Monday, May 7, 2012

மனித மனம், மிருகம், தெய்வம்

மனித மனத்தின் கீழ்மைகளை விலங்குகளுடன் ஒப்பிடுவது ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால், அந்த ஒப்பீடு சரியான ஒன்றா என்பது உண்மையிலேயே விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய ஒன்று. நாம் மரபு கண்ணி வழியாக விலங்குகளிலிருந்து உருவானவர்கள். எனவே நம் அடிப்படைத் தன்மையும் விலங்குகளின் அடிப்படைத் தன்மையை ஒத்திருக்கவே முடியும். அந்த அடிப்படைத் தன்மைகளின் மூலம் உருவாகும் தேவைகளையும் நாம் பூர்த்தி செய்தே ஆக வேண்டும். அதற்கு எதிராக, அந்த அடிப்படைத் தேவைகள் மிருகத்தன்மை என்னும் சாயம் பூசி அவற்றை வலுக்கட்டாயமாக தவிர்ப்போமானால், நாம் இயற்கையுடன் முரண்பட்டுக்கொண்டிருப்போம். முரண்பாடுகள் இருக்கும் இடத்தில் அமைதி இருக்க முடியாது.


சமீபத்தில் படிக்க நேர்ந்த ‘THE MONKEYS OF VARANASI”  கட்டுரை சில வெளிச்சக்கோடுகளை எனக்கு காட்டியது. இந்தக் கட்டுரையில் வரும் இந்த வாக்கியம், நாம் மிருகத்தன்மை என விலக்க முயலும், ஆனால் நம்மிடமிருந்து விலகாத நம் இயல்புகளை கூறுகிறது போலும். ‘Any one who has done a little self-observation may have detected these three main objects of desire whereby pleasure, security, and status reveal themselves as the centeres around which psychological thinking turns”. இன்பம், உயிர் மற்றும் இன்பத்திற்கான பாதுகாப்பு, இவை இரண்டுக்கும் தேவையான அந்தஸ்து(விலங்கு சமூகத்தின் தலைமை பொறுப்பு) இவை மூன்றுமே விலங்குகளுக்கான அடிப்படைத் தேவைகள் என கூறப்பட்டுள்ளது. விலங்குகளின் இயக்கத்தை கவனித்தால் இதனை நாமும் உணரலாம். இந்த மூன்று தேவைகளும், அந்த தேவை உருவாகும் நேரத்திலேயே அதை அடைய தேவையான உயிர்ப்பையும் விலங்குகள் பெறுகின்றன. அந்த உயிர் சக்தி, தேவைகளை அடைவதற்கான இயக்கங்களில் விலங்குகளை ஈடுபட வைக்கிறது. அதாவது, அந்த விலங்கு இன்பத்திற்கான பாதுகாப்பு மற்றும் அந்தஸ்துடன் இருந்தால் இன்பத்தையும் உணவையும் அடைகிறது. அந்த இன்பத்திற்கும், பாதுகாப்புக்கும் எதிர்ப்புகள் எழும்போது, அந்த எதிர்ப்பை அழிப்பதற்கு தேவையான விழிப்புணர்வுடன் இருக்கிறது- விழிப்புணர்வுடன் இருக்கும்போது, உண்மையிலேயே முழுமையான உயிர்ப்பு அதன் முழு வீரியத்துடன் இருக்கிறது. விலங்குகளிடம் இன்பத்திற்கான தேவை எற்படும்போது, அந்த தேவையை நிறைவேற்றத் தேவையான அந்தஸ்து அல்லது தலைமைப் பதவி இல்லாத பட்சத்தில், அந்த அந்தஸ்தைப் பெற்றிருக்கும் தலைமையுடன் போராட்டத்தில் ஈடுபடுகிறது. அந்த போராட்டத்தில் வெற்றி பெற்றால், இன்பத்தை அடைகிறது. போராட்டத்தில் ஈடுபடும்போது வீணாகும் உயிர் சக்தியின் மூலம் இன்பத்திற்கான தேவை அழியுமானால், அந்த விலங்கு சமூகத்தினுள் அடங்கி இருந்து உயிர்ப்பாதுகாப்பைத் தேடிக் கொள்கிறது. இன்பத்திற்கான தேவை குறையாத பட்சத்தில் கடைசிவரைப் போராடி உயிரை விடுகிறது.

நாம் மனிதர்கள்! நம் அறிவின் மூலம் சமூக அமைப்புகளை உருவாக்கி இன்பம் மற்றும் உயிர் பாதுகாப்பை பெருமளவில் உறுதி செய்து விட்டோம். ஆனால் நமக்கு மனம் என்னும் கொடை இயற்கையால் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனதை எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பதை தெரிவு செய்யும் சாத்தியத்தையும் நமக்கு இயற்கை அளித்துள்ளது. இந்த தெரிவு செய்யும் சாத்தியத்தையே நாம் மனித வாழ்விலிருந்து பிறழ்வதற்காக உபயோகப்படுத்துகிறோமா? அல்லது தெரிவு செய்யும் சாத்தியம் இருந்தும் தெரிவு செய்ய இயலாதவர்களாக இருக்கிறோமா? ஆக, மனிதர்களாக பரிணாம வளர்ச்சியடைந்த நம் இயக்கம், விலங்கின் அடிப்படை இயல்புகளை நோக்கி நிச்சயமாக இல்லை. ஏனெனில் அந்த தேவைகளை நாம் அடைந்து விட்டோம், அல்லது அந்த தேவைகளுக்கான போராட்டத்தை கடந்து வந்து விட்டோம். எனவே நமது தற்போதைய போராட்டம், நம் உயிரின் தற்போதைய இயக்கம், அந்த அடிப்படைத் தேவைகளை நோக்கி நிச்சயமாக இல்லை. ஆனால், மனிதர்களாகிய நாமும் இடைவிடாத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். எதை அடைய இந்த இடைவிடாத போராட்டம்?

நாம் நம் அறிவின் மூலம் அளவில்லாத புதிய தேவைகளை உருவாக்கி இருக்கிறோம். அந்த புதிய தேவைகள் நம் அறிவின் தரம் அல்லது அந்த அறிவு உண்மையுடன் அல்லது இயற்கையுடன் கொண்டுள்ள உறவை அடிப்படையாக கொண்டிருக்கும். நம் தேவைகளை உருவாக்கும் அறிவு உண்மையுடன் நெருங்கிய உறவில் இருக்குமானால், அந்த தேவைகளினால், நம் வாழ்க்கை இயக்கத்தில் முரண்பாடுகளை ஏற்பட சாத்தியம் இல்லை. முரண்பாடுகள் இல்லா விட்டால் வாழ்க்கையில் போராட்டமும் இல்லை. ஆனால் வாழ்வின் எதார்த்தம் அவ்வாறு இல்லை. நம் பெரும்பாலான இயக்கங்களில் முரண்பாடுகள் உள்ளது. அதன் மூலம் நம் பெரும்பாலான வாழ்வின் இயக்கங்கள் போராட்டங்களாகவே உள்ளது. இதன் காரணம், நம் அறிவு உண்மையிலிருந்து விலகி உளவியல் இயக்கங்கள் மூலம் உருவாகும் மாயையில் இருப்பதாலா?

நாம் நம்மை அறிய விரும்பினால், அல்லது நமது வாழ்க்கை போராட்டத்தின் திசையை அறிவதற்கான தேவை நம்மில் தோன்றினால், நாம் அறிய வேண்டியது, எந்த அடிப்படை தேவை நம் வாழ்க்கையை இயக்குகிறது அல்லது எந்த அடிப்படைத் தேவையிலிருந்து நம் அறிவு வாழ்க்கையின் போராட்டங்களுக்கு காரணமான தேவைகளை உருவாக்குகிறது என்பதாகவே இருக்கும். நம் உயிர்ப்பு எதைத் தேடுகிறது? நம் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு போராட்டமும் எந்த குறிக்கோளுக்காக? அவ்வாறு ஒரு குறிக்கோள் இல்லாமல் இருந்தால், நாம் போராட வேண்டிய தேவையே இல்லையே. நம் சமூக அமைப்பு, அந்த சமூகத்தின் அங்கத்தினராக இருக்கும் அடிப்படைத் தகுதி நமக்கு இருந்தால், அடிப்படை இன்பங்களையும் அடிப்படை பாதுகாப்பையும் சமூக கட்டமைப்பின் மூலம் வழங்கிக்கொண்டிருக்கிறது. அந்த சமூக கட்டமைப்பை மீறும் எந்த மனிதனும், ஏதோ ஒரு தேடலின் விசை கொண்டு மட்டுமே அந்த சமூக கட்டமைப்பை மீற முடியும். அந்த விசை எதனால்? எதை நோக்கி?

நம்மை இயக்கும், நம் உயிர்ப்பை இறுதிவரை உண்ணும், நம் எல்லா வித சக்திகளையும் திசைப்படுத்தும் அந்த தேடுதலின் ஊற்றுமுகம் நம் மனமாகவே இருக்க முடியும். நம் மனம் அதன் ஆழங்களிலிருந்து அதற்கான விசையை பெறுகிறது. அந்த விசையின் தோற்றுவாயை அறியாத பட்சத்தில், விலங்குகளிலிருந்து நாம் பெற்ற, நம் மனதின் அடியாழத்தில் எப்போதும் இருந்து கொண்டிருக்கும் அடிப்படைத் தேவைகளில் அந்த விசையை உளவியல் இயக்கங்கள் மூலம் செலுத்தி நம் அன்றாட போராட்டங்களை வெளிப்படுத்துகிறது. நாம் பெறும் அறிவின் அளவிற்கேற்ப, அந்த அறிவு உண்மையுடன் கொண்டுள்ள தொடர்பிற்கேற்ப நம் மனதில் உருவாகும் விசையின் திசையும் அமைந்திருக்கலாம். நம் தேடுதல் முழுமை அடையும்போது, நம் உயிர்ப்பு முழுமையாக, சிறிதளவும் சிதையாமல், நம் தேவைகளால் உண்ணப்படாமல் அதன் முழுமையுடன் நம்மிடம் தங்கக்கூடும். உயிர்ப்பின் முழுமைத் தன்மையை அடைவது கூட நம் வாழ்க்கையின் போராட்டங்களின் அடிப்படை நோக்கமாக இருக்கலாம். ஒருவேளை அத்தகைய ஒரு உயிர்ப்பு நிலையை நாம் அடைந்து, அந்நிலையை தலைமுறைகளாக நம்மால் தக்க வைத்திருக்க முடிந்தால், அதுவே பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக கூட இருக்கலாம்.

blog.change@gmail.com