Saturday, March 1, 2014

உழைப்பு

பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஒரு துகளுக்கும், மனிதர்களாகிய நம்மையும் சேர்த்து, உழைப்பு ஒரு தவிர்க்க முடியாத அம்சம். எந்த ஒரு துகளும் எத்தகைய அமைதியுடன் அமர்ந்திருந்தாலும், அதனுள் இடைவிடாத இயக்கம் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். பொருட்களுக்கு அதன் அணுக்களின் இயக்கமும், அணுக்களுக்கு அணுத்துகள்களின் இயக்கமும், அணுத்துகள்களுக்கு அவற்றின் இருப்பின் அடிப்படையான சக்தியின் இயக்கங்களுமாக. எந்த ஒரு இயக்கத்திற்கும் சக்தி இன்றியமையாத தேவை. உழைப்பின் பயன் இயக்கம். எனவே உழைப்பை, இயக்கத்தின் மூலமாக நடைபெறும் சக்தியின் நுகர்வு என வரையறுக்கலாம்.

சக்தி, தோற்றமோ அழிவோ இல்லாதது. எனவே நுகரப்படும் சக்தி, அழியாமல் இன்னொரு வடிவில் வெளிப்பட்டாக வேண்டும். எனவே உழைப்பு என்பது, ஒரு பொருள் அல்லது உயிர், ஒரு வகை சக்தியை அதன் புறத்திலிருந்து பெற்று, இன்னொரு வகை சக்தியாக புறத்தே வெளியிடுவது அல்லது தன்னுள் அமர்ந்திருக்கும் சக்தியை இன்னொரு வகை சக்தியாக வெளியிட்டு, தான் இல்லாமல் அழிவது என்றும் கூறலாம்.

பிரபஞ்சத்தில் அழிவில்லாத ஒன்று என எதுவும் இல்லை எனக் கூறலாம் - சக்தியை தவிர! நம் உணரும் திறன் காலம் என்னும் தளத்தில் (Time Dimension) இருந்தால், தோற்றம் மற்றும் அழிவின் இடைவெளி, அந்த பொருளின் அல்லது உயிரினத்தின் இயல்பை பொறுத்து மாறலாம். அல்லது சில இருப்புகளின் தோற்றமும் முடிவும் நம்மால் உணர முடியாத காலவெளிக்கு அப்பால் இருக்கலாம். உதாரணமாக, ஒரு நுண்ணுயிரின் இருப்பு சில நிமிடங்கள் மட்டமே இருக்கலாம். ஒரு சிறு உயிர் சில நாட்களில் தோன்றி மறையலாம். விலங்குகள் சில வருடங்களில் தோன்றி மறையலாம். மனிதன் நூறு வருடங்களில் பிறந்து அழியலாம். ஒரு சிறு கல் சில நூறு ஆண்டுகளை, கல்லாக உருவெடுத்தது முதல் மணலாக மாறி அழிவதுவரை, எடுக்கலாம். நம் சூரிய மண்டலத்தின் நடு நாயகமான சூரியன் பல கோடி ஆண்டுகளில் அழியலாம். இன்னும்..... நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட கால வெளியில் பிரபஞ்சம் அதன் தற்போதைய வடிவிலிருந்து வேறுவடிவுக்கு அழிந்தொழியலாம்.

நம் உணரும் திறன் காலம் என்னும் தளத்தை கடந்திருந்தால், பிரபஞ்சத்தின் எல்லா பொருட்களிலும் உயிரினங்களிலும் பிறப்பையும் அழிவையும் ஒவ்வொரு கணம் தோறும் காண முடியலாம். ஜெ. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், கணம் தோறும் இறந்து பிறப்பது பற்றி மிக அழகாக கூறியிருப்பார். அவர் கூறியது சற்றேறகுறைய, காலம் என்னும் தளத்தை கடந்து செல்ல நம்மால் முடிந்தால், ஒவ்வொரு கணமும் நாம் இறந்து பிறப்பதை அறிய முடியும். அதன் மூலம் ஒவ்வொரு கணமும் புது மனிதனாக, புது வாழ்க்கையையும் வாழ முடியும்.

ஆக இயக்கம், பிரபஞ்ச அளவில், நம் அறிவுக்கு எட்டும் வரையில், தொடக்கம் முடிவு இல்லாமல் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கிறது. சிறு துகளை பொறுத்தவரையிலும் இதுவே. இடைபட்ட இயக்கங்களில், வெகு சில இயக்கங்கள் மட்டுமே நம் உணர்வுக்கும் அறிவுக்கும் எட்டும் தளங்களில் அமைந்துள்ளன. வேறு வார்த்தைகளில் கூறினால் எங்கும் எப்போதும் உழைப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மனிதர்களாகிய நாமும், விரும்பினாலும் இல்லாவிடினும், விழித்திருக்கும்போதும் உறங்கும்போதும் இடைவிடாமல் உழைத்துக்கொண்டிருக்கிறோம். சக்தியை இடைவிடாது நுகரும் உழைப்பாகிய இயக்கமே நம் இருப்பு, நம் வாழ்க்கை.

நம் வாழ்க்கையை அல்லது நம் இருப்பை அறிவது என்பது, நம் உழைப்பை அறிவதே ஆகும். அதாவது நம்மில் நிகழும் உழைப்பு அல்லது நம்மால் நிகழ்த்தப்படும் உழைப்பு, நம் விழிப்புணர்வுக்குள் நிகழ்வது, நம் வாழ்க்கையை அறிய சாத்தியமான ஒரு வழி. நாம் உழைப்பைகுறித்து அறிந்திருப்பது, பெரும்பாலும் நம்மால் நிகழ்த்தப்படும் உழைப்புகளின் மற்றும் அந்த உழைப்புகளின் விளைவுகளின் ஒரு மிகச்சிறிய பகுதியை மட்டுமே. அந்த சிறு துளியைக் கொண்டு நம்மை குறித்த ஒரு சித்திரத்தை நமக்குள் உருவாக்கிக்கொள்கிறோம். நம் இயல்பை தீர்மானிக்கிறோம். ஆம் அதுவே நம்மை குறித்து அறிவதற்கான முறை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அறிவை அடைந்த நம் உழைப்பின் சிறுதுளியிலிருந்தே நம் முழுமையை உருவகித்து, நம்மைகுறித்த ஒரு முன்முடிவை உருவாக்கிக்கொள்கிறோம். இந்த முன்முடிவின் மூலம் உழைப்பின் பிரவாகத்தையும், நம் எல்லையின்மையையும் நம் அறிதலில் தவற விட்டுவிடுகிறோம். வேறுவார்த்தைகளில் கூறினால், நம் உழைப்பின் ஒவ்வொரு துளியையும், உழைப்பின் விளைவுகளின் ஒவ்வொரு துளியையும் அறிவதன் மூலம் நம் முழுமையை நம்மால் அறிய முடியலாம்.

உழைப்பை அறியும்போது, அந்த உழைப்பால் நுகரப்பட்ட சக்தியையும் உழைப்பால் வெளியிடப்பட்ட சக்தியையும் நாம் அறிகிறோம். அதாவது, நம் உழைப்பின் மூலம் உருமாறும் சக்தியை முழுமையாக நம் உணர்வுக்குள் அடைகிறோம். ஆம், நாம் உழைப்பே உருவானவர்கள். சக்தி நம் உழைப்பின் மூலம் தன் உருவத்தை மாற்றியமைத்துக்கொள்கிறது. இதனை நம்மால் அறியமுடிந்தால், அந்த சக்தியின் உருமாற்றத்தை நம்கட்டுக்குள் கொண்டு வர முடியலாம். இல்லையெனில், சக்தி தன்னை தானே உருமாற்றிக்கொள்ளும் ஒரு கருவியாக மட்டுமே நம் இருப்பு, நம் வாழ்க்கை அமைந்திருக்கும். எனில், சக்தி நம் மூலம் நிகழ்த்தும் உருமாறுதலின் ஒவ்வொரு அம்சமும், நாம் அந்த அம்சங்களுக்கான விழிப்புடன் இருந்தால். இன்பமாகவோ, துன்பமாகவோ நம்மை கடந்து செல்லும். நம் விழிப்புணர்வை அடையாத இயக்கங்கள் நம் அறிதல் இல்லாமலே சக்தியை ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு தொடர்ந்து பெயற்சி செய்து கொண்டும் இருக்கும்.


நம் உழைப்பின் முழு இயக்கங்களும், அதன் விளைவுகளும் நம் அறிதலுக்குள் வரும்போது சக்தி நம் மூலம் உரு மாற்றிக்கொள்வதற்கு, நாம் எந்த தடைகளையும் விதிப்பதில்லை. சக்தியின் இயக்கங்களுக்கான தடை நம்முள் விலகும்போது, அதன் இயக்கமும் நம் இயல்பிற்கேற்பவே பெரும்பாலும் அமைந்திருக்கும். அந்நிலையில், நாம் சக்தியின் இயக்கங்களால் அடையும் இன்ப துன்பங்கள் என்னும் இருமை நிலையை கடந்திருப்போம். சக்தியின் இயக்கமும் நம்மில் ஆனந்த நடனமாக நடைபெறக்கூடும்! 

blog.change@gmail.com

No comments: