Sunday, June 17, 2012

மனம், மனமயக்கம், மாயை

கடவுள் என்பது ஒரு இருப்பா (சத் - existance) அல்லது இன்மையா (அசத்- non-existance) என்னும் உபநிஷங்கள் எழுப்பும் கேள்வியை நம் மனதை நோக்கியும் நாம் கேட்கலாம். இங்கு இன்மை என்பது இருப்பு என்பதன் எதிர்பதம் ஆகாது. இன்மை என்பது எல்லாவற்றையும் அதனுள் அடக்கும் முழு வெறுமை – இந்த அர்த்தத்தில் இருப்பு என்பது இன்மையினுள் மிதக்கும் சிறுதுகள் மட்டுமே. இன்மை என்பதை நிகழ்வு என்னும் அர்த்தத்திலும் கொள்ளலாம்.


இந்த அர்த்தத்தில் மனம் ஒரு இருப்பா (சத்), நிகழ்வா(அசத்) என்னும் கேள்வியை எழுப்பினால் மனம் ஒரு நிகழ்வு என்பதே பதிலாக இருக்க முடியும். மனம் என்பது ஒரு பொதீக பொருள் அல்ல. அது ஒரு நிகழ்வு மட்டுமே. அதாவது மூளையின் இயக்கங்களின் பிம்பங்களே மனமாக வெளிப்படுகிறது. அதாவது மனம் என்னும் நிகழ்விற்கு மூளை என்னும் இருப்பு தேவைப்படுகிறது. (கடவுள் என்பது நிகழ்வாக இருந்தால், அந்த நிகழ்விற்கு அடிப்படையாக எந்த இருப்பும் தேவையாக இருக்க முடியாது. எனவே சத், அசத் என்னும் வார்த்தைகளை மனதிற்கு பொருத்தி பார்ப்பது, ஒரு தகுதியற்ற ஒப்பீடு மட்டுமே) மூளை அதன் இயக்கத்திலிருந்து முழுமையாக விடுபடும்போது அல்லது மூளையின் உயிர்ப்பு இல்லாமல் ஆகும்போது மனம் என்னும் நிகழ்வும் இல்லாமல் ஆகிறது.

மூளையின் இயக்கங்கள், அதன் வெளிப்புற இயக்கங்களுடன் ஒத்திசைவில் இருக்குமானால், அந்த இயக்கங்களின் வெளிப்பாடான மனமும் அதன் வெளிப்புற இயக்கங்களுடன் ஒத்திசைவில் இருக்க கூடும். இத்தகைய மூளையின் ஒத்திசைவான இயக்கங்களை வெளிப்படுத்தும் மனமே உண்மையை அல்லது கடவுளை உணரும் மனமாக இருக்கலாம். மூளை அதன் அறிதல்கள் மூலம் சுய அடையாளங்களை உருவாக்கி கொள்ளும்போது, அது வெளிப்புற இயக்கங்களுடனான ஒத்திசைவை இழந்து, அதுவே உருவாக்கிக்கொண்ட சுயங்களுடன்(Self) ஒத்திசைவை ஏற்படுத்துகிறது. மூளை உருவாக்கும் சுயம் என்பது ஒற்றைப்படையான ஒரு இயக்கம் அல்ல. மூளை அறியும் ஒவ்வொரு அறிதலும் ஒரு சுயத்தை உருவாக்குகிறது. மேலும் மூளை அடைந்த அறிவின் இயல்பிற்கேற்ப இந்த ஒவ்வொரு சுயமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாததாகவும் முரண்பட்டதாகவும் இருக்க கூடும். ஆக, மூளை அதுவாகவே உருவாக்கிக்கொண்ட சுயங்களுடன் ஒத்திசைந்து செயல்களை வெளிப்படுத்தும்போது, அந்த செயல்களும் செயல்களின் மூலம் அடையப்படும் விளைவுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றதாகவோ, முரண்பட்டதாகவோ இருக்கும். இத்தகைய செயல்கள் மற்றும் விளைவுகளின் தொடர்பின்மையும் முரண்பாடுகளுமே நம் வாழ்க்கையின் இன்ப துன்பங்களுக்கு அடிப்படை காரணியாக இருக்கிறது.

உண்மையான சுயம் என்பது நாம் இந்த உலகில் தோன்றியபின் உருவாகி நம்முடன் ஒட்டிக்கொண்ட ஒன்றாக இருக்க முடியாது. நம் உண்மையான சுயம், நாம் இந்த உலகில் தோன்றும்போது உருவான ஒன்றாக மட்டுமே இருக்க முடியும் – அந்த சுயம் என்பது நம் பிறப்புடன் தோன்றி இறப்புடன் முடியும் ஒன்றாக இருந்தால். நாம் பிறந்தபின், மூளையின் அறிதல் இயக்கம் தொடங்கியபின், மூளை உருவாக்கும் சுயங்கள் எல்லாம், அந்த மூளையால் உருவாக்கப்பட்ட மாயத்தோற்றங்களே. மாயத்தோற்றங்களை உருவாக்கும் மூளை, வெளிப்புற இயக்கங்களுடனான தன் ஒத்திசைவிலிருந்து தன்னை விடுவித்துக்கொணைடு, அதனால் உருவாக்கப்பட்ட மாயத்தோற்றங்களான சுயங்களுடன் ஒத்திசைந்து புதிய அறிதல்களை நிகழ்த்துகிறது. இந்த மாயத்தோற்றங்களுடன் ஓத்திசைந்து இயங்கும் மூளையின் ஒவ்வொரு இயக்கத்தையும் தன் நிகழ்வாக பெறும் மனம், வெறும் மனமயக்கம் மட்டுமே. அதாவது, நம் வாழ்க்கையை பெரும்பாலும் மனமயக்கங்களாக இருக்கும் இயக்கங்கள் மற்றும் அந்த மனமயக்கங்களின் தொடர்ச்சியாக உருவாக்கப்படும் இயக்கங்களினால் மட்டுமே இயக்கிக்கொண்டிருக்கின்றன. அதாவது நம் வாழ்க்கைக்கும் உண்மைக்கும் இடையில் எந்த வித தொடர்பும் இல்லை. அவ்வாறு தொடர்பு இருந்தால், அந்த தொடர்பு பிரக்ஞ்சைபூர்வமாக நம்மால் ஏற்படுத்தப்பட்ட தொடர்பு அல்ல. அது வெறும் தற்செயல் நிகழ்வு மட்டுமே.

எனில் நாம் பிறக்கும்போது நம் மூளை இயற்கையுடன் கொண்டிருந்த ஒத்திசைவு இயக்கத்தை எவ்வாறு நாம் இழக்கிறோம்? நம் சுற்றுச்சூழலும் சமூகமும் நம் மீது செலுத்தும் ஆதிக்கம் இந்த இழப்புக்கு காரணமாக இருக்கலாம். நம் மனம் இயற்கையுடன் தொடர்ச்சியாக ஒத்திசைவுடன் இருக்க அது அதீத சக்தியுடனும் முழு உயிர்ப்புடனும் இருக்க வேண்டியது மிக அவசியம். சமூகம் நம் மேல் செலுத்தும் ஆதிக்கத்தின் தன்மை அந்த உயிர்ப்பை இழக்க செய்திருக்க கூடும். இயற்கையுடன் தொடர்பை இழந்த மனம், அதன் இயக்கத்தை தக்க வைத்து கொள்வதற்கு, சுயங்களை உருவாக்கி, அந்த சுயங்களுடன் ஒத்திசைந்து தன் இயக்கத்தை தொடர்ந்திருக்கலாம். அவ்வாறு சுயங்களை உருவாக்க இயலாத மனம், மனப்பிறழ்வு நிலையை அடைந்து வெளிஉலகத்திடமிருந்து தன்னை முழுவதுமாக விலக்கிக் கொள்ள நேரலாம்.

ஆன்மீகம் என்பது இயற்கையுடனான நம் மனதின் உறவை முற்றிலுமாக திரும்பப் பெறுவதற்கான இயக்கமே. நம் மனம் மீண்டும் இயற்கையுடனான ஒத்திசைவை திரும்பப்பெற வேண்டுமானால், மனம் அதுவாக உருவாக்கிக்கொண்ட சுயங்களிலிருந்து விடுபட்டாக வேண்டும். நாம் அறிந்தவைகளே நம் சுயத்தை உருவாக்குகிறது. எனவே சுயங்களிலிருந்து விடுபட, நாம் அறிந்தவைகளிலிருந்து விடுபட்டாக வேண்டும். நாம் அறிந்தவைகளின் இயல்பை அறிவதும், நம் சுயங்களின் இயல்பை அறிவதும், இயற்கையுடனான தொடர்பை மீண்டும் பெறுவதற்கான எளிய வழிகளாக இருக்க கூடும். மனம் அடைந்த சுயங்களை அழிப்பதற்கான வேறு வழிகளும் இருக்க கூடும். எந்த வழியில் சுயத்தை இழப்பதற்கான முயற்சியில் இருந்தாலும், அத்துடன் சேர்ந்து இயற்கையுடனான தொடர்பையும் புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். ஒருவேளை நம் மனதால் சுயத்தை அழிக்க முடிந்து, ஆனால் இயற்கையுடனான தொடர்பை மீட்டெடுக்க முடியாமல் போனால், மனப்பிறழ்வு நிலை கூட அதன் முடிவாக இருக்கலாம். இந்த எதிர்மறை விளைவே ஆன்மீக சாதனைகளுக்கு வழிகாட்டுதலை அவசியமாக்குகிறது.

நாம் சமூக வாழ்க்கையினுள் செல்ல செல்ல, மனமயக்கங்களாலும் மாயைகளாலும் நம்மை இழப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த இழப்பை நம்மால் அறிய முடிந்தால், மனமயக்கங்களிலிருந்தும் மாயைகளிலிருந்தும் ஒருவேளை நம்மால் நம் வாழ்க்கையை மீட்டெடுக்க முடியலாம். எல்லா மதங்களும், எல்லா புனித நூல்களும், எல்லா தத்துவக் கோட்பாடுகளும், எல்லா ஆன்மீக வழிகளும் அந்த ஒற்றை நோக்கத்திற்காகவே இந்த உலகில் தோன்றியிருக்க வேண்டும்!

blog.change@gmail.com

No comments: