Monday, May 9, 2016

நுழைவுத் தேர்வுகள்

07-05-2016 அன்று சிறகு இணையப் பத்திரிகையில் பதிப்பிக்கப்பட்டது.

மருத்துவப்படிப்புக்காக, இந்தியா முழுமைக்கும் பொதுவாக ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  தீர்ப்பளித்திருக்கிறது. வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. ஒரே தேர்வு, ஒரே மதிப்பெண். அதன் மூலம் விரும்பும் எந்த மருத்துவக் கல்லூரியிலும் சேர்வதற்கு தகுதி பெறலாம் - GMAT, GATE SAT போன்ற தேர்வுகளைப் போல.  பொறியியலுக்கும் இத்தகைய ஒரு பொதுத் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நிகழ்வதற்கான வாய்ப்புகள் உருவானால், தமிழகத்தில் தரம் தாழ்ந்து செல்லும் கல்வியை மீண்டும் மீட்க முடியலாம்.

அரசியல்வாதிகள் அவர்களின் சுயலாபத்திற்காக மாணவர்களிடையே ஒரு பிரிவினையை கற்பிதம் செய்து, அதை உரக்கச் சொல்வதன் மூலம் உண்மை என நிறுவி இருக்கிறார்கள். எவ்விதக் கருத்துக்களையும் உரக்கச் சொல்வதன் மூலம் பெரும்பாலானவர்களை நம்பும்படி வைத்தால் அவையே உண்மையாகி விடுகிறது. அரசியல்வாதிகளின் அர்த்தமற்ற கூச்சல்கள் இதன் அடிப்படையில்தான் நாள்தோறும் அதிகரிக்கிறது. சுமார் பத்து வருடங்களாக நுழைவுத் தேர்வு குறித்து இத்தகைய அர்தமற்ற கூச்சல்களை எழுப்பி பெரும்பாலானவர்களை நம்பும்படி செய்திருக்கிறார்கள். இந்தக் கூச்சல்களுக்கிடையே, உண்மையென நம்ப வைக்கப்பட்டவற்றின் போதாமையை, தர்க்கமின்மையை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல கல்வியாளர்கள் முயன்றாக வேண்டும். தமிழகத்தின் கல்வியை மீட்டெடுக்க, இது மிகமிக அவசரமானத் தேவை.

நுழைவுத் தேர்வுக்கு எதிராகக் கூறப்படும் காரணம், கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற மாணவர்கள் என்னும் பிரிவினை. கிராமப்புற மாணவர்களால் நுழைவுத் தேர்வுகளில் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியட இயல்வதில்லை என்னும் கருத்தை திரும்பத் திரும்பக் கூறி, அதை உண்மையென மாற்றியிருக்கிறார்கள். ஆனால் எதன் அடிப்படையில் இந்தக் கருத்தாக்கம் கூறப்படுகிறது? கிராமப்புறப் பள்ளிகள் தரமற்றவை என்னும் அர்த்தத்திலா? அவ்வாறெனில் அவற்றின் தரத்தை உயர்த்துவதும், உயர்த்தக் கோருவதும்தானே இயல்பான செயல்களாக இருக்க முடியும்?

நகரத்தை போலிச்செய்ய முயலும் சில கிராமத்து உயர்\நடுத்தர குடும்பங்களில் உள்ள மாணவர்களைத் தவிர்த்து விட்டு ஒரே மதிப்பெண் வாங்கும் ஒரு கிராமத்து மாணவனையும் நகரத்து மாணவனையும் ஒப்பிட்டால், கிராமத்து மாணவன் அதிக நுண்ணறிவுடன் இருப்பான். காரணம் எளிமையானதுதான். சூழலை அவதானிப்பதற்கான வாய்ப்பும் கட்டாயமும் நகரத்து மாணவனை விட கிராமத்து மாணவனுக்கு அதிகமாக இருக்கும். கல்வி என்பது சூழலை அறிந்து கொள்ளும் இயக்கம்தானே!

நுழைவுத்தேர்வுகள் இல்லாமல் ஆகிவிட்ட கடந்த பத்து ஆண்டுகளில், மதிப்பெண்களை வாங்க வைப்பதற்காக மாணவர்களை பயிற்றுவிக்கும் முறை, மாணவர்களுக்கு எஞ்சியிருக்கும் கொஞ்சம் நஞ்சம் நுண்ணறிவையும் இல்லாமல் செய்து விடுகிறது. தற்போது தமிழ்நாட்டில் பொறியியல் படித்து வெளிவரும் மாணவர்களில் 70% பேர் பொறியியல் துறையில் வேலை செய்வதற்கு தகுதியில்லாதவர்களாக வருகிறார்கள் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. மீதி 30% பேர் கூட, அவர்கள் கற்ற கல்வியின் அடிப்படையில் வேலைக்குத் தகுதியுடையவர்கள் ஆகிறார்களா அல்லது பள்ளிக் கல்வி முறையின் நுண்ணறிவை அழிக்கும் இயக்கத்தில் தங்கள் நுண்ணறிவின் சிறுபகுதியையாவது இழக்காமல் பாதுகாத்ததன் மூலம் தகுதி பெறுகிறார்களா? மருத்துவத் துறையில், மருத்துவர்களின் தேவை அதிகமாக இருப்பதால் இத்தகைய புள்ளிவிபரங்கள் இன்னும் வரவில்லை.

பல பள்ளிகளில், பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்புப் பாடங்கள், வகுப்புத் தொடங்கிய பின் சில மாதங்கள் மட்டும்தான் நடத்தப்படும். அதன் பின் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் 12-ம் வகுப்புப் பாடங்களை மாணவர்கள் படிக்க வைக்கப்படுகிறார்கள். அறிவியல் பாடங்களைப் புரிந்துக் கொள்வதற்கு அடிப்படைகளை அறிந்திருப்பது அவசியம். 11-ம் வகுப்பில் அறிவியல் பாடங்களைப் படிக்காமல் செல்லும் மாணவன், 12-ம் வகுப்பில் அறிவியல் பாடங்களை புரிந்து கொள்ள முடியாது. ஆனால் ஒன்றரை வருடங்களில் அவற்றைத் தகவல்களாக பெரும்பாலான மாணவர்களால் மனனம் செய்துவிட முடியலாம். மனனம் செய்விக்கப்படுகிறார்கள். அதாவது மாணவர்களின் நினைவு சக்தியையும், நினைவிலிருந்து எடுத்து வார்த்தை பிறழாமல் விடைத்தாளில் எழுதும் திறனையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு தற்போதைய மருத்துவர்களும் பொறியாளர்களும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். 12-ம் வகுப்பில் அடிப்படைகளைப் பயிலாமல் செல்லும் மாணவர்கள், மேற்படிப்புகளில் எவற்றையும் புரிந்துக் கொள்ள முடியாது. மனனம் செய்யும் பயிற்சியில் நுண்ணுணர்வை முழுவதும் இழக்காத வெகு சில மாணவர்களால் மட்டும்தான், மேற்கல்வியை கல்வியாக அணுக முடியும்.

சரியாக வடிவமைக்கப்படும் நுழைவுத் தேர்வுகள், கற்பவற்றிலிருந்து மாணவர்கள் எவ்வளவு புரிந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சோதிக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். ஏனெனில் மேற்கல்விக்கு பள்ளிகளில் படித்தவைதான் அடிப்படையாக அமைகின்றன. நுழைவுத்தேர்வு இல்லாத நிலையில் புரிந்து கொண்டவைகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. மனனம் செய்யும் திறமை மட்டுமே சோதிக்கப்படுகிறது. மேலும் நினைவு சக்தி குறைவாக உள்ள, ஆனால் நுண்ணறிவு மிகுந்த, கற்றவற்றை எளிதாகப் புரிந்துகொள்ளும் திறன் உள்ள மாணவர்கள், நுழைவுத் தேர்வு இல்லாத நிலையில் முழு மதிப்பெண்கள் வாங்க முடியாமல் மேற்படிப்பு சேரமுடியாமல் இருக்கிறார்கள். பல புகழ் பெற்ற அறிவியலாளர்கள் நினைவாற்றல் குறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் தேர்வுத்தாள்கள் மதிப்பிடும் முறையும் விசித்திரமானது. கேள்விகளுக்கான விடைகள், Key Words எனப்படும் முக்கியமான வார்த்தைகளுடன் தேர்வுத்துறையால், மதிப்பிடும் ஆசிரியர்களுக்கு அச்சிடப்பட்டு வழங்கப்படும். அதுவே மதிப்பெண் வழங்குவதற்கான அளவுகோல். அச்சிடப்பட்டு வழங்கப்பட்டிருக்கும் விடைகளுடன் மாணவர்களின் விடைத்தாள் ஒப்பிடப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. வார்த்தை பிசகாமல், அச்சிடப்பட்டு வழங்கப்பட்டிருக்கும் விடைகளுடன் மாணவர்கள் எழுதியிருக்கும் விடைகள் ஒத்திருக்குமானால் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும். சரியான விடைகளை வேறு வாக்கியங்களில், வேறு வார்த்தைகளில், வேறு விதமாக எழுதியிருந்தால், சரியான விடையாக இருந்தாலும் மதிப்பெண்கள் குறைக்கப்படும். இது விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறக்கேட்ட தகவல். மற்ற மாநிலங்களில் இவ்வாறா என்பது தெரியவில்லை.

இங்கு சோதிக்கப்படுவது மாணவர்களின் அறிவுத்திறனா அல்லது நினைவுத்திறனா? மேற்கல்விக்குத் தேவை அறிவுத்திறனா அல்லது நினைவுத்திறனா? கிராமப்புற மாணவர்களுக்கு அறிவுத் திறன் குறைவு என்று எவ்வாறு இவர்கள் முடிவு செய்தார்கள்?. கிராமப்புற மாணவர்கள் என்று இவர்கள் கூறுவது உண்மையில் கிராமப்புற மாணவர்களையா இல்லை அரசுப்பள்ளி மாணவர்களையா? அரசுப்பள்ளி மாணவர்களை என்றால், அரசுப்பள்ளிகள் தரமற்றவை எனக்கூறுகிறார்களா?

பொது நுழைவத்தேர்வு நடத்தினால் முதன்மையாக எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினை மொழி. கேள்விகள் பிராந்திய மொழிகளிலும் இருந்தாக வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பிராந்திய மொழிகளில் கல்வி கற்பவர்கள் இழப்புக்கு ஆளாகலாம். இது பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லை. நாம் சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுத்து அனுப்பிய நமது பிரதிநிதிகளால் எளிதாக எதிர்கொள்ள முடியும் பிரச்சினை.

அடுத்ததாக கூறப்படுவது, நுழைவுத்தேர்வுகள் சி.பி.எஸ்.இ.  தரத்தில் இருக்கும். வெவ்வேறு மாநிலங்களில் கல்வியின் தரம் வெவ்வேறாக இருப்பதால் அனைத்து மாணவர்களையும் ஒரே அளவீட்டில் அளிவிடுவது சரியாக இருக்காது என்பது. இதுவும் பெரிய பிரச்சினை இல்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் ஒரு மாநிலத்தில் உள்ள பெரும்பான்மையான மேற்படிப்புக்கான இடங்கள் அந்த மாநிலத்து மாணவர்களுக்கே ஒதுக்கப்பட்டிருக்கும். எனவே வெளி மாநிலங்களிலிருந்து குறிப்பிட்ட ஒரு மாநிலத்திற்கு மாணவர்களால் வர முடியாது. ஆனால் அதே மாநிலத்தில்  சி.பி.எஸ்.இ.  பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் மற்றவர்களை விட முன்னே வரலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது உயர்நிலைப் பள்ளிப் படிப்புகளில் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மிகக்குறைவாகவே உள்ளன. எனவே அது உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் சி.பி.எஸ்.இ. உயர்நிலைப்பள்ளிகள் தமிழகமெங்கும் உடனே முளைக்கலாம். தமிழக உயர்நிலைப் பள்ளியின் கல்வித் தரத்தை சி.பி.எஸ்.இ. க்கு இணையாகவோ அதைவிட சிறந்ததாகவோ உயர்த்துவதன் மூலம் இந்தப்பிரச்சினையையும் எதிர்கொள்ளலாம்.

கல்வித்தரத்தை உயர்த்தியாக வேண்டும். வேறு வழியில்லை. எனவே ஆசிரியர்களின் தரத்தையும் உயர்த்தியாக வேண்டும். இதிலும் சமரசத்திற்கு இடமில்லை. இன்று நுழைவுத்தேர்வின் மூலம் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கிறார்கள் என சத்தம் எழுப்புவது அரசியல்வாதிகளும் ஆசிரியர்களும் மட்டுமே. ஆசிரியர்களும் இங்கு இருப்பதால் இந்தக் கூச்சல் கருத்தியல் தளங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மக்கள் அவர்கள் கூச்சலிடுவதை நம்ப ஆரம்பிக்கிறார்கள். யார் அவர்கள்? மாற்றத்தை ஒரு பெரிய தரப்பிற்குள் கொண்டு வரவேண்டிய, அந்தத் தரப்புடன் மோத அச்சப்படுகின்ற அரசியல்வாதிகளாகிய ஆட்சியாளர்களும், அந்தப் பெரிய தரப்பாகிய, மாறுதலுக்குள்ளாக வேண்டிய ஆசிரியர்களும்தான்.


பொதுமக்களாகிய நாம், நம் சந்ததிகளின் திறனை இந்த இரு தரப்புகளின் சுயலாபத்திற்காக, அவர்களுடன் சேர்ந்து கொல்ல வேண்டுமா? அல்லது நமக்காகவே அந்த இடத்தில் இருக்கும் அரசியல்வாதிகளிடமும் ஆசிரியர்களிடமும், எங்களுக்குத் தேவை உங்கள் திசைதிருப்பும் கூச்சல்களும் எங்கள் சந்ததியினர் மேல் தொடர்ந்து செய்யப்படும் அறிவொழிப்பும் அல்ல, எங்கள் சந்ததியினரின் அறிவொளிதான் என உரக்கச் சொல்ல வேண்டுமா?

blog.change@gmail.com

Wednesday, May 4, 2016

மாநில மின்வாரியங்களின் சுமை

28-04-2014 அன்று சொல்வனம் இணையப் பத்திரிகையில் பதிப்பிக்கப்பட்டுது.

மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களின் மின்துறை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக தமிழக முதல்வரை நெருங்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் அதற்கான தமிழக அரசின் (தொடர்பில்லாத) பதில் குற்றச்சாட்டுகளும் சமீபத்திய அதிரடிகள். மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டை புரிந்துக்கொள்ள,  மாநில மின்வாரியங்களின்\மின் பகிர்மான நிறுவனங்களின் தற்போதையை நிலையை சற்று தெரிந்திருக்க வேண்டும்.

மின்சாரம் இதுவரை சென்று சேர்ந்துள்ள ஒவ்வொருவருக்கும் அது மிக அடிப்படையானத் தேவையாகி விட்டது. பெரும்பாலான அன்றாடச் செயல்களுக்குத் தேவையான கருவிகள், மனித உழைப்பை பெருமளவுக்குக் குறைக்கும் மின்சாரக் கருவிகளாகிவிட்ட நிலையில், மனித உடலில் ரத்த ஓட்டம் போல வீடுகளில் பதிக்கப்பட்டிருக்கும் கம்பிகளில் மின் ஓட்டமும் இன்றியமையாததாகி விட்டது. மின் ஓட்டம் அளவின்றி தடைப்பட்டால் அரசாங்கங்களையே மாற்றியமைக்க வைத்துவிடும். இந்த நிலையில் அதை சூழ்ச்சியாகக் கையாள்வதன் மூலம் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் அரசியல்வாதிகளின் முயற்சியால் இன்று பெரும்பான்மையான மாநிலங்களின் மின்வாரியங்கள்\மின்பகிர்மான நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதுடன் மிகப்பெரிய கடன் சுமையையும் சேர்த்து வைத்துள்ளன. மின்வாரியங்கள் மாநில அரசின் நிறுவனங்கள். எனவே அவற்றின் கடன்கள் பண நுட்பங்களின் படி (Technicaly) மாநில அரசின் கடன்களுடன் சேராது. அவை நிறுவனங்களின் கடன்கள்.

2015-ம் வருடம் செப்டம்பர் மாத கணக்குப் படி 4.5 லட்சம் கோடிகள் கடன் சுமையை இந்த நிறுவனங்கள் மொத்தமாக வைத்துள்ளன. இதில் 70%, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களின் மின்வாரியங்களால் சுமக்கப்படுகின்றன. வாக்கு வங்கி மின்சார அரசியல், அரசியல் சார்புள்ள நிர்வாகங்கள், திறமையற்ற நிர்வாகிகள், தொழில்நுட்பத்தில் பின்தங்கியிருத்தல் போன்றவையே இத்தகையச் சுமைக்கு காரணிகளாக இருக்க முடியும். இது வெறும் நிறுவனங்களின் சுமை மட்டும் இல்லை. நம் ஒவ்வொருவரின் நிதிச் சுமை. அதைக் குறைக்க ஆவன செய்வது ஆட்சியாளர்களின் தவிர்க்க முடியாத கடமை. நம் மேல் சுமத்தப்பட்டிருக்கும் இந்தச் சுமையை அறிந்திருப்பதன் மூலம், ஆட்சியளர்களை அவர்களின் கடமையை நோக்கி திசைத்திரும்ப வைக்கலாம்.

மின்சார வாரியங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்கள். பொருளாதார இயக்கங்களுக்குத் தேவையான சக்தியின் பெரும்பகுதி மின்வாரியங்கள் வழங்கும் மின்சாரத்திலிருந்துதான் பெறப்படுகிறது. தடையில்லாத மின்சாரம் எவ்வகையிலும் தவிர்க்க முடியாமல் தேவைப்படும் தொடர் இயக்க (Continuous Processing) தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை, தேவையான மின்சக்தியை தாமே உற்பத்திச் செய்தாலும் பிற தொழிற்சாலைகளும் நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் முழுவதும் மின்வாரியங்கள் வழங்கும் மின்சாரத்தை நம்பித்தான் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றன. எனவே குடிமக்களின் அன்றாடத் தேவைகளுக்கான மின்சக்தி மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரம் இயங்குவதற்கும் மின்வாரியங்களின் நிலையான இயக்கம் இன்றியமையாதது. எந்த ஒரு நிறுவனமும் பொருளாதார இழப்பிலும் கடன் சுமையின் அழுத்தத்திலும் தொடர்ந்து இருந்து வந்தால், அது அரசாங்கத்தின் நிறுவனமாக இருந்தாலும், வெகுகாலம் இயங்க முடியாது. மேலும் அவற்றிற்குக் கடன் வழங்கியிருக்கும் வங்கிகளும் லாப நோக்கில் இயங்கும் நிறுவனங்களே. கடனையும் வட்டியையும் திருப்பிச் செலுத்த இயலாத நிறுவனங்கள் வங்கித் தொழிலையும் அழிவுக்குள்ளாக்குகின்றன. கடன்கொடுத்த வங்கிகளும் அரசாங்க நிறுவனங்களாக இருந்தாலும் அவற்றுக்கான விதிகளின்படி, கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எல்லையில்லாமல் மீண்டும் கடன்வழங்கிக் கொண்டிருக்க முடியாது. ஆக மின்வாரியங்கள் அவற்றின் கடன் சுமையிலிருந்து மீண்டு தங்கள் இயக்கத்தை நிலைப்படுத்த முடிந்தால்தான் சாமானிய மனிதர்களின் அடிப்படை நுகர்வுகளும் நாட்டின் பொருளாதாரமும் தடையின்றி இயங்க முடியும்.

இந்தப் பின்புலத்தில்தான் மத்திய மின்துறை அமைச்சரின் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது. மின்வாரியங்கள் மாநில அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்து விடாமல் எடுத்துச் செல்லும் பொறுப்பு மத்திய அரசினுடையது. எனவே மின்வாரியங்கள் தொடர்ந்து ஆரோக்கியத்துடன் இயங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டியிருக்கிறது.
2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அப்போதைய மத்திய அரசு "மாநில மின்பகிர்மான நிறுவனங்களின் நிதி மறு கட்டமைப்புத் திட்டம்'' (Scheme for Financial Restructuring of state Distribution Companies) என்னும் திட்டத்தைக் கொண்டு வந்தது. இதன் படி மின் வாரியங்களின் குறுகிய கால கடன்களில் 50% வரையான கடன்களை மாநில அரசுகள் அவற்றின் கடன்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். மாநில அரசுகளின் கடன் பத்திரங்களை கடன் கொடுத்திருக்கும் வங்கிகளுக்கு அளிப்பதன் மூலம், இந்த கடன் மாற்றம் செய்யப்படும். மீதி 50% குறுகிய கால கடன்கள், நீண்ட கால கடன்களாக, எனவே குறைவான வட்டியுடன் மாற்றயமைக்கப்படும். இந்த மாற்றியமைத்தலுக்கு, மின் வாரியங்கள் சார்பாக மாநில அரசுகள் கடன் உறுதி (Guarantee) வழங்க வேண்டும். மாநில அரசுகள் உச்ச வரம்பான மின்வாரியங்களின் 50% குறுகியகால கடன்களை முழுவதுமாக ஏற்றுக் கொண்டு சில நிபந்தனைகளையும் பூர்த்திச் செய்தால், அதில் 25% தொகையை ஊக்கத் தொகையாக மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கும்.

மாநில அரசுகள் இந்த கடனை ஏற்றுக்கொள்ளும்போது மாநிலங்களின் நிதி நிலமையையும் கணக்கில் கொள்ளப்படும். மாநிலங்கள் அவற்றின் மொத்த உற்பத்தியில் (GDP) 25% அளவுக்குத்தான் அதிகப்பட்சமாக கடன் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் வருடாந்திர வரவு செலவுப் பற்றாக்குறை மொத்த உற்பத்தியில் 3% அளவுக்குள் இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் 50% கடனை  மூன்று வருடங்களாக மாநில அரசின் கணக்கில் ஏற்றுக் கொள்ளலாம். இவ்வாறு நிறுவனங்களின் கடன்கள், கடன் பத்திரங்களாகவும் நீண்ட கால கடன்களாகவும் மாற்றப்படும்போது, வட்டி விகிதம் பெருமளவு குறைக்கப்படும். மேலும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்படுகிறது. அதாவது மின் நிறுவனங்களுக்கும் மாநில அரசாங்கங்களுக்கும் வட்டிச் சலுகையுடன் கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம் வங்கிகள் வராக்கடன்கள் என்னும் நிலையில் மின்வாரியங்கள் மேல் நடவடிக்கை எடுப்பது தவிர்க்கப்படுகிறது. கடன் கொடுத்த வங்கிகள், இந்தக்கடன்களை வராக்கடன்கள் என்று கணக்கில் ஏற்றி, வங்கிகளின் நஷ்டமாக வரவுச்செலவு கணக்கில் (Balance sheet) காண்பித்து வங்கியின் பங்குதாரர்களை இழப்புக்குள்ளாக்குவதும் தவிர்க்கப்படுகிறது.

மின்வாரியங்கள் இந்தச் சலுகையை 25% ஊக்கத்தொகையுடன் பெறுவதற்கு, மத்திய அரசு விதிக்கும் சில நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றில் சில....

·         சராசரி வழங்கும் செலவுக்கும் (Average Cost of Supply - ACS) சராசரி பெற்றுக்கொள்ளும் விலைக்கும் (Average Realised Rate - ARR) ஆன இடைவெளியை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மின்வாரியங்கள் இல்லாமல் செய்வதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
·         செயல்பாட்டு இழப்புக்களை (Operational Losses) ஈடுகட்டுவதற்காக மாநில அரசுகளும் மின்வாரியங்களும் மீண்டும் குறுகியக்காலக் கடன்களை வாங்கக் கூடாது.
·         மின்பகிர்மானத்தில் தனியார் நிறுவனங்களையும் ஈடுபடுத்துவதற்கான திட்டங்களை ஒருவருடத்திற்குள் மத்திய அரசின் அனுமதிக்காக அளிக்க வேண்டும்.
·         ACS மற்றும் ARR க்கான இடைவெளியை குறைப்பதற்காக, வருடாவருடம் மின் கட்டணங்களை மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.
·         விவசாயத்திற்கான மின்சார மானியம், அளவிடும் கருவிகள் மூலம் அளவிட்டு, மாநில அரசுகள் மின்சார வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.

இந்த நிபந்தனைகள் அனைத்தும் மாநில அரசுகளை அமைத்திருக்கும் அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கிகளை இல்லாமல் செய்யும் நிபந்தனைகள். எனவே எந்த மாநிலமும் இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டிருக்க சாத்தியம் இல்லை. எத்தனை மாநிலங்களின் மின்வாரியங்கள் மத்தய அரசு அறிவித்த இந்த நிதி நிலையைச் சரி செய்துக் கொள்ளும் வாய்ப்பைப்  பயன்படுத்தின என்பதற்கானத் தரவுகள் இணையத்தில் கிடைக்கவில்லை.

ஆனால் தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்கள், மத்திய அரசு வழங்குவதாகக் கூறியிருந்த 25% ஊக்கத்தொகையும் அதற்கான நிபந்தனைகளும் தவிர மற்ற அம்சங்களை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஏப்பரல்-2012 மற்றும் டிசம்பர்-2014 என இருமுறை மின் கட்டணங்கள் தமிழ்நாட்டில் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.  தமிழ்நாடு இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியிருக்கிறது என்பதற்கு மின்கட்டண மாறுதல்களையே சான்றாக எடுத்துக் கொள்ளலாம்\வேண்டியிருக்கிறது. இதைத் தவிர இன்னொரு சுட்டிக்காட்டியையும் (Indicator) கவனத்தில் கொள்ளலாம். 2011-12 ம் ஆண்டு வரையிலும் மின்வாரியங்களின் வருடாந்திர இழப்பு தொடர்ந்து அதிகரித்து, அந்த ஆண்டில் 76877 கோடி ரூபாயாக இருந்துள்ளது. பின்னர் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. நவம்பர் 2015 க்கு முன் செய்யப்பட்ட கணிப்பின் படி, 2014-15 ம் ஆண்டின் மொத்த இழப்பு 60000 கோடி ரூபாயாக இருக்கும்.

நவம்பர் 2015-ல் தற்போதைய மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 'உதே' (UDAY - Ujwal DISCOM Assurance Yojana), முந்தையத் திட்டத்தின் இயல்பான நீட்சியாகவும், விரிவாக்கப்பட்டதாகவும் உள்ளது. உதே என்னும் சமஸ்கிருத வார்த்தைக்கு பிரகாசமான எதிர்காலம் என்று பொருள் கொள்ளப்படுகிறது - மின் பகிர்மான நிறுவனங்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கானத் திட்டம்.

  • ·   உதே திட்டத்தின் படி, மின் வாரியங்களின் மொத்தக் கடன்களில் 75% அளவை, இரண்டுத் தவணைகளாக மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • ·         இவ்வாறு மாநில அரசாங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்படும் கடன்கள், முதல் இரண்டு வருடங்களில் மொத்த உற்பத்தியில் பட்ஜட் பற்றாக்குறையின்  அதிகப்பட்ச அளவான 3% என்னும் கணக்கீட்டில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது.
  • ·         கடன் வழங்கிய வங்கிகளுக்கு கடன் பத்திரங்களை மாநில அரசு நேரடியாக வழங்கும்.
  • ·         மாநில அரசு ஏற்றுக்கொள்ளாத மின் பகிர்மான நிறுவனங்களின் கடன்கள், வட்டி குறைக்கப்பட்ட மாநில அரசுகளால் உறுதி செய்யப்பட்ட (Guarenteed) மின் வாரியங்களின் கடன் பத்திரங்களாக வங்கிகளுக்கு அளிக்கப்படும்.
  • ·         மின்வாரியங்கள் எதிர்காலங்களில் எதிர்கொள்ளும் வணிக இழப்புக்களை, மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
  • ·         இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்வதோ தவிர்ப்பதோ மாநில அரசின் சுய முடிவு
  • ·         ஏற்றுக் கொள்ளும் மாநில அரசுகளுக்கு, வேறு சில திட்டங்களின் மூலமாக மின்வாரியங்களை வலிமைப்படுத்துவதற்கான பண உதவிகள் மத்திய அரசால் செய்யப்படும்.
  • ·         இவ்வாறு செய்யப்படும் உதவிகள், மாநில அரசும் மின்வாரியங்களும் ஏற்றுக் கொண்ட நிபந்தனைகளை ஒப்புகொண்ட காலவரையறைக்குள் நிறைவேற்றுவதன் அடிப்படையில் இருக்கும்.
  • ·         அவ்வாறு நிறைவேற்றாத மாநில அரசுகளிடமிருந்து கொடுக்கப்பட்ட உதவி\ஊக்க தொகைகள் திரும்பப் பெறப்படும்.

முன்பு அறிவிக்கப்பட்ட திட்டத்திற்கும் தற்போதைய உதே திட்டத்திற்குமான முக்கியமான வேறுபாடு; முந்தையத் திட்டத்தில் குறுகிய கால கடன்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது. தற்போதைய திட்டத்தில் மின்வாரியங்களின் அனைத்துக் கடன்களும் கணக்கில் கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் முந்தையத் திட்டத்தில் எதிர்கால இழப்புக்களைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை. தற்போதைய திட்டத்தின் படி மின்வாரியங்களின் எதிர்கால இழப்புக்கள் மாநில அரசின் கணக்கில் வரும்.

மின் பகிர்மானத்தில் முக்கியமான ஒரு அளவீடு சராசரி தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பு (Average Technical & Commercial Loss - AT & C). இதில் தொழில் நுட்ப இழப்பு என்பது, கம்பிகளில் மின்சாரத்தை தொலை தூரங்களுக்கு எடுத்துச் செல்லும்போது ஏற்படும் இழப்புக்கள், மின்சாரத்தை உயர் அழுத்தமாகவும் தாழ் அழுத்தமாகவும் மாற்றும்போது, மாற்றிகளில் (Transformers) ஏற்படும் இழப்புகள் போன்ற தொழில்நுட்பக் காரணங்களால் ஏற்படுபவை. வணிக இழப்பு என்பது முறையற்ற கணக்கீடுகள், மின் திருட்டு போன்ற காரணிகளால் ஏற்படுபவை. இவற்றில் தொழில் நுட்ப இழப்பு இருந்து கொண்டேதான் இருக்கும். சிறப்பான உபகரணங்களை உபயோகிப்பதன் மூலம் சற்றுக் குறைக்கலாம். ஆனால் வணிக இழப்பை முழுவதும் இல்லாமல் செய்து விடலாம்.
இதற்குத் தேவை மின் பகிர்மானத்தின் ஒவ்வொரு நிலையிலும் மின்சாரத்தை அளவிடுவது. உதாரணமாக ஒவ்வொரு மின்மாற்றியிலும் அது வழங்கும் மின்சாரத்தை அளவிட்டால், அந்த மின்மாற்றியிலிருந்து செல்லும் மின்சாரத்தில் எவ்வளவு இழப்பு வருகிறது என்பதை அறியலாம். குறிப்பிட்ட இடங்களில் அதிக இழப்பு ஏற்பட்டால், அந்த இடங்களில் இழப்புக்கான காரணங்களைக் கண்டறிந்து நிவர்த்திச் செய்யலாம். இதன் மூலம் மின்திருட்டுக்கள் நடைபெறும் இடங்களை எளிதில் அடையாளம் காணமுடியும். ஒவ்வொரு பகிர்மான மின்மாற்றிகளிலும் குறிப்பிட்டக் காலக்கெடுவுக்குள் அளவிடும் கருவிகளைப் பொருத்த வேண்டும் என்பதும் உதே திட்டத்தின் ஒரு நிபந்தனை. உதே திட்டத்தின் முக்கியமான ஒரு நோக்கம், மின் இழப்பீட்டை 15% அளவிற்கு குறைப்பது. தற்போது தமிழகத்தின் AT & C  இழப்பு 22% ஆக உள்ளது. இதுவே இந்தியா முழுமைக்குமான சராசரி இழப்பு. AT & C இழப்பு அருணாச்சல பிரதேசத்தில் அதிகப்பட்சமாக 68% ம் கோவாவில் குறைந்தப்பட்சமாக 11% ம் உள்ளது.

இது தவிர உதே திட்டத்தில் மின் உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கான, உற்பத்தியைப் பெருக்குவதற்கான, மின் பயன்பாட்டின் திறனை (Efficiency) அதிகரிப்பதற்கான பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை இத்திட்டத்தை செயல்படுத்தும் முறையில் இது வெறும் திட்டம் மட்டும் அல்ல ஒரு பயணமுமாக இருப்பது தெரிகிறது. இவற்றால் குறிப்பிடத்தக்க பயன்களையும் அடைந்துள்ளது. இந்த பயன்கள் மாநில அரசுகளின் உற்பத்தி நிறுவனங்களுக்கும் முழுமையாகச் சென்று சேர அவை உதே திட்டத்தில் சேர்வது நிபந்தனையாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆந்திரா, ஜார்க்கன்ட், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகன்ட், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார், மஹாராஷ்ட்ரா மற்றும் ஒடிசா ஆகிய பதினைந்து மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து விட்டன அல்லது சேர்வதாக உறுதி அளித்து விட்டன. கவனிக்கவும் - தமிழகத்துடன் சேர்ந்து மிக அதிகமாக கடன்சுமையை வைத்திருக்கும் மற்ற மூன்று மாநிலங்களும் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ளன.

மத்திய மின்துறை அமைச்சரால் தமிழக அரசாங்கத்தில் முடிவெடுக்கும் அதிகாரமையத்தைத் தொடர்புக் கொள்ள முடியவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் சேர்வதற்கான கெடு முடிவடைந்து விட்டது அல்லது முடிவடையும் தருவாயில் உள்ளது. ஏனெனில் இது குறிப்பிட்டக் காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டியத் திட்டம். இதில் சேர்வதும் சேராததும் மாநில அரசின் தனிப்பட்ட விருப்பம்.

ஆனால் சேராமல் இருந்தால், அதன்வழியாக அடையப்போகும் எதிர்மறை விளைவுகள் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் பின்தங்க வைக்கலாம். எந்தத் துறையின் வளர்ச்சிக்கும் தடையற்ற சக்தி, அதிலும் குறிப்பாக தடையற்ற மின் சக்தி மிகவும் அவசியம். இந்தத் திட்டத்தில் சேராததன் மூலம் மின்வாரியங்கள் வங்கிகளிடமிருந்து பெற்றிருக்கும் கடன்களை திருப்பிச் செலுத்த இயலாமல் இருந்தால் அவை வராக்கடன்கள் எனப்பட்டியல் இடப்படும். தமிழக மின்வாரியத்திதன் தற்போதைய நிதிநிலையில் கடன்களைத் திருப்பிச் செலுத்து வாய்ப்பில்லை. மாநில அரசின் நிதி நிலையும் மின்வாரியத்துக்கு உதவும் வகையில் சாதகமாக இல்லை. இதன் மூலம் Credit Rating நிறுவனங்கள் தமிழக மின்வாரியத்தின் கடன் பெறும் தகுதியை இல்லாமல் செய்து விடும். எனவே எதிர்காலத்தில் மின்வாரியம் எங்கிருந்தும் கடன் பெற முடியாது. அவற்றின் முழு இழப்புக்களும் செலவுகளும் தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். எனில் தமிழக அரசின் பற்றாக்குறை அளவு அனுமதிக்கப்பட்டிருக்கும் மொத்த உற்பத்தியின் 3% அளவிற்கு அதிகமாகச் செல்லக்கூடும். இதை சமாளிக்க தமிழக அரசு எல்லா வளர்ச்சித் திட்டங்களையும், ஒருவேளை இலவசத் திட்டங்களைக் கூட கிடப்பில் போட வேண்டியிருக்கும். மறுபுறத்தில் பலவீனமடைந்த மின்வாரியத்தினால் தொழில் துறை பாதிப்புக்குள்ளாகும். மொத்த உற்பத்தி குறையும். பற்றாக்குறை அளவு இன்னொரு திசையிலிருந்து 3% அளவிற்கு அதிகரிக்கும்.


தமிழக அரசு "உதவி செய்யுங்கள்" என மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதலாம். உதவி செய்யும்போது ஏற்றுக் கொள்ளாத மாநில அரசுக்கு எதுவும் செய்ய முடியாத கையறு நிலைக்கு மத்திய அரசு தள்ளப்படலாம். தமிழகத்தின் நிதிப் பிரச்சினைகள் மத்திய அரசு புறந்தள்ளுகிறது, தமிழகத்தை இந்தியா புறக்கணிக்கிறது என மேடைகளில் முழங்கலாம். அதன் தொடர்ச்சியாக 'தமிழ் தேசியம்' என்னும் கருத்தை உணர்ச்சிக்கரமாக நம் மேல் திணிக்கலாம். நாமும் அதை பின்பாட்டாகப் பாடலாம்! இன்று நம் தேவையை உறுதியாக அரசாங்கங்களிடம் நம்மால் தெரிவிக்க முடியாவிட்டால், இவையெல்லாம் நம் எதிர்கால சாத்தியங்களில் சில!

blog.change@gmail.com