Wednesday, May 27, 2015

நட்சத்திரங்கள்

சொல்வனம் இணைய இதழில் 13-05-2015 அன்று பதிப்பிக்கப்பட்ட  கட்டுரை

சமீபத்தில் ஒருநாள், சென்னையிலிருந்து மார்த்தாண்டத்திற்கு ட்ரெயினில் வந்து கொண்டிருந்தேன். எங்கு சென்றாலும் நான் ஒரு தனியன். உரையாடல் என் இயல்பில் இல்லை. எனவே தட்கல் முன்பதிவில் வாங்கிய டிக்கெட்டிலும், தனிமையான பயணம்! இரவு உறக்கத்திற்கு முன் ட்ரெயின் வாசலில் சற்று நேரம் நின்றேன். எதேச்சையாக வானை நோக்கிய பார்வையில் வெறும் இருட்டுதான் தெரிந்தது. சிறு வயதில் பார்த்திருந்த, எண்ணிக்கையில் அடங்காத நட்சத்திரங்களை அங்கு பார்க்க முடியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நட்சத்திரங்களே தெரிந்தன. நிலவு இன்னும் வானத்தில் தோன்றியிருக்கவில்லை. எனவே நட்சத்திரங்கள் தெரியாமல் இருக்க நிலவொளி காரணமில்லை. தெளிந்த வானமாக இல்லா விட்டாலும், அன்று மிகக்கலங்கிய வானமும் இல்லை. அங்கு நட்சத்திரங்களை காணவில்லை!

கடைசியாக கண்குளிர நட்சத்திரங்களை நான் பார்த்தது, சுமார் ஒரு வருடத்துக்கு முன்னால். தொழில் நிமித்தமாக சவுதிஅரேபியா கடல் பரப்பில், வேலை தளத்திலிருந்து கரையை நோக்கி இரவு தொடங்கும் நேரத்தில் கிளம்பி, 'போட்'-ல் வந்த 3 மணி நேர பிரயாணத்தில்தான். சற்று குளிர் அதிகமான இரவு. எனவே என்னுடன் பிரயாணித்த அனைவரும் போட் கேபினுக்குள் ஏதோ சினிமா பார்த்துக்கொண்டிருக்க அடுத்தவர்களைப் பற்றிய அக்கப்போர் பேசிக்கொண்டிருக்க, நான் மட்டும் எப்போதும்போல தனியனாக போட் டெக்-ல் அமர்ந்து இருட்டை வெறித்துக்கொண்டடிருந்தேன். பயணம் தொடங்கியதிலிருத்து, சுமார் ஒருமணிநேரம்வரையும் காணும் திசையெல்லாம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுவுக்காக, பூமியை டிரில்லிங் இயந்திரங்களை கொண்டு வன்புணர்வின் மூலம் உருவாக்கிய துளைகள் புடைப்புகளாக எழுந்து நின்றிருந்தன. சுகப்பிரசவமாகவும்(Natural Flow) சிசேரியனாகவும்(Forced Flow - Gas Injection/Water Injection) எடுக்கப்படும் பெட்ரோலியமும் இயற்கை வாயுவும்  கடலின் அடியில் பதிக்கப்பட்டிருந்த குழாய்கள் மூலம் சற்றே தொலைவில் உள்ள நிலையங்களுக்கு செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தன. பிரசவத்தின் பக்க விளைவாக வெளிவரும் தேவையற்ற வாயுக்களையும், கையாளக்கூடிய அளவுக்கு அதிகமாக வரும் இயற்கை வாயுவையும் எரிக்கும் எரிகோபுரங்களின் (Flare) பளிச்சிடும் வெளிச்சம், வானத்தின் இருளை வெளிச்சத் திரைபோட்டு மறைத்திருந்தது. அந்தப் புடைப்புகளின், திரைகளின் எல்லைகளை கடந்த பின், வானம் நட்சத்திரங்களுடன் கலைகளை நிகழ்த்த தொடங்கியிருந்தது. அன்று கரை சேரும்வரை நான் நிலையழிந்திருந்தேன்.

'போட்' டெக்-ல், அத்தனை அழுக்குகளுக்கிடையேயும், தரையில் படுத்து விட்டேன் - வானத்தை பார்ப்பதற்கு வாகுவாக! என்ன செய்வதென்று அறியாமல், இரண்டு மாதங்களுக்கு முன் வேலைத்தளத்துக்கு செல்லும் முன் வாங்கிய ஒரே ஒரு சிகரெட் பாக்கெட்டில் எஞ்சியிருந்த இரண்டு சிகரட்டுகளையும் ஒன்றன் பின் ஒன்றாக இழுத்துத் தீர்த்தேன். கரை வந்து சேரும்வரை, கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஒரு வகையான மனக்கிளர்ச்சி நிலையில் இருந்தேன். என் சிறு வயதில் வீட்டுக்கு வெளியே கோடை இரவுகளில் அவ்வளவு நட்சத்திரங்களை கண்ட நினைவுகள். இடைப்பட்ட காலத்திலும் எங்கேனும் பார்த்திருப்பேன். ஆனால் நினைவில் இல்லை.

நட்சத்திரங்கள் அளக்க முடியாத விண்ணில் நிகழும் வாழ்க்கைகள். எரிந்து, எரிதலின் மூலம் வாழ்ந்து, எனவே அழிந்து கொண்டிருக்கும் பொருண்மை(Mass) பொருட்கள்தான் நட்சத்திரங்கள். சூரியன்தான் நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம். சூரியனை, அதன் இயக்கத்தினால், அதன் சக்தியினால் வாழும் நாம், நட்சத்திரம் எனக்கூறுவது சரியா எனத்தெரியவில்லை. சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளி நம்மை வந்து அடைய 8.32 நிமிடங்கள் ஆகிறதாம். ஒளி ஒரு வினாடிக்கு சுமார் 300000 கி.மீ (சரியாக கூறினால் 299792 கி.மீ.) தூரம் செல்லும். அல்லது ஒளியை பூமியை சுற்றி வருமாறு செய்தால், ஒரு வினாடிக்கு சுமார் 7.5 முறைகள் சுற்றி வரும்.

நமக்கு மிக அருகிலுள்ள நட்சத்திரம் Proxima Centauri எனப்பெயரிடப்பட்டுள்ளதாகும். அது வெளியிடும் ஒளி நம்மை வந்தடைய 4.22 ஒளி வருடங்கள் (Light Years) ஆகும். ஓளி வருடம் என்பது, ஒரு வினாடிக்கு 3 லட்சம் கி.மீ. வேகத்தில் பயணிக்கும் ஒளி, ஒரு வருடத்துக்கு பயணிக்கும் தூரமாகும். அதாவது, இப்போது நாம் பார்க்கும் Proxima Centauri, உண்மையில் இப்போது இருக்கும் Proxima Centauri அல்ல. அது 4.22 வருடங்களுக்கு முன்பிருந்த Proxima Centauri. ஒரு பொருளை பார்ப்பது என்பது, அந்த பொருள் வெளியிடும் அல்லது எதிரொளிக்கும் ஒளி நம் கண்களை வந்தடைந்து, அங்கிருந்து மூளைக்குச் சென்று, மூளை அந்த ஒளி நிழல்களை நினைவுகளில் நிறைந்திருக்கும் பொருள்களாக்கிதோற்றத்தை அளிக்கிறது. நாம் காணும் பொருட்கள் பெரும்பாலும் சில கி.மீ. தூரத்துக்குள் இருப்பதால், வினாடிக்கு 3 லட்சம் கி.மீ. பயணிக்கும் ஒளி, நாம் பார்க்கும் அந்த நேரத்துளியின் பொருட்களின் தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் Proxima Centauri வெளியிடும் ஒளி நம்மை அடைய, 4.22 வருடங்கள் ஆவதால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் பார்க்கும் அந்த நட்சத்திரம், அந்த நேரத்திற்கு 4.22 வருடங்களுக்கு முன்பு எவ்வாறு ஒளியை உமிழ்ந்தது என்பதையே.

வெறும் கண்களால், டெலஸ்கோப் உதவியில்லாமல், காணமுடியும் மிகத்தொலைவிலுள்ள நட்சத்திரம், டெனப் (Deneb) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரத்தின் தூரம் இன்னும் சரியாக அளவிடப்படவில்லை என்றே தோன்றுகிறது. பல அளவீடுகள், இந்த நட்சத்திரம் சுமார் 1400 ஒளி வருடங்களிலிருந்து 7000 ஒளி வருடங்கள்வரை இருக்கலாம் என தெரிவிக்கின்றன. ஒரு வினாடிக்கு 3 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஒளி, குறைந்த பட்சம் 1400 வருடங்கள் பயணித்து, நம்மை வந்தடைகிறது. இவை அனைத்துக்கும் மேல், நம் சூரிய குடும்பம், வினாடிக்கு 200 கி.மீ. வேகத்தில் பால்வெளியில் (Milky Way) சென்று கொண்டிருக்கிறது. எனவே தொலைவில் உள்ள நட்சத்திரத்தை நோக்கி சூரிய குடும்பம் செல்கிறதா அல்லது எதிர் திசையில் செல்கிறதா என்பதைப்பொறுத்து, தொலைவிலுள்ள நட்சத்திரத்தின் ஒளி நம்மை வந்து அடைவதற்காகன நேரம் சற்றே மாறுபடலாம். பால்வெளி என்பது நம் குடும்பத்தலைவனாகிய சூரியன் என்னும் நட்சத்திரம் அமைந்திருக்கும் கேலக்ஸி.

நாம் வாழும் பிரபஞ்சத்தின் அளவையும், அதில் தன்னை பெரிய 'மயிராக' கருதிக்கொண்டிருக்கும் சாதாரண மனிதனையும் (நம்மையும்) ஒப்பிட, விரும்பவில்லை என்றாலும், சில எண்ணிக்கைகளை அறிந்தாக வேண்டும். கேலக்ஸி என்பது, ஈர்ப்பு விசையினால் ஒரு மையத்தை அடிப்படையாக கொண்டு, எனவே ஒன்றுடன் ஒன்று நாம் அறிந்துகொள்ள முடியாத விசையால் பிணைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் தொகுப்பு. கவனிக்கவும் - பால்வெளி கேலக்ஸியில், நம் குடும்பத்தலைவனான சூரியன் ஒரு சிறிய நட்சத்திரம் மட்டுமேபால்வெளியில் சூரியனைப்போன்ற 100 பில்லியன் முதல் 200 பில்லியன் நட்சத்திரங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது 1 லட்சம் கோடி முதல் 2 லட்சம் கோடி நட்சத்திரங்கள், பால்வெளியில் மட்டும். நாம் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்த இரண்டாம் தலைமுறை அலைகற்றை ஊழலில், அரசாங்கத்துக்கு ஏற்படுத்தப்பட்ட நஷ்டம் வெறும் 176645 கோடி ரூபாய்கள் மட்டுமே.

பால்வெளி, நாம் இருக்கும் பிரபஞ்சத்தில் உள்ள ஒரு நடுத்தர அளவிலான கேலக்ஸி. இதுபோல கிட்டத்தட்ட 170 பில்லியன் கேலக்ஸிகள் இருக்கக்கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கைகள் அனைத்தும் சில அடிப்படை அறிவியல் விதிகளை ஆதாரமாக கொண்ட தோராயமான கணக்கிடல்கள் மட்டுமே. எனவே உண்மையான எண்ணிக்கை இவற்றிலிருந்து மிக அதிகமாகவோ, அல்லது குறைவாகவோ கூட இருக்கலாம்.

டெனப் நட்சத்திரம், பால்வெளியினுள் இருக்கும் ஒரு பெரிய நட்சத்திரம். வினாடிக்கு 3 லட்சம் கி.மீ. பயணிக்கும் ஒளி, 1400 வருடங்களுக்கும் அதிகமான நேரம் பிரயாணம் செய்து நம்மை அடைகிறது என்றால், பால்வெளியின் விஸ்தாரத்தை கற்பனை செய்வது என்பதே எளிய மனித மனங்களால் இயலாத காரியம். உதாரணமாக இன்று நம் வெறும் கண்ணால் பார்க்க முடியும் தொலைதூரத்து நட்சத்திரம் டெனப், கிட்டத்தட்ட ஏசு நாதர் வாழ்ந்த நாட்களில் எவ்வாறு இருந்தது என்பதையே (ஒருவேளை வேத காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதாக கூட இருக்கலாம்- அதிக பட்ச தூரக்கணிப்பை கணக்கில் எடுத்தால்). இப்போது அந்த நட்சத்திரம் வெளி விடும் ஒளியை காண, நம் வெகு தூரத்து சந்ததியினரால்தான் முடியும் - சந்ததிகளை நாம் வாழ அனுமதித்தால். நம் அதீத நுகர்வின் மூலம், பேராசையின் மூலம், இந்த பூமியில் மனிதர்கள் வாழும் சாத்தியத்தைத்தான் மிக வேகமாக இல்லாமல் செய்து வருகிறோமே

                                             *                        *                        *

சிறு வயதில், என் வீட்டிலிருந்து பார்த்த நட்சத்திரக் கூட்டங்களை, இன்று என்னால் அதே வீட்டிலிருந்து பார்க்க முடிவதில்லை. தெளிவான வானநிலை உள்ள நாட்களிலும், நிலவொளி இல்லாத நாட்களிலும் கூட! நிலவற்ற நடு இரவுகளில், மூத்திரப்பையின் இறுக்கத்தைக் குறைப்பதற்காக வீட்டிற்கு வெளியே வரும்போது கூட.  என் வீட்டிலிருந்து மட்டுமல்ல, பெரும்பாலான மனிதர்கள் வாழும் இடங்களிலிருந்தும் பார்க்க முடிவதில்லை. காரணம், ஒளி மாசு (Light Pollution). நமது சுற்றுச்சூழல், இரவு நேரங்களில் அதிவெளிச்சத்துடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை ஒளிக்கிடையில், நட்சத்திரங்களிலிருந்து பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளாக பயணம் செய்து வரும் மெல்லிய ஒளியை உணரும் தன்மை நம் கண்களுக்கு இல்லை. எனவே இயற்கையாக நட்சத்திரங்களை பார்க்கும்போது எழும் கேள்விகளும்,அடையும் விடைகளும் விளைவான மன விரிவும்!

தினம்தோறும் வானத்து நட்சத்திரங்களை பார்த்த நாட்களில், என் வீட்டிலோ சுற்றி இருக்கும் மற்ற வீடுகளிலோ மின் இணைப்பு இருந்திருக்கவில்லை. நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போதுதான் எங்கள் வீட்டில் மின் இணைப்பு வந்தது (என் சகோதரர்கள் இதை எழுதியிருந்தால் கல்லூரியில் சேர்ந்த பின்தான் வீட்டில் மின் இணைப்பு வந்தது என எழுதியிருப்பார்கள்.) பொருளாதார இயலாமை இதற்குக் காரணம் இல்லை. எங்கள் வீடு ரோடு ஓரமாக இருக்கவில்லை. எனவே மின்சார இணைப்பு பெறுவது எளிதாக இருக்கவில்லை. வீட்டில் மின் ஒயரிங் செய்யப்பட்டு மின்சார இணைப்பக்காக விண்ணப்பித்து, சுமார் நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அன்று எங்கள் வீடு பாசனத்துக்காக கேரளாவில் உள்ள நெய்யாறு அணையிலிருந்து நீர் வரும் சானல் ஓரமாக இருந்தது. இது அந்த அணையில் உள்ள இரு மதகுகளில், குமரி மாவட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட இடது மதகில் இருந்து தொடங்கியதால், இடது கரை சானல் என்னும் பொதுப்பெயரில் அழைக்கப்பட்ட சானலின் ஒரு இறுதிக் கிளை. இந்த சானல் 1960 களில், நெய்யாறு அணை கட்டப்பட்ட போது உருவாக்கப்பட்டது. நெய்யாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியின் ஒரு பாகம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. எனவே அப்போதைய புரிந்துணர்வு படி நான்கில் மூன்று பகுதி நீர் கேரள மாநிலத்திற்கும், நான்கில் ஒரு பகுதி நீர் குமரி மாவட்டத்திற்கும் சொந்தமாகும். 1956-ம் ஆண்டு, கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவிலிருந்து பிரிந்து தமிழ்நாட்டுடன் இணைந்தது. இந்த நீர் பகிர்வு புரிந்துணர்வு, அந்த கால கட்டத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.

எங்கள் வீடு இருந்த இடம், அந்த சானலின் ஒரு கிளையின் கிட்டத்தட்ட கடைசி முனை. எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த நான்கு பாசன குளங்களை நிறைத்த பின் எஞ்சிய நீர், சற்று தொலைவில் ஓடும் ஆற்றில் சென்று கலந்து, அங்கிருந்து கடலில் ஐக்கியமாகும். தற்போது எனக்கு மிஞ்சியிருக்கும் நினைவுகளின்படி 1982-ம் வருடம் வரை இந்த சானலில் வருடத்துக்கு குறைந்த பட்சம் நான்கு மாதங்களாவது நீர் வரத்து இருக்கும். அந்த நீரில் விளையாடுவதும், அருகில் உள்ள குளங்களில் விளையாடுவதும் முக்கியமான பொழுது போக்குகள்!

தற்போது கிடைக்கும் தரவுகளின் படி 2004-ம் வருடம் வரை, கேரளா குமரி மாவட்டத்திற்கு நீர் வழங்கிக்கொண்டிருந்திருக்கிறது. ஆனால் 1982-ம் வருடத்திலிருந்து, எங்கள் பகுதிக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய ஆரம்பித்தது. எனக்கு நினைவுக்கு எட்டியவரை, நெய்யாறு அணையிலிருந்து கடைசியாக 1987-ம் ஆண்டு, சானலின் இந்த எல்லைக்கு நீர் வரத்து இருந்தது. இடைப்பட்ட காலகட்டத்தில், மழைநீர் இந்த சானலின் வழியாக வழிந்து குளங்களை நிரப்பியது. 1982-ம் ஆண்டுக்குப்பின் இந்த நான்கு பாசன குளங்களை சாரந்த பாசன நிலங்களும், நெல் பயிரிடுவதை படிப்படியாக நிறுத்தி விட்டு வாழை, தென்னை போன்ற பயிர்களுக்கு மாறத்தொடங்கியது. இதற்கு ஒரு காரணம் நீர் வரத்து குறைவாக இருந்தாலும், கிட்டத்தட்ட இந்த காலகட்டத்திலிருந்து தொடங்கிய வேலையாட்கள் பற்றாக்குறையும் ஒரு முக்கியமான காரணம். 1994-ம் ஆண்டு வாக்கில் 90% நிலங்கள் நெல் பயிரிடுவது முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது.1996-ம் ஆண்டு, இந்த சானல் கிளையின் கடைசி சுமார் 2 கி.மீ. தூரம் ஊர்மக்களால் நிரப்பப்பட்டு சாலையாக மாற்றப்பட்டது. இரண்டு பாசன குளங்களுக்கு மழை நீர் வரத்தும் பெரும்பாலும் இல்லாமல் ஆகி விட்டது. இருந்தாலும், மழைக்காலங்களில் இந்த இரண்டு குளங்களிலும் இன்னும் நீர் நிரம்புகின்றன. ஆனால் எந்த குளங்களிலும், நீர் வரத்து உள்ள குளங்களிலும் கூட, கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக அரசாங்கத்தால் பராமரிப்பு பணிகள் செய்யப்படவில்லை. பொதுமக்களும் பராமரிப்பு பணிகள் செய்ய அரசாங்கத்தால் அனுமதிக்கப்படுவதில்லை! விளைவுகள்? - வன்புணர்ச்சியின் இன்னொரு வடிவம்?

அவ்வாறு எங்கள் வீடும் சானல் ஓரத்திலிருந்து சாலை ஓரத்திற்கு வந்து விட்டது. அதன் பின்னர் அந்த  சாலை ஓரத்தில் இன்னும் பல வீடுகளும், பல கிளைச்சாலைகளும், அங்கு செல்லும் மின் கம்பங்களும் அவற்றில் தொங்கும் தெரு விளக்குகளும் வீடுகளின் முகப்பில் இரவு முழுவதும் எரியும் CFL விளக்குகளும் படிப்படியாக நட்சத்திரங்களை மனிதர்களின் கண்களிலிருந்து மறைத்திருக்க வேண்டும்.

நட்சத்திரங்களை குவிந்த மனதுடன் பார்க்கும் ஒருவன், பிரபஞ்சத்தின் விரிவை உணர முடியலாம். அந்த விரிவை மனதிலும் விரித்தெடுக்கலாம். அவன் அகங்காரம், அவனை விட்டு அகன்று விடும் - குறைந்த பட்சம் வாழ்க்கையை அனுபவிக்கும் அளவுக்காவது! வாழ்க்கையை வாழும் அளவுக்காவது! நட்சத்திரங்களை ஒளியைக்கொண்டு மறைத்ததன் மூலம் மனவிரிவை அடைய உதவும் ஒரு இயக்கத்தையும் இழந்து விட்டோம். உறக்கத்துக்கு நடுவில் வீட்டிற்கு வெளியே வர வேண்டியிருக்கும் நடு இரவுகளில், வானத்தை அண்ணாந்துப் பார்ப்பதை என்னால் தவிர்க்க முடிவதில்லை. அடையும் ஏமாற்றத்தையும்!

Sunday, May 17, 2015

இறந்துபோன சத்தம்

சிறகு இணைய இதழில் 09-05-2015 அன்று பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.

என் பள்ளிப்பருவ நாட்களில், கிராமங்களில் அனைவருக்கும் நேரம் அறிந்து கொள்வது அவ்வளவு எளிதானதாக இருந்திருக்கவில்லை. அனைவர் கைகளிலும் வாட்ச் இருக்கவில்லை. அவ்வப்போது அந்த வழியாக செல்லும் அரசாங்க பஸ், வாட்ச் இல்லாத பொது மக்களுக்கு நேரத்துக்கான ஒரு அறிவிப்பு.

மார்த்தாண்டம் சந்தையில், ஒரு உயர்ந்த உலோகக் கோபுரத்தின் மேல் அமைத்திருந்த 'சைரன்' என்று அழைக்கப்பட்ட கருவியே அன்று பெரும்பாலானவர்களுக்கு விடிகாலை எழும் நேரம், பள்ளிக்குச்செல்லும் நேரம், தொழிலுக்குச் செல்லும் நேரம், தொழிலில் உணவு நேரம், தொழில் முடியும் நேரங்களை அறிவித்து, இரவில் உறங்கவும் வைத்தது. விடிகாலை 5 மணி, காலை 9 மணி, மதியம் 12 மணி, பின் மதியம் 3 மணி மற்றும் இரவு 9 மணிகளில் ஒலித்து அனைவருக்குமான காலத்தின் பொது வெளிப்பாடாக இருந்தது. மார்த்தாண்டம் சந்தையிலிருந்து சற்றேறக்குறைய 3 கி.மீ. தொலைவில் உள்ள எங்கள் வீட்டிலும் மிகத்தெளிவாகவும் சத்தமாகவும் கேட்கும்.

இன்று அந்த சத்தத்துக்கான தேவையும் இடமும். இல்லை. அது இறந்தாக வேண்டிய சத்தம், இறந்தும் விட்டது. எப்போது இறந்தது என சரியாக ஞாபகம் இல்லை. குறைந்தபட்சம் 15 ஆண்டுகளாவது ஆகியிருக்கும். ஆனால், இன்று பல இறந்தாக வேண்டிய சத்தங்கள் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. பலவற்றின் பிறப்பு, அவற்றின் தேவை முடிந்த பின்பே நிகழ்ந்திருக்கிறது!

இப்போது ஒலித்த இந்த எலக்ட்ரானிக் மணிதான் இதை எழுதத் தூண்டியது. இரவு சுமார் பத்து மணி. வீட்டுக்கு சற்று தொலைவிலுள்ள கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினருக்குச் சொந்தமான சர்ச்-லிருந்து எலக்ட்ரானிக் மணி 10 முறை அடித்து ஓய்ந்தது. கூட பைபிளில் இருந்து தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஒரு பதிவு செய்யப்பட்ட வசனமும் ஒப்புவிக்கப்பட்டது. இன்னும் 10 நிமிடங்களுக்குள் வேறு இரு பிரிவினரின் சர்ச்-களிலிருந்தும் 10 மணி அடித்து, பைபிள் வசனமும் கூறப்பட்டு ஓயும். ஆக, ஒரு மணி நேரத்துக்கு மூன்று வசனங்கள் வீதம் ஒரு நாள் முழுவதுமாக 72 வசனங்கள், விழித்திருக்கும்போதும் உறங்கும்போதுமாக, நான் வீட்டில் இருந்தால் என் செவியை வந்தடையும். என்னால் ஒன்றும் செய்ய முடியாது! என்னை விட்டு விடலாம். வேறு யாராவதாவது, அவற்றில் ஒரு வசனத்தின் உட்பொருளையாவது அறிய அல்லது அன்றாட வாழ்க்கையிலோ ஆன்மீக வாழ்க்கையிலோ பயன்படுத்த விரும்புகிறார்களா? இல்லையெனில் யார் கேட்டு அறிவதற்காக அந்த வசனம் ஒலிக்கிறது?

உண்மையில் யாரும் அறிவதற்காக அது ஒலிக்கப்படுவதில்லை. யாரும் அறியவோ, பயன்படுத்தவோ விரும்பவும் இல்லை. கிறிஸ்தவர்கள் அனைவரும், மனனமாக அவற்றை அறிந்திருப்பர். அது, ஒரு சிலர் தங்கள் பெருமையை பறைசாற்ற ஒலிக்கப்படுகிறது - பிறர் அந்த வசனங்களின் உட்பொருளை அறியவேண்டும் என்னும், பறைசாற்றப்பட்ட நோக்கத்துடன்! அந்தந்த சர்ச்சுகளின் அதிகாரத்தில் இருப்பவர்களின் மகிழ்ச்சிக்காக, பெருமைக்காக ஒலிக்கப்படுகிறது. அந்த சர்ச்சுடன் தங்களை அடையாளப்படுத்தியிருப்பவர்களின் அகங்கார நிறைவுக்காக ஒலிக்கிறது. இன்று பெரும்பாலான இடங்களில் வாழும் மனிதர்களுக்கு நேரத்தை கூவி அறிவிக்க வேண்டிய தேவை இல்லை. எனவே ஒவ்வொரு மணிநேரத்துக்கும் ஒருமுறை ஒலிக்கும், நடு இரவுகளிலும், இரவின் அமைதியை துணையாகக் கொண்டு இன்னும் ஓங்காரத்துடனும் ஒலிக்கும் இந்த சத்தங்கள் இறந்து போக வேண்டிய சத்தங்கள்.

2010-ம் வருஷம் பிப்ரவரி மாதம், கேரளமாநிலம் கெவி (Gavi) என்னும் இடத்தில் அடர்காட்டுக்குள், கேரளா சுற்றுலாத்துறையால் அமைக்கப்பட்டிருந்த சூழியல் சுற்றுலாதலத்துக்கு (Eco Tourism) சென்றிருந்தோம். இந்த இடம் சபரிமலைக்கு அருகில் உள்ள, மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. இங்கிருந்து சபரிமலையின் மகரவிளக்கு எரியும் பொன்னம்பலமேடு பகுதி தெரியும். ஒரு நாள் நடுப்பகலிலிருந்து அடுத்த நாள் நடுப்பகல்வரை அங்கு தங்கியிருந்து இயற்கையை அறியும் முயற்சி! ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு வழிகாட்டி. நான் என் குடும்பத்தினருடன் சென்றிருந்தேன். எங்கள் நான்குபேருக்குமாக மட்டும் ஒரு வழிகாட்டி. மாலையில் அடர்காடுகளூடாக சுமார் இரண்டு மணி நேர நடை பயணம். அதன் பின் காட்டின் இரவு ஒலிகளுக்கிடையில் உறக்கம். மறுநாள் காலை விடியும் நேரத்தில் காட்டு யானைகளைத்தேடி வாகனத்தில் ஒரு பயணம். விரும்பினால் காட்டினுள் மீண்டும் ஒரு நடை பயணம். அற்புதமாக இருந்தது. இதுவும் ஒரு ஊடுருவல்தான்!

அந்த வழிகாட்டியிடமிருந்து சில விஷயங்களை தெரிந்து கொண்டோம். சபரிமலை சீசன் நாட்களில் இந்த சுற்றுலாதலம் மூடப்பட்டிருக்குமாம். அதற்குக் காரணம், சபரிமலையில் வெடி வழிபாடு எனக்கூறப்படும் ஒன்று. வெடி வேட்டுகளின் அதீத சத்தத்தினால் காட்டு யானைகள், கலக்கமடைந்து, கட்டுப்பாடு இழந்து வன் செயல்களில் ஈடுபடுமாம். அந்தக் காலங்களில், யானைகள் எதிர்பாராமால், நுழைந்து கலகத்தில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளதால், இங்கு தங்கியிருப்பது மிகவும் ஆபத்தானதாக இருக்கும். சாதாரணமாக, இந்த கால கட்டத்தில் இங்கு இருக்கும் பெரும்பாலான யானைகளும் மற்றும் பல விலங்கினங்களும், இந்த சுற்றுப்புறத்தை விட்டு காட்டில் வெகு தூரம் சென்றுவிடுமாம். பின்னர் மனிதர்களின் அட்டூழியம் அடங்கியபின்னர் திரும்பி வருமாம். கடவுளை வணங்குவது என்னும் பெயரில் மனிதர்களின் தரம்தாழ்ந்த சிந்தனையற்ற கடவுளை துரத்தும் செயல். கடவுளை துரத்திவிட்டு அங்கே கடவுளை வணங்கச் செல்கிறார்கள். முரண்நகைதான்!

சபரி மலைக்கு, மிகக்குறைந்தபட்ச மனிதர்கள், முற்றிலும் ஆன்மீக காரணங்களுக்காக, முற்றிலும் அக பயணத்தின் பொருட்டு சென்ற ஆதி நாட்களில், பாதுகாப்புடன் சென்று திரும்ப இந்த வெடிகள் உபயோகப்பட்டிருக்கலாம். என்றோ ஒரு நாள், சில மனிதர்களின் மிக ஆழமான அக பயணத்திற்காக, இவை தேவைப்பட்டிருகலாம். ஆனால் இன்றோ, அறிவிழந்த வெற்று வேட்டுகள், அந்த தேவையை ஒரு சடங்காக்கி, முற்றிலும் வணிகமயமாக்கப்பட்ட, விலங்குகளின் வாழ்விடங்களின் நடுவில் இருக்கும் சபரிமலைக்கு, கும்பல் கும்பலாக, ஆன்மீகம் என்னும் பெயரில் சென்று அழிச்சாட்டியம் செய்வது, உண்மையில் ஆன்மீகத்தை மனிதனிடமிருந்து பறித்தெறிய மட்டுமே செய்யும். தற்காலத்தில், கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளையங்கிரி மலை, தென் கைலாயம் என்னும் பெயரில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஈஷா யோகமையத்தால் ஆன்மீக சுற்றுலாதலமாக மாற்றப்பட்டு வருகிறது. ஒருவேளை இன்று அது மிகச் சரியான காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால், ஜக்கி வாசுதேவ் அவர்களின் காலத்திற்குப் பின்னால், ஒருவேளை அப்போதும் தென் கைலாயம் என்னும் வணிகப்பெயரை பயன்படுத்த முடிந்தால், அப்போது அங்கும் ஆன்மீகத்தின் சாரம் முற்றிலும் அழிந்து விலங்குகளின் இருப்பிடத்தில் சென்று மனிதர்கள் நிகழ்த்தும் அழிச்சாட்டியமாகவே மாறும். இந்த சத்தங்களும் இறந்து போக வேண்டிய ஒன்று. துரதிர்ஷ்டவசமாக, இப்போதுதான், மனிதனின் கீழ்மையை உரமாக கொண்டு அவை வளர்ந்து வருகின்றன.

இன்று பிறந்து வளர்ந்து வரும் சத்தங்களில் பல அவற்றின் தேவை முடிந்த பின்னரே பிறந்துள்ளன. உதாரணமாக மேல குறிப்பிட்ட மதங்கள் தொடர்பான சத்தங்கள். ஆனால் இன்று மிகவும் தேவையான சத்தங்களில் பல இன்னும் பிறக்கவே இல்லை. உதாரணமாக, மதவாதத்திற்கு எதிரான சத்தங்கள்! இங்கு நான் மதவாதம் எனக்கூறுவது, இந்தியாவில் பெரும்பாலும் கூறப்படும் Pzedo மதவாதம் அல்ல. ருவாண்டா படுகொலைகளுக்கு அடிப்படை காரணமான, ருவாண்டாவின் இனப்பாகுபாட்டை ஊதிப்பெருக்கிய மேற்கின் மதவாதம்! மத்திய கிழக்கு ஆசியாவில், தங்கள் மதத்தில் கூட வேறு பிரிவை சார்ந்தவர்களையும், தினம்தோறும் நூற்றுக்கணக்கானவர்களை அழித்தொழிக்கும் மதவாதம்! இந்தியாவிலும் Pzedo மதவாதக் கருத்துக்களால் தூண்டப்பட்டு, எல்லாத் தரப்புகளிலும் எழும் மதவாதம்! தேவையன்றி எழும் சத்தங்கள் உயிரினங்களின் செவிப்பறைகளை நாள்தோறும் செவிடாக்கி வருகின்றன. அறிவையும் கூட!

ஓலி மாசு! மற்ற எல்லாவித மாசுகளைப் போல, மனிதனின் வாழ்க்கை வசதிகள் என்னும் பெயரிலும், பொருளாதார வளர்ச்சி என்னும் பெயரிலும் வாழும் சூழலை, மற்ற எல்லாவற்றையும் போல, ஒலியாலும் நிறைத்து வைத்திருக்கிறோம். ஒலி மாசு பற்றி அறிய, சத்தத்தின் பொதீக இயல்புகள் குறித்து சற்று அறிந்திருப்பது உதவலாம். அதற்கும் முன்; மனிதர்களால் அறிய முடிவது, உலகின் இருப்புகள் மனிதனின் ஐம்புலன்களில் ஏதாவது ஒன்றிலோ ஒன்றிற்கு மேற்பட்டவற்றிலோ மோதும்போது, அந்த மோதல் புலன்களால் உணரப்படுவதையும், அவ்வாறு உணரப்பட்டவற்றை ஆறாவது புலனாகிய (அல்லது அறிவாகிய) மனதைக்கொண்டு கற்பனை மூலம் விரித்தெடுப்பவைகளையும் மட்டுமே. ஐம்புலன்களால் உணரப்படுபவையின் எல்லை, பிரபஞ்ச இருப்பை கருத்தில் கொண்டால், மிகமிக சிறிய அளவு மட்டுமே. மனதால் அடையப்படும் கற்பனையையும் சேர்த்தாலும் மனித அறிவின் அளவு, பிரபஞ்ச அறிவுடன் (அல்லது இருப்புடன்) ஒப்பு நோக்கையில், பெருங்கடலின் ஒரு துளியின் சிறு பாகம் மட்டுமே. அறுதி பெரம்பான்மையான மக்களுக்குக் கற்பனை என்பதோ, அவர்களின் வாழ்க்கைத்தேவைகளை ஒட்டி மட்டுமே இருக்கும். கற்பனையால் புலன்கள் அறிந்தவற்றை கடந்து செல்லும் வாய்ப்பு அவர்களுக்கு பெரும்பாலும் இல்லை. மிகமிகமிக குறைந்த எண்ணிக்கையிலான மனிதர்களால் மட்டுமே கற்பனையில் பறந்து, உண்மையான இருப்பின் சிறு துளியின் நுண் பாகத்தையாவது அறிய முடியலாம் - அந்த சிறுதுளியின் அறிவு, முழுபிரபஞ்சம் குறித்த அறிவாகவும் இருக்கக்கூடும்!

ஒலியென நாம் அறிவது, பிரபஞ்ச இருப்பு ஒலியலைகள் மூலம் காற்றில் எழுந்து வந்து நம் புலன்களில் ஒன்றாகிய செவியை அடைவதைத்தான். ஒலி அலைகளின் இயக்கம், மற்ற அலை இயக்கங்களான ஒளி அலை, மின்காந்த அலை, மின்சார அலை போன்றவைகளிலிருந்து வேறுபட்டது. அலைகள், பொதீகப் பொருள்களின் இயக்கம். எனவே பொதீக விதிகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டது.  ஒளியலை ஆனாலும், ஒலியலை ஆனாலும், நம் மொபைல் ஃபோன்களில் வந்து சேர்ந்து ஒலியாக மாற்றமடையும் மின்காந்த அலைகளானாலும், அந்த அலைப்பரவல் பொதீக பொருள்களின் மூலமே அலையின் தொடக்கப்புள்ளியிலிருந்து நம் புலனை வந்தடைகிறது.

அலைகளின் இயக்கத்தை அறிய எளிய வழி, நீரப்பரப்பில் எழும் அலைகள். அலைகள் மேலும் கீழும் அசைந்து, அந்த அசைவுக்குச் செங்குத்தான திசையை நோக்கி அலை பரவும். இத்தகைய அலைகள், குறுக்குவட்ட அலைகள்(Transverse waves)  என அழைக்கப்படுகிறது. அலைகளில் வியக்கவைக்கும் அம்சம், அந்த அலைகளில் இயங்கும்  பருப்பொருட்களின் இயக்கம். அலையை காணும்போது, அந்த அலையின் பரவலில் ஈடுபட்டிருக்கும் பருப்பொருட்களும், அலையுடன் செல்வது போல் தோன்றும். உண்மையில், அந்த பருப்பொருட்கள், அலை பரவும் திசைக்கு செங்குத்தான திசையில், ஒரே புள்ளியின் இருபுறமாக இயங்கிக்கொண்டிருக்கும். நீர் அலைப்பரப்பின் மேல் மிதக்கும் இலையின் இயக்கத்திலிருந்து இதை அறியலாம்,

மற்றொரு வகை அலை நீள்வாக்கு  அலை(Longitudinal wave) எனப்படுகிறது. ஒலை அலைகள் இந்த வகையை சார்ந்தது. ஓலி அலைஇயக்கத்தில், அலை பரவும் திசைக்கு இணையாக, அந்த அலையைப் பரப்பும் ஊடகத்தின் இயக்கம் இருக்கும். அதாவது, ஒலி அலை காற்றில் பரவும்போது, காற்றின் துகள்கள் அலைபரவும் திசைக்கு இணையாக முன்னும் பின்னும் இயங்கி, அந்த அலையை முன்னோக்கிப் பரவச்செய்யும்.அலைகளின் இந்த இயக்கங்களை, இந்த இணையதளத்தில், எளிதாக புரிந்தகொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. http://www.acs.psu.edu/drussell/Demos/waves/wavemotion.html

அலைகளின் பொதீக இயல்புகளை அதன் அதிர்வு (Frequency), அலைநீளம்(Wave Length), வீச்சு(Amplitude), செறிவு(Intensity) ஆகிய பொதீக அளவீடுகளின் மூலம் மதிப்பிடப்படுகிறது. இவற்றில் முதல் மூன்று இயல்புகளும், எல்லாவிதமான அலைகளுக்கும் ஒரே அலகால் (Unit) அளக்கப்படுகிறது. செறிவு மட்டும் அந்தந்த அலைகளின் தனித்தன்மைக்கேற்ப வேறு வேறு அலகுகளால் அளக்கப்படுகிறது.
இங்கு பேசும் பொருள் சத்தம். மனிதர்கள் எல்லா வகையான சத்தங்களையும் கேட்க முடியாது. ஒரு குறிப்பிட்ட அதிர்வுகளுக்குள் அதிரும் ஒலியை மட்டுமே மனிதச் செவியால் கேட்க முடியும். அலைகளின் அதிர்வு, ஹெர்ட்ஸ் (Hz) என்னும் அலகால் அளக்கப்படுகிறது. அலையை கடத்தும் ஊடகம், அலை செல்லும் இடத்தில், ஒரு வினாடிக்கு எத்தனை முறை அதிர்கிறது என்பதே அதிர்வு ஆகும். உதாரணமாக நீர் அலையில், நீர்ப்பரப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட புள்ளி, அலைபரவும்போது ஒரு வினாடிக்கு எத்தனை முறை மேலும் கீழுமாக அசைகிறது என்பதாகும். அந்தப் புள்ளி மேலும் கீழும் அசைவதற்கு ஐந்து வினாடிகள் எடுத்துக்கொண்டால், அலையின் அதிர்வு, 0.2 Hz. ஒலி அலைகளின் அதிர்வு 20 Hz முதல் 20000 Hz க்குள் இருந்தால் மட்டும்தான், மனித செவியால் ஒலியை அறிய முடியும். ஒலியின் அதிர்வுகள் இந்த இடைவெளிக்கு அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் அவற்றை நம்மால் கேட்க முடியாது. சில உயிரினங்களின் புலன்கள், இந்த எல்லைக்கு வெளியே இருக்கலாம். உதாரணமாக, வவ்வாலினால் 20000 Hz க்கு அதிகமான அதிர்வுள்ள ஒலிகளை மட்டுமே உணரமுடியும். அவை வேறு ஒலிஉலகத்தில் வாழும் உயிரினம்.

அதாவது, நமது புலன்களின் அறியும் திறன் மிகமிக குறைவானதே. இந்த அதிர்வு இடைவெளிக்குக் குறைவான அதிர்வுள்ள ஒலிகளும் அதிகமான அதிர்வுள்ள ஒலிகளும், நம்மைச் சுற்றி எங்கும் எப்போதும் நிறைந்திருக்கின்றன. ஆனால் அவற்றை நாம் அறிய முடியாது. ஏன்? கற்பனை செய்யவே முடியும் என்றும் தோன்றவில்லை. மனிதனின் அறியும் திறனின் மிகச்சிறிய எல்லை! மறைஞானம் எனவும் Mystic எனவும் அழைக்கப்படுவது, பெரும்பாலும் இந்த புலன்களின் எல்லைக்கு வெளியே நிகழும் நிகழ்வுகளையே.

அதிக அதிர்வுள்ள ஒலிகளால் நம் காதுகள் பாதிக்கப்படுவதில்லை. அவற்றால் அந்த ஒலிஅலைகளை உணர முடியாது. ஆனால் செவியின் தாங்கும் திறனை விட அதிக செறிவுள்ள ஒலியலைகளால் நம் செவிகள் அதன் கேட்கும் திறனை முற்றிலும் இழக்கலாம். ஒலியின் செறிவு, டெசிபல் (dB) என்னும் அலகால் அளக்கப்படுகிறது. உதாரணமாக, நாம் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும்போது எழும் ஒலியின் அளவு சுமார் 60 dB அளவில் இருக்கும். ஸ்டீரியோ பிளேயர், முழு சத்தத்தில் இயக்கினால் எழும் ஒலியின் அளவு சுமார் 105 dB வரை இருக்கும். வானத்தில் இடி ஒலிக்கும் சத்தம் 120 dB வரை இருக்கும். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் 140 முதல் 160 வரை இருக்கும்.

85 dB வரையிலான செறிவு கொண்ட சத்தத்தினால் செவிக்கு எந்த அபாயமும் இல்லை. அதற்கு அதிகமான ஒலியை தொடர்ந்து கேட்க நேர்ந்தால் செவி அதன் கேட்கும் திறனை, ஒலியின் செறிவுக்கேற்பவும், செவியில் ஒலிக்கும் நேரத்திற்கேற்பவும், அதன் கேட்கும் திறனை இழக்கலாம். உதாரணமாக 105 dB அளவில் உள்ள தொடர்ச்சியான சத்தம் ஒரு மணி நேரம்வரை நம் செவிகள் தாங்கலாம். அதற்கு மேல் தொடர்ச்சியாக கேட்க வேண்டி இருந்தால், செவி பாதுகாப்புக்கான கருவிகளை உபயோகப்படுத்த வேண்டும் அல்லது கேட்கும் திறனை இழக்க வேண்டும். 140 dB அளவு, 30 வினாடிகள்வரைக்கும் நம் செவிகள் தாங்கிக்கொள்ளலாம். 160 dB -க்கு அதிகமான ஒலி, நம் கேட்கும் திறனை உடனடியாக இழக்க வைக்கும் திறன் உடையது.

இன்று நம்மைச் சுற்றி எப்போதும், பல்வேறு செறிவுகளில், எல்லா திசைகளிலிருந்தும் ஒலிகள் வந்து கொண்டிருக்கின்றன. தொழிலில் ஒலி அலைகளுக்கிடையில் இடைவிடாது இருப்பது தவிர்க்க இயலாதது. ஆனால், அமைதியாக நிகழவேண்டிய பொழுது போக்குகளும், இறைவணக்கமும், காதை செவிடாக்கும் செறிவுள்ள ஒலிகளுக்கிடையில் நடைபெறவேண்டிய நாகரீகத்திற்கு நம் சமூகம் சென்று விட்டது. இத்துடன், நம் இருப்பிடத்தை சுற்றிச் செல்லும் பொருளாதார முன்னேற்றத்தை பறை சாற்றும் வாகனங்களும், தொழில்களும் செறிவான ஒலி அலைகளை தொடர்ந்து நம் செவிக்கு அளித்துக்கொண்டே இருக்கின்றன. இடைவிடாது செவியை வந்தடையும் ஒலிகள், நம் வாழ்வின் அங்கமாக மாறிவிட்டது. தவிர்க்கும் வழிகள் எளிதானதாக இல்லை.  


பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளும், என்றாவது ஒருநாள் இறந்து போகவேண்டியவை. தேவையான நேரத்தில் பிறந்து, தேவை முடிந்த பின் இறந்து விடுபவைதான் உண்மையில் வாழ்பவை, வாழ்ந்தவை. அந்த 'சைரன்' வாழ்ந்து இறந்த ஒன்று!

blog.change@gmail.com