Monday, February 11, 2013

விழிப்பின் விழிப்பின்மை


நாம் விழித்திருக்கும்போது உண்மையில் நாம் முழுமையாக விழித்திருக்கவில்லை, அரை விழிப்பில் இருந்து கொண்டிருக்கிறோம். ஆம், நம் உடலுக்கு தேவையானவற்றை செய்யும் அளவில் மட்டுமே விழித்திருக்கிறோம். ஆனால் வாழ்க்கை என்பது உடல் சார்ந்தது மட்டும் அல்ல, அது வாழ்க்கையின் மிக மிக சிறிய பகுதி மட்டுமே- அடிப்படை பகுதியாக இருந்தாலும!. வாழ்வின் பெரும் பகுதி, வாழ்வின் உண்மையான பகுதி. நம் மனதினுள் சதா காலமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. துரதிர்ஷ்ட வசமாக வாழ்வின் உண்மையான பகுதியை அறிய நாம் விழித்திருக்கவில்லை. இதன் மூலம் நம் வாழ்வின் பெரும்பகுதியை, இயற்கை மனிதர்களுக்கு மட்டும் அளித்துள்ள பெரும் கொடையை வாழாமல் வீணாக்கி கொண்டிருக்கிறோம். எவ்வாறு நாம் மனம் சார்ந்த வாழ்க்கைக்கும் விழிப்பது? எவ்வாறு நம் வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பது?

நம் மனம் இயங்கும் முறையை அடிப்படையாக கொண்டு அதனை நான்கு பகுதிகளாக பிரிக்கலாம். அவை வெளிமனம்(Conscious Mind), உள்மனம்(Sub Conscious Mind), ஆழ்மனம்(Unconscious Mind), சமூக ஆழ்மனம் (Collective Unconscious Mind). மனதின் இந்த நான்கு பகுதிகளும் ஒன்றுடன் ஒன்று எப்போதும் இருவழிப்பாதையில் தொடர்புடன் இருந்து கொண்டிருக்கின்றன - மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும். நாம் நம் மனதை குறித்து அறிந்திருப்பது நமது வெளிமனதை மட்டுமே. மனதை கவனிப்பவர்களாக இருந்தால் வெளிமனதின் ஆழம் சற்று அதிகமாக இருக்கலாம், மற்றவர்களுக்கு வெளிமனம் மிகவும் மெலிதாக(Shallow) இருக்கலாம். அதாவது நாம் சற்றேனும் அறிந்திருப்பது வெளிமனதில் நிகழும் நிகழ்வுகளை மட்டுமே. ஆன்மீக பயிற்சிகளின் அடிப்படை, மனதின் இந்த நான்கு பகுதிகளும் ஒன்றாகி வெளிமனமாக வெளிப்படும் தகுதியை அடைவதே. அந்த தகுதியை அடையும்போது நம்மனதின் அனைத்து நிகழ்வுகளும் நம் பிரக்ஞ்சையின் எல்லைக்குள் நிகழும். அதாவது நம் பிரக்ஞ்சை மனதின் நிகழ்வுகள் எந்த தளத்தில் இருந்தாலும் அந்த தளங்களில் சஞ்சரிக்கும் தகுதியை பெற்றிருக்கும். அந்த அனுபவத்தை அடைந்தால் நம் வாழ்க்கையில் வேறு எந்த அனுபவங்களுக்கும் தேவைகள் இல்லாமல் இருக்க கூடும்.

நாம் உறக்கத்தில் இருக்கும்போது, எந்த வெளி நிகழ்வுகளும் நம்மை அடைவதில்லை. உறக்கத்தில் சாதாரணமாக கண்கள் மூடியிருக்கும். ஒருவேளை கண்கள் திறந்திருந்தாலும் எந்த காட்சிகளும் நம்மை அடைவதில்லை. செவிகள் திறந்திருந்தாலும் எந்த ஒலியும் நாம் அடைவதில்லை. நாசி சுவாசித்துக்கொண்டிருந்தாலும் எந்த மணத்தையும் நாம் நுகர்வதில்லை. நம் உடல் திறந்திருந்தாலும் எந்த தொடு உணர்ச்சியையும் நாம் உணர்வதில்லை. அதாவது உறக்கத்தில் இருக்கும்போது, புலன்கள் அறிவதை பிரக்ஞ்சை உணர்வதில்லை. அல்லது நாம் உறங்கும்போது நம் பிரக்ஞ்சையும் உறங்குகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால் நாம் பிரக்ஞ்சை இழந்து இருக்கும் தருணங்களே நாம் உறக்கத்தில் இருக்கும் தருணங்கள். நாம் விழிப்பில் இருக்கும்போது முழு பிரக்ஞ்சையுடன் இருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. நம் ஒவ்வொருவரின் இயல்பிற்கேற்ப வெவ்வேறு அளவிலான பிரக்ஞ்சையுடன் இருக்கிறோம். அல்லது நம் அன்றாட வாழ்க்கையை நடத்திச்செல்ல தேவையான குறைந்த பட்ச பிரக்ஞ்சையுடன் மட்டுமே இருக்கிறோம்.

நம் அன்றாட வாழ்க்கையை நிறைவேற்றும் இயக்கங்கள், ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்ட இரண்டு தளங்களுக்கு இடைப்பட்ட தளங்களில் நடைபெறுகிறது. முதல் தளத்தில் இயங்கினால் நாம் முற்றிலும் விலங்குகளை போல இருப்போம். நம் உடல் தேவைகள் எழும்போது அந்த தேவைகளை நிறைவேற்றுவதற்கான செயல் புரிவது. இதில் உடல் தாண்டிய எந்த பிரக்ஞ்சையும் தேவையில்லை. ஆனால் விலங்குகள் அவற்றின் உடல் சார்ந்த இயக்கங்களில் ஈடுபடும்போது, உடல் குறித்த முழுபிரக்ஞ்சையுடன் இருந்தாக வேண்டும். ஏனெனில் இந்த தளத்தில் எண்ணங்கள் இருப்பதில்லை. உடல் குறித்த முழுபிரக்ஞ்சை இல்லாத பட்சத்தில் விலங்குகளால் அவற்றின் உயிரை தக்க வைத்துக்கொள்ள முடியாது. அடுத்த இயங்கு தளம், உடல், மனம் மற்றும் உணர்வு சார்ந்த முழு பிரக்ஞ்சையுடன் இயங்குவது. இந்த தளத்தில் இயங்கும்போது, நம் உடல் தேவைகள், அந்த தேவைகள் மனதில் ஏற்படுத்தும் விளைவுகள், அந்த விளைவுகளின் காரணமாக உருவாக்கப்படும் மன இயக்கங்கள், மன இயக்கங்கள் செயல்களாக வடிவம் பெறும் முறைகள், உடலிலிருந்து செயல்கள் வெளிப்படும் வழிமுறைகள் ஆகிய அனைத்தையும் குறித்த பிரக்ஞ்சையுடன் நாம் இருக்க கூடும். சாதாரண மனிதர்களின் இயங்கு தளம், இந்த இரண்டு தளங்களுக்கு இடைப்பட்ட தளங்களில் இருக்கிறது - பெரும்பாலும் உடல் சார்ந்த பிரக்ஞ்சையை மட்டும் உடைய முதல் தளத்திற்கு மிக மிக அருகில்! அதாவது மனிதர்களாகிய நமக்கு சாத்தியமான முழு விழிப்பு நிலையிலிருந்து மிக மிக விலகி, உடல் சார்ந்த விழிப்பு நிலை மற்றும் மிக மிக குறைந்த அளவிலான மனம் சார்ந்த விழிப்பு நிலையில் மட்டும் இருப்பது.
நாம் காண்பது, கேட்பது, உணர்வது போன்றவை பிரக்ஞ்சை விழிப்புடன் இருக்கும்போது மட்டுமே நிகழும். ஆனால் மன இயக்கங்களுக்கு பிரக்ஞ்சையின் விழிப்பு நிலை தேவையில்லை. நம் உள் மனதிலும் ஆழ் மனதிலும் எப்போதும் நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவற்றை நம் பிரக்ஞ்சை அறிவதில்லை. அதாவது பிரக்ஞ்சையின் அறிவில் படாமல் நிகழும் நம் மன இயக்கங்களே நம் உள்மனமும் ஆழ்மனமும். ஆனால் அந்த உள் மன இயக்கங்களை பிரக்ஞ்சை அறிய நேர்ந்தால் அந்த கணமே மன இயக்கத்தின் அந்த பகுதி நம் வெளிமனமாக ஆகி விடுகிறது.

நம் பிரக்ஞ்சை சுதந்திரமாக இருக்கும்போது எண்ணற்ற இயக்கங்களை ஒரே நேரத்தில் அறியும் இயல்புடையது. அந்த இயல்புடன் பிரக்ஞ்சை எப்போதும் இருக்குமானால், அதாவது நம் பிரக்ஞ்சை எப்போதும் சுதந்திரமாக இருக்க முடியுமானால், நம் மனதில் வெளிமனம், உள்மனம், ஆழ்மனம் என பிரிவினைகள் இருக்க வாய்ப்பில்லை. மனம் என்பது முழுவதும் பிரக்ஞ்சையால் அறியப்படக்கூடிய வெளிமனமாகவே இருக்க கூடும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம் சாதாரண நிலையில் நம் பிரக்ஞ்சை விடுதலையுடன் இருப்பதில்லை. நம் மன இயல்பிற்கேற்ப, நம் செயல்களுடன் அல்லது மன இயக்கங்களுடன் தன்னை அடையாளப்படுத்தி இணைத்துக்கொண்டு மற்ற இயக்கங்களை, செயல்களை தவற விட்டு விடுகிறது.

ஆனால் பிரக்ஞ்சை ஒரு குறிப்பிட்ட செயலுடன் அல்லது எண்ணத்துடன் மட்டும் தன்னை அடையாளப்படுத்தி இணைத்துக்கொண்டால் நம்மால் வாழ்க்கையை நிகழ்த்த இயலாது. ஏனெனில் பிரக்ஞ்சையின் மூலம் மட்டுமே நம் வாழ்க்கை தேவைகள் செயல்வடிவம் பெறுகின்றன. நம் வாழ்க்கையை நிகழ்த்த நமக்கு பல செயல்கள் தேவைப்படுகின்றன. எனவே நம் பிரக்ஞ்சை ஒரு செயலிலிருந்து மற்றொரு செயலுக்கும், ஒரு எண்ணத்திலிருந்து மற்றொரு எண்ணத்திற்கும் இடைவிடாது தாவிக்கொண்டே இருக்கிறது. அத்துடன் அது செல்லும் ஒவ்வொரு செயலுடனும், எண்ணத்துடனும் தற்காலிகமாக தன்னை இணைத்துக்கொள்கிறது. இங்கு ஆச்சரியப்படவேண்டிய விஷயம் நம் உள் மனதின் செயல்பாடு. பிரக்ஞ்சையால் விட்டு செல்லப்பட்ட செயல்களையும் எண்ணங்களையும் உள்மனம் ஏற்றெடுத்து முடித்து வைக்கிறது. ஆனால் உள் மனதால் இயக்கப்படும் இயக்கங்களை பிரக்ஞ்சை அறிவதில்லை. எனவே அந்த இயக்கங்களின் திசைகளும் நம் கட்டுப்பாட்டில் இல்லை.

பெரும்பாலும் நம் அனைவரின் அன்றாட செயல்பாடுகளும் உள் மனதால் மட்டுமே முடித்து வைக்கப்படுகின்றன. நாம் செய்யும் செயல்களில் எப்போது கவனத்தை இழந்து பிற எண்ணங்களில் நம் கவனத்தை செலுத்திகிறோமோ, அப்போதே நம் செயல்களின் இயங்கு சக்தி உள் மனதால் கட்டுப்படுத்தப்படுகிறது. பிரக்ஞ்சை அவ்வப்போது செயல்களை எட்டிப்பார்த்து, ஆம் கவனத்துடன் இருக்கிறேன் என கூறிக்கொள்கிறது. ஆனால் உண்மையில் அது செயல்களிலிருந்து செயல்களுக்கும் எண்ணங்களிலிருந்து எண்ணங்களுக்கும் இடைவிடாது தாவிக்கொண்டிருக்கிறது.

ஆம், நாம் அலைபாயும் மனம் எனக்கூறுவது, எண்ணங்கள் அலைபாயும் மனபரப்பை அல்ல, ஆனால் எந்த செயல்களிலும் அல்லது எண்ணங்களிலும் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முடியாத பிரக்ஞ்சையையே. ஆகவே அது உண்மையில் அலைபாயும் மனம் அல்ல. அலைபாயும் பிரக்ஞ்சை! ஆக உண்மையில் நாம் செய்ய வேண்டியது மனதில் உருவாகும் எண்ணங்களை கொல்வது அல்ல, ஆனால் அனைத்து எண்ணங்களுக்கும் அனைத்து செயல்களுக்கும் முழு விழிப்புடன் இருக்கும் பிரக்ஞ்சையை அடைவது! அத்தகைய பிரக்ஞ்சையை நாம் அடையும்போது நம்மிடமிருந்து தேவையில்லாத செயல்கள் எதுவும் எழ வாய்ப்பில்லை, நம் மனதில் தேவையில்லாத எண்ணங்களும் எழ வாய்ப்பில்லை. இந்த நிலையையில் நல்ல செயல் தீய செயல், நல்ல எண்ணம், தீய எண்ணம் என்ற பிரிவினைகளையும் நாம் தாண்டி சென்று விடக்கூடும். அந்த நிலையில் உலகின் இருமை தன்மையை கடந்து, அனைத்தும் ஒன்றேயாகக்கூடிய ஒருமை தன்மையை நாம் அடையக்கூடும். அத்தகைய தன்மை நம் மனதில் நிகழுமானால், அதுவே மனிதபிறவியாக நாம் அடையக்கூடிய உச்சகட்ட ஆனந்தமாக இருக்க கூடும். எல்லா மதங்களுக்குமான, எல்லா நாகரீகங்களுக்குமான தொலை தூர இலக்கு, அந்த மதத்தை அல்லது நாகரீகத்தை சார்ந்த ஒவ்வொரு மனிதரையும் இந்த ஒருமை தனைமையை நோக்கி பயணிக்க வைப்பதேயாக இருக்க கூடும்!

blog.change@gmail.com

No comments: