Sunday, February 19, 2012

அறிதலில் மனமயக்கங்கள்

அறிதலின் சாத்தியங்கள் எண்ணற்றவை. ஆனால் அறியப்படுவது ஒன்று மட்டுமே. அதுவே உண்மை. நேரடியாக அறியும்போது மட்டுமே நாம் அறிவது உண்மை. மற்ற எல்லா அறிவுகளும் மாயையே. நேரடியாக அறியாதபோது, நாம் அறிவது வெறும் எண்ணங்களை மட்டுமே. எண்ணங்கள் மூலம் பிம்பங்களை மட்டுமே அறிய முடியும். உணர்வு ஒன்றுதான் உண்மையை அடைவதற்கான வாகனம். உணர்வு மட்டும்தான் உண்மையான அநுபவம். உண்மையை உணர அல்லது அநுபவிக்க மட்டுமே முடியும். உண்மையை விளக்க முடியாது, எனவே விளங்கிக்கொள்ளவும் முடியாது – உணர மட்டுமே முடியும், உண்மையை உணர்வதே உண்மையை அறிவது.

எதற்காக உண்மையை அறிய வேண்டும்? நம் வாழ்க்கையின் எந்த கட்டத்தை எடுத்துக்கொண்டாலும் தேடுதல் மட்டுமே வாழ்க்கையை இயக்கிக்கொண்டிருக்கும். அறிவுக்கான தேடுதல், அநுபவத்திற்கான தேடுதல், பொருளுக்கான தேடுதல், புகழுக்கான தேடுதல், எதிர்காலத்திற்கான தேடுதல், இன்னும் பல. ஆனால் எப்போதுமே நம் தேடுதல் முழுமை அடைந்ததாக நாம் உணர்ந்திருக்க சாத்தியமில்லை. நாம் எப்போதாவது, முழுமை அடைய முடியாத தேடுதலின் முடிவின்மையையும், முடிவற்ற தேடுதலின் மூலம் நம் வாழ்க்கையை இழப்பதையும் அறிய நேர்ந்தால், அந்த அறிதலே உண்மையை அறிவதற்கான தூண்டுதலாக இருக்க கூடும். உண்மையை அறிவதன் மூலம் தேடுதல் என்னும் முடிவற்ற இயக்கத்தை தாண்டிச் சென்று நம் வாழ்க்கையை ஒருவேளை நம்மால் வாழ இயலலாம். ஆனால் தேடுதலின் முடிவின்மையை உணராதவரைக்கும், உண்மையை அறிய வேண்டும் என்னும் ஆர்வம் நமக்கு வராமல் போகலாம். அல்லது, அதுவரை உண்மையை அறிவதற்கான தேவை நமக்கு இல்லாமல் இருக்கலாம். ஆக, நம் அன்றாட தேடுதல்கள் மூலம் நாம் அடையும் அறிவான தேடுதலின் முடிவின்மை என்னும் அறிவே – அத்தகைய அறிவை அடைய நேர்ந்தால், உண்மையை நோக்கி நம் தேடுதலை திசைப்படுத்தலாம்.

ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள், அநுபவப்பூர்வமாக அடைந்த, அன்றாட தேடுதலின் முடிவின்மை குறித்த அறிவின் திசை காட்டுதல் மூலம் உண்மையைத் தேட தொடங்குவதில்லை. உண்மையை அறிய விரும்பும் நம்மில் பெரும்பாலானலவர்கள், உண்மையை அறிந்தவர்கள் உண்மையைக் குறித்து அளிக்கும் விளக்கங்களால் தூண்டப்பட்டு மட்டுமே, அவர்கள் வார்த்தையின் மேல் நாம் அடையும் நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டு மட்டுமே நம் தேடுதலைத் தொடங்குகிறோம். எனவே நாம் எதைத் தேடுகிறோம் என்பதைக்கூட நாம் அறியாமலே நம் தேடுதலில் முழ்கி இருக்கலாம்.

மேலே கூறப்பட்டவைகள், ஒருவேளை நாம் ஆன்மீகத் தேடல்களில் ஈடுபட்டிருந்தால், அந்த தேடுதல்களின் வழியில் நாம் சந்திக்க நேரும் மன மயக்கங்களை குறித்த ஒரு எச்சரிக்கை மட்டுமே. ஆன்மீகத் தேடலின் வழியில் நாம் எதிர்கொள்ள நேரிடும் மன மயக்கங்களை நம்மால் அறிய முடியாவிட்டால், நம் ஆன்மீகத்தேடல் கூட நம்மை மாயையிலிருந்து மீட்க முடியாது. இதுவே, எந்த ஆன்மீகப் பயிற்சியையும் உண்மையை உணர்ந்தவர்களின் நேரடி கண்காணிப்பில் செய்ய வேண்டும் என கூறப்படுவதன் காரணம். நம்மில் பெரும்பான்மையினருக்கு அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஆனால், நம் விழிப்புணர்வையே ஆன்மீக குருவாக கொண்டு நம் ஆன்மீக பயணத்தை தொடர முடியும். அவ்வாறெனில், நம் ஆன்மீகத்தேடலை மாயையினுள் தள்ளும் மனமயக்கங்களை குறித்த குறைந்தபட்ச அறிவேனும் நிச்சயமாக நமக்கு தேவைப்படும்.

ஆன்மீகம் குறித்து பெரும்பாலும் நாம் எதுவும் உணர்ந்திருப்பது இல்லை. அதாவது ஆன்மீகம் குறித்த நம் அறிவு முழுவதும் பிறரிடமிருந்து நாம் அறிந்தவையே. பிறர் என்பது, உண்மையை உணர்ந்த ஞானிகளாகவும் இருக்கலாம், உண்மையை தேடுபவர்களாகவும் இருக்கலாம், தேடலின் மூலம் மனமயக்கங்களை அடைந்தவர்களாகவும் இருக்கலாம். நாம் அறிந்தவை, உண்மையை உணர்ந்த ஞானிகளிடமிருந்து இருந்து வந்திருந்தாலும், உண்மையை நோக்கிய தேடலில் இருப்பவர்களிடமிருந்து வந்திருந்தாலும், அந்த அறிவு நம்மை பொறுத்தவரைக்கும் வெறும் அனுமானம் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். அதாவது, அத்தகைய அறிவை நாம் உணரும்வரை, பிறர் வார்த்தைகளிலிருந்து நம்மால் அனுமானிக்க மட்டுமே முடியும். ஆக, நம்மில் பெரும்பாலானவர்கள், எப்போதாவது ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டிருந்தால், அது பெரும்பாலும் பிறர்வார்த்தைகள் அல்லது விளக்கங்களிலிருந்து நாம் அடைந்த அனுமானத்தின் அடிப்படையிலேயே இருக்கும்.

நம் மனம் அதீத சக்தியை உடையது. நாம் அறிந்திருக்கும் உலகம் முழுவதும் நம் மனதால், நம் விருப்பத்திற்கேற்ப, நமக்குள் உருவாக்கப்பட்டதே ஆகும். ஒரு அனுமானத்தை உண்மையாக கொண்டு நம் தேடுதல் பாதையை அமைத்தால், நம் மனம் அந்த அனுமானத்தையே உண்மைத் தோற்றத்துடன் நமக்கு அளிக்கும் வல்லமை உடையது – மன மயக்கத்தின் மூலம். மிகக்கூர்மையான நுண்ணறிவின் மூலம் மட்டுமே உண்மைக்கும் மனமயக்கத்திற்குமான இடைவெளியை அறிய முடியும். ஆக நம்முன் உள்ள எண்ணற்ற சான்றோர்களின் விளக்கங்களும், ஞான நூல்களும் ஆன்மீகப் பாதையில் நம்மை வழிநடத்த வேண்டுமானால், அந்த விளக்கங்களையும், நூல்களையும் அனுமானிப்பதற்கான நுண்ணறிவு நமக்குத் தேவை. அத்தகைய நுண்ணறிவு இல்லாத பட்சத்தில் ஆனமீக விளக்கங்களும், ஞான நூல்களும் நம்மை மன மயக்க நிலைக்கே எடுத்துச் செல்லும்.

எனில் நம் நுண்ணறிவை எவ்வாறு பெறுவது? அது நம் தனிப்பட்ட இயல்பைப் பொறுத்தது. நம் இயல்பு எவ்வாறாயினும், நம் தற்போதைய அறிதல் முறையில், நுண்ணறிவை அடைவதற்கு தர்க்க புத்தியின் தேவை இன்றியமையாததாக இருக்க கூடும். தர்க்க புத்தியின் மூலம் நாம் அறிந்தவற்றை ஆராய்ந்து, உண்மை, உண்மை அல்லாதது என அறிந்து, உண்மையற்றதை விலக்குவதன் மூலம் நம்மால் நுண்ணறிவின் இயக்கத்தை தொட முடியலாம் – வேறு வழிகள் கூட இருக்கலாம். உண்மை, உண்மை அல்லாதது என அறிய உண்மையை உணர்ந்தவர்கள், நமக்கு உதவலாம். எவ்வாறாயினும், ஆரம்ப நிலையில் உண்மையை நோக்கிய தேடுதல் எளிதானதாக இருக்க சாத்தியம் இல்லாமல் இருக்கலாம். எனில், மனித மனதால் அடைய இயலாதவை என ஒன்றும் இருக்கவும் சாத்தியமில்லை. மனித பிறவியின் சாத்தியத்தின் உச்சகட்ட ஆனந்தத்தை அடைய, அது எளிதானதாக இல்லா விட்டால் கூட, அதற்காக முயற்சிக்காமல் விடுவது, உலகம் நமக்களித்த மனிதப் பிறவி என்னும் பெரும் கொடையை வீணாக்குவதாகும். அவ்வாறு வீணாக்குவது, நாம் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருந்தால், அந்த கடவுளையே அவமதிப்பதாகும் – கடவுள் கொடுத்த கொடையை வீணாக்குவதன் மூலம்!

No comments: