Saturday, June 22, 2013

சமூக இயக்கங்கள்.

சமூகம் என்பது உறவுகளின் வலைப்பின்னல். அது ஒரு நிலையான வலைப்பின்னல் அல்ல, கணம் தோறும் மாறிக்கொண்டிருக்கம் வலைப்பின்னல். சமூக இயக்கம் என்பது வலைப்பின்னலின் ஒவ்வொரு சந்திப்பு புள்ளிகளின் இயக்கங்களின் தொகுப்பு. நாம் ஒவ்வொருவரும் சமூக வலைப்பின்னலின் ஒரு சந்திப்பு புள்ளி. நாம் நிலையில்லாத தொடர் இயக்கத்தை உடையவர்கள் - அந்த இயக்கத்தை குறித்த விழிப்புணர்வுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும்! நம் ஒவ்வொருவரின் இயக்கங்களின் தொகுப்பே நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் இயக்கம்.

நம் ஒவ்வொருவரின் வெளிப்படையான இயக்கங்களின் தொகுப்பு சமூகத்தின் வெளிப்படையான இயக்கமாகவும், நம் உளவியல் இயக்கங்களின் தொகுப்பு சமூக மனமாகவும் வெளிப்படுகிறது. நாம் வெளிப்படையாக எத்தகைய பகட்டுடன் அல்லது எளிமையுடன் இருந்தாலும் நம் உளவியல் இயக்கங்களே .உண்மையான நம் தரத்தை சுட்டுவது போல, ஒரு சமூகம் வெளிப்படையாக எத்தகைய முன்னேற்றத்துடன் அல்லது பழந்தன்மையுடன் இருந்தாலும், அந்த சமூக மனதின் இயல்பே அந்த சமூகத்தின் உண்மையான இயல்பை குறிக்கிறது. ஒரு சமூகத்தின் ஒவ்வொரு வெளிப்படையான இயக்கங்களுக்கும் காரணியான ஆழமான உளவியல் இயக்கம் ஒன்று நிச்சயமாக எப்போதும் இருக்கும். அந்த உளவியல் இயக்கத்தின் தன்மையே அந்த சமூகத்தின் உண்மையான தன்மையாகும். ஒரு உளவியல் இயக்கம் வெளிப்படையாக நல்லவிதமாக தோன்றும் இயக்கங்களை தோற்றுவித்தாலும், பல வெளிப்படையாக தெரியாத எதிர்மறை இயக்கங்களையும் தோற்றுவிக்க கூடும். வெளிப்படையாக தெரியும் நோய்க்கு அளிக்கபடும் மருந்து அந்த நோயை குணப்படுத்தினாலும் பக்க விளைவுகள் மூலம் வேறு பல நோய்களுக்கும் காரணமாக இருப்பது போல.

ஒரு தனிப்பட்ட மனிதரின் உளவியல் இயக்கங்கள் சமூகத்தில் வெளிப்படையான இயக்கங்களை உருவாக்க வேண்டுமென்றால், அந்த மனிதரின் சமூக உறவுகள் மிகவும் வலிமையாகவும் தீவிரமாகவும் இருந்தாக வேண்டும். அல்லது அந்த தனிப்பட்ட மனிதரின் உளவியல் இயக்கங்களை உள்வாங்கிக்கொண்ட மற்றொருவர் அத்தகைய வலிமையான மற்றும் தீவிரமான சமூக உறவுகளுடன் இருப்பதன் மூலம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். பெரும்பாலும் எதிர்மறையான இயக்கங்கள் எளிதில் சமூகத்தில் தாக்கத்தை ஏறுபடுத்தும். ஏனெனில் எதிர்மறையான இயக்கங்கள் பெரும்பாலும் லொகீக தேவைகள் சார்ந்தே இருப்பதால் சமூகத்தின் பெரும்பான்மையினரான லொகீக மனிதர்கள் மூலம் எளிதில் சமூக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு சமூகத்தின் உறுப்பினர்களான ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமான உளவியல் இயல்புகளை உடையவர்கள். ஆனாலும் தங்கள் வெளிப்படையான இயக்கங்களை தங்கள் சமூக உறவுகளின் இயல்புகளின் படி ஒரு சமரச புள்ளியை நோக்கி அமைத்திருப்பார்கள். அந்த சமரச புள்ளியை நோக்கிய இயக்கமே சமூக இயக்கமாக தோற்றமளிக்கிறது. தனிப்பட்ட மனிதர்களின் உளவியல் இயக்கங்கள் சமரச புள்ளியை தொடர்ந்து மாற்ற முயற்சி செய்து கொண்டே இருக்கும். வலிமையான, தீவிரமான உறவுகளை உடைய ஒருவர் அத்தகைய முயற்சியை வெளிப்படுத்தும்போது சமரச புள்ளி இயல்பாகவே ஒரு புதிய இடத்தை நோக்கி நகர தொடங்கும். அதுவே சமூகத்தின் வெளிப்படையான மாறுதல். சாதாரண மனிதர்கள் போதுமான அளவு தீவிரம் இல்லாமல் சமரச புள்ளியை மாற்ற முயலும்போது பெரும்பாலும் ஏமாற்றத்தையே அடைவார்கள். இதுவே நம்மில் பெரும்பாலானவர்கள் நாம் வாழும் சமூகத்தின் மீது ஒருவகையான கசப்புணர்வை அடைந்திருப்பதன் காரணம்.

நாம் சமூக பிரக்ஞ்சை உடையவர்களாக இருந்தால், நேர்மறையன மாறுதல்களுக்காக, தேவைப்படும் இடங்களில், சமூகத்தின் வெளிப்படையான இயக்கங்களின் சமரச புள்ளியிலிருந்து விலக முயற்சிப்போம். அத்தகைய முயற்சி பெரும்பாலும் லொகீகம் சார்ந்த சமூகத்திலிருந்து நிராகரிப்பையே பெற்று தரும். இருந்தாலும், நம் செயல்பாடுகளில் தீவிரம் உடையவர்களாக நாம் இருந்தால், சமரசபுள்ளியிலிருந்தான நமது விலகல், அந்த சமரச புள்ளியையே நம் இயக்கத்தை நோக்கி வரச்செய்யும். அதுவே சமூகத்திற்கு நம்மால் செய்ய முடிந்த பெரும் பங்களிப்பு. ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் இயற்கையிலேயே அத்தனை தீவிரமானவர்கள் அல்ல. ஆனாலும் நமது குறைந்தபட்ச தீவிரம் தற்போதைய சமரசப்புள்ளியை நேர்மறையான இயக்கங்களுக்காக, அந்த சமரசபுள்ளியை அசைக்க முடியாவிட்டாலும், நிராகரிக்கும் அளவுக்காவது இருந்தால், அதுவே சாமானியமான மனிதர்களாக சமூகத்திற்கான நமது பங்களிப்பாக இருக்கும்.


செயலில் தீவிரம் உடைய, சமூகத்தை மாற்ற துடிக்கும் செயல்பாட்டாளர்களை பெரும்பாலும் நாம் எல்லா சமூகங்களிலும் காணலாம். துரதிர்ஷ்டவசமாக அந்த செயல்பாட்டாளர்கள் அவர்களையும் அவர்கள் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்பவர்களை மட்டுமே அவர்களின் சமூகம் என்று வரையறுப்பதன் மூலம் முழுமையான சமூக பிரக்ஞ்சையை இழக்கிறார்கள். இதன் மூலம் பெரும்பாலும் அவர்களின் தீவிரமான செயல்பாடுகள் சமூகத்தில் எதிர்மறையாக வெளிப்பட்டு அவர்கள் தீவிரவாதிகள் என்னும் குறுகிய, எதிர்மறையான வட்டத்திற்குள் அகப்பட்டு கொள்கிறார்கள். ஏனெனில் சமூகம் என்பது அவர்களையும் அவர்கள் கொள்கைகளையும் மட்டும் ஏற்றுக்கொண்ட ஒன்று அல்ல. சமூகத்தில் எண்ணற்ற உறுப்பினர்களும் எண்ணற்ற கொள்கைகளும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆம் தீவிர இயக்கங்களை உடைய போராளிகள் மாற்ற வேண்டியது சமூகத்தின் வெளிப்படையான இயக்கத்தை அல்ல. அந்த வெளிப்படையான இயக்கத்திற்கு காரணமான உளவியல் இயக்கத்தையும் கருத்தியல் இயக்கத்தையுமே. தீவிரமான கருத்தியல் இயக்கத்தின் மூலம் உளவியல் இயக்கத்தையே மாற்றியமைக்க முடியலாம் - அதன் மூலம் வெளிப்படையான சமூக இயக்கத்தையும்!

blog.change@gmail.com

No comments: