Friday, May 20, 2011

ஆனமீகத்தின் தொடக்க புள்ளி

ஆனமீகத்தின் தொடக்க புள்ளி, அதிதீவிரமான மனம் மற்றும் அந்த தீவிரத்தை சரியானபடி வழிநடத்தி செல்லும் நுண்ணறிவு ஆகிய இரண்டும் சேர்ந்த கலவையாக மட்டுமே இருக்க முடியும். நாம் ஒவ்வொருவரும் மனதளவில் தனித்தன்மை வாய்ந்தவர்கள். எந்த இரு மனிதர்களும் ஒரே மன நிலை உடையவர்களாக இருக்க வாய்ப்பு இல்லை. எந்த ஒரு மனிதனுக்கும் மனதின் எதோ ஒரு இயக்கத்திலாவது தீவிரம் இல்லாமல் இருக்கவும் வாய்ப்பு இல்லை. ஆனால் அந்த தீவிரம் சரியான பாதையை அடையும் முன்பே அழிந்து விட காரணங்களும் வாய்ப்புகளும் ஏராளம்.

ஆக, அந்த தீவிர மன இயக்கத்தை கண்டறிந்து, அது நம் வாழ்க்கை முறை அல்லது வேறு எந்த காரணங்களாலோ அதன் தீவிரத்தன்மையை இழந்திருந்தாலும், நுண்ணறிவின் மூலம் சரியான திசையில் இயங்கச்செய்வதே ஆன்மீகத்தின் தொடக்கமாக இருக்க முடியும். ஆனால் அந்த தீவிர தன்மையை கண்டறிவது அத்தனை எளிதான காரியம் என்று தோன்றவில்லை. நம் வாழ்க்கையின் யதார்த்தம் அந்த தீவிரத்தன்மையை புரட்டி மனதின் அடி ஆழத்திற்கு எடுத்துச்சென்றிருக்க கூடும். அதை மீட்டு எடுக்க தீவிர விருப்பமும், வாய்ப்புகளும், வழிகாட்டுதல்களும் தேவைப்படலாம்.

நம் மனம், அதற்கு தேவை இல்லாத ஒன்றை தேட எப்போதுமே ஆர்வமுடையதாக இருக்காது. ஆகவே ஆன்மீகம் அதற்கு தேவை என்று நம் மனம் உணரும்வரை, நாம் ஆன்மீக வழிகளில் ஈடுபட எந்த வாய்ப்புகளும் இல்லை. ஆகவேதான் நம்மில் பெரும்பாலானவர், ஏதேனும் கொடும் துன்பங்கள் நம் வாழ்க்கையை தாக்கிய பின்னரே ஆன்மீக ஈடுபாடு கொள்கிறோம். ஆனால் அந்த கொடுந்துன்பத்தின் பிடியில் இருக்கும்போது நம் மனம் அதன் நுண்ணுணர்வை பெரும்பாலும் இழந்து விட்டிருக்கும். ஆகவே கொடுந்துன்பத்தின் பிடியில் நாம் தேர்ந்தெடுக்கும் ஆன்மீக வழி பெரும்பாலும் போலி ஆன்மீக வழியாகவே இருக்கும். துன்பத்தின் பிடியிலும் சிறித்தளவேனும் தன்னுணர்வை கொண்டிருப்பவர்களால் மட்டுமே,கொடுந்துன்பத்தின் பிடியில் இருக்கும்போது, அவர்கள் ஆன்மீக வழியை தேர்ந்தெடுத்தால், அது சரியான ஆன்மீக வழியாக இருக்க வாய்ப்புள்ளது. மனம் தன்னிலையை இழக்கும் அளவுக்கு பெருந்துன்பத்தை வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய தேவை வராத அதிர்ஷ்டசாலிகள் ஆன்மீக வழியில் இருப்பதென்றால் அதற்கு காரணம், அவர்கள் மனதினுள், அவர்களுக்கேயான அந்த தீவிர இயக்கம், வாழ்வின் யதார்த்தத்தால் இன்னும் நசுக்கப்படாமல் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். ஆகவே நாம் ஆன்மீக வழியில் இன்னும் இல்லாமல் இருக்கிறோம் என்றால், அதற்கான ஒரே காரணம், இயற்கை நமக்கு அளித்த பெரும்கொடையான, நமக்கேயான அந்த மன இயக்கத்தின் தீவிரத்தை இழந்து விட்டிருக்கிறோம். வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், நாம் நம் வாழ்வை இழந்து விட்டு வேறு யாருடைய வாழ்க்கையையோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வாழ்வின் பாதுகாப்பின்மையால், மனித இனம் அழியாமல் இருப்பதற்காக, மிக சமீப காலம்வரை மனித இனத்தின் பெரும்பகுதி, தங்கள் சுயத்தை, தங்கள் வாழ்க்கையை இழந்து, இயற்கை அளித்த அவர்களுக்கேயான மன இயக்கத்தின் தீவிரத்தை இழந்து, மனித குலத்தின் தொடர்ச்சிக்காக, தெரிந்தோ, தெரியாமலோ, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களின் தியாகம் வணக்கத்திற்குரியது – அவர்கள் எந்த புழுவின் வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும்!

ஆனால் இன்றைய சமூக அமைப்பு முன் எப்போதும் உள்ளதை விட மிகவும் பாதுகாப்பானது – இதைவிட பாதுகாப்பு தேவையெனில் நம்மில் பெரும்பாலானோர் நமக்குள் ஆன்மீகத்தை அனுமதிப்பதை தவிர வேறு வழியில்லை. முன் எப்போதும் இல்லாத அளவில், தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலனவர்களுக்கு உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவையான உணவு, குறைந்த பட்ச முயற்சியில் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆகவே இயற்கை நமக்களித்த கொடையான நமக்கேயான உணர்வுக்கான மன இயக்கத்தை தியாகம் செய்ய எந்த தேவையும் இல்லை. நாம் வாழும் வாழ்க்கை நம்முடையதாக இருக்க வேண்டும் என்ற குறைந்த பட்ச விருப்பமும் விழிப்புணர்வும் இருக்குமானால், நமக்கேயான தீவிர மன இயக்கத்தை கண்டறிவது மிக்கடினமாக இருக்காது.

ஆனால் நமது பிரச்சனை அந்த குறைந்த பட்ச விருப்பு இல்லாமைதான். வாழ்வை உள்ளபடி அறிந்து கொள்வதற்கான தேவையை மனம் உணராதவரை நம் வாழ்க்கையை வாழ்வதற்கான விருப்பு வர வாய்ப்பு இல்லை. காரணம் நாம் வாழும் வாழ்க்கை நம்முடையதா அல்லது நாம் வேறு யாருடையதோ ஆன வாழ்க்கையை வாழ முயற்சி செய்து அந்த முயற்சியில் நம் வாழ்க்கையையும் இழந்து விட்டோமா என்று தெரியாமல் இருந்து கொண்டிருக்கிறோம். ஆக, நாம் வாழ்வின் யதார்த்தம் என்னும் பொறியில் மாட்டி கொண்டு அந்த பொறியைப் பற்றிய உணர்வையும் இழந்து விட்டுள்ளோம். அந்த பொறியைப்பற்றிய உணர்வை நம் முயற்சியின் மூலம் கொண்டுவர முடியும் என்று தோன்றவில்லை. அதற்கு ஏதோ ஒரு தூண்டுதல் தேவையாக உள்ளது.

ஒருவேளை அந்த தூண்டுதலதான் ஆன்மீகத்தின் தொடக்க புள்ளியாக இருக்கலாம். அந்த தூண்டுதல் எங்கிருந்து வரும்? அந்த தூண்டுதலை குறித்து ஆராய முற்பட்டால், நாம் நம் நம்பிக்கைகளை பொறுத்து, அந்த தூண்டுதல்களைக் குறித்து கற்பனைகளை உருவாக்கி கொள்வோம். அந்த கற்பனைகள் எவ்வாறு இருந்தாலும், ஒரு தூண்டுதல் தேவை என்பது மட்டும் நிதர்சனம்- இந்த நிதர்சனத்தை, நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் கவனிப்பதன் மூலம் உணரலாம்

No comments: