Sunday, September 15, 2013

காமத்தின் ஒரு முகம்

காமம் என்னும் சமஸ்கிருத வார்த்தை, மனிதனின் எல்லா விதமான ஆசைகளையும் விருப்பங்களையும் சேர்த்து குறிக்கும் பொருளுடையது. அந்த விரிவான பொருளை கொண்டால், மனிதனின் எல்லா விதமான இயக்கங்களும் உலகியல் இயக்கத்தில் வெளிப்படுவதற்கு ஆதாரம் காமம். மனிதனின் அடிப்படை அல்லது மூலாதார சக்தி, காமத்தின் விளைவாக இச்சா சக்தியாக உருமாறி உலகியல் இயக்கமாக மனிதனிடமிருந்து வெளிப்படுகிறது. ஆம், ஒரு சமூகம் இயங்குவதற்கு அடிப்படை சக்தி அந்த சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனின் இச்சா சக்தியே. இச்சா சக்தி அந்த சமூகத்திலிருந்து வெளிப்படும் தன்மைக்கேற்ப, அந்த குறிப்பிட்ட சமூகத்தின் இயல்பு அமைந்திருக்கும்.

பொது தளத்தில், காமம் என்னும் சொல் உடல் இச்சையை மட்டும் குறிக்கும் சொல்லாக புழங்குகிறது. இந்த அர்த்தத்தில், காமம் என்பது ஒரு சமநிலையுடன் அனுகப்படவேண்டிய இயக்கம். தனிமனித அளவில் காமத்தின் சமநிலை தவறும்போது, அந்த தனிமனிதனையும் அந்த மனித உயிரின் காமத்தின் திசையில் அகப்படுபவரையும் பாதிக்கும் உடல் இச்சையாக வடிவம் பெறுகிறது. அதே காமம், சமூக அளவில் சமநிலை இழக்கும்போது ஒட்டுமொத்த சமூகத்தையும் இழிநிலைக்கு கொண்டு செல்லும். அதுவே நம் சமூகத்தில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் காமத்தின் சமநிலை குலைவால் வீணடிக்கப்பட்ட மற்றும் தவறான திசையில் செலுத்தப்பட்ட இச்சா சக்தி, ஒரு இளம் பெண்ணின் உடலை கொடூரமாக வேட்டையாடி அவர் உயிரை பறித்ததுடன், அந்த சக்தியின் சமநிலை இழந்த ஒருவரை தற்கொலை செய்ய வைத்து, மேலும் நான்குபேருக்கு தூக்கு தண்டனையைம் வழங்கியுள்ளது. இந்த தண்டனையை மொத்த சமூகமும் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது, அந்த சமூகம் இது தனிமனித இச்சா சக்தியின் தவறான இயக்கம் மட்டும் அல்ல, சமூக இச்சா சக்தியின் தவறாக வழிநடத்தப்பட்ட இயக்கமும்தான் என்பதை மிக கவனமாக சமூகம் மறந்து விடுகிறது. சமூகத்தின் ஒரு மூலையிலிருந்து கூட, ஒரு தீனமான குரல் கூட, ஒரு சில அர்த்தமில்லாத கூச்சல்களை தவிர, சமூகத்தின் இந்த அவலத்திற்கான காரணத்தை நோக்கி எழும்பவில்லை என்பதை காணும்போது, சமூகத்தின் மொத்த இச்சா சக்தியும் திசைமாறி, அழிவு சக்தியாக மாற்றமெடுக்கும் சாத்தியத்தை மறுக்க வழியில்லை.

மேலே கூறப்பட்டது, செய்யப்பட்ட குற்றத்தை நியாயப்படுத்தவோ அல்லது கொடுக்கப்பட்ட தண்டனையை குறைகூறுவதற்காகவோ அல்ல. சமூகம் நிலைத்திருக்க வேண்டுமானால், அந்த சமூகத்தின் இயக்க விதியை மீறியவர்கள் தண்டிக்கப்பட்டாக வேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் இங்கு தண்டிக்கப்பட வேண்டியவர்கள், அந்த நான்குபேர் மட்டுமா என்பது, இந்த தண்டனையை கொண்டாடும் ஒவ்வொருவரும் தமக்குள் எழுப்பியாக வேண்டிய ஒரு தவிர்க்க முடியாத கேள்வி - இந்த சமூகத்தில் தாமும் ஒரு அங்கம் என்பதை உணர்ந்தவர்களாக இருந்தால்!. ஆம், இந்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவரும், குற்றத்தை இழைத்தவர்களும் நம் குழந்தைகளே\சகோதரியே\சகோதரர்களே, நம் சமூகத்தின் குழந்தைகளே. அவர்கள் இழைத்த குற்றத்துக்காக அவர்களை தண்டிக்கலாம், ஆனாலும் அவர்கள் நம் சமூகத்தின் குழந்தைகள் என்பதிலிருந்து விலக்க முடியாது. அவ்வாறு நம்மால் விலக்க முடிந்தால், அதன் பின் நம்மை நாமே ஒரு மனிதப்பிறவி என கூறிக்கொள்ள நம்மால் முடியாது.

மனிதனின் இச்சா சக்தியின் இயங்கு விதிகளை தர்க்கத்தால் வரையறை செய்ய (Define) முடியும் என்று தோன்றவில்லை. எனினும் மிகவும் கூர்ந்த அவதானிப்பு மற்றும் உளவியல் வரையறைகளுக்கு உட்பட்டு, தனிமனித ஆசைகளும் விருப்பங்களும் சமூக இயக்கங்களாலே வடிவமைக்கப்படுகிறது எனக்கூறலாம். கூர்ந்து கவனித்தால், சமூக காரணங்களுக்கும் தூண்டுதல்களுக்கும் அப்பாற்பட்டு மனிதனின் அடிப்படை இயல்பு அமைந்துள்ளதை உணரலாம். ஆனால் அந்த இயல்பு குறித்த எந்த முடிவுக்கும் நம் தற்போதைய அறிவு நிலையில் நம்மால் வர இயலாமல் போகலாம். எனினும் அந்த அடிப்படை இயல்பு, அழிவு சக்தியாக இருக்க வாய்ப்பில்லை. இந்த ஊகத்தின் அடிப்படையில், தனிமனிதனின் விருப்பு வெறுப்புகளை முடிவு செய்வது சமூக காரணங்கள் என்பது மறுக்க முடியாதது. இவ்வாறு கூறுவது, ஒவ்வொரு தனிமனித தவறுகளுக்கும் சமூகத்தை பொறுப்பாக்குவது என்பது நோக்கமல்ல.

நம் உளவியல் இயல்பை தீர்மானிப்பது, நாம் அறிந்தவையும் அறிந்தவற்றின் மூலம் அடையும் முன்முடிவுகளுமே. நாம் அறிபவை பெரும்பாலும் நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் வழியாகவே நம்மை அடைகிறது. ஆக பெரும்பாலும் நம் ஆதார சக்தியை இச்சா சக்தியாக மாற்றுவது சமூகத்திலிருந்து நம் அறிவுக்கு வந்து சேர்பவை. அந்த இச்சா சக்தியின் திசையை தீர்மானிப்பவை நாம் அடைந்துள்ள முன்முடிவுகள் மற்றும் நம் மேல் திணிக்கப்படும் முன் முடிவுகள். ஆக சமூகம் நம் ஆசைகளையும் விருப்பங்களையும் உருவாக்குவதுவரை இருப்பது மிக இயல்பானது. ஆனால் அந்த சமூகம் அதீத ஆசைகளையும் விருப்பங்களையும் நம்மேல் சுமத்துவதன் மூலம், சில முன்முடிவகளையும் நம்மைஅறியாமலே நமக்குள் ஏற்றுகிறது. அந்த நிலையில் நம் இச்சா சக்தியின் திசையையும் சமூகமே தீர்மானிக்கிறது.

இச்சா சக்தியாக மாற்றப்பட்ட நம் மூல சக்தி, செயல்களாக வெளிப்பட்டாக வேண்டும். அவ்வாறு செயல் வடிவம் பெறாத ஆசைகள், நம் மனதின் ஆழத்தில் புதைந்து, அழுத்தம் செலுத்தினால் வெடிக்கும் கண்ணிவெடியாக மனதினுள் கிடக்கும். ஒரே ஆசையை சமூகம் மீண்டும் மீண்டும் நம்மேல் திணிக்குமானால், அந்த ஆசை செயல் வடிவம் பெறமுடியாமல் மீண்டும் மீண்டும் மனதினுள் புதைந்து கொண்டிருந்தால், அந்த கண்ணி வெடியின் அழிக்கும் சக்தியும் அதிகரித்து கொண்டேயிருக்கும்.

மீண்டும் உடல் இச்சைக்கு - நமது சமூகத்தில், உடல் இச்சை என்பது இரகசியமாக தீர்க்கப்பட வேண்டியது. சட்டபூர்வமான அல்லது சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட உறவுகளுக்குள் மட்டும் தீர்க்கப்பட வேண்டியது. உறவுகள் திருமணம் மூலம் சமூகரீதியாக அங்கீகரிக்கப்படுவதற்கு முன், உடல் ரீதியான உறவுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதனை மீறி உடல் ரீதியாக உறவு கொண்டால் அது விபச்சாரமாக கருதும் சமூகம், நாம் வாழும் சமூகம். நமது சமூக அமைப்பில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்படாமல், குற்றமாக கருதப்பட்டு, தண்டனை அளிக்கப்படுகிறது. ஆனால் இதே சமூகத்தில் எல்லாவிதமான உடல் இச்சை தூண்டுதல்களும் சுய கட்டுப்பாடு தவிர வேறு எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல், சமூகத்தின் அனைத்து தரப்பினரையும், வயது வித்தியாசம் இல்லாமல், ஆசைகளை செயலாக்கும் வாய்ப்பு உள்ளவர்களா இல்லாதவர்களா என்னும் வித்தியாசம் இல்லாமல் சென்றடைகிறது.

அதாவது நம் சமூகம், எந்த தடையும் இல்லாமல் நம் அடிப்படை ஆற்றலை ஆசைகளாலும் விருப்பங்களாலும் ஆன இச்சா சக்தியாக, உடல் இச்சையாக எந்த தடையும் இல்லாமல் மாற்றுகிறது. ஆனால் அந்த உடல் இச்சைகள், செயல் வடிவம் பெறுவதற்கு அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் நமக்கு விதிக்கிறது. ஆக, உடல் இச்சைகளை செயல்படுத்த இயலாதவர்கள் அந்த ஆசைகளை மனதினுள் புதைப்பதை தவிர வேறு வழி இல்லை. அவ்வாறு புதைக்கப்பட்ட ஆசைகள் என்பது ஒரு உளவியல் கண்ணி வெடி. வெளிப்புற காரணிகள் ஒரளவு அழுத்தத்தை கொடுத்தால், அந்த கண்ணிவெடியை மனதினுள் கொண்டுள்ளவர், அந்த கண்ணிவெடியின் அழிவு சக்கதியை குறித்த விழிப்புணர்வை அந்த கணத்தில் இழந்தால், புதைக்கப்பட்ட கண்ணிவெடி, அதன் அழிவு சக்தியை முழு வீரியத்துடன் வெளிப்படுத்தும்.

இந்த சூழ்நிலையில். இச்சையை கட்டுப்படுத்த இயலாத அந்த சிலர் மட்டும் குற்றவாளிகளா அல்லது எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் உடல் இச்சைகளை தூண்டும் சமூகத்திற்கும் குற்றத்தில் பங்குள்ளதா? சமூகம் எவ்வாறு உடல் இச்சைகளை தூண்டுகிறது என்பதை விவரிக்க தேவை இல்லை. நம் வீட்டு வரவேற்பறையிலே எல்லாவிதமான வக்கிரங்களும், குழந்தைகள் முன்னிலையிலேயே எவ்வாறு அரங்கேறுகிறது என்பதை விவரிக்காமலே நாம் அனைவரும் அறிவோம்.

குற்றத்தை அரங்கேற்றுவதற்கான எல்லா காரணிகளையும் உருவாக்கிவிட்டு, குற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கு, அத்தகைய குற்றம் நடைபெற உள்ள சாத்தியங்கள் குறித்த எந்த விதமான விழிப்புணர்வையும வழங்காத சமூகத்திற்கு, அந்த குற்றத்தில பங்கு இல்லையா? குற்றத்திற்கான எல்லா காரணிகளையும் வெளிப்படுத்தி, அந்த குற்றத்தால் பாதிப்படைய வாய்ப்புள்ளவர்களுக்கு எந்த விதமான பாதுகாப்பையும் வழங்காத சமூகத்திற்கு அந்த குற்றத்தில் பங்கு இல்லையா?
ஆக நம் சமூகமே குற்றங்கள் நடைபெறுவதற்கான எல்லா காரணங்களையும் உருவாக்குகிறது. ஆனால் அந்த குற்றத்தால் நேரடியாக பாதிப்படைபவர்களும், குற்றம் புரிந்து பின் அந்த குற்றத்தை செய்ய தூண்டிய சமூகத்தால் தண்டிக்கப்பட்டு பாதிப்படைபவர்களும், சில தனிப்பட்ட மனிதர்களே. துரதிர்ஷ்டவசமாக, பாதிக்கப்பட்டவர்கள் அந்த சமூகத்தின் அங்கத்தினர்கள் என்பதும், எனவே பாதிக்கப்படுவது அந்த சமூகம்தான் என்பதையும் அந்த சமூகம் அறியாதது போலவே நடந்து கொள்கிறது.

நாம் அனைவரும் சேர்ந்து தொகுப்புதான் நம் சமூகம். எனவே நம் ஒவ்வொருவருக்கும் அந்த குற்றத்திலும். குற்றத்தால் நிகழ்ந்த பாதிப்பிலும் பங்கு உண்டு. நாம் அந்த குற்றத்தால் அடைந்த பாதிப்பிற்கு எதிர் வினையாற்றுகிறோம். அது மிகச்சரியானது. ஆனால் அந்த குற்றத்தில் நம் பங்கிற்கு எந்த தண்டனையும் ஏற்கவில்லையே. அது ஏன்? குறைந்த பட்சம். அந்த குற்றத்தில், ஒரு சமூகமாக, நம் பங்கும் உள்ளதே. அதை ஏன் ஒப்புக்கொள்ளவில்லை? ஆம், நம்மால் நம் பாதிப்பை மட்டுமே காணமுடிகிறது. அந்த பாதிப்பிற்கான காரணத்தில் நம் பங்களிப்பை காண முடியவில்லை. ஆக நாம் அனைவரும் வெறும் பாசாங்குகாரர்கள் (hypocrites). நம்மில் ஒரு பகுதியை மட்டும் கண்டு மற்றொரு பகுதியை காண மறுப்பவர்கள்.

ஒருவேளை நம்மால், குற்றத்தில் நம் பங்களிப்பையும் காண முடிந்தால் நம்மால் என்ன செய்ய முடியும்? குற்றத்திற்கான தண்டனையை நமக்கு நாமே வழங்குவதன் மூலம் மட்டுமே நம் அற உணர்வை, அத்தகைய அற உணர்வை நாம் கொண்டிருந்தால், நம்மால் நிலை நாட்ட முடியலாம். உதாரணமாக, இத்தகைய உடல் இச்சைகளை தூண்டும் வக்கிரங்கள் பொழுது போக்கு என்னும் பெயரில் நம் வீட்டு வரவேற்பறையில் நிகழ்வதை நாமாகவே நிறுத்தலாம். இதன் மூலம் நம் குழந்தைகளின் உளவியலில் இந்த வக்கிரங்கள் நேரடியாக நம் வீட்டிலிருந்தே புதைக்கப்படுவதை குறைந்த பட்ச அளவிலாவது குறைக்கலாம். ஆம், சமூக அளவில் பார்த்தால், நமக்கு நாமே இந்த சிறு தண்டனையை வழங்க முடிந்தால், நம் சமூகத்திற்கு பெரும் உதவி செய்தவர்கள் ஆவோம் - நம் குழந்தைகள் மனதில் நாமாகவே வக்கிரத்தை விதைக்காததன் மூலம்!


எனது வீட்டு வரவேற்பறையில், சில ஆண்டுகளுக்கு முன்பே, பரஸ்பர புரிதலின் மூலம், இத்தகைய வக்கிரங்கள் அரங்கேறுவது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. என்னாலான என் பங்களிப்பு!

blog.change@gmail.com

No comments: