Sunday, April 10, 2016

பொருளாதார விளையாடல்கள்

சிறகு இணையப் பத்திரிகையில் 02-04-2016 மற்றும் 09-04-16 ஆகிய நாட்களில் பதிப்பிக்கப்பட்டது.   
                                 
                                           (1)
லகை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக பொருளதாரத் துறையின் கைக்கு சென்று கொண்டிருக்கும் காலம் இது. மிக சமீபத்திய எதிர்காலத்தில் அதிகாரம் முற்றிலும் பொருளாதாரத்துறையை சார்ந்தே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எவ்வாறு அடையப்பட்டிருந்தாலும், அது எப்போதுமே பொருளாதாரத்தை சார்ந்தே இருந்திருக்கிறது. ஆனால் மெல்ல மெல்ல அதன் தொடக்கமும் செயலியக்கமும் முடிவும் பொருளாதாரத்தை சார்ந்தே இருக்கும் நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனில் அதன் விளைவுகள் மனித சமூகத்திற்கு முற்றிலும் சாதகமாக இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

பொருளாதாரத்தின் மறுபெயர் நுகர்வு. பூமியில் இருக்கும் இயற்கை வளங்களை மனித சமூகம் உபயோகப்படுத்தி, அதைக் கழிவாக மீண்டும் பூமிக்கு அளிப்பது நுகர்வு. உலகத்தில் உள்ள அனைத்து உயிருள்ளவையும் உயிரற்றவையும், தொடர்ந்து மற்றொன்றை நுகர்ந்து தானும் மாறி நுகர்ந்தவற்றையும் பிறிதொன்றாக மாற்றி வேறொன்றின் நுகர்வுக்குத் திரும்ப அளித்துக் கொண்டே இருக்கின்றன. இது ஒரு இடைவிடாத இயக்கம். மனிதர்கள் இன்று உருவாக்கும் பெரும்பான்மையான கழிவுகள் பிற உயிரினங்களால் நுகரமுடியாதவையாக உள்ளதால் பூமி மனிதக் கழிவுகளின் குப்பைக்கூடமாக மாறிவருகிறது. மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்களுக்கெல்லாம் உணவே அவற்றின் நுகர்வின் பெரும் பகுதி. உயிரில்லாதவை பிற உயிரினங்களாலோ இயற்கையின் விசைகளாலோ நுகரப்படுகிறது. நுகரப்படுவதன் எதிர் விளைவாக அவை நுகரவும் செய்கின்றன. இந்தத் தொடர் இயக்கங்களின் மூலமே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

உதாரணமாக பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் பிற உயிரினங்களையோ அல்லது பிற உயிரினங்களால் இயற்கையாக உருவாக்கப்பட்டவற்றையோதான் உணவாக நுகர்கின்றன. அதேபோல ஒவ்வோரு உயிரினமும் உருவாக்கும் கழிவுகளை நுகர்வதற்கு வேறு ஒரு உயிரினம் காத்துக் கொண்டிருக்கும். உயிரில்லாத ஜடப் பொருளான பாறை மழையையும் ஒளியையும் வெப்பத்தையும் காற்றையும் பெற்று, அவற்றால் மாற்றமடைந்து தாதுக்களாக கரைந்து சென்று தாவர இனங்களுக்கு உணவாகிறது. மண்ணாக மாறி தாவரங்கள் வாழும் இடமாகிறது. இயற்கையில் உள்ள ஒவ்வொன்றும் பிறிதொன்றை நுகர்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில், பிறிதொன்றுக்காக தன்னை அழித்து அளித்துக்கொண்டும் இருக்கும்.

மனிதர்களும் மிக சமீப காலம்வரை, கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகளுக்கு முன்புவரை, இந்தத் தொடர்சங்கிலியில் ஒரு கண்ணியாகவே இருந்துவந்திருக்கிறார்கள். தாங்களும் அலகிலா இயற்கை இயக்கங்களில் சிறு கண்ணி என்பதை அறிந்து அதற்கேற்ற முறையில் தங்கள் வாழ்வின் இயல்பை அமைத்திருந்தார்கள். அந்த நாட்களில் வேறு வழியும் இல்லை. உயிர்ச் சங்கிலியை பொருட்படுத்தாது வாழும் தொழில்நுட்பங்கள் அவர்களிடம் இல்லாதிருந்திருக்கலாம். அல்லது பரவலாக்கப்படாமல் இருந்திருக்கலாம்.

சில ஆ       யிரம் வருடங்களுக்கு முன்பே உயிர்ப் பரிணாம வளர்ச்சியின் உச்சக்கட்ட சாத்தியமான உணர்வுநிலைகளை மனிதர்கள் அடைந்திருக்கிறார்கள். ரசவாதம் போன்ற தொழில்நுட்பங்கள், குறைந்தப்பட்சம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனித சமூகத்தில் இருந்திருக்கின்றன. மறைஞானத் தளத்தில் (Mystical Dimension) பல தொழில்நுட்பங்கள் (Technologies) இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவை அனைத்தும் தகுதியுடையவர்களால் மட்டுமே அடைய முடிந்தது. இவற்றை அறிந்துக்கொள்வதற்கு அறஉணர்வு அடிப்படையான தகுதியாக இருந்ததை இன்று நாம் கதைகளாக அறியும் வரலாற்றிலிருந்து ஊகிக்கலாம். நம் மன இயல்பு அவ்வாறு இருந்தால், இன்றைய அரசியல் நிலைகளுக்கேற்ற ஊகங்களுக்கும் நாம் வரவும் நேரிடலாம்! ஒன்றும் செய்வதற்கில்லை! அக்காலங்களில் அடைந்த அறிவியல் அறிவு, சமூகங்களை அழிக்கும் ஆயுதமாக எப்போதும் மாறவில்லை. விதிவிலக்குகள் எங்கும் சாத்தியமே! அத்தகைய விதிவிலக்குகள் சமூகங்களை அழிக்கும் அளவுக்கு வீரியத்தைப் பெற முடியவில்லை. எனவே மனிதர்கள் உலக இயக்கமாகிய வலைப்பின்னலில், தொடர்ந்து ஒரு கண்ணியாக இருந்து வந்திருக்கிறார்கள்.

சில நூற்றாண்டுகளுக்கு முன் அறிதலின் எல்லைகள் விரிய ஆரம்பித்தன. குறிப்பாக மேலை நாடுகளில். அதுவும் பௌதீக அறிவியலில். இந்த அறிதல்களை அந்தக் காலத்து ஒற்றைப்படையான மத நம்பிக்கைகள் தடைச் செய்ய முயன்றன. மதங்கள் உண்மையில் மனிதனில் உன்னதங்களை உருவாக்கி நிலை நிறுத்த வேண்டியவை. அறிதல் என்பது மனிதனின் உன்னதங்களில் ஒன்று. மதங்கள் அந்த அறிதலை தடை செய்ய முயன்றதன் விளைவுதான், அறிவியல் மதங்கள் போதிக்கும் உன்னதங்களை உதறிச் செல்ல வைத்து விட்டதாகத் தோன்றுகிறது.

இதில் ஆச்சரியப்படத்தக்க ஒன்று; மேலை நாடுகளில், மதங்களால் மனிதனின் அறிதல் முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்த அதே நேரத்தில் கீழை நாடுகளில் தகுதியுடைவர்களுக்கு மட்டுமே அறிதலுக்கான சாத்தியங்கள் அளிக்கப்பட்டு அறிதல் என்னும் இயக்கம் இயங்கிக்கொண்டிருக்கவும் செய்தது.  மேலை நாடுகளில் அறிதலுக்கான தடைகளை மதங்களிலிருந்து விலக்கிய பிறகுதான் அங்கு அறிவியல் வளரத்தொடங்கி பின்னர் தொழில்நுட்பமாக அனைவரையும் அடைந்தது. அந்தத் தொழில் நுட்பம் கீழை நாடுகளை  அடைந்தபோது, இங்கு  இருந்த அறிவியல் திரைக்குப் பின் சென்று மேலை நாடுகளிலிருந்து வருவது மட்டும்தான் அறிவியல் என்னும் மாயை உருவாகியது.

கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் உலகில் தொழில் புரட்சி தொடங்கியது. அது மனிதன் அடைந்த பௌதீக அறிவை தொழில்நுட்பமாக மாற்றி அவற்றை சமூக இயக்கங்களுக்காக, மனிதத் தேவைகளை எளிதில் பெறுவதற்கான, எனவே செயல்களை எளிதாக்குவதற்காக பயன்படுத்த முயற்சித்தது. அந்த முயற்சி வெற்றியும் பெற்று விட்டது. அது காலப்போக்கில் மனிதர்களுக்கு இயற்கையின் இயக்கங்கள் மேல் இருந்த ஒத்திசைந்த உணர்வை இல்லாமல் செய்யத் தொடங்கியது. அதாவது அறிவின் பயன்கள், அந்த அறிவை ஒத்திசைவுடன் அணுகும் மனநிலை இல்லாதவர்களுக்கும் சென்று சேர்ந்தபோது அவர்கள் இயற்கையை புறந்தள்ளத் தொடங்கிவிட்டார்கள். உதாரணமாக ஐன்ஸ்டீனின் சார்புநிலைக் கோட்பாடு அளித்த அறிதல்கள், அறிவியலாளர்களைக் கடந்து ராணுவத்தை அடைந்தபோது அது அணுக்குண்டாக மாறி இரண்டு லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்களை சில நிமிடங்களில் கொன்றழித்ததுடன், அந்த இடங்களில் பிறந்த அடுத்த தலைமுறையினரில் கணிசமானவர்களை பிறவிக் குறைபாடுள்ளவர்களாகப் பிறக்க வைத்து, அறிவியலின் இருண்ட முகத்தை உணர வைத்தது. 

இந்த நிலையில் இயற்கை உயிர் வாழ்க்கையை ஒருங்கிணைத்துச் செல்லும் பெருங்கருணை என்னும் நிலையில் இருந்து தாழ்த்தப்பட்டு, மனிதர்களுக்கு உதவும் ஒரு பெரும் கருவியாக அல்லது மனிதர்களுக்குத் தேவையானதை எல்லாம் உருவாக்கி அளிக்கும் இயந்திரமாக மனித மனங்களில் மாற்றியமைக்கப்பட்டது. இது ஒரு அனுமானம்தான். கடந்த காலத்தின் பாதையை திரும்பிப் பார்த்து, கண்ணுக்கு எட்டாத தொலைவில் இருப்பதை காட்சியின் புலத்திலிருந்து சற்றே நீட்டித்துப் பார்ப்பது.

ஆனால் தொழில்புரட்சியால் அடைந்தவை அனைத்துத் தரப்பினருக்கும் புற வாழ்க்கையை எளிதாக்கியிருக்கிறது. அன்று வழ்ந்தவர்களால் கற்பனைக்கூட செய்ய முடியாத அளவுக்கு இன்றைய வாழ்க்கையை எளிமையாக்கியிருக்கிறது. புற வாழ்க்கையை மட்டும்தான்! புற வாழ்க்கை எவ்வளவு எளிதாகியிருக்கிறதோ அதை விட பல மடங்கு அக வாழ்க்கை கடினமாகியிருக்கிறது என்றே தோன்றுகிறது. எளிமையாக்கப்பட்ட புற வாழ்க்கை அக வாழ்க்கையின் தரத்தை உயர்த்தினால் மட்டுமே மனிதனின் வாழ்க்கைத் தரம் உண்மையில் உயரும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக புற வாழ்க்கையில் அடையும் எளிமையையாக்கலை மட்டும் வைத்து வாழ்க்கைத் தரத்தை அளவிடும் அளவுகோலை அடைந்து விட்டிருக்கிறோம். புற வாழ்க்கையில் எளிமையாக்கல் அடையப்பட வேண்டியதுதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த எளிமையாக்கல் இன்னும் அதிகப்படியான துன்பங்களை மனிதனுக்குள் உருவாக்கும் என்றால் அங்கு எளிமையாக்கல் உண்மையில் நிகழ்ந்திருக்கிறதா? ஆனால் நாம் கொண்டிருக்கும் அளவுகோல் எளிமையாக்கிவிட்டது என்றுதான் தெரிவிக்கிறது. எனில் அளவுகோலின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது. இங்கு அகவாழ்க்கை கடினமாகியிருக்கிறது என்பதும் அனுபங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு அனுமானமே!

ஒரு மாபெரும் கருவியாக அல்லது இயந்திரமாக மனித மனதால் உருவகிக்கப்பட்ட உலகம், அந்த நிலையில், மனிதனுக்குத் தேவையானவற்றை அளிப்பதற்கானது மட்டும்தான் என்று பெரும்பான்மையான மனிதர்களால் கருதப்படுகிறது. மனிதனின் உணர்வுகளில் அது ஒரு இயந்திரம் மட்டுமே. அந்த மனநிலையில், எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் உலகிலிருந்து திகட்டத் திகட்ட நுகர்ந்துக் கொண்டிருப்பது நியாயமானதே. அதில் வேறு எந்த உணர்வுகளுக்கும் இடம் இல்லை. இன்றைய நிலையில் பொருளாதார இயக்கங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், மனிதனுக்கும் உலகுக்குமான இந்த உறவினை புரிந்துக் கொள்வது அவசியம்.

எல்லா நாடுகளும் எப்போதும் பொருளாதார வல்லமையையே விழைகின்றன. அதை அடைந்தால் பெரும்பாலான மற்ற வல்லமைகளையும் மிக எளிதில் பெற்றுவிட முடியும். தற்போதைய நிலையில் பொருளாதார வல்லமை என்பது முதலாளித்துவ அமைப்பின் வல்லமை. எனவே இன்றைய அனைத்து அரசியல் தலைமைகளும் முதலாளித்துவம்(Capitalism)  சார்ந்த பொருளாதார விளையாடல்களையே தங்கள் முதன்மை இயக்கங்களாகக் கொண்டுள்ளன. கம்யூனிஸ்ட் நாடுகளான சைனா போன்றவையும் இதற்கு விதிவிலக்கல்ல. அதிகப் பட்சமாக பிற நாடுகிளில் முதலாளித்துவம் என்னும் பெயரில் செய்யப்படும் அதே பொருளாதார இயக்கங்களுக்கு வேறு சில சித்தாந்தம் சார்ந்த பெயர்கள் இடப்பட்டிருக்கலாம்.

முதலில் கூறியது போல பொருளாதாரம் என்பது நுகர்வின் மறு பெயர். மக்கள் நுகர்வதற்கு உலகின் சக்திகள் பொருள்களாக மாற்றப்பட வேண்டும். நுகர்வதற்கு பொருட்கள் தேவையென்றால், தங்களிடம் இருக்கும் பொருட்களைக் கொடுத்து தேவையானப் பொருட்களை அடைய வேண்டும். கொடுப்பதற்கு வேறு பொருட்கள் இல்லையெனில், உழைப்பின் மூலம் பொருட்களை உருவாக்கி, பண்டமாற்று செய்யப்பட வேண்டும். அதுவே மனித சமூகம் நுகர்வுக்கு ஏற்படுத்தியிருக்கும் அடிப்படை விதி. மனிதர்களுள் இருக்கும் எல்லா அற உணர்வுகளும், இந்த விதியை சமனமாக பயன்படுத்தத் தேவையான, இதுவரை மனித சமூகம் அடைந்த அறிதல்களின் வழியாக உருவாக்கிய விதிகளே. அந்த விதிகளை பாதுகாப்பதற்காக சமூக அளவில் சட்டத்திட்டங்களும், அவற்றை நிர்வகிக்கும் அமைப்புகளும் இயக்கப்படுகின்றன.

முதலாளித்துவ இயக்கத்தின் நோக்கம் பொருளாதார நிறைவுத்தன்மை அல்லது சமநிலையில் தன்னை நிறைவு செய்துக்கொள்வது அல்ல. அதாவது தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே சமநிலையை அடைய வைப்பது அதன் நோக்கம் இல்லை. இதுவே முதலாளித்துவத்தின் எதிர்மறை இயக்கங்களுக்குக் காரணமாக இருக்கலாம். மாறாக தேவை எப்போதும் உற்பத்தியை விட அதிகமாக இருக்குமாறு அது பார்த்துக்கொள்கிறது. அவ்வாறு உயிர்ப்புடன் இருக்க பொருளாதார வளர்ச்சி என்னும் அளவீடும் அதன் இயக்கத்தினுள் வந்து சேர்ந்து விட்டது. விளைவாக தனிமனித அளவிலும் பொருளாதார நிறைவு என்பது வந்து சேரவே இல்லை. மீண்டும் மீண்டும் நுகர்வுப் பொருட்களை சேர்த்துக் கொண்டிருக்கவே தனிமனித விழைவு முயல்கிறது. தற்போதைய வாழ்வுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்கள் அனைத்தும் சேர்ந்த பின், எதிர்கால நுகர்வுப் பொருட்களைப் பெறுவதற்கான சேமிப்பில் அது ஈடுபடுகிறது. மரணத்தின் மீதான மனிதர்களின் பயம், மரணத்தைப்பற்றி நினைக்காமல் என்றும் இருப்பவர்களாக அவர்களை கற்பனைச் செய்ய வைத்து, விளைவாக எதிர்காலத்திற்கான சேமிப்பை எல்லை இல்லாததாகவும் மாற்றி விட்டது.

இதன் மறு எல்லையாக, இன்றைய உலகின் மக்கள் தொகையில் தோராயமாக இருபது சதவீதம் மக்கள், மிக அடிப்படைத் தேவையான உணவுக்கே வழியில்லாமல் இருக்கிறார்கள் என்று இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. அவர்களின் முழு உழைப்பும் உணவுக்காக மட்டும் செலவழிக்க வேண்டியிருக்கிறது. அல்லது தேவையான உணவை அடைவதற்கான அளவு உழைப்பை அளிப்பதற்கான வாய்ப்புகள் கூட அவர்களுக்கு இல்லை. அறம் கருணை என்றெல்லாம் மனித உன்னதங்களைக் கொண்டாடும் மனித சமூகத்தில்தான் அன்றாட உணவுக்கே திண்டாடும் மனிதர்களும், ஒரு நேரத்தில் தான் உண்ணும் உணவுடன் பலருக்குப் போதுமான உணவை குப்பைக்கு அனுப்பும் மனிதர்களும் வாழ்கிறார்கள். தன் மிக எளிய தினசரித் தேவைகளுக்கான நுகர்வுப் பொருட்களை பெற முடியாமல் உடலாலும் மனதாலும் துன்புறும் மனிதர்கள் வாழும் அதே மனித சமூகத்தில்தான்  நுகர்வுத்தேவைகள் அனைத்தும் நிறைவேறிய பின்னும், தானும் மரணிப்பேன் என்பதை அறியாத, வாழமுடியாத அந்த எதிர்காலத்திற்கான சேமிப்பில் மனதாலும் பின் உடலாலும் துன்புற்று உழல்கின்றவர்களும் இருக்கிறார்கள். புரிந்துக்கொள்ள இயலாத முரண்கள்தான்!

இதற்குக் காரணம் திறமையின்மையா இல்லை வாய்ப்பின்மையா? இல்லையெனில் சக மனிதர்களும் இங்கு வாழ்கிறார்கள் என்னும் உணர்வின்மையா? அதுவும் இல்லையெனில் மனிதனுக்கு சாத்தியமான உன்னதங்களை அடையும் பரிணாம வளர்ச்சியை மனிதசமூகம் இன்னும் அடையவில்லையா? தனிப்பட்ட முறையில் சமூகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நாம் விரும்புவது ஒரு புறமிருக்க, அந்த சமூகம் எவ்வாறு இருக்கிறது என்பதுதான் முக்கியத்துவம் உடையது. சமூகத்தை நாம் விரும்புமாறு மாற்ற விரும்பினால் அது இன்று இருக்கும் யதார்த்தத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். மாறாக எவ்வாறு இருக்க வேண்டும் என்னும் விருப்பத்திலிருந்துத் தொடங்கினால் அது பேரழிவையும் துணைக்கு அழைத்து வரும். அந்தத் துணை ஒருவேளை விருப்பத்தை நிறைவேறாமலும் தடுக்கலாம்.

(2)

முதலாளித்துவம் தோன்றிய சிறிது காலத்திலேயே அது அமைப்பாக உருவெடுத்துவிட்டது என்றே தோன்றுகிறது. முன்பே கூறியவாறு, ஒரு அமைப்பாக முதலாளித்துவத்தின் முக்கியமான பணி உற்பத்திக்குத் தேவையான பொருட்களையும் மனித உழைப்பையும் ஒருங்கிணைத்து நுகர்வுப் பொருட்களை உருவாக்கி, அவற்றை நுகர்வோரிடம் கொண்டு சேர்த்து அதன் மூலம் லாபத்தைப் பெறுவது. அந்த அமைப்பின் உறுப்பினர்கள், உற்பத்திக்குத் தேவையான பண முதலீட்டை அளிப்பவர்களாக இருக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதி. அதைவிட முக்கியமாக கச்சாப் பொருட்களை பெறத் தேவையான அதிகாரமும் உற்பத்தியான நுகர்வுப் பொருட்களை நுகர்வோர்களால் ஏற்றுக்கொள்ள வைப்பதற்குமான அதிகாரமுமே அதன் உண்மையான முதலீடுகள். அத்தகைய அதிகாரத்தை உடையவர்கள் முதலாளித்துவ அமைப்பில் இல்லையெனில் அது விலை கொடுத்து வாங்கப்படும். இங்கு அதிகாரம் என்பது அரசியல் அதிகாரம் மட்டும் அல்ல. அது  அறிவால் பெற்ற அதிகாரமாக இருக்கலாம், கல்வியால் பெற்றதாக இருக்கலாம், நட்பால் பெற்றதாக இருக்கலாம். இந்த அதிகாரத்தை அடையும் முயற்சியில், முதலாளித்துவ அமைப்புகளில் பெரும்பாலானவை எல்லா அற உணர்வுகளையும் தியாகம் செய்யவும் தயாராக இருக்கின்றன. பெரும்பாலும் இந்த அறமீறல்கள், அவை அடைந்த அதிகாரத்தின் துணை கொண்டு சட்டப்பூர்வமாக மீறப்படுபவை. இந்த அதிகாரம் எவ்வளவுக்கெவ்வளவு கச்சாப் பொருட்களை குறைந்த விலையில் பெற உதவுகிறதோ எவ்வளவுக்கெவ்வளவு நுகர்வுப் பொருட்களை அதிக விலைக்கு விற்க உதவுகிறதோ அந்த அளவுக்கு அந்த முதலாளித்துவ அமைப்பு வெற்றிக்கரமாக இயங்கும். பொது வெளியில் உள்ள பணப்புழக்கத்தை தன்னை நோக்கி ஈர்க்கும். முதலாளித்துவ அமைப்பின் நோக்கம், பொதுவெளியில் புழங்கும் பணத்தை தன்னை நோக்கிக் குவிப்பதுதான்.

பெரும்பாலும் முதலாளித்துவத்தைத் தழுவி விட்ட உலகப் பொருளாதாரத்தில்,  பணம் இவ்வாறு முதலாளித்துவ அமைப்புகளிடம் குவிகிறது. அந்தக் குவிதலின் ஒரு பகுதி உற்பத்தியின் உழைப்புக்காக அளிப்பதன் மூலம் பரவலாக்கப்படுகிறது. இந்தப் பரவலாக்குதல் மொத்த உற்பத்தியின் ஒரு சிறு பகுதியே. தொழில் இயந்திரமயமாக்கப்படுவதன் மூலம் பணத்தின் பரவலாக்கம் மேலும் குறைக்கப்படுகிறது. இயந்திர மனிதர்களை (Robots) பெருமளவில் தொழில்களில் பயன்படுத்துவது தற்போது மிக வேகமாக அதிகரித்துவருகிறது. இதன் மூலம் தொழில்களுக்குத் தேவையான மனித உழைப்பு இன்னும் குறைக்கப்படுகிறது. எனவே பணத்தின் பரவலாக்கமும் குறைக்கப்படுகிறது. தோராயமாக வருமானத்தில் 5% முதல் 30% வரை உழைப்புக்கான செலவாக பரவலாக்கப்படுகிறது. ஆனால் வருமானத்தில் 10% முதல் 50% வரை அந்த முதலாளித்துவ அமைப்பு பணப்புழக்கத்தை தன்னுள் குவிக்கிறது. மீதி கச்சாப் பொருட்களுக்காக செலவிடப்படுகிறது. அவ்வாறு குவிக்கப்பட்ட பணம், அந்த முதலாளித்துவ அமைப்பின் மிகச் சிறிய வட்டத்திற்குள் பகிரப்படுகிறது. மேலும் வருடம்தோறும் அந்த குவிதலின் அளவை அதிகரிப்பதே எந்த ஒரு முதலாளித்துவ அமைப்பின் நோக்கமும். எனில் உற்பத்தி தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். அதற்காக நுகர்வும் அதிகரிக்க வேண்டும்.

முன்பே கூறியபடி இன்னும் இருபது சதவீதம் மக்கள் உணவுக்கே வழியில்லாத நிலையில் இருக்கிறார்கள். எனில் நுகர்வுப் பொருட்களுக்கானத் தேவை இன்னும் இருந்துக்கொண்டிருக்கிறது என்ற ஊகம் சரியாவே இருக்கும். எனில் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் மிக அதிகம். அதற்குத் தேவை இருக்கும் மக்கள் திரளுக்கு தேவையை அடையும் வழியான உழைப்புக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும், அவ்வளவுதான். ஆனால் முதலாளித்துவத்தினால் அந்த வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியவில்லை. எனவே கடந்த சில வருடங்களாக உலகப் பொருளாதாரம் இறங்கு முகத்தில் உள்ளது. பொருளாதாரம் வளரவில்லை என்றால் அதற்குக் காரணம் நுகர்வுப் பொருட்கள் இதற்கு மேலும் மக்களுக்குத் தேவை இல்லை அல்லது அவற்றை வாங்குவதற்குத் தேவையான பணப்புழக்கம் மக்களிடம் இல்லை. எனில் உணவுக்கும் வழி இல்லாமல் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் இருக்கும் போது, மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமையே பொருளாதார மந்த நிலைக்குக் காரணமாக இருக்க முடியும். அவ்வாறெனில் இரு நூற்றாண்டுகளாக முதலாளித்துவம் மனித சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறது? அதன் பணப்பரவலாக்கம் 20% மக்களிடம், அவர்கள் உழைக்கத் தயாராக இருந்தாலும், இன்னும் ஏன் சென்று சேரவே இல்லை? அது நுகர்வுப் பொருட்களாக மாற்றியமைத்த, முழு மனித சமூகத்துக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் சம உரிமையுள்ள இயற்கையின் வளங்கள்\சக்திகள்\ஆதாரங்கள் எங்கு சென்று ஒளிந்திருக்கின்றன?

நடுத்தர மற்றும் அதற்கு மேற்பட்ட வாழ்க்கைச் சூழல்களில், முதலாளித்துவம் புற வாழ்க்கையை மிகமிக எளிமையாக்கியிருக்கிறது. இன்று நாம் இத்தனை வசதிகளை அனுபவிக்கிறோம் என்றால் அதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அது மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் வறுமையில் இருக்கும் மனிதர்களை, அதிகாரத்தின் எச்சிலைக் கூட தொட இயலாத சமூகத்தை, அது முற்றிலும் புறக்கணித்திருக்கிறது. புறக்கணிப்பது மட்டுமல்ல சுரண்டலுக்கும் உட்படுத்துகிறது. அதற்காக அதிகாரத்தை தன் கையில் எடுக்கிறது. வருங்காலத்தில் அதிகாரம் முற்றிலும் முதலாளித்துவத்தின் கைக்குச் செல்லும் என்றும் கூறப்படுகிறது.

தொழில்புரட்சி தொடங்குவதற்கு முன் மனித இனம் உணவு உடை இருப்பிடம் ஆகியவற்றையும் இவற்றை உருவாக்குவதற்குத் தேவையான கருவிகளையும் மட்டுமே நுகர்ந்து வந்துள்ளன. மேலதிகமாக சமூகக் கட்டுமானத்தின் பாதுகாப்பு அம்சமான ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களும். காரணம் எளிமையானதுதான். மனித உழைப்பின் பெரும்பகுதி அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே போதுமானதாக இருந்திருக்கும். தொழில் புரட்சியின் காரணமாக, அடிப்படைத்தேவைகள் மிகஎளிதாக அடையப்பட்டன. அதன்பின் மனிதனின் நுகர்வு பொழுதுப்போக்கு மற்றும் ஆடம்பரம் சார்ந்ததாக மாறிவிட்டது. தற்போதைய சமூக நிலையில் எல்லாப் பொருளாதாரங்களின் பெரும்பகுதியும், பொழுதுபோக்கு நுகர்வையும் ஆடம்பர நுகர்வையும் நம்பியே இருக்கின்றன. அதன் மறுபக்கமாக மக்களும் இவற்றை அடைவதையே தங்கள் வாழ்வின் நோக்கங்களாகக் கொண்டுள்ளனர். அதாவது மக்கள் எந்த நிலையில் இருந்தாலும், அவர்களை விட பொருளாதாரத்தில் அடுத்த உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் நுகர்வுத் திறனை அடைவதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் மூலம் அடிப்படைத் தேவைகளை அடைந்தபின்னும், தங்கள் உழைப்பின் போதாமையை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே வாழ்க்கை முழுவதையும் இந்தப் போராட்டத்திலேயே கழித்து விடுகிறார்கள். ஒரு வகையில் இது மனித சமூகத்தை தீராத செயல்களின் வலைப்பின்னலில் வைத்து, சமூகத்திற்கு இயங்கு விசையை அளிக்கிறது. மறுபுறத்தில் மனிதர்கள் தங்கள் சுயமதிப்பை அறியாமல், நுகர்வுகளின் மதிப்பையே தங்கள் மதிப்பாகக் கருதி, நுகர்தலையும் அனுபவிக்காமல், பொருளாதாரத்திற்கான போராட்டத்திலேயே நுகர்தலையும் ஒரு போராட்டமாக செய்து முடிக்கிறார்கள். ஒருவேளை நுகர்வுப் பொருட்களை அடைவதற்கான இந்தப் போராட்டம் அவர்களுக்கு மிக அவசியமானதாக இருக்கலாம். இல்லையெனில் சகமனிதர்களுடன் அவர்கள் போர்தொடுத்து சமூக நிலையின்மைக்குக் காரணமாகி விடலாம். அவ்வகையில், முதலாளித்துவப் பொருளாதாரம் சமூக அமைதியை வழங்கியுள்ளதோ?

நுகர்வுக்கும் எனவே பொருளாதாரத்துக்கும் இன்னொருக் காரணி மக்கள் தொகை. இந்தியாவின்  மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக வரும் காலங்களில் மிக வேகமாக பொருளாதார முன்னேற்றத்தை அடையும் என்று கூறப்படுகிறது.. தற்போதும் நெருங்கிய எதிர்காலத்திலும் இந்திய மக்கள் தொகையின் பெரும்பகுதி, இளைஞர்களாக இருப்பார்கள். இதன் மூலம் இந்தியாவில் உழைப்பு சக்தியும் நுகர்வு சக்தியும் வேறு எந்த நாடுகளை விடவும் அதிகமாக இருக்கும். பொருளாதாரமும் முன்னேறும் என்று கருதப்படுகிறது. அதாவது இயற்கை வளங்களை நுகர்வுப் பொருட்களாக மாற்றி பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் குவியும் பணத்தின் ஒரு பகுதியை உழைப்புக்காக பரவலாக்கி, அந்தப் பரவலாக்குதல் மேலும் நுகர்வைத் தூண்டி உற்பத்தியை தொடர்ந்து வளரச் செய்வது. ஆனால் அந்தப் பொருளாதார முன்னேற்றத்தை அடைய நாம் கொடுக்கப்போகும் விலை, இயற்கை வளங்களின் பெரும்பகுதியை அழித்தொழிப்பதுதான். இந்தப் பொருளாதார வளர்ச்சி மேலோட்டமாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். அதே நேரத்தில் மறைமுகமாக அவர்களை தீராத பொருளாதாரப் போராட்டத்தில் தள்ளி, அகவாழ்க்கையின் தரத்தை அழிக்கும். ஆனால் நம் பொருளாதார மேதைகள், இந்தியாவின் மக்கள் தொகை, பொருளாதாரத்தை மேம்படுத்தப் போகிறது, எனவே மக்களின் வாழ்க்கைத் தரம் உயரப்போகிறது என்று விதந்தோந்துகிறார்கள். மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். மாற்றுக் கருத்து இல்லை. அதற்கு இதுதான் சரியான வழியா?

முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தோல்வி, இன்று கண்கூடாகத் தெரிகிறது. அதன் வீழ்ச்சி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் தொடங்கியது. இரண்டாவது உலகப் போருக்குப் பின் ஜப்பான் பொருளாதார ஸ்திரத்தன்மையை பெற்றபின் தொண்ணூறுகளின் நடுப்பாகம்வரை உலகத்தின் உற்பத்திக் கேந்திரமாக இருந்துவந்தது. கொரியா சீனா போன்ற நாடுகள் இந்த காலக்கட்டத்தில் உலகுக்காக உற்பத்தியைத் தொடங்கின. அதன் பின் ஜப்பானின் பொருளாதாரம் மெல்லமெல்ல கீழே விழுந்து விட்டது. 2008-ம் ஆண்டில் நிகழ்ந்த பொருளாதார நிலைகுலைவுக்குப் பின் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பின்பற்றும் கடன்களுக்கான மிகமிகக் குறைந்த வட்டிவிகிதம் (அல்லது வட்டியே இல்லாத கடன்), முதன் முதலில் ஜப்பானில் தொடங்கப்பட்டது. மக்களிடம் பணப்புழக்கத்தை உருவாக்கவும், எனவே அவர்களை மேலும் நுகர்வுப் பொருட்களுக்காக செலவிட வைப்பதுமே இதன் நோக்கம். இதன் மூலம் பொருளாதாரம் மீண்டு வரும் என்று நம்பினார்கள். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பின்னும் ஜப்பானின் பொருளாதாரம் அப்படியேதான் உள்ளது. தற்போது ஜப்பானில், சேமிப்பிற்கு பூஜ்யத்திற்கும் குறைவான வட்டிவிகிதம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாகக் கேள்விப்படுகிறேன். அதாவது மக்கள் தங்கள் பணத்தை வங்கிகளில் வைத்திருக்க வங்கிகளுக்குப் பணம் தர வேண்டும். அவர்களுக்கு வட்டி எதுவும் கிடைக்காது! இதன் மூலம் மக்கள் பணத்தை சேமிப்பதைத் தடைச் செய்கிறார்கள். சேமிக்காமல் இருப்பதன் மூலம் பொருளாதாரம் உயரும் என்று முதலாளித்துவம் நம்புகிறது.

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பின், மிக சமீபத்தில்தான் அமெரிக்கா கடன்களுக்கான வட்டியை சற்றே அதிகரித்தது. இந்த நிலையில் அவர்களும் ஜப்பானின் பொருளாதார முயற்சியை பின்பற்றலாம் என்றும் கூறப்படுகிறது. முதலாளித்துவத்திற்கு வேறு வழிகள் இல்லை என்றே தோன்றுகிறது. எனில் அது இறப்பின் மிக அருகில் இருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. அவ்வாறெனில் பொருளாதார இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய இயக்கம் மிக அவசரமாக தோன்றியாக வேண்டும். அவ்வாறுத் தோன்றாவிடில் பெரும் பொருளாதார அழிவுகளுக்கும் எனவே சமூகங்களின் அழிவுகளுக்கும் பிறகுதான் புதிய பொருளாதார இயக்கம் உருவாக முடியும். மனித சமூகம் உண்மையில் நாகரீகத்தை அடைந்திருக்கிறதென்றால், அத்தகைய அழிவுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. உலகின் பொருளாதார நிபுணர்கள் புதிய பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தலாம். அதற்கு பொருளாதார நிபுணர்கள் பொருளாதாரத்தை மட்டும் அறிந்திருப்பது போதாது. முழுமையை அறிந்திருக்க வேண்டும். முழுமையின் அறிவிலிருந்துதான் முழுமையை முன்னெடுத்துச் செல்லும் பொருளாதாரம் வர முடியும். முழுமையை அறியும் பார்வையுள்ள பொருளாதார அறிஞர்கள் சமூகங்களில் தோன்ற வேண்டும்.

முதலாளித்துவப் பொருளாதாரத்தைக் குறித்து எவ்வளவு எதிர்மறையாக விமர்சித்தாலும், இன்று புறவாழ்க்கையில் மனித சமூகம் அடைந்திருக்கும் வசதிகளின் பெரும்பகுதி, முதலாளித்துவத்தால்தான் சாத்தியமாகியுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். முதாலாளித்துவத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும், அது அளித்திருக்கும் வசதிகளின் மேல், தொழில்நுட்பங்களின் மேல் இருந்துகொண்டுதான் செயல்படுகிறார்கள். முதலாளித்துவம் வசதிகளை அளிக்கிறது என்பதால் அதை முழுமையாக, அதன் எதிர்மறை இயக்கங்களுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லையே. முதலாளித்துவம் அதன் ஆதிக்கத்தைத் தொடங்கியதிலிருந்து அதன் எதிர் விசையாக கம்யூனிஸம் இருந்து வந்துள்ளது. ஆனால் கம்யூனிஸம் அடைந்த அதிகாரம் ஐனநாயகத் தன்மையை முற்றிலும் இல்லாமல் செய்ததால், கிட்டத்தட்ட எங்கும் அது இல்லாமல் ஆகிவிட்டது. இருக்கும் இடங்களிலும் அதுவும் முதலாளித்துவ உற்பத்தி முறையைப் பின்பற்றும் இயக்கமாக மாறிவிட்டது. தற்போது உலகெங்கும் முதலாளித்துவத்தை எதிர்ப்வர்கள், அதிகாரம் கையில் இல்லாத கம்யூனிஸ்டுகள் மட்டும்தான். கூடவே சில சூழலியலாளர்களும் இருக்கலாம். எனவே முதலாளித்துவத்திற்கு குறிப்பிடத்தக்க எதிர்விசைகள் எங்கும் இல்லை. எதிர்விசை இல்லாத முதலாளித்துவம் அழிவு சக்தியாக மாறிவிடவும் கூடும்.


முதலாளித்துவத்தின் நிறைப்பண்புகளை தன்னுள் எடுத்துக் கொண்டும், குறைப்பண்புகளை களைந்து கொண்டும் ஒரு புதிய பொருளாதார இயக்கத்தை முன்னெடுக்கும் சாத்தியம் உள்ளதா? உலக வரலாற்றில் பெரும்பாலான சமூக மாற்றங்கள், சமூகத்தின் நடைமுறைகளை எதிர்த்த போராட்டங்களுடனும் அதனுடன் இணைந்த பெரும் களப்பலிகளுடனும்தான் நிகழ்ந்துள்ளன. மனித சமூகம் நிச்சயமாக நாகரீகத்தில் முன்னெப்போதையும் விட முன்னேறிய நிலையில்தான் தற்போது உள்ளது. எனில் களப்பலிகள் இல்லாமல், அல்லது குறைந்தப்பட்ச களப்பலிகளுடன், பொருளாதாரத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியுமா? தற்போது அதற்கு சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. தற்போது இருக்கும் எல்லாப் பொருளாதார நிபுணர்களும், முதலாளித்துவத்துக்காக முதலாளித்துவமே உற்பத்திச் செய்த\செய்யும் பொருளாதார நிபுணர்கள். அவர்களால் முதலாளித்துவத்துக்கு மாற்றான பொருளாதாரக் கொள்கைகளை முன்வைக்க முடியாது. சமூகமும் முதலாளித்துவம் வழங்கிய வசதிகளிலும், அளவற்ற நுகர்வுப் பொருட்களை அடையும் போராட்டத்திலும், நுகர்வு அளிக்கும் பொழுதுபோக்குகளிலும் அதன் எதிர்மறைத்தன்மைகளை மறந்து விடுகிறது. எனவே பொது சமூகத்திலிருந்தும் முதலாளித்துவத்துக்கு எதிரான இயக்கங்கள் வர சாத்தியம் இல்லை. ஆனால் இயற்கை பெரும்கருணை உடையது. எங்கெல்லாம் தேவை எழுகிறதோ அங்கெல்லாம் தேவையை நிறைவேற்றும் இயக்கத்தையும் இயற்கை வழங்குகிறது. அந்த வகையில் சமூகத்தில் மாற்றுப் பொருளாதார இயக்கங்கள் தோன்றலாம். இல்லையெனில் பூமியின் உயிர்ப்பன்மைத் தன்மையை தங்கள் நுகர்வுக்காக அழிக்கத் தலைப்படும், எனவே பூமியின் இருப்பையை கேள்விக்குள்ளாக்கும் மனித சமூகத்தை, பூமியின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் இயக்கம் அழித்துவிடக் கூடும். ஏனெனில் இயற்கை உணர்ச்சிகள் (Emotions) இல்லாதது.

blog.change@gmail.com