Wednesday, June 8, 2011

கலாச்சாரம்

கலாச்சாரம் அல்லது பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் அடிப்படை இயங்கு சக்தி. இது அந்த சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களும் மற்ற உறுப்பினர்களுடனும், தங்கள் தேவைகளுடனும் ஆன உறவு அல்லது தொடர்புகளின் வலைப்பின்னலே. பண்பாடு அல்லது கலாச்சாரம் என்பது இல்லாமல் எந்த சமூகமும் இருக்க முடியாது. ஒரு கலாச்சாரத்தின் சில கூறுகள் மற்ற கலாச்சாரங்களிலும் ஏற்றுகொள்ளப்பட்டவைகளாக இருக்கலாம். மற்ற சில கூறுகள் விலக்கப்பட்டவைகளாகவும் இருக்கலாம். இந்த ஏற்றுகொள்ளப்பட்ட அல்லது விலக்கப்பட்ட கூறுகள், அந்த கலாச்சாரத்தின் அடிப்படையில் இயங்கும் சமூகத்தின் பொருளியல் மற்றும் உளவியல் தேவைகளுக்கு ஏற்ப அமைந்திருக்கும்.

ஆக, ஒரு பண்பாடு அல்லது கலாச்சாரத்தின் அடிப்படை இயங்கு முறை, அந்த சமூக உறுப்பினர்களின் பொருளியல், உளவியல் தேவைகளை பொறுத்தே அமையும். ஒரு கலாச்சாரத்தின் பொருளியல் கூறுகளை அறிந்து கொள்ள, அந்த சமூகத்தில் நிகழ்பெறும் வெளிப்படையான நிகழ்வுகளை உணர்ந்து கொள்ளும் குறைந்த பட்ச நுண்ணறிவே போதுமானது. ஆனால் உளவியல் தேவைகளை அவ்வாறு எளிதில் வரையறுத்து கொள்ள முடியாது. தனிமனித அளவிலும், சமூக அளவிலும் உளவியல் தேவைகள் மிக, மிக விரிவானவை. மேலும் இந்த உளவியல் தேவைகள் ஒவ்வொரு கணமும் மாறும் இயல்புடையது. அவ்வாறு மாறிக்கொண்டிருக்கும் உளவியல் தேவைகள், ஒரு குறிப்பிட்ட எல்லையை விட்டு மிக வேகமாக விரியும்போது அல்லது சுருங்கும்போது, அந்த சமூகம் அதன் கட்டுக்கோப்பை இழக்க நேரிடும். கட்டுக்கோப்பை இழந்த சமூகத்தின் அங்கத்தினர்களின் உளவியல் உறவுகள் அல்லது தொடர்புகளின் முரண்பாடுகள் சமன்நிலையை இழந்து அந்த சமூகத்தை அழிவுக்கு எடுத்துச்செல்லும்.

ஆக ஒரு சமூகம் அதன் இருப்பை உறுதி செய்ய, அதன் அங்கத்தினர்களின் உளவியல் வீச்சின் எல்லைகளை வரையறை செய்ய வேண்டியது அவசியமாகிறது. பண்பாடு அல்லது கலாச்சாரம் எனப்படுவது இந்த உளவியல் வீச்சின் வரையறைகளையே. அதாவது, கலாச்சாரம் என்பது சமூகத்தின் அங்கத்தினர் இடையே உள்ள உளவியல் உறவுகள் அல்லது தொடர்புகளின் வரையறை. இந்த உளவியல் வரையறைகள் நம்பிக்கைகள், சடங்குகள், குடும்ப உறவுகள் போன்றவை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, சமூகத்தின் உளவியல் தேவைகள் பொருளியல் கூறுகளின் மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஒரு சமூகத்தின் இருப்பு மற்றும் பாதுகாப்பு கலாச்சாரத்தின் மூலமே நிலை நிறுத்தப்படுகிறது. சமூக அங்கத்தினர்கள் கலாச்சாரத்தின் எல்லைகளை மீறும்போது கலாச்சாரம் அழிவதுடன் அந்த கலாச்சாரத்தால் நிலைநிறுத்தப்பட்ட சமூகமும் அழியத்தொடங்கும். எனவே சமூக அமைப்புக்குள் வாழும் எந்த மனிதனுக்கும், அந்த கலாச்சாரத்தை குறித்த குறைந்த பட்ச அறிவு மிக மிக அவசியம். இது தனி மனித தேவை மட்டும் அல்ல, அந்த சமுதாயத்தின் தேவை – சமுதாயம் அதன் உளவியல் தேவைகளை சமன் நிலையில் வைத்துக்கொள்வதற்காக. ஆனால் கலாச்சாரம் மாறாத ஒன்று அல்ல. காலம் செல்லும்தோறும், காலத்தின் தேவைக்கேற்ப, இயற்கையான சுற்றுச்சூழல் மாறுதலுக்கேற்ப, கலாச்சாரம் விரிவடைந்து கொண்டே செல்லும். அந்த விரிவு, கலாச்சாரத்தின் நிறுவப்பட்டுள்ள வரையறைகளை ஒட்டியே இருக்க முடியும். மேலும் அந்த கலாச்சார விரிவு, அந்த சமூகத்தில் தோன்றும் சிந்தனையாளர்கள் மற்றும் சமூகப்போராளிகள் மூலமும் முன் எடுத்துச் செல்லப்படலாம்.

இங்கு கவனிக்கப்பட வேண்டியது, இந்த சிந்தனையாளர்களும் சமூகப்போராளிகளும், புதிய கலாச்சார விரிவுகளை, ஏற்றக்கொள்ளப்பட்ட கலாச்சார எல்லைகளை சார்ந்தே முன்னெடுத்து செல்ல முடியும். இவர்கள் அந்த கலாச்சாரத்தை குறித்த அதிகபட்ச அறிவும் நுண்ணுணர்வும் உடையவர்களாகவே இருக்க முடியும். ஒரு கலாச்சார கூறுகளை எற்றுக்கொள்ளாமல், அந்த கலாச்சார விரிவுகளை ஒருவர் முன்னெடுத்துச்செல்ல முடியாது. அவ்வாறு செல்ல நேர்ந்தால், அது அந்த கலாச்சார அழிவுக்கு வழிவகுக்கும். இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று, கலாச்சாரம் பல பல தலைமுறைகளால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று. அதன் அழிவையும் ஒரே தலைமுறைக் காலத்தில் காண முடியாது. ஆகவே கலாச்சாரத்தைப் பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாமல் அக்கலாச்சாரத்தின் அழிவை அறிந்து கொள்ள முடியாது. எனவே கலாச்சார போராளிகள் என்னும் அறைகூவல் பெரும்பாலும் எவ்வாறு வெறும் மேலோட்டமாக இருக்குமோ, அதேபோல கலாச்சார அழிவு என்னும் கதறலும் பெரும்பாலும் மேலோட்டமாகவே இருக்கும்.

ஆனால், கலாச்சார விரிவுக்கான தூண்டுதல் எப்போது தோன்றுனாலும், அதற்கான எதிர்மறை இயக்கமும் உடனே தோன்றும். இந்த முரண்பாடுகள் ஒன்றாக சேர்ந்து இயங்கி, அந்த கலாச்சாரத்தை சமன்நிலையில் இருக்கச் செய்யும். ஆகவே, அந்த சமூகமும், கலாச்சார நகர்வை எடுத்துச் செல்லும் சிந்தனையாளர்களும், சமூகப் போராளிகளும் சில அடிப்படை தகுதிகளை கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே, சமூகத்தின் சமன்நிலை குலையாமல் கலாச்சார முன் நகர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த அடிப்படை தகுதி, கலாச்சாரத்தை முன் எடுத்துச் செல்லும் முயற்சியினால் உருவாக்கப்படும் முரண்பாடுகளை நேர்மையுடன் எதிர்கொள்ளும் உறுதியே.

கலாச்சாரம் சமன்நிலையில் இருப்பது என்பது, ஒரு சமூகத்தினுள் நிகழும் பொருளியல் மற்றும் உளவியல் முரண்பாடுகள் அந்த சமூகத்தின் இயல்பு இயக்கத்தை பாதிக்காமல் இருப்பதாகும். கலாச்சார மாற்றங்கள் கூட அந்த சமூகத்தின் இயல்பு இயக்கத்தை பாதிக்காதவரைதான் அந்த கலாச்சார மாற்றத்தை கலாச்சார முன் நகர்வாக கருத முடியும். ஒருவேளை அந்த கலாச்சார மாற்றம், சமூக இயக்கத்தின் இயல்புத் தன்மையை குலைத்தால் அது கலாச்சார முன் நகர்வாக இருக்க முடியாது. மாறாக அது கலாச்சார அழிவின் அறிகுறியாகவே இருக்க முடியும்.

No comments: