Tuesday, August 23, 2011

போராட்டம், ஆன்மீகம்

போராட்டம் – இந்த வார்த்தை கடந்த சில நாட்களில் நம் கவனத்தை ஈர்க்கவில்லை என்றால், நாம் லொகீக வாழ்க்கை தளத்தில் இருப்பவர்களானால், நாம் சமூக அமைப்பினுள் வாழவே தகுதியற்றவர்கள் என்றே கருதுகிறேன். இது என் தனிப்பட்ட கருத்து – என் சிந்தனையின், உணர்வுகளின் அடிப்படையில்.

ஊழலுக்கு எதிரான போராட்டம், எந்த ஒரு இரண்டாவது மனிதனுக்கும் எதிரான போராட்டமாக இருக்க முடியாது. அது நமக்குள் இருக்கும் ஊழல்வாதிக்கு எதிரான போராட்டமே. ஆம், நம் ஒவ்வொருவருக்குள்ளும், ஊழலுக்கு அடிப்படை காரணிகளான, பேராசை மற்றும் வன்முறை நிறைந்துள்ளது. நமது சுயமைய பார்வையே நமக்குள் நீக்கமற நிறைந்திருக்கும் பேராசையையும் வன்முறையையும் நம்மால் உணரமுடியாதபடிச் செய்கிறது. நம் மனதினுள் உள்ள பேராசையும், வன்முறையும் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் அமையுமானால், நாம் கூட, பெரும் ஊழல்வாதிகள் என நம்மால் அடையாளம் காணப்பட்டவர்களை விடவும், ஊழலில் எந்த விதத்திலும் சளைத்தவர்களாக இருக்க மாட்டோம் என்பதே நிதர்சனம்.

ஆக, இந்தப் போராட்டம் நமக்குள் இருக்கும், சமூக வாழ்க்கையை சுமூகமாக எடுத்துச் செல்ல தடைகளாக இருக்கும் நம் சொந்த மன இயக்கங்களுக்கு எதிரான போராட்டம். ஆம், இது அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் நமக்குள் அந்தரங்கமாக நடத்த வேண்டிய போராட்டம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அத்தகைய உள்மனப் போராட்டத்தை, உள்மனப் புரட்சியை உருவாக்க இயலாதவர்களாக நாம் இருக்கிறோம். ஆகவே சமூக வாழ்க்கையில் நம் மனதைக் கட்டுப்படுத்த, சமூகத் தளத்தில் செயல்படும் ஒரு சட்ட திட்டம் தேவையாக இருக்கிறது. இப்போதைய சமூகப்புரட்சி, தம் மனதை தாமே கட்டுப்படுத்த இயலாதவர்கள், சமூகத் தளத்தில் இயங்கும்போது, அவர்கள் மனதிலிருந்து பேராசை மற்றும் வன்முறைகள் வெளிப்பட்டு, நம் சமூகத்தின் சமன்நிலையைப் பாதிக்காதவாறு இருப்பதற்கு தேவையான சட்டதிட்டங்களை உருவாக்கும் கோரிக்கையையே முன் வைத்துள்ளது. ஆக, சமூகத்தினுள் புழங்கும் ஒவ்வொருவருக்கும், அவர்கள் மனதின் விரும்பத்தகாத இயக்கங்களை வெளிப்படையாக கட்டுப்படுத்தும் நோக்கமுள்ள இந்தப்புரட்சியை முன்நகர்த்தி செல்லவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் – நாம் சமன்நிலை குலையாத சமூக வாழ்க்கையை விரும்பினால்.

ஆன்மீகம் என்பது உணர்வின் உச்ச நிலையை நோக்கிச் செல்வது. எந்த ஒரு மனப் போராட்டமும், மனக் கட்டுப்பாடும் நம் உணர்திறனை அழிக்கும் இயல்புடையவை. ஆக போராட்டங்களும், கட்டுப்பாடுகளும் நம் ஆன்மீகத்தன்மையை அழிக்கும் மிக இயல்பான காரணங்கள். இங்கு போராட்டம் அல்லது கட்டுப்பாடு என்பது நம் மனப்போராட்டங்களையும் மனக்கட்டுப்பாடுகளையுமே குறிக்கிறது. ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள பலர் லொகீக வாழ்க்கையை துறப்பதற்கான காரணம் இதுவாகவே இருக்கக்
கூடும் – கட்டுப்பாடுகளற்ற, போராட்டங்களற்ற வாழ்க்கையை வாழ்வதற்காக.

லொகீக வாழ்க்கையில் இருந்து கொண்டே நம்மால் கட்டுப்பாடுகளற்ற, போராட்டங்களற்ற வாழ்க்கையை வாழ முடியுமா? முடியும் என்பதே பொருத்தமான பதிலாக இருக்க முடியும். ஆனால் அதற்கான முயற்சி நம்மிடம் இருக்க வேண்டும். நம் மனம், பலவிதமான இயக்கங்களால் ஆனது. இந்த மன இயக்கங்களின் வீரியம் நம் தனிப்பட்ட இயல்பைப் பொறுத்த்து. சில மன இயக்கங்கள் மிகுந்த வீரியத்துடனும் மற்றவை சாதாரணமாகவும் இருக்கலாம். சில மன இயக்கங்கள் நம் வாழ்க்கையை சமூகத் தளத்தில் ஒத்திசைவுடன் செலுத்துவதாக இருக்கலாம், மற்றும் சில இயக்கங்கள் சமூகத் தளத்தில் முரண்பட்டு செல்பவையாக இருக்கலாம். இவ்வாறு சமூகத்தளத்தில் முரண்படும் இயக்கங்களே நம் மனப்போராட்டங்களுக்கும், சமூக இயக்கங்களிலிருந்து நாம் முரண்படுவதற்கும் அடிப்படை காரணி. நாம் சமூகத் தளத்தில் இயங்க வேண்டும் என்றால், இந்த முரண்படும் இயக்கங்களைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம். அந்த கட்டுப்பாடு தேவைப்படும் மன இயக்கங்கள், கட்டுப்படுத்தப்பட்டாக வேண்டும் – நம்மால் கட்டுப்படுத்த இயலாவிட்டால், சமூக அமைப்பு கட்டுப்படுத்தியாக வேண்டும், சமூகத்தினுள் அதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டாக வேண்டும்.

நம் மனம் நம்மால் கட்டுப்படுத்தப்பட்டாலும், சமூக அமைப்பால் கட்டுப்படுத்தப் பட்டாலும், அங்கு தனிமனித விடுதலை இழக்கப்பட்டு விடுகிறது. இது சமூக அமைப்பின் கட்டாயம். அதாவது, நம் மன இயக்கங்கள், சமூக இயக்கத்திற்கு முரண்படும்போது அந்த முரண்பாட்டை இல்லாமல் செய்வது, அந்த சமூகத்தின் இருப்புக்கு இன்றியமையாதது. ஒரு தனிமனிதனாக, அந்த முரண்பாட்டை நம்மால் உணரமுடியுமானால், அத்தகைய முரண்படும் மன இயக்கங்களின் மூலம் வீணாகும் உளவியல் சக்தியை ஆக்கப் பூர்வமான வழிகளில் திருப்ப முடியும். ஒருவேளை இத்தகைய திருப்புதல் நமக்குள் சாத்தியமானால், நம் ஆன்மீக சக்தி நமக்குள் பிரவாகமாகப் பெருக சாத்தியமுள்ளது – நம் உணர்திறன் பலமடங்குகள் அதிகரிப்பதன் மூலம்.

நம் சமூகத்துடனான ஒத்திசைவு அல்லது முரண்பாடுகள் குறித்து நாம் முழுமையாக அறிய வேண்டுமானால், அந்த சமூகத்துடனான நமது உறவு மிக ஆழமாக இருக்க வேண்டும் – அதாவது அந்த சமூகத்துடனான நமது உறவுகள் மற்றும் தொடர்புகள் குறித்த ஆழமான புரிதல் இருந்தாக வேண்டும். சமூகத்துடனான நமது உறவுகளின் புரிதல் இல்லாமல், அல்லது அந்த சமூகத்திலிருந்து நம்மை விலக்கிக் கொண்டு, அந்த சமூகத்தின் முரண்பாடுகளைப் பற்றி நிச்சயமாக நம்மால் உணரமுடியாது – அத்தகைய சமூக விலக்கத்துடன் இருப்பவர்காளால் உருவாக்கி பரப்ப படும் கருத்துக்களையும் மிக கவனத்துடன் கையாள வேண்டும். இத்தகைய கருத்துக்கள் நம் உணர்திறனை இழக்கச் செய்யலாம் – நமது சமூகத்துடனான உறவுகளை, நம் பார்வையிலிருந்து மறைப்பதன் மூலம்!

No comments: