Saturday, June 15, 2013

சமூகத்தில் தனி மனித பங்களிப்பு

சமூகம் என்பது தனி மனிதர்கள் தங்களுக்குள் கொண்டுள்ள உறவுகளின் தொகுப்பு. தனிமனிதர்கள் தங்கள் வாழ்க்கையை எளிமையாக்கிக்கொள்ள பிற மனிதர்களுடன் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவம், கருத்தியல் ரீதியாகவும் உறவாட வேண்டியுள்ளது. இந்த உறவுகள், மிகவும் சிக்கலான வலைபின்னல் போல மற்ற மனிதர்களின் உறவுகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இந்த உறவுகளின் தொகுப்பே சமூகம். ஆகவே தனி மனித செயல்பாடுகள் மற்றும் சிந்தனைகளின் தொகுப்பு, சமூகத்தின் செயல்பாடுகளாகவும் சிந்தனைகளாகவும் முழுமை கொள்கிறது. தனிமனிதன் மற்ற மனிதர்களுடன் கொண்டுள்ள உறவுகளின் உறுதிக்கேற்ப அந்த மனிதனின் செயல்பாடுகளும் சிந்தனைகளும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

நாம் ஒவ்வொருவரும் சமூகத்தின் சிக்கலான வலைப்பின்னலில் ஒரு சந்திப்பு புள்ளி (knot). ஒரு வலைப்பின்னலில் ஒவ்வொரு சந்திப்பு புள்ளியின் தரமும், உறுதியும் அந்த வலைப்பின்னலின் தரத்தையும் உறுதியையும் முடிவு செய்கிறது. ஆக நம் வாழ்வின் தரமும், இயல்பும் நாம் வாழும் சமூகத்தின் தரத்தையும் இயல்பையும் முடிவு செய்கிறது. அதாவது, ஒரு சமூகத்தின் தரத்தையும் இயல்பையும் முடிவு செய்வது, நம்மைப்போன்ற சாதாரண மனிதர்களின் தரமும் இயல்புமே - சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதர்களும் சாதாரண மனிதர்களே. அந்த சதாரண மனிதர்கள் தங்களின் செயல்களில் கொண்டுள்ள ஈடுபாடு, அந்த  செயல்கள் எத்தகையதாக இருந்தாலும், அவர்களை மற்றவர்களிலிருந்து பிரித்து காட்டுகிறது.

சமூக அமைப்பில் வாழும் நாம், நமது சிந்தனை முறைகளையும் அடிப்படை இயல்புகளையும், அந்த சமூக அமைப்பில் நாம் கொண்டுள்ள உறவுகளிடமிருந்து, அந்த உறவுகளின் இயல்பையும், சிந்தனை முறைகளையும் சார்ந்தே பெற்றுக்கொள்கிறோம். எனவே நமது அடிப்படை இயல்பு, நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் இயல்பையே பெற்றிருக்கும் - நாம் பெற்ற அந்த சமூக இயல்பில், விழிப்புடன் நம்மால் நமக்குள் கொண்டு வரப்பட்ட மாற்றங்களை தவிர! நமது இயல்புகள், நம்மால் விழிப்புடன் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் உட்பட, நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் இயல்புகளாக, நாம் கொண்டுள்ள உறவுகள் மூலம் நிலைப்படுத்தப்படுகிறது. ஆம், நமது சமூக உறவுகளின் வலிமைக்கேற்ப, நம்மால் சமூகத்திற்கு அளிக்கப்பட்ட இயல்புகள் சமூகத்தில் வெளிப்படையான மாறுதல்களை உருவாக்கலாம். ஒருவேளை நம் சமூக உறவுகள் வலிமையற்றவையாக இருந்தால், சமூகத்தின் இயல்பில் நம்மால் கொண்டு வரப்படும் மாற்றங்கள் வெளிப்படையான சமூக மாற்றங்களை உருவாக்காமல் போகலாம். ஆனாலும் அந்த சமூகத்தின் உள்இயல்பில் சிறு சலனங்களை ஏற்படுத்தி, இன்னொரு வலிமையான சமூக உறவுகளை உடைய தனிமனிதர் மூலம் வெளிப்படையான சமூக மாற்றங்களை ஏற்படுத்த முடியலாம்.

ஏன் சமூகம் மாற வேண்டும்? உலகம் என்பது ஒரு நிலையான இருப்பு அல்ல. அது நிகழ்வுகளின் தொகுப்பு. நிகழ்வு என்பதே மாற்றத்தின் அடிப்படை. நிகழ்வின் மூலம் ஒன்று மற்றொன்றாக மாறுகிறது. அதாவது, உலகம் என்பது ஓயாது மாறிக்கொண்டிருக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு. அந்த உலகின் சிறு பகுதியான மனிதர்களும், மனிதர்களின் உறவுகளால் ஆன சமூக அமைப்பும், உலக நிகழ்வுகளின் பகுதியான சிறு நிகழ்வாகவே இருக்கும். அல்லது, மனிதர்களும் அந்த மனிதர்களால் உருவாக்கப்பட்ட சமூகமும் மாறிக்கொண்டு மட்டுமே இருக்க முடியும். எனவே சமூகம் ஏன் மாற வேண்டும் என்னும் கேள்வி எழுவதற்கான சாத்தியங்களே இல்லை - மாறிக்கொண்டு இருப்பதே அதன் இயல்பு.

ஆம், தனிமனிதர்களாகிய நம் ஒவ்வொரு சிந்தனையும்,ஒவ்வொரு மன இயக்கங்களும், ஒவ்வொரு செயல்களும், நாம் எத்தகைய சமூக உறவுகளை கொண்டவர்களாக இருந்தாலும், நாம் சார்ந்திருக்கும் சமூகத்தில் ஓயாத சலனத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். ஒரு ஆரோக்கியமான சமூக அமைப்பில், தனிமனிதர்களால் ஏற்படுத்தப்படும் இந்த சலனங்கள், அந்த சமூகத்தை அதன் அடுத்த உயர்ந்த கட்டத்தை நோக்கி நகர்த்திக்கொண்டே இருக்கும். எனவே, நம் சமூகம் அதன் அடுத்த உயரிய நிலையை நோக்கி நகர்கிறதா இல்லையா என்பது, தனி மனதர்களாகிய நம் ஒவ்வொருவரின் சிந்தனையையும் செயல்பாடுகளையும் பொறுத்தே அமைகிறது. அல்லது தனி மனிதர்களாகிய நாம், செயல் ரீதியாகவும் சிந்தனை ரீதியாகவும் மனித பிறவிக்கு சாத்தியமான அடுத்த உயர்ந்த நிலையை நோக்கி செல்கிறோமா இல்லையா எனபதே, நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கான சாத்தியங்களை நமக்கு கூறுகிறது.

சமூக அமைப்பின் மூலமே பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால் நம் முன்னோர் அடைந்த நாகரீகம் மற்றும் ஞானத்தின் சிறு துளியாவது இன்று நம்மை அடைந்திருக்கிறது. இன்று நாம் அடையும் நாகரீகம் அல்லது அநாகரீகம், ஞானம் அல்லது அஞ்ஞானம், நம் அடுத்த சந்ததியினரை மட்டுமல்லாது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் வரும் சந்ததியினருக்கும் சென்று சேரும். உண்மையில் நம் குழந்தைகள் மீது அன்புடையவர்களாக இருந்தால், சமூகத்திலிருந்து எந்த எதிர்மறை இயல்புகளையும் நம் குழந்தைகள் அடைவதை விரும்ப மாட்டோம். அல்லது நமது எதிர்மறை இயல்புகள் சமூக இயல்புகளாக உருபெற்று நம் குழந்தைகளையும் அவர்கள் குழந்தைகளையும் அடைவதையும் விரும்ப மாட்டோம். மேலும் நாம் வாழும் சமூகத்தின் மீது அக்கறை உடையவர்களாக இருந்தால், நமது எண்ணங்களும் செயல்களும் எவ்வாறு சமூகத்தின் எண்ணங்களாகவும் செயல்களாகவும் உருப்பெறுகிறது என்பதை நிச்சயமாக நாம் அறிந்திருக்க வேண்டும். அந்த அறிவை நாம் அடைந்தால், ஒரு சமூக பிரக்ஞ்சை உள்ள மனிதரை போலன்றி வேறு எந்த விதமாகவும் நம்மால் வாழ முடியாது.

இன்று நாம் அடைந்தவை என பெருமிதம் கொள்ளும் அனைத்தையும், நாம் வாழும் சமூகத்திலிருந்து பெற்ற அடிப்படைகளிலிருந்து மட்டுமே அடைந்துள்ளோம். அவற்றை அடைவதற்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் நம் உழைப்பு இருந்துள்ளது. ஆனாலும் அந்த உழைப்பும் சமூகத்திலிருந்து பெற்ற அறிவு, ஆர்வம், உந்துதல் ஆகியவற்றின் மூலம் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. நாம் நன்றியுயுணர்ச்சி உடையவர்களாக இருந்தால் நம் வாழ்க்கையை கட்டமைக்க உதவிய சமூகத்திற்கு மிகச்சில நேர்மறையான பங்களிப்பையாவது அளித்தாக வேண்டும். தனிமனித அளவில் நேர்மறை எதிர்மறை என ஒன்று இல்லாமல் இருந்தாலும், உறவுகளின் தொகுப்பு என்னும் தளத்தில் அந்த பிரிவினை இருந்தாக வேண்டும். அதாவது சமூகத்தை அடுத்த உயர்நிலைக்கு எடுத்துசெல்லும் எந்த பங்களிப்பும் நேர்மறையான பங்களிப்பே. உண்மையில் நாம் சமூகம் குறித்த விழிப்புணர்வுடன் இருந்தால், சமூகத்திடமிருந்து நாம் பெற்றவற்றிற்கு நன்றியுணர்வுடன் இருந்தால், எத்தகைய செயல்கள் சமூகத்தை அடுத்த உயர் நிலைக்கு எடுத்து செல்லும் என்பதை யாரும் கூறாமலே நாம் அறிந்திருப்போம். அதற்கு தேவையான உணர்வு நிலையில் இருந்தால், நாம் அறிந்திருந்தாலும் இல்லாவிடிலும் உண்மையில் நாம் ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்போம்

blog.change@gmail.com

No comments: