லது உணர்வை கொடுக்கலாம். தனித்தனியாக பார்க்கும்போது, முற்றிலும் வேறான ஒரு அர்த்தத்தை அல்லது உணர்வை கொடுக்கலாம்.

ஒரு எறும்பு கூட்டத்தில் பல்வேறு இன எறும்புகள் இருக்கும். உணவு சேகரிப்பதற்கான எறும்புகள், கூடு கட்டுவதற்கான எறும்புகள், காலனியின் பாதுகாப்புக்கான படை வீரர் எறும்புகள், இனப்பெருக்கத்திற்கான எறும்புகள் மற்றும் இதைப்போன்ற குழுக்கள். உணவு சேகரிக்கும் குழுவை சேர்ந்த எறும்பு, செல்லும் வழியில் உணவைக்கண்டு கொண்டால், அது வரிசையிலிருந்து விலகி அந்த உணவைப்பற்றிக்கொள்ளும். அத்துடன், அதன் மொழியில், ஒரு வகை வாசனையை எழுப்புவதன் மூலம் அந்த கூட்டத்தில் உள்ள மற்ற உணவு சேகரிக்கும் எறும்புகளுடன் தொடர்பு கொள்ளும். அந்த தொடர்பு எல்லைக்குள் தேவையான அளவு உணவு சேகரிக்கும் எறும்புகள் இருந்தால், அவை ஒன்று சேர்ந்து அந்த உணவை எடுத்துக்கொள்ளும். ஒருவேளை இருக்கும் உணவின் அளவு மிகக்குறைவாக இருந்து, அதிகமாக அந்த இனத்தை சார்ந்த எறும்புகள் இருந்தால், அங்கு தனியளவில் ஒரு ஒழுங்கின்மை தோன்றி, அந்த ஒழுங்கின்மையே அனைத்து எறும்புகளையும் மீண்டும், முழு அளவில், ஒரு ஒழுங்கினுள் சேர்க்கும்.

ஒரு எறும்புக் காலனி, நீடித்து இருக்க வேண்டுமானால், அதனுள் உள்ள வெவ்வேறு தொழில்களுக்கான இனக்குழுக்களின் பரவல், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் இருந்தாக வேண்டும். இந்த பரவல், ஒரு எறும்பு காலனியின் வாழ்நாளில் பலமுறை, அந்த காலனியின் இயல்பிற்கேற்ப, மறுஉருவாக்கம் அடையும். ஏதேனும் காரணங்களால், இனக்குழுக்களின் பரவல் தேவையான விகிதத்தில் இல்லாத பட்சத்தில், அந்த எறும்பு காலனி அதன் இருப்பை இழந்து விடும்.

நம் மூளையில் உள்ள நியூரான், எறும்புக் கூட்டத்தில் உள்ள ஒரு தனிப்பட்ட எறும்புக்கு இணையாக கருதலாம் (ஒரு ஒப்பீட்டுக்காக மட்டும்). மனித மூளையில் சுமார் 10 பில்லியன் (1000 கோடி) நியூரான்கள் உள்ளன. நியூரான்களில் சினாப்ஸ் (Synapse) என்னும் பகுதி அவற்றின் ஏற்பிகள் (Input) ஆகும். ஆக்ஸான் (Axon) என்னும் வால் பகுதி, அவற்றின் வெளியீட்டு (Output) உறுப்பாகும். ஒரு நியூரானில் ஏறத்தாழ 200,000 ஏற்பிகள் உள்ளன. நியூரான்களுக்கு இரண்டு நிலைகள் மட்டுமே உள்ளன - தூண்டப்பட்ட நிலை அல்லது தூண்டப்படாத நிலை. நியூரான்களின் தூண்டப்பட்ட நிலையில், அவை மின்வேதி அணுக்களை (Ions) அவற்றின் வெளியீட்டு உறுப்பின் வழியாக வெளியிடுகின்றன. ஒவ்வொரு நியூரானின் ஏற்பிகள் மற்றும் வெளியீட்டு உறுப்புகள், பல ஆயிரக்கணக்கான மற்ற நியூரான்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு நியூரான், ஒவ்வொரு நொடியிலும் சுமார் ஆயிரம் முறை தூண்டப்படலாம். ஒவ்வொரு தூண்டுதலிலும் மின்வேதி அணுக்கள் வெளியிடப்படுவதால், அவற்றை திரும்பப் பெறுவதற்காக ஒரு தூண்டுதலுக்கும் அடுத்த தூண்டுதலுக்கும் இடையில் சிறிது இடைவெளி இருந்தாக வேண்டும். இந்த இடைவெளி சுமார் 1 மில்லி செகன்ட் அளவுக்கு இருக்கும்.

நியூரானின் அமைப்பிலிருந்து, ஒவ்வொரு நியூரானும் ஒவ்வொரு வினாடியிலும் இருபது கோடி தூண்டுதல்களை பெற்று, சுமார் ஆயிரம் தூண்டுதல்களை 200,000 வேறு நியூரான்களுக்கு அளிக்கும் சாத்தியத்துடன் உள்ளதை அறியலாம். அதாவது, நம் மூளை எவ்வளவு வேகத்தில் இயங்குகிறது என்பது இந்த எண்ணிக்கைகளிலிருந்து ஓரளவு புலப்படலாம். ஒவ்வொரு நியூரானும் நேர்மறை அல்லது எதிர்மறை தூண்டுதல்களை, அதன் வெளியீட்டு உறுப்பு தொடர்பு கொண்டுள்ள நியூரான்களுக்கு அனுப்ப முடியும். ஒரு நியூரான் தூண்டப்பட வேண்டுமானால், அதன் தூண்டுதல் ஏற்பிகளில் வரும் தூண்டுதல்கள், ஒரு குறிப்பிட்ட குறைந்தப்பட்ச அளவை (Thrushhold) விட அதிகமாக இருக்க வேண்டும். ஒரு நியூரானில் உள்ள 200,000 ஏற்பிகளில், சில நேர்மறை தூண்டுதலை பெற்றிருக்கலாம், சில எதிர்மறை தூண்டுதலை பெற்றிருக்கலாம். அவற்றின் கூட்டுத்தொகை, நேர்மறையும் எதிர்மறையும் ஒன்றை ஒன்று சமன் செய்த பின், குறைந்த பட்ச தூண்டுதல் அளவை கடந்திருந்தால், அந்த நியூரான் தூண்டப்பட்டு, அதன் வெளியீட்டு உறுப்புகளால் தொடர்புபடுத்தப்பட்டுள்ள நியூரான்களுக்கு தூண்டுதலை அனுப்பும். நியூரானின் வெளியீட்டு உறுப்பு, வெவ்வேறு நீளங்களால் பிற நியூரான்களுடன் தொடர்புறுத்தப்பட்டுள்ளது. அந்த நீளத்திற்கேற்ப அடுத்த நியூரான்கள், வெவ்வேறு நேரத்தில், முதல் நியூரானிடமிருந்து தூண்டுதலை பெறுகின்றன. அடுத்த நியூரான்கள் முதல் நியூரானிலிருந்து பெறும் தூண்டுதலின் நேரத்திற்கேற்பவும், அதே நேரத்தில் அந்த நியூரான்கள், பிற நியூரான்களிடமிருந்து பெறும் தூண்டுதலிற்கேற்பவும் மூளையின் அந்த நேரத்து செயல்பாடு இருக்கும்.

இந்த தளத்தில் மூளையின் செயல்பாட்டை பார்த்தால், எறும்புக் காலனியில் உள்ள எறும்புகளின் இயக்கத்துடன் உள்ள ஒற்றுமையை உணரலாம். எறும்பு காலனியில் உள்ள எறும்பு, முற்றிலும் ஒழுங்கற்ற முறையில் அதன் இயல்பிற்கேற்ப இயங்குகிறது. அந்த ஒழுங்கற்ற தனி எறும்புகளின் இயக்கத்திலிருந்து, மிக ஒழுங்கான எறும்பு காலனியின் இயக்கம் உருவாகிறது. மனித மூளையிலும், நியூரான்கள் அவை பெறும் தூண்டுதலுக்கேற்ப ஒழுங்கற்ற முறையில் பிற நியூரான்களுக்கு தூண்டுதல்களை அனுப்புகிறது. அந்த கோடிக்கணக்கான ஒழுங்கற்ற தூண்டுதல்களிலிருந்து, ஒழுங்கான செயல், எண்ணம், சிந்தனை மனித மூளையில் உருவாகிறது.
நாம் அடையும் அறிவிற்கேற்ப, நியூரான்களின் ஏற்பிகள் மற்றும் வெளியீட்டு உறுப்புகளின் தொடர்புகள் தொடர்ந்து மாற்றமடைய வேண்டும். அல்லது சில ஏற்பிகள் மற்றும் வெளியீட்டு உறுப்புகளில் தூண்டுதல் ஏற்கப்படாமலோ, வெளியிடப்படாமலோ இருக்க வேண்டும். இந்த மாறுதலுக்கேற்ப நம் எண்ணங்களும், சிந்தனைகளும், செயல்களும் மாற்றமடைந்திருக்கலாம். நம் மூளைகளில், சில குறிப்பிட்ட நியூரான் கூட்டம், பிற நியூரான்களின் தூண்டுதல்களை கவனிக்கும் வேலையை மட்டும் செய்யலாம். அந்த நியூரான் கூட்டமே மனிதன் 'சுயம்' என்பதை அறிவதாகவும் இருக்கலாம். அதாவது நமது எண்ணங்களையும் செயல்களையும் அவை நிகழும் அதே நேரத்தில், உணர்வாக அடைவது.

விழிப்புணர்வு என நாம் கூறுவது, இந்த சுயம் என்னும் நியூரான் கூட்டத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ள, பிற நியூரான்களின் தொடர்புகளாக இருக்கலாம். விழிப்புணர்வு அதிகரிக்கும்தோறும், சுயம் என்னும் நியூரான் கூட்டத்தில் உள்ள நியூரான்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். முழுமையான விழிப்புணர்வை அடையும்போது அல்லது ஞானத்தை அடையும்போது, 'சுயம்' மூளையில் உள்ள எல்லா நியூரான்களுடனும் தொடர்பை ஏற்படுத்தி இருக்கலாம். அல்லது மூளையின் எல்லா நியூரான்களும், 'சுயம்' என்னும் நிலையை அடைந்திருக்கலாம்.

நியூரான்கள் அவை அளவில் எந்த அர்த்தங்களும் இல்லாதவையாகவும் இருக்கக்கூடும். உதாரணமாக, ஒரு மொழியின் அடிப்படை அலகு எழுத்து. எழுத்துகள், ஒரு நிலையில் குறிப்பிட்ட அர்த்தத்தை கொடுக்கின்றன. ஆனால் ஒரு வார்த்தையில் உள்ள எழுத்துக்களை தனித்தனியாக பார்த்தால், அந்த வார்த்தையின் அர்த்தத்திற்கும், வார்த்தையை உருவாக்கிய எழுத்துகளின் அர்த்தத்திற்கும் தொடர்பேதும் இல்லை. பல தனிப்பட்ட அளவில் அர்த்தம் உள்ள வார்த்தைகளை கோர்த்து ஒரு வாக்கியம் உருவாக்கப்படுகிறது. அந்த வாக்கியம் முற்றிலும் புதிதான ஒரு அர்த்தத்தை நமக்கு அளிக்கிறது. ஒரு வாக்கியத்தில் உபயோகப்படுத்தப்பட்ட தனித்தனி வார்த்தைகளின் அர்த்தம், ஒரு வாக்கியமாக அவை அளிக்கும் அர்த்தத்துடன் முற்றிலும் தொடர்பு இல்லாததாக இருக்கக்கூடும். அவ்வாறே, ஒரு தனிப்பட்ட நியூரான் தூண்டதல், மனம் அளவில் எந்த அர்த்தமும் இல்லாததாக இருக்கலாம். அதே நேரத்தில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நியூரான்களின் ஒருங்கிணைந்த தூண்டுதல் நம் வாழ்க்கைக்கு அர்த்தத்தை அளிக்கலாம்.

இங்கு கூறப்பட்டிருப்பவை எல்லாம், ஒரு குறிப்பிட்ட தளத்தில் மட்டுமே அர்த்தம் உடையதாக இருக்கலாம். ஞானமடைதல் என்பதை வேறு தளங்களில் நோக்கினால், இவை எந்த அர்த்தமும் இல்லாத வெற்று வார்த்தைகளாகவும் இருக்கக்கூடும். எழுத்துக்கள் வார்த்தையாக மாறும்போதும், வார்த்தைகள் வாக்கியங்களாக மாறும்போதும், வாக்கியங்கள் பத்திகளாக மாறும்போதும் தத்தம் அர்த்தங்களை இழந்து, அதை விட உயர்ந்த நிலையில் அர்த்தத்தை பெறுவதைப்போல!


பின்குறிப்பு; இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள சில உதாரணங்களும், நியூரான்களின் செயல்பாடுகள் குறித்த விளக்கமும் GODEL, ESCHAR, BACH: An Eternal Golden Braid என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

blog.change@gmail.com

No comments: