Saturday, June 11, 2011

கலாச்சாரம், மனம்

நம் மனதின் தேவைகளே – உளவியல் மற்றும் பொருளியல் தேவைகள், நமது கலாச்சாரமாக வெளிப்படுகிறது. எனவே நமது கலாச்சாரத்தை முழுவதுமாக அறிந்து கொள்வது, நம் மனதை அறியும் முயற்சியின் திறவுகோலாக இருக்க வாய்ப்புள்ளது. ஆன்மீகம் என்பது நம்மை நாமே அறிந்து கொள்வதாகும் – அதாவது நம் மனதை அறிந்து கொள்வது. நம் மனம் என்பது, தற்போதைய உணர்வு நிலையில், நாம் மனமென அறியும் மேலோட்டமான உணர்வுகள் மட்டும் அல்ல. மனதின் உண்மையான செயல்பாடு, தற்போதைய நம் உணர்வு நிலையில், பெரும்பாலும் உள்மனம் (subconscious) ஆழ்மனம்(unconscious) பொது ஆழ்மனம்(collective unconscious) ஆகிய நிலைகளிலேயே நடைபெற்றுக்கொண்டிருக்கும். இடைவிடாத இயக்கத்தில் இருக்கும் மனத்தின் வெவ்வேறு நிலைகளை ஒருங்கிணைத்து ஒரே அறியும் மனமாக உணரும் முயற்சியே ஆன்மீகம் ஆகும். எனவே மனதின் ஆழ்மன நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கலாச்சாரத்தை குறித்து அறிந்து கொள்வது, நம் மன இயக்கத்தை அறிந்து கொள்ளும் முயற்சிக்கு உதவக் கூடும்.

நம் மனதின் கலாச்சார கூறுகள் இரண்டு வழிகளில் மனதில் நுழைந்திருக்க வாய்ப்புள்ளது. ஆழ்மனதின் கலாச்சாரக் கூறுகள் பெரும்பாலும் மரபணுக்கள் மூலமாக நாம் பெற்றிருக்க கூடும் – நமது வாழ்க்கையின் சூழல்கள் மூலம் நம் மனதினுள் நுழைந்து, நமது விழிப்புணர்வின்மையின் காரணமாக ஆழ்மனதினுள் சேர்ந்து விட்ட கூறுகள் தவிர. இரண்டாவதாக, நாம் வாழும் சூழலில் நாம் சார்ந்திருக்கும் மற்றும் நம்மை சார்ந்திருப்பவர்களிடம் கொண்டிருக்குமு உறவுகளின் இயக்கங்கள் மூலமாகவும் கலாச்சாரம் நம் மனதினுள் நுழைகிறது – இது மிகவும் வெளிப்படை. கலாச்சாரம் பெரும்பாலும் நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் கட்டுப்பாடுகள் மூலமே நிலைநிறுத்தப்படுகிறது. இந்த நம்பிக்கைகளும், நம்பிக்கை சார்ந்த சடங்குகளும் கட்டுப்பாடுகளும், மனதின் இயக்கத்தைக் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் நம்முடைய மனதின் செயல்களை ஒரு வரையறைக்குள் இருக்கச்செய்து, நாம் வாழும் சூழலின் சமன்நிலைத்தன்மை குலையாமல் இருக்க உதவுகிறது

ஆக, கலாச்சாரம் நம்மை கட்டுப்படுத்துகிறது. நம் மனதின் இயங்கு சக்தியை கட்டுப்படுத்துகிறது. மனம் அதன் எல்லைகளை அடையவிடாமல் செய்கிறது. அதாவது, கலாச்சாரம் நம் விடுதலையை பறிக்கிறது. ஆனால், நம் சுதந்திரத்திற்காக கலாச்சாரத்தை புறந்தள்ளி நாம் சுதந்திரம் என கருதுவதை நிலைநாட்டினால், நாமே நமது சமுதாய அழிவிற்கு மூல காரணி ஆகி விடுவோம் அல்லது சமூகத்தால் அழிக்கப்பட்டு விடுவோம். இங்குதான் ஆன்மீகம் நமக்கு தேவைப்படுகிறது. நாம் கலாச்சாரத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை பெற வேண்டும். அதே நேரத்தில் அந்த விடுதலை மற்றவர்களின் அல்லது நமது அழிவுக்கும் காரணமாகக் கூடாது. இங்கு விடுதலை என்பது கலாச்சாரத்திற்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்யும் சுதந்திரம் அல்ல, நமக்கு தேவையானவற்றைச் செய்ய கலாச்சாரம் தடையாக இல்லாமல் இருப்பது மட்டுமே.

இதற்கு ஒரே வழி, கலாச்சாரத்தை நம் மனம் கடந்து செல்வதேயாகும் – கலாச்சாரத்தை ஒதுக்கி புறந்தள்ளுவதாக இருக்க முடியாது. கலாச்சாரத்தை அறிந்து கொள்வதன் மூலமே நம்மால் கலாச்சாரத்தைத் கடந்து செல்ல முடியும். அவ்வாறு, கலாச்சாரத்தை அறிந்து, அதை கடந்து செல்லும்போது நம் எந்த செயலும், அந்த கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் சமூகத்தினுள் எந்த விதமான எதிர்மறை சலனங்களையும் ஏற்ப்படுத்தாது. நமது வாழ்க்கையிலும் எதிர்மறை சலனங்களை உருவாக்காது. இத்தகைய வாழ்க்கையே ஆன்மீக வாழ்க்கை!

No comments: