Saturday, December 14, 2013

எண்ணங்கள்-3

நாம் எண்ணங்களிலிருந்து விடுதலை பெற்று எண்ணங்களை கவனிக்கத்தொடங்கும்போது, எண்ணங்கள் சாதாரண நிலையில், அதன் முக்கியத்துவத்தை இழக்கின்றன. முக்கியத்துவத்தை இழந்த எண்ணங்கள், அவை தோன்றி மறையும் இயக்கத்தில் சில இடைவெளிகளை அனுமதிக்கின்றன. அத்தகைய எண்ணங்களற்ற இடைவெளிகளில் நம் மனம் அதன் இயல்பான விழிப்புணர்வை மீண்டும் பெறுகிறது. அந்த விழிப்புணர்வு, மனதின் உணரும் திறனை மேலும் மேம்படுத்துகிறது. இதன் மூலம் எண்ணங்கள் மனதின் உணர்வுகளுக்கு இடம்கொடுத்து நகருகின்றன. ஆக மனதின் உணர்வுநிலை அதிகரிக்கும்தோறும் எண்ணங்கள் முக்கியத்துவத்தை இழந்து, நாம் விரும்பாத நிலையில் மனதைவிட்டு முற்றிலும் அகன்றுவிடுகின்றன. நம் வாழ்க்கை இயக்கத்துக்கு எண்ணங்கள் தேவைப்படும்போது, தேவைக்கேற்ற வகையில் நம் நண்பனை போல உதவுகின்றன.

நமக்கு தேவைப்படும் இடங்களில் எண்ணங்கள் வெளிப்பட்டு நமக்கு நண்பனை போல உதவியாக வேண்டும். எனவே எண்ணங்களும் விழிப்புடன் எப்போதும் நம் அழைப்புக்காக காத்திருந்தாக வேண்டும். எண்ணங்கள் நம் அழைப்புக்கு வராத பட்சத்தில், நம் வாழ்க்கை அந்த நொடியில் முடிந்து விடும். எனவே நினைவுகளால் தொகுக்கப்பட்ட எண்ணம், நம் செயலின் தேவைக்காக எப்போதும் காத்திருக்க வேண்டும், ஆனால் நம் விழிப்புணர்வு இல்லாமல், நம் அனுமதி இல்லாமல் அவையாக செயல்படக் கூடாது. இதுவே எண்ணங்களிலிருந்து பெறும் விடுதலையாக இருக்க முடியும். நண்பனாக, நமக்காக காத்திருக்கும் எண்ணத்தை, விழிப்புணர்வை தவறவிடும் நொடியில், மாயையால் உந்தப்பட்டு, 'நான்' என்று கருதி, மீண்டும் எண்ணங்களுக்கு நாம் அடிமையாகவும் கூடும். எனினும், ஒரு முறை விடுதலையை சுவைத்தவர்களால் மீண்டும் அடிமைத்தளையில் முழுவதுமாக இழக்க முடியாது.

மனதின் மேல் தளத்து எண்ணங்கள், நம் பிரக்ஞ்சையில் முழுவதுமாக வசப்படும்போது, எண்ணங்களுக்கு காரணமான நினைவுகளும் ஒன்றன் பின் ஒன்றாக நம் பிரக்ஞ்சையினுள் வரத்தொடங்கும். அதாவது நம் எண்ணங்களுக்கு காரணமான மனதின் ஆழத்தில் பதிந்திருக்கும் நினைவுகளும் பிரக்ஞ்சையின் வீச்சில் உணரப்படத் தொடங்கும். எண்ணங்களுக்கு காரணமான நினைவுகள், அந்த எண்ணங்களுடன் பிரக்ஞ்சையில் வரும்போது, எண்ணங்களின் தற்கால செல்லுபடியாகும் அல்லது செல்லுபடியாகாத தன்மையும் நம் அறிதலில் மிகத்தெளிவாக விளங்கும். ஆக, நம்மால் தற்கால நிகழ்வுகளுக்கு மிகஏற்ற செயல்களை, எந்த சந்தேகமும் இல்லாமல் முழுமையாக செயல்படுத்த முடியும். எனவே அந்த செயல்களின் விளைவுகள் எவ்வாறாக இருந்தாலும், அவற்றால் பாதிப்படையாமல் நம் வாழ்க்கையை வாழவும் முடியும்.
ஸ்தூல உடல் எனக்குறிப்பிடப்படும் (ப்ராணமய கோஷம், மனோமய கோஷம், விக்ஞ்ஞானமய கோஷம், ஆனந்தமய கோஷம்) நான்கு பகுதிகளும், தற்போதைய நம் அறிதலின் எல்லைக்குள், நம் மூளையையும் அதன் விளைவாக நாம் பெற்றிருக்கும் மனதின் நிலைகளையும் குறிக்கின்றன. மனம் எண்ணங்களிலிருந்து விடுதலை பெறும்போது, ஸ்தூல உடலின் உணர்வுகள் நம் மனதால் உணரப்படுகிறது. இதை வேறு வார்த்தைகளில் கூறினால், மனம் எண்ணங்களிலிருந்து விடுதலை பெறும்போது, மனம் ஒரு புதிய, நாம் இதுவரை அறிந்திராத ஒரு நிலைக்கு மாறுகிறது. அதாவது, மனதின் வெவ்வேறு நிலைகளை அறியும் மனம், அந்த அறிதலின் விளைவாக தன்னை முற்றிலும் புதிதாக, நமது உணர்வு தளத்தில், மாற்றியமைத்துக் கொள்கிறது.

ஸ்தூல உடல், பொதீக உடலுடன் மிக நெருங்கிய தொடர்புடையது. ஸ்தூல உடலின் இயக்கங்களின் அடிப்படையிலேயே பொதீக உடல் இயங்க முடியும். அதாவது, பொதீக உடலும் ஸ்தூல உடலுபம் ஒரு வகையான ஒத்திசைவில் இருந்தாக வேண்டும். எண்ணங்களை மனதின் எண்ணங்களை கடந்த இழை கவனிப்பதன் மூலம் நம் மனம் அடையும் மாற்றம், ஸ்தூல உடலை மிகவும் துடிப்புள்ளதாக மாற்றுகிறது. ஸ்தூல உடல் துடிப்புள்ளதாக இருக்கும்போது, பொதீக உடலும் அதற்கு இணையான துடிப்புள்ளதாக இருந்தால் மட்டுமே அவை இரண்டும் ஒத்திசைவுடன் இயங்க முடியும். அத்தகைய ஒத்திசைவு ஏற்படாத நிலையில், மனம் அடையும் புதிய உணர்வுகளும் ஸ்தூல உடல் அடைந்த துடிப்பும், ஒரு இருப்பாக, நம்மை அழித்து விடக்கூடும். உதாரணமாக மனநிலை பிறழ்தல், உடல் நிலை பாதிப்படைதல் போன்றவை.

ஆம், பொதீக உடல் தகுந்த தகுதியை அடையாமல், மனதுக்கு எண்ணங்களை கவனிப்பதோ, அதன் மூலம் அதீத உணர்வு நிலைகளை அடைவதோ முடியாததாக இருக்கலாம். உணவே மருந்தாக இருக்கவேண்டிய நிலையை விட்டு, மருந்தே உணவாக மாறும் நிலையில் பெரும்பாலான மத்தியதர வர்க்கத்தினர் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்திருக்கும் இந்த காலகட்டத்தில், பொதீக உடலை தகுதியுள்ளதாக மாற்றாமல் ஸ்தூல உடலை மாற்றியமைக்கும் எண்ணங்களுடனான நம் விளையாட்டு அத்தனை எளிதானதல்ல. அத்தகையவர்களுக்கு, தங்கள் வாழ்க்கைமுறையை மாற்றியமைக்காதவரைக்கும், எண்ணங்களிலிருந்து விடுதலை பெறுவது என்பது சாத்தியமற்றதாக இருக்கலாம்.  ஆம், விடுதலை அடைய உண்மையான விருப்பமும் அர்ப்பணிப்பும் தேவை - வாழ்வதற்கும் கூட!

நம் மனமும் உடலும் நம்மால் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு நுண்ணறிவு உடையவை. அவை ஒன்றின் தகுதிக்கேற்ப மற்றதை மாற்றியமைத்து, தமக்குள் ஒத்திசைவை ஏற்படுத்திக் கொள்ளும் - நாம் அவற்றின் இயக்கத்தில் குறுக்கிடாதது வரை! நம் மனம் ஒரு உயர்ந்த நிலையை அடையும்போது, உடலும் அந்த நிலைக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள தேவையானவற்றை தானாகவோ அல்லது மனதின் தூண்டுதலாலோ செய்யத்தொடங்கும். அல்லது உடல் ஒரு உயர்ந்த நிலையை அடையும்போது, மனதையும் அதற்கு இயைவான நிலையை அடைய தூண்டுவதன் மூலம் உடலும் மனமும் தங்களுக்குள் ஒத்திசைவை ஏற்படுத்திக்கொள்ள முயலும். ஆனால், நம்முள் விடுதலைக்கான விருப்பம் துளிர்க்காதவரையில் அந்த ஒத்திசைவுக்கான தூண்டுதலை முன்எடுத்துச் செல்வது இயலாததாக இருக்கலாம்.

நாம் ஒன்றின் மேல் விருப்பம் கொள்ள வேண்டுமென்றால், அதைக்குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும். அந்த அறிவு குடும்ப சூழலில் இருந்தோ அல்லது பண்பாட்டுச் சூழலிருந்தோ அல்லது இவை கடந்த தனிமனித சூழலிருந்தோ நமக்கு வரலாம். இன்றைய சூழலில், ஆன்மீக விடுதலையை கற்பிக்கும் பண்பாட்டுத்தளமான மதங்கள், அறிவை முற்றிலும் தவிர்த்து பெருமளவு நம்பிக்கை சார்ந்ததாகவும், சிறிது உணர்வு சார்ந்ததாகவும் கடைபிடிக்கப்படுகிறது. விடுதலைக்கு உணர்வு மிக இன்றியமையாதது. ஆனால் அந்த உணர்வு, அறிவை முற்றிலுமாக புறக்கணிக்கும்போது, அந்த உணர்வு வெறும் நம்பிக்கை சார்ந்ததாகவும், அதன் மூலம் எண்ணங்களை மனதில் பெருக்கும் உற்பத்தித் தளவாடமாகவும் மாறிவிடுகிறது. எனவே மதங்கள் பண்பாட்டுச் சூழலில் மாற்றியமைக்கப்படாதவரைக்கும், விடுதலைக்கான விருப்பம் பெரும்பான்மை மக்களை அடைவது எளிதான காரியம் அல்ல.

இங்கு மனம் மற்றும் மனதில் உருவாகும் எண்ணங்களை மட்டுமே நம் எண்ணங்களுடனான அடிமைத்தளைக்கு காரணங்களாக கூறப்பட்டாலும், நம் மனதின் மிக ஆழத்தில் இன்னும் பல காரணிகள் இருக்கலாம். இங்கு மனம் என்பது ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட அர்த்தத்துடனே கூறப்பட்டுள்ளது. அதாவது, இந்திய ஆன்மீகத் தளங்களில் சித்தம் எனக்கூறப்பட்டுள்ளது, இங்கு மனம் என பொதுமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆக இங்கு கூறப்பட்டவை அனைத்தும் ஒரு தொடக்கநிலையில் இருப்பவனின் மனநிலையிலேயே கூறப்பட்டுள்ளது. இதன் பயன் எனக்குறிப்பிட்டால், விடுதலை குறித்த ஒரு ஆர்வத்தையும், அதிகப்படியான அறிதலை தேடுவதற்கான கிரயாஊக்கியாகவும், ஆன்மீக விடுதலை என்பது அனைவருக்கும் சாத்தியமான ஒன்று என்பதை மனதில் பதியவைப்பதுமே. அதைத்தவிர இங்கு கூறப்பட்டவை வெறும் வெற்று வார்த்தைகளே. அதிலும் ஆன்மீக பாதையில் குறிப்பிடத்தக்க தூரத்தை கடந்தவர்களுக்கு, இவை வெறும் குப்பைகளே. ஏனெனில் ஆன்மீக பாதை என்பது மிகவும் தனிமையானது - எந்த இருவரும் ஒரே பாதையில் பயணிக்க முடியாது, மிகவும் அந்தரங்கமானது. அதை வெளிப்படுத்துவது என்பதே ஒரு வகையில் அகங்காரம். கென் வில்பரின் மேற்கோளை மீண்டும் நினைவுகூருகிறேன்,


".................................. And this is truly a terrible burden, a horrible burden, because in any case there is no room for timidity. The fact that you might be wrong is simply no excuse: You might be right in your communication, and you might be wrong, but that doesn’t matter. What does matter, as Kierkegaard so rudely reminded us, is that only by investing and speaking your vision with passion, can the truth, one way or another, finally penetrate the reluctance of the world. If you are right, or if you are wrong, it is only your passion that will force either to be discovered. It is your duty to promote that discovery—either way—and therefore it is your duty to speak your truth with whatever passion and courage you can find in your heart. You must shout, in whatever way you can.” 
http://www.goodreads.com/author/quotes/22075.Ken_Wilber

[முடிவு]


blog.change@gmail.com

No comments: