Sunday, March 29, 2015

தீ

28-03-2015 அன்று சிறகு இணையதளத்தில் வெளியான கட்டுரை.

இந்திய மரபில் நெருப்பு முதன்மையான தெய்வம். நெருப்பு எரிய, மூன்று இருப்புகள் அவசியம். விறகு எனப்படும் எரிபொருள். ஆக்ஸிஜன் எனப்படும் பிராண வாயு, தேவையான வெப்பம். இவை மூன்றும் குறிப்பிட்ட குறைந்தபட்ச அளவை (Thrush hold) விட அதிகமாக இருந்தால்தான் நெருப்பு எரிய முடியும். நெருப்பு எரிய அவசியமான இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து, நெருப்பு முக்கோணம் (Fire Triangle) என கூறப்படுகிறது. நெருப்பை அணைக்க உதவும் (Fire Fighting) எல்லா முறைகளும், இந்த மூன்று காரணிகளில் ஒன்றை, குறைந்த பட்ச அளவை விடை குறைவாக கொண்டுவருவதன் மூலமே நெருப்பை அணைக்க முயல்கின்றன.  எரியும் நெருப்பில் இவற்றில் ஏதேனும் ஒன்று குறைந்தாலும், அந்த நெருப்பு அணைந்து விடும். இன்றைய நம் நாகரீகமும், நாகரீகத்தின் வெளிப்பாடாக கருதப்படும் புற வாழ்க்கை வசதிகளும் நெருப்பிலிருந்தே பெறப்படுகிறது. நெருப்பின் இருப்பே தொழிலாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. எனவே பொருளாகவும்!

நெருப்பு என்பது சக்தி. நாம் அன்றாடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தும் சக்தியின் பெரும்பகுதி நெருப்பிலிருந்தே பெறப்படுகிறது. காற்றாலை, சூரிச சக்தி, நீர்மின் சக்திக்கு தேவையான மழை, இவை யாவையும் சூரியனின் வெப்பத்தால் (நெருப்பினால்) பூமியில் ஏற்படும் சலனங்களின் மூலமே பெறப்படுகிறது. எனவே நெருப்பிலேயே நம் இருப்பும் அமைந்துள்ளது. அந்த நெருப்பை வணங்குவோம்! நெருப்பு அதன் மேல் அமரும் எதையும் எரித்தழிக்கும் இயல்புடையது. நெருப்பிலிருந்து நம் இருப்பை பெறும்போது, அந்நெருப்பின் இயல்பை அறிந்து, அதன் வெம்மையை, நம்மை எரிக்கும் அளவுக்கு குறைவாகவே அதனை கையாளவும் அறிந்திருக்க வேண்டும்.

இன்று மனிதர்களின் இயக்கத்துக்கு தேவையான சக்தியின் பெரும்பகுதி பெட்ரோலியம் எண்ணையிலிருந்து கிடைக்கும் பொருட்களையும் இயற்கை வாயுவையும் நிலக்கரியையும் எரிப்பதன் மூலம் பெறப்படுகிறது. இதுவரைக்கும் கண்டு பிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் வளம், இன்னும் 40 வருட கால தேவைக்கு போதுமானதாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரைக்கும் பெரும்பலான உலகின் எண்ணெய் இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றே தோன்றுகிறது - ஆர்டிக் போன்ற துருவப்பகுதிகளில் எண்ணெய் எடுப்பதற்காக நாடுகளுக்கிடையே நிகழும் போட்டிகளை கவனித்தால்! ஒருவேளை, இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அளவுக்கே இன்னும் எண்ணெய் இருப்புகள் கண்டுபிடிக்கப்படுமானாலும், மேலும் ஒரு 40 வருட கால தேவைக்கு போதுமானதாக இருக்கலாம். அதாவது இன்னும் 80 வருடகாலங்களில், பல கோடி ஆண்டுகளின் இயக்கங்களால் உருவான எண்ணை வளத்தின் பெரும் பகுதி மனிதர்களால் நெருப்பாக மாற்றப்பட்டு சக்தியாக நுகர்ந்து முடிக்கப்பட்டு விடும். நிலக்கரி வளம் மேலும் ஒரு 100 வருடங்கள் வரை இருக்கலாம்.

பெட்ரோலியப்பொருட்களும் நிலக்கரியும் பூமி உருவாக்கி அளித்துள்ள சக்தி. பூமிக்குள் பல கோடி ஆண்டுகளுக்கு முன், நாம் அறியாத பூமியின் இயக்கத்தால், புதைந்த தாவரங்களும் மற்ற உயிரினங்களும், பூமியின் வெப்பத்தாலும், ஊடான வேதிமாற்றங்களாலும் பெட்ரோலியமாகவும் நிலக்கரியாகவும் மாற்றமடைந்துள்ளது. இன்னும் 100 அல்லது 200 வருடங்களில் பெட்ரோலியமும் நிலக்கரியும் முற்றிலும் நுகர்ந்து முடிந்து விட்டபின், மீண்டும் பூமியிலிருந்து அவை கிடைக்க வேண்டுமானால், இன்றைய பூமி முழுவதும் சிதைவுண்டு, அதன் காடுகள் மண்ணுக்குள் புதைந்து, பல கோடி ஆண்டுகளுக்கு பின்னால் மட்டுமே முடியும் - அப்போது புதிதாக தோன்றியிருக்கும், பெட்ரோலியத்தை கண்டறிய முடியும் உயிரினத்துக்காக!

தற்போது கிடைக்கும் தரவுகளின் படி, பெட்ரோலியம் முதன் முதலாக கி.மு. 450 ஆண்டுகள் வாக்கில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். அதன் பின் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு இடங்களில், பல்வேறு வகைகளில் பெட்ரோலியம் எடுக்கப்பட்டு பல்வேறு பயன்பாடுகளுக்காக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அவை அனைத்தும் தற்செயலான நிகழ்வுகளாக இருந்திருக்கக்கூடும். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, எண்ணை கிணறுகள் உருவாக்கப்பட்டு, பெட்ரோலியம் பொருளாதார பயன்பாட்டுக்கு தேவையான சக்திக்காக பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 19 -ம் நூற்றாண்டின் இறுதியில், இன்று நாம் பயன்படுத்தும் வாகனங்களுக்கு முன்னோடியான பெட்ரோலியம் எண்ணையிலிருந்து பெறப்பட்ட எரிபொருட்களைக்கொண்டு இயங்கும் வாகனங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின் பெட்ரோலியம் எண்ணெயின் தேவை எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் அறிவோம். பெட்ரோலிய எண்ணை வளங்களுக்காகவும் இயற்கை வாயுவுக்காகவும் அவற்றால் பெறும் பொருளாதார  ஆதாயங்களுக்காகவும் பல அதிகாரப்போட்டிகளும், யுத்தங்களும், உள்நாட்டு கலவரங்களும்........

பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுவிலிருந்து சக்தி இரண்டு வழிகளில் பெறப்படுகிறது. முதலாவதாக, பெட்ரோலிய பொருட்களை எரிப்பதன் மூலம் உருவாகும் வெப்பத்தை இயந்திர சக்தியாக மாற்றுவதன் மூலம் பெறப்படுகிறது. வாகனங்களின் இயக்கம் இந்த வகையில் பெறப்படுகிறது. இரண்டாவது முறை, எரிப்பதன் மூலம் உருவாகும் இயந்திர சக்தி, மின் சக்தியாக மாற்றப்பட்டு, தேவைப்படும் இடங்களுக்கு மின் கம்பிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் இயந்திர சக்தியாகவோ அல்லது வேறு தேவைப்படும் சக்திகளாகவோ மாற்றப்படுகிறது. நிலக்கரியிலிருந்து தற்காலத்தில் இரண்டாவது வழியில் மட்டுமே சக்தி பெறப்படுகிறது. இயந்திர புரட்சியின் ஆரம்ப காலத்தில், நிலக்கரியின் எரிசக்தி, நீராவி எஞ்சின்கள் மூலம் நேரடியாக இயந்திர சக்தியாக மாற்றப்பட்டது.

இன்று நாம் உபயோப்படுத்தும் சக்தியின் பெரும்பகுதி, வாகனங்களை இயக்கும் சக்தியை தவிர, மின் சக்தியே. மின்சக்தியின் பெரும்பகுதி நிலக்கரியிலிருந்தும் இயற்கை வாயுவிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. இன்னொரு சிறு பகுதி, சில தனிமங்களின் அணுக்களை, மிகவும் கட்டுப்பாடான நிலைகளில் பிளப்பதன் மூலம் உருவாகும் வெப்பத்தால், நீரை ஆவியாக்கி, அந்த ஆவியின் அழுத்தத்தால் பெறப்படும் இயக்க சக்தியை மின் சக்தியாக மாற்றப்படுகிறது. இன்னொரு மிகச்சிறிய பகுதி, Green Energy அல்லது பசுமை சக்தி எனப்படும் சூரிய ஒளி, காற்று சக்தி, தேக்கி வைக்கப்பட்ட நீரின் இயக்கசக்தி போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது.
இவற்றில் இயற்கை வாயு இன்னும் அதிகபட்சம் 100 வருடங்களுக்கு மட்டுமே. நிலக்கரி அதிலிருந்து ஒரு 100 வருடங்களுக்கு கூட இருக்கலாம். மிச்சமிருப்பது அணு சக்தியும் பசுமை சக்தியும் மட்டுமே. அல்லது புதியதாக ஏதேனும் முறைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அணு சக்தி, தற்போதைய நிலையில் மிகவும் ஆபத்தானது. ஆனால் அவை மனித இனத்துக்கு தேவையும் கூட.

தற்போதைய நிலையில், தனிப்பட்ட முறையில் நான் அணு சக்திக்கு எதிரானவன். பல்வேறு காரணங்கள். முக்கியமாக அணுசக்தி மேலாண்மையில் உள்ள அசிங்கமான அரசியலின் காரணமாக, அதன் விளைவான ஆபத்துகளும், எளியோரை சுரண்டுதலும் என்னும் அரசியல் விளையாட்டுகளின் காரணமாக.  அறியாமையும் காரணமாக இருக்கலாம்! ஆனாலும், மனித இனம் வாழ, அடைந்த நாகரீகத்தை தக்க வைத்துக்கொள்ள, இன்றைய நிலையில் அணு சக்தி தேவையானதாகவே இருக்கக்கூடும். எனில் அதன் ஆபத்துகளை என்ன செய்வது? அரசியலுக்கு அப்பாற்பட்டு, குறுகியகால விருப்பு வெறுப்புகளை கைவிட்டு, அனைத்து தரப்புகளும் சேர்ந்து அணு சக்திக்கான கொள்கைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். பல்வேறு கோணங்களில்! அனைவரும் ஏற்றுக்கொள்ளும் முடிவுக்கு வர வேண்டும் - முக்கியமாக அணுக்கழிவுகள் குறித்தும்! இன்றைய அரசியல் நிலையில் இது சாத்தியமற்ற எதிர்பார்ப்பு, அனைத்து எதிர்பார்ப்புகளையும் போல! குறுகிய கால விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் இயங்கும் அரசாங்கங்களினால்! செறிவூட்டப்பட்ட அணுக்கழிவுகள் மிகவும் ஆபத்தானவை. நம் சாதாரண அன்றாட வாழ்க்கைக் கழிவுகளையை அகற்ற தேவையான கொள்கைகளும் கட்டமைப்புகளும் இல்லாத மனித இனம், அணுக்கழிவுகளை கையாள இன்னும் அறிந்திருக்கவில்லை. தற்போதைய நிலையில் எத்தகைய சமாளித்தல்களை கையாண்டாலும்!        
       
                                              *      *      *      *      *      *       

நான் கடந்த சில வருடங்களாக சக்தியை உபயோகிப்பதில், வீணாக்காமல் இருப்பதில், விழிப்புடன் இருக்க முயற்சி செய்து கொண்டிருப்பவன். மிகவும் எளிய காரணம்தான். நான் இந்த பூமியின் ஒட்டுயிரி. அதன் தயவில் என் இருப்பை அடைந்தவன். அதன் தயவில் என் இருப்பை தக்க வைத்துக்கொண்டிருப்பவன். அந்த பூமியிலிருந்து என் தேவைக்கு அதிகமாக எடுப்பது, அதன் மூலம் அதன் இருப்பை, சமநிலை குலைவை, வாழும் மற்ற உயிரினங்களின் உரிமையை பறிப்பது போன்றவற்றிற்கு நானும் துணையாக செல்வது என்பது என் இருப்பை தாங்கும் மகாஇருப்புக்கு செய்யும் துரோகமாகும். எனவே இந்த முயற்சி.

உண்மையில், இது என் முயற்சி என்று சொந்தம் கொண்டாட முடியாது. என் 'அப்பா'விடமிருந்து நான் பெற்றுக்கொண்ட பலவற்றுள் இதுவும் ஒன்று. அவர் எதற்காக வீணாக்குதலை தவிர்த்தார் என்பதற்கு அவருக்கேயான காரணங்கள் இருக்கலாம் - ஆன்மீக காரணங்களோ, பொருளாதார காரணங்களோ அல்லது இரண்டுமோ!

அவர் பெரும்பாலும் நிர்ப்பந்தமாகவே எவற்றையும் வீணாக்கமல் இருக்கும் தன்மையை என்னுள் கொண்டுவந்தார் என்றே நினைக்கிறேன். பலமுறை அவரின் நிர்ப்பந்தங்கள் எதிர்மறையான எண்ணங்களை எனக்குள் உருவாக்கியிருக்கின்றன. சில வசதிகளுக்காக கூட வீணாக்காமல் இருப்பது பொருளாதார காரணத்தால் மட்டுமே என்னும் எண்ணம் என் மனதில் இருந்துவந்தது என்பது, ஒருவேளை அந்த எதிர்மறை எண்ணங்களுக்கான காரணமாக இருந்திருக்கலாம். அவற்றுக்கான வேறு காரணங்களையும் என்னால் அறிய முடிந்தபின், அவரை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன் - நேரடியாக அவரிடம் கூற என் மனம் இடம் கொடுக்காததால்!

இன்று நான் மேற்கொள்ளும் வீணாக்காமல் இருக்கும் கொள்கை, என்னை சார்ந்தவர்களையும் சில வசதிகளிலிருந்து விலக்குகிறது. பெரும்பாலும் அவர்கள் என்னை புரிந்து கொண்டாலும், சில நேரங்களில் உராய்வு ஏற்படுவதை தவிர்க்கவும் முடிவதில்லை. சில நேரங்களில் அது அவர்கள் மேல் நிர்ப்பந்தமாகவும் மாறுகின்றது. மற்றவர்களை எதற்காகவும் நிர்ப்பந்திப்பது தவறு என்பதை அறிவுபூர்வமாக நான் அறிந்திருந்தாலும், உணர்வு பூர்வமாக நிப்பந்தித்தலை தவிர்ப்பது எப்போதும் சாத்தியமாவதில்லை! நம் அறிவும் உணர்வுகளும் ஒன்றாகாதது வரை, அறிவுக்கும் உணர்வுக்குமான உரசல் நம்முள் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும்.

பின்குறிப்பு;

பெட்ரோலியம் கண்டுபிடிப்பு பற்றிய தகவல்கள் http://www.geohelp.net/world.html இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

No comments: