Sunday, November 23, 2014

வாழ்தல்

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்நிகழ்வின் மேல் எத்தகைய சுய ஆதிக்கமும் இல்லாமல், வாழ்கிறோம் என்னும் உணர்வில்லாமல், மனிதனை விலங்குகளிடமிருந்து வித்தியாசப்படுத்தும் ஒரே காரணியான சுய அறிதல் சற்றும் இல்லாமல். மனித வாழ்க்கை மகத்தானது, தவற விடுவதற்கு மிக மிக அரிதானது, (Too precious to miss). எனினும் அதைத் தவற விட்டு, வேறு எதையோ தேடிக்கொண்டிருக்கிறோம். மனித வாழ்க்கையை முழுமையாக அனைவரும் வாழ்வதற்கு தகுதியான சூழல், இன்றைய காலகட்டத்தைப்போல வேறு எப்போதும் இருந்ததில்லை. எனினும் இன்று வாழ்க்கையை மனிதர்கள் இழப்பது போல வேறு எந்த கால கட்டத்திலும் இழந்து விட்டதாகவும் தோன்றவில்லை.

வேறு எந்த காலகட்டத்திலும், மனிதர்களில் ஒரு சிறு குழுவினரைத்தவிர மற்ற அனைவருக்கும், தத்தம் அன்றாட வாழ்க்கைத்தேவைகளை அடைவதற்கே அவர்கள் வாழ்க்கை போதுமானதாக இருந்திருக்கவில்லை. அந்த நிலையில், அவர்கள் விரும்பியிருந்தாலும், வாழ்க்கையை அவர்களால் முழுமையாக வாழ்ந்திருக்க முடியாது. தற்போதைய காலகட்டத்தில், அன்றாடவாழ்க்கைத்தேவைகள், மிக மிக எளிதாக அனைவராலும் பெற முடிகிறது. அத்துடன் வாழ்க்கையின் பாதுகாப்பையும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மனிதர்கள், வாழ்க்கையை வாழாமல், அன்றாடத்தேவைகள் என்பதன் அர்த்தத்தை விரித்துக்கொண்டே சென்று, தேவைகளை அடையமுடியாத இடத்தில் தங்களை அமர்த்திக் கொள்கிறார்கள். - பொருளாதார நிலையில் அனைத்து தளங்களில் உள்ளவர்களும். அதன்மூலம் வாழ்க்கையை வாழ்வதையும் தள்ளிவைத்துக்கொண்டே இருக்கிறார்கள் - தாங்கள் மரணிக்கும்வரைக்கும்; வாழும் சாத்தியத்தை முழுமையாக இழப்பதுவரைக்கும். அதற்கு தோதாக மறுபிறவி என்னும் ஒரு கற்பனையையும், அந்த கற்பனையின் மூலம் இன்னொரு பிறவியில் முழுமையாக வாழலாம் என்னும் இன்னொரு கற்பனையையும் தம் மனதுக்குள் விரித்தெடுத்து கொள்கிறார்கள் - மறுபிறவி என்னும் ஒன்று இருந்தால், அது எவ்வாறு நிகழ்கிறது என்னும் அறிதலை சற்றேனும் அடையாமல்.

ஒரு பெருங்கூட்டம், தங்களுக்கு இயற்கையால் வழங்கப்பட்டுள்ள ஒரு மாபெரும் சாத்தியத்தை, சுயத்துடன் வாழும் சாத்தியத்தை, இழப்பதை அறியாமலே, புறங்கையால் தள்ளிவிடுவதை காணும்போது, அச்சாத்தியத்தை உணர்ந்த எவரும் தனிமையில் கண்ணீர் விடாமல் கடந்து செல்ல முடியும் என்று தோன்றவில்லை. துரதிர்ஷடவசமாக, சுயம் என ஒன்று இல்லாமல் வாழும் எவருக்கும், அவர்கள் வேண்டாம் என தள்ளிவிடுவதன் மதிப்பையும் உணர்த்தமுடிவதில்லை.

ஆம், நாம் மந்தைகளாகவே வாழ்ந்து வருகிறோம். சுயம் என அறிந்திருப்பது உண்மையில் நம் சுயம் அல்ல; மந்தையால் உருவாக்கப்பட்ட அகங்காரத்தையே! நம்மை சுற்றியிருக்கும் மந்தையின் பாகங்களாகிய பெற்றோர், உற்றோர், ஆசிரியர் என்றும் சான்றோர் என்றும் கூறப்படுபவர்கள், நண்பர்கள், பகைவர்கள், ஆகியோர்களால் பாராட்டப்பட்டும், அவமானிக்கப்பட்டும், ஏற்றுக்கொள்ளப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும், சார்ந்து இருந்தும், எதிர்த்து இருந்தும் அகங்காரம் என்னும் நாம் அறியும் சுயம் நமக்குள் உருவாக்கப்பட்டு விட்டது. அந்த அகங்காரம் என்னும் சுயம் ஊக்குவிக்கப்படுவதை இன்பம் என்றும், தாக்குதலுக்குள்ளாவதை துன்பம் என்றும் பிரித்து வைத்து விட்டோம்.

வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்கள் என்று கூறுபவர்கள் இரண்டு வகைகளில் இந்த இன்ப துன்பங்களை கடந்திருக்க கூடும். ஒரு சாரர், இந்த இன்ப துன்பங்களை உணரும் தன்மையை இழந்து, மன அளவில் உணர்ச்சியற்று மரத்து போயிருப்பார்கள். அவர்களால் இன்ப துன்பங்களைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல், தாங்கள் எடுத்துக்கொண்ட நோக்கத்தை நோக்கி, இயந்திரத்தனமாக முன்னேறிச் செல்ல முடியும். அவர்கள் சந்தேகம் இல்லாமல் தங்கள் நோக்கத்தை அடைவார்கள். ஆனால் அவர்களால் மனித வாழ்க்கையை வாழ முடியாது. அவர்கள் வெறும் இயந்திரங்களே. துரதிர்ஷ்டவசமாக, நாம் நம் குழந்தைகளை இந்த வழியிலேயே ஆற்றுப்படுத்துகிறோம். ஏனெனில் வெற்றிக்கு இன்னொரு வழி இருப்பதை நாமே அறிந்திருக்கவில்லை.

இரண்டாவது வகையினரும் இன்ப துன்பத்தை சற்றேனும் கடந்திருப்பார்கள். அந்த இன்ப துன்பங்களை அனுபவித்தபடி, உணர்ந்தபடி, இன்பமும் துன்பமும் வாழ்க்கையின் பாகங்களே, அவற்றை அனுபவிப்பதே வாழ்க்கை என்னும் புரிதலுடன், அனுபவிக்கும் இன்பங்களும் துன்பங்களும் நோக்கங்களை எந்த வகையிலும் பாதிக்காமல், நோக்கம் என்பதை ஒரு நெகிழ்வுத்தன்மையுடன் கொண்டு, அந்த நோக்கத்தை நோக்கி, அனைத்தையும் அனுபவித்தபடி, நெகிழ்வுத்தன்மையுடன் சென்று அடைவார்கள். அவர்களே வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் நோக்கமும் வாழ்க்கையைப்போல நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பதால், மிக எளிதாக அந்த நோக்கத்தை அடைந்திருப்பார்கள் - நோக்கத்தை அடையும்வரை எத்தனை இன்பதுன்பங்களை அடைந்திருந்தாலும்! மனிதர்களாக நோக்கத்தை அடைந்தவர்கள்! அவர்களுக்கு என் வணக்கங்கள்!
இன்ப துன்பங்களில் தங்களை இழப்பவர்கள், வாழ்க்கையில் எந்த நோக்கத்தையும் அடைய முடியாது. அவர்களுக்கு நோக்கம் எனவும் ஒன்று இருக்க முடியாது. எனவே வெற்றியும்! துரதிரஷ்டவசமாக, மக்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த மந்தையிலேயே இருக்கிறார்கள். பெற்றோரால் வெற்றியடையும் இயந்திரமாக உருவாக்கப்படும் பெரும்பாலான, அந்த வெற்றிக்கான திறமை இல்லாத குழந்தைகளும், இந்த மந்தையிலேயே வந்து சேர்கிறார்கள். அல்லது சேர்த்து விடப்படுகிறார்கள்.

தத்துவார்த்த தளத்தில், உடலை 'நாம்' எனக்கொள்ள முடியாது, நம்மில் இருக்கும் ஆன்மீக சாரத்தையே 'நாம்' எனக்கொள்ளமுடியும் என்று கூறப்பட்டாலும், அந்த ஆன்மீக சாரம் நிலைத்திருப்பதற்கு உடலும் மிக அவசியம். அந்த தளத்தில் உடலையும் 'நாம்' எனக்கூறலாம். உடல் ஒரு ஒற்றை இருப்பு அல்ல. அது கோடானுகோடி 'செல்'களால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டுத்தொகை. ஒவ்வொரு 'செல்'லும் அதற்கென உயிரும் வாழ்நாளும் கொண்டவை. அதாவது, கோடானுகோடி உயிரினங்களின் கூட்டுத்தொகையே 'நாம்' என அறியப்படுவது. அந்த உயிரினங்களின் கூட்டு ஆன்மீக சாரமே, ஒற்றை இருப்பாக, மனிதன் என அறியப்படும் நம் ஆன்மீக சாரம். அந்த 'செல்'கள் நம் உடலினுள் தங்கள் ஒருங்கிணைப்பை இழக்கும்போது, ஒரு மனித இருப்பாக, நம் உயிரையும் எனவே ஆன்மீக சாரத்தையும் இழந்திருப்போம்.

மனித வாழ்க்கையை வாழ்தல் என கூறும்போது, உடலில் இருக்கும் கோடானுகோடி 'செல்'களும் வாழ்வதே ஆகும். அகங்காரத்தை மட்டும் 'நாம்' எனக்கொள்ளும்போது, அகங்காரம் அடையும் இன்பங்களை அதிகரிப்பதையும், துன்பங்களை குறைப்பதையும் நோக்கமாக கொண்டிருக்கும்போது, உடலில் வாழும் கோடானுகோடி 'செல்'களை, தம் இருப்பின் மூலம் நம் இருப்பை அளிக்கும் கோடானுகோடி உயிர்களை மறந்து விடுகிறோம். அத்துடன் நம் வாழ்க்கையை வாழ்தல் என்னும் சாத்தியத்தையும் அறிவிலிருந்து விலக்கி விடுகிறோம்.

அகங்காரம் விரும்பும் உணவை, அகங்காரம் விரும்பும் வகையில், நம் இருப்பை உறுதி செய்யும் கோடானுகோடி 'செல்'களாகிய உயிர்களுக்கு அளிக்கிறோம். அளிக்கும் உணவை அந்த உயிர்கள் விரும்புகின்றனவா, ஏற்றுக்கொள்கின்றனவா, போதுமானதாக உள்ளதா என்னும் அறிதல்கள் இல்லாமல், அகங்காரம் விரும்பும்வரை அவற்றுக்கு அளிக்கிறோம். மனித உயிர், அதற்கென ஒரு நோக்கத்தை கொண்டுள்ளதைப்போல, உடலில் உள்ள ஒவ்வொரு 'செல்'லும் அதன் இயல்பு மற்றும் உடலில் அதற்கு அளிக்கப்பட்டுள்ள தொழிலுக்கேற்ப ஒரு விழைவை கொண்டிருக்கும். மனிதர்களோ உடலின் 'செல்'களின் விழைவிற்கு எத்தகைய மதிப்பையும் அளிக்காமல், அகங்காரத்தின் விழைவிற்கேற்ப, வாழ்க்கைய அமைக்க முயற்சிக்கிறோம். உண்மையில், நம்மை உருவாக்கிய அந்த கோடானு கோடி உயிர்கள் அவற்றின் விழைவை அடையும் போது, அவற்றுக்கான தொழிலை மனித உடலினுள் தங்குதடையின்றி செய்யும் சூழல் அமையும்போது, அவற்றின் தொகுப்பான 'மனிதன்' எனப்படும் நாமும், நம் விழைவை நோக்கி சென்று கொண்டிருப்போம். அகங்காரத்தின் விழைவிற்கேற்ப செல்லும்போது, நம்மை ஆக்கிய உயிர்களின் விழைவிற்கு எதிராக செல்லும்போது 'நம்' இருப்பில் முரண்பாடு ஏற்படுகிறது. அந்த முரண்பாடு வாழ்க்கையை வாழ்வதிலிருந்து நம்மை விலக்கி விடுகிறது.

ஆம், வாழ்க்கையை முழுமையாக வாழ, நம்மில் முரண்பாடு களையப்பட வேண்டும் - எல்லா நிலைகளிலும்; மனத்தளத்திலும், உடல் தளத்திலும், செயல்கள் தளத்திலும், உணர்வு தளத்திலும்..... முரண்பாடுகள் களையப்படும்போது, மனித உடலில் உள்ள கோடானுகோடி உயிர்களாகிய 'செல்;'களின் ஒத்திசைந்த இயக்கமே, மனித உயிரின் ஒற்றை இயக்கமாக வெளிப்படும். அந்நிலையில், மனித வாழ்க்கை முழுமையாக நிகழும். ஆனால், அது அத்தனை எளிதான ஒன்றாகவும் தோன்றவில்லை. அந்த ஒத்திசைவை உருவாக்க வேண்டுமானால், நம்மில் நிகழும் முரண்பாடுகளை அறிய வேண்டும். அதுவே சுய அறிதல். அந்த அறிதலில், முரண்பாடுகள் ஒத்திசைவாக மாற்றமடையும். எந்த முரண்பாடுகளையும் இல்லாமல் செய்வதற்கான ஒரே வழி, அந்த முரண்பாட்டை முழுமையாக புரிந்து கொள்வதே. அப்புரிதல், முரண்பாட்டை, அதுவாகவே முற்றிலும் இல்லாமல் செய்து விடும். முரண்பாடுகளை இல்லாமல் செய்ய முயலும் மற்ற எல்லா வழிகளாலும் செய்ய முடிவது, அதை பொதுப்பார்வையிலிருந்து மறைத்து, உள்ளுக்குள் எடுத்துச் செல்லவதை மட்டுமே. அங்கு அந்த முரண்பாடு தன் இடத்தை நிறுவி, வேறு பல புதிய முரண்பாடுகளுக்கு ஆதாரமாக திகழும்.


எனில் வாழ்க்கையை வாழ்தல் என்பது எதுவாக இருக்க கூடும்? வாழ்வின் எந்தந்த தருணங்களில் எண்ணங்களும், உணர்வுகளும், செயல்களும் முழு ஒத்திசைவுடன், முரண்பாடுகள் இல்லாமல் நிகழ்கிறதோ, அந்த தருணங்கள் மட்டுமே மனிதப்பிறவியாக வாழ்க்கையை வாழும் தருணங்களாக இருக்க கூடும். மனிதனுக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கை மிகவும் அழகானது. தனிமனித வாழ்க்கை எந்த கணத்தில் வேண்டுமானாலும் முடிந்து விடலாம். இந்த அரிய வாழ்கையை வாழாமல் இழப்பதைவிட மனிதன் இழப்பதற்கு வேறு மதிப்புடைய எதுவும் இல்லை. ஆனாலும், அந்த மகத்தான வாழ்க்கையை வாழாமல் இழந்து கொண்டிருக்கிறோம் - எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும், செயல்களுக்குமான ஒத்திசைவை இழந்ததன் மூலம்! உயிர் இருப்பின் கடைசி கணம் வரை, அது அடுத்த கணமாக இருந்தாலும், ஒருகணத்திலேனும் முழுமையாக வாழ்வதற்கான சாத்தியம் எல்லா மனிதர்களுக்கும் உள்ளது. அந்த சாத்தியத்தை அறிவோமாக! வாழ்க்கையை வாழ்வோமாக!

blog.change@gmail.com

Thursday, November 13, 2014

ஞானமடைதல்

மனித மனதின் இயல்பு தேடுதல். எதை அடைந்தால் வேறு தேவைகள் இல்லையோ அதை அடையும்வரை தேடுவது. அந்த 'அது' எது என 'அதை' அடைவதுவரைக்கும் தெரிவதில்லை. ஆனால் மனித தேடுதல் அந்த ஒன்றை நோக்கி மட்டும் இல்லை. தேடுதலில் ஒரு எல்லையை அடைந்தவர்களே, அந்த கடைசியான ஒன்றைத் தேடுகிறார்கள். மற்றவர்கள் அனைவரும், மனதின் இயல்பின் காரணமாக, தாங்கள் அறிந்தவற்றையே தேடுகிறார்கள். தேடியவற்றை அடைந்த பின், மற்றொன்றை பற்றிக்கொண்டு அதைத் தேட தொடங்குகிறார்கள். அதையும் அடைந்த பின் மீண்டும் இன்னொன்றை. மனதின் தேடும் இயல்பை அறிந்தவர்களால் மட்டுமே, அறியாத ஒன்றை, அந்த இறுதித் தேடுதலை,  நோக்கி தங்கள் தேடுதலை திசை திருப்ப முடியும். அதை அடைந்தவர்கள் ஞானமடைந்தவர்கள், மனிதப் பிறவியாக முழுமையை அடைந்தவர்கள். அவர்களுக்கு என் வணக்கங்கள்!

மனம் என்பதை மூளையின் இயக்கங்களை அறியும், மூளையினுள் இருக்கும் ஒரு புலன் என கருதலாம் - அல்லது புலனால் உணரப்படும் உணர்வு. அந்த புலன் மூளையின் இயக்கங்களை உணர்வது, மனமாக மூளையினுள் உணரப்படுகிறது. ஆச்சரியமாக, மனதை உணரும் புலனும் மூளையினுள் இருப்பதால், மனமாக மூளையினுள் அடையப்படும் உணர்வுகளையும் அந்த புலனால் உணரமுடியும். அதாவது தன்னைத்தானே முடிவில்லாமல் உணர்தல். ஒரு முடிவற்ற, தன்னைத்தானே இயக்கும் கண்ணியைப்போல (Endless Self Refernecing Loop)  இரு கண்ணாடிகளுக்கு இடையில் நின்றுகொண்டு, அந்த கண்ணாடிகளில் தெரியும் முடிவற்ற நம் பிம்பங்களை, அந்த பிம்பங்களே நோக்குவதைப்போல! ஞானமடைதல் என்பதை மூளையின் இத்தகைய சுய அறிதல் என்னும் கோணத்திலும் காணலாம்.

ஞானமடைதல் என்னும் நிலையை அடையும்போது, மனமாக உணரப்படும் மூளை, தன்னைத்தானே முடிவில்லாமல் உணர்ந்து கொண்டு, தன்னில் நிலைத்திருக்க கூடும். அது மூளையில் உள்ள அணுக்களின் அல்லது செல்களின் அல்லது நியூரான்களின் ஒத்திசைந்த ஒரு நிலை. அந்த நிலையை அடைந்த மூளைக்கு வேறு தேடுதல்கள் இல்லை. அந்த ஒத்திசைந்த நிலைக்கேற்ப, அதன் இயக்கத்திற்கு தேவையான செயல்களை, அதன் உள்ளிருக்கும் நுண்ணறிவின் மூலம், வெளியிலிருந்து வரும் (புலன் உணர்வின்) எந்த இயக்கங்களிலோ அல்லது நினைவுகளின் இயக்கங்களிலோ தன்னை இழக்காமல், மூளை செய்ய வைக்கும். அந்நிலையில், மூளையினுள் எந்த முரண்பாடுகளும் இல்லை. அந்த மூளையை தன் உடலில் தாங்கியிருக்கும் மனிதனுக்கும் எந்த வாழ்க்கைப் போராட்டங்களும் இல்லை. அம்மனிதனுக்கு வாழ்தல் மட்டுமே எஞ்சியிருக்கும்.
நாம் அடையும் இன்பங்கள், துன்பங்கள் அனைத்தும் புலன்களால் அடையப்பெற்றவற்றை மனம் அறிவதையே. மனதை அறியும் புலனால், மனதையே அறியும் மனம் அடையும் இன்பம், வேறு எந்த இன்பங்களுடனும் ஒப்பீடு செய்ய முடியாதது. (அதை இன்பம் என்னும் வார்த்தையால் விளக்க முடியாது. ஏனெனில் இன்பம் எப்போதும் துன்பத்தையும் தன்னுடன் அழைத்து வரும். மனதை அறிவதில், துன்பம் இருக்க வாய்ப்பில்லை. துன்பத்தை அடையும் மனநிலையில் உள்ள மூளையில் இருக்கும் மனதுக்கான புலன், இன்னும் உணரும் திறனை அடையாததாகவே இருக்கும்)

அந்த நிலையை, அனுபவமாக கூற முடியும் என்று தோன்றவில்லை. அது நம் அன்றாட புழங்குதளத்தில் இல்லை. அவ்வாறு கூற முடிந்தாலும், அந்நிலையின் தொடக்கத்தையாவது உணர்ந்திருக்காதவர்களால், அதை விளக்கும் வார்த்தைகளை புரிந்து கொள்ளவும் முடியாது. உவமைகள் மூலம் மட்டுமே, மூளையின் அந்த நிலையை மற்றவர்களுக்கு கூற முடியும். உவமைகள் மூலம் கூறும்போது, கேட்பவர்களின் கற்பனைத்திறனுக்கேற்ப அது பல்வேறு வடிவங்களில் புரிந்து கொள்ளப்படும். எனினும் அந்த புரிதல்கள் மூலம் ஞானமடைந்த மனதின், மூளையின் இயங்கு நிலையை உணர முடியாது. ஞானமடைதலே அதற்கான ஒரே வழி. ஞானமடைதல் குறித்த எல்லா விளக்கங்களும், உவமைகளும் அவ்வாறு ஒரு நிலை உள்ளது என மற்றவர்களுக்கு உணர்த்துவதும், அதன் மூலம் மனதின் இயல்பான தேடுதலில், ஞானத்தேடுதலையும் ஒரு கண்ணியாக இணைப்பதற்காகவுமே.

மூளையின் இயங்கு முறையை, ஒரு எறும்புக் காலனியின் இயங்குமுறையுடன் ஒப்பிடலாம். ஒரு எறும்புக் கூட்டத்தை, எறும்பு வரிசையை சற்று தொலைவிலிருந்து பார்த்தால், அதன் இயக்கம், முழுமையாகத் திட்டமிடப்பட்ட, ஒழுங்கமைவுள்ள இயக்கமாகத் தோன்றும். ஆனால், அதை மிக அருகில் சென்று, தனித்தனி எறும்புகளின் இயக்கங்களாகப் பார்த்தால், அதைவிட மோசமான, ஒழுங்கற்ற ஒரு இயக்கத்தை காணமுடியாது என தோன்றலாம். வரிசையில் எறும்புகள் எதிர் எதிர் திசைகளில், ஒன்றை ஒன்று முட்டி விலகி, வரிசையிலிருந்து திசைமாறி சென்று மீண்டும் வரிசையில் இணைந்து, ஒழுங்கற்ற தன்மையுடன் காணப்படும். அதாவது, எறும்புக் கூட்டத்தை ஒரு ஒற்றை இயக்கமாக பார்ப்பது ஒரு நிலை. அவற்றை தனித்தனி எறும்புகளாக பார்ப்பது இன்னொரு நிலை. ஒற்றை இயக்கமாக பார்க்கும்போது, அவை நம்முள் ஒரு வகை அர்த்தத்தை அல்லது உணர்வை கொடுக்கலாம். தனித்தனியாக பார்க்கும்போது, முற்றிலும் வேறான ஒரு அர்த்தத்தை அல்லது உணர்வை கொடுக்கலாம்.

ஒரு எறும்பு கூட்டத்தில் பல்வேறு இன எறும்புகள் இருக்கும். உணவு சேகரிப்பதற்கான எறும்புகள், கூடு கட்டுவதற்கான எறும்புகள், காலனியின் பாதுகாப்புக்கான படை வீரர் எறும்புகள், இனப்பெருக்கத்திற்கான எறும்புகள் மற்றும் இதைப்போன்ற குழுக்கள். உணவு சேகரிக்கும் குழுவை சேர்ந்த எறும்பு, செல்லும் வழியில் உணவைக்கண்டு கொண்டால், அது வரிசையிலிருந்து விலகி அந்த உணவைப்பற்றிக்கொள்ளும். அத்துடன், அதன் மொழியில், ஒரு வகை வாசனையை எழுப்புவதன் மூலம் அந்த கூட்டத்தில் உள்ள மற்ற உணவு சேகரிக்கும் எறும்புகளுடன் தொடர்பு கொள்ளும். அந்த தொடர்பு எல்லைக்குள் தேவையான அளவு உணவு சேகரிக்கும் எறும்புகள் இருந்தால், அவை ஒன்று சேர்ந்து அந்த உணவை எடுத்துக்கொள்ளும். ஒருவேளை இருக்கும் உணவின் அளவு மிகக்குறைவாக இருந்து, அதிகமாக அந்த இனத்தை சார்ந்த எறும்புகள் இருந்தால், அங்கு தனியளவில் ஒரு ஒழுங்கின்மை தோன்றி, அந்த ஒழுங்கின்மையே அனைத்து எறும்புகளையும் மீண்டும், முழு அளவில், ஒரு ஒழுங்கினுள் சேர்க்கும்.

ஒரு எறும்புக் காலனி, நீடித்து இருக்க வேண்டுமானால், அதனுள் உள்ள வெவ்வேறு தொழில்களுக்கான இனக்குழுக்களின் பரவல், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் இருந்தாக வேண்டும். இந்த பரவல், ஒரு எறும்பு காலனியின் வாழ்நாளில் பலமுறை, அந்த காலனியின் இயல்பிற்கேற்ப, மறுஉருவாக்கம் அடையும். ஏதேனும் காரணங்களால், இனக்குழுக்களின் பரவல் தேவையான விகிதத்தில் இல்லாத பட்சத்தில், அந்த எறும்பு காலனி அதன் இருப்பை இழந்து விடும்.

நம் மூளையில் உள்ள நியூரான், எறும்புக் கூட்டத்தில் உள்ள ஒரு தனிப்பட்ட எறும்புக்கு இணையாக கருதலாம் (ஒரு ஒப்பீட்டுக்காக மட்டும்). மனித மூளையில் சுமார் 10 பில்லியன் (1000 கோடி) நியூரான்கள் உள்ளன. நியூரான்களில் சினாப்ஸ் (Synapse) என்னும் பகுதி அவற்றின் ஏற்பிகள் (Input) ஆகும். ஆக்ஸான் (Axon) என்னும் வால் பகுதி, அவற்றின் வெளியீட்டு (Output) உறுப்பாகும். ஒரு நியூரானில் ஏறத்தாழ 200,000 ஏற்பிகள் உள்ளன. நியூரான்களுக்கு இரண்டு நிலைகள் மட்டுமே உள்ளன - தூண்டப்பட்ட நிலை அல்லது தூண்டப்படாத நிலை. நியூரான்களின் தூண்டப்பட்ட நிலையில், அவை மின்வேதி அணுக்களை (Ions) அவற்றின் வெளியீட்டு உறுப்பின் வழியாக வெளியிடுகின்றன. ஒவ்வொரு நியூரானின் ஏற்பிகள் மற்றும் வெளியீட்டு உறுப்புகள், பல ஆயிரக்கணக்கான மற்ற நியூரான்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு நியூரான், ஒவ்வொரு நொடியிலும் சுமார் ஆயிரம் முறை தூண்டப்படலாம். ஒவ்வொரு தூண்டுதலிலும் மின்வேதி அணுக்கள் வெளியிடப்படுவதால், அவற்றை திரும்பப் பெறுவதற்காக ஒரு தூண்டுதலுக்கும் அடுத்த தூண்டுதலுக்கும் இடையில் சிறிது இடைவெளி இருந்தாக வேண்டும். இந்த இடைவெளி சுமார் 1 மில்லி செகன்ட் அளவுக்கு இருக்கும்.

நியூரானின் அமைப்பிலிருந்து, ஒவ்வொரு நியூரானும் ஒவ்வொரு வினாடியிலும் இருபது கோடி தூண்டுதல்களை பெற்று, சுமார் ஆயிரம் தூண்டுதல்களை 200,000 வேறு நியூரான்களுக்கு அளிக்கும் சாத்தியத்துடன் உள்ளதை அறியலாம். அதாவது, நம் மூளை எவ்வளவு வேகத்தில் இயங்குகிறது என்பது இந்த எண்ணிக்கைகளிலிருந்து ஓரளவு புலப்படலாம். ஒவ்வொரு நியூரானும் நேர்மறை அல்லது எதிர்மறை தூண்டுதல்களை, அதன் வெளியீட்டு உறுப்பு தொடர்பு கொண்டுள்ள நியூரான்களுக்கு அனுப்ப முடியும். ஒரு நியூரான் தூண்டப்பட வேண்டுமானால், அதன் தூண்டுதல் ஏற்பிகளில் வரும் தூண்டுதல்கள், ஒரு குறிப்பிட்ட குறைந்தப்பட்ச அளவை (Thrushhold) விட அதிகமாக இருக்க வேண்டும். ஒரு நியூரானில் உள்ள 200,000 ஏற்பிகளில், சில நேர்மறை தூண்டுதலை பெற்றிருக்கலாம், சில எதிர்மறை தூண்டுதலை பெற்றிருக்கலாம். அவற்றின் கூட்டுத்தொகை, நேர்மறையும் எதிர்மறையும் ஒன்றை ஒன்று சமன் செய்த பின், குறைந்த பட்ச தூண்டுதல் அளவை கடந்திருந்தால், அந்த நியூரான் தூண்டப்பட்டு, அதன் வெளியீட்டு உறுப்புகளால் தொடர்புபடுத்தப்பட்டுள்ள நியூரான்களுக்கு தூண்டுதலை அனுப்பும். நியூரானின் வெளியீட்டு உறுப்பு, வெவ்வேறு நீளங்களால் பிற நியூரான்களுடன் தொடர்புறுத்தப்பட்டுள்ளது. அந்த நீளத்திற்கேற்ப அடுத்த நியூரான்கள், வெவ்வேறு நேரத்தில், முதல் நியூரானிடமிருந்து தூண்டுதலை பெறுகின்றன. அடுத்த நியூரான்கள் முதல் நியூரானிலிருந்து பெறும் தூண்டுதலின் நேரத்திற்கேற்பவும், அதே நேரத்தில் அந்த நியூரான்கள், பிற நியூரான்களிடமிருந்து பெறும் தூண்டுதலிற்கேற்பவும் மூளையின் அந்த நேரத்து செயல்பாடு இருக்கும்.

இந்த தளத்தில் மூளையின் செயல்பாட்டை பார்த்தால், எறும்புக் காலனியில் உள்ள எறும்புகளின் இயக்கத்துடன் உள்ள ஒற்றுமையை உணரலாம். எறும்பு காலனியில் உள்ள எறும்பு, முற்றிலும் ஒழுங்கற்ற முறையில் அதன் இயல்பிற்கேற்ப இயங்குகிறது. அந்த ஒழுங்கற்ற தனி எறும்புகளின் இயக்கத்திலிருந்து, மிக ஒழுங்கான எறும்பு காலனியின் இயக்கம் உருவாகிறது. மனித மூளையிலும், நியூரான்கள் அவை பெறும் தூண்டுதலுக்கேற்ப ஒழுங்கற்ற முறையில் பிற நியூரான்களுக்கு தூண்டுதல்களை அனுப்புகிறது. அந்த கோடிக்கணக்கான ஒழுங்கற்ற தூண்டுதல்களிலிருந்து, ஒழுங்கான செயல், எண்ணம், சிந்தனை மனித மூளையில் உருவாகிறது.
நாம் அடையும் அறிவிற்கேற்ப, நியூரான்களின் ஏற்பிகள் மற்றும் வெளியீட்டு உறுப்புகளின் தொடர்புகள் தொடர்ந்து மாற்றமடைய வேண்டும். அல்லது சில ஏற்பிகள் மற்றும் வெளியீட்டு உறுப்புகளில் தூண்டுதல் ஏற்கப்படாமலோ, வெளியிடப்படாமலோ இருக்க வேண்டும். இந்த மாறுதலுக்கேற்ப நம் எண்ணங்களும், சிந்தனைகளும், செயல்களும் மாற்றமடைந்திருக்கலாம். நம் மூளைகளில், சில குறிப்பிட்ட நியூரான் கூட்டம், பிற நியூரான்களின் தூண்டுதல்களை கவனிக்கும் வேலையை மட்டும் செய்யலாம். அந்த நியூரான் கூட்டமே மனிதன் 'சுயம்' என்பதை அறிவதாகவும் இருக்கலாம். அதாவது நமது எண்ணங்களையும் செயல்களையும் அவை நிகழும் அதே நேரத்தில், உணர்வாக அடைவது.

விழிப்புணர்வு என நாம் கூறுவது, இந்த சுயம் என்னும் நியூரான் கூட்டத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ள, பிற நியூரான்களின் தொடர்புகளாக இருக்கலாம். விழிப்புணர்வு அதிகரிக்கும்தோறும், சுயம் என்னும் நியூரான் கூட்டத்தில் உள்ள நியூரான்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். முழுமையான விழிப்புணர்வை அடையும்போது அல்லது ஞானத்தை அடையும்போது, 'சுயம்' மூளையில் உள்ள எல்லா நியூரான்களுடனும் தொடர்பை ஏற்படுத்தி இருக்கலாம். அல்லது மூளையின் எல்லா நியூரான்களும், 'சுயம்' என்னும் நிலையை அடைந்திருக்கலாம்.

நியூரான்கள் அவை அளவில் எந்த அர்த்தங்களும் இல்லாதவையாகவும் இருக்கக்கூடும். உதாரணமாக, ஒரு மொழியின் அடிப்படை அலகு எழுத்து. எழுத்துகள், ஒரு நிலையில் குறிப்பிட்ட அர்த்தத்தை கொடுக்கின்றன. ஆனால் ஒரு வார்த்தையில் உள்ள எழுத்துக்களை தனித்தனியாக பார்த்தால், அந்த வார்த்தையின் அர்த்தத்திற்கும், வார்த்தையை உருவாக்கிய எழுத்துகளின் அர்த்தத்திற்கும் தொடர்பேதும் இல்லை. பல தனிப்பட்ட அளவில் அர்த்தம் உள்ள வார்த்தைகளை கோர்த்து ஒரு வாக்கியம் உருவாக்கப்படுகிறது. அந்த வாக்கியம் முற்றிலும் புதிதான ஒரு அர்த்தத்தை நமக்கு அளிக்கிறது. ஒரு வாக்கியத்தில் உபயோகப்படுத்தப்பட்ட தனித்தனி வார்த்தைகளின் அர்த்தம், ஒரு வாக்கியமாக அவை அளிக்கும் அர்த்தத்துடன் முற்றிலும் தொடர்பு இல்லாததாக இருக்கக்கூடும். அவ்வாறே, ஒரு தனிப்பட்ட நியூரான் தூண்டதல், மனம் அளவில் எந்த அர்த்தமும் இல்லாததாக இருக்கலாம். அதே நேரத்தில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நியூரான்களின் ஒருங்கிணைந்த தூண்டுதல் நம் வாழ்க்கைக்கு அர்த்தத்தை அளிக்கலாம்.

இங்கு கூறப்பட்டிருப்பவை எல்லாம், ஒரு குறிப்பிட்ட தளத்தில் மட்டுமே அர்த்தம் உடையதாக இருக்கலாம். ஞானமடைதல் என்பதை வேறு தளங்களில் நோக்கினால், இவை எந்த அர்த்தமும் இல்லாத வெற்று வார்த்தைகளாகவும் இருக்கக்கூடும். எழுத்துக்கள் வார்த்தையாக மாறும்போதும், வார்த்தைகள் வாக்கியங்களாக மாறும்போதும், வாக்கியங்கள் பத்திகளாக மாறும்போதும் தத்தம் அர்த்தங்களை இழந்து, அதை விட உயர்ந்த நிலையில் அர்த்தத்தை பெறுவதைப்போல!


பின்குறிப்பு; இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள சில உதாரணங்களும், நியூரான்களின் செயல்பாடுகள் குறித்த விளக்கமும் GODEL, ESCHAR, BACH: An Eternal Golden Braid என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

blog.change@gmail.com

Monday, November 3, 2014

குடிமைப்பண்பு

சிறகு இணைய இதழில் 25-10-2014 அன்று வெளியிடப்பட்ட கட்டுரை.

"அதப்பாருங்க சார், அவ்வளவு காஸ்ட்லியான கார் வச்சிருக்கிறாரு. சொசைட்டியில பெரிய ஆளுன்னு காட்டத்தானே? அவரு எவ்வளவு சின்னத்தனமா ட்ராஃபிக் கியூவ மதிக்காம நடுவுல புகுந்து போறாரு. ஓரு Civic Sense இல்லாம, எதிரே வாற ட்ராஃபிக்கையும் நிறுத்த போறாரு'.
இவ்வாறு கூறியவர் மற்றொரு விலை உயர்ந்த வாகனத்தில் போகிறார். சற்று தொலைவில், ஒரு குளிர்பானம் அருந்திய பிளாஸ்டிக் காலி புட்டியை சாலை ஓரத்தில் வீசி எறிந்து விட்டு செல்கிறார். அவரும் படித்தவர்தான். சமூகத்தில் பொறுப்பான நிலையில் உள்ளவர்தான்.

ஆம், இந்தியர்களாகிய நமக்கு Civic Sense எனப்படும் குடிமை உணர்வு, நாம் அடைந்துள்ள அல்லது அடைந்ததாக பாவனை செய்யும் நாகரீகத்தின் அளவுக்கு இன்னும் வந்து விடவில்லை. ஆனால், நாகரீகம் நிலைத்திருக்க, சமூகம் குடிமைப்பண்பை அடைந்தாக வேண்டும். குடிமை உணர்வே சமூக அங்கத்தினர்களுக்கிடையேயான அற உணர்வாகும். சில அடிப்படை மானுட அறங்களைத்தவிர மற்றவை எல்லாம், வாழும் காலத்திற்கேற்ப, பின்பற்றும் நாகரீகத்திற்கேற்ப மாறும் இயல்புடையது. நாகரீக மாற்றத்திற்கேற்ப நம் அற உணர்வுகளையும் மறுமதிப்பீடு செய்தாக வேண்டும். அற உணர்வுகளும் குடிமைப்பண்புகளும், வாழும் சூழலுக்கேற்ப மறு மதிப்பீடு செய்யப்படாவிட்டால், சமூகம் அதன் அடிப்படை கட்டுமானத்தை இழந்து விட நேரிடலாம்.

சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை நம் சமூகத்தில், மனிதர்களுக்கிடையேயான தொடர்புகள் ஒரு குறுகியவட்டத்தில் மட்டுமே இருந்துள்ளது. இதற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம். மக்கள் வாழ்க்கைக்கு தேவையானவை, அவர்கள் வாழும் குறுகிய வட்டத்திற்குள்ளாகவே கிடைத்திருக்கலாம். வெளியுலக தொடர்புக்கான வசதிகள் அவர்களிடம் இல்லாமல் போயிருக்கலாம்.

இன்றைய நிலைமை முற்றிலும் வேறானவை. எந்த சமூகத்தினரும் ஒரு குறுகிய வட்டத்தினுள் அடைந்து விடுவதில்லை. ஒருவேளை அவர்களால் அந்த வட்டத்தை விட்டு வெளியேற முடியாவிட்டாலும், வெளியுலகம் அவர்களை தேடி வந்து கொண்டே இருக்கும். கூடவே வெளியுலக நாகரீகமும். ஆனால், அந்த புதிய உலகத்தையும் நாகரீகத்தையும் எதிர் கொள்ளவதற்கு, அந்த சமூகம் தயாராக இருக்காது. இதனால், சமூகத்தினுள் முரண்பாடு உருவாகி விடுகிறது. இந்த முரண்பாட்டை இல்லாமல் செய்வதற்கு நம்மிடம் இருப்பவை இரண்டே வழிகள்தான். முதலாவது, அந்த சமூகத்தை, அது இருக்கும் தளத்திலே தொடர்ந்து இருக்கச் செய்வது. இது, உண்மையில் ஏற்றுக்கொள்ளவும் செயல்படுத்தவும் முடியாத ஒன்று. ஒரு சமூகத்தையே அதன் முன் உள்ள வாய்ப்புகளிலிருந்து தள்ளி வைப்பது. இரண்டாவது வழி, மாறும் சூழலுக்கேற்ப, வந்து சேரும் வாய்ப்புகளுக்கேற்ப, சமூகத்தின் மன அமைப்பை மாறுதலுக்குள்ளாக்குவது. ஆனால், அந்த மாற்றம் சமூகத்தின் அடிப்படை அறங்களையும் உணர்வுகளையும் மாற்றாமல் இருக்க வேண்டும். ஒருவேளை அவையும் மாறினால், ஒரு சமூகமே முற்றிலும் அழிந்து வேறோன்றாக மாறிவிடும். நம் கண்ணெதிரே பல உதாரணங்களு இதற்கும் உள்ளன. அந்த மாற்றத்துடன், அந்த சமூகம் அதுவரை அடைந்த அறிவும் அழிந்து விடும். இத்தகைய அழிவு, சமூகத்தின் ஆழ் மன அளவில் முரண்பாடுகளை கொண்டு வரக்கூடும்.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உலகம் நம்மை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது. உலகம் அதன் பொருளாதார தேவைகளுக்காக நம்மை நோக்கி வந்தாக வேண்டும். அவை உருவாக்கும் பொருட்களையும், அப்பொருட்களை ஏற்க வைக்கும் கோட்பாடுகளையும் ஓயாமல் நம்மை நோக்கி நகர்த்திக் கொண்டே இருக்கும். நாமும் அவற்றை எதிர்கொண்டாக வேண்டும். இதைத் தவிர நமக்கு, ஒரு சமூகமாக, வேறு வழியே இல்லை. முரண்நகையாக, உலகம் அவை நம்மிடம் அளிக்கும் நாகரீகத்தை ஏற்றுக்கொள்ளும் விதமாக நாம் மாறியிருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறது. ஆனால் அந்த மாற்றத்திற்கான எத்தகைய விழிப்புணர்வையும் அவை உருவாக்குவதில்லை. ஒருவேளை, உலகத்துக்கு அது தேவை இல்லையோ? ஆனால் ஒரு சமூகமாக நிலைத்திருக்க, அந்த மாற்றத்தை நாம் தழுவியாக வேண்டும். மாற்றத்தை ஏற்றுக்கொண்டவர்கள், சமூகத்தினுள் அந்த மாற்றத்திற்கான விதைகளை விதைத்தாக வேண்டும். நம் அடிப்படை அற உணர்வுகளை இழக்காமலே, புதிய உலகை எதிர்கொள்ள தேவையான மன அமைப்பை, ஒரு சமூகமாக, உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் ஏற்றுக்கொள்ளும் நாகரீகத்திற்கேற்ப, உலகம் வழங்கும் வசதிகளுக்கேற்ப, நம் குடிமைப்பண்புகளையும் மாற்றத்துக்குள்ளாக்கியாக வேண்டும். சில பத்தாண்டுகளுக்கு முன்னால், நாம் செல்லும் இடங்களில், இத்தனை கூட்டமாக மக்கள் திரளை கண்டிருக்கவில்லை. சேவைக்காக காத்திருக்கும் இடங்களில், பெரும்பாலும் வரிசை என்ற ஒன்று தேவைப்பட்டிருக்கவில்லை. சாலைகளில் இத்தனை வாகனங்கள் இல்லை. அல்லது சாலை விதிகளை கடைபிடிக்க, நம்மிடம் ஒரு வாகனம் இருந்திருக்கவில்லை. ஒருவேளை வாகனம் இருந்திருந்தாலும், செல்வதற்கு தடையாக எங்கும் மக்கள் திரள் இருந்திருக்கவில்லை. அன்று நமக்கு தேவையான பொருட்கள் மிகவும் குறைந்த பட்சமானவையே. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தேவையும், அதன் புறவினையாக, கழிவுகளை உருவாக்கவில்லை. அவ்வாறே கழிவுகள் உருவாக்கப்பட்டாலும் தேவைகள் குறைவாக இருந்ததால், அந்த குறைந்த பட்ச கழிவுகள் மற்றவர்களுக்கு தொல்லையாக இருந்திருக்கவில்லை. இன்னும் இது போன்ற பல இல்லைகள்!

குடிமைப்பண்பின் அடிப்படை விதி, நாம் மற்றவர்களிடமிருந்து எத்கைய நாகரீகத்தை எதிர்பார்க்கிறோமோ, அத்தகயை நாகரீகத்துடன், பிறருடனான நம் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது. ஆனால் அது அத்தனை எளிமையானது அல்ல. காரணம், மனதினுள் நாம் ஏற்றுக்கொண்டிருக்கும் சட்டகம். மனதினுள், நமது செயல்பாடுகளை மதிப்பிட ஒரு சட்டகமும், பிறர் செயல்பாடுகளை மதிப்பிட இன்னொரு சட்டகமும் அமைந்திருக்கும். நம் மன இயக்கத்தை கவனித்து, இரு சட்டகங்களிலும் உள்ள முரண்பாட்டை அறியாதவரைக்கும், நம் செயல்களையும், பிறர் செயல்களையும் ஒரே சட்டகத்தின் வழியாக நோக்குவது முடியததாகும். இது சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்ல, சிந்தனைவாதிகள் என கூறிக்கொள்பவர்களுக்கும் எளிதானதல்ல.

ஓருவேளை, ஒரு சமூகமாக, நமக்கு இன்னொரு மனசட்டகம் தேவைப்படலாம் - நம் தற்போதைய புழங்கு தளத்தில் குடிமைப்பண்புகளுக்கான மனச்சட்டகம். நம் சமூகத்தில் குடிமைப்பண்பு இல்லை என கூறபவர்கள் எவருமே கூட, உண்மையில் இன்னும் தேவையான அளவுக்கு குடிமைப்பண்புகளுடன் இல்லை என்பதே நிதர்சனம். அதாவது ஒவ்வொருவரும், மற்றவர்கள் பார்வையில், சில பல குடிமைப்பண்புகளை வெளிப்படுத்துவதில்லை. காரணம், அவர்கள் பார்வையின் வெவ்வேறு மனசட்டகங்களாக இருக்கக்கூடும்.

ஒரு சமூகமாக, குடிமை உணர்வு கொண்டவர்களாக வேண்டிய காலம் வந்து விட்டது. நாம் மாறியாக வேண்டும். இல்லையெனில், நம்மிடம் வந்து சேர்ந்த நாகரீகம், நம்மை உணவாக உண்டு, நம் சமூகத்தை கடந்து செல்ல நேரிடலாம். சட்டங்களும் கட்டுப்பாடுகளும், குடிமைப்பண்புகளுக்கான வழிகாட்டியாக இருக்கலாம். ஆனால் அவற்றால், நம் மனச்சட்டங்களை முழுவதும் மாற்றியமைக்க முடியாது. ஆக நமக்கு தற்போதைய அவசர தேவை, குடிமைப்பண்புகளுக்கான மனச்சட்டகங்களை நமக்குள் அமைத்துக்கொள்ள உதவும் விழிப்புணர்வு இயங்கங்களே.

யார் அந்த விழிப்புணர்வை சமூகத்தினுள் உருவாக்குவது? கல்வி அமைப்புகள் அவற்றை கொண்டு வர வேண்டும். ஆனால் நம் கல்வி அமைப்பின் லட்சியம் குமஸ்தாக்களை உருவாக்குவது மட்டுமே. வெளி நாகரீகத்தை வரவேற்று நமக்களிக்கும் அரசாங்கம் எப்போதோ இதற்கான பணிகளை தொடங்கி, முழுமையை அடைந்திருக்க வேண்டும். இப்போதுதான் 'தூய்மை இந்தியா' இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.


எஞ்சியிருப்பது நீங்களும் நானும்தான். ஆம், நாம் தான் அந்த விழிப்புணர்வை சமூகத்தினுள் பரப்ப வேண்டும். நாமே பரப்பும்போது, நமது மனச்சட்டகமும், குடிமைப்பண்புகளை நோக்கி சற்றே மாற்றமுறலாம். நம் பணி, நம்மால் முடிந்த தளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது. நம் இயல்பு அதற்கு தேவையான தீவிரமான களப்பணிக்கு அனுமதியளிக்காவிடில், நாம் அறிந்த தளங்களில், குடிமைப்பண்புகளை வெளிப்படுத்துவது - அங்கு புழங்கும் மற்றவர்களிடம் அப்பண்புகள் இல்லாவிடிலும். எல்லா சமூக மாற்றங்களும், வெகு சிலராலேயே முன்னெடுக்கப்பட்டு, சமூகத்தினுள் அந்த மாற்றங்கள் நிலைநிறுத்தப்படும். குடிமைப்பண்புகளும் அவ்வாறே நிகழலாம். மாற்றத்தை உருவாக்கும் அந்த வெகு சிலராக, நாம் ஏன் நம்மை முன்னிறுத்தக் கூடாது? அதற்கு தேவையான குறைந்த பட்ச களப்பணியுடன் - பொது வெளியில் நம் குடிமைப்பண்புகளை வெளிப்படுத்துவதன் மூலம்! பிறர் வெளிப்படுத்தும் குடிமைப்பண்புகளை, நம் இயல்பில் ஏற்றுக்கொள்வதன் மூலம்!

blog.change@gmail.com