Saturday, August 6, 2011

மனித பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம்

பல கோடி ஆண்டுகளில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியின் காரணமாக, ஒரு செல் உயிரினத்திலிருந்து, இன்றைய மனிதனாக நாம் உருவெடுத்திருக்கிறோம். பல ஆயிரம் (அல்லது சில லட்சம்) ஆண்டுகளாக உருவமும் சிந்தனையும் வளர்ச்சியடைந்து, இன்றைய மனிதனாக வளர்ச்சி அடைந்திருக்கிறோம். இந்த பரிமாண வளர்ச்சியின் வேகத்தையும் திசையையும் ஒரளவேனும் நம்மால் அனுமானிக்க முடிந்தால், ஒருவேளை பரிணாம வளர்ச்சியின் இன்னொரு முக்கியமான காலகட்டத்தில் நாம் இருந்துகொண்டிருப்பதையும் நம்மால் உணர முடியலாம். அந்த விழிப்புணர்வு நமக்கு கிட்க்கப்பெற்றால், அத்தகைய பரிணாம வளர்ச்சிக்கான கிரியா ஊக்கியாக கூட நம்மால் மாற முடியலாம்.

ஒரு காலகட்டத்தில், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மனித சிந்தனையின் ஒரு தளம் அன்றாட வாழ்வியல் என்பதிலிருந்து, வாழ்வின் தோற்றம் மற்றும் முடிவு என்பதை குறித்து திரும்பியிருக்க வேண்டும். ஆம், ஆன்மீகம் என்னும் சிந்தனைத் தளம் அப்போதுதான் தோன்றியிருக்க கூடும் – இங்கு ஆன்மீகம் என்பது, சுயம் நோக்கிய சிந்தனைத் தளத்தை மட்டும், இன்றைய லௌகீகம் சார்ந்த சடங்குகளையும் கடவுள் என்னும் கருத்தையும் புறந்தள்ளியே குறிப்பிடப் பட்டுள்ளது.

தற்போதைய இந்தியாவில், வேத காலகட்டம் சமார் ஐந்து முதல் எட்டு ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது என்று கணிக்கப் படுகிறது. கிறிஸ்தவ, முஸ்லீம் மதங்ங்களுக்கு முன்பு எகிப்து, கிரேக்க நாடுகளில், தத்துவம் சார்ந்த மதங்கள் இருந்துள்ளன. ஆக ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மனிதனின் தேடல் உள்நோக்கி திரும்பி இருக்கிறது. இந்த தேடுதலின் தொடர்ச்சியே வேதம், உபநிஷதம் மற்றும் பல தத்துவ தரிசனங்களையும் நமக்கு அளித்திருக்க வேண்டும். இந்த தேடுதலின் விளைவாக ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் அந்த தேடுதலின் முழுமையை அல்லது முழுமையின் அருகாமையை அடைந்துள்ளனர். ஆக மனித மனம் முழுமையை அடைவது என்பது ஒரு கற்பனை அல்ல – அது ஒரு உண்மை. இந்த உண்மையை, கடந்த ஐந்தாயிரம் வருட மனித வரலாற்றிலும், நிகழ்காலத்திலும் பல உதாரணங்களை நம்மால் காண முடியும். எனவே முழுமையை நோக்கி நகர்வதே மனித இன பரிமாண வளர்ச்சியின் அடுத்த கட்டமாக இருக்க முடியும்.

இங்கு கவனிக்கப்பட வேண்டியது, மனித இனத்தை முழுவதுமாக பார்க்கும்போது, நாம் தேடலை தொடங்கி ஐந்தாயிரம் வருடங்களுக்கு பின்னும், அந்த தேடலின் முழுமையை அடையாமல் இருக்கிறோம் – மிக மிக குறைந்த பட்ச மனிதர்களால் மட்டுமே முழுமையை அடைய முடிந்துள்ளது. இதற்கு காரணம், அத்தகைய பரிணாம வளர்ச்சிக்கான காரணிகள் போதுமான அளவிற்கு இல்லாமல் இருக்கலாம் அல்லது, மனித இனத்தின் அடிப்படை இருப்புக்கான (existence) போராட்டம், அந்த பரிணாம வளர்ச்சியை அடைய முடியாமல் செய்திருக்கலாம்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், பரிணாம வளர்ச்சி மரபணுக்கள் மூலம் மட்டுமே அடுத்த சந்ததிகளுக்கு எடுத்துச் செல்லப்படும். தற்போதைய காலகட்டத்தில், முழுமையை நோக்கிய தேடுதல் உள்ளவர்கள் அல்லது முழுமையை அடைந்தவர்கள் பெரும்பாலும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதில்லை. அவ்வாறு ஈடுபட்டாலும், அந்த தேடுதலின் பாதிப்பு மரபணுக்களில் ஏற்படும் முன்பே இனப்பெருக்கம் முடிந்து விடுகிறது. ஆக முழுமையை நோக்கிய மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்ல இயலாமல் தேங்கி இருக்கிறது.

பரிணாம வளர்ச்சி பெரும்பாலும், அந்த வளர்ச்சி தொடங்கும் புள்ளியிலிருந்து இரண்டு கிளைகளாக பிரிந்து செல்லும். ஒரு கிளை தற்போதைய இருப்பின் தொடர்ச்சியாக இருக்கும். இன்னொரு கிளை பரிணாம வளர்ச்சியடைந்து புதிய இனமாக பரிணமிக்கும். மனித இனத்தில், முழுமையை நோக்கிய பரிணாம வளர்ச்சி சாத்தியமானால், அத்தகைய சாத்தியக்கூறு, தற்போதைய உலகில் வேறு எப்போதையும் விட மிக அதிகமாக உள்ளது.

உலகின் பெரும்பாலான இடங்களில் நமக்கு முந்தைய தலைமுறைவரை அல்லது தொழில் முறைகளில் மிக வளர்ச்சியடைந்துள்ள உலக பாகங்களில் அதற்கும் முந்தைய தலைமுறைவரை, மனித உழைப்பின் பெரும் பகுதி, மனிதனின் அன்றாட பிழைத்தலுக்கும், பாதுகாப்புக்கும் மட்டுமே செலவிடப்பட வேண்டியிருந்தது. ஆனால் இன்றைய நிலை முற்றிலும் வேறானது. நமது உடல் உழைப்பு பெரும்பாலும் இயந்திர மயமாக்கப் பட்டுள்ளது. நம் மூளையின் உழைப்பு பெரும்பாலும் கணினி மயமாக்கப் பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் நமது உழைப்பு என்பது பெரும்பாலும் இயந்திரம் அல்லது கணினியை கட்டமைப்பது மற்றும் இயக்குவது மட்டுமே. ஆக நாம் மனித இனத்தின் இன்றைய காலகட்டம்வரை, மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் மூலம் பெற்ற சக்தி, அதன் இயக்கத்தின் திசையை நோக்கி, பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை எதிர்பார்த்து, நம்மிடம் காத்துக் கொண்டிருக்கிறது.

முன் எப்போதும் இல்லாத அளவில், நம் வாழ்க்கையின் அன்றாட பிழைத்தலுக்கு தேவையான சக்தியை விட உபரி சக்தி நம்மிடம் இருப்பதன் மூலம், நாம் விரும்பினால், முழுமையை நோக்கிய தேடுதலுக்கான சாத்தியங்களுடன் இருக்கிறோம். ஒன்று மட்டும் நிதர்சனம். நம் உபரி சக்தியை நாம் நிச்சயமாக செலவழித்தாக வேண்டும். இதைத் தவிர நமக்கு வேறு வழியே இல்லை. அவ்வாறு செலவழிப்பதற்கும் இரண்டு சாத்தியங்கள் மட்டுமே இருக்க முடியும் – நம் முழுமையை நோக்கிய தேடுதலுக்காக, முழுமையை நோக்கிய பரிணாம வளர்ச்சிக்காக செலவழிக்கலாம் அல்லது பொழுது போக்கிற்காக செலவழிக்கலாம். இது இரண்டையும் தவிர வேறு சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. படைப்பூக்கத்துடன் (creativity) செலவிடப்படும் உபரி சக்தி, நம் முழுமையை நோக்கிய தேடுதலைச் சார்ந்து இருக்கும். படைப்பூக்கம் இல்லாமல் செலவிடப்படும் உபரி சக்தி, நமது பொழுது போக்கிற்கு மட்டும் செலவிடப்படுவதாகும்.

மேலே கூறப்பட்டவை சாத்தியம் என்றால், பரிணாம வளர்ச்சியில் நம் பங்களிப்புக்கும் இரண்டு சாத்தியக்கூறுகள் உள்ளன – நாம் முழுமையை நோக்கி நகர்ந்து, பரிணாம வளர்ச்சியடைந்து புதிய மனித இனத்திற்கு முன்னோடியாக இருக்கலாம், அல்லது தற்போதைய மனித இனத்தின் நீட்சியாக, மனித வரலாற்றில் காணப்படும் மனித இனத்தின் ஏற்றத் தாழ்வுகளுடனும் இன்ப துன்பங்களுடனும், மனித இனத் தொடர்ச் சங்கிலியின் ஒரு கண்ணியாக இருக்கலாம்.


பி.கு; அரவிந்தர் மற்றும் ஜே. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் தரிசனங்களில் இந்த கருத்து, அவர்களின் தனித்தன்மைக்கேற்ப கூறப்பட்டிருப்பதை காணலாம்.

1 comment:

Unknown said...

நல்ல தகவல் இது போன்ற செய்தி
இன்னும் வேண்டும்...