Saturday, December 29, 2012

முழுமை


ஒவ்வொரு உயிரினமும், அவற்றின் ஒவ்வொரு துடிப்பின் மூலமும் முழுமையை நோக்கிய பயணத்தையே நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. அவற்றின் ஒவ்வொரு போராட்டமும் முழுமைக்காகவே நிகழ்கின்றன. ஆம் மனித இனத்தை தவிர வேறு எந்த உயிரினங்களுக்கும் பல பரிமாணங்களை உடைய மனம் இல்லை. ஆகவே அவற்றால் முழுமையான வாழ்க்கையை தவிர வேறு எந்த வாழ்க்கையையும் வாழ முடியாது. ஏனெனில், அவற்றின் விருப்பு எதுவோ அதை நிறைவேற்றுகின்றன அல்லது விருப்பை நிறைவேற்றுவதற்கான செயல்களில் மட்டுமே ஈடுபடுகின்றன. மனித இனத்தை தவிர பிற உயிரினங்களுக்கு மனம் என ஒன்று இருந்தாலும், தன்னிச்சையான மன இயக்கங்களுடன் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. அவற்றின் கடந்தகால அனுபவங்கள் நுண்ணறிவு சார்ந்தவையாக மட்டுமே இருக்க முடியும். கடந்த காலத்தை எதிர்காலமாக கற்பனை செய்யும் எந்த இயக்கங்களும் அவற்றில் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. எனவே அகம் சார்ந்த வாழ்க்கை என்றும் புறம் சார்ந்த வாழ்க்கை என்றும் இரட்டை வாழ்க்கை அவற்றிற்கு இல்லை. அவற்றின் அகம் எதுவோ அதுவே புறவாழ்க்கையாகவும் வெளிப்படுகிறது. அத்தகைய வாழ்க்கையே முழுமையான வாழ்க்கையாக இருக்கலாம். ஆனால் முழுமையான வாழ்க்கை வாழ்கிறோம் என்னும் அறிதல் இல்லாமல், அத்தகைய அறிதலின் ஆனந்தம் இல்லாமல்!

மனித மனம், அதன் முழு பரிணாம வளர்ச்சியின் மூலம் நாம் வாழும் வாழ்க்கையை அறிவதற்கான, அறிவதன் மூலம் அடையும் ஆனந்தத்தை அனுபவிப்பதற்கான சாத்தியத்தை பெற்றுள்ளது. ஆனால், அந்த அனுபவத்தை அடைவதற்கு இரட்டை வாழ்க்கை என்னும் கீழ்மையை தாண்ட வேண்டிய போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. எதுவும் நமக்கு மட்டும் அல்ல, எந்த உயிரினத்துக்கும் இலவசமாக கிடைப்பதில்லை. உலகின் மகா இயக்கத்தில் ஒவ்வொரு உயிரினமும் அவை வாழ்வதற்கான விலையை எந்த வகையிலாவது கொடுத்தாக வேண்டும். நாமும் இந்த விதிக்கு விலக்கு உடையவர்கள் அல்ல!

நாம் முழுமையை அடைய விரும்பினால், முழுமையான வாழ்க்கையை வாழ விரும்பினால், நாம் செய்ய வேண்டியதெல்லாம் மனம் எவ்வாறு வாழ விரும்புகிறதோ அவ்வாறே வாழ வேண்டும். அத்தகைய வாழ்க்கை முறையால், மனம் விரும்புவதன் மூலம் மனதினுள் மட்டும் வாழும் அகவாழ்க்கை ஒன்றும், புறவய இயலாமைகளால் கட்டுப்படுத்தப்பட்ட புறவயமான வாழ்க்கை ஒன்றும் என இரட்டை வாழ்க்கை இல்லாமல், அகமும் புறமும் ஒருமித்து வாழும் ஒரே வாழ்க்கையை நம்மால் வாழ முடியலாம். இந்த கருத்து, முழுமையான வாழ்வை அடைவது அத்தனை எளிதான காரியம் என்றோ அல்லது மனம் போல் நடந்து சமூக ஒழுக்கங்களை கைவிட்டு முழுமையை அடையவேண்டும் என்று வலியுறுத்தவோ நிச்சயமாக கூறப்படவில்லை. நம் மனம் விரும்பும் வாழ்க்கையையும் நாம் வாழும் வாழ்க்கையையும் நாம் பிரக்ஞ்சையுடன் எப்போதாவது பார்த்திருந்தால் அகமும் புறமும் ஒன்றாகும் அத்தகைய வாழ்வின் இயலாமையை நாம் அறிந்திருக்கலாம். அல்லது எப்போதாவது ஒழுக்கத்தை கைவிட்டு மனம் போன போக்கில் நடந்திருந்தால், அதன் விளைவுகளின் காரணத்தை ஆராய்ந்திருந்தால், அது எவ்வாறு நம் வாழ்க்கையை அழிக்கும் என்பதையும் அறிந்திருக்கலாம். ஆக, மனம் விரும்பும் வாழ்க்கையை வாழ, நம் மனம் ஒரு தகுதியை அடைந்திருக்க வேண்டும். அந்த தகுதியை அடைந்த மனதால் மட்டுமே முழுமையான வாழ்க்கையை வாழ முயல முடியும் –அகமும் புறமும் ஒன்றான வாழ்க்கையை!

முன்பு கூறிய படி எல்லா உயிரினங்களும் அவற்றின் முழுமையை நோக்கியே வாழ்கின்றன. அவற்றிற்கு மனம் இல்லாததால் அல்லது மனதின் மிகக்குறுகிய எல்லையினால், அவற்றின் முழுமை என்பது, வாழ்க்கையை முழுவீச்சில் வாழ்வது மட்டுமே. நமக்கும் அதுவே! ஆனால், நம் மனதின் தனித்தன்மையால், மனம் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என காலத்தை பிரிப்பதால், நாம் ஒவ்வொருவரும் நம் மனதின் தன்மைக்கேற்ப, ஒவ்வொரு முழுமையை கற்பனை செய்கிறோம். அந்த முழுமையை அடைவதற்காக வாழ்க்கை போராட்டத்தை முழுவீச்சுடன் முன்னெடுத்து செல்கிறோம். இங்கு நாம் முழுமை என கருதுவது, தனிப்பட்ட மனித மனதால், அந்த மனதின் பல பரிமாணங்களில் இயங்கும் சக்தியால் உருவாக்கப்பட்ட ஒரு கருத்து மட்டுமே. நாம் கற்பனை செய்யும் முழுமை என்னும் கருத்து உண்மையிலிருந்து விலகியிருக்கும் தொலைவிற்கேற்ப, அந்த முழுமையை அடைய, நம் மனதிற்கு ஒவ்வாத அல்லது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டியிருக்கும். இதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை எதிர்கொள்ள, நாம் தொடர்ந்து மனதிற்கு ஒவ்வாத அல்லது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களை தொடரும் கட்டாயத்திற்குள்ளாகி விடுகிறோம். மொத்தத்தில் இரட்டை வாழ்வு என்னும் பொறிக்குள் அடைபட்டு விடுகிறோம். அத்தகைய செயல்ககளின் மூலம் வாழ்க்கையை வாழ்வதே இயல்பான வாழும் முறை என்னும் நம்பிக்கையையும் அடைந்து விடுகிறோம். அதன் பின் நாம் வாழ்வு, போராட்டத்தை தவிர வேறு எதுவாகவும் இருக்க சாத்தியமில்லை. ஆக, நம் வாழ்க்கையை ஒரு போராட்டமாக மாற்றி, போராட்டத்தையே நம் இயல்பாக கற்பனை செய்து விடுகிறோம். நம் சந்ததியினருக்கும் போராட்டத்திற்கான கல்வியையே அளிக்கிறோம்.

எனில் அகமும் புறமும் ஒன்றான ஆனமீக வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது அல்லது அடைவது? அதற்கு, அத்தகைய வாழ்வை வாழ்வதற்கான பெரு விருப்பு நமக்குள் நிகழ வேண்டும். அகமும் புறமும் ஒன்றான வாழ்க்கை முறை ஒன்று உள்ளது என்பதையும், அந்த வாழ்க்கையை நாமும் வாழ சாத்தியங்கள் உள்ளது என்பதையும், அவ்வாறு வாழும் வாழ்வே ஆன்மீக வாழ்வு என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். அந்த அறிதல் நிகழ்ந்தால், நம் மனம் அத்தகைய வாழ்க்கையை வாழ்வதற்கான சாத்தியங்களை நம்முன் தருவிக்கும். நாம் நுண்ணறிவுடன் இருந்தால் அந்த வாய்ப்புகளை பயன்படுத்துவோம், இல்லையேல் இழந்து விடுவோம். அந்த சாத்தியங்கள் நம் தனிப்பட்ட மனதின் இயல்பிற்கேற்ப எந்த வழியிலும் இருக்கலாம் – நம்மால் கற்பனை செய்ய இயலாத வழிகளில் கூட!

அந்த வழிகள் எவ்வாறாயினும், அதன் அடிப்படை, நம் வாழ்க்கையிலிருந்து வாழ்க்கை இயக்கங்களிலிருந்து தப்பிச்செல்லும் முயற்சியில் ஈடுபடாமல், வாழ்க்கையை முழுமையாக, அதன் ஏற்ற இறக்கங்களோடு எதிர்கொண்டாக வேண்டும் என்பதாகவே இருக்க கூடும். நுண்ணறிவுடன் வாழ்வதன் மூலம் வாழ்க்கை இயக்கங்களின் தன்மையை, முடிவின்மையை, பிரம்மாண்டத்தை அறிவதன் மூலம், அந்த பிரம்மாண்டத்தின் முன் நம் எளிமையை உணர்வதன் மூலம் அத்தகைய வாழ்க்கையை எதிர்கொள்ளல் சாத்தியமாகலாம். அல்லது, உலகின் இயக்கத்தின் பிரம்மாண்டத்தின் முன், அந்த பிரம்மாண்டத்தை கடவுள் என அழைத்தாலும் இல்லாவிட்டாலும், முழுமையாக சரணடைவதன் மூலம் சாத்தியமாகலாம். அல்லது நம் மனம் நம்மை ஈடுபடுத்தும் செயல்களை முழுமையான ஈடுபாட்டுடன் செய்து, அந்த செயல்களின் விளைவுகளை விருப்பு வெறுப்பு இன்றி ஏற்றுக்கொள்வதன் மூலம் சாத்தியமாகலாம், அல்லது இன்னும் பல வழிகள் கூட நம் முன் விரிந்து இருக்கலாம்.

முழுமையான வாழ்வு என ஒன்று உள்ளது என்பதை நாம் அறிய நேர்ந்தால், அகமும் புறமும் ஒன்றாகும் ஆன்மீக வாழ்வே அத்தகைய முழுமையான வாழ்வு என்பதை நாம் உணர்ந்தால், அத்தகைய வாழ்க்கைக்கான பெருவிருப்பு நம்மில் நிகழ்ந்தால், முழுமையான வாழ்விற்கான சாத்தியங்கள் நம் முன் விரிந்து கிடப்பதை கண்டடைவோம். அந்த சாத்தியங்களை அடைவதற்கான வழிமுறைகளையும் கண்டடைவோம். அதன் பின், நம் வாழ்வின் ஒவ்வொரு இயக்கமும் முழுமையை நோக்கியே இருக்க கூடும்.

blog.change@gmail.com

No comments: