Tuesday, May 31, 2011

தேவைக்கேற்ற நுகர்வு

சில தலைமுறைகளுக்கு முன்புவரை உலகமெங்கும் இருந்த சமூகங்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை அன்றாட வாழ்க்கை தேவைகளுக்காகவே செலவிட வேண்டியிருந்திருக்கும். எனவே தேவைக்கு அதிகமான நுகர்வு என்பதற்கான வாய்ப்பு மனிதர்களில் பெரும்பான்மையினருக்கு இல்லாமலேயே இருந்திருக்கும். ஆனால் இன்றைய சமூக அமைப்புகளின் இயங்குமுறை முற்றிலும் வேறானதாக உள்ளது. பெரும்பாலான சமூக அமைப்புகளில் மக்களின் தேவைகளை எளிதில் அடைவதற்கு வழிமுறைகள் முறைப்படுத்தப்பட்டுள்ளது. சமூகத்தின் உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் வாழ்க்கையில் அவர்களுக்கென உள்ள நேரம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்கென உள்ள நேரம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது – இங்குதான் நுகர்வு என்பது, தேவைக்கேற்ற நுகர்வு என்பதிலிருந்து முடிந்தவரை நுகர்வு என்னும் பரிணாமத்தை அடைந்திருக்க கூடும். நமது நுகர்வு கலாச்சாரம் இரண்டு காரணிகளால் வழி நடத்தப்பட்டிருக்கலாம். முதலாவது காரணி நம் வாழ்க்கையில் மிச்சப்படுத்தப்படும் நேரம். சமூகங்களில் பாதுகாப்பு உருவாகாதவரை, நமது மனம் நம் வாழ்க்கையில் தப்பி பிழைப்பதற்காக எப்போதும் ஏதாவது செயல்களில் ஈடுபட்டிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. தற்காலத்தில் சமுதாய அமைப்புகள் வழங்கும் பாதுகாப்பின் மூலம், மனம் பாதுகாப்பு சார்ந்த செயல்களிலிருந்து பெரும்பாலும் விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சில செயல்களிலிருந்து விடுபட்ட மனம், காலம் என்னும் பொறியினுள் விழுந்து விடுகிறது.
நமது மனம் செயல்களில் ஈடுபட்டிருக்கும்போது, காலத்தைப்பற்றிய பிரக்ஞை அற்று இருக்கிறது. மனம் உணர்வதற்கு அல்லது ஈடுபடுவதற்கு எதுவும் இல்லாதபோது, அந்த தீவிர உணர்வுகள் அல்லது செயல்களுக்கு இடையே உள்ள இடைவெளியை காலமாக கற்பனை செய்து கொள்கிறது. நமது மனதினால் காலத்தினுள் இருக்க முடிவதில்லை – அதாவது நம் மனதினால் உணர்வு அல்லது செயல்பாடு இல்லாமல் இருக்க முடிவதில்லை. இவ்வாறு நம் மனதினுள் அடிப்படை செயல்பாடு தேவை இல்லாதபோது நம் மனத்திற்கு சாத்தியமானது – அது உள்நோக்கி திரும்பி தன்னையே உணர தொடங்கலாம் அல்லது வெளிநோக்கி திரும்பி புலன்களால் உணரப்படுவதில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளலாம். அவ்வாறு மனம் காலத்தை இல்லாமல் செய்ய வெளி நோக்கி திரும்பினால் வெளியில் உள்ளவற்றை நுகர்வதன் மூலமே மனதால் காலத்தின் மேல் பயணிக்க முடியும். ஆக காலத்தை கடக்க வெளிநோக்கி திரும்பும் மனம் நுகர்வு கலாச்சாரத்தை உருவாக்குகிறது.

நுகர்வு கலாச்சாரத்தின் இன்னொரு காரணி, சமூகத்தின் பொருளாதார தேவைகள். சமூக கட்டமைப்பின் மூலம் அந்த சமூகத்தினுள் செயலின் தேவையின்மையை உருவாக்கிய அதே நேரத்தில், சமூக கட்டமைப்பை உறுதி செய்ய பொருளாதார தேவைகளையும் சமூகம் உருவாக்கியுள்ளது. ஒரு சமூகத்தின பொருளாதார கட்டமைப்பு, அந்த சமூகத்தின் நுகர்வுக்கு ஏற்றவாறே அமையும். ஒரு சமூகத்தின் நுகர்வுத் தேவை சமன் நிலையில் இருக்கும்போது, அந்த சமூகத்தின் பொருளாதார தேவைகளும் சமன் நிலையில் இருக்கும், சமூகத்தின் நுகர்வும், பொருளாதார தேவைகளும் சமன் நிலையில் இருக்க, அந்த சமூகம் காலத்தை கடக்க புலன்களின் தேவை சமன் நிலையில் இருக்க வேண்டும். காலத்தை கடக்க புலன்களின் தேவையை சமன்நிலையில் வைத்து கொள்ள, மனம் உள்நோக்கி திரும்புவதை விட வேறு வழி இல்லை. வேறு வார்த்தைகளில் கூறினால், நுகர்வின் சமன்நிலையை அடைய ஆன்மீகம் மட்டுமே வழி!

ஆக, தேவையில்லாத நுகர்வு என ஒன்று இல்லை. காலத்தை கடக்க வேண்டியது மனதின் தேவை. காலத்தை கடக்க மனம் புலன்களை பயன்படுத்தும் எல்லை விரிவடையும்தோறும் நுகர்வின் தேவையும் விரிவடைந்தபடியே இருக்கும். அல்லது, தனிமனித மற்றும் சமூகத்தின் நுகர்வு சமன்நிலையை இழந்து விரிவடைந்தபடியே இருக்கும். நுகர்வு சமன்நிலையில் இருக்க வேண்டுமானால், மனம் காலத்தை கடப்பதற்கு புலன்களின் தேவையற்று இருக்க வேண்டும். அதாவது, மனம் புலன்களிலிருந்து விடுதலை பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் நுகர்வு சமன்நிலையில் இருக்க வேண்டியதன் தேவை என்ன? நம் சந்ததியினர் இந்த உலகில் வாழ்வதற்கான சாத்தியம், நம் தலைமுறையில் (பின் வரும் தலைமுறைகளிலும்) நுகர்வை சமன்நிலையில் வைத்திருப்பதை பொறுத்தே உள்ளது. 800 கோடி மக்கள் நுகர நுகர குறையாமல் இருக்க இந்த உலகம் ஒரு காமதேனுவோ அல்லது அட்சயபாத்திரமோ அல்ல. உலகம் அதன் தோற்ற காலத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட ஆதார சக்தியுடன், ஆதார இயல்புகளுடன், ஒரு சமன்ன்நிலையில் இருந்து வந்துள்ளது. நம் அல்லது நம் சந்ததியினரின் நுகர்வின் மூலம் அந்த சமன்நிலை குலைக்கபடாதவரைக்கும் இந்த உலகில் மனித இனமும் மற்ற உயிரினங்களும் வாழ முடியும். ஒருவேளை அந்த சமன்நிலை குலைக்கப்பட்டால், அதன் விளைவுகளை நாம் சந்திப்பதை தவிர வேறு வழி இல்லை. அவ்வாறு ஒரு நிலைமை நமக்கு ஏற்படுமானால், அதன்பின் எந்த கடவுள்களாலும், யாகங்களாலும், பூஜைகளாலும், வேண்டுதல்களாலும் அந்த சமன்நிலை குலைவின் விளைவுகளை தவிர்க்க முடியாது.

ஆக, இந்த உலகம் நாமும், நம் சந்ததியினரும் வாழ உகந்ததாக இருக்க வேண்டுமென்றால், அதன் ஆதார இயல்புகள் சமன்நிலையில் இருக்க வேண்டியது மிக அவசியம். அதற்கு, இந்த உலகின் பெரும்பான்மை சக்தியை நுகர்பவர்களாகிய நாம், நமது நுகர்வை சமன்நிலையில் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். நமது நுகர்வு சமன்நிலையில் இருக்க வேண்டுமானால், மனம் அதன் காலத்தை கடப்பதற்கு, புலன்களை மட்டும் சார்ந்திருக்காமல் இருக்க வேண்டும். அதாவது மனம் உள்நோக்கியும் திரும்ப வேண்டும் – ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் மட்டுமே நமது நுகர்வை சமன் நிலையில் வைத்திருக்க முடியும். இங்கு ஆன்மீகம் என்பது கடவுள்களையோ, கோவில்களையோ, பூஜைகளையோ, வழிபாடுகளையோ, வேண்டுதல்களையோ குறிக்கவில்லை. மனம் உள்நோக்கி திரும்பி, தன்னில் தானே ஈடுபடுவதையே குறிக்கிறது – மேலே குறிப்பிட்ட பொருள்கள் அல்லது செயல்கள் அதற்கு காரணிகளாக இருந்தாலும், இல்லாவிடிலும்!

Friday, May 20, 2011

ஆனமீகத்தின் தொடக்க புள்ளி

ஆனமீகத்தின் தொடக்க புள்ளி, அதிதீவிரமான மனம் மற்றும் அந்த தீவிரத்தை சரியானபடி வழிநடத்தி செல்லும் நுண்ணறிவு ஆகிய இரண்டும் சேர்ந்த கலவையாக மட்டுமே இருக்க முடியும். நாம் ஒவ்வொருவரும் மனதளவில் தனித்தன்மை வாய்ந்தவர்கள். எந்த இரு மனிதர்களும் ஒரே மன நிலை உடையவர்களாக இருக்க வாய்ப்பு இல்லை. எந்த ஒரு மனிதனுக்கும் மனதின் எதோ ஒரு இயக்கத்திலாவது தீவிரம் இல்லாமல் இருக்கவும் வாய்ப்பு இல்லை. ஆனால் அந்த தீவிரம் சரியான பாதையை அடையும் முன்பே அழிந்து விட காரணங்களும் வாய்ப்புகளும் ஏராளம்.

ஆக, அந்த தீவிர மன இயக்கத்தை கண்டறிந்து, அது நம் வாழ்க்கை முறை அல்லது வேறு எந்த காரணங்களாலோ அதன் தீவிரத்தன்மையை இழந்திருந்தாலும், நுண்ணறிவின் மூலம் சரியான திசையில் இயங்கச்செய்வதே ஆன்மீகத்தின் தொடக்கமாக இருக்க முடியும். ஆனால் அந்த தீவிர தன்மையை கண்டறிவது அத்தனை எளிதான காரியம் என்று தோன்றவில்லை. நம் வாழ்க்கையின் யதார்த்தம் அந்த தீவிரத்தன்மையை புரட்டி மனதின் அடி ஆழத்திற்கு எடுத்துச்சென்றிருக்க கூடும். அதை மீட்டு எடுக்க தீவிர விருப்பமும், வாய்ப்புகளும், வழிகாட்டுதல்களும் தேவைப்படலாம்.

நம் மனம், அதற்கு தேவை இல்லாத ஒன்றை தேட எப்போதுமே ஆர்வமுடையதாக இருக்காது. ஆகவே ஆன்மீகம் அதற்கு தேவை என்று நம் மனம் உணரும்வரை, நாம் ஆன்மீக வழிகளில் ஈடுபட எந்த வாய்ப்புகளும் இல்லை. ஆகவேதான் நம்மில் பெரும்பாலானவர், ஏதேனும் கொடும் துன்பங்கள் நம் வாழ்க்கையை தாக்கிய பின்னரே ஆன்மீக ஈடுபாடு கொள்கிறோம். ஆனால் அந்த கொடுந்துன்பத்தின் பிடியில் இருக்கும்போது நம் மனம் அதன் நுண்ணுணர்வை பெரும்பாலும் இழந்து விட்டிருக்கும். ஆகவே கொடுந்துன்பத்தின் பிடியில் நாம் தேர்ந்தெடுக்கும் ஆன்மீக வழி பெரும்பாலும் போலி ஆன்மீக வழியாகவே இருக்கும். துன்பத்தின் பிடியிலும் சிறித்தளவேனும் தன்னுணர்வை கொண்டிருப்பவர்களால் மட்டுமே,கொடுந்துன்பத்தின் பிடியில் இருக்கும்போது, அவர்கள் ஆன்மீக வழியை தேர்ந்தெடுத்தால், அது சரியான ஆன்மீக வழியாக இருக்க வாய்ப்புள்ளது. மனம் தன்னிலையை இழக்கும் அளவுக்கு பெருந்துன்பத்தை வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய தேவை வராத அதிர்ஷ்டசாலிகள் ஆன்மீக வழியில் இருப்பதென்றால் அதற்கு காரணம், அவர்கள் மனதினுள், அவர்களுக்கேயான அந்த தீவிர இயக்கம், வாழ்வின் யதார்த்தத்தால் இன்னும் நசுக்கப்படாமல் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். ஆகவே நாம் ஆன்மீக வழியில் இன்னும் இல்லாமல் இருக்கிறோம் என்றால், அதற்கான ஒரே காரணம், இயற்கை நமக்கு அளித்த பெரும்கொடையான, நமக்கேயான அந்த மன இயக்கத்தின் தீவிரத்தை இழந்து விட்டிருக்கிறோம். வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், நாம் நம் வாழ்வை இழந்து விட்டு வேறு யாருடைய வாழ்க்கையையோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வாழ்வின் பாதுகாப்பின்மையால், மனித இனம் அழியாமல் இருப்பதற்காக, மிக சமீப காலம்வரை மனித இனத்தின் பெரும்பகுதி, தங்கள் சுயத்தை, தங்கள் வாழ்க்கையை இழந்து, இயற்கை அளித்த அவர்களுக்கேயான மன இயக்கத்தின் தீவிரத்தை இழந்து, மனித குலத்தின் தொடர்ச்சிக்காக, தெரிந்தோ, தெரியாமலோ, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களின் தியாகம் வணக்கத்திற்குரியது – அவர்கள் எந்த புழுவின் வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும்!

ஆனால் இன்றைய சமூக அமைப்பு முன் எப்போதும் உள்ளதை விட மிகவும் பாதுகாப்பானது – இதைவிட பாதுகாப்பு தேவையெனில் நம்மில் பெரும்பாலானோர் நமக்குள் ஆன்மீகத்தை அனுமதிப்பதை தவிர வேறு வழியில்லை. முன் எப்போதும் இல்லாத அளவில், தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலனவர்களுக்கு உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவையான உணவு, குறைந்த பட்ச முயற்சியில் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆகவே இயற்கை நமக்களித்த கொடையான நமக்கேயான உணர்வுக்கான மன இயக்கத்தை தியாகம் செய்ய எந்த தேவையும் இல்லை. நாம் வாழும் வாழ்க்கை நம்முடையதாக இருக்க வேண்டும் என்ற குறைந்த பட்ச விருப்பமும் விழிப்புணர்வும் இருக்குமானால், நமக்கேயான தீவிர மன இயக்கத்தை கண்டறிவது மிக்கடினமாக இருக்காது.

ஆனால் நமது பிரச்சனை அந்த குறைந்த பட்ச விருப்பு இல்லாமைதான். வாழ்வை உள்ளபடி அறிந்து கொள்வதற்கான தேவையை மனம் உணராதவரை நம் வாழ்க்கையை வாழ்வதற்கான விருப்பு வர வாய்ப்பு இல்லை. காரணம் நாம் வாழும் வாழ்க்கை நம்முடையதா அல்லது நாம் வேறு யாருடையதோ ஆன வாழ்க்கையை வாழ முயற்சி செய்து அந்த முயற்சியில் நம் வாழ்க்கையையும் இழந்து விட்டோமா என்று தெரியாமல் இருந்து கொண்டிருக்கிறோம். ஆக, நாம் வாழ்வின் யதார்த்தம் என்னும் பொறியில் மாட்டி கொண்டு அந்த பொறியைப் பற்றிய உணர்வையும் இழந்து விட்டுள்ளோம். அந்த பொறியைப்பற்றிய உணர்வை நம் முயற்சியின் மூலம் கொண்டுவர முடியும் என்று தோன்றவில்லை. அதற்கு ஏதோ ஒரு தூண்டுதல் தேவையாக உள்ளது.

ஒருவேளை அந்த தூண்டுதலதான் ஆன்மீகத்தின் தொடக்க புள்ளியாக இருக்கலாம். அந்த தூண்டுதல் எங்கிருந்து வரும்? அந்த தூண்டுதலை குறித்து ஆராய முற்பட்டால், நாம் நம் நம்பிக்கைகளை பொறுத்து, அந்த தூண்டுதல்களைக் குறித்து கற்பனைகளை உருவாக்கி கொள்வோம். அந்த கற்பனைகள் எவ்வாறு இருந்தாலும், ஒரு தூண்டுதல் தேவை என்பது மட்டும் நிதர்சனம்- இந்த நிதர்சனத்தை, நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் கவனிப்பதன் மூலம் உணரலாம்