Thursday, September 5, 2013

நுகர்வெனும் பெரும்பசி - 5

நுகர்வின் இன்னொரு பரிமாணம், நாம் ஒன்றை நுகரும்போது, அந்த நுகர்தலுக்காக அந்த இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ, மற்றொரு உயிர் பாதிப்புக்குள்ளாகியிருக்கும். அது மனித உயிராகவோ அல்லது பிற உயிரினங்களாகவோ இருக்கலாம் இது இயற்கையின் தவிர்க்க முடியாத விதி. உதாரணமாக நாம் சைவ உணவு உணபவர்களாக இருந்தாலும் நம் உணவின் பெரும் பகுதியாக இருக்கும் விதைகள் என்பவை மற்றொரு உயிருக்கான சாத்தியங்களே.  நாம் அந்த உணவை உண்ணும்போது அந்த உயிர் வாழ்வதற்கான சாத்தியத்தை நாம் அழிக்கிறோம். அந்த உணவை விளைவிப்பதற்கு தேவையான நீராதாரத்தை பெறுவதற்காக அணைகளை கட்டம்போது, அங்கே வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடியினரை ஈவுஇரக்கமின்றி, அவர்களுக்கு எதுவும் வழங்காமல், அவர்கள் வாழ்வாதாரத்தையே பறித்து அணைக்கட்டுகளை கட்டி, அந்த நீரில் விளைவித்த உணவையும், அங்கிருந்து பெறப்பட்ட மின்சாரத்தில் நம் நுகர்வின் சில பிற அம்சங்களையும் பெறுகிறோம் - இதற்கு எடுத்துகாட்டு நர்மதா நதி அணைக்கட்டுக்கு எதிரான போராட்டம்.

பிற விலங்குகளிலிருந்து நாம் பெறும் உணவுப்பொருட்களான இறைச்சி, முட்டை, பால் போன்றவற்றை பெறுவதற்காக அந்த விலங்குகள் எத்தகைய கொடுமையான சூழலில் தங்கள் வாழ்நாளை கழிக்கின்றன என்பது நம் சிற்றறிவுக்கு எட்டினால், ஒரு மனிதப்பிறவியாக இருக்க நாம் நிச்சயமாக வெட்கப்பட்டாக வேண்டும். அந்த விலங்குகள் வாழும் சூழலுடன் ஒப்பிடும்போது, அந்த விலங்குகளை இறைச்சிக்காக நாம் கொல்லும்போது உண்மையில் நாம் அவற்றுக்கு விடுதலை அளிக்கிறோம். இறைச்சிக்காகவும், பாலுக்காகவும் வளர்க்கப்படும் விலங்குகள் மிககுறுகிய இடத்தில் மிககுறைவான அசைவுகளுக்கு மட்டுமே சாத்தியமான வகையில் வாழ்நாள் முழுக்கவும் பிணைத்து கட்டப்பட்டிருக்கின்றன. கன்று ஈன்ற பசு அல்லது எருமையிடமிருந்து அதன் கன்று உடனடியாக பிரிக்கப்படுகிறது. ஆம், உயிர்களுக்கு இயற்கை அளித்துள்ள மிக இயல்பான தாய்ப்பாசத்தை கொடுப்பது அந்த பசுக்கள் \ எருமைகளுக்கும், பெறுவது அந்த கன்றுகளுக்கும் அவை பிறந்த உடன் தடை செய்யப்படுகிறது. இதை விட வேறு எந்த கொடுமைகளும் அந்த விலங்குகளுக்கு மனிதனால் இழைக்கப்பட முடியாது. ஆம் பால் என்பது இனிமேலும் சைவ உணவு அல்ல - அசைவ உணவு என்பது விலங்குகளை கொல்வதன் மூலம் பெறுவதாக இருந்தால்! பண்ணைகளில் வளரும் பசு\எருமையிடமிருந்து பால் பெறுவதற்காக அவற்றை கொல்வதை விட மிக அதிகமான கொடுமைகளை அவற்றின் வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டிருக்கிறோம்

நம் கலாச்சரத்தில் உணவு உண்பதற்கு முன் பிராத்தனை என்பது, உண்மையில் நமக்கு உணவாகும் அல்லது உணவை உருவாக்கி நமக்களித்த அந்த பிற உயிரினங்களுக்கு நாம் தெரிவிக்கும் நன்றியுணர்வே. நம் நுகர்வுக்காக பிற உயிர்கள் அழிவதை நாம் உண்மையில் புரிந்து கொண்டால், அந்த உயிரினங்களுக்கு உண்மையிலேயே நன்றியுடையவர்களாக இருந்தால், நமக்கு தேவையானவற்றை மட்டுமே நாம் நுகர்வோம். அளவுக்கதிகமான நுகர்வின் மூலம் எதையும், எதனுடைய உயிரையும் உழைப்பையும், வாழ்வையும் வீணாக்க மாட்டோம்.

தற்போதைய உலகில் வழங்கப்படும் பொருளாதார கோட்பாடுகள் நுகர்வெனும் பெரும்பசியின் பசி ஊக்கிகள். அதாவது, மனிதனின் அடிப்படைச்செயல், மனித வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையான உணவு உற்பத்தியும் அதைச்சார்ந்த தொழில்களும் என்பதிலிருந்து மாறி மனிதனின் எல்லா நுகர்வுகளுக்குமான உற்பத்தியும் அதை சார்ந்த தொழில்களும் என்பதாக மாற்றப்பட்டுள்ளது. ஆம் இந்த பொருளாதார கொள்ளகையில் பொருள் சார்ந்து மனித தன்னிறைவு என்பது இல்லவே இல்லை. அங்கு எப்போதும் நுகரும் பொருள்களின் உற்பத்தி பெருகிக்கொண்டே இருக்கும். இந்த அடிப்படையிலே நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. அதாவது ஒவ்வொரு நாடும் அது நுகரும் பொருட்களில், ஒவ்வொரு வருஷமும் பல சதவிகிதம் வளர்ச்சி பெற போராடிக்கொண்டிருக்கின்றன. ஆக இங்கு தன்னிறைவு என்பது எப்போதுமே எட்டப்படுவதில்லை. அல்லது மக்கள் தன்னிறைவு அடைந்த உணர்வு வாராதவாறு அரசாங்கங்கள் பார்த்துக்கொள்கின்றன. ஆம் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், வாங்கும் திறன் படைத்தவர்களை மேலும் மேலும் வாங்கி நுகரவோ வீணாக்கவோ அரசாங்கங்கள் அனைத்தும் முழு முனைப்புடன் ஊக்குவிக்கின்றன. அதே நேரத்தில் வாங்கும் திறன் அற்றவர்களை, அவர்கள் அறியாமலே மேலும் சுரண்டுகின்றன. எடுத்துக்காட்டுகள் - சென்னையில் இரண்டு மணி நேரம் மின் வெட்டு, தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளில் 16 மணி நேரம் மின் வெட்டு. அரசாங்கம் மது பானங்களை மக்களின் மேல் சுமத்தி, அதில் வரும் வருமானத்தால் அதே மக்களுக்கு இலவசங்களை வழங்கி, அவர்களை ஒரு வெளிவரமுடியாத சட்டகத்தினுள் அமர்த்துதல். அரசின் வருவாய்க்காக, கள் போன்ற இயற்கை உணவுகளை தடை செய்து, அவற்றிற்கு மாற்றாக செயற்கை மதுபானங்களை வழங்குதல் - கள் தடை செய்யப்பட்டதன் மூலம் தென்தமிழ் நாட்டின் முக்கியமான ஒரு தொழில் - பனை ஏற்றம், அழியும் தருவாயில் உள்ளது. இன்னும் சில பத்தாண்டுகளில் ஒரு முக்கியமான இயற்கை உணவான பனை வெல்லத்தை நம் சந்ததியினரால் புத்தகங்களில் மட்டுமே பார்க்க முடியும்.

இதுவே காந்தியால் முன்வைக்கப்பட்ட ராம ராஜ்யம் தற்போதைய உலக ராஜ்யத்திலிருந்து வேறுபடுகிறது. ராம ராஜ்யத்தில் ஒவ்வொரு சிறு குழுவும், அதனுள் தன்நிறைவு அடைந்திருக்கும். அந்த குழுவின் பிற குழுக்களுடன் சார்ந்திருக்க தேவையில்லை அல்லது மிக குறைந்தபட்ச சார்பு மட்டுமே இருக்கும். இந்த தன்னிறைவு அடைந்த சமுதாயத்தில் வளர்ச்சி என்பது, அனைவருக்கும் அந்த சமுதாயத்தில் உள்ள அனைத்தும் கிடைப்பது என்பதுவரை மட்டுமே.

உலக சமுதாயம் என்பது, உலகம் முழுவதுக்கும் விரிவாக்கப்பட்ட ராமராஜ்யமே. ஆம் இதன் அடிப்படை உலக மக்கள் அனைவருக்கும் உலகில் உள்ள அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இயற்கையின் பரவலாக்கத் தன்மையின் (Distributive) காரணமாக அத்தகைய ஒரு சாத்தியமே இல்லை. அவ்வாறு ஒரு சாத்தியத்துக்காக இயற்கையுடன் போராடினால், நாம் வாழும் சூழலை அழிப்பதை தவிர வேறு எதையும் நம்மால் சாதிக்க முடியும் என்று தோன்றவில்லை.

ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரை மனித இனத்தின் இருப்பு பெரும் போராட்ங்களுக்கிடையேதான் உறுதி செய்ய முடிந்தது. மனித இனத்தின் பெரும்பகுதி இனக்குழுக்களுக்கிடையேயான போர்கள், பசி, நோய்கள் போன்றவற்றால் அழிந்து கொண்டே இருந்தன. மக்கள் தொகை பெருக்கம் இத்தகைய அழிவுகளால் சமன் செய்யப்பட்டுக்கொண்டே இருந்தது.  மனித அறிவின் முன்னேற்றத்தால் அந்த அழிவு பெருமளவு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. அதாவது மனித அறிவின் முன்னேற்றத்தால் மனித இனம் எப்போதையும் விட தற்காலத்தில் வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்டுள்ளது. ஆனால் அந்த எளிமையாக்குதலின் மூலம் துரதிர்ஷ்டவசமாக இன்னொரு, நாம் எதிர்பார்க்காத, அழிவை நோக்கி நகர்கிறோம் - மக்கள் தொகை சமநிலையை விட அதிகரித்தலும், அதன் விளைவான சூழல் அழிவுகளும்! நமது எளிமையாக்கப்பட்ட மனங்கள் சூழல் அழிவின் காரணமாக நாம் எதிர் கொள்ளப்போகும் பெரும் அழிவை எதிர்கொள்ளும் திறனை பெறுமா? நாம் உண்மையில் விரும்பினால், அந்த அழிவு நம்மை நெருங்காமலே தொலைவில் இருக்க வைக்கலாம் - நமக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவின் மூலம், இயற்கையின் தலையீடு இல்லாமல் நாமாகவே சமநிலையை உறுதி செய்வதன் மூலம்! நோயையும், பசியையும், போராட்டங்களையும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவின் மூலமாக வென்றது போல, அதே அறிவால் மக்கள் தொகை பெருக்கத்தையும், மக்கள் நுகர்வு பெருக்கத்தையும், சூழல் அழிவையும் வெல்வதன் மூலம்!

நம்மை நாமே சமன் செய்வதற்கான அறிவை மனித இனம் தொட தொடங்கிவிட்டது. ஆனால் அது இன்னும் மிகமிக சிறிய அளவிலேயே இருந்து கொண்டிருக்கின்றது. அந்த அறிவு நமக்கு தெரிவிக்கும் கூறுகள் மிக பயங்கரமானவை. அந்த ஒரே காரணத்தால்தான் எல்லா அரசாங்கங்களும் பெயரளவுக்குமேனும் சூழல் பாதுகாப்புக்கான கொள்கைகளை முன்வைக்கின்றன. சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பறைசாற்றுகின்றன - உண்மை நிலை அந்த அறிவுப்புகளுக்கேற்றாற் போல் இல்லாவிட்டாலும். இத்தகைய கொள்கை முடிவுகள் எல்லா அரசாங்கங்களாலும் அறிவிக்கப்படுவதே சூழலை நம்மால் பாதுகாக்க முடியும் என்னும் அறிவு மனித இனத்தை அடைந்ததால் மட்டுமே. ஆம், மனிதரில் ஒருசிலரால் மட்டும் அடையப்பட்ட அறிவை பெரும்பான்மையானவர்கள் அடைவதால் மட்டுமே காகித அளவில் அறிவுப்புகளாக மட்டும் இருக்கும் சூழல் பாதுகாப்புக்கான கொள்கைகளை ஆர்வத்துடனும், சூழலை பாதுகாத்து சமன்நிலையை பேணவேண்டும் என்னும் உண்மையான நோக்கத்துடனும் செயல்படுத்த வைக்க முடியும்.

ஆம், நம்மால் சூழலின் சமன்நிலை குலைவை உணர முடிந்தால், அதற்கு ஒற்றை காரணம் நமது நுகர்வு என்பதை உணர முடிந்தால், அந்த உணர்வே நமது நுகரும் தேவைகளை மாற்றியமைக்கும். அந்த மாற்றமே மனித இனம் பெறும் சூழலியல் அறிவின் பரவலாக்கம். அந்த அறிவின் பரவலாக்கம் நம் அரசாங்கங்கள், காகித அளவில் இருக்கும் கொள்கைகளின் செயல் வடிவ மாற்றத்திற்கு ஊக்கிகளாக இருக்கும். இதன்மூலம் நம்மை நாமே சமன் செய்து, நமது எதிர்காலத்தையும், நம் குழந்தைகளின் எதிர்காலத்தையும் உறுதி செய்வதுடன் மனித இனம் தன்னுள் முழுமை அடைவதுவரை இந்த பூமியில் நிலைத்து இருப்பதற்கான சூழலை உறுதி படுத்த முடியலாம். அவ்வாறே உறுதி படுத்துவோமாக!

[முடிவு]

blog.change@gmail.com

தொடர்புடைய பதிவுகள்;     நுகர்வெனும்பெரும்பசி - 1
                           நுகர்வெனும்பெரும்பசி - 2
                           நுகர்வெனும்பெரும்பசி - 3
                           தேவைக்கேற்ற நுகர்வு:
                                              Commercialismand Consumerism           


2 comments:

ChamathuSiva said...

"மக்கள் தன்னிறைவு அடைந்த உணர்வு வாராதவாறு அரசாங்கங்கள் பார்த்துக்கொள்கின்றன" - This may be rephrased as "Corporates" in place of "Governments" and Governments are being driven by Corporates in 'democratic' governance and Governments are being run by Select few in other forms of governance. Net result is that indicator for prosperity is pointing to wrong direction with even the 'smart' & 'intelligent' community of intellectuals not even willing to accept this ignorance.

அக மாற்றம் said...

சிவா,

பின்னூட்டத்திற்கு நன்றி. நீங்கள் கூறியிருக்கும் சாத்தியங்களும் நிச்சயமாக உள்ளது. இறுதியாக, இத்தகைய வலைப்பின்னலை நம்மால், ஒரு தனிப்பட்ட மனிதனாக, உணர முடிகிறதா என்பதே கேள்வி. அவ்வாறு நம்மால் உணர முடிந்தால் நாம் அந்த வலையிலிருந்து வெளிவந்து விட்டோம். நாம் வெளிவந்து விட்டால் நம்முடன் உறவுடன் இருப்பவர்களும் உணர தொடங்குவதற்கான சாத்தியங்கள் உள்ளன. ஆம், இந்த சுய உணர்வும், சுய மாற்றமுமே நமக்கு உடனடி தேவை - தனி மனித அளவில். நாம் உணர்வது என்பது வெறும் கருத்து அளவில் அறிவது மட்டும் அல்ல. உண்மையாக நாம் அந்த வலைப்பின்னலை உணரும்போது, எந்த கருத்துகளுக்கும் தேவை இல்லை. நம் நுண்ணறிவு செயல்பட்டு, நம்மை அந்த பொறியிலிருந்து வெளிக்கொண்டு வந்து விடும். நம் உணர்தல் என்பது வெறும் கருத்தளவில் மட்டும் இருந்தால், அவற்றால் எந்த பயனும் இல்லை - பொது வெளியில் விவாதிப்பதை தவிர. நம்மிடம் அந்த மாற்றம் வெளிப்படாமல், நாம் வெளியிடும் கருத்துகளுக்கும் உண்மையில் எந்த மதிப்பும் இல்லை!