Friday, February 8, 2013

அலை பாயுதே மனம்!


மனதை கட்டுப்படுத்த எப்போதாவது முயலாதவர்களாகவும், அவ்வாறு முயலும்போது மனதின் அலைபாயும் தன்மையை குறித்து விரக்தி அடையாதவர்களாகவும் நாம் இருப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவானதாகவே இருக்கும். ஆம் நம்மில் பெரும்பாலானவர்கள் நம் மனதின் அலை பாயும் தன்மையை குறித்து நிச்சயமாக விரக்தி அடைந்திருப்போம். அந்த விரக்தியின் மூலம், மனதால் அடைய சாத்தியமான உச்சகட்ட ஆனந்தத்தை அடைய முடியாமல், அதற்கான முயற்சியையும் கைவிட்டிருப்போம். நம் மனதை குறித்த புரிதல் இல்லாத காரணத்தால், அந்த மனதால் அடைய கூடியவற்றையும், கூட நம் வாழ்க்கையையும், நம்மை அறியாமலே இழந்து கொண்டிருக்கிறோம்.

நம் மனம் அதன் அலைபாயும் தன்மையுடன் இருப்பதால் மட்டுமே, நம்மால் நம் அன்றாட வாழ்க்கையை நடத்திச்செல்ல முடிகிறது. மனம் அத்தகைய அலைபாயும் தன்மையுடன் இல்லாமல் இருந்தால், நாமும் வெறும் விலங்குகளாக மட்டுமே வாழ முடியும். மனம் அலைபாயும் தன்மையுடன் இல்லாமல் இருந்தால் உடல் ரீதியான நம் தேவைகளை மட்டுமே நம்மனதால் அடைய முடியும். மனதின் அலைபாயும் தன்மையின் மூலம் மட்டுமே வாழ்க்கையில் நாம் அடைந்துள்ள பல்வேறு சாத்தியங்களை அடைந்திருக்கிறோம். ஆக நம் மனதின் அலைபாயும் தன்மை, இயற்கையால் நமக்கு வழங்கப்பட்ட ஒரு வரம். எனில் அலைபாயும் நம் மனதை நாம் ஏன் வெறுக்கிறோம்?

நம் அலைபாயும் மனமே நாம் அடைந்துள்ள, அடையக்கூடிய அனைத்து சாத்தியங்களுக்கும் காரணம். இங்கு சாத்தியங்கள் என்பது, நமது இன்பங்களையும், துன்பங்களையும், ஆனந்தங்களையும் சேர்த்தே குறிக்கிறது. நாம் விழிப்புணர்வுடன் இல்லாத நிலையில், மனம் அதனைக்குறித்த பிரக்ஞ்சையுடன் இல்லாத நிலையில், அந்த மனதால் அடையக்கூடிய சாத்தியங்கள் பெரும்பாலும் துன்பத்தை நோக்கி, அல்லது துன்பத்தையும் தன்னுள் கொண்டதாகவே இருக்கும். நம் மனதே நம் துன்பங்களிற்கு காரணம் என்பதை நாம் அறியும்போது, அந்த மனதை கட்டுப்படுத்த முயலுவோம். நம் மனதை கட்டுப்படுத்த முயலும்போது, நாம் உண்மையில் விழிப்புணர்வுடன், பிரக்ஞ்சையுடன் இருக்க முயலுவோம். அவ்வாறு பிரக்ஞ்சையுடன் இருக்க இயலாத போது, நம் அலைபாயும் மனதை, அதே மனதின் மூலம் வசைபாடுவோம்.

மனம் என்பது ஒரு இருப்பு அல்ல. அது ஒரு செயல்பாடு (Process). அதாவது, நம் மூளையின் செயல்பாட்டையே நம் மனமாக நாம் உணருகிறோம். மனித மூளை அளவற்ற சாத்தியங்களை உடையது. அத்தகைய அளவற்ற சாத்தியங்களை உடைய மூளை இடைவிடமால், அந்த சாத்தியங்களை அடைவதற்கான இயக்கங்களில் இருப்பது இன்றியமையாதது. இந்த இன்றியமையாத மூளையின் இயக்கங்களே நம் அலைபாயும் மனமாக வெளிப்படுகிறது. நம் மூளை அடையக்கூடிய அனத்து விதமான சாத்தியங்களுக்கும் காரணம், அதன் பிரக்ஞ்சை என்னும் இயக்கம். நம் தற்போதைய உணர்வு நிலையில், பிரக்ஞ்சை என்பதும் மூளையின் ஒரு இயக்கம் மட்டுமே. அதாவது, பிரக்ஞ்சை என்பது நம் மனதின் ஒரு திரியே ஆகும். ஒருவேளை நம்மால் அதீத உணர்வு நிலைகளை அடைய முடிந்தால், அப்போது, பிரக்ஞ்சை என்பது நம் மனதிலிருந்து வேறுபட்ட ஒன்றாக இருந்தால், அதன் மூலத்தையும் நம்மால் அறிய முடியலாம்.

நாம் மனதை கட்டுப்படுத்த முயலும்போது அல்லது விழிப்புணர்வுடன் இருக்க முயலும்போது உண்மையில் நாம் பிரக்ஞ்சையுடன் இருக்க முயலுகிறோம். ஆனால் எண்ணங்களின் மூலம் மட்டுமே தன் இருப்பை உறுதிசெய்ய பழகிய நம் மனம், பிரக்ஞ்சையுடன் இருக்க முயலும்போது, பிரக்ஞ்சையுடன் தொடர்புடைய அல்லது பிரக்ஞ்சையை போன்ற மாய தோற்றத்தை அளிக்கும் ஒரு எண்ண அலையை உருவாக்குகிறது. பிரக்ஞ்சையை போல் தோற்றமளிக்கும் எண்ண அலை உருவான உடன் நம் பிரக்ஞ்சையை இழந்து விடுகிறோம். பிரக்ஞ்சையை போல தோற்றமளிக்கும் எண்ண அலை, தன்னை பிரக்ஞ்சையாக உருவகம் செய்து மனதின் மற்ற இயக்கங்களை மேற்பார்வை செய்ய தொடங்குகிறது. இங்கு மேற்பார்வை செய்வதும் உண்மையில் ஒரு எண்ண அலையே ஆனதால், அதன் மேற்பார்வை இயக்கம் என்பது நம் எண்ணங்களை குறித்த புது எண்ண அலைகளே. அதாவது, நாம் எண்ணங்களை குறித்து பிரக்ஞ்சையுடன் இருக்கிறோம் எனக்கருதிக்கொண்டே, அந்த எண்ணங்களை குறித்த எண்ணங்களில் நம் பிரக்ஞ்சையை இழந்து விடுகிறோம். அவ்வாறு நம் பிரக்ஞ்சையை இழந்த உடன், எண்ணங்களை மேற்பார்வை செய்வதாக உருவகிக்கப்பட்ட மன இயக்கம், மனதின் கட்டபாடற்ற தன்மையை, அலைபாயும் தன்மையை வசைபாடுவதன் மூலம் தன் இருப்பை உறுதி செய்து கொள்கிறது. ஆக, எண்ணங்களை கட்டுப்டுத்த முயன்ற நாம், அவற்றை கட்டுப்படுத்த இயலாததுடன், பிரக்ஞ்சை போல் தோற்றமளிக்கும் ஓர் எண்ண திரியின் மூலம், நம்மையே , நம் மனதேயே வசைபாடவும் தொடங்குகிறோம். இதன் மூலம் மனதை மேலும் அலைபாய வைக்கிறோம். ஆம் நம் மூளையின் இயக்கங்களில், குறைந்த பட்சம் தொண்ணூறு சதவிகித இயக்கங்கள், இவ்வாறான தேவையற்ற இயக்கங்களால் நிறைந்திருக்கிறது. நம்மால் உண்மையில் பிரக்ஞ்சையுடன் இருக்க முடிந்தால், இந்த தொண்ணூறு சதவிகித மன இயக்கங்களுக்கான தேவை இருக்காது. இதன் மூலம் நம் மனம் அதன் முழு சக்தியுடன் இயங்க முடியலாம்.

ஆக நம் உண்மையான பிரச்சனை அலை பாயும் மனம் அல்ல. விழிப்புணர்வுடன் அல்லது பிரக்ஞ்சையுடன் இருக்க முடியாமையே. ஆக நம் மனதின் ஆக்கமற்ற தன்மைக்காக யாரையாவது வசைபாட வேண்டுமானால், அது நம் விழிப்புணர்வற்ற தன்மையை தவிர நம் அலைபாயும் மனதை அல்ல. ஏனெனில், அதன் அலைபாயும் தன்மையின் மூலமே மனம் அதன் இயங்கு சக்தியை தக்க வைத்து கொள்கிறது. மனம் இயங்கு சக்தியுடன் இருந்தால் மட்டுமே அந்த மனதால் அடையக்கூடிய உச்ச கட்ட சாத்தியங்களை நம்மால் அடைய முடியும். நம் மனதில் பிரக்ஞ்சை  போல் தோற்றமளிக்கும் எண்ண திரி, அதன் இருப்பை உறுதி செய்ய, நம் அலை பாயும் மனதை வசைபாடுவதுடன் நிறுத்தாமல், பல கொள்கைகளை உருவாக்கிக்கொள்கிறது. நாம் பாவம் செய்தவர்கள், பல பிறவிகள் மூலம் நம் பாவங்களை இல்லாமல் செய்வதன் மூலம் மட்டுமே அலைபாயும் தன்மையற்ற மனதை அடைய முடியும், கடவுளின் கருணை மூலம் மட்டுமே அலைபாயும் தன்மையற்ற மனதை அடைய முடியும், மேலும் இதைப்போன்ற எண்ணற்ற எண்ண இயக்கங்கள். இந்த எண்ண இயக்கங்கள் மூலம் மனம் அதன் கட்டுப்பாடற்ற இயங்கும் தன்மையை உறுதி செய்து கொள்கிறது. ஆம் இந்த கட்டுப்பாடற்ற இயங்கும் தன்மையின் மூலம் மட்டுமே மனம் அதன் உச்ச கட்ட சாத்தியத்தை அடைய முடியும்.

மேலே கூறப்பட்டவை ஒன்றுக்கொன்று முரணானதாக தோன்றக்கூடும். மனம் கட்டுப்படவேண்டும், ஆனால் கட்டுப்பாடற்ற தன்மையுடன் இருக்க வேண்டும். இந்த முரண்பாட்டை கடந்து வந்தால் மட்டுமே மனதால் அதன் ஆன்மீகத்தன்மையை அடைய முடியக்கூடும். அத்தகைய கட்டுப்பாடற்ற இயக்கங்களை உடைய, ஆனால் பிரக்ஞ்சையின் கட்டுக்குள் நிற்க கூடிய மனதை எவ்வாறு அடைவது? எல்லா மதங்களின் ஆன்மீக கோட்பாடுகளும் மனதின் அந்த இயக்கங்களில் கட்டுப்பாடுகளற்ற, ஆனால் பிரக்ஞ்சையின் கட்டுக்குள் நிற்க கூடிய மனதை அடைவதற்கான வழிமுறைகளை நோக்கியே இருக்க முடியும்.

blog.change@gmail.com

No comments: