Tuesday, March 4, 2014

துறவு

மிகப்பரந்த அர்த்தமுள்ள வார்த்தை. முழுமையாக புரிந்து கொள்ள மிக கடினமான வார்த்தை. எனினும் மிகப்பரவலாக உபயோகிக்கப்படும் வார்த்தை. இந்த வார்த்தை சுட்டும் பொருளை குறித்த ஆராய்ச்சி, நம் மனதில் பல சாளரங்களை திறக்க உதவலாம். அந்த சாளரங்கள் இந்த வார்த்தையின் பொருளை நோக்கி நம்மை கொண்டு செல்லவும் உதவலாம். பெரும்பாலும் நாம் துறவு என அறிந்திருப்பது, காவி அல்லது வெள்ளை உடை அணிந்து, சாதாரண மக்கள் விரும்பித் தேடும் சிலவற்றை தவிர்த்து, எண்ணற்ற மனகட்டுப்பாடுகளை விதித்து, பலவாறு தம்மைதாமே துன்புறுத்துவதையே - பல காரணங்களுக்காக! பெரும்பாலும் கடவுள் என்னும் காரணத்துக்காக! இந்த ஆராய்ச்சிக்கு, துறவு குறித்து நாம் கொண்டுள்ள முன்முடிவுகள் அனைத்தையும் சற்று ஒதுக்கிவைப்பது மிக அவசியம்.

துறவு என்பது, அதன் எளிய அர்த்தத்தில், நம்மிடம் இருக்கும் ஒன்றை துறப்பது. எதற்காக நாம் ஒன்றை துறக்க வேண்டும்? நாம் விரும்புபவற்றை பெறவேண்டுமானால், அதற்கு தடையாக இருப்பவற்றை நாம் துறந்தாகவேண்டும். அன்றாட வாழ்க்கைதளத்தில், நம் உடல் தினம்தோறும் தன் கழிவுகளை துறந்து, உணவிலிருந்து தன்னை மறுஉற்பத்தி செய்து கொள்கிறது. ஆம் இது ஒரு இயற்கை நியதி. தேவைஇல்லாதவற்றை அந்த கணமே துறந்து, நம்மை மறுஉற்பத்திசெய்வதற்கு தேவையானவற்றை அதற்கு பதிலாக பெறுவது. இந்த துறத்தலும் எடுத்தலுமே, அன்றாட வாழ்க்கை தளத்தில், நம்மை இயங்கச் செய்கிறது.

ஆக துறவு என்பது, நாம் ஒன்றை பெறுவதற்காக, அதற்கு தடையாக இருக்கும் மற்றொன்றை இழப்பது. துறவு என்னும் வார்த்தை அன்றாட வாழ்க்கை தளத்தில் உபயோகிக்கப்படுவதில்லை. ஆன்மீக தளத்திலேயே பெரும்பாலும் கூறப்படுகிறது. அதாவது ஆன்மீக தளத்தில் ஒன்றை பெறுவதற்காக, அன்றாட வாழ்க்கை தளத்தில் சிலவற்றை துறப்பதையே துறவு என்னும் வார்த்தை பெரும்பாலும் சுட்டுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால் நாம் துறப்பவையும், அந்த துறப்பின் விளைவாகும் அடைதலும் வெவ்வேறு தளங்களில் உள்ளன.

உலகியல் துறவு, ஆன்மீக அடைதலாக பரிணாம மாற்றம் அடைய வேண்டுமானால், அந்த துறவு மிக இயல்பாக நம்முள் நடைபெற வேண்டும். வலுக்கட்டாயமாக கொள்ளும் துறவு, நம்மை எவ்வகையிலும் ஆன்மீகத்துக்கு அருகில் அழைத்து செல்லாது. மாறாக அது நம்மை ஆன்மீகத்திலிருந்து விலக்கவே செய்யும். துறவு என்பது நம் மனதில் நிகழும் ஒரு நிகழ்வு. துறவின் அடையாளமாக சுட்டப்படும் எந்த புறவயமான குறியீடுகளாலும் எவ்வகையிலும் துறவு என்னும் நிகழ்வை முழுமையாக அடையாளம் காட்ட இயலாது. குறியீடுகள் உண்மையான துறவையோ அல்லது துறவுக்கான ஆர்வத்தையோ குறிக்கலாம். உண்மையான துறவு புறவயமான குறியீடுகளுடனோ அல்லது குறியீடுகளை முற்றிலும் தவிர்த்தோ நிகழலாம். ஒரு தனிமனிதனின் துறவு சமூகத்தினுள் எந்தவிதமான பாதிப்புகளுக்கும் தேவை இல்லை என்றாலோ, அந்த மனிதனால் குறியீடுகளின் துணையின்றி துறவு மனப்பான்மையை இழக்காமல் வைத்திருக்க முடியும் என்றாலோ, அத்தகைய மனிதர்களுக்கு புறவயமான குறியீடுகளின் தேவை இல்லை.

ஆன்மீக தளத்தை நாம் அடைய வேண்டுமானால், லொகீக தளத்தில் சில அல்லது பலவற்றை நாம் துறந்தாக வேண்டும். ஆனால் அந்த துறவு நம் இருப்புக்கு மிக இயல்பானதாக இருக்க வேண்டும். எவ்வாறு இரு மனிதர்களின் இருப்பு ஒன்றுபோல் இருக்க முடிவதில்லையோ அதைப்போலவே இரு மனிதர்களின் துறவும் ஒன்றுபோல் இருக்க முடியாது. ஒரு மனிதனுக்கு ஆன்மீக அடைதலுக்கு நிச்சயமாக துறந்தாக வேண்டிய ஒன்று, மற்றொரு மனிதனால் துறக்கப்பட்டால், அந்த மனிதனை ஆன்மீகத்திலிருந்து வெகு தூரத்துக்கு விலக்குவதாகவும் இருக்கலாம்.

எந்த பற்றுதல்கள் நம் ஆன்மீக வாழ்க்கைக்கு தடையாகவும், அதே நேரத்தில் நம் லொகீக வழ்வில் தவிர்க்க கூடியனவாகவும் உள்ளனவோ, அவற்றையே நம்மால் இயல்பாக துறக்க முடியும். ஆம், இது ஒரு தெளிவற்ற கருத்தாக தோன்றலாம். எனவேதான் துறவு என்னும் பொறியில் விழுந்து பலர் தம் ஆன்மீக வாழ்க்கையையும் லொகீக வாழ்க்கையையும் இழந்து தவிக்கின்றனர். நம் இருப்பின் இயல்பினை கொண்டே நாம் எவற்றை துறக்க வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும். ஒருவேளை, ஆன்மீகம் அல்லது கடவுள் குறித்து உலகில் உலவும் கருத்துகளால் தூண்டப்பட்ட ஒருவர், ஆன்மீக சாதனைக்காக, தன் இயல்பான ஆசைகளை துறக்க முயன்றால், பெரும்பாலும் அவரால் ஆன்மீகத்தின் எந்த திசையையும் அடைய முடியாது. இத்தகைய மனிதர்கள் எல்லா காலத்திலும் இருக்கிறார்கள். ஜெ. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தாம் சந்திக்க நேர்ந்த இத்தகைய ஒரு மனிதரைக் குறித்து தம் எழுத்துகளில்\உரைகளில் பதிவு செய்திருக்கிறார். ஆன்மீக வெளியில் நாம் உற்று நோக்கினால், இத்தகைய மனிதர்களை எங்கும் காணலாம். இவர்களில் பலர் தம் வாழ்நாளில் இதனை உணர்வதில்லை. உணரும் வெகுசிலரும், அந்த உணர்தலை கடந்து சென்று தங்கள் பாதையை அமைத்துக்கொள்ளும் உறுதியையும் இழந்திருப்பர்.
பெரும்பாலான இந்திய ஞான தத்துவங்கள் இந்த உண்மையை தம் இயல்பாக கொண்டுள்ளன. எனவேதான் ஆன்மீக அடைதலுக்கு ஒற்றைப்பாதையை காட்டாமல் பலதளங்களில், பல திசைகளில் பாதைகளை காட்டுகின்றன. உதாரணமாக, பெரும்பாலான ஆன்மீக வழிகளில் காமம் விலக்கப்படுகிறது. ஆனால் காமத்தையே பாதையாக கொண்ட ஆன்மீக வழிகளையையும் இந்திய ஆன்மீக தத்துவங்கள் உரக்க கூறுகின்றன. ஆம், காமமே இயல்பானவர்களுக்கு காமமே ஆன்மீகத்திற்கான பாதை!

இங்கு, காமத்தை குறித்து சமீபத்தில் நான் படிக்க நேர்ந்த சில சொற்றொடர்கள்...
\\........ரதிவிஹாரிஎன்ற சொல்லைக் கண்டான். புவியிலுள்ள அனைத்தையும் பிரதிபலித்துவிடக்கூடியதுபோன்ற துல்லியத்துடன் அதை அறிந்தான்.
காமத்தில் விளையாடுபவன். ஆம், காமத்தை ஆடுபவன் அல்ல. காமத்தில் மூழ்கியவன் அல்ல. காமத்தின் அடிமையும் அல்ல. காமத்துடன் விளையாடுபவன். தீயுடன் விளையாடும் ரசவாதிபோல. சர்ப்பத்துடன் விளையாடும் விடகாரி போல. யானையுடன் விளையாடும் மாதங்கிகன் போல. ரஸவிஹாரி. மோஹவிஹாரி. மிருத்யுவிஹாரி
காமத்துடன் விளையாட எவருக்கேனும் முடியுமா என்ன? அது நோயுடன் விளையாடுவது போன்றது. அவ்விளையாட்டில் நோய் மட்டுமே வெல்லமுடியும். ஆனால் எப்போதேனும் எவரேனும் காமத்தை உள்ளும் புறமும் அறியமுடிந்தால் அவன் விளையாடமுடியும்.

இனியதொரு பரவசத்தில் விதுரன் நடுங்கினான். அப்படி ஒருவனால் காமத்தில் விளையாடித் திளைக்கமுடிந்தால் அவனறியும் காமம் எத்தனை மகத்தானதாக இருக்கும்? அது எல்லையற்ற மதுரக்கடல். முடிவற்ற எழில்வெளி. அது பிரம்மமேதான். அறுசுவையில் ஐந்தையும் களைந்து இனிமை மட்டுமாகத் தோற்றமளிக்கும் பிரம்மம். பிரம்மத்தை நோக்கி ஆன்மா செல்லும் நிலை அல்ல, பிரம்மம் ஆன்மாவில் வந்து நிறையும் நிலை............\\

blog.change@gmail.com

No comments: