Tuesday, October 23, 2012

சுரண்டல் (Exploitation)


நம் வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கமும் மற்ற ஒன்றின் இருப்பை எந்த வகையிலாவது தாக்குதலுக்குள்ளாக்கிக் கொண்டே இருக்கும். இங்கு மற்ற ஒன்று என்பது பிற மனிதர்கள் அல்லது பிற உயிர்கள் அல்லது நுண்ணியுர்கள் அல்லது உயிரற்ற ஜடப் பொருட்கள். அதைப்போலவே நம்மால் கற்பனை செய்ய இயலாத வகையில் பிற உயிர்கள் அல்லது பொருட்களின் இயக்கங்கள் நம் மேலும் தாக்குதல் தொடுத்துக்கொண்டே இருக்கும். அத்தகைய தாக்குதல்களை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால், அத்தகைய தாக்குதல்களையும் அதன் காரணிகளையும் நம்மால் அனுமானிக்க முடிந்தால், ஒருவேளை அவற்றை நம்மால் எளிதாக எதிர்கொள்ள அல்லது ஏற்றுகொள்ள முடியலாம். 

எந்த ஒரு உயிரினமும் அதன் உணவுக்கு மற்றொரு உயிரின் இருப்பை தாக்குதலுக்குள்ளாக்கியாக வேண்டும் – சைவ உணவு எனக்கூறப்படுவதை உட்கொள்ளும் உயிரினங்கள் உட்பட.. இது இருப்பின் நியதி. இந்த நியதிக்கு எந்த உயிரினமும் விதிவிலக்கல்ல. அதைப்போலவே, மனிதர்களை தவிர வேறு எந்த உயிரினமும் தங்கள் உணவுக்காக அல்லது தங்கள் பாதுகாப்புக்காக தவிர மற்ற எந்த உயிரினத்தையும் கொல்வதில்லை – சில விதிவிலக்குகள் இருக்ககூடும்.

ஆம், சுரண்டல் என்பது நம் உணவுக்காக அல்லது அடிப்படைத் தேவைகளுக்காக பிற உயிர்களை அழிப்பது அல்லது ஜடப்பொருட்களின் இருப்பை குலைப்பது அல்ல – இது இருப்பின் இயல்பு, நம்மால் தவிர்க்க இயலாது. இந்த அடிப்படை தேவைகளை தாண்டி பிற உயிர்கள் அல்லது பொருட்கள் மீது நமது செயல்களின் இயக்கங்கள் தாக்குதலை தொடுக்குமானால் அதுவே சுரண்டல். அதாவது நம் அடிப்படை இயக்கங்களுக்கான செயல்கள் தவிர மற்ற அனைத்து செயல்களாலும் உலகின் இருப்பை எந்த வகையிலாவது தாக்குதலுக்குள்ளாக்கி கொண்டிருக்கிறோம், உலகை சுரண்டிக்கொண்டிருக்கிறோம் – நம்மை அறியாமலே, அல்லது அவ்வாறான பிரக்ஞ்சை இல்லாமலே. ஆம், நாம் உலகை அல்லது கடவுளை அல்லது கடவுளால் உருவாக்கப்பட்ட இருப்பை (நமது கடவுள் என்னும் கருத்துக்கேற்ப), அல்லது நாம் எதன் அங்கமோ அதனை, அல்லது நம்மை நாமே (நமது, நாம் என்ற கருத்திற்கேற்ப) இடைவிடாது சுரண்டிக்கொண்டிருக்கிறோம். மேலும் நம்மால் சுரண்டப்படும் உலகம் எல்லா வகையான சுரண்டல்களையும் பொறுத்துக்கொண்டு, நம் வாழ்க்கைக்கு மேலும் மேலும் வளத்தை மட்டுமே அளிக்க வேண்டுமென்ற பேராசையுடன் வேறு இருக்கிறோம். இன்று படிக்க நேர்ந்த ஒரு வாக்கியம் – ‘நாம் விதைநெல்லையும் உண்ணும் சமூகமாக மாறி விட்டோம்’ – ஆம், ஒரு சமூகமாக, இதுதான் இன்றைய நிதர்சனம். நாளையும் நமக்கு நெல் வேண்டுமென்ற பிரக்ஞ்சையை முற்றிலும் இழந்து அனைத்தையும் இன்றே உண்டு முடிக்கும் அவசரம்!

இன்றைய சமூக இயக்கங்களும், அந்த இயக்கங்களுக்கு அடிமையான நம் வாழ்க்கை முறைகளும், நம் பிரக்ஞ்சையை முற்றிலும் அழித்து விட்டிருக்கிறது. இன்றைய சமூக இயக்கங்களுக்கு அடிப்படையான பெரும்பான்மையான பொருளாதார இயக்கங்களும், ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து நம்மை ஆட்டுவிக்கிறது. ஏதேனும் ஒரு பொருளாதார இயக்கத்தில் ஏற்படும் சலனம், மற்ற எல்லா பொருளாதார இயக்கங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி நமது வாழ்க்கையிலும் அதன் தொடர்ச்சியான சலனத்தை ஏற்படுத்துகிறது. அந்த சலனத்தை நம் பிரக்ஞ்சை அறியாத பட்சத்தில், அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட சலனம் நம் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாக மாறி விடுகிறது.

ஆம், சுரண்டலும், நம்மை பிறரின் சுரண்டலுக்கு எத்தகைய எதிர்வினையும் இல்லாமல் அனுமதிப்பதும் நம் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதிகளாக மாறி விட்டது. இந்த சுரண்டலும், நம்மை சுரண்டப்படுவதை தடையில்லாமல் அனுமதிப்பதும், நமக்கு பல வாழ்க்கை வசதிகளை கொடுத்திருக்கலாம், சமூகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார உயர்விற்கு உதவியிருக்கலாம் – ஆனால் அதற்கு விலையாக நம் பிரக்ஞ்சையை இழந்திருக்கிறோம் – நம் பிரக்ஞ்சையே நம் ஆன்மா, நம் ஆன்மாவை இழந்து பொருளாதார உயர்வை அடைந்திருக்கிறோம். ஆன்மாவை இழந்த நாம் விதைநெல்லையும் உண்ணும் சமூகமாக மாறியிருக்கிறோம்.

நம் வாழ்க்கை தேவைகளுக்கு மிக இன்றியமையாத நம் தொழில்கள், அவை சமூகத்தின் எந்த நிலையில் இருந்தாலும், அவற்றின் பின்னிப்பிணைந்த பொருளாதார இயக்கங்களின் மூலம, இந்த உலகையும், அதில் வாழும் உயிரினங்களையும் இடைவிடாது சுரண்டுவதன் மூலம் மட்டுமே நிலை நிறுத்தப்படுகிறது. அந்த சுரண்டலின் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கும் நாமும் நம் சுரண்டலைப்பற்றிய எந்த விதமான பிரக்ஞ்சையும் இல்லாமல் நாம் சுரண்டும் சமூகத்தின் அங்கத்தினரான நம்மையும் சேர்த்தே சுரண்டிக்கொண்டிருக்கிறோம் – நம்மை நாமே சுரண்டும் பிரக்ஞ்சை சிறிதளவும் இல்லாமல்! ஆம் இன்று பொதுவாக சக்தியின் தேவை, குறிப்பாக மின் சக்தியின் தேவை ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது. அந்த சக்தியை, நம் உண்மையான தேவையைபற்றிய, அந்த சக்தியை பெறுவதற்கான அழிக்கும் இயங்கங்களைப்பற்றிய பிரக்ஞ்சையில்லாமல் செலவழிப்பது நம் விதைநெல்லை நாமே உண்பதைப்போன்றது. ஆம் நம் வாழ்க்கையை உறுதிசெய்ய தேவையான காடுகளை அழித்து அதனடியிலிருந்து நிலக்கரியை அடைவதன் மூலம். அல்லது நம் சக மனிதர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி அணு உலைகளை அமைப்பதன் மூலம், அணுக்கழிவுகளை எங்கே செல்கிறது என்னும் பிரக்ஞ்சையில்லாமல் – ஒருவேளை அது நம் வீட்டின் கொல்லைப்புறத்தை கூட அடையலாம், அவற்றின் மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்ய, நம் பிரக்ஞ்சையற்ற நுகர்வின் மூலம் மறைமுக நெருக்கடியை உருவாக்கி, உலகத்தையும், நம் சமூகத்தையும் அதன் அங்கத்தினரான நம்மையும் சேர்த்தே சுரண்டுகிறோம்.

ஆம், எனது தேவைகள் உங்களுக்கும், உங்கள் தேவைகள் எனக்கும் தேவையற்றதாக தோன்றலாம் நாம் உண்மையில் பிரக்ஞ்சை உடையவர்களாக, ஆன்மா உடையவர்களாக இருந்தால் அடுத்தவர் தேவைகள் குறித்து ஆராய மாட்டோம். நம் தேவைகளை பிரக்ஞ்சையுடன் நிறைவேற்றுவோம். ஒருவேளை இத்தகைய பிரக்ஞ்சையுடன் நம்மால் செயல்பட முடிந்தால், அந்த செயல்களின் மூலம் எந்த அழிவுகள் நேர்ந்தாலும், அது சுரண்டல் ஆகாது. பிரக்ஞ்சையுடன் செயல்புரிவதே கர்ம யோகம்!

blog.change@gmail.com