Friday, August 30, 2013

நுகர்வெனும் பெரும்பசி - 4

நமது நுகர்வு கலாசாரத்தின் அழிக்கும் தன்மையை ஒரளவுக்கு புரிந்து கொள்ள முடிகிறது. நுகர்வின் அழிக்கும் சக்திக்கு நாம் ஒவ்வொருவரும் கராணம் என்பதும், இந்த பூமி உயிரினங்கள் வாழ ஏற்றதாக இருக்க வேண்டும் என்றால் நாமும் நம் நுகர்வின் தன்மையும் மாறியாக வேண்டும் என்பதும் புரிகிறது. ஆனால் இப்போது அடிப்படையாக எழும் கேள்வி, எனது புரிதலின் மூலம் நான் ஒருவன் நுகர்வுக்கான மாற்றுப்பாதையை தேர்ந்தெடுத்து செல்லலாம். ஆனால் உலகில் மற்றவர்கள் அனைவரும் அதே ஆபத்தான பாதையில் பயணிக்கும்போது என் நுகர்வின் மாற்றுப்பாதையால் என்ன பயன்? ஆபத்தான பாதையில் செல்லும் பெருங்கூட்டத்தால், ஆபத்து அதேவேகத்தில் நெருங்கிக்கொண்டுதானே இருக்கிறது? பெருங்கூட்டத்தினர் இன்னும் ஆபத்தை புரிந்து கொள்ளவில்லையே,, என்ன செய்வது?

 நாம் புரிந்து விட்டோம், மாற்றப்பாதையை தேர்ந்தெடுப்போம். பிறர் நம்மை ஒரு புழுவைப்போல பார்க்கலாம், நம் நோக்கத்தை புரிந்து கொள்ளமல் இருக்கலாம். அது அவர்களின் அறியாமை மட்டுமே - தம்மையும் தம் சந்ததியினரயும் சுற்றத்தாரையும், தாமே கொன்று குவிப்பதை அறியமுடியாத அறியாமை! பாவம் அவர்கள்! அவர்கள் அறியாபமையை குறித்து நம்மால் பரிதாபப்பட மட்டுமே முடியும். ஆனாலும் நம்மை சுற்றி இருப்பவர்களும், சிறிதளவேனும் நுண்ணறிவு உடையவர்களாக இருந்தால், நம் மாற்றுப்பாதை இயக்கத்தால் நிச்சயாமாக தாக்கத்துக்குள்ளாவர்கள். அந்த தாக்கத்தின் அளவு வேறுபட்டாலும், அவர்களும் மாற்றியக்கத்தை தேர்ந்தெடுக்கலாம். எந்த ஒரு சமூக மாற்றமும், ஒரு சிலரில் தோன்றியபின்னரே மக்களின் பெரும்பான்மையினரை அடையும். ஆம், நம்மால் நுகர்வின் இயக்கத்தை மாற்றியமைக்கும் முன்னோடிகளாக நம்மை மாற்றியமைக்க முடியும் - உண்மையில் நாம் நுகர்வு என்னும் பெரும்பசியின் அழிக்கும் திறனை புரிந்து கொள்ள முடிந்தால்!

நாம் எத்தகைய நுகர்வின் மாற்றுப்பாதையை தேர்ந்தெடுப்பது? அது நுகர்வு என்னும் பெரும் பசியின் தீவிரத்தை புரிந்துகொள்ளும் நமது இயக்கத்தின் தீவிரத்தை பொறுத்தது. குறைந்த பட்சமாக, தினமும் நமக்கு நாமே நுகர்வின் பெரும்பசியை குறித்து நினைவூட்டிக்கொள்ளலாம். அது நம்மை சிறிய அளவிலான மாற்று சாத்தியங்களை கையாள்வதற்கான மன உறுதியை கொடுக்கலாம். உதாரணமாக நாம் தண்ணீர் குழாயின் முன் இருக்கும்போது, சில பத்தாண்டுகளில் நீரின்றி நம் குழந்தைகள் படும்பாட்டை உணர முடிந்தால், நம் முன் இருக்கும் தண்ணீர் குழாயிலிருந்து அந்த நேரத்தில் நமக்கு மிகத்தேவையான நீரை விட அதிகமாக ஒரு சொட்டு நீர் கூட நுகரவோ வீணாக்கவோ மாட்டோம்.

நாம் வீட்டில் இருக்கும்போது, யாரும் இல்லாத அறையில் மின் விசிறி அல்லது மின் விளக்கு மின்சாரத்தை வீணாக்கி கொண்டிருப்பதை காணும்போது, அந்த விசிறியை சுற்ற செய்வதற்காக எங்கோ ஒரு காட்டில் மரத்தை அழித்து தோண்டிய நிலக்கரி இன்னொரு இடத்தில் சென்று அங்கு காற்றில் கார்ப்பன் டை ஆக்சைடை செலுத்தி உருவாக்கும் மின் சக்திதான் நம் வீட்டில் யாருக்கும் தேவையின்றி மின்விசிறியை சுற்றிக்கொண்டிருக்கிறது என்பதை உண்மையிலேயே நாம் புரிந்து கொண்டி,ருந்தால், நாம் எந்த தடையும் மாற்று எண்ணங்களும் இல்லாமல் அங்கு சுற்றிக்கொண்டிருக்கும் மின்விசிறியையோ அல்லது எரிந்து கொண்டிருக்கும் மின் விளக்கையோ  அணைத்திருப்போம்.

நாம் உண்ணும் உணவு நம் உணவு தட்டில் வருவதற்கு முன் அது எந்த அளவு நீரை குடித்து நம் உணவு தட்டில் இருக்கும் வடிவத்தில் வந்துள்ளது என்பதையும், அந்த உணவு அது உருவாவதற்காகவும், நம் உணவு தட்டுவரை வருவதற்காகவும் எவ்வளவு ஆற்றலை செலவிட்டுள்ளது, அந்த ஆற்றலை பெற எத்தனை கிலோ அல்லது  டன் கரியமல வாயுவை காற்று வெளியில் செலுத்தியிருக்க கூடும் எனபதையும், உலகின் மற்றொரு பகுதியில் காலி உணவுத்தட்டுடன் தங்கள் இருப்பை உறுதி செய்வதற்காக போராடிக்கொண்டிருக்கும் உணவுக்கு வழியில்லாத மக்களை குறித்தும் ஒரளவுக்கு நம்மால் கற்பனை செய்ய முடிந்தாலும், நம் உணவுத்தட்டில் இருக்கும் உணவை, அது எத்தகையதாக இருந்தாலும், நாம் வீணாக்க மாட்டோம்.

நமது நுகர்வின் மூலம் நாம் உருவாக்கும் கழிவுகள் இயற்கையின் சமன் நிலையை எவ்வாறு குலைக்கிறது, நம் உடலுக்கு எவ்வாறு விஷமாகிறது, நம் வாழ்க்கை தரத்தை இன்னும் சிறிது காலத்தில் எவ்வாறு சீர்குலைக்க போகிறது என்பது நம் அறிவுக்குள் நுழைந்தால், நம் நுகர்வின் தன்மை யாரும் கேட்காமலே மாற்றியமைக்கப்படும் - நமது நுண்ணறிவால்!

இவை போன்றவையே நுகர்வு கலாச்சாரத்தில் நாம் கொண்டுவரும் மாற்றத்தின் முதல் படியாக இருக்க கூடும். ஆம், நாம் அனைவரும் பொருட்களை நுகர்ந்தாக வேண்டும். அந்த நுகர்வின் பாகமாக இருக்கும் வீணாக்குதலை நம்மால் குறைக்க முடிந்தால், நமது நுகர்வு உருவாக்கும் கழிவுகளை மட்டுப்படுத்த முடிந்தால் நாம் நம் எதிர்காலத்தை பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க தூரத்தை கடந்திருப்போம். இந்த முதல்படியை நம்மால் எடுத்து வைக்க முடிந்தால், அதற்காக நம்முள் நாம் கொண்டுவரும் விழிப்புணர்வு, அடுத்த படிகளை நாம் தேடாமலே நம்முன் தருவிக்கும். விழிப்புணர்வுடன் வாழ்க்கையை வாழ்வதே ஆன்மீக வாழ்க்கை. நம்முன் விரிந்து கிடக்கும் ஆபத்தான நுகர்வு என்னும் பெரும்பசி, சற்று விழிப்புணர்வை நம் வாழ்க்கைக்கு அளிக்குமானால், அது நம் ஆன்மீக பயணத்தின் தொடக்கமாகவும் இருக்க கூடும். ஆம் எப்போதும் பெரும் பசியால் மட்டுமே ஆன்மீகத்தை நோக்கி நம்மை திரும்ப வைக்க முடியும்!

[மேலும்]

blog.change@gmail.com

தொடர்புடைய பதிவுகள்;     நுகர்வெனும்பெரும்பசி - 1
                           நுகர்வெனும்பெரும்பசி - 2
                           நுகர்வெனும்பெரும்பசி - 3
                           தேவைக்கேற்றநுகர்வு

                           Commercialism &Consumerism

Friday, August 23, 2013

நுகர்வெனும் பெரும்பசி - 3

நம் அனைவரின் அடிப்படை நுகர்வு உணவே ஆகும். இன்று, நாம் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்தபின், உணவை தேவைக்கு உண்பதுடன் பொழுதுபோக்கிற்கான கருவியாகவும் பயன்படுத்த தொடங்கியிருக்கிறோம். பொழுது போக்கு கருவியாக உணவு மாறும்போது நாம் வீணாக்கும் உணவின் அளவும் அதிகரிக்கிறது. கீழே இருப்பது உணவு குறித்த சிறு புள்ளிவிவரம்.

சுமார் 870 மில்லியன் மக்கள் உலகம் முழுவதுமாக, போதிய உணவு இல்லாமல் இருக்கிறார்கள். இது உலக மக்கள் தொகையில் 11 சதவிகிதத்தை விட அதிகம். ஆனால் அனைவருக்கும் போதுமான அளவு (2720 கலோரி- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நபருக்கும்) உணவு உற்பத்தி செய்யப்படுகிறது.

நம் உடல் 70% நீரால் ஆனாது. நீர் இன்றி நம் உணவு இல்லை, நாமும் இல்லை. நாம் நுகரும் நீர் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. 1) நேரடி நுகர்வு (Domestic Consumption), 2) மறை நுகர்வு (Virtual Consumption). இதில் மறை நுகர்வு மேலும் இரண்டாக பிரிக்கப்படுகிறது. 1) நாம் தினம் தோறும் நுகரும் பொருட்களை உருவாக்குவதற்காக செலவிடப்படும் நீர், 2) நாம் உண்ணும் அல்லது வீணாக்கும் உணவை விளைவிப்பதற்கு அல்லது உருவாக்குவதற்கு செலவிடப்படும் நீர். கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு கிலோ உணவு பொருளை உருவாக்க செலவிடப்படும் மறை நீரின் அளவு.

       உணவு பொருள் (ஒரு கிலோ)
நீர் அளவு - லிட்டரில்
 காப்பி கொட்டை
18900
மாட்டிறைச்சி
15400
ஆட்டிறைச்சி
5500
கோழி இறைச்சி
4300
பாலாடை கட்டி
3180
அரிசி
2500
கோதுமை
1830
சர்க்கரை
1780
சோளம்
1220
பால்
1000
ஆப்பிள்
822
                   
வட அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் இந்தியா அல்லது சைனாவில் வசிக்கும் ஒருவரை விட 3 மடங்கு அதிக நீரை உபயோகிக்கிறார். மத்திய ஆப்பிரிக்காவில் வாழும் ஒருவர், வட அமெரிக்கர் உபயோகிக்கும் நீரில் கிட்டதட்ட இரண்டு சதவிகித நீரிலேயே தன் வாழ்க்கையை கழிக்கிறார். தற்போதைய ஐரோப்பிய அல்லது வட அமெரிக்க வாழ்க்கை முறை உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டால், பூமியில் தற்போது உள்ளதை விட 3.5 மடங்கு அதிக நன்நீர் (Fresh water) தேவைப்படும். வேறு வார்த்தைகளில் கூறினால், பூமியில் உள்ள மொத்த நன்நீரும் உலகில் வாழும் மக்களில் மூன்றில் ஒரு பங்கினரையும் விட குறைவானவர்களுக்கே போதுமானதாக இருக்கும். தற்போதைய வாழ்க்கை முறையை நாம் மிக விரைவாக மாற்றியமைக்காவிட்டால் 2025 வது வருடத்தில், இப்போதைய நீர் தேவையின் வளர்ச்சி விகிதத்தில் கணக்கிட்டால், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் போதுமான நீர் ஆதாரம் இல்லாத நிலையில் வசிக்க வேண்டியிருக்கும்.

நமது நுகர்வு, நம்மை வெகு வேகமாக எங்கே அழைத்து செல்கிறது என்பது ஓரளவு தெளிவாகியிருக்கும். மேலும் பார்ப்போம்!

2010 ஆம் ஆண்டு, உலகம் முழுவதிலிருந்தும் 31.8 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு, ஆற்றலுக்காக மட்டும் வெளியிடப்பட்டுளதாக கணக்கிடப்பட்டுள்ளது. காற்று வெளியில் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு, பூமி சூடாவதற்கான முக்கியமான காரணி என்பதை நாம் அனைவரும் அறிவோம். 21 ஆம் நூற்றாண்டில், கார்பன் டை ஆக்சைடு வெளியீடு, வருஷத்திற்கு 3.4 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இது, முந்தைய பத்தாண்டுகளின் வெளியீட்டு அதிகரிப்பான வருஷத்திற்கு 1% என்பதை விட மிகவும் அதிகமாகும். ஆக நம் நுகர்வு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது இன்னும் தெளிவாகியிருக்கும்.

2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு புள்ளி விபரம் - சுமார் 23% கார்பன் டை ஆக்சைடு வெளியீடுக்கு காரணமான உற்பத்தி செய்யப்பட்ட பொருள், உற்பத்தி செய்த நாட்டிலிருந்து பிற நாடுகளின் நுகர்வுக்காக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிபரத்தின் படி சைனா 1.4 GT (Giga Ton) அளவுக்கு கார்பன் டை ஆக்சைடை வெளியிட்டு உற்பத்தி செய்த பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது. 0.3 GT  அளவுக்கான பொருள்களை இறக்குமதி செய்துள்ளது. இந்தியாவிற்கான இந்த அளவுகள் 0.25 GT ஏற்றுமதி மற்றும் 0.1 GT இறக்குமதி. ஆனால் அமெரிக்காவிற்கோ 0.5 GT ஏற்றுமதி மற்றும் 1.3 GT இறக்குமதி. ஆக உலகத்தை அழிப்பதற்கு காரணமான நுகர்வு யாரால் பெருமளவு மேற்கொள்ளப்படுகிறது என்பது இன்னும் தெளிவாகியிருக்கும்.

நாம் அனைவரும் மின்அணு (Elctronic) பொருட்களின் தீவிர விசிறிகள். ஒரு புதிய செல்பேசி விற்பனைக்கு வந்தால், நமக்கு அது தேவைப்படுகிறதோ இல்லையோ, நம்மைப்பற்றிய  பிம்பத்தை (Image) பிறரிடம் உயர்த்தி பிடிப்பதற்காக அல்லது நம் கற்பனையில் உருவாக்கப்பட்ட பிற காரணங்களுக்காக அந்த புதிய வகை செல்பேசியை வாங்கி, பழையதை குப்பையில் வீசுகிறோம். நாம் உபயோகப்படுத்தும் செல்பேசிகள் 200 முதல் 300 கிராம் வரை இருக்கலாம். இதனை உருவாக்க சுமார் 112 கிலோ CO2 காற்றுமண்டலத்தில் வெளியிடப்படுகிறது. இது தவிர அந்த செல்பேசி, அது உருவான இடத்திலிருந்து நம்மை வந்து அடைவதக்கு முன் அது எடுத்துக்கொள்ளும் சக்தி மற்றும் அதன் உருவாக்கத்திற்கும், நம்மை வந்து அடைவதற்கும் எடுத்துக்கொள்ளும் நீரின் அளவையும் நம்மால் ஓரளவு கற்பனை செய்து கொள்ள முடியலாம். ஆக, நம் பிம்பத்தை தக்கவைத்து கொள்வதற்காக நாமும் நம் சந்ததியும் வாழ வேண்டிய நம் சூழலை தொடர்ந்து அழித்து கொண்டிருக்கிறோம். நாம் உண்மையில் விரும்பினால், இதைப்போல நம் பிம்பத்தை உயர்த்திபிடிப்பதற்காக நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும், அது எத்தகைய முக்கியத்துவத்தை உடையதாக அல்லது இல்லாததாக இருந்தாலும், நமது சூழலில் அது ஏற்படுத்தும் விளைவுகளை நம்மால் கற்பனை செய்ய முடிந்தால், நம் பிம்பத்தை விட நமது மற்றும் நம் சந்ததியினரின் வாழ்க்கையே முக்கியம் என்னும் முடிவுக்கு வர முடியலாம். அத்தகைய முடிவுக்கு நம்மால் வர முடிந்தால், நம் வாழ்க்கையும் மிக எளிமையானதாக மாறிவிடும்.

ஆம் பிரச்சினையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. நம்மல் என்ன செய்ய முடியும். அரசாங்கங்கள்தான் கொள்கை முடிவுகளை எடுத்து, மிக கவனமாக இதற்கு பரிகாரம் தேடவேண்டும் என நினைத்து நாம் செயல்படாமல் இருந்தால், அது நம் கையாலாகாதனம் மட்டுமே. வாழ்வில் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளும் நம் தயக்கம் மட்டுமே. ஏனெனில் அரசாங்கம் என்பது நம்மைப்போன்றவர்களால் நடத்தப்படும் அமைப்பு. நாம் மாறாமல், அவர்கள் மட்டும் நாம் எண்ணுவதை அவர்களாகவே புரிந்து கொண்டு இயங்க வேண்டும் என நினைத்தால், சிறுபிள்ளைத்தனமான நினைப்புக்கும், நமது இந்த நினைப்புகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அல்லது நாமே நம் வாழ்க்கை முறையை முழுவதுமாக மாற்றி அமைக்கவேண்டும், நம் நுகர்வை உடனடியாக கட்டுப்படுத்தவேண்டும் என்னும் சிபாரிசுகளை முன் வைத்தால், அவற்றாலும் எந்த பயனும் இல்லை.

எனில் நாம் என்னதான் செய்வது. இந்தப்பிரச்சினையை அறிவ பூர்வமாக, நுண்ணறிவுபூர்வமாக அணுகுதலே சாத்தியமான தீர்வுகளை உருவாக்கும். அதாவது, நுகர்வு என்னும் பிரச்சினையின் முழு வடிவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு புரிந்து கொள்வது என்பது வெறும் எண்ணங்களால், தர்க்கரீதியாக நிறுவுவது மட்டுமில்லை. அதற்கும் மேலே செயல்படுவது. உதாரணமாக நாம் அலுவலகத்திலிருந்து தினமும் வீடு செல்லும் பாதையில் அந்த குறிப்பிட்ட நாளில் ஆபத்து இருப்பதாக புரிந்து கொண்டால், வெறும் தர்க்கபூர்வமாக, ஆம் ஆபத்து உள்ளது என்று கூறிக்கொண்டு, அதே பாதையில் சென்று கொண்டிருக்க மாட்டோம். மாற்றுப்பாதையை நம் அறிவால் அறிந்து அந்த மாற்றுப்பாதையில் வீடு சென்று சேர்வோம். தற்போதைய நம் நுகர்வு பாதையில் ஆபத்து உள்ளது என உண்மையில் நம்மால் புரிந்து கொள்ள முடிந்தால், எவரும் கூறாமலே நமது தனிப்பட்ட நுகர்வுக்கான மாற்று பாதைகளை ஆராய தொடங்குவோம்.

[மேலும்]
blog.change@gmail.com

தொடர்புடைய பதிவுகள்;     நுகர்வெனும்பெரும்பசி - 1
                           நுகர்வெனும்பெரும்பசி - 2
                           தேவைக்கேற்றநுகர்வு

                           Commercialism &Consumerism

Sunday, August 18, 2013

நுகர்வெனும் பெரும்பசி - 2

இயற்கையிலிருந்து தேவையான ஆற்றலை வெளிக்கொணரும் மனிதனின் திறன் அதிகரிக்கும்தோறும், இயற்கையுடனான மனிதனின் போராட்டமும் அதிகரிக்கிறது. அந்த போராட்டங்களின் தற்போதைய நிலவரங்களில் சிலவற்றை இங்கு காண்போம்

உலக மக்கள் தொகை கடந்த நூறு ஆண்டுகளில் 2 பில்லியனிலிருந்து 7 பில்லியனாக உயர்ந்துள்ளது.

பூமியில் உள்ள நீரில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவு நீரே நம்மாலும் பிற நிலம் வாழ் உயிரினங்களாலும் பயன் படுத்த தக்கதாக உள்ளது. அந்த நீரை பயன்படுத்தும் பயனாளிகளான எண்ணற்ற உயிரினங்களில் ஒரு இனமான மனித இனம் கட்டற்று பெருகி வருகிறது. இதன் மூலம் மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களுமே நீர் பற்றாக்குறை என்னும் மிகப்பெரிய பிரசிசினையை எதிர்நோக்கியிருக்கின்றன.

இரசாயனங்களை மூலப்பொருட்களாக கொண்டு செய்யும் விவசாயத்தினால் மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் அழிவதன் மூலம் மண் வளம் மிக வேகமாக குறைந்து வருகிறது. அடுத்த கட்டமாக மரபணு மாற்றப்பட்ட தாவர விதைகள் மூலம் செய்யப்படும் விவசாயத்தால் தாவரங்களை ஒட்டி வாழும் உயிரினங்களின் சமன் நிலையை குலைத்து அதன் மூலம் பூமியில் உயிரினங்களின் சமன் நிலையை குலைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

இறைச்சிக்கோழிகளுக்கு ஹார்மோன் (பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்தாலும்) மற்றும் அதிக அளவில் ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்பட்டு, 50 நாட்களுக்குள் சிறு குஞ்சு, முழு கோழியாக மாற்றப்பட்டு, அந்த ஹார்மோன்களும் ஆன்டிபயாடிக் மருந்துகளும் உணவுடன் சேர்ந்து நமது உணவுப்பையை அடைகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் கோழி குஞ்சுகள் முழு வளர்ச்சியை அடைய சுமார் 6 முதல் 8 மாதங்கள்வரை ஆகிறது.

பசுக்களுக்கு ஹார்மோன் மருந்துகள் செலுத்தப்பட்டு, பால் கறவை அதிகரிக்கப்படுகிறது. ஹார்மோன்கள் கலந்த அந்த பால் உணவுகளை உண்டே நமது குழந்தைகள் வளர்கின்றன.

எல்லா நாடுகளும் அவற்றின் மொத்த உற்பத்தி (GDP) ஒவ்வொரு வருஷமும் முடிந்த அளவுக்கு கூட்ட முயலுகின்றன. உற்பத்தி கூட வேண்டுமானால் நுகர்வு கூட வேண்டும். எனவே எல்லா உலக நாடுகளும், விதிவிலக்கில்லாமல், தங்கள் நாட்டு உற்பத்தியை நுகருமாறு எல்லா மக்களையும் தூண்டுகின்றன. உற்பத்தி பெருக வேண்டுமானால், இயற்கையை ஆற்றலாக மாற்ற வேண்டும். இயற்கை அதீத அளவில் ஆற்றலாக மாற்றப்படும்பொழுது, பூமியின் இயற்கை சமன் நிலை குலைக்கப்படுகிறது.

ஆற்றலுக்காக எல்லா நாடுகளும், பிற நாடுகளின் இயற்கை வளங்களையோ அல்லது தம் சொந்த நாட்டின் இயற்கை வளங்களையோ, மிக அதீத அளவில் சுரண்டுவதுடன் அந்த சூழலில் வாழும் மக்களையும் ஈவுஇரக்கமின்றி சுரண்டுகின்றன. இந்த சுரண்டலின் மூலம் சமூகங்களுக்குள் வேற்றுமையை உருவாக்கி சமூக மோதல்களுக்கு வழிவகுக்கின்றன. ஒருவேளை இந்த மோதல்கள் மனித இனத்தின் பெரும்பகுதியை அழித்து, உலகில் மனித இனத்தின் சமன் நிலையை கொண்டு வருவதற்கான எதிர்மறை ஆயுதமாகவும் இருக்கலாம்.

தற்போது ஆற்றலுக்காக சுரண்டும் நாடுகள், இன்னும் மிக குறுகிய காலத்தில் நீருக்காகவும் சுரண்ட தயாராகி வருகின்றன. உதாரணம் மக்கள் குழுக்களுக்கிடையேயான நதி நீர் பகிர்வு பிரச்சினைகள் - காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற ஒரே நாட்டுக்குள் உள்ள மக்களுக்கிடையேயான நீர் பங்கீட்டு பிரச்சினைகள், பிரம்மபுத்திரா போன்ற நதிகளுக்காக இரு நாடுகளுக்கிடையேயான நீர் பிரச்சினைகள், நைல் நதி போன்ற நதிகளுக்காக பல நாடுகளுக்கிடையேயான நீர் பங்கீட்டு பிரச்சினைகள்.

மேலே கூறப்பட்டவை நாம் அனைவரும் அறிந்தவற்றில் மிகச்சில உதாரணங்களே. இவை இந்த உலகின் சமன்நிலையை அதீத வேகத்தில் பாதித்து கொண்டிருக்கின்றன என்பதை நம்மால் உணர முடியாவிடில், மிக தெளிவாக தெரியும் உண்மையான, நாம் அனைவரும் ஒரு நாள் மரணிப்போம், என்பதையும் உணர முடியதவர்களாகவே இருக்க முடியும்.

நம்மால் என்ன செய்ய முடியும்? இந்த உலகமே நுகர்வுக்கு அடிமையாக இருக்கும்போது, தனிப்பட்ட நான் அல்லது தனிப்பட்ட ஒரு சிலரால் என்ன செய்ய முடியும்? சூழலியல் வரலாற்றாசிரியர்களின் பார்வையில், கடந்த சில பத்தாண்டுகளாக, இயற்கையை சுரண்டுதலின் வேகம் பலவிதங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணம் தனிப்பட்ட சிலரின் கூட்டுமுயற்சியும், இயற்கையை சுரண்டுவதால் பாதிக்கப்படும் மக்களின் போரட்டங்களுமே. ஒரு தனிமனிதனாக நம்மால் சூழல் அழிவை முழுமையாக தடுக்க எதுவும் செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால் நுகர்வின் கோரப்பசி உலகின் வாழ்க்கை சூழலை அழிப்பதை நம்மால் உணர முடிந்தால், அத்தகைய நுகர்வுக்கு எதிராக நம்மால் முடிந்தவற்றை, நம்மை அறியாமலே நாம் செய்து கொண்டிருப்போம். அதன் முதல் கட்டமாக நமது நுகர்வின் தன்மையை யாரும் கோராமலே நாம் மாற்றியமைத்திருப்போம். ஆம், சமூகம் என்பது அதனளவில் ஒரு அசைக்க முடியாத தனித்த இருப்பு அல்ல. சமூகம் நம்மைப்போன்ற பல 'நான்' களின் தொகுப்பு. எனவே 'நான்' மாறினால் சமூகமும் மாறி விடுகிறது.  

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருத்து இரசாயன உரங்கள் விவசாயத்தின் பயன்பாட்டில் பெருமளவு வந்தன. அதன் பின்னரே மனிதர்களுக்கு கிருமிகள் மூலம் பரவாத, புற்று நோய், இதய நோய், சர்க்கரை நோய் போன்றவை வர தொடங்கின. தற்போதைய நமது நுகர்வின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி, இது போன்ற நோய்களுக்கான மருந்துகளாகவே இருக்கிறது.

நம் நுகர்வின் அழிக்கும் வீரியத்தை உணர வேண்டுமானால், நாம் நுகரும் ஒவ்வொரு சாதாரண பொருட்களும் இயற்கையின் சக்தியை எந்த அளவுக்கு கோருகின்றன என்பதையும் அதன் மூலம் இயற்கையின் சமன்பாடு எவ்வாறு குலைகிறது என்பதையும் உணர்ந்திருக்க வேண்டும். இயற்கையின் சக்தி அதீத அளவில், இயற்கையின் ஒரு பாகமான மனிதனால் மட்டும் நுகரப்படும்போது, இயற்கையின் மற்ற பாகங்களான பிற உயிரினங்களின் சமன் நிலை இரண்டு வழிகளில் குலைகிறது. முதலாவது, நாம் நுகரும்போது இருக்கும் ஏதோ ஒன்று அழிக்கப்படுகிறது. இந்த அழிப்பு அதன் மறு உருவாக்கத்துடன் சமநிலையை இழக்கும்போது, நம் நுகர்வு இயற்கையின் சமன் நிலையை குலைக்கிறது. இரண்டாவது, எந்த ஒன்று நுகரப்பட்டலும் அந்த நுகர்வின் பக்கவிளைவாக, நுகர்பொருளின் கழிவும் வெளியிடப்படுகிறது. அந்த நுகர்பொருளின் கழிவை நுகரும் இன்னொரு உயிரினம் இருந்தால் மட்டுமே கழிவுகள் மறு சுழற்சி செய்யப்பட்டு இயற்கையின் சமன் நிலை பேணப்படும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அந்த கழிவுகள் உலகம் முழுவதும் பரவி, அவற்றை ஒவ்வாமையக கொண்டுள்ள உயிரினங்களை தொடர்ந்து அழிக்கும். அல்லது அந்த கழிவுகளில் வாழும் உயிரினங்கள் மிக அதிகமாக உருவாகி இயற்கையின் சமன் நிலையை குலைக்கலாம்.

 நம் நுகர்வு, எத்தகைய கழிவுகளை இந்த பூமியின் எல்லா இடங்களிலும் நிரப்புகிறது என்பதை உணரும்போது, நம் நுகர்வின் வீரியத்திதை ஓரளவுக்கு அனுமானிக்க முடியலாம். வளர்ந்த நாடுகள் தங்கள் கழிவுகளை பிற நாடுகளுக்கு அனுப்பி வைக்க முயல்கின்றன. உதாரணம், இந்திய துறைமுகங்களில் கப்பல்கள் வழியாக வந்த வெளிநாட்டு கழிவுகள் - மிகச்சில தருணங்களில் துறைமுகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கழிவுகள் அவற்றின் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. பல தருணங்களில் கண்டுபிடிக்கப்படாமல் இங்கு கொட்டப்படுகின்றன. மாநில எல்லைகளை தாண்டி இறைச்சிக்கழிவுகளை சாலையோரம் எறிந்து செல்லும் பல தருணங்கள் பிராந்திய செய்தித்தாள்களில் பல முறை வெளிக்கொணரப்பட்டிருக்கின்றன. உச்சமாக, நம் நுகர்வுக்கு தேவையான சக்திக்காக அணுவை பிளந்து அதன் சக்தியை எடுத்துவிட்டு, வரும் கழிவுகளின் தீவிரத்தன்மையை அறிந்திருந்த போதிலும், அந்த கழிவுகளை  என்ன செய்வது என தெரியாத போதிலும், மீண்டும் மீண்டும் அணுவிலிருந்து பெறப்பட்ட சக்தியையும் எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் நுகர்ந்து கொண்டிருக்கிறோம்.

[மேலும்]


தொடர்புடைய பதிவுகள்; நுகர்வெனும் பெரும்பசி - 1
                           தேவைக்கேற்றநுகர்வு

                           Commercialism& Consumerism
blog.change@gmail.com

Thursday, August 15, 2013

நுகர்வெனும் பெரும்பசி - 1

'நுகர்வெனும் பெரும் பசி' - இது ராமச்சந்திர குஹா என்னும் சூழலியலாளர் (Environmentalist) மற்றும் சமூகவியலாளரின் (Sociologist) சூழலியல் இயக்கங்களின் அறிமுகம் குறித்த நூலின், தமிழ் பதிப்பின் பெயர். அந்த பெயரை நன்றியுடன் இங்கு இரவல் வாங்கிக்கொள்கிறேன். மனித இனம், இன்னமும் வேண்டும் அதற்கு மேலும் வேண்டும் என நிறைவடையாது நுகர்வதை காணும்போது, ஆம் இது அடங்காத பெரும்பசிதான் என்ற எண்ணம் வருவதில் வியப்பில்லைதான். அதிலும் தங்கள் நுகர்வை குறித்த எத்தகைய விழிப்புணர்வும் இல்லாமல், தாங்கள் நுகர்ந்து அழிப்பது, தங்களின் வாழ்வாதாரத்தைதான், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைதான், மனித இனம் தன்னுள் முழுமை அடைவதை நோக்கி செல்லும் பரிணாம வளர்ச்சி என்னும் இயக்கத்தைதான் என்ற உணர்வுகள் சற்றும் இல்லாமல் நுகர்வு ஒன்றே தங்கள் பிறப்பின் பயன், வாழ்க்கையின் அடிப்படை எனக்கொண்ட பெரும் மக்கள் திரளை காணும்போது, ஒரு மனிதப்பிறவியாக துக்கம் மேலிடுகிறது.

நுகர்வு குறித்த எனது எளிய பார்வைகளை, நீண்ட ஆராய்சிகளை பின்புலமாக கொண்டிருக்காவிட்டாலும், எனக்கு வாய்த்த இந்த ஊடகத்தின் சிறு பகுதி முன் திறந்து வைக்கிறேன். இந்த பார்வைகள், அதைக்காணும் ஒருவரது மனதிலாவது ஒரு விவாதத்தை தொடங்கி வைக்குமானால், அவை இங்கு பதிந்ததன் நோக்கத்தை அடைந்து விடும்.

இங்கு முன் வைக்கப்படுபவை பெரும் நுகர்வுக்கு காரணமான எதோ சில காரணிகளை குறித்தவை அல்ல. ஆனால் பெரும் நுகர்வுக்கு அடிப்படையாக இருக்கும் நம் ஒவ்வொருவரின் போதாமை உணர்வை குறிப்பவை, நம் இயலாமை உணர்வை குறிப்பவை, நம் தூண்டுதல் உணர்வை குறிப்பவை. சுருங்கச் சொன்னால், எளியவர்கள் என தம்மை கருதிக்கொள்ளும் நாம் ஒவ்வொருவரும், நாம் அறியாமலே அல்லது அறிந்தும் அறியாமலே, வாழும் சூழலை நுகர்வின் மூலம் எவ்வாறு அழித்தொழிக்கிறோம் என பார்வையை நம்மீதே வைப்பது. ஆம் இந்த சுயநோக்கு நமக்கு ஒவ்வாததாக இருக்கலாம் - எனெனில் எவருக்கும் தாம் செய்வது சரியல்ல என அறிவது உவப்பானதாக இல்லாமல் போகலாம். அதற்காகவே தாம் செய்யும் தவறுகள் மேல் தங்களுடைய கூரிய பார்வை விழாமல் பார்வையை பிறர் பக்கம், நம்மில் பெரும்பாலானவர்களும், செலுத்த முயலுகிறோம். இது நம் பார்வையை பிறரிடமிருந்து நம்மேல் திருப்பி செலுத்துவதற்கான ஒரு சிறு முயற்சி.

நுகர்வு - இது எந்த உயிரினத்துக்கும் உயிர் வாழ்வதற்கான அடிப்படை. இந்த உலகத்தில் முழுமுதல் இருப்பைத்தவிர வேறு எந்த ஒன்றும் தம்முள் முழுமையானவை அல்ல. இங்கு எந்த ஒன்றும் தன் இருப்பை உறுதி செய்ய மற்றொன்றை சார்ந்திருக்க வேண்டியது கட்டாயமானது. இந்த சார்ந்திருத்தலே அடிப்படையில் நுகர்வு எனப்படுவது. பூமியும் அதன் இருப்பை உறுதி செய்ய சூரியனை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அதாவது பூமி இடைவிடாது சூரியனின் சக்தியை நுகர்ந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு உயிரினமும், மனிதர்கள் உட்பட, பிற உயிரினங்களை சார்ந்தே உயிர் வாழ முடியும். அடிப்படையில் உணவுதான் உயிர் வாழ்வதற்கான இன்றியமையாத தேவை. மிக மிக சில உயிரினங்களை தவிர மற்ற அனைத்து உயிரினங்களுக்கும் உணவு என்பது பிற உயிரினங்களோ அல்லது பிற உயிரினங்களால் உருவாக்க பட்டவையோதான். அதாவது எல்லா உயிரினங்களும், தமது இருப்பை உறுதி செய்ய, பிற உயிரினங்களை தொடர்ச்சியாக நுகர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆக, இந்த பூமியில் உயிரினங்கள் நிலைத்திருக்க எல்லா உயிரினங்களின் சமநிலை பேணப்பட்டாக வேண்டும்.ஏனெனில் ஒரு உயிரினம் அழிந்தாலும் அதை சார்ந்து வாழும் மற்ற உயிரினங்களும் அழிந்துவிடும். மொத்த இருப்பு என்பது, (நாம் விரும்பினால் கடவுள் என்னும் வார்த்தையால் அதை குறிக்கலாம்) நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட பெரும் நுண்ணறிவு உடையது. அது உயிரினங்களினிடையே, தனது நுண்ணறிவின் மூலம், ஒரு சமநிலையை பேணுகிறது. அந்த சமநிலையை அது எப்போதுமே பேணும். ஆம் மொத்த இருப்பு அல்லது கடவுள் சமநிலையை எப்போதுமே பேணும் - அந்த சமநிலையை பேண, தேவை ஏற்பட்டால், மனித இனத்தை அல்லது வேறு சிலவற்றை, முழுவதும் அல்லது தேவைப்படும் அளவுக்கு அழித்தாவது!

மனிதர்களை தவிர மற்ற எல்லா உயிரினங்களும் தங்கள் உணவுக்காகவும் இருத்தலின் அடிப்படை பாதுகாப்பிற்காகவும் மட்டுமே நுகர்தலில் ஈடுபடுகின்றன. எனவே மனிதர்களை தவிர மற்ற உயிரினங்களால், பூமியின் உயிர் இயக்கங்களில் பெரும்பாலும் சமன் நிலை குலைவதில்லை. மனிதர்களும், சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை, உலக வாழ்வின் சமநிலையை குலைப்பதற்கான சக்தியை பெற்றிருக்கவில்லை. ஆனால் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக, சீரான உந்து வேகத்தில் மனிதன் இயற்கை ஆற்றலை கையாளும் திறனை பெற்றுக்கொண்டுள்ளான், மேலும் பெற்றுக்கொண்டிருக்கிறான். சற்று மாற்றி கூறினால், சீரான உந்து வேகத்தில் (accelaration) இயற்கையை நுகரும் திறனை அதிகரித்து வருகிறான், அதிகமாக நுகர்ந்து வருகிறான்.

நாம் தனித்திறமைகள் எதுவும் இல்லாத சாதாரணர்களாக இருக்கும்போது அனைவரையும் போலவே நாமும் சாதாரணர்களாக இருந்து விடலாம். ஆனால் நாம் தனித்திறமைகளை பெற்றிருக்கும்போது, அந்த திறமையை கையாள்வதற்கான உளவியல் சமநிலையை பெற்றிருக்க வேண்டும். நம் உளவியல் சமநிலை குலைந்தால், நாம் பெற்றிருக்கும் தனித்திறமையே நம்மை அழிவுக்கு அழைத்து செல்லும். ஒரு உயிரினமாக நாம் தற்போது இயற்கை ஆற்றல்களை கையாள்வதற்கான திறனை சீரான வேகத்தில் பெற்று வருகிறோம். ஆனால் அதற்கு ஈடுகொடுக்கும் வேகத்தில், அந்த திறனை கையாள்வதற்கான உளவியல் சமநிலையை நாம பெற்றிருக்கவில்லை, பெற முயற்சிக்கவுமில்லை, பெற வேண்டும் என்று தெரியவுமில்லை. ஆக, நாம் பெற்ற இயற்கையை கையாளும் திறனே, நமது உளவியல் சமநிலையின்மையால், நம்மை அழிவை நோக்கி கொண்டு செல்கிறது. அந்த அழிவை நம்மால் உணர முடிந்நால், ஒருவேளை நம்மையும் பிற உயிரினங்களையும் அழிவின் விளிம்பிலிருந்து நம்மால் பாதுகாக்க முடியலாம். நாம் மிக வேகமாக அடைந்து வரும் அறிவு என்னும் திறனை நம்மால் கையாள முடியவில்லை என்றால் நாம் அறிவை அடையும் அதே வேகத்தில் அழிவையும் அடைந்து கொண்டிருப்போம். நாம் அழிந்தாலும், இயற்கை அல்லது உலகு அதன் சமநிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் - அவ்வறு நாம் அழிவது அதன் சமன் நிலையை பேணுவதற்காகவே இருக்கும்.

இங்கு அழிவின் விளிம்பிலிருந்து பாதுகாக்க முடியலாம் என்பது, தற்போது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கருத்தாக தோன்றலாம். ஆனால் தற்போதைய உயிரினங்களின் நிலையை சற்று ஆராய்ந்தால், நாம் மிகவும் பாதுகாப்பான உலகில் வாழ்கிறோம் என்ற மாயையிலிருந்து வெளிவர உதவலாம்.

[மேலும்]

தொடர்புடைய பதிவுகள்; தேவைக்கேற்றநுகர்வு: 

                                          Commercialismand Consumerism          
blog.change@gmail.com