Tuesday, July 29, 2014

நண்பர்களுடன் ஒரு சந்திப்பனுபவம்.

சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் 1991-ம் ஆண்டு தொழில்நுட்பக் கல்வி கற்பதாக கூறிக்கொண்டு, கருவியியல் துறையில் மிடுக்குடன் சேர்ந்த கிட்டத்தட்ட 50 பேர்களில், வகுப்புத்தோழர்களை பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சந்திப்பதன் மூலம் ஜென்ம சாபல்யம் அடைய முடியும் என கருதிய வெகு சிலரின் முன்முயற்சியில் ஒரு நண்பர்கள் சங்கமம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டதன் மூலம், 'உங்கள் நண்பன்தான்' என பறைசாற்றிக்கொள்ள எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்தியதன் மூலம், 'நானும் உங்கள் நண்பனே' என  உரக்க கூறி, ஜென்ம சாபல்யமும் அடைந்து விட்டேன்.

எந்த ஒரு நிகழ்வு நடைபெற வேண்டுமானாலும் குறைந்தபட்சம் ஒரு காரணமாவது இருக்க வேண்டும். (காரணகாரிய உறவு பற்றி நான் கொண்டிருக்கும் மனப்பதிவுகளுக்கு; இங்கு சொடுக்கவும்.) இந்த நண்பர்கள் சந்திப்பிற்கும் சில காரணங்கள் இருந்தன. இவர்களில் பெரும்பாலானவர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், பொறியியல் படிப்பதற்கு தேவையான அறிவை வெளிப்படுத்தியவர்களாக (அறிவு\அறிதல் குறித்த என் பார்வைக்கு; இங்கு சொடுக்கவும்) இருந்திருக்கவில்லை. ஆனால் இளங்கலை அறிவியல் பயில்வதற்கான குறைந்த பட்ச அறிவை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அத்துடன் தோல்வியே வெற்றியின் படிக்கட்டு என்னும் பொன்மொழியையையும் அறிந்திருந்திருந்தார்கள். எனவே 12-ம் வகுப்பில் கிட்டத்தட்ட அடைந்த தோல்வியையே வெற்றியின் படிக்கட்டாக கொண்டு, முழுமையான தகுதி அடிப்படையில், சென்னை தொழில்நுட்பக் கழகத்தில், தங்கள் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்புத் தகுதியுடன் பொறியியல் படிக்கலாம் என்னும் ஆர்வத்துடன் 1991-ம் ஆண்டு சேர்ந்து விட்டார்கள். அடுத்ததாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளில், பொறியியல் கல்வி கற்பதாக கூறிக்கொண்டு ஏதேதோ கல்விகளையும் கற்று முடித்து விட்டார்கள். கல்வியின் ஒரு பகுதியாக, சென்னை தொழில் நுட்பக்கழகத்தை சுற்றியிருந்த, பலதரப்பட்ட சினிமா தியேட்டர்களின், மதுபான கடைகளின் வருமானத்தில், அவர்களின் பெற்றோரின் வருமானத்தின் ஒரு பகுதிக்கு தவிர்க்க முடியாத இடத்தையும் பெற்று வைத்திருந்தார்கள். (அன்றைய காலகட்டத்தில் செல்பேசிகள் புழக்கத்தில் இல்லை. எனவே செல்பேசி நிறுவனங்களின் பங்குதாரர்களின் டிவிடன்ட் வருமானத்தில் தங்கள் பெற்றோர் சம்மாதித்தவற்றை இடம் பெறவைக்கும் நல்வாய்பை இழந்தவர்களானார்கள்!!!)

இவ்வாறு ஒருவாறாக, தொழில்நுட்பக்கழகத்திலிருந்து வெளிவந்து, ஒரு தொழிலில் சேர்ந்து அல்லது செய்து, சில பல தொழில்கள் மாறி கிட்டத்தட்ட 19 வருடங்களை, மேட்டுக்குடித்தனத்துடன் (Elitism) கழித்தபின், முன்ஜென்ம (19-வருடங்களுக்கு முந்தைய) ஞாபகத்தைப் பெற்ற சிலர், ஒரு நண்பர்கள் சங்கமத்தை ஏற்பாடு செய்யலாமே என முன் மொழிய, மற்றும் சிலர் வழிமொழிய சங்கமத்திற்கு ஒருவாறாக நாள் குறிக்கப்பட்டது. சிலர் உண்மையாகவே சங்கமிக்கும் ஆர்வத்துடனும், சிலர் எவ்வாறாயினும் இவ்வாறு ஒரு சங்கமம் நடைபெறப்போவதில்லை, எனவே ஆர்வத்தை தெரிவித்தாலும் இல்லாவிட்டாலும் எந்த வித்தியசமும் இருக்கப்போவதில்லை என்னும் எதிர்காலத்தில் பெரும்நம்பிக்கையுடனும் இதில் கலந்து கொள்வதாக உறுதிப்பத்திரம் வாசித்தனர். மற்றும் சிலருக்கு, நண்பர்களாவது நட்பாவது என்னும் உணர்வின் வெளிப்பாடான துறவு நிலையிலோ அல்லது நம்பிக்கை இழந்த நிலையிலோ, எத்தகைய ஆர்வத்தையும் காட்டாதவர்களாகவும் இருக்கும்படி அவர்கள் சுற்றுச்சூழல் அமைந்திருந்ததால் மௌனத்தையே பதிலாக வழங்கியிருந்தனர். ஒருசிலருக்கு இது குறித்த தகவல் தெரியாமல் கூட இருந்திருக்கலாம்.  

ஒரு வழியாக 2014 - ம் வருடம், ஜூலை 25 மற்றும் 26 தியதிகளில் சங்கமிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. தொழில் நுட்பம் எவ்வாறு இந்த சந்திப்புக்கு உதவியாக இருந்தது என்று இங்கு கூறுவது தவிர்க்க முடியாததாகும். ஆரம்ப காலத்தில், மின்னஞ்சல் மற்றும் முகநூல்(Facebook) என்னும் இரண்டு வகையான தொழில் நுட்பங்கள் இந்த சந்திப்புக்காக பயன்படுத்தப்பட்டன. ஆரம்ப கால தொழில் நுட்பத்திலேயே தங்கி விட்டவர்கள் மின்னஞ்சல் மூலமும், தொழில் நுட்பத்தில் சற்றே முன்னேறியவர்கள் முகநூல் மூலமும் சந்திப்புக்கான ஆரம்பகட்ட பணிகளை தன்முனைப்புடன் செய்துகொண்டிருந்தனர். இங்கு ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். ஆரம்ப கட்டப்பணிகளை செய்த நண்பர்கள் மின்னஞ்சல் மூலமோ முகநூல் மூலமோ தெரிவித்த\கேட்ட கருத்துகளுக்கு\கேள்விகளுக்கு எவரேனும் பதில் அளித்தால் அது கிட்டத்தட்ட ஒரு குற்றமாகவே கருதப்பட்டது. மேலும் கருத்து கேட்டவர்கள் அல்லது சந்திப்பு குறித்து தகவல் கேட்டவர்கள், அதற்கு பதில் கிடைக்கப்பெற்றால், அதை ஒரு அவமதிப்பாகவே கருதினார்கள். இருந்தாலும், சில தவிர்க்க முடியாத இடங்களில் சில அவமதிப்பாளர்களால் சில பதில்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த விதமான குற்றங்களையும் அவமதிப்புகளையும் கடந்து, நண்பர்கள் சங்கமத்துக்கான வேலைகள் தொடர்ந்தன.

சங்கமத்திற்கான அதிவேக(!!??) (அல்லது ஆமை வேக) பணிகளால் கலக்கமடைந்த நண்பன் ஒருவனால், அதை சமனப்படுத்துவதற்காக, புது தொழில் நுட்பம் தன்னிச்சையாக புகுத்தப்பட்டது. செல்பேசி தொழில் நுட்பமான வாட்ஸ்அப் (Whatsapp), சங்கம ஏற்பாடு பணிகளில் அதிரடியாக புகுத்தப்பட்டது. புதிதாக தோற்றத்தை அளிக்கும் எதுவுமே மனிதனுக்கு தற்காலிக ஆர்வத்தை அளித்து அதனுள் அவனை முழுமையாக இழுத்துக்கொள்ளும் என்னும் விளம்பர விதிக்கேற்ப, நண்பர்கள் அனைவரும் வாட்ஸ்அப் -ல் முழுமையாக சங்கமித்தார்கள். (வாட்ஸ்அப் அறிமுக நாளிலிருந்து, அதில் ஆர்வம் இழக்கும் நாளுக்கு முன்பாகவே சங்கமம் நடைபெற்றது, வாட்ஸ்அப் - ன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது) இங்கும் ஒருவன், வாட்ஸ்அப் - ஐ இயக்கும் 'ஸ்மார்ட் செல்பேசி'யை கைக்கொள்ள தான் 'ஸ்மார்ட்' இல்லை எனக்கூறி விலக (வாட்ஸ்அப்  - ல் இருந்து மட்டும்) புது தொழில் நுட்பம் முழுமையான வெற்றியை அடைய தவறி விட்டது!!! ஆனால் புது தொழில் நுட்பம், சங்கமத்தின் மேல் நம்பிகை இழந்து இருந்த சிலருக்கும் புது நம்பிக்கை அளித்து சங்கமத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்ட வைத்தது. அதேநேரத்தில், நடைபெறாது என்னும் அதீத நம்பிக்கையில் இருந்த சிலர் விலகிக்கொள்ளவும் காரணமாக அமைந்தது எனக்கூறவும் வலுவான காரணங்கள் உள்ளதாக நம்பவும் வைத்தது.

ஓரு வழியாக சங்கமத்தின் முந்தைய நாளையும் அடைந்து விட்டோம். வாட்ஸ்அப், கலந்து கொண்ட அனைவரின் தூதுவனாகவும் மாறிவிட்டது - கேட்பதையும், கொடுத்ததையும் அறிவிப்பவனாக! துரதிர்ஷ்டவசமாக வாட்ஸ்அப் - ஐ பயன்படுத்தாமல் இருப்பதை மேட்டுக்குடித்தனமாக, தனக்குத்தானே கருதும் ஒருவனும் இதில் கலந்து கொள்ள நேரிட, அந்த மேட்டுக்குடிமகன், வாட்ஸ்அப்-ஐ புறக்கணிக்கும் பாவனைகளை இரண்டு நாட்களுக்கு வெளிப்படுத்தும் கட்டாயத்துக்கு ஆளாகவும் நேரிட்டு விட்டது.

அதன் பின் நண்பர்கள் குழாம், சங்கமத்திற்கு புறப்பட்டது, தங்கள் இருப்பிடத்திலிருந்து புறப்பட்டது முதல் (அல்லது புறப்படுவதாக நினைத்தது முதல்) சங்கமிக்கும் இடத்தை அடைந்ததுவரை, தாங்கள் முக்கியமான நிகழ்வுகளாக கருதிய ஒவ்வொன்றையும் (உதாரணம்; புறப்பட்டு 10 நிமிடங்கள் ஆகி விட்டது, வந்து கொண்டிருக்கிறேன், 10 நிமிடத்தில் வந்து விடுவேன் (இந்த தகவல் வந்த சேர்வதற்கு சுமார் 2 மணி நேரங்கள் முன்பாக), வளாகத்தின் வாசலில் வந்து விட்டேன், வளாகத்தினுள் வந்து விட்டேன், ரூம் #; xxx -க்கு சென்று கொண்டிருக்கிறேன், இன்னும் பிற அதிமுக்கியத்துவம் வாய்ந்த செய்திகள்.........) வாட்ஸ்அப் - ல் 'அப்டேட்' செய்யப்பட, நண்பர்கள் சங்கமம், அனைவரும் அவர்கள் புறப்பட்ட இடத்திலிருந்தே தொடங்கி விட்டது.

அதன் பின், நேரடியாக நண்பர்கள் சந்தித்ததும், வாட்ஸ்அப்-ல் சந்தித்ததும், மின்னஞ்சலில் சந்திப்பை பகிர்ந்து கொண்டதும் வரலாற்று உண்மைகள். வாட்ஸ்அப் - லும், முகநூலிலும் பொன்னோவியங்களாலும் (புகைப்படங்கள்) பொன்னெழுத்துக்களாலும் (ஸ்டேட்டஸ் அப்டேட்) வரலாறுகள் பதிக்கப்பட்டன, பதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நண்பர்கள் உண்மையிலேயே சந்தித்தோமா என்பதை இனிதான் உறுதி செய்ய வேண்டும்!

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்


பின் குறிப்பு; சரியான குறள்பா எடுத்தளித்த நண்பன் ரகுநாத் - க்கு நன்றிகள்.

blog.change@gmail.com

No comments: