Friday, April 5, 2013

நம்பிக்கை (Trust)


ஆன்மீக சாதகர்களின் கடைசி ஆயுதம், அவர்கள் எந்த வகையான ஆன்மீக சாதனைகளில் ஈடுட்டிருந்தாலும், பெரும்பாலும் நம்பிக்கையாகவே (Trust) இருக்க கூடும். அதே நேரத்தில் ஆன்மீக சாதகர்களை மாயையில்(Illusion), மாய மனத்தோற்றத்தில்(Hallucination) தங்கள் ஆன்மீகத்தை இழக்க செய்வதும் நம்பிக்கை என்னும் (Belief) இந்த ஆயுதமே. எனவே உண்மையில் நமக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருந்தால், நம்பிக்கையின் இயல்பை அறிந்திருக்க வேண்டியது மிக அவசியம். பெரும்பாலும் நாம் கொண்டிருக்கும் ஆன்மீக நம்பிக்கை எத்தகையது என்பதையும் ஆன்மீக நம்பிக்கை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருக்கும் கட்டுரை ஓரளவுக்கு நம்மை உணர வைக்கலாம்

நம் தர்க்க புத்தியால் கடக்கக்கூடிய தூரம், நம் மன ஆழங்களுடனும், பிரபஞ்ச இயக்கத்தின் எல்லையின்மையுடனும் ஒப்பிடும்போது மிக மிக சிறிய தூரம் மட்டுமே. ஒப்பிடும்போது கணக்கில் கொள்ளதக்க அளவு கூட இல்லாத அந்த மிகசிறிய அறிதலுக்காக மட்டுமே நம் தர்க்க புத்தி நமக்கு தேவைப்படுகிறது. மறு பிறவி கோட்பாடு உண்மையாக இருந்தால், நாம் கடந்து வந்திருக்கும் எண்ணற்ற பிறவிகள், அந்த சிறு தூரத்தை நம் பிரக்ஞ்சையால் கடக்க இயலாத காரணத்தினால் மட்டுமே.

நம்பிக்கை எவ்வாறு நமக்குள் உருவெடுக்கிறது? ஒவ்வொரு மனிதப்பிறவியும் இங்கு தோன்றிய பின், புலன்களால் உலகத்தை அளக்கத்தொடங்குகிறது. உலகம் என்பது ஒரு தொடர் இயக்கம். இங்கு நிலையானது எதுவும் இல்லை. அனைத்தும் கணத்துக்கு கணம் மாறிக்கொண்டிருக்கும் நிலையின்மையில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலாது. எனவே நம் வாழ்வு இயங்கும் தளத்தில், நம் வாழ்க்கையை சார்ந்த(relatively) நிலையானதை புலன்கள் மூலம் மனித மனம் அடையத்தொடங்குகிறது. ஆனால் நம் வாழ்வு இயங்கும் தளத்திலும் எண்ணற்ற நிலையற்ற இயக்கங்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றன. இப்போது நிலையான இயக்கங்களையும் நிலையற்ற இயக்கங்களையும் தொடர்பு படுத்தி உணர வேண்டியது மனித மனதின் தவிர்க்க முடியாத தேவையாகிறது. அதாவது மனித மனம் வாழ்க்கை நிகழும் தளத்தில் நிலையானவற்றை கொண்டு, அந்த தளத்தில் நிலையற்றவற்றை அளவிட்டு, அந்த இயக்கங்களை வாழ்க்கையின் நிகழ்விற்கு தேவைப்படும் இடங்களில் துணையாக்குகிறது. இந்த அளவிடலுக்கு பயன்படுத்தப்படும் உபகரணமே நம்பிக்கை. இந்த நம்பிக்கை, நாம் முற்றிலும் அறிந்தவற்றிலிருந்து, அதற்கு தொடர்புடைய நம்மால் அறிய முடியாதவற்றை குறித்து அறியும் முயற்சி மட்டுமே.

மனித மனம் எல்லையற்றது. நம்பிக்கையின் மூலம் நம் வாழ்க்கைக்கு மிகத்தேவையான நிலையற்ற இயக்கங்களை அளவிட்ட நம் மனம், அதே அளவுகோலின் மூலம் நம் வாழ்க்கையை கடந்த அதீத இயக்கங்களையும் அளவிட முயல்கிறது. அவ்வாறு அளவிடமுடியாதவற்றை நம் மனதின் மூலம் அளவிட முயலும்போது நம்பிக்கை என்னும் இயக்கம் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்று விடுகிறது.

நம் மனம் எங்கெங்கு கேள்விகள் எழுப்புகிறதோ அங்கெல்லாம் நம்பிக்கையின் மூலம் விடை பெற்று கேள்விகளை கடந்து செல்கிறோம். ஆனால் அன்றாட வாழ்க்கையில் நாம் நம்பிக்கையின் மூலம் பெற்ற விடைகள், அன்றாட செயல் முறை தளத்தில் பெரும்பாலும் ஒத்திசைவுடன் செல்வதில்லை. இங்குதான் நம் உண்மையான பிரச்சினை தொடங்குகிறது. நம் நம்பிக்கை அன்றாட செயல் தளத்தில் தோல்வியுறும்போது, நம் நம்பிக்கையுடன் நம்மை நம் அகங்காரம் மூலம் பிணைத்திருந்தால், அந்த நம்பிக்கையே நம் அடையாளமாக மாறி இருந்தால், அந்த தோல்வியை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அன்றாட செயல் தளத்தின இயக்கங்கள் நம் நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ போராட தொடங்குவோம். அந்த நம்பிக்கையால் உருவாக்கப்பட்ட போராட்டம், அன்றாட செயல் தளத்தில் பேரழிவுகளை ஏற்படுத்த கூடும். நம் செயல்கள் சமூகத்தையும் பாதிக்கும் நிலையில் நாம் இருந்தால், அந்த நம்பிக்கையின் விளைவுகள் சமூக அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். அல்லது நம் இயங்கு தளத்தில், தனிமனித அளவிலோ அல்லது குடும்ப அளவிலோ அல்லது சிறு குழு அளவிலோ அந்த பாதிப்பு நிகழலாம். உலகில் நடந்திருக்கும், நடந்துகொண்டிருக்கும் பேரழிவுகளுக்கும், தீவிரவாத செயல்களுக்கும் தனி மனித அல்லது மனித குழுக்களின் நம்பிக்கைகளே காரணம். நாமும் நம்பிக்கையை செயல் தளத்தில் அடிப்படையாக கொண்டவர்கள் என்றால் நமக்கும் அந்த பேரழிவுகளே ஏற்படுத்தியவர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, செயல்திறனின் சமூகத்தை பாதிக்கும் அம்சம் மட்டும் - அவர்கள் அளவுக்கு செயல் தீவிரம் உடையவர்களாக இருந்தால், நாமும் தீவிரவாதிகளே!

தர்க்கத்தை, தத்துவத்தை இழந்த நம்பிக்கைகளே உலகின் பேரழிவுகளை நிகழ்த்தியிருக்கின்றன. அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் அழிவுகளை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. நம் நம்பிக்கைகளும் ஆன்மீக தளத்திலிருந்து விலகும்போது நம் ஆளுமையின் வீச்சிற்கேற்ப அழிவுகளை நம்மைச்சுற்றிலும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். அத்தகைய நம்பிக்கையுனுள் நாம் அமிழ்ந்திருக்கும்போது நமது மாய மனக்காட்சிகள், அந்த அழிவுகளையும் நம் முன்னேற்றமாகவே கண்டு கொண்டிருக்கும் - அறிந்து கொள்ள முடியாத மாய வலை! நம்பிக்கையின் முன்முடிவுகளையே தர்க்கமாக கொண்டிருக்கும் பேரழிவு!

ஆனால் நம்பிக்கையே ஆன்மீக சாதகனின் கடைசி ஆயுதம்! இந்த நம்பிக்கையே சரணாகதி. நம்மை விட பெரிய ஒன்றை, நம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றை, நம் அறிதலுக்கு அப்பாற்பட்ட ஒன்றை நம்பாமல் அத்தகைய ஒன்றிடம் நம்மால் சரணாகதி அடைய முடியாது. இங்கு சரணாகதி என்பதன் சரியான அர்த்தத்தை புரிந்து கொள்வது மிக அவசியம். நாம் ஒன்றிடம் சரண்டையும்போது, நம் அகங்காரத்தை, சுயத்தை முழுவதும் இழந்து விடுகிறோம். அந்த நிலையில் கடந்த காலத்தின் கவலைகளும் எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகளும் நம்மிடமிருந்து முழுமையாக மறைந்து விடும். அதாவது எது நடந்தததோ அந்த செயலில் நம் பங்கை மட்டும் நாம் செய்திருப்போம். ஆனால் நடந்தது நமக்கு அப்பாற்பட்ட, நாம் சரணடைந்த ஒன்றினால் மட்டுமே நடந்தது. எது நடைபெறுமோ அவற்றில் நம் பங்களிப்பை மட்டும் வழங்குவோம். அந்த செயல் நமக்கு அப்பாற்பட்ட விதிகளின் அடிப்படையில் எவ்வாறு நடைபெற வேண்டுமோ அவ்வாறு நடை பெறும். இத்தகைய சரணாகதி மனநிலையை அளிக்கும் நம்பிக்கையே ஆன்மீக நம்பிக்கை. மற்ற எல்லா நம்பிக்கைகளும் நம் மனம் எழுப்பும் வினாக்களிலிருந்து தப்பிச்செல்வதற்கு நாம் பயன்படுத்தும் கருவி மட்டுமே. இந்த நம்பிக்கைகள் அன்றாட செயல்களின் அலைக்கழிப்பினால் மனநிலை பிறழ்வதிலிருந்து தப்பிப்பதற்கு மட்டுமே உதவலாம். ஆம், மிகவும் மெல்லிய, எளிதில் உடையக்கூடிய மனநிலையை உடையவர்களுக்கு இத்தகைய நம்பிக்கைகள் மிகவும் தேவை - மனப்பிறழ்வு நிலையை அடையாமல் நம் வாழ்க்கையை தொடர.

துரதிருக்ஷ்டவசமாக நம்மில் பெரும்பாலானவர்கள் இத்தகைய நம்பிக்கைகள் தேவைப்படும் அளவுக்கு மெல்லிய மனதுடன் இருக்கிறோம் - புற உலகில் எத்தனை மன வலிமை படைத்தவர்களாக நம்மை காட்டிக்கொண்டிருந்தாலும்! அல்லது அத்தகைய மெல்லிய மனம் படைத்த சமூகம் அளித்த நம்பிக்கைகளை இழக்க இயலாமல் தடுமாறிகொண்டிருக்கிறோம். நம் மனம் தத்துவத்தின் பக்கம் திரும்புவதன் மூலம் மட்டுமே இத்தகைய நம்பிக்கைகள் தேவைப்படாத தளத்தை அடைய முடியும். அந்த தளத்தில் சென்ற பின் மட்டுமே ஆன்மீக சரணாகதிக்கு தேவையான எளிய மனநிலையை அடையமுடியும். அந்த எளிய மனநிலையில் நம் அகங்காரத்தை, சுயத்தை இழந்து முழுமுதல் உண்மையின் மேல் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் அந்த உண்மையிடம் சரணாகதி அடைய இயலக்கூடும். அதன் பின் நாம் அடைவதற்கு எதுவம் இல்லை!

blog.change@gmail.com

Tuesday, April 2, 2013

தத்துவம்


எதற்காக தத்துவம்? எந்த துறையை எடுத்தாலும் தத்துவமே பிரதானமாக கருதப்படுகிறது. எதற்காக? இங்கு நாம் கவனத்தில் கொள்வது ஆன்மீகம் சார்ந்த தத்துவங்களை மட்டுமே. ஆன்மீகத்தில் தத்துவத்துக்குதான் முக்கியமான இடமா? ஆம் எனில் ஆன்மீகத்தின் தத்துவம் தவிர்த்த மற்ற அம்சங்கள் எதற்காக? இல்லை எனில் ஆன்மீகத்தில் தத்துவத்தின் பங்கு என்ன? ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ள அனைவருக்கும் தத்துவ அறிமுகம் தேவையா? இல்லை எனில் எண்ணிலடங்கா ஆன்மீக தத்துவங்கள் யாருக்காக? கடைசியாக, நாம் ஆன்மீக பாதையில் செல்ல விரும்பினால் நமக்கு தத்துவங்கள் தேவையா? தேவை எனில் முடிவில்லாத தத்துவ கடலில் எவை நமக்கானவை?

இந்த விசாரணைகளை தொடங்குவதற்கு முன், எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் தர்க்கம் குறித்து கூறிய, கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வார்த்தைகள் நமக்கு உதவலாம்.


"நுண்ணுணர்வாலான ஆழ்தளத்துக்குச் செல்லும்போது மனம் படிமங்களைக் கட்டற்றுப் பெருக்கிக் கொள்கிறது. அதையும் தர்க்கம் மூலம் எல்லைக்குள் நிறுத்த முயல்கிறேன். ஆகதர்க்கம் என்னைப் பொறுத்தவரை ஒரு கட்டுப்படுத்தும் கூறு மட்டுமே."
"நான் என்ன சொல்கிறேன் என்பது ஓரளவு தியானம் பழகியவர்களுக்குப் புரியும். தியான மரபுகள் தொடர்ந்து ஆழ்தலையும் அமைதலையும்தான் வலியுறுத்துகின்றன. தியானம் மூலம் அடையப்படும் அனைத்துமே தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட தளத்தில்தான் உள்ளன. அவற்றைப் பகிர்வதுகூட இயல்வதல்ல. ஆனால் நெடுங்காலம் முதல் எல்லா தியான மரபுகளிலும் நுண்ணிய தர்க்கமும் தேவைப்பட்டிருக்கிறது. தியானத்தில் அமர்ந்ததுமே மனம் கற்பனைகளில் திசையிழந்து தெறிக்கிறது. எதிர் எதிரே வைக்கப்பட்ட ஆடிகள் போல பிம்பங்களைப் பெருக்கிக் கொள்கிறது. சிலசமயம் பித்துப் பிடிக்கும் அளவுக்கு உணர்ச்சிவேகம் ஏற்படுகிறது. இப்படி ஒரு கொந்தளிப்பு உருவாகும்போது அதை நெறிப்படுத்த தர்க்கம் தேவைப்படுகிறது."
"உதாரணமாக ஜெ. கிருஷ்ணமூர்த்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் சொல்வதை ஆழ்ந்து அனுபவபூர்வமாக உள்வாங்காத ஒருவருக்கு, அவர் தர்க்கங்களைக் கட்டமைத்தபடியே செல்வதாகத் தோன்றும். வெற்று தர்க்கமாகக்கூட சிலருக்குப் படலாம். ஆனால் அவர் தொடர்ந்து தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றையே முன்வைக்கிறார். அங்கே செல்லும் பாதையை நமக்கு வகுத்தளிப்பதில்லை. அதை நாமே கண்டடையவேண்டும் என்பதே அவரது எண்ணம். ஆனால் பாதையின் இருபக்கக் கரைகளையும் வகுத்துத் தருகிறார். அதற்குத்தான் தர்க்கத்தைப் பயன்படுத்துகிறார்."
"மெய்ஞானத்தின் திண்ணையில் பசித்த காவல்நாய் உள்ளது. நமது போத மனம்தான் அது. அதற்கு சில இறைச்சித்துண்டுகளைப் போட்டுவிட்டு உள்ளே நுழைகிறோம். அந்த இறைச்சித்துண்டுதான் தர்க்கம்."
ஆம் தர்க்கம் ஒரு கருவி. நம் போத மனதை, பிரக்ஞ்சையை அமைதிப்படுத்தும் ஒரு கருவி. தர்க்கம் அமர்ந்திருப்பது தத்துவம் என்னும் இருக்கையில். ஆக தத்துவ அறிவு நம் மனதை அமைதிப்படுத்தவே தேவைப்படுகிறது. மனதை அமைதிப்படுத்த வேறு வழிகளும் உள்ளன. உதாரணமாக நம்பிக்கை. 
ஆம் நம்பிக்கையும் நம் மனதை அமைதிப்படுத்தும். அவ்வாறு நம்பிக்கையின் மூலம் அடைந்த மன அமைதி ஆன்மீகத்தை நோக்கி நம்மை நகர வைக்கும் மன அமைதியா அல்லது ஆன்மீகத்திலிருந்து நம்மை விலக்கி வைக்கும் மன அமைதி போல தோற்றமளிக்கும் மனதின் செயலாற்றும் தகுதியை இழந்த நிலையா என்பது அந்த நம்பிக்கையின் தரத்தை பொறுத்தது. நாம் நம்பிக்கையை ஆதாரமாக கொண்டவர்கள் என்றால், அந்த நம்பிக்கையின் தரத்தை நாம் அறிந்திருக்க வேண்டும். அந்த அறிவிற்காகவேனும் குறைந்த பட்ச தர்க்க அறிவும் தர்க்கத்தின் அடிப்படையான தத்துவ அறிவும் நாம் பெற்றிருக்க வேண்டும்.
எண்ணற்ற தத்துவங்கள் ஆன்மீக தளங்களில் புழங்குகிறது. ஒவ்வொரு தத்துவமும் ஒவ்வொரு முறையில் ஆன்மீகத்தை அணுகுகின்றன். ஒவ்வொரு சமூகமும் அந்த சமூகத்துக்கான தத்துவங்களை கொண்டுள்ளன - அந்த சமூக உறுப்பினர்கள் அறிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும். எந்த ஒரு சமூகத்தின், மதத்தின் அல்லது மதம் சமூகம் சாராத ஆன்மீக தத்துவங்களை நோக்கினாலும் அவற்றின் அடிப்படை நோக்கம் ஒன்றாகவே இருக்க முடியும் - மனித முழுமையை அடைவது. எல்லா தத்துவங்களின் நோக்கம் ஒன்றாக இருந்தாலும் அவற்றின் கூறும் முறை முற்றிலும் வேறுபட்டுள்ளது. அந்த கூறும் முறை, அந்த தத்துவ கோட்பாட்டை அடைந்த மனங்களின் சமூக பின்னணி, எந்ந சமூகத்தை நோக்கி கூறப்படுகிறதோ அந்த சமூகத்தின் சராசரி மன அமைப்பு ஆகியவற்றை சார்ந்து இருக்கும். எனவே ஒரு ஆன்மீகவாதியால் எந்த ஒரு தத்துவத்தையும்  நிராகரிக்க இயலாது. அவ்வாறு நிராகரிப்போமானால் ஆன்மீகத்தின் எந்த சாத்தியங்களையும் நம்மால் அடைய முடியாது.
ஆனால் சமூகத்தில் புழங்கும் அனைத்து தத்துவங்களும் நமக்கான தத்துவங்களாகவும் இருக்க முடியாது. ஆம் நமக்கு தேவையான தத்துவம் நம் மனதில் எழும்பும் கேள்விகளை பொறுத்தது. அந்த கேள்விகளின் தளத்தை பொறுத்தது. அதாவது நம் இயல்பை பொறுத்தது. நம் மனதின் அலைக்களிப்புக்கான கேள்விகள் முடிவடையும்போது நாம் தத்துவங்களின் தேவைகளையும் கடந்திருப்போம். அந்த நிலையில் மனம் அதன் முழு சாத்தியத்தை அடைந்திருக்கும் அல்லது அடைவதற்கான தகுதியை அடைந்திருக்கும். அந்த நிலையில் நமக்கு தத்துவங்களுக்கும் வெற்று வார்த்தைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனெனில் நம் மனதை ஆன்மீக வழியில் செலுத்த அங்கு எந்த தர்க்கமும் தேவை இல்லை.
ஆனால் வெற்று நம்பிக்கைகளும் நம்மை தத்துவங்களையும் அதன் வெளிப்பாடான தர்க்கத்தையும் நிராகரிக்க வைக்கலாம். ஆக நாம் நம்பிக்கையின் அடிப்படையில் தத்துவ கோட்பாடுகளை நிராகரிப்போமானால், நாம் வெற்று நம்பிக்கையினால் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தலாம். ஆனால் அத்தகைய மன நிலையில் துரதிர்க்ஷ்டவசமாக நமது நம்பிக்கை, வெற்று நம்பிக்கை என்பதை அறியும் தகுதியையும் இழந்திருப்போம். எந்த தத்துவம் நம் மனதை அலைக்கழிக்கும் கேள்விகளை எழுப்பவில்லையோ அந்த தத்துவங்கள் நமக்கு, நம் மன இயல்புக்கு தேவையில்லாத தத்துவங்கள். எனவே அவற்றை நாம் பயில வேண்டிய தேவை இல்லை.
தத்துவங்களின் தேவை நமக்கு உண்டா இல்லையா என்பது நம் மனதில் நமது வாழ்க்கை குறித்த, நமது இருப்பு குறித்த, நமது முழுமை குறித்த கேள்விகள் நம் மனதில் எழுகின்றனவா இல்லையா என்பதை பொறுத்தது. அவ்வாறு கேள்விகள் எழுந்தால் நாம் ஆன்மீக வழியில் இருக்கிறோம் என்பது உறுதியாகிவிட்டது. அந்த கேள்விகள் எழும்போது அவற்றை எதிர்கொள்ள நம் முன் இருக்கும் முதல் மற்றும் எளிதான கருவி, நாம் சார்ந்திருக்கும் சமூகம் நமக்களித்திருக்கும் நம்பிக்கைகள். நாம் எளியவர்களாக இருந்தால், எளிய மன நிலையில் இருந்தால், நம் சமூகம் நமக்களித்திருக்கும் நம்பிக்கைகளே நம் ஆன்மீக உச்சத்தை அடைய போதுமானவை.
துரதிர்க்ஷ்டவசமாக நாம் எவருமே எளியவர்களாக இல்லை. நம் சமூகம் நமக்கு ஆன்மீகம் சார்ந்த நம்பிக்கைகளுடன் நம் வாழ்க்கை சார்ந்த போராட்டங்களையும் நமக்கு அளித்துள்ளது. அந்த வாழ்க்கை போராட்டத்தில் நம்மை ஈடுபடுத்துந்தோறும் நம் எளிமையை சிறுக சிறுக நாம் இழந்து கொண்டே வந்திருக்கிறோம். எனவே நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, நம் சமூகம் நமக்களித்திருக்கும் நம்பிக்கைகள் போதுமானதாக இல்லை. அந்த நம்பிக்கைகள் பெரும்பாலும் வாழ்க்கை போராட்டங்களை எதிர் கொள்ளாமல் அவற்றிலிருந்து தப்பி செல்லவே நாம் உபயோகப்படுத்துகிறோம். நம்பிக்கைகளோ அல்லது வேறு எவையோ நம்மை ஆன்மீக உச்சத்திற்கு எடுத்து செல்ல வேண்டுமெனில், நம்மை மீண்டும் (மனதளவில்) எளிமையானவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். இதற்காகவே தத்துவங்கள் நமக்கு தேவைப்படுகின்றன - நம் கேள்விகளுக்கு விடையளித்து, எல்லா விதமான மன தடைகளையும் விலக்கி, வாழ்க்கையை உள்ளவறே எதிர்கொள்ளும் எளிமையான மனதை அடைய! பசித்து வெறியுடன் இருக்கும் போத மனமாகிய காவல் நாயின் பசியை ஆற்றி மெய்ஞானத்தை அடைய!

blog.change@gmail.com