Wednesday, November 23, 2016

பசியறிதல்

நேற்றுக் காலை எழுந்த என் ''டீன் ஏஜ்'' மகளுக்கு
அன்னையுடன் சிறு பூசல்.
எப்போதும் போல
குழந்தைமையின் திமிருடன்
உணவுண்ண மாட்டேனென்று ''உம்''மென்று சென்றமர்ந்தாள்.

கையிலிருந்த கண்ணாடி முப்பட்டகத்தில் (Prism)
காலை ஒளியின் விலகலை நோக்கியிருந்தாள்.
காலை சென்றது.
மதிய ஒளியின் செறிவு கூடியது.
அந்தி மயங்கி ஒளியவிந்தது.
அன்னையின் கருணை
பொருத்தமில்லா திமிரில் மோதி சற்றே
திசை மாறியிருந்தது-
காலையில் மிரட்டல்
மதியத்தில் மெல்லிய அழைப்பு
அந்தியில் சிறு கெஞ்சல்.
அவளில் எரிந்தவிந்தது பசி.
எரிந்தவிந்த பசி, துளிர்த்து வாடிய திமிர், மோதி திசைமாறிய கருணை
சேர்ந்து உண்டது சில  பழத் துண்டுகளை.

இன்று காலை எழும்பிய
அவளின், அன்னையின் கொஞ்சல்களில்
நேற்றின் எச்சம் சற்றும் இல்லை.
பார்த்து நின்ற என் புன்னகை
சுவர் கண்ணாடியில் தெரிந்த
என் முக பிம்பத்தில் விரிந்திருந்தது.

No comments: