Wednesday, August 29, 2012

உணர்வு


நாம் உணர்வதை அறியும் திறன், மனித இனத்திற்கு இயற்கையால் அளிக்கப்பட்ட ஆறாவது அறிவு என்னும் பெருங்கொடையாகும். நம் ஆறாவது அறிவு முழுமை அடையும்போது, ஒரு மனிதப்பிறவியாக நாமும் முழுமை அடைந்நிருப்போம். உண்மையான கல்வி என்பது, நம் ஆறாவது அறிவான உணர்வதை அறியும் திறனை அடைவதை போதிப்பதாகவே இருக்கும். இந்த நோக்கில், நம் சமூகம் நமக்களிக்கும் பொதுவான கல்வி என்பது உண்மையில் கல்வி அல்ல – அது ஒரு தொழிற்பயிற்சி மட்டுமே. நாமும் பெரும்பாலும் அத்தகைய தொழிற்பயிற்சியை மட்டுமே நம் சமூகத்திடமிருந்து கோரும் நிலையில் இருக்கிறோம், நம் சந்ததியினருக்கும் முனைப்புடன் அளித்துக்கொண்டிருக்கிறோம்.

நம் மனம் என்பது நம் தற்போதைய உணர்வுகளும், மூளையில் நினைவுகளாக சேமிக்கப்பட்டிருக்கும் உணர்வுகளும் வெளிப்படும் ஒரு தளம். நாம் உணர்வதை அறிவது என்பது, ஐம்புலன்களின் உணர்வு நம் மனதாக வெளிப்படும் அதே தருணத்தில், அந்த உணர்வுகளை அறிவதாகும். ஆனால் நம் தற்போதைய நிலையில், நம்மில் பெரும்பாலானவர்களால், புலன்கள் உணரும்போதே மனதால் அறிய முடிவதில்லை. புலனுணர்வுகள் நினைவுகளாக மாற்றப்பட்டபின்பு, நினைவுகளை அறிவதன் மூலம் மட்டுமே நம்மால் புலனுணர்வுகளை அறிய முடிகிறது. நினைவுகள் எப்போதுமே புலன்கள் அறிவதை அறிந்தவாறே மூளையில் சேமிக்கப்படுவதில்லை. நம் முன்னறிவுகள், நம் புலனுணர்வுகளை உருமாற்றம் செய்து, நம் முன்னறிவுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திய பின்பே புலனுணர்வுகள் நினைவுகளாக சேமிக்கப்படுகின்றன. ஆகவே நினைவுகளிலிருந்து நாம் அறிவது எப்போதுமே உண்மை அல்ல – நம் முன்னறிவைப் பொறுத்து, உண்மைக்கு மிக அருகிலோ அல்லது மிகத் தொலைவிலோ அல்லது இடைப்பட்ட தூரத்திலோ இருக்கும்.

புலனுணர்வுகள் தவிர மூளையினுள் நிகழும் சில நிகழ்வுகள் பயம், கோபம், அன்பு, கருணை, அறம் போன்ற உணர்வுகளாக வெளிப்படுகிறது. இந்த உணர்வுகள்,  நாம் தனிமனித அளவிலும், சமூக அளவிலும் நம் இருப்பை உறுதிசெய்ய இன்றியமையாதவை. உதாரணமாக, பயம் என்னும் உணர்வு,  ஆபத்துகளிலிரந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள மிக மிக அவசியமானது. மூளையின் நிகழ்வுகள் மூலம் அடையும் பிற உணர்வுகளும் நம் வாழ்வின் உச்சத்தையோ அல்லது வீழ்ச்சியையோ அடைவதற்கு காரணமாகின்றன. இந்த மூளையின் நிகழ்வுகளை நம்மால் வழிநடத்த முடிந்தால், நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகளை நம்மால் விழிப்புடன் கவனிக்க முடிந்தால், பிறரின் உணர்வுகளையும் நம்மால் உணர முடியலாம்.

மூளையின் நிகழ்வுகளை நம்மால் வழிநடத்துவது என்பது, நிகழ்வுகளை நம் விருப்பத்திற்கேற்ப கற்பனை செய்வது என்னும் அர்த்தத்தில் அல்ல- கற்பனை அல்லது சிந்தனை நம் விருப்பமில்லாமல் நடைபெறாமல் இருப்பதையே பெரும்பாலும் குறிக்கும். நம் மனம் அத்தகைய நிலையை அடைந்தால், அது எப்போதுமே அமைதியில் திளைத்திருக்கும். அத்தகைய மனம், நம் பிரக்ஞ்சையின் அனுமதியின்றி எந்த வெளிப்புற நிகழ்வுகளாலும் அதன் அமைதியை இழப்பதில்லை. இந்த தகுதியை அடைந்த மனதால், அதன் அதீத விழிப்புணர்வாலும், முழுமை நோக்காலும், பிறர் உணர்வுகளையும் உணர முடியலாம். முழுமை நோக்கை அடைந்த மனம், பிறரின் உணர்வுகளை அடைந்தாலும், அந்த உணர்வுகளால் பாதிக்கப்படுவதில்லை. அதாவது, நம் மனம் பிறரின் உணர்வுகளையும் அடையவேண்டுமானால், நம் மனம் உணர்வுகளால் பாதிக்கப்படாத தன்மையை அடையவேண்டும். நம் மனதின் இயக்கம், நம் பிரக்ஞ்சையின் கண்காணிப்பில் மட்டுமே நிகழ வேண்டும். அல்லது, நம் மனம் எப்போதும் முழு விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். முழு விழிப்ப நிலையில் இருக்கும் மனம், அறிதலின் இன்பத்தை இடைவிடாது அனுபவித்து கொண்டே இருக்கும்.

நாம் தற்போது ‘நாம்’ என அறியும் நமது உணர்வுகளை தாண்டி நமது சுற்றுப்புறங்களின் உணர்வையும் அடையும்தோறும் ‘நான்’ என்னும் சொல் குறிக்கும் நம் எல்லையும் விரிவடைந்து கொண்டே இருக்கும் அந்த ‘நான்’ முழுமை அடையும்போது, நம்மைதவிர நாமறிந்த உலகில் வேறு எதுவும் இருப்பதில்லை. இதுவே ‘அஹம் பிரம்மாஸ்மி’ அல்லது ‘நானே பிரம்மம்’ என உபநிக்ஷங்கள் அறைகூவுவது. இதை வேறு வார்த்தைகளில் கூறினால், நம் மனம் நம் சுற்றுப்புறங்களின் உணர்வுகளையும் அடையும்போது, ‘நான்’ என்னும் தனிமைப்படுத்தும் உணர்வு நம்மிடமிருந்து மறைய ஆரம்பிக்கும். அந்த நிலையில், மனம் அதன் அகங்காரத்தின் உதவியால் தன்னுள் நிறைத்து வைத்திருக்கும் ‘நான்’ சார்ந்த குப்பைகளையும் இழக்கும். அதாவது, மனம் அதுவரை தான் சேர்த்து வைத்தவற்றின் உபயோகமின்மையை அறிந்து, அவற்றை களைவதன் மூலம் ஒருவகையான வெறுமையை அடையும். ‘நேதி, நேதி’ அல்லது ‘எதுவம் நானல்ல’ என்று உபநிஷங்கள் மறுத்து அடையும் நிலையும் அந்த மனதின் வெற்றிடமே.

ஆக மனம் தன்னையே அனைத்துமாக உணரும் முழுமை நிலையும், தன்னை ஒன்றுமில்லாமல் உணரும் வெறுமை நிலையும் ஒன்றாகும் உன்னத நிலையே ஆன்மீகத்தில் ஈடுபாடுடைய அனைவரின், அவர்கள் அறிந்த அல்லது அறியாத இலக்காக இருக்கும். மனதின் இத்தகைய உன்னத நிலையை அடைய மனம் அதன் உணரும் திறனை எப்போதும் அதன் முழுவீச்சில் பெற்றிருக்க வேண்டும். எல்லா ஆன்மீக பயிற்சிகளும், தத்துவங்களும், மதங்களும் போதிக்கும் அனைத்து வழிமுறைகளும், நேரடியாகவோ மறைமுகமாகவோ மனதின் உணர்திறனை நோக்கியே இருக்கும். மனதின் உணர்திறனை அதிகரிக்கும் எந்த வழிமுறைகளும் ஆன்மீக வழிமுறைகளே.

தொடர்புடைய பதிவுகள்; உணர்தல், உணர்ச்சி வசப்படுதல்

blog.change@gmail.com