Tuesday, November 13, 2012

கவலை, பயம்


நம் உளவியல் இயக்கங்களுக்கும், வாழ்க்கை தரத்துக்கும் இடையேயான உறவை நாம் கவனித்திருந்தால், கவலை மற்றும் பயம் சார்ந்த மன இயக்கங்களே பெரும்பாலும் நம் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிப்பதை அறியலாம். இங்கு வாழ்க்கையின் தரம் என்பது, நம் அக வாழ்வின், ஆன்மீக வாழ்வின் தரம். கவலை மற்றும் பயம் சார்ந்த மன இயக்கங்களிலிருந்து நம்மால் விடுபட முடிந்தால், ஒருவேளை நம்மால் முற்றிலும் புதிதான, நாம் இதுவரை அறிந்திராத வாழ்க்கையை வாழ இயலலாம். ஆம், நாம் வாழும் வாழ்க்கை ஒவ்வொரு கணமும் புதிதாக இருந்தால்தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்க முடியும். வாழ்ந்த வாழ்க்கையையே மீண்டும் மீண்டும் வாழ்வதும் அறிந்தவற்றையே மீண்டும் மீண்டும் அறிந்து கொண்டிருப்பதும் நம் வாழ்க்கையை ஒரு சிறிய வட்டத்திற்குள் அடைத்து, வாழ்வதை அந்த சிறிய வட்டத்திலிருந்து வெளியேறத்துடிக்கும் ஒரு போராட்டமாகவே மாற்றி விடுகிறது – நம் அக, புற வாழ்க்கை இரண்டுமே! நம் வாழ்க்கை முறை, சிறிய தொட்டியில் வளரும் வளர்ப்பு மீன்களின் வாழ்க்கை முறையை விட வேறானதில்லை. நாம் அறிந்தோ அறியாமலோ நிகழ்த்தும் அனைத்து செயல்களும், தொட்டியிலுள்ள மீனின் வெளியறத்துடிக்கும் துடிப்புக்கு சமமானது. தொட்டி மீனின் வெளியேறத்துடிக்கும் ஒவ்வொரு துடிப்பும் தொட்டி சுவருடனான மோதலில் முடிவது போல, நம் ஒவ்வொரு செயல்களும் நாமே உருவாக்கிக்கொண்ட சிறியவட்டத்தின் எல்லையில் மோதுவதுடன் முடிந்து விடுகிறது. ஆம் நம் வட்டத்தின் சுவர்கள், நாமே உருவாக்கிக் கொண்ட உளவியல் சுவர்கள். அந்த சுவர்களின் இருப்பை நம் மனதினுள் அறிவது மட்டுமே அந்த சுவரைத் தாண்டி வாழ சாத்தியமான நம் வாழ்க்கையின் தொடக்கம். நம் எல்லைகளை நாம் அறியாதவரையில் நாம் என்ன முயன்றாலும் அந்த எல்லைகளை விட்டு வெளியேற முடியாது. ஏனெனில் அவை உண்மையான எல்லைகள் அல்ல….. நம் மனதால் உருவாக்கப்பட்ட மாய எல்லைகள்.

கவலைகளும் பயங்களுமே நம் சிறிய வட்டத்தை அல்லது மாய எல்லைகளை உருவாக்கும் முக்கியமான காரணிகள் - கவலைகளும் பயங்களும் எண்ணற்ற வேறு உளவியல் இயக்கங்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும், வேறு எண்ணற்ற உளவியல் இயக்கங்களை உருவாக்கினாலும்! கவலை, பயம் மற்றும் இவை சார்ந்த மன இயக்கங்கள் எவ்வாறு உருவாகிறது என்பதையும், எவ்வாறு நம் மாய எல்லைகளை நிர்ணயிக்கிறது என்பதையும் அறிவதே நம் புதிய வாழ்க்கையின் தொடக்கமாக இருக்க கூடும் – அந்த அறிதல் எந்த திசையிலிருந்து வந்தாலும்!

கவலை என்பது நமது  போதாமையின் வெளிப்பாடு. என்னிடம் இப்போது இவ்வளவு செல்வம் உள்ளது. நான் முழுமை பெற இன்னும் இவ்வளவு செல்வம் வேண்டும். ஆக, நான் முழுமை பெற செல்வம் போதாமையாக உள்ளது. இன்று நான் இத்தகைய சமூக அந்தஸ்துடன் இருக்கிறேன். நான் இத்தகைய சமூக அந்தஸ்தை அடையும்போதே முழுமை அடைவேன். ஆக நான் முழுமை பெற என் அந்தஸ்து போதாமையாக உள்ளது. இன்று என் குழந்தைகள் இவ்வாறாக இருக்கிறார்கள். என் குழந்தைகள் இவ்வாறு ஆனால் மட்டுமே ஒரு குடும்பஸ்தனாக என்னால் முழுமை அடைய முடியும். ஆக, என் குழந்தைகளின் இயல்பு, நான் முழுமை அடைய போதாமையாக உள்ளது. என் கணவன் அல்லது மனைவியின் அன்பு இன்று இந்த அளவு உள்ளது. அந்த அன்பு இவ்வாறாக இருந்தால் மட்டுமே நான் முழுமையடைய முடியும். ஆக, என் கணவன் அல்லது மனைவியின் அன்பு நான் முழுமையடைய போதாமையாக உள்ளது. நாம் அறிந்த ஒவ்வொன்றும் இவ்வாறு போதாமையுடன் உள்ளது. இந்த போதாமை என்னும் எண்ணத்தின் மறுவடிவமே கவலை. எந்த ஒரு போதாமையும், அந்த போதமைக்கான காரணியை மேலும் அடைவதன் மூலம் போதுமானதாக ஆவதில்லை. நாம் எந்த அளவு செல்வம் சேர்த்தாலும், செல்வம் நமக்கு போதுமானதாக ஆவதில்லை. நமக்கு அன்பு போதாமையாக இருந்தால், எந்த அளவுக்கு அன்பு கிடைத்தாலும் அது போதுமானதாக ஆவதில்லை. நம் குழந்தைகள் எத்தகைய நிலையில் வந்தாலும் அது நமக்கு போதுமானதாக ஆவதில்லை. நாம் எந்த சமூக அந்தஸ்தை அடைந்தாலும் அதுவும் நமக்கு போதுமானதாக இருப்பதில்லை. ஆக கவலை என்பது எப்போதும் நம்மிடமிருந்து அகல்வதில்லை – நாம் போதும் என்னும் மன நிலையை அடைவதுவரை!

பயம் என்பது நம் ஆசையின் வெளிப்பாடு. நான் இன்னும் செல்வத்தை அடைவதன் மூலம் முழுமையடைய ஆசைப்படுகிறேன். என்னிடம் தற்போதுள்ள செல்வத்தையும் இழக்காமல் இருக்க ஆசைப்படுகிறேன். அத்துடன் இந்த ஆசை நிறைவேறுமா என்பதைக்குறித்து அச்சப்படுகிறேன். மிகப்பெரிய சமூக அந்தஸ்தை அடைய விரும்புகிறேன். அத்துடன் தற்போதைய அந்தஸ்தையும் இழக்காமலிருக்க ஆசைப்படுகிறேன். அந்த ஆசையை அடைவது\அடையமுடியாதது குறித்துப் பயப்படுகிறேன். என் குழந்தைகள் இத்தகைய நல்ல நிலையை அடைவார்களா அல்லது தீய நிலையை அடைவார்களா என்பதை குறித்து பயப்படுகிறேன். எனது இந்த செயலின் மூலம் என் கணவன் அல்லது மனைவியின் அன்பு குறைவதைக் குறித்து பயப்படுகிறேன். இன்னும் நம் ஆசை எங்கெங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் ஒரு பய உணர்ச்சியையும் உருவாக்கி, நம் மாய வட்டத்தின் சுவர்களை வலிமைப்படுத்துகிறோம். ஆம், பெரும்பாலான ஆசைகளும் நம் போதாமையின் மூலமே உருவாக்கப்டுகிறது. அவ்வாறு உருவாக்கப்பட்ட ஆசை பயமாக வெளிப்படுகிறது. அந்த பயம், நாம் சுவாரசியமான வாழ்க்கை வாழும் சாத்தியத்தை இல்லாமல் செய்கிறது.

ஆம் ஆசைகளே நம் வாழ்க்கையையும் இயக்குகிறது. விடுதலை அடைய வேண்டும் என்னும் விருப்பம் நம்மில் உருவாகாமால் விடுதலை சாத்தியம் இல்லை. உணவு உண்ண வேண்டும் என்னும் ஆசை இல்லாமல், உணவை தேடுவதற்கான செயல்களும், அதற்கு தேவையான பொருளை அடைவதற்கான செயல்களில் ஈடுபடுவதற்கான சாத்தியங்களும் இல்லை. நோய்வசப்படப்போகிறோம் என்னும் பயம் இல்லாமல், நம் உடலை அவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான இயக்கங்களில் நம்மால் ஈடுபடவும் முடியாது. ஆக, ஆசைகளும் பயங்களுமே நம் மாய வட்டத்தை உருவாக்கி வலிமைப்படுத்தினாலும், அவை நம் மாய வட்டத்திலிருந்து விடுபடவும் இன்றியமையாதது.  ஆனால் நுண்ணறிவுடன் (Intelligence) கூடிய ஆசைகளும் பயங்களும்! ஆம், ஆசைகளும் பயங்களும் நுண்ணறிவுடன் சேரும்போது, அவையும் நுண்ணறிவாக மாறிவிடுகின்றன, மாயையுடன் சேரும்போது அவையும் மாயைகளாகின்றன! உதாரணமாக, நாம் செல்லும் வழியில் இருக்கும் பாம்பை காணும்போது ஏற்படும் பயம், அந்த பாம்பால் ஏற்பட சாத்தியமான அபாயத்திலிருந்து நம்மை பாதுகாக்கிறது. எனவே இது நுண்ணறிவு. அதே நேரத்தில் நம் வழியில் கிடக்கும் கயிறை பார்த்து, பாம்பு என அஞ்சுவது மாயை- இங்கு நாம் நுண்ணறிவுடன் இருந்தால் கயிறை பாம்பாகவோ அல்லது பாம்பை கயிறாகவோ காணமாட்டோம். கயிறை கயிறாகவும் பாம்பை பாம்பாகவும் காண்பதே நுண்ணறிவு. அந்த நுண்ணறிவு, நம் மன இயக்கங்களின் தேவை இல்லாமலே தேவையான செயல்களை நம்மூலம் செய்விக்கும். அத்தகைய நுண்ணறிவை அடைந்தால், நுண்ணறிவுடன் கூடிய ஆசையின் மூலம் நம் விடுதலைக்கான எளிய வழியை அடைந்து விட்டோம் – மாயையிலிருந்து விடுபட்டு, நுண்ணறிவை அடைவது அல்லது நுண்ணறிவை அடைவதன் மூலம் மாயையிலிருந்து விடுபடுவது; மாயையுடன் சேரும் எதுவும் மாயையாகிறது அல்லது நுண்ணறிவுடன் சேரும் எதுவும் நுண்ணறிவாகிறது.
நுண்ணறிவு என்பது விழிப்புணர்வின், பிரக்ஞ்சையின் வெளிப்பாடு. நாம் பிரக்ஞ்சைபூர்வமாக இருக்கும்தோறும் நுண்ணறிவை அடைகிறோம். அந்த நுண்ணறிவு செயல்படும் அனைத்து இயக்கங்களும் நம்மை விடுதலையை நோக்கி கொண்டுச்செல்லும். நாம் நுண்ணறிவுடன் செயல்படும்போது, அந்த நுண்ணறிவுக்கு தேவையான கவலைகளும் பயங்களும் மட்டுமே நம் மனதில் இருக்க முடியும். அவை உண்மையில் கவலைகளோ அல்லது பயங்களோ இல்லை – அவை நம் நுண்ணறிவு. எனவே அவற்றல் நம் வாழ்க்கையில் எந்த துயரும் இல்லை.

நாம் நுண்ணறிவுடன், விழிப்புடன், பிரக்ஞ்சையுடன் இருக்கிறோமா இல்லையா என்பதற்கு, நாம் வாழ்க்கையில் துயரப்படுகிறோமா இல்லையா என்பதே கூட ஒரு அளவுகோலாக இருக்கலாம். நாம் துன்பப்படுகிறோம் என்றால், நம் பயங்களும் கவலைகளும் மட்டுமே அதற்கு காரணம். பயங்களும் கவலைகளும் மாயையுடன் சேரும்போது மட்டுமே பயங்களும் கவலைகளுமாக இருக்க முடியும். எனவே துயரம் நம்மை தாக்கும்போது, நாம் மாயையினால் ஆன சிறு வட்டத்தினுள் அடைபட்டிருக்கிறோம். நுண்ணறிவால்தான் மாயையின் சுவர்களை உடைக்க முடியும். . கல்வி என்பது அத்தகைய நுண்ணறிவை நமக்கு அளிப்பது. கல்வியின் மூலம் பெறும் அறிவு, கயிறு மற்றும் பாம்பின் தகவல்களை மட்டும் நமக்கு அளிக்குமானால் அது கல்வி அல்ல. கயிறை கயிறாகவும், பாம்பை பாம்பாகவும் காணும் நுண்ணறிவையும் சேர்த்து அளிக்கும் கல்வியே உண்மையான கல்வி! அத்தகைய நண்ணறிவை அளிக்காத கல்வியை பெறுவதால், நம் வாழ்க்கையின் தரத்தை எவ்வகையிலும் மாற்ற முடியாது,